மனம் போன போக்கில்

Archive for the ‘Social Responsibility’ Category

’புதிய தலைமுறை’ சென்ற இதழில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்

போன வாரம், நண்பர் ஒருவர் எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவரை வாசலில் சென்று வரவேற்றேன், ‘உள்ளே வாங்க, காபி சாப்பிட்டுகிட்டே பேசலாம்!’ என்று அழைத்தேன்.

‘பரவாயில்லை, இங்கே கார்லயே பேசலாமே’ என்று மறுத்தார் அவர்.

‘சேச்சே, ஏஸி கான்ஃபரன்ஸ் ரூம்ல சௌகர்யமா உட்கார்ந்துகிட்டுப் பேசறதை விட்டுட்டு இங்கே ஏன் சிரமப்படணும்?’ என்றேன் நான்.

அவர் தயக்கமாகச் சிரித்துவிட்டுச் சொன்னார், ‘எனக்குக் கால்ல ஒரு சின்னப் பிரச்னை, மாடிப்படி ஏறமுடியாது.’

’நோ ப்ராப்ளம், லிஃப்ட் இருக்கே!’

’லிஃப்ட் சரிதான். ஆனா, அந்த லிஃப்டை நெருங்கறதுக்கு முன்னாடி நாம அஞ்சாறு படி ஏறணும் போலிருக்கே. அது எனக்குச் சிரமம்.’

அவர் அப்படிச் சொன்னபிறகுதான் நான் யோசித்தேன். உண்மையிலேயே எங்கள் அலுவலகத்தில் லிஃப்டுக்குச் செல்லவேண்டுமென்றால் சில படிகளை ஏறத்தான் வேண்டும். இவரைப்போல் உடல் ஊனமுற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், சக்கர நாற்காலியில் செல்கிறவர்கள், வயதானவர்களுக்கு அது கடினம்தான்.

ஆச்சர்யமான விஷயம், நான் இதே அலுவலகத்தில் எட்டு வருடங்களாக வேலை செய்கிறேன், இந்தப் படிகளில்தான் தினமும் பலமுறை ஏறிச் செல்கிறேன், இறங்கி வருகிறேன். ஆனால் இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைகூட இதைப்பற்றி யோசித்தது கிடையாது.

‘நானும் அப்படிதான் சார் இருந்தேன்’ என்றார் அவர். ‘சில வருஷங்களுக்கு முன்னாடி எனக்குப் பக்கவாத அட்டாக், உயிர் பிழைச்சு எழுந்ததே பெரிய விஷயம், ரொம்ப நாள் ரெஸ்ட் எடுத்துட்டு, இப்பதான் தைரியமாக் குச்சியை ஊனிகிட்டுக் கொஞ்சம் நடமாட ஆரம்பிச்சுருக்கேன்!’

‘இந்த அட்டாக்குக்கு முன்னாடிவரைக்கும், நானும் இதுமாதிரி படிகளைப் பற்றி அலட்டிகிட்டதே கிடையாது. எனக்கே நடக்கறது, படி ஏறுறது சிரமம்ன்னு ஆனப்புறம்தான், ஒவ்வோர் இடத்தையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பிச்சேன். இருக்கிற கட்டடங்கள்ல பாதிக்கு மேல, என்னைமாதிரி ஆள்கள் உள்ளே நுழைய லாயக்கில்லைன்னு புரிஞ்சது.’

’இப்போ உங்க கட்டடத்திலேயே, படிகளுக்குப் பக்கத்துல ஒரு சாய்வுப் பாதை அமைச்சாப் போதும், நான் சவுகர்யமா உள்ளே வந்துடுவேன். அதுக்குச் சில ஆயிரம் ரூபாய் செலவாகும். அது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனா அப்படிச் செய்யணும், அது அவசியம்ன்னு உங்களுக்குத் தோணணுமே, அதுதான் பெரிய பிரச்னை.’

‘இந்தக் கட்டடம்மட்டுமில்லை, பல ரெஸ்டாரன்ட்கள், தியேட்டர்கள், ஷாப்பிங் மால்ஸ், தொழிற்சாலைகள், பெரிய கார்ப்பரேட் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஏன், சில ஹாஸ்பிடல்ஸைக்கூட, எங்களைமாதிரி ஆள்கள் உள்ளே நுழைய வசதியில்லாதபடிதான் கட்டியிருக்காங்க, அதுவும் முக்கியம், அவசியம்ன்னு யாருக்கும் தோணறதே இல்லை. என்ன செய்ய?’

இப்படி அவர் ஆதங்கத்துடன் கேட்டபிறகு, எனக்கு ஒட்டுமொத்த உலகமும் புதிதாகத் தோன்ற ஆரம்பித்தது. கண்ணில் படுகிற ஒவ்வொரு கட்டடத்தையும், உடல் ஊனமுற்ற ஒருவர் இதனுள் நுழைவது எளிதா, சிரமமா என்று கவனித்து எடை போட ஆரம்பித்தேன்.

சோகமான விஷயம், மிகப் பெரிய நகரங்களில்கூட, ஒரு ஏரியாவில் நூறு கட்டடங்கள் இருக்கின்றது என்று வைத்துக்கொண்டால், அதில் பத்து அல்லது பதினைந்துமட்டுமே உடல் ஊனமுற்றோர் எளிதில் அணுகும்வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்துக் கட்டடங்களும் வாசலில் குறைந்தது இரண்டு முதல் ஐந்து அல்லது ஆறு படிகளை அமைத்து அவர்களைத் தடுத்து நிறுத்திவிடுகின்றன.

இதைப் படிக்கும்போது, உங்களது வீடு அல்லது அலுவலகத்தை மனக்கண்ணில் கொண்டுவந்து பாருங்கள், அங்கே சாய்வுப் பாதை உண்டா? சக்கர நாற்காலியிலோ, கைத்தடியின் துணையுடனோ நடமாடும் ஒருவர் அதில் எளிதாக நுழைவது சாத்தியமா?

சாய்வுப் பாதை இல்லாவிட்டால் என்ன? மற்றவர்கள் உதவியுடன் அவர்கள் உள்ளே வரலாமே.

நிச்சயமாக வரலாம். ஆனால் அதேசமயம், உடல் குறைபாடு கொண்ட அவர்கள் பிறரின் துணை இன்றி சுதந்தரமாகவும் தன்னம்பிக்கையோடும் நடமாடவே விரும்புகிறார்கள். நம்முடைய உதவியோ, பரிதாப உச்சுக்கொட்டலோ அவர்களுக்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள். அதற்கான ஏற்பாட்டை நாம் செய்து தருவதுதானே நியாயம்?

இந்தியாவில்மட்டுமில்லை. உலகம்முழுக்க இந்த வாசல் படிக்கட்டுகளின் பிரச்னை இருக்கிறது. கட்டட உரிமையாளர்களோ அவற்றை வடிவமைப்பவர்களோ இதுபற்றி யோசிப்பதே இல்லை. இதனால் உடல் ஊனமுற்றவர்களின் உலகம் வெகுவாகச் சுருங்கிப்போய்விடுகிறது.

உதாரணமாக, ஒருவர் நல்ல வாசகராக இருக்கலாம். ஆனால் ஊரில் உள்ள எல்லாப் புத்தகக் கடைகளின் வாசலிலும் இதுபோல் பெரிய படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தால், அவர் உள்ளே போய்ப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துத் தேர்ந்தெடுத்து வாங்கமுடியுமா?

இதேபோல், பத்து தியேட்டர்கள் உள்ள ஓர் இடத்தில், ஒரே ஒரு தியேட்டரில்மட்டுமே சாய்வுப்பாதை உள்ளது என்றால், அவரைப் பொறுத்தவரை மற்ற ஒன்பது தியேட்டர்களும் இருந்தும் இல்லாதவைதான். இதைதான் ’அவர்களுடைய உலகம் மிகச் சிறியதாகச் சுருங்கிவிடுகிறது’ என்று சொல்கிறார்கள்.

இந்தப் பிரச்னையைச் சரி செய்யும் நோக்கத்துடன் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் லேட்டஸ்ட், ‘ஆக்ஸஸ் மேப்.’

ஆங்கிலத்தில் ‘ஆக்ஸஸ்’ என்றால், அணுகுதல், அதாவது, நடப்பதில் பிரச்னை உள்ள யாரேனும் ஒரு கட்டடத்தை அணுகுவது எந்த அளவுக்கு எளிது என்பதைக் கவனித்து, அதன் அடிப்படையில் கட்டடங்களுக்கு மார்க் போடுகிறார்கள்.

உதாரணமாக, ஒரு கட்டடத்தின் வாசலில் வெறும் படிக்கட்டுகள்தான் என்றால் 1 மார்க், நல்ல சாய்வுப் பாதை உள்ளது என்றால் 2 மார்க், அங்குள்ள லிஃப்டினுள் சக்கர நாற்காலிகள் செல்லும் அளவுக்கு இடம் இருக்கிறது என்றால் இன்னொரு மார்க், கட்டடத்தினுள் நெருக்கடி அதிகம் இல்லாமல், அவர்கள் எளிதில் வளைய வரும்படி விசாலமான வசதிகள் இருந்தால் இன்னொரு மார்க், மாற்றுத் திறனாளிகளுக்காகத் தனி டாய்லெட் வசதி இருந்தால் இன்னொரு மார்க், இப்படி சகல வசதிகளும் சிறப்பாகச் செய்து தரப்பட்டிருந்தால், முழுசாக ஐந்து மார்க்!

இப்படி ஒவ்வொரு கட்டடத்துக்கும் பொதுமக்களை மார்க் போடச் சொல்கிறார்கள். அவற்றை மொத்தமாகக் கூட்டிச் சராசரி கணக்கிட்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு நகரத்திலும் ‘ஆக்ஸஸ்’ எளிதாக உள்ள இடங்களை ஒரு வரைபடமாகக் குறிக்கிறார்கள்.

ஒரு தெருவில் நான்கு உணவகங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒன்றுதான் சாய்வுப்பாதையுடன் உள்ளது என்றால், இந்த ‘ஆக்ஸஸ் மேப்’ அந்த உணவகத்தைமட்டும் விசேஷமாக எடுத்துக் காண்பிக்கும். மற்றவற்றைச் சுற்றிச் சிவப்பு வட்டம் போட்டு எச்சரிக்கும்.

சக்கர நாற்காலியில் இயங்கும் ஒருவர் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே, கம்ப்யூட்டரிலோ, தனது மொபைல் ஃபோனிலோ இந்த மேப்பைப் பார்த்துக்கொள்ளலாம். எந்தெந்த இடங்கள் தான் எளிதில் செல்லும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று தெரிந்துகொண்டு அதற்கு ஏற்பத் திட்டமிடலாம்.

இதன் அடுத்தகட்டமாக, நல்ல சாய்வுப் பாதை, உள்ளே சக்கர நாற்காலிகள் எளிதில் சென்று திரும்பும் வகையில் இட வசதி போன்றவற்றைச் செய்து தருகிற வணிக நிறுவனங்களைப் பாராட்டி ஊக்குவிக்கிறார்கள். இதன்மூலம் படிக்கட்டுகளைக் காண்பித்துப் பயமுறுத்தும் மற்ற கட்டடங்களும் திருந்தும் என்கிற எண்ணம்தான்.

தற்சமயம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மிக வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்த ‘ஆக்ஸஸ் மேப்’, இந்தியாவிலும் உள்ளது. ஆனால் நம் மக்கள் இன்னும் கட்டடங்களைக் கவனித்து மார்க் போடத் தொடங்கவில்லை. அதிகப் பேர் மார்க் போட்டால்தான், நல்ல கட்டடங்களைத் தேர்ந்தெடுக்கவும், கெட்ட கட்டடங்களைச் சுழித்து வட்டம் போடவும் வசதியாக இருக்கும்.

ஆகவே, நீங்கள் சாதாரணமாக நடப்பவரானாலும் சரி, சக்கர நாற்காலியில் இயங்குபவரானாலும் சரி, நீங்கள் செல்லும் ஒவ்வொரு கட்டடத்தையும் இந்தக் கண்ணோட்டத்தில் கவனித்து மார்க் போடுங்கள். அதைக் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் ஃபோன்மூலம் ‘ஆக்ஸஸ் மேப்’ இணைய தளத்தில் (http://www.axsmap.com/) இலவசமாகப் பதிவு செய்யுங்கள். உங்களது நண்பர்களையும் இதையே செய்ய உற்சாகப்படுத்துங்கள்.

நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து தேர் இழுத்தால், அடுத்த சில மாதங்களுக்குள் இந்தியாவுக்கும் அட்டகாசமான ஓர் ஆக்ஸஸ் மேப் தயாராகிவிடும். அதன்பிறகு, நம் ஊர் மாற்றுத் திறனாளிகளின் உலகம் சுருங்கிக் காட்சியளிக்காது.

***

இதனுடன் தொடர்புடைய இன்னொரு கட்டுரை / பேட்டியும் இதே பக்கத்தில் வெளியானது. நண்பர் ஈரோடு நாகராஜ் எழுதிய அந்தக் கட்டுரை இங்கே : http://erodenagaraj.blogspot.in/2012/10/blog-post.html

சில வாரங்களுக்குமுன்னால், லாண்ட்மார்க் புத்தகக் கடை க்யூவில் காத்திருந்தேன். எனக்குப் பக்கத்து க்யூவில் ஒருவர், கை நிறைய சாக்லெட்களுடன் நின்றிருந்தார்.

