Archive for December 27th, 2008
பாட்டர் சொத்து
Posted on: December 27, 2008
- In: Books | Brand | Characters | Creativity | Fear | Kids | Marketing | Reviews | Uncategorized
- 14 Comments
கல்லூரி நாள்களில் தொடங்கி, தடி தடியான ஆங்கிலப் புத்தகங்கள் என்றால் எனக்கு அலர்ஜி. அவ்வளவு சிரமப்பட்டு அவற்றைப் படிக்கத்தான் வேண்டுமா என்று அலுத்துக்கொள்வேன்.
பன்னிரண்டாம் வகுப்புவரை நான் படித்தது தமிழ் மீடியம். ஆங்கிலம் என்கிற ஒற்றைப் பாடம்தவிர வேறு எதற்காகவும் ஏ, பி, சி, டி எழுத்துகளை அணுகியதே கிடையாது.
இதனால், கல்லூரி சென்ற புதிதில் ரொம்பச் சிரமப்பட்டேன். ’எஞ்சினியரிங் பாடமெல்லாம் ஆங்கிலத்தில்தான் நடத்தவேண்டும் என்று என்ன கட்டாயம்?’ என்றெல்லாம் சுயநலமாக ஆத்திரப்பட்டிருக்கிறேன்.
கல்லூரியில் என்னுடன் படித்த பெரும்பாலான பையன்கள் கான்வென்ட் குழந்தைகளாக வளர்ந்தவர்கள். அவர்கள் வாய் திறந்தால் பிரிட்டிஷோ, ஆமெரிக்கனோ ஆங்கிலம் துள்ளி விளையாடும்.
நல்ல வேளையாக, என்னைப்போல் தமிழ் மீடியம் அப்பாவிகள் நிறையப் பேர் இருந்தோம். அநாவசிய ஆங்கிலம் (முக்கியமாகப் பெண்கள் முன்னால்) பேசுபவர்களைக் கேலி செய்தே பிழைப்பை ஓட்டினோம்.
முக்கியமான விஷயம், அப்போது எங்களுக்குத் தமிழ்ப் பற்றெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. ஆங்கிலம் தெரியாது, ஆகவே அதை அடாவடியாகப் பேசுகிறவர்களைக் கிண்டல் செய்தோம், அவ்வளவுதான்.
இந்தக் கலகம், சும்மா பீட்டர் விடுகிறவர்களை மிமிக்ரி செய்பவர்களில் தொடங்கி, கல்லூரி ஆண்டு விழாவில் தமிழ்க் கவிதை படிப்பதுவரை நீண்டது. இதன்மூலம் எங்களுக்குக் கிடைத்த தனி அடையாளமும், அந்தஸ்தும், வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அல்ப சுகம்.
இப்படியாக இரண்டரை வருடம் தீர்ந்தது. கடைசி ஆண்டு கேம்பஸ் இண்டர்வ்யூ(வளாக நேர்முகம்?)க்களுக்குத் தயாராகும்போதுதான், எங்களுடைய தப்பு எத்தனை பெரியது என்று புரிந்தது.
சாதாரணமாகவோ, பெண்கள்முன் பந்தா விடுவதற்காகவோ ஆங்கிலம் பேசியவர்களெல்லாம், இப்போது அதனை இண்டர்வ்யூ தயாரிப்புகளில் நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள். க்ரூப் டிஸ்கஷன் எனப்படும் குழு விவாதங்களில் அவர்கள் மணிமணியாகப் பேசக் கேட்கும்போது எங்களுக்கு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம்போல் இருந்தது.
இத்தனை காலமாக அவர்களைக் கிண்டல் அடித்த நாங்கள், இப்போது குரூப் டிஸ்கஷன்களில் வாய் மூடி மௌனிகளாக அமர்ந்திருந்தோம். ‘நீங்க பேசுங்க’ என்று மற்றவர்கள் எங்களை உற்சாகப்படுத்தினாலும், ஒரு ‘ஈஸ்’, ‘வாஸ்’ போட்டுச் சாதாரணமாகப் பேசக்கூட எங்களால் முடியவில்லை.
