மனம் போன போக்கில்

தவறி இறங்கியவர்

Posted by: என். சொக்கன் on: மே 13, 2009

அந்தப் பெண்மணி தங்க நிறச் சேலை உடுத்தியிருந்தார். ‘குமரேசன் டெக்ஸ்டைல்ஸ்’ என்று கொட்டை எழுத்தில் பொறித்த வெள்ளை நிறப் பையை அழுந்தப் பிடித்திருந்தார். அவருடைய முந்தானையைப் பிடித்துக்கொண்டு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன்.

அவர்கள் ரயிலில் இருந்து இறங்கியபோது நான் கவனிக்கவில்லை. ரயில் புறப்பட்டுச் சென்றபின்னர், ‘அப்பா எங்கடா?’ என்று அந்தப் பெண்மணி சத்தமாக அலறியபோதுதான் திரும்பிப் பார்த்தேன்.

‘தெர்லம்மா’ என்றான் மகன், ‘ரயில்லர்ந்து எறங்காம அப்படியே போய்ட்டார்போல’

‘அய்யய்யோ’ என்று தலையில் கை வைத்துக்கொண்டு அப்படியே மடிந்து உட்கார்ந்தார் அந்தப் பெண். குழந்தைகள் புரியாமல் அவரைச் சுற்றிவந்தன.

சில நிமிடங்களுக்குப்பிறகு, அவர் சுதாரித்துக்கொண்டார். நாக்கை லேசாகக் கடித்துக்கொண்டபடி ’குமரேசன் டெக்ஸ்டைல்ஸ்’ பையைப் புரட்டிப் போட்டுத் தேடி அந்த மொபைல் ஃபோனைக் கையில் எடுத்தார்.

அதுவரை, அவரைப் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கும் கொஞ்சம் கவலையாகதான் இருந்தது. ஸ்டேஷன் மாறி இறங்கிவிட்ட குடும்பம், அதுவும் பார்ப்பதற்குப் பக்கா கிராமத்து மனிதர்களாகத் தெரிகிறார்கள், கன்னடம் தெரியுமோ, தெரியாதோ, இத்தனை பெரிய பெங்களூரில் எப்படி ஒருவரை ஒருவர் தேடிப் பிடித்துக்கொள்ளப்போகிறார்கள்?

ஆனால், இப்போது அந்தப் பெண்மணியின் கையில் மொபைல் ஃபோன் உள்ளது என்று தெரிந்ததும், பிரச்னையின் தீவிரம் சடாரென்று இறங்கிவிட்டாற்போல் தோன்றியது. நாங்களெல்லாம் நிம்மதிப் பெருமூச்சுடன் ஆசுவாசமடைந்தோம்.

மனைவிக்கு செல்ஃபோன் இருக்கிறது என்றால், அநேகமாக அவருடைய கணவரிடமும் ஒரு செல்ஃபோன் இருக்கவேண்டும், அழைத்து விவரத்தைச் சொல்லிவிட்டால் அவர் வந்து இவர்களை அழைத்துச் சென்றுவிடுவார். சுபம்.

ஆனால், நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத திருப்பமாக, அவருடைய செல்ஃபோன் அணைந்துபோயிருந்தது.

’என்னாச்சுடா?’ என்று மகனை விசாரித்தார் அவர், ‘எந்த பட்டனை அமுக்கினாலும் ஒண்ணும் வரமாட்டேங்குது’

அந்த மகனுக்குச் சுமார் பத்து வயது இருக்கலாம், செல்ஃபோனை மேலும் கீழும் புரட்டிப் பார்த்துவிட்டு அதன் ‘On / Off’ பொத்தானை நன்கு அழுத்தினான். ம்ஹூம், பலன் இல்லை.

’பேட்டரி போய்டிச்சும்மா’ என்றான், ‘சார்ஜர் வெச்சிருக்கியா?’