அநேகமாக அன்று அவருடைய குழந்தைக்குப் பிறந்த நாளாகவோ, வீட்டில் வேறு விசேஷமாகவோ இருக்கவேண்டும், அதற்கு வருகிற பிள்ளைகளுக்குத் தருவதற்காக அந்த விசேஷ சாக்லெட்களைப் பெரும் எண்ணிக்கையில் வாங்கியிருந்தார்.

அந்த சாக்லெட்கள் எனக்கும் நன்கு பழக்கமானவைதான். டிவியில் அடிக்கடி விளம்பரங்களாக வரும். நீங்களும் பார்த்திருப்பீர்கள். முப்பது ரூபாய் விலை. முட்டை சைஸ். உடைத்தால் இந்தப் பாதியில் கொஞ்சூண்டு சாக்லெட், அதைச் சாப்பிட அமீபா அளவிலும் வடிவத்திலும் ஒரு ஸ்பூன், மற்ற பாதியில் சுண்டைக்காய் சைஸுக்கு ஒரு சின்ன பொம்மை, அதை Assemble செய்வது எப்படி என்கிற குறிப்புப் புத்தகம், அதில் உள்ள பொடி எழுத்துகளை லென்ஸ் கொண்டு படித்துப் புரிந்துகொண்டு அந்த பொம்மையைச் ‘செய்து’ விளையாட ஆரம்பிப்பதற்குள் அது விரல் இடுக்கில் நழுவிக் காணாமல் போய்விடும்.

மற்றதெல்லாம் இருக்கட்டும், தக்கனூண்டு சாக்லெட்டை இப்படி Package செய்து முப்பது ரூபாய்க்கு விற்கிற புண்ணியவான் இருக்கிறானே, அவன் வீட்டில் மாதம் தவறாமல் மும்மாரி பொழியட்டும் என்று நான் எப்போதும் வேண்டிக்கொள்வேன்.

முப்பது ரூபாய் என்பதற்காக யாராவது யோசிக்கிறார்களா? அதுவும் பெங்களூரில்? இதோ, கை நிறைய சாக்லெட் முட்டைகளை அள்ளிவைத்திருக்கும் இவரே சாட்சி.

ரொம்ப நேரமாக க்யூவில் நின்று எனக்குப் போரடித்தது. அவர் கையில் உள்ள சாக்லெட்களை எண்ண ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு டப்பாவிலும் 3 முட்டைகள். மொத்தம் 20 டப்பாக்கள். அப்படியானால் 60 முட்டைகள். 60 * 30 = 1800 ரூபாய்கள்.

யம்மாடி. என் மனைவியிடம் இதைச் சொன்னால், ‘இந்தக் காசுக்கு எங்க ஊர்ல ஒரு மாசம் சமையலே செஞ்சுடுவோம்’ என்பார்.

அதற்குள் முட்டைக்காரர் அவருடைய கவுன்டரை நெருங்கியிருந்தார். இருபது டப்பாக்களையும் பொத்தென்று வைத்துவிட்டுப் பர்ஸைத் திறந்து க்ரெடிட் கார்டை எடுத்தார்.

கவுன்டரில் இருந்தவர் ரொம்ப நல்லவர்போலிருக்கிறது, ‘எக்ஸ்க்யூஸ் மீ சார், நான் ஒரு சின்ன ஆலோசனை சொல்லலாமா?’ என்றார்.

‘வாட்?’

‘இதே சாக்லெட் 4 உள்ள பேக்ஸ் கிடைக்குது சார், அதுல இப்போ 20% டிஸ்கவுன்ட் இருக்கு’ என்றார் கவுன்டர்மணி, ‘நீங்க இதுல 20 டப்பா வாங்கறதுக்குப் பதிலா அதுல 15 டப்பா வாங்கினாப் போதும், யு வில் சேவ் அரவுண்ட் 350 ருப்பீஸ்.’

முட்டைக்காரர் முகத்தில் எரிச்சல், ‘ஃபர்கெட் இட்’ என்றார் சத்தமாக, ‘யு மைண்ட் யுவர் பிஸினஸ், ப்ளீஸ்!’

அப்புறமென்ன? எல்லா முட்டைகளுக்கும் பில் போடப்பட்டது. 1800 ரூபாய்க்கு க்ரெடிட் கார்டைத் தேய்த்துக் கையெழுத்துப் போட்டுவிட்டு அவர் போய்க்கொண்டே இருந்தார்.

எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ’பில் கேட்ஸ் கீழே விழுந்த ரூபாயைப் பொறுக்கமாட்டார், ஏனெனில் அதைப் பொறுக்கும் நேரத்தில் அவர் அதைவிட அதிகத் தொகையைச் சம்பாதித்துவிடுவார்’ என்று ஒரு பொன்மொழி(?) சொல்வார்கள், இவர் அதுமாதிரி நபராக இருப்பாரோ?

இவரைப் போன்ற நபர்களை நான் நிறைய சூப்பர் மார்க்கெட்களில் பார்த்திருக்கிறேன். பொருள்களை அள்ளிப் போடுவார்கள். எதையும் விலை பார்க்கமாட்டார்கள். ஒப்பிடமாட்டார்கள். பில் போட்டபின் பட்டத்தின் சற்றே நீண்ட வாலைப் போல் அச்சிட்டு வரும் ரசீதைச் சரிபார்க்கமாட்டார்கள். பணத்தைக் கட்டு, காருக்கு நட, அவ்ளோதான்!

இதெல்லாம் பார்த்தால்தான் ஆச்சு என்று நான் சொல்லவில்லை. அதன்மூலம் சில நூறு ரூபாய்கள் பணம் மிச்சமாவது அவர்களுக்கு அவசியப்படாமல் இருக்கலாம். அதைக் கவனிக்கும் நேரத்தில் வேறு உருப்படியான வேலைகளைச் செய்யவேண்டியிருக்கலாம்.

அது நிற்க. இந்த க்யூ சமாசாரம் நடந்து பல நாள்கள் கழித்து, இன்றைக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.

எங்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு சிறிய குழுவினர் ப்ராஜெக்ட் ஒன்றைப் பிரமாதமாகச் செய்து முடித்தோம். அதைக் கொண்டாடுவதற்காக எல்லாரும் ஒன்றாக மதிய உணவுண்டோம்.

அது ஓர் ஆந்திர உணவகம். வாசல் கதவு திறந்துவிடுகிறவரில் ஆரம்பித்து, காத்திருக்கும் அறையின் செய்தித் தாள்கள்வரை எங்கு நோக்கினும் சுந்தரத் தெலுங்கின் பாட்டிசைப்பு.

போதாக்குறைக்கு, என்னுடன் வந்தவர்கள் அறுவர், எல்லாரும் தெலுங்கர்கள். அவர்கள் தங்களுக்குள் செப்போ செப்பென்று செப்பித் தள்ள எனக்குக் காது புளித்துவிட்டது.

தெலுங்கு தெரியாத ஒருத்தன் பக்கத்தில் இருக்கிறானே என்கிற அடிப்படை நாகரிகமும் அவர்களுக்கு இல்லை, ஆந்திராவில் (ஹைதராபாதில்) மூன்று வருடம் வசித்தபோதும், உள்ளூர் மொழியான தெலுங்கைப் பேசக் கற்றுக்கொள்கிற சமர்த்தும் எனக்கு இல்லை. தானிக்குத் தீனி, சரியாப் போச்சு.

தீனி. அதுதான் மேட்டர். என்னோடு வந்திருந்த அறுவரும் ஆளுக்கு ஒரு சிக்கன் பிரியாணி சொன்னார்கள். அதுவும் ஒரு சிறிய குண்டான் சைஸுக்கு வந்து சேர்ந்தது.

ஒரு குண்டான் இல்லை, ஆளுக்கு ஒரு குண்டான். அது நிறையச் சோறு, ஆங்காங்கே சிக்கன் துண்டுகள்.

‘இவர்கள் இதை மொத்தமும் எப்படிச் சாப்பிட்டு முடிப்பார்கள்?’ என்று நான் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, அவர்கள் உற்சாகமாக ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்தார்கள்.

சும்மா சொல்லக்கூடாது, அந்த பிரியாணி நிஜமாகவே ரொம்ப ருசியாக இருந்திருக்கவேண்டும். மகிழ்ச்சியில் அவர்களுக்குத் தெலுங்கு பேசக்கூட மறந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

அப்படி முழுத் தீவிரத்துடன் சாப்பிட்டும்கூட, ஆளுக்குக் கொஞ்சம் பாக்கி வைத்துவிட்டார்கள். சுமார் ஒரு குண்டான் பிரியாணி மிஞ்சிவிட்டது.

பொதுவாக இதுமாதிரி ஹை க்ளாஸ் உணவகங்களில் இப்படி மிஞ்சும் உணவை அப்படியே விட்டுவிட்டு வருவதுதான் ‘நாகரிகம்’. ஒரு குண்டான் சிக்கன் பிரியாணி 200 ரூபாயோ என்னவோ விலை, போகட்டுமே, அதனால் என்ன?

நல்லவேளையாக, இந்தக் குழுவின் தலைவர் அப்படி நினைக்கவில்லை. ‘இதை பார்ஸல் செஞ்சு கொடுங்க’ என்று வெயிட்டரைக் கேட்டுக்கொண்டார். வீட்டுக்குக் கொண்டுபோய் சூடு செய்து சாப்பிடுவாராக இருக்கும்.

பில் வந்தது. காசைக் கொடுத்தோம். கிளம்பினோம். அலுவலகத்துக்குத் திரும்பினோம். உள்ளே நுழையுமுன், அங்கே இருந்த காவலாளியிடம் பிரியாணிப் பொட்டலத்தைக் கொடுத்தார் தலைவர். ‘சிக்கன் பிரியாணி’ என்றார் சுருக்கமாக.

’நன்றி சார்’ என்று அவர் வாயெல்லாம் பல்லாக வாங்கிவைத்துக்கொண்டார். விறைப்பாக ஒரு சல்யூட்டும் அடித்தார்.

’அடடே, அடிமட்ட ஊழியருக்குச் சிக்கன் பிரியாணி வாங்கித் தருவதற்கு மனம் இல்லாவிட்டாலும், மிஞ்சியதையாவது வீணடிக்காமல் ஞாபகமாக அவருக்குக் கொண்டுவந்து கொடுக்கத் தோன்றுகிறதே, நல்ல மனிதர்தான்’ என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து, வேறொரு வேலைக்காக அலுவலகத்துக்கு வெளியே வந்தேன். அதே செக்யூரிட்டி, அதே சல்யூட். பதிலுக்குப் புன்னகை செய்து, ‘என்னங்க, பிரியாணி சாப்டாச்சா?’ என்றேன்.

‘இல்லை சார், வீட்லேர்ந்து சாப்பாடு கொண்டாந்திருந்தேனே, அதைதான் சாப்பிட்டேன்’ என்றார் அவர்.

’ஏன்? என்னாச்சு? பிரியாணி நல்லால்லயா?’

‘வீட்ல பிள்ளைங்களுக்காக எடுத்துவெச்சிருக்கேன் சார்’ என்றார் அவர்.

***

என். சொக்கன் …

22 08 2012

சில மாதங்களுக்கு முன்னால் ஒருநாள், சோம்பலானதொரு ஞாயிற்றுக்கிழமைப் பிற்பகல். எங்கள் வீட்டுக் கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு மினி ஹார்மோனியப் பெட்டி சைஸுக்கு வீடியோ கேமெராவுடன் காலிங் பெல் பொருத்தியிருக்கிற வீட்டின் கதவுகள் தட்டப்படுவதே ஒரு பெரிய அதிசயம்தான். யாராக இருக்கும் என்கிற சந்தேகத்துடன் திறந்தோம். மூன்று நடுத்தர வயதினர் கையில் ஒரு கசங்கிய ஆல்பத்துடன் நின்றிருந்தனர். எங்களைப் பார்த்தவுடன் பெரிதாகப் புன்னகைத்து ஒரு வண்ணமயமான விசிட்டிங் கார்டை நீட்டினார்கள்.

‘என்ன விஷயம்?’

‘நாங்க ஆத்ரேயா ஹோம்லேர்ந்து வர்றோம்’ என்றார் முதல் நபர். ‘இங்கே ஆதரவில்லாத குழந்தைங்க, வயசானவங்களுக்கெல்லாம் சாப்பாடு, துணிமணி கொடுத்து மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செஞ்சு அக்கறையாக் கவனிச்சுக்கறோம், இப்போ எங்க ஹோம்ல சுமார் 400 பேர் இருக்காங்க. அவங்களோட ஆல்பம் இது!’ என்று நீட்டினார்.

‘பரவாயில்லை, உள்ளே வாங்க’ என்றோம், அவர் நீட்டிய புகைப்படங்களைப் பார்க்காமலே.

‘இருக்கட்டும் சார்’ என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். முதல் நபர் மீண்டும் பேசினார், ‘எங்க ஹோமுக்கு உங்களால முடிஞ்ச உதவியைச் செஞ்சா நல்லாயிருக்கும்’ என்றவர் சட்டென, ‘காசாக் கொடுக்கமுடியலைன்னாலும் பரவாயில்லை, நீங்க பயன்படுத்தின பழைய துணிமணி, பாத்திரங்கள், மளிகை சாமான்கள்ன்னு நீங்க எதைக் கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிப்போம்!’