அதைவிட சங்கடம், முன்பு நாங்கள் கிண்டலடித்த அதே தோழர்கள், பெரிய மனதோடு இப்போது எங்களுக்கு உதவினார்கள். கண்ணாடி முன்னால் நின்று பேசிப் பழகு, யாரிடமும் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசு, தப்பு வந்தால் கவலைப்படாதே, ‘தி ஹிந்து’ புரட்டு, சிட்னி ஷெல்டன் படி, டிக்ஷ்னரியைத் தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கு என்றெல்லாம் அறிவுரைகள் குவிந்தன.
நாங்கள் பதற்றத்தில் எல்லாவற்றையும் முயன்று பார்த்தோம். ஆனால், ஒரு மாதத்தில் ஒன்பது மடங்கு கஷ்டப்பட்டாலும் பிரசவம் நிகழ்ந்துவிடாதே.
இதனால் கிடைத்த ஒரே நன்மை, நான் சிட்னி ஷெல்டன் பைத்தியமாகிவிட்டேன். அவருடைய எல்லாப் புத்தகங்களையும் திருட்டு வடிவத்தில் வாங்கிப் படித்துக் குடித்தாகிவிட்டது.
ஆனால் ஷெல்டன் எனக்கு க்ரைம் கற்றுக்கொடுத்தாரே ஒழிய, ஆங்கிலம் பேசப் பழக்கவில்லை. நான் இன்னும் ஈஸ், வாஸ் தடுமாற்றத்தில்தான் இருந்தேன்.
அப்போதுதான் நான் முடிவு செய்தேன், இந்த ஜென்மத்தில் எனக்கு ஆங்கிலம் பேச வராது, முயற்சி செய்வது வீண்.
நான் என்னதான் பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவித்தாலும், இண்டர்வ்யூவுக்கு வருகிறவர்கள் என்னுடைய வேஷத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆகவே, விதிப்படி நடக்கட்டும்.
ஆனால், நான் நினைத்ததற்கு நேர்மாறாக விதி அமைந்திருந்தது.
என்னுடைய முதல் நேர்முகத் தேர்வை நிகழ்த்தியவர், அவரும் தமிழ் மீடியத்தில் படித்தவரோ, என்னவோ, என்னுடைய ஈஸ், வாஸ் தடுமாற்றத்தைப் பார்த்துக் கொஞ்சம்கூட முகம் சுளிக்கவில்லை, புரிந்துகொண்டு ஊக்கப்படுத்தினார்.
ஆங்கிலத்தில் எனக்குத் தெரிந்த நாற்பது, ஐம்பது வார்த்தைகளை வைத்துக்கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரோடு பேசினேன். தப்பும் தவறும் எனக்கே தெரிந்தது. ஆனால் அதைச் சரி செய்ய நேரமில்லை.
அந்த மனிதர் என் கேவலமான மொழியைப் பார்க்கவில்லை, வேறெதையோ பார்த்து என்னைத் தேர்ந்தெடுத்துவிட்டார். எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
ஆனால், அந்த இண்டர்வ்யூவுக்குப்பிறகு, எதார்த்தம் புரிந்துவிட்டது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆங்கிலம் படிக்கதான் வேண்டும், அதைப் பதினெட்டு வயதிலோ, இருபது வயதிலோ தொடங்கினாலும் தப்பில்லை.
அப்போதும், நான் உருப்படியாகப் படிக்கவில்லை, பேசவில்லை, ஆனால் ஆங்கிலப் பிரியர்களைக் கிண்டலடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.
சிட்னி ஷெல்டனில் தொடங்கிய தடிப் புத்தகப் பிரியம், அடுத்தடுத்த க்ரைம் கதை எழுத்தாளர்கள்மேல் தாவியது. வாத்தியார் சுஜாதா அறிமுகப்படுத்திய (நல்ல) ஆங்கில எழுத்தாளர்கள் சிலரையும் தட்டுத் தடுமாறி வாசிக்க ஆரம்பித்தேன்.
கிட்டத்தட்ட இதே நேரத்தில்தான் (1997-98), Harry Potter வரிசைப் புத்தகங்கள் வெளியாகத் தொடங்கியிருந்தன. ஆனால் அவை அப்போது அவ்வளவு பிரபலமாகியிருக்கவில்லை.