‘தோ இருக்கே’, மறுபடி குமரேசன் டெக்ஸ்டைல்ஸ் பை புரட்டிப்போடப்பட்டது. கடைசியில் நீண்ட வால் கொண்ட எலிக்குட்டியாக அந்த Nokia Charger வெளியே வந்தது.

சார்ஜர் சரி, மின்சாரம்?

இப்போதெல்லாம் பெரிய ரயில் நிலையங்களில் மொபைல் ஃபோன்களைச் சார்ஜ் செய்வதற்காகவே விசேஷ வசதிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் உட்கார்ந்திருந்த எளிய ரயில் நிலையத்தில் (“Bangalore East”) அந்த வசதியெல்லாம் கிடையாது.

உயிரில்லாத செல்ஃபோன், சார்ஜர் சகிதம் அந்தக் குடும்பம் ஒட்டுமொத்த பிளாட்ஃபாரத்தையும் அலசியது. அவர்கள் பயன்படுத்தும்படியான மின்சார இணைப்புகள் எவையும் கிடைக்கவில்லை.

இப்போது அந்தப் பெண்மணி லேசாக விசும்பத் தொடங்கியிருந்தார், ‘இதிலதானேடா எல்லா நம்பரும் இருக்கு? பேட்டரி சார்ஜ் பண்ணாம பார்க்கமுடியாதா?’

‘முடியாதும்மா’ என்றான் மகன், ‘அப்பா நம்பர் எங்கயாச்சும் பேப்பர்ல எழுதி வெச்சிருக்கியா?’

‘இல்லியே, மூணாம் நம்பரை அழுத்தினா அவருக்குப் போவும், இந்த ஃபோன்ல அழுத்திப் பார்க்கலாமா?’ என்று STD கூண்டினுள் உட்கார்ந்திருந்த தொலைபேசியைக் காட்டினார் அவர்.

‘ம்மா, சும்மாயிரும்மா’ மகன் அவரை அதட்டினான், ‘நம்பர் இல்லாம யாருக்கும் ஃபோன் செய்யமுடியாது’

‘உங்கப்பன் நம்பர்தான் இதுக்குள்ள மாட்டிகிட்டிருக்கே’ என்று செல்ஃபோனை வீசி எறிவதுபோல் பாவனை செய்தார் அவர், ‘இப்ப என்ன செய்யறது?’

இதற்குள், சுற்றியிருந்த சிலர் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்திருந்தார்கள், ‘என்னாச்சும்மா?’ என்று அதட்டல் தொனியில் விசாரித்தார் ஒருவர்.

அதற்காகவே காத்திருந்ததுபோல் அந்தப் பெண்மணி தனது புலம்பலைத் தொடங்கிவிட்டார். தன்னுடைய கிராமத்தின் பெயர், அங்கே தாங்கள் செய்துவருகிற விவசாயம்பற்றிய விவரங்கள், பெங்களூர் வந்த காரணம், இங்கே மெயின் ஸ்டேஷன் வருவதற்குள் இவர்கள்மட்டும் தவறிப்போய் இறங்கிவிட்ட கதை, இப்போது கணவரின் செல்ஃபோனைத் தொடர்புகொள்ளமுடியாமல் தவிக்கும் நிலைமை என்று சகலத்தையும் கொட்டிவிட்டார்.

மாலை நேர ரயில் நிலையங்களில் அரட்டைப் பிரியர்கள் அதிகம். அவர்கள் இந்தக் கதையைக் கேட்டு ‘அடடா’ என்று உச்சுக்கொட்டினார்கள்.

‘ஏம்மா, நம்பர்ல்லாம் ஒரு பேப்பர்ல எழுதி வெச்சுக்கறதில்லையா?’ என்றார் ஒருவர்.