சாதாரணமாக இதுபோல் வீடு தேடி வந்து உதவி கேட்கிறவர்களைக் கையாள்வது கொஞ்சம் தர்மசங்கடமான விஷயம். முதலில் அவர்கள் நிஜமாகவே ஒரு சமூக சேவை நிறுவனத்திலிருந்து வருகிறார்களா, அல்லது டுபாக்கூர் ஏமாற்றா என்கிற சந்தேகம். நம்பிக் காசு கொடுத்தால் ஏமாந்துவிடுவோமோ என்கிற தயக்கம், அதற்காக எதுவும் தராமல் வெளியேற்றிவிட்டால் பாவக் கணக்கில் ஒன்று கூடிவிடுமோ என்கிற பயம்.

அந்தவிதத்தில் ‘காசு வேண்டாம், பயன்படுத்திய பொருள்களைக் கொடுங்கள்’ என்கிற இந்த டீலிங் எங்களுக்குப் பிடித்திருந்தது. ஒருவேளை இவர்கள் நிஜமான சேவை நிறுவனமாக இருந்தால், அந்தப் பொருள்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள், ஏமாற்றுக்காரர்களாக இருந்தால், நாம் பழைய பொருள்களைதானே தந்தோம், பெரிதாக ஒன்றும் இழப்பு இல்லை.

சில விநாடிகள் யோசனைக்குப்பிறகு என் மனைவி பேசினார். ‘நாங்க கொஞ்சம் திங்க்ஸ் தேடி எடுத்துவைக்கறோம், ஈவினிங் வந்து எடுத்துகிட்டுப் போகமுடியுமா?’

‘ஷ்யூர் மேடம்’ என்று உடனடி பதில் வந்தது. ‘நாங்க மத்த வீடுகளைப் பார்த்துப் பேசிகிட்டிருப்போம், எங்க வேன் கீழேதான் நிக்குது, நீங்க எப்ப வேணும்ன்னாலும் கூப்பிடலாம், வந்து எடுத்துக்கறோம்’ என்றார் ஒருவர். ‘பை த வே, உங்களுக்கு நேரம் இருக்கும்போது எங்க ஹோமுக்கு நீங்க நேர்ல வரலாம், சொல்லிட்டு வரணும்ன்னுகூட அவசியம் இல்லை, எப்ப வேணும்ன்னாலும் வாங்க, அங்கே இருக்கறவங்ககிட்ட நாலு வார்த்தை இதமாப் பேசதான் ஆள் இல்லை இப்போ!’

அவர்களைக் கை கூப்பி வழியனுப்பி வைத்தோம். மதியத் தூக்கத்தைத் தியாகம் செய்துவிட்டுப் பழைய துணிகள், பாத்திரங்கள், விளையாட்டுப் பொம்மைகள், மற்ற பொருள்களைத் தனித்தனியே பிரித்து மூட்டை கட்ட ஆரம்பித்தோம்.

அரை மணி நேரத்தில், வீடு சுத்தமானது. பழைய, பயன்படாத பொருள்களைமட்டுமே தருகிறோமே என்கிற குற்றவுணர்ச்சியில் கொஞ்சம் மளிகை சாமான்களையும் அதில் சேர்த்தோம். எல்லாவற்றையும் கீழே கொண்டுபோனோம்.

அங்கே ஒரு பெரிய வேன் நின்றிருந்தது. இருபுறமும் ‘ஆத்ரேயா ட்ரஸ்ட்’ என்று பெரிதாக எழுதிச் சில வறிய குழந்தைகளின் புகைப்படங்கள் கொலாஜ் செய்யப்பட்டிருந்தன. கீழே கொட்டை எழுத்தில் செல்ஃபோன் நம்பர், ‘24 மணி நேரமும் அழைக்கலாம்’ என்கிற வாசகம்.

வேனுக்குள் எட்டிப்பார்த்தோம், எங்கள் வீட்டுக்கு வந்த மூன்று நபர்களில் ஒருவர் களைத்துப் படுத்திருந்தார். சத்தம் கேட்டு எழுந்து ‘வாங்க சார், வாங்க மேடம்’ என்றார். நாங்கள் தந்த பொருள்களை வாங்கி வைத்துக்கொண்டு மனதார நன்றி சொன்னார். ‘நேரம் இருக்கும்போது கண்டிப்பா ஹோம்க்கு வாங்க சார்’ என்றார். ‘உங்களுக்குத் தெரிஞ்ச மத்தவங்களுக்கும் எங்க ஹோமைப் பத்திச் சொல்லுங்க.’

அதோடு அந்த அத்தியாயம் முடிந்தது. அரை மணி நேர திடீர் சமூக சேவை(?)யில் திருப்தியாகி எங்களது சுயநல வாழ்வுகளுக்குத் திரும்பினோம். அதோடு அந்த ‘ஆத்ரேயா ஹோம்’ பற்றி மறந்தே போனோம்.

சில வாரங்கள் கழித்து, அலுவலகத்தில் சற்றும் எதிர்பாராத ஒரு போனஸ் வந்தது. அதற்கு ஒரு நல்ல சோஃபா வாங்குவதாக முடிவெடுத்தோம்.

’பழைய சோஃபாவை என்ன செய்யறது?’

‘எக்சேஞ்ச்ல அவனே எடுத்துப்பான், விசாரிப்போம்!’

விசாரித்தோம். பழைய சோஃபாவுக்கு 800 ரூபாய் தருவதாகச் சொன்னார்கள். கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் கொடுத்து வாங்கிய சோஃபா, அதுவும் இன்னும் நன்றாகவே இருக்கிற ஒன்றை இப்படி அடிமாட்டு விலைக்குத் தள்ளிவிட மனம் இல்லை.

தவிர, அந்த 800 ரூபாயை வைத்து நாங்கள் கோட்டை எதுவும் கட்டிவிடப்போவதில்லை, அதற்குப் பதிலாக, இந்தப் பழைய சோஃபாவைத் தேவை உள்ள யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட்டால் என்ன? அவர்களுக்கும் சந்தோஷம், எங்களுக்கும் சந்தோஷம்.

முதலில் எங்கள் அபார்ட்மென்டில் தூய்மைப் பணி செய்கிற பெண்ணை விசாரித்தோம், பின்னர் செக்யூரிட்டி தாத்தா, பக்கத்து ஃபேக்டரியின் காவல்காரர்… இவர்கள் யாருக்கும் சோஃபா தேவைப்படவில்லை என்று புரிந்தது.

அடுத்து, எங்கள் அலுவலகம் மூலமாகவும் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்னபிற சோஷியல் நெட்வொர்க் நண்பர்கள் வாயிலாகவும் சில சமூக சேவை நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள், முதியோர் இல்லங்களைத் தொடர்பு கொண்டோம். ‘உங்களுக்கு சோஃபா தேவைப்பட்டா வந்து எடுத்துக்கோங்க’ என்றோம்.

இவர்களில் சிலர், ‘உடனே வண்டி அனுப்பறோம் சார்’ என்றார்கள். வேறு சிலர் ‘யோசிச்சுச் சொல்றோம்’ என்றார்கள். யாரும் மறுபடி அழைக்கவில்லை. ஆடம்பரப் பொருள்களை இலவசமாகக் கொடுப்பதுகூடச் சிரமம்தான் என்று புரிந்தது.

அப்போதுதான் எனக்கு அந்த ‘ஆத்ரேயா ஹோம்’ ஞாபகம் வந்தது. ‘பேசாம அவங்களைக் கூப்பிட்டா என்ன? கண்டேன் கண்டேன்னு ஓடி வந்து எடுத்துகிட்டுப்போவாங்க!’

இதைச் சொன்னதும் என் மனைவியின் முகம் மாறியது. ‘அந்தத் திருட்டுப் பசங்களைப் பத்திப் பேசாதீங்க’ என்றார் சட்டென்று.

‘ஏன்? என்னாச்சு?’

‘அன்னிக்கு நம்ம தெருவில இருக்கற எல்லா வீட்டுலயும் கெஞ்சிக் கூத்தாடி ஏதேதோ பொருள்களை அள்ளிகிட்டுப் போனாங்கதானே?’

‘ஆமா, அதுக்கென்ன?’

’அதுல பெரியவங்களுக்கான ட்ரெஸ், நல்லா இருக்கற பாத்திரம், மளிகை சாமான், இப்படிச் சில விஷயங்களைமட்டும் வெச்சுகிட்டு பாக்கி எல்லாத்தையும் தெரு முனைக் குப்பைத்தொட்டியில வீசிட்டுப் போயிருக்காங்க.’

ஏனோ, இதைக் கேட்டதும் எனக்கு அவர்கள்மேல் கோபம் வரவில்லை. பெருநகரச் சூழலில் இதுபோல் ஒருவர் ‘ஏதாவது கொடுங்க’ என்று கேட்கும்போது, மக்கள் மத்தியில் சேவை மனப்பான்மையைவிட, கொஞ்சம் பொருள்களைக் கழித்துக்கட்டி இடம் சேமிக்கும் எண்ணம்தான் அதிகமாக இருக்கும். அதன்படி நாங்கள் எங்களுக்குத் தேவையில்லாத எல்லாவற்றையும் மூட்டை கட்டி அவர்களிடம் தள்ளிவிட்டிருப்போம். அவர்களும் முகத்துக்கு எதிராக எதையும் சொல்ல விரும்பாமல் (இலவச மாட்டுக்குப் பல்லைப் பிடித்தல் எட்ஸட்ரா பழமொழிகள் கன்னடத்திலும் இருக்குமல்லவா?) வாங்கிக்கொண்டிருப்பார்கள், அதில் எத்தனை விஷயங்கள் ஒருவருக்கும் பயன்படாத குப்பையோ, யாருக்குத் தெரியும்?

ஆக, நாங்கள் தள்ளிவிட்ட பொருள்களில் அவர்கள் தங்களுக்கு எது பயன்படுமோ அதைமட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை வீசி எறிந்தது பெரிய தவறாக எனக்குப் படவில்லை. என்ன, அதை எங்கள் கண்ணில் படாத இன்னோர் இடத்தில் வீசியிருக்கலாம், அவ்வளவுதான்.

ஆனால் ஏனோ, என் மனைவி இந்த விஷயத்தில் அவர்கள்மீது துளி இரக்கம் காட்டவோ, Benefit of doubtஐ வழங்கவோ தயாராக இல்லை. ’நாங்கள் தந்ததில் அவர்கள் பிரித்து எடுத்துச் சென்ற பொருள்களையெல்லாம் புதுப்பித்து விற்பனை செய்து காசு பண்ணியிருப்பார்கள், அப்படி விற்கமுடியாத விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்’ என்று உறுதியாக அடித்துச்சொன்னார்.

‘உனக்கு அவ்ளோ சந்தேகம்ன்னா அந்த ஹோமுக்கு ஒருவாட்டி நேர்ல போய்ப் பார்த்துட்டு வருவோம்!’

‘எதுக்கு? நமக்கு வேற பொழப்பில்லையா?’

‘இப்ப இந்த சோஃபாவை என்ன செய்ய?’

‘எண்ணூறு ரூபா காசு சும்மா வருதா? எக்சேஞ்ச்லயே கொடுத்துடலாம், இல்லாட்டி நாமே அதை ஒரு குப்பைத்தொட்டியில வீசிடலாம், அந்தத் திருடனுக்கு நான் தரமாட்டேன்!’

உண்மையான சேவை மனப்பான்மை இல்லாமல் நம்மிடம் மிஞ்சியதைத் தரும்போதுகூட, நம் கை உயர்ந்திருக்கவேண்டும், அடுத்த கை தாழ்ந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய நியாயங்களைக் கருத மறுக்கிறோம். வேறென்ன சொல்ல?

மீண்டும் சோஃபாக் கடைக்காரரை அணுகினோம். ‘புது சோஃபா டெலிவரி தரும்போது பழைய சோஃபாவை நீங்களே எடுத்துக்குவீங்களா?’ என்றோம்.

‘அது முடியாது சார்’ என்றார் அவர், ‘நீங்க சோஃபாவை இங்கே கொண்டுவரணும், அதைப் பார்த்துட்டுதான் எக்சேஞ்ச் பில் போடமுடியும்.’

போச்சுடா. இந்த சோஃபாவை இங்கிருந்து அவ்வளவு தூரம் எடுத்துச் செல்லக் குறைந்தது ஐநூறு ரூபாயாவது செலவாகும். தேவையா?

மறுபடி மனைவியாரிடம் விண்ணப்பம் போட்டேன். ‘நமக்கு வேற வழியில்லை, பேசாம அந்த ஆத்ரேயா ஹோமுக்கே சோஃபாவைக் கொடுத்துடுவோம், நமக்கு இதை நன்கொடையாக் கொடுத்த திருப்தி, அப்புறம் அவன் அதை என்னவோ செஞ்சுட்டுப் போறான். என்ன சொல்றே?’

அவருக்கும் ஐநூறு ரூபாய் வெட்டியாகச் செலவழிக்க மனம் இல்லை. ‘உன் இஷ்டம்’ என்று ஒப்புக்கொண்டார்.

எங்கோ ஒளிந்திருந்த ஆத்ரேயா ஹோம் விசிட்டிங் கார்டைத் தேடிப் பிடித்தேன். அழைத்தேன். ஒரு மணி நேரத்துக்குள் நேரில் வந்து சோஃபாவை எடுத்துக்கொண்டு போனார்கள். அந்த இடத்தில் புது சோஃபா வந்து சேர்ந்தது.