அதன்பிறகு நாங்கள் ஹைதராபாத் சென்றோம், ஹிந்தி கற்றுக்கொண்டோம், தெலுங்குப் படம் பார்த்து ஜாலி பண்ணினோம், அலுவலகத்தில் வேறு வழியில்லாமல் ஆங்கிலம் பேசினோம்.
ஹைதராபாதிலிருந்து நான் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது, ஹாரி பாட்டரும் உலகப் பிரபலம் ஆகத் தொடங்கியிருந்தார். அவருடைய பைரேட்டெட் புத்தகங்கள் காசுக்கு எட்டு ரேஞ்சுக்கு சல்லிசாகக் கிடைக்க ஆரம்பித்திருந்தன.
நானும் ஹாரி பாட்டரைப்பற்றி ஆஹோ, ஓஹோ என்று நிறைய இடங்களில் படித்தேன். ஆனால் ஏனோ, அதைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கவேண்டும் என்று தோன்றவே இல்லை.
இதற்குள் ஹாரி பாட்டர் வரிசையில் நான்கு புத்தகங்கள் வெளியாகி மிகப் பெரிய ஹிட். ஐந்தாவது புத்தகத்துக்கு அகில உலகமும் மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தது.
அப்போது நான் பூனாவுக்கு ஒரு பயிற்சி வகுப்புக்காகச் சென்றிருந்தேன், பதினைந்து நாள் பயிற்சி, நடுவில் வரும் சனி, ஞாயிறு விடுமுறைகளை எல்லாம் சேர்த்தால் இருபது நாள்களுக்குமேல்.
இருபது நாள் மாணவனாக இருப்பது ரொம்ப போரடிக்கும், ஏதாவது பொழுதுபோக்கு வேண்டாமா?
வழக்கமாக நான் எங்கே பயணம் சென்றாலும், பெட்டியில் நான்கைந்து புத்தகங்கள் இருக்கும். இந்தமுறை மூன்று வாரங்களுக்கான துணிமணிகளை அடைத்ததில், புத்தகங்களுக்கு இடம் இல்லை.
அப்போதுதான், அந்த யோசனை தோன்றியது. பேசாமல் இந்த ஹாரி பாட்டர் சமாசாரத்தை ஈபுக்காக எடுத்துச் சென்றால் என்ன?
இது எனக்குப் பல வகைகளில் வசதி, ஈபுக் லாப்டாப்புக்குள் ஒளிந்துகொள்வதால், பெட்டியில் இடம் தேவையில்லை, வகுப்பு போரடித்தால் இதைத் திறந்து படிக்கலாம், புத்தகம் போரடித்தால் Shift + Delete, அரை நொடியில் அழித்துவிடலாம்.
இப்படிப் பலவிதமாக யோசித்து, இணையத்தில் தேடினேன், நான்கு ஹாரி பாட்டர்களையும் ஒரே PDF கோப்பாக டவுன்லோட் செய்துகொண்டேன்.
பூனாவில் அந்தக் காலை நேரத்தை என்னால் மறக்கவேமுடியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், சொல்லப்போனால் கொஞ்சம் அலட்சியத்துடன் சாதாரணமாக அந்தக் கோப்பைத் திறந்து படிக்கத் தொடங்கினேன், சில நிமிடங்களுக்குள் ஹாரி பாட்டர் என்னை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டார்.

அதற்குமுன் தமிழிலும் ஆங்கிலத்திலும் எத்தனையோ மாயாஜாலக் கதைகள் படித்திருக்கிறேன், ஆனால் அவையெல்லாம் எதார்த்த உலகிலிருந்து சற்றுத் தள்ளியே நிற்கும், இப்படி நம்மையே அந்தக் கற்பனை உலகத்துக்குக் கொண்டு சென்றுவிடுகிற ஓர் எழுத்தை நான் அதுவரை வாசித்தது கிடையாது.
உண்மையில், ஹாரி பாட்டருக்கு முன்பே இப்படிப்பட்ட அற்புதமான மாயாஜாலம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகங்களையெல்லாம் நான் அதன்பிறகுதான் தேடிப் படித்தேன் – முதலில் ரஹ்மானால் கவரப்பட்டு, பின்னர் இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதனையெல்லாம் தேடிக் கேட்கிற இளைஞர்களைப்போல.
