Posted by: என். சொக்கன் on: December 18, 2011
நேற்று ட்விட்டரில் எழுதிய 31 ட்வீட்களை நண்பர் டாக்டர் விஜய் (@scanman) தொகுத்துத் தந்தார். மொத்தமாகப் படிக்க செம ஜாலியாக இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று சில திருத்தங்கள், கூடுதல் குறிப்புகளுடன் இங்கே தொகுத்துவைக்கிறேன்:
இன்று மார்கழி 1. வருடாந்திர வழக்கப்படி திருப்பாவை, திருவெம்பாவை 50 பாட்டுகளையும் ஒருமுறை நிதானமாகப் படித்து முடித்தேன்.
திருப்பாவைப் பாடல்களைவிட, நமக்கு நன்கு தெரிந்த ஆண்டாள் கதையே மேலோங்கி நிற்பதால், சூப்பர் ஸ்டார் படம் பார்க்கும் உணர்வு, ஆனால் திருவெம்பாவையில் அந்தப் பிரச்னை இல்லை. No super stars, No பின்னணிக் கதை, எல்லாப் பெண்களும் சமம் என்பதால் சுவாரஸ்யம் மிகுகிறது.
திருப்பாவை ஹீரோ(யின்) சப்ஜெக்ட் என்றால், திருவெம்பாவை அந்தக்கால ஆர். பி. சௌத்ரி ரக 4 ஹீரோ(யின்) சப்ஜெக்ட்.
அடிக்கடி ஒலி வடிவத்தில் கேட்டதாலோ என்னவோ, திருப்பாவையில் உள்ள வார்த்தைகள் எளிதாகவும் திருவெம்பாவையில் கடினமாகவும் உள்ளதுபோல் தோற்றம்.
ஆனால் இரண்டிலும் பளிச்சென்று கவனம் ஈர்ப்பவை சில இரு வரித் துணுக்குகள்தான். ட்விட்டர் வடிவத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துபவை. உதாரணமாக எனக்குப் பிடித்த பாவை ட்வீட் வரிகள் இங்கே:
- செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம் (திருப்பாவை 2)
- வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் (திருப்பாவை 3)
- ஆழி உள் புக்கு, முகந்துகொடு, ஆர்த்து ஏறி, ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கருத்து (திருப்பாவை 4)
- வாழ உலகினில் பெய்திடாய் (திருப்பாவை 4)
- வாயினால் பாடி மனத்தினால் (’மனதினால்’ அல்ல, அப்படி எழுதுவது பிழை) சிந்திக்க (திருப்பாவை 5)
- அரி என்ற பேரரவம் உள்ளே புகுந்து குளிர்ந்து… (திருப்பாவை 6)
- வாச (அது என்ன வாசம்?) நறும் குழல் ஆய்ச்சியர் (திருப்பாவை 7)
- கும்பகரணனும் தோற்றும் உனக்கே பெரும்துயில்தான் தந்தானோ? (திருப்பாவை 10)
- செல்வப் பெண்டாட்டி (வாவ்!) (திருப்பாவை 11)
- எருமை கன்றுக்கு இரங்கி, நினைத்து முலைவழியே நின்று பால் சோர (திருப்பாவை 12)
- மனத்துக்கு இனியானை (திருப்பாவை 12)
- வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று (திருப்பாவை 13)
- எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் (திருப்பாவை 14)
- எல்லே! இளம்கிளியே, இன்னும் உறங்குதியோ? (திருப்பாவை 15)
- தூயோமாய் வந்தோம், துயில் எழப் பாடுவோம் (திருப்பாவை 16)
- மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயில்இனங்கள் கூவின காண் (திருப்பாவை 18)
- செந்தாமரைக் கையால் சீர்ஆர் வளைஒலிப்ப வந்து திறவாய் (திருப்பாவை 18)
- நீ உன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் (திருப்பாவை 19) Don’t be a bed potato
![]()
- கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே செங்கண் (திருப்பாவை 22) எப்பேர்ப்பட்ட உவமை!