அடுத்தமுறை அந்தத் தெரு முனைக் குப்பைத்தொட்டியைக் கடக்கும்போதுதான் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று கண்ணை இறுக மூடிக்கொண்டு நடையைக் கட்டினேன்.

***

என். சொக்கன் …
14 04 2012

(’வடக்கு வாசல்’ மே 2012 இதழில் வெளியானது)

’வாடகை சைக்கிள்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை தமிழகத்தின் எல்லாக் கிராமங்கள், நகரங்களிலும் தெருவுக்கு ஒரு வாடகை சைக்கிள் நிலையமாவது இருக்கும். கீற்றுக் கொட்டகை அல்லது சிமென்ட் கூரையின் கீழ் ஏழெட்டுப் புராதன சைக்கிள்களை வரிசையாகப் பூட்டுப் போட்டு நிறுத்தியிருப்பார்கள். பெயின்ட் உதிரும் அவற்றின் முதுகுப் புறங்களில் 1, 2, 3 என்று நம்பர் அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருப்பதே பெரிய ஆடம்பர வசதியாக அறியப்பட்ட காலம் அது. நடுத்தரக் குடும்பங்களில் மோட்டார் பைக்கைப் பார்ப்பதே அபூர்வம். காரெல்லாம் பெரும் பணக்காரர்களுக்குமட்டுமே சாத்தியம்.

சைக்கிள் இருக்கிற வீடுகளில் அது எந்நேரமும் பிஸியாகவே காணப்படும். தினசரி வேலைக்குப் போவது, பொருள்களை வாங்கிவருவதற்காகக் கடைத்தெருவுக்குச் செல்வது, கோயில், சினிமா, இன்னபிற பொழுதுபோக்குத் தேவைகள் என எல்லாப் போக்குவரத்துகளுக்கும் சைக்கிள்தான் சிக்கனம்.

இதனால், அந்த வீடுகளில் உள்ள சின்னப் பையன்களுக்குதான் பெரிய பிரச்னை. அவர்களுக்குச் சைக்கிள் ஓட்டவேண்டும் என்று ஆசை இருக்கும். குரங்குப் பெடல் அடிக்கக் கற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் சைக்கிளைத் தொடமுடியாது. சனி, ஞாயிறுவரை காத்திருந்து, தந்தையிடமோ அண்ணனிடமோ கெஞ்சிக் கூத்தாடி சைக்கிளை வாங்கி ஓட்டினால்தான் உண்டு.

இப்படிப்பட்ட சிறுவர்களுக்குதான் வாடகை சைக்கிள் நிலையங்கள் பெரிய வரப்பிரசாதமாக இருந்தன. இவற்றில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு இத்தனை காசு என்கிற விகிதவீதத்தில் சைக்கிள்கள் வாடகைக்கு விடப்படும். எந்த நேரமும் காசைக் கொடுத்துவிட்டுச் சைக்கிளை உரிமையோடு ஓட்டிச் செல்லலாம். ஒரு பயல் கேள்வி கேட்கமுடியாது!

வாடகை சைக்கிள்களைப் பெரியவர்களும் அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது உண்டு. ஆனால் பெரும்பாலும் அங்கே சிறுவர்கள், இளைஞர்களின் ராஜ்ஜியம்தான்!

கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவின் மத்யமக் குடும்பங்களுடைய சம்பாத்தியம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. முன்பு சைக்கிள் இருந்த இடத்தில் இப்போது பைக் அவசியத் தேவை. ‘நானோ’ போன்ற கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்களால், கார்கூட எளிதில் கைக்கு எட்டிவிடுகிறது.

இதனால், சைக்கிள் என்பது யாராலும் சுலபமாக வாங்கமுடிகிற ஒரு பொருளாக மாறிவிட்டது. குழந்தைகளுக்கான பொம்மை சைக்கிள்களுக்குக்கூட ஆயிரக்கணக்கில் செலவிடத் தயாராக இருக்கிறார்கள் மக்கள். அரசாங்கமும் மற்ற பல தனியார் அமைப்புகளும் ஏழை மாணவ மாணவியருக்குச் சைக்கிள்களை இலவசமாகவே வழங்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஆகவே, இப்போது நம் ஊரில் (குறைந்தபட்சம் சிறிய, பெரிய நகரங்களில்மட்டுமேனும்) வாடகை சைக்கிள் நிலையங்களுக்கான தேவை குறைந்துவிட்டது. அந்த இடத்தை மொபைல் ஃபோன் ரீசார்ஜ் கடைகளும் இன்டர்நெட் மையங்களும் பிடித்துக்கொண்டுவிட்டன!

அதேநேரம், வாடகை சைக்கிள்கள் காணாமல் போய்விடவில்லை. காலத்துக்கு ஏற்ப ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கின்றன, சமீபத்தில் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் அதுமாதிரி ஒரு மாடர்ன் வாடகை சைக்கிள் கடையைப் பார்த்து அசந்துபோனேன்.

போன தலைமுறையில் நடுத்தரக் குடும்பங்களுடைய போக்குவரத்து சாதனமாக இருந்த சைக்கிள், இப்போது பெருநகரங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. பைக் அல்லது கார் ஓட்டுகிற நேரத்தில் சைக்கிள் ஓட்டினால் உடம்புக்கு நல்லது, புகை குறையும், செலவும் மிச்சம் என்று ’சிட்டி’ ஜனம் கணக்குப் போடுகிறது.

அதேசமயம் எல்லோரும் சைக்கிள் வாங்கத் தயாராக இல்லை. காரணம், அதை நிறுத்துவதற்கு இடம், பராமரிப்பு என்று ஏகப்பட்ட அவஸ்தைகள் உண்டு. அத்தனை சிரமப்படுவதற்குப் பதில் ஒரு டாக்ஸி அல்லது ஆட்டோவைப் பிடித்துப் போய்விடலாமே என்று யோசிக்கிறார்கள்.

இந்த விஷயத்தை மனத்தில் கொண்டு பெங்களூரு மாநகராட்சியும் கெர்பெரொன் என்ற பொறியியல் நிறுவனமும் சேர்ந்து ‘ATCAG’ என்ற புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. தற்போது சோதனை அடிப்படையில் ஜெயநகர் மற்றும் எம். ஜி. ரோட் என்ற இரண்டு முக்கியப் பகுதிகளில்மட்டும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இது பெங்களூரு நகரம் முழுவதும் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

01

‘ATCAG’ திட்டம் இதுதான்: நகரின் முக்கியமான இடங்களிலெல்லாம் தானியங்கி சைக்கிள் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட பேருந்து நிறுத்தத்தைப்போலவே தோற்றமளிக்கும் இந்த ‘சைக்கிள் ஸ்டாப்’களில் மூன்று முதல் பத்து சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் இந்த சைக்கிள்களைத் தேவையான நேரத்தில் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

முக்கியமான விஷயம், ஒரு மணி நேரத்துக்கு இத்தனை ரூபாய் என்று நாம் கணக்குப் போட்டுக் காசைத் தேடிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. மாதத்துக்கு இருநூறு ரூபாய் செலுத்திவிட்டால் உங்களுடைய விவரங்கள் அனைத்தையும் ஒரு ஸ்மார்ட் கார்டில் பதித்துக் கொடுத்துவிடுகிறார்கள். இந்த ATCAG நிலையங்களில் அந்த கார்டைத் தேய்த்தால் ஒரு சைக்கிள் தானாகத் திறந்துகொள்ளும், நீங்கள் அதை ஓட்டிச் செல்லலாம். பத்து நிமிடமோ, அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ சைக்கிளைப் பயன்படுத்தியபிறகு, வேறொரு ATCAG நிலையத்தில் அதை நிறுத்திப் பூட்டிவிட்டு நம் வேலையைப் பார்க்கப் போகலாம். எல்லாமே ஆட்டோமேடிக்!

02

சுருக்கமாகச் சொன்னால், ஊர்முழுக்க எங்கே வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொள்ளலாம், எங்கே வேண்டுமானாலும் கொண்டுபோய் விடலாம். ஷாப்பிங், சும்மா ஊர் சுற்றுவது, அலுவலகம் செல்வது என்று எதற்கு வேண்டுமானாலும் இந்த சைக்கிள்களைப் பயன்படுத்தலாம், மாதம் இருநூறு ரூபாய்தான் செலவு. பாக்கெட்டில் ஸ்மார்ட் கார்ட்மட்டும் இருந்தால் போதும். பஸ்ஸுக்குக் காத்திருக்கவேண்டாம், ஆட்டோவுக்குச் செலவழிக்க வேண்டாம், கார் அல்லது பைக்கை நிறுத்துவதற்கு இடம் தேடிச் சுற்றிச் சுற்றி வரவேண்டாம், பெட்ரோல், டீசல் செலவு குறையும், போக்குவரத்து நெரிசல் குறையும், காற்று மாசுபடுவது குறையும், எல்லாவற்றையும்விட முக்கியமாக, இது நமக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியும்கூட!

ஏற்கெனவே பெங்களூருவிலும் மற்ற பல இந்திய நகரங்களிலும் சைக்கிள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. பலர் அலுவலகத்துக்குத் தினமும் சைக்கிளில் சென்றுவரத் தொடங்கியிருக்கிறார்கள். அதை ஓர் அவமானமாக நினைக்காமல், பெருமையாக எண்ணுகிற சூழலும் ஏற்பட்டிருக்கிறது. பல அலுவலகங்கள் சைக்கிளில் வரும் ஊழியர்களுக்கு ஊக்கப் பரிசுகள்கூடத் தருகின்றன!

ATCAGபோன்ற ’மாடர்ன் வாடகை சைக்கிள் நிலைய’ங்கள் இதனை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும். எங்கு வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் திருப்பித் தரலாம் என்கிற சவுகர்யத்தால் பலரும் புதிதாகச் சைக்கிள் ஓட்டத் தொடங்குவார்கள் என்று பெங்களூரு மாநகராட்சி எதிர்பார்க்கிறது. அதன்மூலம் பெட்ரோல், டீசல் போன்ற மாசு ஏற்படுத்துகிற, அளவில் குறைந்துவருகிற எரிபொருள்களுக்கு ஒரு நல்ல மாற்றும் கிடைக்கும்.

03

காலத்தின் வேக ஓட்டத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்று பலரும் நினைத்த சைக்கிள்கள், இப்போது இன்னொரு ரவுண்ட் வரும்போல!

***

என். சொக்கன் …

31 10 2011

(பின்குறிப்பு : இந்த வாரப் ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியான என்னுடைய கட்டுரை இது. பதிவுக்காகச் சற்றே மாற்றியுள்ளேன்.)

முன்குறிப்பு:

இது கட்டுரை அல்ல. கற்பனைக் கதையும் அல்ல. ஆங்காங்கே கவனித்த உண்மைகள் கொஞ்சம், மிகைப்படுத்தல் கொஞ்சம், Rational Thinking கொஞ்சம், கெக்கேபிக்கே சிந்தனை கொஞ்சம், பொதுபுத்தி கொஞ்சம், உணர்ச்சிவயப்’படுத்தல்’ மிச்சம் என எல்லாம் கலந்த ஏதோ ஒன்று. ‘மல்லிகை மகள்’ இதழின் தீபாவளி மலரில் வெளிவந்தது

1

சில வருடங்களுக்கு முன்னால், பெங்களூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழா. அதற்குத் தலைமை தாங்கியவர் கணிதமேதை சகுந்தலா தேவி. ’குழந்தைகளுக்குக் கணக்கில் ஆர்வம் ஊட்டுவது எப்படி?’ என்கிற தலைப்பில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் சொன்ன ஒரு சம்பவம் இது:

எங்கள் வீட்டில் பழைய பேப்பர் நிறையச் சேர்ந்துவிட்டது. அவற்றை எடை போடுவதற்காக எடுத்துச் சென்றேன்.

பழைய பேப்பர் கடையில் ஒரு சிறுவன்தான் இருந்தான். பள்ளிச் சீருடைகூட அணிந்திருந்தான். அப்பாவுக்கு உதவியாக வேலை பார்க்கிறேன் என்றான். அவனுடைய பொறுப்புணர்ச்சியைப் பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

நான் கொண்டுசென்ற காகிதங்களை அவன் இரண்டாகப் பிரித்தான். செய்தித் தாள்களைத் தனியே எடை போட்டான், ‘நாற்பது ரூபாய்’ என்றான், மற்ற பத்திரிகைகளைத் தனியே எடை போட்டான், ‘முப்பது ரூபாய்’ என்றான்.

அடுத்து, அவன் ஒரு கால்குலேட்டரை எடுத்தான். 40 + 30 என்று கணக்குப் போட்டு ‘எழுபது ரூபாய்’ என்றான். எனக்கு அதிர்ச்சி!

’ஏன்ப்பா, உன்னைப் பார்த்தால் ஹைஸ்கூல் படிக்கிறவனைப்போல் இருக்கிறாய், நாப்பதும் முப்பதும் எழுபது என்று மனக்கணக்குப் போடமாட்டாயா? அதற்குக்கூடக் கால்குலேட்டர் தேவையா?’ என்று வருத்தத்துடன் கேட்டேன்.

அவன் சிரித்தான். ‘மேடம், கைக்கு எட்டற தூரத்துல கால்குலேட்டர்தான் இருக்கே, அப்புறம் எதுக்கு அநாவசியமா மூளையைக் கசக்கிக்கணும்? கால்குலேட்டரால சுலபமாச் செய்யமுடியற வேலைகளை நாம ஏன் சிரமப்பட்டுச் செய்யணும்? வேஸ்ட்தானே?’