ஹாரி பாட்டர் வாசிக்கத் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள், எனக்குப் புரிந்துவிட்டது, சந்தேகமில்லாமல் இந்த J K Rowling ஒரு மேதை. நிஜ உலகத்துக்கும், மாய உலகத்துக்கும் நடுவே நூலிழையில் பேலன்ஸ் செய்து நடக்கிற அவர் எழுத்து, வெறுமனே வாசிக்கப்படவேண்டியது இல்லை, கொண்டாடப்படவேண்டியது.
அன்று மாலைக்குள், ஹாரி பாட்டர் வரிசையின் முதல் புத்தகத்தை முடித்து இரண்டாவது தொடங்கிவிட்டேன். மறுநாள் காலை, எங்கள் வகுப்பு தொடங்குவதற்குமுன்னால், அதுவரை வந்த நான்கு புத்தகங்களையும் காசு கொடுத்து வாங்கிவிட்டேன்.
அதன்பிறகு, ஹாரி பாட்டர் புத்தகங்கள் அனைத்தையும் அச்சு வடிவில்தான் படித்திருக்கிறேன், ஈபுத்தகங்கள் அந்தக் கொண்டாட்டத்துக்கு இடையூறாக இருக்கின்றன.
ஹாரி பாட்டர் ஏழாவது புத்தகம் வெளியாவதற்குச் சில தினங்கள் முன்னதாக, ஏற்கெனவே படித்து முடித்திருந்த ஆறு புத்தகங்களையும் இன்னொருமுறை படித்தேன்.
ஆச்சர்யம், அத்தனை தடிமன் புத்தகங்கள், இரண்டாவது வாசிப்பில்கூட, கொஞ்சமும் போரடிக்கவே இல்லை, மறுபடியும் அந்த உலகத்துக்கு ஒரு ‘ரிடர்ன் ஜர்னி’ சென்றுவந்ததுபோல் ஆறையும் முடித்து, மறுநாள் காலை ஏழாவது புத்தகத்தைத் தொடங்கியது ஓர் இணையற்ற அனுபவம்.
இதற்குமேல் ஹாரி பாட்டர் புத்தகங்களைப்பற்றி, கதையைப்பற்றி எழுதினால் வெறும் உணர்ச்சிமயக் குப்பையாகிவிடும். ஆகவே, இப்போது வேறு விஷயம்.
ஹாரி பாட்டர் வரிசையில் ஏழு நாவல்கள்தவிர, இரண்டு துணைப் புத்தகங்களும் வந்திருக்கின்றன. ‘Quidditch Through The Ages’, ‘Fantastic Beasts And Where To Find Them’ என்ற இந்த இரு நூல்களும், என்னை அவ்வளவாகக் கவரவில்லை.
ஆகவே, சமீபத்தில் ஹாரி பாட்டர் வரிசையில் ’The Tales Of Beedle The Bard’ இன்னொரு புதிய துணைப் புத்தகம் வெளியாகிறது என்ற அறிவிப்பு வந்தபோது, எனக்கு அவ்வளவாக ஆர்வம் ஏற்படவில்லை. வழக்கமான ஜே கே ரௌலிங் மேஜிக் இந்தப் புத்தகத்தில் இருக்காது என்று தோன்றிவிட்டது.
ஆனால், ரௌலிங்கும் ஹாரி பாட்டரும் என்னை எந்த அளவு அடிமையாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது ‘The Tales Of Beedle The Bard’ வெளியானபிறகுதான் தெரிந்தது. கடையில் அந்தச் சிறிய புத்தகத்தைப் பார்த்தாலே கை, காலெல்லாம் நடுங்கத் தொடங்கியது, ‘இதை இன்னும் படிக்காமல் இருக்கிறாயே, நீயெல்லாம் ஒரு மனுஷனா? நீ இத்தனை காலம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்’ என்றெல்லாம் என்னை நானே திட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.
மூன்று அல்லது நாலு நாள் கழித்து, என்னால் அந்த நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தத் துணைப் புத்தகத்தையும் அநியாய விலை (ஐநூற்றுச் சொச்சம்) கொடுத்து வாங்கிவிட்டேன்.
