Archive for December 2nd, 2008
தூங்கும் அழகிப் பொம்மை
Posted on: December 2, 2008
’அப்பா, கவிதாவுக்கு உடம்பு சரியில்லை’, வீட்டுக்குள் நுழையுமுன் வாசலிலேயே இடைமறித்துச் சொன்னாள் என் மகள் நங்கை.
‘என்னாச்சும்மா?’
‘எந்நேரமும் கண்ணை மூடித் தூங்கிட்டே இருக்காப்பா, என்ன செஞ்சாலும் கண்ணைத் திறக்கமாட்டேங்கறா’
’அச்சச்சோ’ ஷூவைக் கழற்றியபடி உச்சுக்கொட்டினேன், ‘நோ ப்ராப்ளம், எல்லாம் சரி பண்ணிடலாம், அவளைக் கூட்டிட்டு வா’
நான் எம்பிபிஎஸ் படிக்கவில்லை, அதற்கு அவசியமும் இல்லை. கவிதாவைச் சரி செய்ய டாக்டர் வேண்டாம், கொஞ்சம் காமன் சென்ஸ் இருந்தால் போதும்.
கவிதா நிஜப் பெண் இல்லை, பிளாஸ்டிக் அழகிப் பொம்மை.
எங்கள் வீட்டில் எல்லாப் பொம்மைகளுக்கும் பெயர் உண்டு. சில இடுகுறிப் பெயர்கள், மற்றவை காரணப் பெயர்கள்.
உதாரணமாக, ’கோலங்கள்’ சீரியல் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் வாங்கிய ஒரு பொம்மைக்கு ‘அபி’ என்று பெயர் வைத்தோம். பிறகு அதேபோல் இன்னொரு பொம்மை வந்தபோது, முதல் பொம்மைக்கு ‘நல்ல அபி’ (சிரிக்கும்), இரண்டாவது பொம்மைக்குக் ‘கெட்ட அபி’ (முறைக்கும்) என்று பெயர் மாறியது.
இதேபோல், ஒரேமாதிரி வாங்கிய இரண்டு பச்சைப் பொம்மைகளில் ஆணுக்கு மதியழகன், பெண்ணுக்கு மதிவதனி என்று பெயர் வைத்தோம், இந்தியா ஏதோ ஒரு போட்டியில் ஜெயித்த தினத்தன்று வாங்கிய பொம்மையின் பெயர் ஜெயலஷ்மி. கையில் மைக் பிடித்த ‘பார்பி’ சாயல் பொம்மையின் பெயர் ஷ்ரேயா (கோஷல்).
இந்தப் பெயர்களெல்லாம், பெரும்பாலும் என் மனைவியின் தேர்வு, சில சமயங்களில் மகளும் முடிவு செய்வதுண்டு, எனக்கு அவ்வளவு சமர்த்து போதாது, என் புத்தகங்களுக்குக்கூட, பா. ராகவன் தலைமையிலான நிபுணர் குழுதான் பெயர் சூட்டுகிறது.
பொம்மைப் பெயர்களை நீளமாக வைப்பதில் ஒரு நன்மை, அவற்றை அடிக்கடி சொல்லிப் பழகுவதால் குழந்தைக்கு உச்சரிப்பு தெளிவாக வரும் என்று என் மனைவி சொல்கிறாள், இதை ஓர் அச்சுப் புத்தகத்தில் பார்க்காதவரை, அல்லது கண்ணாடி போட்ட, தாடி வளர்த்த மனோதத்துவ நிபுணர் ஒருவர் சொல்லாதவரை நம்பமாட்டேன் என்று நான் சொல்கிறேன்.
போகட்டும், இப்போது கவிதாவுக்கு என்ன ஆச்சு?
என் மகளைவிட, கவிதா நல்ல உயரம். வெள்ளை வெளேர் பிளாஸ்டிக் உடம்பில் ஜீன்ஸ், டாப்ஸ், குதிரை வால் என்று ரொம்ப நவீனமான மோஸ்தர். பொம்மையை நிற்கவைத்தால் கண் திறந்திருக்கும், படுக்கச் செய்தால் கண் மூடிக்கொள்ளும்.