2

கடந்த மாதம், என்னுடைய மகளின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு தினம். அப்போது அங்கே ஒரு தாய் வீராவேசமாகப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. ‘என் பையனுக்கு நீங்க ரொம்ப ஹோம்வொர்க் தர்றீங்க மேடம், அவன் பாவம், கையெல்லாம் வலிக்குதுன்னு அழறான்!’

‘ஸாரிங்க. மத்த பாடத்திலெல்லாம் அவனுக்கு ஹோம்வொர்க் அதிகம் தர்றதில்லை’ என்றார் ஆசிரியை. ‘இங்க்லீஷ்லமட்டும்தான். அதுவும் குறிப்பா ஹேண்ட்ரைட்டிங்க்குமட்டும்தான் நிறைய வீட்டுப்பாடம் தர்றோம்.’

‘அதான் ஏன்?’

‘இதென்ன கேள்வி?’ என்பதுபோல் ஆசிரியை அந்தத் தாயை விநோதமாகப் பார்த்தார். ‘உங்க பையன் ரெண்டாங்கிளாஸ் படிக்கறான். ஆனா அவனுக்குக் கையெழுத்து இன்னும் சரியா வரலைங்க. முதல் வரியில எழுத ஆரம்பிச்சா மூணாவது வரியில போய் நிக்கறான். எழுத்து எதுவும் நாலு வரியில நிக்காம ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சைஸ்ல ஏத்தியும் தாழ்த்தியும் இருக்கு. இதையெல்லாம் சரி செஞ்சாதானே நாளைக்கு அவன் சரியா எழுதமுடியும்? அதுக்காகதான் எக்ஸ்ட்ரா ஹோம்வொர்க் தர்றோம். தப்புகளைத் திருத்தறோம். எல்லாம் அவனோட நல்லதுக்குதானே?’

‘நான்சென்ஸ்’ என்றார் அந்தத் தாய். ‘இந்தக் காலத்துல யார் பேனா பிடிச்சு எழுதறாங்க மேடம்? முந்தின தலைமுறையில எல்லோரும் ஏ, பி, சி, டி எழுதினாங்கங்கறதுக்காக இவங்களுக்கும் சொல்லித்தர்றீங்க, அவ்ளோதான். மத்தபடி படிப்பை முடிச்சு வெளியே வந்தப்புறம் அவன் பேனாவையே தொடப்போறதில்லை, ஒரு வார்த்தைகூடப் பேப்பர்ல எழுதப்போறதில்லை. எல்லாம் கம்ப்யூட்டர்தான். இந்தக் காலத்துலபோல் ஹேண்ட்ரைட்டிங்கை அழகுபடுத்தறேன்னு நேரத்தை வீணடிக்கறீங்களே, சுத்தப் பைத்தியக்காரத்தனம். அதையெல்லாம் நிறுத்திட்டு ஒழுங்காப் பாடத்தைமட்டும் சொல்லிக்கொடுங்க. புரியுதா?’

3

பாட்டுப்போட்டி ஒன்று. எட்டு வயதுப் பையன் ராகங்களைப் போட்டுப் புரட்டிக்கொண்டிருந்தான். அட்டகாசமான குரல். பிசிறில்லாத உச்சரிப்பு. கச்சிதமான உணர்ச்சிகள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, சிரித்த முகம்.

ஆச்சர்யமான விஷயம், அவனை அடுத்துப் பாடவந்த எல்லோருமே இப்படிதான் தூள் கிளப்பினார்கள். மூன்று வயது மழலை ஒன்றுகூட மேடையேறி அசத்தியது. திகட்டத் திகட்ட இன்னிசை மழை!

ஒரே பிரச்னை, பாடியவர்கள் யாரும் ‘மூன்று நிமிட’ இலக்கை மதிக்கவில்லை. மணி ஒலித்தபின்னும் தொடந்து பாடிக்கொண்டே இருந்தார்கள். பாட்டை முடிக்காமல் யாரும் கீழே இறங்கவில்லை.

இதனால் ஒருகட்டத்தில் விழா அமைப்பாளர்கள் சலித்துப்போய்விட்டார்கள். ‘இப்படியே போய்க்கொண்டிருந்தால் ரெண்டு மணி நேர நிகழ்ச்சி எட்டு மணி நேரத்துக்கு நீண்டுவிடும்’ என்று மேடையிலேயே அறிவித்தார்கள். ‘இனிமேல் மூன்று நிமிடம் தாண்டியதும் மைக்கை அணைத்துவிடுவோம். நீங்கள் பாட்டை நிறுத்தியே தீரவேண்டும்.’

இப்போது ஒரு பெண் மேடையேறினாள். பன்னிரண்டு வயது மதிக்கலாம். நல்ல கம்பீரமான குரல். மேடை பயமெல்லாம் இல்லாமல் நன்றாகப் பாடினாள்.

மூன்று நிமிடம் முடிந்தது. மணி ஒலித்தது. ஆனால், பாடல் முடியவில்லை. இன்னொரு கால் நிமிடம் பொறுத்துப் பார்த்த விழா அமைப்பாளர்கள் மைக்கை அணைத்துவிட்டார்கள்.

அவ்வளவுதான். அதுவரை சிரித்தபடி பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் முகம் சட்டென்று மாறியது. கோபத்தில் மைக்கைப் பிடுங்கிக் கீழே அடித்து உடைத்துவிட்டாள். அதோடு நிறுத்தாமல், மைக்கே தேவைப்படாத சுருதியில் பெரிதாக அழத் தொடங்கினாள். பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி.

இதைவிடக் கொடுமை, அந்தப் பெண்ணின் பெற்றோர் நடந்துகொண்ட விதம். மேடையில் தங்களுடைய மகள் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொள்ளக்கூட அவர்கள் தயாராக இல்லை. ‘மத்தவங்கல்லாம் தாராளமா அஞ்சு நிமிஷம், ஏழு நிமிஷம்கூடப் பாடினாங்க, இவளுக்குமட்டும் மூணு நிமிஷமா?’ என்று சண்டைக்குதான் போனார்கள்.

அன்றைக்கு அந்தப் பெண்ணுக்குப் பரிசு கிடைக்கவில்லை. காரணம், அவளது திறமைக்குறைவு அல்ல.

4

மாதாந்திர ஷாப்பிங். ஆட்டோவில் சில கிலோமீட்டர்கள் பயணம்.

வழியில் ஒரு டிராஃபிக் சிக்னல் வந்தது. சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஆட்டோவை நிறுத்திய ஓட்டுனர் முன்னும் பின்னும் பார்த்தார். இறங்கி அந்தப் பக்கமாக எட்டிப்பார்த்தார். திருப்தியுடன் தலையாட்டிவிட்டு ஆட்டோவைக் கிளப்பி ஓட்ட ஆரம்பித்தார்.

என் மகளுக்கு அதிர்ச்சி. ‘அப்பா, Red Means Stopன்னு படிச்சோமே. இந்த டிரைவர் அங்கிள் ரெட் லைட் எரியும்போது வண்டியை ஓட்டறாரே!’

இதைக் கேட்ட ஆட்டோ டிரைவர் சிரித்தார். ‘பாப்பா, அதையெல்லாம் பார்த்துகிட்டிருந்தா பொழைக்கமுடியாது, டிராஃபிக் கான்ஸ்டபிள் இருக்காரா-ன்னு ஒரு லுக் விட்டுட்டு, அவர் இல்லாட்டி வண்டியை ஓட்டிகிட்டுப் போகவேண்டியதுதான், ரெட் லைட்டாவது இன்னொண்ணாவது!’

சிறிது நேரத்தில், சூப்பர் மார்க்கெட் வந்துவிட்டது. ஆட்டோவுக்குப் பணம் கொடுத்துவிட்டு உள்ளே சென்று எங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கினோம். பில் போடும் இடத்துக்கு வந்தோம்.

அங்கே ஏழெட்டு வரிசைகள். அநேகமாக ஒவ்வொன்றிலும் பத்துப் பேருக்குமேல் நின்றுகொண்டிருந்தார்கள். ஆளுக்கு மூன்று நிமிடம் என்று வைத்துக்கொண்டால்கூட, அரை மணி நேரத்துக்கு மேலாகிவிடும். பெருமூச்சுடன் ஏதோ ஒரு க்யூவில் நின்றோம்.

எங்களுக்குப் பக்கத்துக் க்யூவில் ஒரு குடும்பம். அப்பா, அம்மா, இரண்டு குழந்தைகள். அவர்கள் கையில் இருந்த கூடையில் நான்கைந்து பொருள்கள்தான் இருந்தன. அவற்றை பில் போடுவதற்காகச் சுமார் 15 நிமிடங்கள் காத்திருக்க அவர்கள் விரும்பவில்லை.

ஆகவே, அந்தக் குடும்பத் தலைவர் தன்னுடைய மனைவி, மகன், மகளை அழைத்தார். அவர்கள் கையில் ஆளுக்கு ஒரு பொருளைக் கொடுத்தார். ‘நீங்கல்லாம் வெவ்வேற க்யூவில போய் நில்லுங்க, ஒரே ஒரு ஐட்டம்தான், நான் முன்னாடி பில் போட்டுக்கறேன்னு சொல்லுங்க, நாம சட்டுன்னு வெளியே போயிடலாம்.’

அவர் சொன்னபடியே நடந்தது. நாங்களெல்லாம் மாக்கான்களைப்போல் ஒழுங்குமுறைப்படி வரிசையில் நின்றிருக்க, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக பில் போட்டுவிட்டு வெளியேறினார்கள். அந்தக் குழந்தைகள் முகத்தில் தங்களுடைய ’பிழைக்கத் தெரிந்த’ தந்தையின் ‘புத்திசாலித்தன’த்தைப்பற்றிய பெருமிதம்.

5

நண்பர் மகனுக்குப் பிறந்த நாள். அவர் வீட்டிலேயே ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

வழக்கமாக இதுபோன்ற பார்ட்டிகளின்போது குழந்தைகள் பாட்டுப் பாடும், ஆட்டம் போடும், கேக் வெட்டும், பலூன்களைத் தூக்கிப் போட்டுத் துரத்தும், கையில் முகத்தில் ’டாட்டூ’ படங்களை வரைந்துகொள்ளும், சின்னச் சின்ன விளையாட்டுகளெல்லாம் இருக்கும்.

ஆனால் இந்தப் பார்ட்டி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. குழந்தைகளுக்கென்று ஓர் அறை ஒதுக்கப்பட்டு அங்கே ஏழெட்டுக் கம்ப்யூட்டர்கள், லாப்டாப்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் வெவ்வேறு வீடியோ கேம்ஸ்.

போதாதா? பார்ட்டிக்கு வந்த குழந்தைகள் எல்லாம் அந்த அறைக்குள் புகுந்துகொண்டு வெளியே வரவே இல்லை. சிப்ஸ், மிக்ஸர், கேக், ஸ்வீட் என எல்லாம் அங்கேயே மேஜையில் பரிமாறப்பட்டது. குழந்தைகள் மாறி மாறி விளையாடியபடி வளையவந்தார்கள். பெரியவர்கள் வெளியே அரட்டையடித்துக்கொண்டிருந்தார்கள்.

நான் சும்மா அந்த அறைக்குள் எட்டிப்பார்த்தேன். இரண்டு பொடியன்கள் லாப்டாப்பில் கார் ரேஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். எதிர்ப்பட்டவர்களையெல்லாம் டமால் டமால் என்று அடித்து வீழ்த்தினார்கள். ‘எங்கப்பா காரை இவ்ளோ ஸ்பீடா ஓட்டமாட்டேங்கறார், வேஸ்ட்’ என்றான் ஒரு சிறுவன்.

அன்றைக்குப் பிறந்தநாள் கொண்டாடும் சிறுவனின் தந்தையிடம் சென்றேன். ‘பர்த்டே பார்ட்டியில வீடியோ கேம்ஸெல்லாம் எதுக்குங்க?’ என்றேன்.

‘இந்தக் காலப் பசங்க வேற எதை விளையாடறாங்க, சொல்லுங்க?’ என்றார் அவர். ‘என் பையனுக்கு லேட்டஸ்ட் வீடியோ கேம் கன்ஸோல் வாங்கிக் கொடுத்திருக்கேன், ஸ்கூல்லேர்ந்து வந்ததும் அதுமுன்னாடி உட்கார்ந்துடறான். ஒன் ஹவர் அந்த ரூம்லேர்ந்து வெளியே வரமாட்டான், கிரிக்கெட், டென்னிஸ், கபடி, கார் ரேஸ்ன்னு எல்லா கேம்ஸையும் விளையாடிச் சலிச்சப்புறம்தான் ஹோம் வொர்க்ல்லாம்.’

‘இதே கேம்ஸை அவன் வெளியே போய் நிஜமான ஃப்ரெண்ட்ஸோட விளையாடலாமே?’

’வாஸ்தவம்தான். ஆனா இந்தக் காலத்துல யாரை நம்பமுடியுது சொல்லுங்க? யாரோட பழகினாலும் ஏதாவது கெட்ட பழக்கங்களைக் கத்துகிட்டு வந்துடறான், இல்லாட்டி அடிதடி, சண்டை, காயம், கலாட்டா, அப்புறம் அவனைப் பிடிச்சு வீட்டுக்கு இழுத்துட்டு வர்றதுக்குள்ள நம்ம தாவு தீர்ந்துடுது. அதான், வீட்டுக்குள்ளயே விளையாடுடா-ன்னு விட்டுட்டேன், ஒன் ஹவர் முடிஞ்சதும் கரண்டைப் பிடுங்கிடுவேன்னு மிரட்டினா ஒழுங்கா கேம்ஸை அணைச்சுட்டு ஹோம்வொர்க் செய்ய உட்காருவான்.’