‘அதான் ஃபோன்ல இருக்குங்களே’

‘இப்படி ஃபோன் பேட்டரி டெட் ஆயிடுச்சுன்னா, சமாளிக்கவேண்டாமா?’ என்றார் அவர், ‘விவரம் தெரியாம இந்தமாதிரி பெரிய ஊருக்கெல்லாம் வரக்கூடாதும்மா’

’ஆமாங்க’ என்று பரிதாபமாகத் தலையை ஆட்டிய அந்தப் பெண், மீண்டும் அழத் தொடங்கினார், ‘இவங்கப்பன் இப்போ எங்கே இருக்காரோ, என்ன பண்றாரோ தெரியலையே’

’நீ ஒண்ணும் கவலைப்படாதேம்மா, இப்ப அடுத்த ரயில் வரும், நேரா ஏறிகிட்டு மெயின் ஸ்டேஷன் போயிடு, அங்கே உன் புருஷனைக் கண்டிப்பாக் கண்டுபிடிச்சுடலாம்’

அவர் இப்படிச் சொன்னதும், எனக்குச் சிரிப்புதான் வந்தது. இந்த நேரத்தில் பெங்களூர் பிரதான ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஜனக் கூட்டம் இருக்கும். அதற்கு நடுவே இந்தப் பெண் தன்னுடைய கணவரை எப்படிக் கண்டறியமுடியும்?

தவிர, இவர் அங்கே போகும்போது, அவர் கிளம்பி இங்கே வந்துவிட்டால்? பிரச்னை இன்னும் பெரிதாகிவிடுமே.

நிலைமையின் தீவிரம் இப்போது அந்தப் பெண்மணிக்குப் புரிந்துவிட்டது. மூளை உறைந்துபோனவராகப் பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டார்.

இனிமேல் அவரால் எந்தப் புதிய யோசனையையும் சிந்திக்கமுடியாது. இது புரிந்ததும், கூட்டம் சுறுசுறுப்பானது, அவரவர் தங்களுக்குத் தோன்றிய உத்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

’அந்த செல்ஃபோன், சார்ஜரை’ என்கிட்ட கொடுங்க’ என்றார் ஒருவர், ‘ஏ தம்பி, நீ என்கூட வாப்பா’ என்று அவனையும் இழுத்துக்கொண்டு தூரத்திலிருந்த ரயில் அதிகாரி அலுவலகத்தை நோக்கி நடந்தார்.

ஐந்து நிமிடத்தில் அவர்கள் திரும்பி வந்தார்கள். அந்த அலுவலகத்திலும் செல்ஃபோனை சார்ஜ் செய்கிற வசதி இல்லையாம்.

‘அது என்ன கம்பெனி செல்ஃபோன்ங்க?’, கூட்டத்தில் யாரோ விசாரித்தார்கள்.

‘நோக்கியா’

’என்னோட ஃபோனும் ஃநோகியாதான்’ என்றபடி அவர் தனது செல்பேசியை எடுத்தார், ‘அப்படியே பேட்டரியை மாத்திப் போட்டா வேலை செய்யும்ல?’

நான் குறுக்கிட்டேன், ‘நோகியாவிலேயே வெவ்வேற ஃபோனுக்கு வெவ்வேறவிதமான பேட்டரி உண்டுங்க, மாத்திப் போட்டு ரிஸ்க் எடுக்காதீங்க’

அவர் என் பேச்சை நம்பவில்லை, ‘எல்லா நோகியா பேட்டரியும் ஒண்ணுதான்’ என்றபடி இரண்டு ஃபோன்களையும் துகிலுரித்தார், பேட்டரிகளை மாற்றி இணைக்க முயன்றார்.

ம்ஹூம், பொருந்தவில்லை. அவர் எரிச்சலுடன் தன்னுடைய ஃபோனைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.

அங்கிருந்த வேறு சிலருடைய பேட்டரிகளையும் முயன்று பார்த்தோம். சரிப்படவில்லை.