ஒரே ஆறுதல், இந்தப் புத்தகத்தின் விற்பனையில் கிடைக்கிற லாபம், ஏதோ ஒரு சமூக சேவை நிறுவனத்துக்குச் செல்கிறதாம், அந்தவகையில் காசைக் கொண்டுபோய் எங்கோ கொட்டவில்லை என்று ஒரு திருப்தி.
அது சரி, புத்தகம் எப்படி?
ஹாரி பாட்டர் கதை, ஏழு பாகங்களுடன் முடிந்துவிட்டது. வில்லனாகப்பட்டவன் ஏழாவது பாகத்தின் கடைசி அத்தியாயத்தில் நிரந்தரமாக இறந்துவிட்டான், அதற்குமுன்னால் ஹாரி பாட்டரும் செத்துப் பிழைக்க, சுபம்.
ஆனால், ஹாரி பாட்டர் பிரியர்களுக்கு இது போதவில்லை. ’இன்னும் இன்னும் மேஜிக் வேண்டும்’ என்று அவர்கள் தவிக்க, ரசிகர்களின் ஆர்வத்துக்குத் தீனி போடுவதுபோல் இந்தப் புதுப் புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார் ஜே. கே. ரௌலிங்.
உண்மையில், இது புதிய புத்தகமே அல்ல. ஹாரி பாட்டர் ஏழாவது பாகம் ‘Harry Potter And The Deathly Hallows’ல், அவனுடைய தோழி ஹெர்மியானுக்கு ஒரு பழங்கால ஓலைச் சுவடிப் புத்தகம் கிடைப்பதாகக் கதை. அந்தப் பழைய புத்தகம்தான், இப்போது அச்சு வடிவில் வெளியாகியிருக்கிறது.
’The Tales Of Beedle The Bard’ தொகுப்பில் ஹாரி பாட்டர் வருவதில்லை. ஆனால், ஏராளமான மேஜிக் கொட்டிக் கிடக்கிறது. சின்னச் சின்ன குழந்தைக் கதைகளைக் கொண்டு அதே மாயாஜால உலகத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறார் ஜே. கே. ரௌலிங்.
ஆனால், நூறு பக்கப் புத்தகத்தில் இந்தக் கதைகள் வெறும் 40%கூட இல்லை. மிச்ச இடத்தை டம்பிள்டோரின் விளக்க உரை போட்டு நிரப்பியிருக்கிறார்கள்.
டம்பிள்டோரின் இந்த விளக்க உரைகளிலும், கொஞ்சம்போல் சுவாரஸ்யம் இருக்கிறதுதான். ஆனால் மேஜிக் படிக்க வருகிறவர்களைப் பாடப் புத்தகம் வாசிக்கச் செய்வது தப்பில்லையா? அந்த இடத்தில் இன்னும் நாலு கதைகளை எழுதியிருக்கலாமே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
இந்தக் காரணத்தால், ஒரு வாசகனாக எனக்கு இந்தப் புத்தகம் முழுத் திருப்தி அளிக்கவில்லை. ஐந்து குழந்தைக் கதைகளிலும் தெரிகிற அக்மார்க் ஜே. கே. ரௌலிங் எழுத்துமட்டும் சந்தோஷம்.
ஜே. கே. ரௌலிங் இப்போது ஹாரி பாட்டர் என்சைக்ளோபீடியா எழுதிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள், க்ரைம் (த்ரில்லர்) நாவல் முயற்சி செய்கிறார் என்றுகூட ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது, இவற்றில் எதையும் நான் வாங்கப்போவதில்லை, படிக்கப்போவதில்லை.
ஆனால், நான் சொல்வதை நம்பாதீர்கள். இந்தப் புத்தகங்கள் வெளியான மறுதினம் எனக்குக் கை, கால் நடுங்க ஆரம்பித்துவிடும். அது குப்பையாகவே இருந்தாலும், விலையைப்பற்றி, தரத்தைப்பற்றிக் கவலைப்படாமல் உடனே வாங்கிப் படித்துவிடுவேன்.
ஜே. கே. ரௌலிங்கிற்கு நான் ஆயுள் சந்தா செலுத்திவிட்டேன். இந்த மாயத்திலிருந்து என்னால் ஒருபோதும் விடுபடமுடியாது, விருப்பமும் இல்லை.
***
என். சொக்கன் …
27 12 2008



1










eKalappai