6

உறவினரின் மகள் சிநேகா. ப்ளஸ் டூ படிக்கிறாள். நல்ல படிப்பாளி. எப்போதும் முதல் ரேங்க். சராசரிக்குமேல் ஐ.க்யூ.

சிநேகா ஓர் இன்டர்நெட் பிரியை. எந்நேரமும் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று வளையவருகிறவள். அவள் எங்கே போகிறாள், என்ன செய்கிறாள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரிவதற்குமுன்னால் இணையத்திற்குத் தெரிந்துவிடும். ‘ஃபேஸ்புக்ல எனக்கு 1500 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க, தெரியுமா?’ என்று அடிக்கடி பெருமையாகச் சொல்லிக்கொள்வாள்.

சமீபத்தில் ஒரு பிரச்னை. ‘ஆன்லைன் சிநேகிதி’ ஒருத்தி சிநேகாவுடன் ‘காய்’ விட்டுவிட்டாள். ஃபேஸ்புக்கில் அவளைக் கண்டபடி திட்டி எழுதிவிட்டாள்.

அவ்வளவுதான். சிநேகாவின் உற்சாகமெல்லாம் எங்கேயோ பறந்துவிட்டது. எதையோ பறிகொடுத்தவளைப்போலவே வளையவந்துகொண்டிருந்தாள்.

சிநேகாவின் பெற்றோர் மகளுக்கு எதார்த்தத்தைப் புரியவைக்க முயன்றார்கள். ‘ஃப்ரெண்ட்ஸ் வர்றதும் போறதும் சகஜம், ஃப்ரெண்ட்ஸுக்குள்ள சண்டையும் சகஜம். ஒருவேளை நிஜமாவே அந்தப் பொண்ணு உன்னோட சண்டை போட்டாக்கூட, ஃபேஸ்புக்ல உனக்கு இன்னும் 1499 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே!’

இந்தச் சமாதானங்கள் சிநேகாவுக்குப் போதவில்லை. அவள் தொடர்ந்து புலம்பியபடிதான் இருந்தாள். ஆன்லைன் சிநேகிதங்களெல்லாம் வெறும் டிஜிட்டல் புள்ளிவிவரங்கள்தான் என்பதும் அவளுக்கு விளங்கவில்லை, இதை நிஜம் என்று நம்பத் தொடங்கும்போது உண்மையான நட்புகளைத் தொலைத்துவிடுகிறோம் என்பதும் புரியவில்லை.

ஒருவிதத்தில் சிநேகாகூடப் பரவாயில்லை. இந்தியாவின் மிகப் பெரிய தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றில் படிக்கிற மாணவி ஒருத்தி, ஃபேஸ்புக்கில் தன் காதலன் ஏதோ எழுதிவிட்டான் என்பதற்காக மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டுவிட்டாள்.

தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் உலகம் சுருங்கிக்கொண்டுவருகிறது என்கிறோம். அதோடு சேர்ந்து மனிதர்களும் சுருங்க ஆரம்பித்துவிட்டோமோ? இன்றைய உலகத்தில் பிழைப்பதற்கான வழிகள் இவை இவை என்கிற வரையறைகளை அமைத்துக்கொண்டு அவற்றில்மட்டும் கவனம் செலுத்துவதற்கான சேணங்களைக் கட்டிக்கொண்டுவிட்டோமோ? நம் குழந்தைகளுக்கும் அவற்றை வலுக்கட்டாயமாகக் கட்டிவிடுகிறோமோ?

படிப்பு, புத்திசாலித்தனம், ஐ.க்யூ. என்பவை ஒருபக்கம். அதனால் மார்க் வருகிறது, நல்ல காலேஜில் சீட் கிடைக்கிறது, பிரமாதமான வேலை வாய்க்கிறது, கை நிறையச் சம்பளம் குவிகிறது, வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளமுடிகிறது. இந்த விஷயத்தில் குறைபட்டவர்கள் வாழ்நாள்முழுக்கச் சிரமத்தை அனுபவிக்கவேண்டியதுதான். இதைத்தான் எல்லாத் தலைமுறைகளிலும் பெற்றோர் குழந்தைகளுக்குத் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். ‘படிக்காட்டிக் கழுதை மேய்க்கவேண்டியதுதான்!’

ஆனால் அதேசமயம் வெறுமனே படிப்பில்மட்டும் கவனம் செலுத்தினால் போதும், அதற்காக வேறெதையும் இழக்கலாம் என்கிற மனோநிலை மிகவும் ஆபத்தானது. இதனால் தனி மனிதர்களும் சரி, சமூகமும் சரி, வருங்காலத்தில் பல அதிர்ச்சிகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.

மனித வள நிபுணர்கள் ஒருவரை எடைபோடும்போது ‘முழுமையான வளர்ச்சி இருக்கிறதா’ என்று பார்க்கிறார்கள். ஒருவருக்குக் கை, கால்மட்டும் சரியாக வளர்ந்து தலையும் வயிறும் மிகப் பெரியதாக இருந்தால் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருக்குமல்லவா? அதுபோல புத்திசாலித்தனத்தை வளர்த்துக்கொள்வதோடு நிறுத்திவிடாமல் அடுத்தவர்களுடன் பழகுவது, குழுவாக இணைந்து வேலை பார்ப்பது, படைப்பூக்கத்துடன் புதிதாகச் சிந்திப்பது, அடுத்தவர்களது கோணத்திலிருந்து சிந்தித்து மனிதாபிமானத்துடன் செயல்படுவது, சூழ்நிலைக்கு ஏற்ப ‘அட்ஜஸ்ட்’ செய்துகொண்டு முன்னேறுவது, வேலையையும் வாழ்க்கையையும் சமமாக மதித்து ஒன்றுக்காக இன்னொன்றை இழந்துவிடாமல் இருப்பது, பரபரப்பு வாழ்க்கைக்கு நடுவே ரிலாக்ஸ் செய்துகொள்ளப் பழகுவது, இயற்கையை ரசிப்பது, நாம் முன்னேறுவதற்காக இன்னொருவரை மிதித்துச் செல்வது நியாயமில்லை என்பதை உணர்வது, நம்மைப்போலவே இந்த உலகம் மற்ற மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்கூடச் சொந்தமானது என்பதை உணர்வது, நேர்மை, காலம்தவறாமை, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல் உள்ளிட்ட பல மென்கலைகளும் இன்றைய உலகத்திற்குத் தேவைப்படுகின்றன. அவற்றைப் புறக்கணித்துவிட்டு வெறும் அறிவு வளர்ச்சியில்மட்டும் கவனம் செலுத்தினால், நாளைய உலகம் புத்திசாலித் தீவுகளின் தொகுப்பாகமட்டுமே இருக்கும்.

***

என். சொக்கன் …

02 10 2011

RTE எதிர்ப்புச் செய்தி பற்றி என்னுடைய நேரடி அனுபவம் ஒன்று.

சில தினங்களுக்கு முன் என் மகள் நங்கையின் 2ம் வகுப்புப் புத்தகங்கள் வாங்குவதற்காக அவளுடைய பள்ளிக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த அம்மையார் ‘RTE பற்றித் தெரியுமா?’ என்றார்.

‘தெரியாது, சொல்லுங்கள்’ என்றேன். படபடவென்று ஏதோ விளக்கினார்.

எனக்கு அவர் பேசியதில் பாதிக்குமேல் புரியவில்லை poor students, lack of confidence, quality of education என்று ஏதேதோ.

கடைசியாக ‘RTEக்கு எதிராக வாதாடுவதற்காக, இந்தியாவில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் சேர்ந்து டெல்லியில் ஒரு வழக்கறிஞரை நியமித்திருக்கிறோம்’ என்றார். ’இதற்காக நீங்கள் பைசா தரவேண்டாம். ஆனால் RTE வந்தால் எங்கள் குழந்தைகளுக்குக் கெடுதல் என்று அரசாங்கத்திடம் சொல்லவேண்டும்’ என்றார்.

அப்போதும் எனக்கு விளங்கவில்லை. ’ஏதாவது அச்சு வடிவில் இருந்தால் கொடுங்கள், படித்துப் புரிந்துகொள்கிறேன்’ என்றேன்.

அவர் கொஞ்சம் தயங்கிவிட்டு ஒரு சீட்டைக் கொடுத்தார். அது ஏதோ வக்கீல் நோட்டீஸ்மாதிரி இருந்தது. தலைகீழாக நின்று படித்தாலும் புரியப்போவதில்லை.

’மன்னிக்கவும். எனக்குச் சரிவரப் புரியாத விஷயத்துக்கு ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிப்பது நியாயமில்லை’ என்று கையெழுத்திட மறுத்துவிட்டேன்.

அவர் முகத்தில் லேசான கோபம். ‘உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தின்மீது உங்களுக்கு அக்கறை இல்லைபோல’ என்று நேரடியாகவே சொன்னார். நான் கடுப்பாகிக் கிளம்பிவிட்டேன்.

வாசலில் ஒரு parent அதே வக்கீல் நோட்டீஸை வைத்துக்கொண்டு நின்றிருந்தார். ‘இது என்ன?’ என்றார் என்னிடம்.

’எனக்குத் தெரியவில்லை’ என்றேன்.

‘சரி பரவாயில்லை, எங்கே கையெழுத்துப் போடணும்ன்னாவது சொல்லுங்க’ என்றார். பதில் சொல்லாமல் திரும்பினேன்.

அதன்பிறகு RTEபற்றி யோசிக்கவே இல்லை. பல நாள் கழித்து நேற்று இந்தச் செய்தி படித்தபின் விஷயம் புரிகிறது –> http://goo.gl/hGbO2

அன்று கையெழுத்துப் போடாததற்காகச் சந்தோஷப்படுகிறேன். நங்கை எல்லாவகை மாணவர்களுடனும் கலந்து பழகிப் படிப்பதையே விரும்புகிறேன்.

தனியார் பள்ளிகள் RTEக்கு எதிராகப் பேசுவது business sense. அதன்மூலம் அவர்களுடைய நிஜமுகம் வெளிப்படுவது சந்தோஷம்.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் RTEக்கு எதிராக விவரம் புரியாமல் கையெழுத்திட்டால், அதுபற்றிக் கொஞ்சம் படித்துவிட்டு முடிவுசெய்ய சொல்லுங்கள். அதன்பிறகு கையெழுத்திடுவது அவர்கள் விருப்பம் – ஆனால் பள்ளிகளின் மிரட்டலுக்குப் பயந்துவிடவேண்டாம், RTE நிஜமாகவே அவசியமா, இல்லையா என்று நாமே யோசித்துத் தீர்மானிக்காமல் கையெழுத்திடுவதும், வெற்றுப் பத்திரத்தில் கைநாட்டு வைப்பதும் ஒன்றுதான்.

***

என். சொக்கன் …

27 04 2011

’வாங்க சார். உட்காருங்க. சௌக்யமா?’

‘சௌக்யம்தான். ஆனா என்னை எதுக்காக இங்கே கூப்பிட்டிருக்கீங்கன்னு புரியலையே!’

‘கவலைப்படாதீங்க சார். ரிலாக்ஸ். உங்களை வெச்சு ஒரு சின்னப் பரிசோதனை செய்யப்போறோம்.’

’பரிசோதனையா?’

‘மறுபடி டென்ஷனாகறீங்களே. ஊசி போட்டு உங்களை டைனோசரா மாத்திடமாட்டோம் சார். இது ஒருவிதமான சோஷியல் டெஸ்ட்.’

‘ஃபேஷியல் தெரியும், அதென்ன சோஷியல்?’

‘அதாவது, ஒரு சமூக அமைப்புல இருக்கிற மக்கள் வெவ்வேற சூழ்நிலைகள்ல எப்படி நடந்துக்கறாங்க-ன்னு ஒரு சின்ன ஆராய்ச்சி செய்யறோம். அதுக்கு உங்க ஒத்துழைப்பு தேவை!’

’சொல்லுங்க. நான் என்ன செய்யணும்?’

’இப்ப அடுத்த ரூம்ல ஒருத்தர் உட்கார்ந்திருக்கார். அவர் உங்களோட பார்ட்னர்.’

‘அப்படியா? நான் அவரைப் பார்த்ததே கிடையாதே!’

’உண்மைதான். அவரும் உங்களைப்  பார்த்தது கிடையாது. ஆனா இந்த விளையாட்டுல நீங்க ரெண்டு பேரும் பார்ட்னர்ஸ். சரியா?’

’ஓகே.’

‘இப்ப நான் உங்களுக்கு 100 ரூபாய் தர்றேன். இந்தத் தொகையை நீங்களே வெச்சுக்கலாம். இல்லாட்டி அடுத்த ரூம்ல இருக்கிறவருக்கு அனுப்பலாம்.’

‘முகம் தெரியாத ஒருத்தருக்கு நான் ஏன் பணம் அனுப்பணும்? இதை நானே வெச்சுக்கறேன்!’