அடுத்தபடியாக, ‘சிம் கார்டை மாத்திப் பார்த்தா என்ன?’ என்றார் ஒருவர்.

‘இந்தம்மா சிம் கார்ட்லதான் எல்லா நம்பரையும் ஸ்டோர் பண்ணியிருப்பாங்கன்னு என்ன நிச்சயம்?’ இன்னொருவர் மடக்கினார், ‘ஒருவேளை ஃபோன்ல போட்டிருந்தாங்கன்னா?’

‘இருக்கட்டும்ங்க, ஒரு முயற்சிதானே? செஞ்சு பார்த்தா தப்பில்லையே’

இந்த யோசனை எங்கள் எல்லோராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணின் செல்ஃபோனில் இருந்து சிம் கார்டை உருவி, இன்னொரு ஃபோனிற்கு மாற்றினார்கள்.

ஆனால், இதைச் செய்தவர் ஏதோ ஞாபகத்தில் சிம் கார்டைத் திசை மாற்றிப் போட்டுவிட்டார். அது உள்ளே சிக்கிக்கொண்டுவிட்டது.

’அச்சச்சோ’ என்று பதறியவர் அதைப் பின்னோக்கி இழுத்தார், வரவில்லை.

’விஷயம் தெரியாம எதையும் செய்யக்கூடாது’ யாரோ நக்கலாகப் பேசினார்கள்.

‘ஏன், நீதான் வந்து செய்யறது?’ இவர் கோபமாகக் கத்தினார்.

‘சரி சரி, ஆகவேண்டிய வேலையைப் பாருங்கப்பா, இந்தம்மாவேற ஓலைப்பாய்ல தூறல் போட்டமாதிரி ஓயாம அழுதுகிட்டிருக்கு’

மாட்டிக்கொண்ட சிம் கார்டை இன்னொருவர் கட்டை விரல் கொண்டு அழுத்தி வெளியில் எடுக்க முயன்றார். அது இன்னும் வலுவாகச் சிக்கிக்கொண்டுவிட்டது. ‘ச்சே’ என்றபடி மீண்டும் அழுத்த, பட்டென்று இரண்டாக உடைந்து ஒரு துண்டுமட்டும் அவர் கையில் வந்துவிட்டது.

சிம் கார்ட் உடைந்த விஷயம் அந்தப் பெண்ணுக்கு இன்னும் தெரிந்திருக்கவில்லை. அவர் முகத்தை மூடிக்கொண்டு அழுதபடி இருந்தார்.

கூட்டத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம், உடைந்து போன அந்த சிம் கார்டை இனி பயன்படுத்தமுடியுமா? எங்களில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

சிம் கார்ட் உடைந்த விவரம் தெரியாதபடி அந்தப் பெண்ணின் செல்ஃபோனைப் பொட்டலம் கட்டினார் ஒருவர். சார்ஜரையும் ஃபோனையும் அவர் கையிலேயே ஒப்படைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

அதன்பிறகு, கூட்டத்தில் யாரும் ஆலோசனை சொல்லவில்லை, புதிய விஷயங்களை முயன்று பார்க்கவில்லை, ‘பேப்பர்ல நம்பர்  எழுதி வெச்சுக்காம இந்தமாதிரி கிளம்பி வரக்கூடாதும்மா’ என்கிற விமர்சனம்மட்டும் திரும்பத் திரும்ப அந்தப் பெண்ணின்மீது ஏற்றப்பட்டது.

இப்போது, அந்தப் பெண் தன் கணவரைத் தொடர்புகொள்ள எந்தவிதமான வழியும் இல்லை. அவராகத் திரும்பி வந்து இவரை அழைத்துச் சென்றால்தான் உண்டு.