- யாம் வந்த காரியம் ஆராய்ந்து, அருள் (திருப்பாவை 23) நாங்கள் கேட்கிறோமே என்று இரக்கப்பட்டுக் கொடுத்துவிடாதே, ஆராய்ந்து முடிவு செய்
- ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர (திருப்பாவை 25)
- கூடி இருந்து குளிர்ந்து… (திருப்பாவை 27) சோஷலிஸம்?
![]()
- குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா (திருப்பாவை 28) பின்னர் ராஜாஜி எழுதிய மறைமூர்த்தி கண்ணாப் பாட்டுக்குத் தொடக்கம் இது
- எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் (திருப்பாவை 29)
- மற்றை நம் காமங்கள் மாற்று (திருப்பாவை 29) நீ இருந்தால் வேறெதும் வேண்டாம் (இதே கருத்தைத் திருவெம்பாவையும் ஓர் இடத்தில் சொல்கிறது, கீழே)
- ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதி (திருவெம்பாவை 1)
- வன் செவியோ நின் செவிதான் (திருவெம்பாவை 1)
- அமளி(படுக்கை)க்கே நேசமும் வைத்தனையோ? (திருவெம்பாவை 2)
- நின் அன்பு உடைமை எல்லோம் அறியோமோ? (திருவெம்பாவை 3)
- இன்னம் புலர்ந்தின்றோ(திருவெம்பாவை 4)
- துயின்று அவமே காலத்தை போக்காதே(திருவெம்பாவை 4)
- மால் அறியா, நான்முகனும் காணா மலை(திருவெம்பாவை 5)
- தானே வந்து எம்மைத் தலை அளித்து ஆட்கொண்டு அருளும் (திருவெம்பாவை 6)
- தீ சேர் மெழுகு ஒப்பாய் (திருவெம்பாவை 7)
- ஏழைப் பங்காளனை (திருவெம்பாவை 8) இன்று அரசியலால் அர்த்தம் இழந்துவிட்ட வார்த்தை இங்கிருந்து வந்ததுதான்
![]()
- முன்னைப் பழம்பொருள்கும் முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே (திருவெம்பாவை 9)
- என்ன குறையும் இலோம் (திருவெம்பாவை 9, எப்போது குறை இல்லை? தெரிந்துகொள்ள அட்டகாசமான இந்தப் பாட்டை முழுக்கப் படியுங்கள்!)
- ஓத உலவா ஒரு தோழன் (திருவெம்பாவை 10)
- நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும்வகையெல்லாம் உய்ந்துஒழிந்தோம் (திருவெம்பாவை 11)
- முன் இக்கடலைச் சுருக்கி, எழுந்து, உடையாள் என்னத் திகழ்ந்து (திருவெம்பாவை 16)
- செங்கண் அவன்பால், திசைமுகன்பால், தேவர்கள்பால் எங்கும் இலாத ஓர் இன்பம் நம் பால் (திருவெம்பாவை 17)
- கண் ஆர் அமுதம் (திருவெம்பாவை 18)
- எம் கொங்கை நின்அன்பர்அல்லார் தோள் சேரற்க (திருவெம்பாவை 19)
- எங்கு எழில் என் ஞாயிறு? (திருவெம்பாவை 19) நீமட்டும் அருள் செய்துவிட்டால் அதன்பிறகு சூரியன் எங்கே உதித்தால் எனக்கென்ன?
- போற்றி, எல்லா உயிர்க்கும் (திருவெம்பாவை 20) #முடிச்சுக்கறேன்
![]()
***
என். சொக்கன் …
18 12 2011
மனப்பாடமாக வரும் அருமையான வரிகள். திருமதி எம்.எல்.வி அவர்களின் இனிமையான குரலும் பாடல்களின் அர்த்தம் உளாங்கும்போது ஏற்படும் இன்பம் மனத்தை உருக்க வைக்கிறது.
நீங்கள் தொகுத்துக் கொடுத்திருக்கும் விதம்.பக்குவம்.
1 | LKG (@chinnapiyan)
December 19, 2011 இல் 6:55 மு.பகல்
அருமை அருமையிலும் அருமை. brought every beautiful lines that I like in a nutshell . வாழ்க வளர்க நிம் தொண்டு