‘கொஞ்சம் பொறுங்க சார். இந்தப் பணத்தை நீங்க அவருக்கு அனுப்பினா, நாங்க அவருக்கு எக்ஸ்ட்ராவா 4 மடங்கு காசு தருவோம், அதாவது 100 + 400 = 500 ரூபாய். இப்போ அவர் இந்தப் பணத்தைத் தானே வெச்சுக்கலாம், அல்லது உங்களுக்குப் பாதி, அவருக்குப் பாதின்னு பிரிச்சுக்கலாம்.’

‘அதாவது, நான் அவருக்கு 100 ரூபாய் கொடுத்தா, அவர் எனக்கு 250 ரூபாய் தர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இல்லையா?’

‘ஆமா. அதேசமயம், அவர் 500 ரூபாயையும் அவரே எடுத்துகிட்டு ஓடிப்போயிடவும் வாய்ப்பு இருக்கு.’

’உண்மைதான். நான் இப்ப என்ன செய்யறது?’

‘நீங்களே யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க சார். 100 ரூபாயை நீங்களே வெச்சுக்கறது பெட்டரா, அல்லது உங்க பார்ட்னரை நம்பி அதை விட்டுக்கொடுக்கறது பெட்டரா?’

சுவாரஸ்யமான விளையாட்டு. வந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த இன்னொரு ‘பார்ட்ன’ரை நம்புவதா வேண்டாமா என்று குழம்பிப் போனார்கள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஒருவேளை கிடைக்கலாம் என்கிற ரூ 250/-ஐ நம்பி, இப்போது கையில் இருக்கும் ரூ 100/-ஐ இழக்கலாமா? அது சரியான முடிவுதானா?

ரொம்ப யோசித்தபிறகு, சிலர் நூறு ரூபாயைத் தாங்களே வைத்துக்கொண்டார்கள். பெரும்பாலானோர் அந்த இன்னொரு மனிதர் நியாயமாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் அதை அவருக்கு அனுப்பிவைத்தார்கள்.

இப்போது, அந்த இன்னொரு மனிதரின் நிலையில் இருந்து யோசியுங்கள். திடீரென்று உங்களுக்கு ரூ 500/- (100 + 400) கிடைக்கிறது. அதை உங்களுக்கு அனுப்பிவைத்தவர் பக்கத்து அறையில் இருக்கிறார். நீங்கள் அந்தப் பணத்தில் பாதியை அவரோடு பகிர்ந்துகொள்வீர்களா? அல்லது ‘அடிச்சதுடா லக்கி ப்ரைஸ்’ என்று பீட்ஸா பார்ட்டிக்குக் கிளம்பிவிடுவீர்களா?

மறுபடியும், பலர் நியாயமாக நடந்துகொண்டார்கள். ரூ 250/-ஐப் பக்கத்து அறைக்கு அனுப்பினார்கள். மிகச் சிலர் ஐநூறையும் தாங்களே அமுக்கிக்கொண்டார்கள்.

இதனால், பக்கத்து அறையில் இருந்தவர்களுக்குக் கடுப்பு. ‘நான் இந்தாளை நம்பினேன். இவன் என்னை ஏமாற்றிவிட்டானே’ என்று கொதித்தார்கள். ‘ச்சே, அந்த நூறு ரூபாயை நானே வெச்சுகிட்டிருக்கணும்’ என்று பொறுமினார்கள்.

இப்போது, இந்த விளையாட்டை நடத்திக்கொண்டிருந்தவர்கள் பக்கத்தில் வந்தார்கள் ‘என்ன சார்? ரொம்பக் கோவமா இருக்கீங்கபோல!’

‘ஆமா சார், அந்தாள் செஞ்சது அநியாயமில்லையா?’

‘உண்மைதான். வேணும்ன்னா, நீங்க அவரைப் பழிவாங்கலாம்!’

‘பழிவாங்கறதா? அது எப்படி?’

‘அவர் உங்ககிட்டேயிருந்து அநியாயமா காசைப் பிடுங்கிட்டார். இல்லையா? அதுக்குப் பதிலா, நீங்க எங்களுக்கு 1 ரூபா கொடுத்தீங்கன்னா நாங்க அவர்கிட்டேயிருந்து 2 ரூபாயைப் பிடுங்கிடுவோம். நீங்க 10 ரூபா கொடுத்தா அவர்ட்ட 20 ரூபாயைப் பிடுங்குவோம். 250 ரூபா கொடுத்தா, அவர் உங்களை ஏமாத்திச் சம்பாதிச்ச மொத்தக் காசையும் பிடுங்கிடுவோம். பழிக்குப் பழி! என்ன சொல்றீங்க?’

பாதிக்கப்பட்டவர்கள் யோசித்தார்கள், ’இந்த ஆளைப் பழிவாங்க நான் என்னுடைய பாக்கெட்டில் இருந்து பணம் செலவழிக்கவேண்டுமா? இதனால் எனக்கு என்ன லாபம்?’

இப்போது உங்களை அந்த இடத்தில் வைத்து பதில் சொல்லுங்கள். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் உங்களுடைய சொந்தக் காசைச் செலவழித்து அந்த இன்னொரு மனிதருக்குத் தண்டனை(?) கொடுப்பீர்களா?

மாட்டீர்கள். இல்லையா? இந்த விளையாட்டு மொத்தமும் சுத்த முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. இல்லையா? இந்த அறைக்குள் வந்தபோது உங்கள் பாக்கெட்டில் எவ்வளவு காசு இருந்ததோ, அதே அளவு காசு இப்போதும் இருக்கிறது. யாரும் உங்களிடமிருந்து காசைப் பிடுங்கவில்லை. சரிதானே? டெக்னிகலாக எந்தத் தப்பும் செய்யாத அந்த அடுத்த அறை மனிதரைத் தண்டிப்பதற்காக நீங்கள் உங்களுடைய சொந்தக் காசைச் செலவழித்தால் யார் முட்டாள்?

ஆனால், இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள், பக்கத்து அறைக்காரரைத் தண்டிக்கவேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார்கள். தங்களுடைய கைக்காசு 250 ரூபாய்வரை செலவழித்து, அவரிடம் இருக்கும் 500 ரூபாயைப் பிடுங்கினால்தான் அவர்களுக்கு நிம்மதி வந்தது.

இப்படிச் செய்ததால் அவர்களுக்கு என்ன லாபம்? ஒன்றுமில்லை. 250 ரூபாய் நஷ்டம்தான்.

அதனால் என்ன? நம்பிக்கை மோசடி செய்தவன் முறைப்படி தண்டிக்கப்பட்டுவிட்டான். அந்தத் திருப்தி போதுமே!

ஸ்விட்ஸர்லாந்தில் நடைபெற்ற இந்தப் பரிசோதனையின்போது, ’பழி வாங்கிய’ மனிதர்களுடைய மூளைக்குள் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். ’என் காசு 250 ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. தப்புச் செஞ்சவன் தண்டிக்கப்படணும்’ என்று யோசித்தபோது அவர்களுடைய மூளையில் சந்தோஷ உணர்வுகள் (feelings of pleasure) தூண்டப்பட்டதாம்!

இதை வாசித்தபோது எனக்குப் பகீரென்றது. இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களெல்லாம் நன்றாகப் படித்தவர்கள். சமூகத்தின் நடுத்தர அல்லது உயர்மட்டங்களில் இருக்கிறவர்கள். ஆனால் அவர்களுக்கும்கூட தங்களுடைய சொந்தக் காசை / நேரத்தை / உழைப்பைச் செலவழித்து தப்புச் செய்த ஒருவரைப் பழிவாங்குவதில் குரூர சந்தோஷம் இருக்கிறது. பஸ்ஸில் பிக்பாக்கெட் அடிக்கிறவனுக்கு நாலு தர்ம அடி போடுகிற மனோநிலைதான் ’தப்புச் செஞ்சவங்களை விசாரணையெல்லாம் இல்லாம நிக்கவெச்சுச் சுடணும்’ என்பதில் வந்து நிற்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டுகிறவர்களெல்லாம் வழக்கொழிந்துவிட்டார்களோ?

(Image Courtesy: http://www.danariely.com/about-dan/)

நான் இந்த ஆராய்ச்சியைப்பற்றிப் படித்தது Dan Ariely எழுதிய ‘The Upside Of Irrationality’ என்ற அற்புதமான புத்தகத்தில். சுமார் 300 பக்க அளவு கொண்ட இந்தப் புத்தகத்தை என்னால் தொடர்ச்சியாகப் படிக்கவே முடியவில்லை. அவ்வளவு விஷயங்கள், ஒவ்வொன்றின் பின்னணி, தாக்கம், சாத்தியங்களையெல்லாம் யோசிக்க யோசிக்க மலைப்பாக இருந்தது. மனித மனம் எப்படியெல்லாம் விநோதமாக, Irrational-ஆக இயங்குகிறது என்று வெவ்வேறு ஆராய்ச்சிகளுடைய துணையோடு மிக அழகாக, எளிமையாக விவரித்திருக்கிறார்.

Buy The Upside Of Irrationality: The Unexpected Benefits Of Defying Logic At Work And At Home Buy Predictably Irrational

இந்தப் புத்தகம், இதே ஆசிரியருடைய முந்தைய புத்தகமாகிய ‘Predictably Irrational’ இரண்டுமே நிஜமான முத்துகள். எல்லோரும் அவசியம் வாசிக்கவேண்டியவை.

இதுமாதிரி புத்தகங்கள் தமிழில் எப்போது வரும்? (மொழிபெயர்ப்பாகவேனும்!)

***

என். சொக்கன் …

21 12 2010

சிவப்பு விளக்கு அணைந்து பச்சை ஒளிர்ந்தது. எங்கள் பஸ் வலதுபக்கம் திரும்பி வேகம் பிடிக்கத் தொடங்கிய மறுவிநாடி அந்தச் சத்தம் கேட்டது.

முதலில் நான் முன்டயர் வெடித்துவிட்டதாகதான் நினைத்தேன். கவலையோடு ஜன்னலுக்கு வெளியே தலையை நுழைத்தபோது சரேலென்று படுக்கைவசத்தில் தரையோடு உராய்ந்துகொண்டு வழுக்குகிற பைக்கைப் பார்த்தேன்.

சென்ற விநாடிவரை அதை ஓட்டிக்கொண்டிருந்தவர் இப்போது நான்கடி தள்ளிக் கிடந்தார். அவர் தலையிலிருந்த ஹெல்மெட் கழன்று எகிறி வேறு எங்கோ விழுந்திருந்தது.

நான் அவசரமாகத் தலையை உள்ளே இழுத்துக்கொண்டேன். பஸ்ஸிலிருந்த எல்லோருமே வாசல் கதவை நோக்கி ஓடினோம்.

நாங்கள் கீழே இறங்குவதற்குள் அக்கம்பக்கத்தில் இருந்த வாகன ஓட்டுனர்கள் அடிபட்டவரை நெருங்கியிருந்தார்கள். இரண்டு பேர் அவரைக் கைத்தாங்கலாகத் தூக்கிக்கொண்டு சாலை ஓரத்துக்கு ஓடினார்கள். ஒல்லிப்பிச்சிப் பையன் ஒருவன் வண்டியைத் தூக்கி நிறுத்தி எஞ்சினை அணைத்தான்.

அடிபட்டவர் தான் உயிர் பிழைத்துவிட்டோமா என்பதை நம்பமுடியாதவர்போல் திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்தார். மற்றவர்கள் அவரைப் பதற்றமாக விசாரிக்க ‘ஐ யாம் ஆல்ரைட்’ என்று எழுந்து நிற்க முயன்றார். முடியவில்லை.

கூட்டம் ஆவேசமாக எங்கள் பேருந்தின் ஓட்டுனர்மீது திரும்பியது. ‘ஏன்ய்யா, கவர்ன்மென்ட் வண்டியில ஏறிட்டா நீ பெரிய மஹாராஜாவா? பார்த்து வர்றதில்ல?’

இவரும் விடாமல் திருப்பி முறைத்தார். ‘நான் சரியாதான் வந்தேன். அந்தாள்தான் ரெட் சிக்னலைப் பார்க்காம குறுக்கே வந்து அடி வாங்கினான்.’

பஸ் டிரைவர் சொல்வது உண்மைதான் என்பது எல்லோருக்கும் புரிந்தது. ஆனாலும் இரண்டு வண்டிகள் மோதிக்கொள்ளும்போது பெரிய வண்டியின் ஓட்டுனர்தானே தப்புச் செய்தவராக இருக்கமுடியும்?

‘இப்ப என்ன பண்றது?’ யாரோ கேட்டார்கள். ‘பக்கத்திலதான் போலிஸ் ஸ்டேஷன்!’

‘போலிஸ் இருக்கட்டும். இப்படி நடு சிக்னல்ல பஸ்ஸை நிறுத்திவெச்சா எப்படி? முதல்ல அதை ஓரங்கட்டி நிறுத்துங்க.’

எங்கள் ஓட்டுனர் பஸ்ஸில் ஏறிக்கொண்டார். நாங்களும். வலதுபக்கம் திரும்பி ஓர் ஓரமாக அவர் வண்டியை நிறுத்தியவுடன் சினிமாவில் வருவதுபோல் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.

இதற்குள் அடிபட்டவர் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றிருந்தார். அவருக்கு உதவி செய்தவர்கள் யாரிடமும் குடை இல்லை. மழை மிக விரைவில் நன்கு வலுத்துவிட்டதால் சில நிமிடங்கள் கழித்து வண்டிக்குள் இருந்த எங்களால் அவர்களைச் சரியாகப் பார்க்கக்கூட முடியவில்லை.