பெங்களூர் வரும் பேஸஞ்சர் ரயில்கள், இப்படி ஏழெட்டு சிறிய ரயில் நிலையங்களில் நிற்கக்கூடும். அவற்றில் எதில் இந்தப் பெண் இறங்கியிருக்கக்கூடும் என்று அவருடைய கணவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவருடைய செல்பேசியும் அணைந்திருப்பதால் அவர் இவரை அழைக்கமுடியாது.

அவர் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால், பிரதான ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் அடுத்த பேஸஞ்சரைப் பிடித்து எதிர்த் திசையில் ஒவ்வொரு ரயில் நிலையமாக இறங்கி, ஏறவேண்டும், அப்போது இவர்களை அவர் கண்டுபிடிக்கச் சாத்தியங்கள் அதிகம்.

முற்றிலும் விதிவழியே தள்ளப்பட்டுவிட்ட அந்தப் பெண்ணின் கதறலை நாங்கள் இயலாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். அவரைப் பார்த்துப் பரிதாபப்படுவது, அவருடைய கணவர் திரும்பி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்வது இவைதவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

இருட்டு மங்கும் நேரத்தில், என்னுடைய ரயில் மிகத் தாமதமாக வந்து சேர்ந்தது. அநேகமாக அங்கிருந்த எல்லோரும் அந்த ரயிலில் ஏறிக்கொண்டுவிட, பிளாட்ஃபாரத்தில் அந்தப் பெண்மணிமட்டும் தனியே, இன்னும் அழுதுகொண்டிருந்தார். அவரது குழந்தைகள் செய்வதறியாது அவரைச் சூழ்ந்து நின்றிருந்தார்கள்.

***

என். சொக்கன் …

13 05 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

19 பதில்கள் -க்கு "தவறி இறங்கியவர்"

//அவர் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால், பிரதான ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் அடுத்த பேஸஞ்சரைப் பிடித்து எதிர்த் திசையில் ஒவ்வொரு ரயில் நிலையமாக இறங்கி, ஏறவேண்டும், அப்போது இவர்களை அவர் கண்டுபிடிக்கச் சாத்தியங்கள் அதிகம்.//

அதை விட எளிதான வழி இருக்கிறது.

அவர் இறங்கிய தொடர்வண்டி நிலையத்தில் இருக்கும் நிலைய மேலாளரிடம் சென்று விபரத்தை கூறி, அதற்கு முன் இருக்கும் தொடர்வண்டி நிலையங்களுக்கு தொடர்பு கொண்டு அங்குள்ள ஒலிபெருக்கியில் அறிவிக்க கேட்டுக்கொள்ளலாம்

தொடர்வண்டி துறையில் இது போல் உதவிகளை செய்வார்கள்.

டச்சிங்..

என்ன சொல்றதுன்னே தெரில…

இம்மாதிரியான சூழ்நிலைகள் நம் இயலாமையை நல்ல வெளிச்சம் போட்டு காண்பித்து விடுகிறது.

மிகவும் நல்ல பதிவு.

Dear Chokkan,

Ithu enna ‘Touching week’- aa!….antha peneyum kulanthaigalayum ninaithale kastamaha irrukirathu……….

இந்தம்மாவேற ‘ஓலைப்பாய்ல தூறல் போட்டமாதிரி’ ஓயாம அழுதுகிட்டிருக்கு’

sir ukga ooril ippadiya ? enga ooril ‘Oolai paayil naai mondathu mathiri’ endu solvargal.

கேசவ பிள்ளை
எதில் எதில் தான் கிண்டல் பணனும்னு கிடையாதா?
அவர் தான்
இப்படி கொட்ட கொட்ட பார்த்து வர்ணனை குடுத்தார்

என்னய்யா? மனுஷன்க நீங்க??????

என்ன சொக்கரே,

இந்த சம்பவம் சற்று நம்பும்படியாக இல்லை. போன் இருக்கிறது,சார்ஜர் இருக்கிறது தேவை ஒரு பிளக் பாய்ண்ட் அவ்வளவுதான்.வேறொன்றுமில்லை.