இப்போது, அந்தக் கண்கள் முழுவதுமாக மூடிக் கிடந்தன. என்ன செய்தாலும் அவை திறக்கவில்லை. அசப்பில், தூங்கும் அழகியைப்போல் இருந்தாள் கவிதா.
பொம்மையைக் கையில் கொடுத்துவிட்டு என்னுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் நங்கை. கஷ்டப்பட்டு(?) நாலு வருஷம் எஞ்சினியரிங் படித்தது இதற்கேனும் உபயோகப்படட்டுமே என்று சுறுசுறுப்பாகக் கவிதாவின் இமைகளைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தேன்.
‘மெதுவாப்பா’ என்றாள் நங்கை, ‘பாப்பாவுக்கு வலிக்கும்ல?’
குழந்தைகள் எப்படி பொம்மைகளுக்கு உயிர் உள்ளதாக நம்புகின்றன என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. ஆனால் மகள்முன் அந்தக் குழப்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.
சிறிது நோண்டியபிறகு, கவிதாவின் பிரச்னை புரிந்துவிட்டது. அவளுடைய கண்கள் + இமைகள் மேலும் கீழும் சென்று வரும்படி ஓர் அமைப்பு இருந்தது. அதற்குள் ஏதோ உடைந்துவிட்டதால் கண்கள் இறுக மூடிக்கொண்டுவிட்டன. நான் என்ன இழுத்தும் பயன் இல்லை.
நங்கை அவள் அம்மாவிடம் அவசரத் தகவல் அறிக்கை சொல்லச் சென்றிருந்த நேரத்தில், பாக்கெட்டில் இருந்த ரேனால்ட்ஸ் பேனாவின் துணை கொண்டு ஒரு ரகசிய ஆபரேஷன் முயன்றேன். வெற்றி!
கவிதாவின் ஒரு கண் ‘ப்ளக்’ என்ற சத்தத்துடன் அசையத் தொடங்கியது. நிமிர்த்திவைத்தால் கண் திறந்தது, படுக்கவைத்தால் கண் மூடியது.
ஆனால், அந்த இன்னொரு கண்? அது கொஞ்சம்கூட அசையவில்லை.
மறுபடி ரெனால்ட்ஸின் உதவியை நாடினேன். ம்ஹும், பலன் இல்லை.
அதற்காக, மகளிடம் தோல்வியை ஒப்புக்கொள்ளவும் மனசு வரவில்லை, விளம்பரங்களில் வருவதுபோல் ‘சூப்பர் அப்பா’ என்றில்லாவிட்டாலும் ‘சுமார் அப்பா’ என்றாவது அவள் என்னை நினைத்துக்கொண்டிருக்கலாம், அந்தப் பிம்பத்தைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைக்கவேண்டுமா?
அடுத்த அரை மணி நேரம், கையில் கிடைத்த அத்தனை பொருள்களையும் வைத்துப் போராடிவிட்டேன், மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, நங்கையின் ஹேர் பின்னை வைத்து நெம்பிக்கூடப் பார்த்தாகிவிட்டது, அந்தக் கண்ணை அசைக்கமுடியவில்லை.
என்னுடைய தவிப்பை எப்படியோ நங்கை புரிந்துகொண்டுவிட்டாள், ‘போதும் விட்டுடுங்கப்பா’ என்றாள் சாதாரணமாக.
அவள் இப்படி எதையும் சீக்கிரத்தில் விட்டுக்கொடுத்து நான் பார்த்ததே இல்லை. அவள் முகத்தில் துளி ஏமாற்றமும்கூட இல்லை. ஆகவே ஆச்சர்யமாக, ‘ஏம்மா, இந்தக் கண்ணைச் சரி செய்யவேண்டாமா?’ என்று கேட்டேன்.
‘பரவாயில்லைப்பா, இதுவே அழகாதான் இருக்கு’ என்றாள் அவள், ‘யாராச்சும் கேட்டா, இந்த பொம்மை சூப்பரா கண்ணடிக்கும்-ன்னு சொல்லிடுவோம், சரியா?’
***
என். சொக்கன் …
02 12 2008



1










eKalappai