இரயில் நிலையத்தில் நிலை அதிகாரி அலுவலகத்தில் நிச்சயம் பிளக்பாயிண்ட் இருக்கும். அப்படியும் இல்லையென்றால் இரயில் நிலையத்திற்க்கு வெளியே வந்து எதாவது செல் போன் கடையில் முயற்சி செய்து இருக்கலாம்.

உங்களை போன்ற தெளிவாகவும் நிதானமாகவும் சிந்திப்பவர்கள் இருந்தும் இப்படி ஆகி இருக்கிறதே

புருனோ, உருப்புடாதது_அணிமா, Chakra, Kesava Pillai, thamilannan, அரவிந்தன்,

//தொடர்வண்டி துறையில் இது போல் உதவிகளை செய்வார்கள்//

அட நீங்க வேற, அவங்க சார்ஜரைப் போட்டு செல்ஃபோனை உயிர்ப்பிக்கறதுக்குக்கூட உதவ மறுத்துட்டாங்க :(

//sir ukga ooril ippadiya?//

எங்க ஊர்ல எப்படியோ தெரியலை, அன்றைக்கு நான் கேட்டது அப்படி, அவ்ளோதான் :)

//அவர் தான் இப்படி கொட்ட கொட்ட பார்த்து வர்ணனை குடுத்தார்
என்னய்யா? மனுஷன்க நீங்க??????//

நண்பரே, அங்கிருந்த எல்லோருமே எங்களால் முடிந்த உதவிகளைச் செய்திருக்கிறோம், அதையும்தானே பதிவில் எழுதியிருக்கிறேன்? வர்ணனை கொடுப்பதற்காகக் கொட்டக் கொட்டப் பார்க்கவில்லை, நினைவில் இருப்பதைமட்டும் எழுதினேன், அவ்வளவே!

இயலாமையோடு நின்றது அசிங்கம்தான். அதை எழுதவும் கூடாது என்றால் அது இன்னும் பெரிய அசிங்கமில்லையா?

//இந்த சம்பவம் சற்று நம்பும்படியாக இல்லை//

இந்தப் பதிவில் நான் கற்பனை எழுதுவதே இல்லை – பெயர்களைத்தவிர :) இது சென்ற ஞாயிற்றுக்கிழமை ’பெங்களூர் ஈஸ்ட்’ ரயில் நிலையத்தில் நிஜமாக நடந்த விஷயம்!

//இரயில் நிலையத்தில் நிலை அதிகாரி அலுவலகத்தில் நிச்சயம் பிளக்பாயிண்ட் இருக்கும்//

நன்றாக இருந்தது, ஒன்றுக்கு மூன்று ப்ளக் பாயிண்ட்ஸ் இருந்தது – ஆனால் அவர் அதை செல்ஃபோன் சார்ஜிங்கிற்குக் கொடுக்கப் பிடிவாதமாக மறுத்துவிட்டார் – நானே நேரில் சென்று கேட்டேன், இன்னொருவர் கன்னடத்தில் சற்றுக் காட்டமாகவே வாதாடினார், அவர் மனம் இரங்கவில்லை.

//இரயில் நிலையத்திற்க்கு வெளியே வந்து எதாவது செல் போன் கடையில் முயற்சி செய்து இருக்கலாம்//

செய்யலாம். ஆனால் நாங்கள் எல்லோரும் ரயிலுக்காகக் காத்திருந்தோம். வெளியே சென்று முயற்சி செய்யப்போனால் ரயிலைத் தவறவிட்டுவிடுவோம் என்கிற பயம்!

தவிர, பெங்களூர் ஈஸ்ட் ரயில் நிலையத்தின் எதிரே கடைகளே இல்லை, ஒரு மைதானம், தள்ளுவண்டியில் சில நுங்குக் கடைகள், அவ்வளவே!

எனிவே, நாங்கள் யாரும் வெளியில் வந்து முயற்சி செய்யவில்லை, செய்யத் தோன்றவில்லை. தவறுதான்.

//இந்த சம்பவம் சற்று நம்பும்படியாக இல்லை//

//இந்தப் பதிவில் நான் கற்பனை எழுதுவதே இல்லை – பெயர்களைத்தவிர இது சென்ற ஞாயிற்றுக்கிழமை ’பெங்களூர் ஈஸ்ட்’ ரயில் நிலையத்தில் நிஜமாக நடந்த விஷயம்!//

சொக்கரே தயவு செய்து உங்களை நம்பாமல் நான் எழுதியதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

இவ்வளவு வாய்ப்பு இருந்தும்,உங்களை போன்றவர்களிலிருந்தும் அந்த பெண்மணிக்கு உதவ முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அப்படி சொன்னேன்.

உங்கள் எழுத்தில் இருக்கும் நேர்மை எனக்கு நன்கு தெரியும்

Very touching incident.

Did she have address of where they planned to stay in b’lore?

Atleast some money to go back to village?

Yennamo ponka…rompa kashtamayduthu ithai padichuttu

பதிவுக்கு வைத்திருக்கும் slug-ஐயும் ரசித்தேன்.

நீங்கள் எல்லாமே எழுதவில்லை போல.

இந்த காலத்து சுட்டிஸ் கொஞ்சம் உஷார். அப்புறம் செல்போன் இருக்கும் அளவு, இருந்த குடும்பம் – இப்படி நிலை தடுமாறி இறங்குமா? என்ன சண்டையோ?

பெங்களூர் ஈஸ்டில் எல்லா ட்ரெயினும் நிற்பதில்லையே?

அரவிந்தன், Sujal, சத்யராஜ்குமார், Ramesh,

நன்றி :)

//Did she have address of where they planned to stay in b’lore?//

She didn’t, She said she came to attend a marriage function here, and the address / invitation is with her husband

//Atleast some money to go back to village?//

I guess that was not a problem, She herself mentioned it – But was afraid to go back because ‘அவரு திட்டுவாரு’ syndrome :)

//பதிவுக்கு வைத்திருக்கும் slug-ஐயும் ரசித்தேன்//

நீங்க இதையெல்லாம் கவனிக்கறீங்களா? இனிமே நான் கொஞ்சம் கவனமா இருக்கணும் ;)

//செல்போன் இருக்கும் அளவு, இருந்த குடும்பம் – இப்படி நிலை தடுமாறி இறங்குமா? என்ன சண்டையோ?//

அன்றைக்கு எல்லா ரயில்களும் கூட்டமாக இருந்தன. கணவர், மனைவி ஒரே பெட்டியின் வெவ்வேறு முனைகளில் உட்கார நேர்ந்திருக்கலாம், அல்லது, மனைவிக்குமட்டும் உட்கார இருக்கை கிடைத்து, கணவர் வேறு எங்கேனும் நின்றுகொண்டோ, உச்சியில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டோ பயணம் செய்திருக்கலாம், மனைவி பெங்களூர் என்ற பெயர்ப் பலகையைப் பார்த்ததும் பயத்தில் அவசரமாக இறங்கியிருக்கலாம் – எல்லாம் என் ஊகங்கள்தான் :) ஒவ்வொரு நாளும் இப்படித் தவறி இறங்குகிறவர்கள் (பஸ், ரயில் இரண்டிலும்) இருக்கதானே செய்கிறார்கள்?

//பெங்களூர் ஈஸ்டில் எல்லா ட்ரெயினும் நிற்பதில்லையே?//

பேஸஞ்சர் ரயில்கள் அனைத்தும் இங்கே நின்று செல்லும். அந்தப் பெண்மணி ஏதோ ஒரு கிராமத்தின் பெயரைச் சொன்னார், அங்கிருந்து பேஸஞ்சரில் பயணம் செய்திருக்கிறார் – நான் அங்கே காத்திருந்ததும் இன்னொரு பேஸஞ்சர் வண்டிக்காகதான்!

மிக சுலபமாக அவர் திரும்பு ரயிலேறி தன் ஊருக்கு போய் சேர்ந்து விடலாம். (அவரிடம் காசு இருக்கும் என்கிற நம்பிக்கையில்). அப்படி அவரிடம் காசு ஒன்றுமில்லையென்றாலும், நகையாவது இருக்கும் – அவசரத்துக்கு பணம் புரட்ட.

உண்மை சம்பவமாக இருந்தாலும், அந்த கூட்டமே முட்டாள்தனமாக நடந்து கொண்டது என்று நினைக்கிறேன்.

R Sathyamurthy,

நன்றி :)

//அந்த கூட்டமே முட்டாள்தனமாக நடந்து கொண்டது என்று நினைக்கிறேன்//

ரொம்ப உண்மை. நானும் அந்த முட்டாள்களில் ஒருவன்!

But..changing battery is a good idea.. it should have worked.. atleast.. after seeing the battery model, people should have tried to find a similar cell phone in that crowd..

Station master or people should be really blamed for this situation..simple matter.. 2 min charge panni pothoom..

cha.. felt really bad.. Even my mom and my sister son faced similar problem while going from tirunelveli to madurai..

My mom took a wrong bus ( Nagerkovil bus) for madurai bus.. because my sister son ( 10 years) told thats the express bus.

After crossing 2 3 stops conductor askedthem to get down where there is NO coin booth or STD booth.. Cell phone charged down..

Because its only 2 of them, they tried inform people, and after trying to switch on and failed in that attempt, came back to tirunelveli. Took correct bus and reached Madurai ( Delayed 2 hours).

When enquired him why he choosen that wonrg bus, my sister son told .. that bus was new and color was good. Generaly the madurai bus is NOT new and color is dull :)

Dear Mr.Chokkan,

Iam Karthikeyan from chennai.I read some of your books thru kizhakku pathipagam.Today only i start to read your blog.
Its really nice.Your words come from your heart.So naturally it has power to attract other hearts.Wll done Mr.Chokkan.Keep it up.

Karthi, Karthikeyan,

நன்றி :)

நீங்கள் இருவரும் ஒருவரா? :)

//Station master or people should be really blamed for this situation..simple matter//

very true – ஆனால் சூழ்நிலை சதி செய்துவிட்டது :(

//that bus was new and color was good//

Classic குழந்தை Answer – பிரச்னை போகட்டும், அவனுடைய ரசனையைப் பாராட்டுங்கள் ஐயா :)

Dear Mr.Chokkan,

Iam Karthikeyan from chennai.Karthi is another person.I dont know about him.

மறுமொழி இடுக

ஹையா, ஜாலி ஜாலி!

கிழக்கு பாட்காஸ்ட்


  • kggouthaman: Hi friends - google calendar is not working in my google chrome. All my efforts to bring it to life are gone futile. Welcome any help from anyone.
  • kggouthaman: அந்தக் காலத்துல நான் படிச்ச பாலிடெக்னிக் - கரும்பலகையி
  • Balaji Viswanathan: U hv got pretty good writing skills. A successful writer needs a sharp sense of observation and a deep sense of reflection. The best of the writers in

இதுவரை

  • 68,998 வருகைகள், நன்றி!

இது புதுசு



ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

விளம்பரங்கள்

சிநேகிதங்களை அறிமுகப்படுத்தினா இலவசமா டி-ஷர்ட்டு தர்றாங்களாம் ...



மெயில் படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?



எஸ்.எம்.எஸ். படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?




கருத்தைச் சொன்னா காசு தர்றாங்களாமே


பக்கங்கள்

 

மே 2009
தி செ பு வி வெ ஞா
« ஏப்   ஜூன் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031