‘சரி. வண்டியை எடுங்க!’ யாரோ தீர்ப்புச் சொன்னார்கள்.

‘அதெப்படி? நாளைக்கு ஏதாவது பிரச்னை வந்தா எங்க வேலைதானே போகும்?’ என்றார் கண்டக்டர். ‘டிப்போவுக்கு ஃபோன் பண்றேன். இதுபத்தி அவங்கதான் முடிவெடுக்கணும்.’

எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவருக்கு எரிச்சல். ‘யோவ், பசி நேரத்தில ஏன்ய்யா கடுப்பேத்தறீங்க? அதான் ரத்த காயம் இல்லைன்னு தெரியுதுல்ல? ஒண்ணும் பிரச்னை வராது. வண்டியை எடு!’

கண்டக்டர் அவரைக் கண்டுகொள்ளாமல் தன்னுடைய செல்பேசியில் ஓர் எண்ணை ஒற்றிப் பேச ஆரம்பித்திருந்தார். ’சார், இங்கே மடிவாலா மார்க்கெட் பக்கத்தில ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்!’ … ‘இல்லை சார். பெரிசா ஒண்ணும் காயம் இல்லை’ … ‘வண்டிக்குக்கூட பெரிய டேமேஜ்லாம் இல்லை சார்’ … ‘இங்கே நல்லா மழை பெய்யுது சார். ஜன்னல் வழியா ஒண்ணும் தெரியலை!’ … ‘அப்படியா? சரி சார், நாங்க வெய்ட் பண்றோம்.’

பயணிகள் பெரிதாக உச்சுக்கொட்டினார்கள். ‘அவனவனுக்கு ஆயிரம் வேலை இருக்கு. ஒண்ணுமில்லாத விஷயத்தை இப்படிப் பெரிசு பண்றீங்களே!’

டிரைவரும் கண்டக்டரும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள். சில நிமிடங்களில் மழை லேசாகக் குறைந்து தூறல்மட்டும் மிச்சமிருந்தது.

இப்போது நாங்கள் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கினோம். டிரைவர், கண்டக்டரோடு நானும் இன்னொருவரும் அடிபட்டவரைப் பார்ப்பதற்காகச் சாலையைக் கடக்க முயன்றோம். ‘பார்த்து கவனமாப் போங்க’ என்றார் ஒருவர். இன்னும் அரை மணி நேரத்துக்காவது எங்கள் எல்லோருக்கும் சாலைப் பாதுகாப்புகுறித்த ஒழுக்க விதிமுறைகள் மறக்காமல் நினைவிருக்கும்.

சாலையின் மறுபக்கம் அடிபட்டவரைக் காணவில்லை. அவருடைய பைக்கும் இல்லை. மழையிலேயே ஓட்டிக்கொண்டு கிளம்பிச் சென்றுவிட்டாரோ என்னவோ!

’ஆக்ஸிடென்ட் ஆன ஆளும் இல்லை. வண்டியும் இல்லை. இன்னும் எதுக்குய்யா காத்திருக்கணும்?’ என்றார் என்னோடு நின்றவர். ‘இப்ப வண்டியை எடுக்கலாம்ல?’

‘இல்லைங்க. ஆஃபீஸ்ல விஷயத்தைச் சொல்லிட்டோம். அவங்க வர்றவரைக்கும் வண்டியை எடுக்கமுடியாது!’

’அப்ப எங்களையெல்லாம் வேற பஸ்ல மாத்திவிடுங்க.’

‘ஓகே!’

நாங்கள் மீண்டும் சாலையைக் கடந்தோம். அந்த வழியாகச் சென்ற இன்னொரு பஸ்ஸைக் கை காட்டி நிறுத்தினார் எங்கள் டிரைவர். ஏறிக்கொண்டோம். எனக்குக் கடைசி இருக்கையில் இடம் கிடைத்தது.

பஸ் புறப்படும்போது அனிச்சையாகத் திரும்பிப் பார்த்தேன். அந்த இன்னொரு பஸ்ஸும் அதன் டிரைவர், கண்டக்டரும் சாலையோரத்தில் பொறுமையாகக் காத்திருந்தார்கள்.

அவர்களுக்கும் பசி நேரம்தான் என்று எங்களில் யாருக்கும் தோன்றவில்லை. தலைமை அலுவலகத்தில் இருந்தவர்களுக்கும்கூடத் தோன்றியிருக்காது.

***

என். சொக்கன் …

23 10 2010

எங்கள் வீட்டிலிருந்து சுமார் ஐந்து நிமிட நடை தூரத்தில் அந்தப் பூங்கா.

உண்மையில் அதைப் பூங்கா என்று சொல்வதுகூட உயர்வு நவிற்சிதான். வழுக்கைத்தலைமாதிரி வறண்ட காலி இடம். ஆங்காங்கே புல்வெளித் திட்டுகள். சுற்றிலும் கம்பிச் சுவர். மக்கள் உள்ளே வந்துபோக ஒரு சின்னக் கதவு. அவ்வளவுதான்.

உட்கார நாற்காலிகூட இல்லாத பூங்காவை யார் மதிப்பார்கள்? நாங்கள் யாரும் பிடிவாதமாக அந்தப் பக்கமே போகாமல் புறக்கணிக்க, பூங்கா வருத்தப்பட்டுத் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டது. கொஞ்ச நாளில் அந்த முக்கோண வடிவ நிலம்முழுவதும் புதர்ச்செடிகள். அவற்றின் இண்டு இடுக்குகளில் பாம்பு, பூரான், தேள், டிராகன், டைனோசரெல்லாம்கூட இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

பயன்படாத பூங்கா. இருந்தால் என்ன, போனால் என்ன? நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆறு மாதத்துக்குமுன்னால் அந்தப் பூங்காவுக்குப் புனர்ஜென்மம். ஒரு பெரிய வண்டியில் பெங்களூர் மாநகராட்சி ஊழியர்கள் வந்து இறங்கி அந்த முக்கோண வடிவ நிலத்தை அறுவடை செய்தார்கள். வண்டிமுழுக்கப் புதர்ச்செடிகளோடு திரும்பிப் போனார்கள்.

இரண்டு நாள் கழித்து இன்னொரு கோஷ்டி வந்தது. மண்ணைத் தட்டிச் சமன்படுத்திவிட்டுப் போனது.

அப்புறம் சில வாரங்கள் நான் அந்தப் பக்கம் போகவில்லை. திடீரென்று ஒருநாள் போய்ப் பார்த்தால் கடற்கரைமாதிரி பால் வெள்ளை மணலைக் கொட்டி நிரப்பியிருந்தார்கள். ‘அட’ என்று கதவைத் திறக்கப் போனால் பூட்டிக் கிடந்தது.

அந்தப் பார்க் அதுவரை பூட்டிப் பார்த்ததே இல்லை. ஒருவேளை மணல் கொடௌனாக மாற்றிவிட்டார்களோ? குழப்பத்தோடு வீடு திரும்பினேன்.

மறுநாள், எங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனிடம் பேச்சுவாக்கில் அதுபற்றி விசாரித்தபோது புதிர் அவிழ்ந்தது, ‘அந்தப் பார்க்கைக் கொழந்தைங்க வெளையாடறமாதிரி மாத்தறாங்க சார், ஊஞ்சல், சீஸா, சறுக்குமரமெல்லாம் வரப்போகுது!’

நல்ல விஷயம்தான். பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளைப்போலவே எங்கள் ஏரியாவிலும் ஆங்காங்கே பூங்காக்கள் சிதறிக் கிடந்தாலும் குழந்தைகள் விளையாடும்படி எதுவும் இல்லை. ரோட்டைக் கடந்து ஒன்றரைக் கிலோமீட்டர் நடந்தால்தான் உண்டு. அந்தக் குறை இனிமேல் தீர்ந்தது.

அதுவும் அத்தனை சுலபத்தில் தீர்ந்துவிடவில்லை. கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் வேலைக்குப்பிறகு பிளாஸ்டிக்கா இரும்பா என்று தெரியாதபடி பளபளவென்று ஏகப்பட்ட விளையாட்டு சாதனங்கள் அங்கே பொருத்தப்பட்டன. வெளியிலிருந்து பார்ப்பதற்கு படுஜோராக இருந்தது.

ஒரே பிரச்னை, பூட்டிக்கிடந்த அந்தக் கதவுகள் திறக்கப்படவே இல்லை. அவ்வப்போது ஏதாவது சிறிய மராமத்து வேலை செய்வதற்காகத் திறப்பார்கள், மறுபடியும் பூட்டிவிட்டுப் போய்விடுவார்கள்.

மறுபடியும் எங்கள் வாட்ச்மேனையே விசாரித்தேன், ‘திறப்புவிழா நடக்கப்போவுது சார்’ என்றார், ‘எம்.எல்.ஏ. வர்றார், தெரியுமா?’

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை திறப்புவிழா. என் மனைவியும் மகள்களும் போய் வந்தார்கள். மாண்புமிகு எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டிப் பூங்காவைத் திறந்துவைத்துவிட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து போஸ் கொடுத்தாராம். மைசூர்பாகு, லட்டு, பூந்தி விநியோகமாம். இனிமேல் பார்க் தினமும் காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் திறக்கப்படுமாம்.

அதன்பிறகு குழந்தைகளை விளையாட அழைத்துச் செல்கிற சாக்கில் அடிக்கடி அந்தப் பூங்காவுக்குச் சென்றுவந்தேன். உள்ளேயே வெள்ளை மணலுக்கு ஓரமாக மூன்று பெஞ்ச்களைப் பொதித்துவைத்திருந்தார்கள். குழந்தைகள் பாதுகாப்பாக(?) விளையாடுகிறார்களா என்று ஓரக்கண்ணால் கவனித்தபடி புத்தகம் படிக்க வசதியாக இருந்தது.

ஆனால், பூங்கா திறந்த ஒரே வாரத்துக்குள் அங்கே கூட்ட நெரிசல் தாங்கவில்லை. ஊஞ்சலில், சறுக்குமரத்தில் ஏறுவதற்குப் பிள்ளைகள் க்யூவில் நிற்கவேண்டிய நிலைமை. ’நீ முதல்ல’, ’நான் முதல்ல’ என்று அடிதடிகள், இழுபறிகள் ‘எவ்ளோ நேரம்டீ ஆடுவே? கீழ எறங்கு’ என்று ஏகப்பட்ட தள்ளுமுள்ளுகள்.

நான் இதையெல்லாம் குழப்பத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, என்னருகே உட்கார்ந்திருந்தவர் பரிதாபமாக உச்சுக்கொட்டினார், ‘too bad’ என்றார், ‘இவ்ளோ பிரச்னையும் எதனால தெரியுமா?’

‘தெரியலையே!’

அவர் தூரத்திலிருந்த கொத்து வீடுகளைக் காட்டினார், ‘இந்தப் பிள்ளைங்கல்லாம் அங்கேருந்து வந்தவங்க, நோ டிஸிப்ளின்!’

‘அங்கேருந்துன்னா?’

அவர் என்னைப் புழுமாதிரிப் பார்த்தார் ‘எல்லாம் குடிசைவாசிங்க. What else you expect?’

என்னால் அவருடைய அருவருப்பைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. சின்ன வயதில் நானும் குடிசைப் பையன்களோடு விளையாடியவன்தான். அவர்களும் இங்கே வாழ்கிறவர்கள்தானே? அந்த வீட்டுப் பையன்கள், பெண்கள் இங்கே வந்து விளையாடினால் என்ன தப்பு?

என் வாதத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை, ‘They lack discipline’ என்றார் பிடிவாதமாக, ‘பாருங்க, ஒழுங்கா க்யூவிலகூட நிக்காம எப்படி ஓடறாங்க, தள்ளறாங்க, பிடிச்சு இழுக்கறாங்க, அடிச்சுக்கறாங்க, இவங்களோட சேர்ந்தா நம்ம பிள்ளைங்கதான் கெட்டுப்போகும்.’

எனக்குச் சிரிப்புதான் வந்தது. க்யூவில் நிற்காமல் அடுத்தவர்களை முந்திப்போக நினைப்பது இந்தியாவின் தேசிய குணம். அந்தக் கெட்ட பழக்கத்தைக் குடிசைவாசிகள்மீதுமட்டும் சுமத்துவது என்ன நியாயம்?

இதெல்லாம் நான் எனக்குள் நினைத்துக்கொண்டவை. எதையும் அவரிடம் சொல்லவில்லை. (எனக்குப் பொதுவாக விவாதம் செய்வது பிடிக்காது. நேர விரயம். நான் ஒன்றும் பெரிய சிந்தனையாளர் இல்லை. பெரும்பாலான விஷயங்களில் என் புரிதல் அரைகுறையானது. குழந்தைத்தனமானது. இத்தனைக் குறைகளை வைத்துக்கொண்டு அநாவசியமாக என்ன பெரிய ஈகோ? ‘நீங்க சொல்றதுதான் சரி’ என்று உடனே ஒப்புக்கொண்டு தலையாட்டிவிடுவேன்.)

கதை அதோடு முடியவில்லை. அடுத்தடுத்த நாள்களில் குழந்தைகளோடு பூங்காவுக்குச் சென்றபோதெல்லாம் இதுபோன்ற அடிதடி, சண்டைகளைப் பார்த்தேன். மாடி வீடு, கூரை வீடு, குடிசை வீடு என்று வித்தியாசமில்லாமல் எல்லாக் குழந்தைகளுமே தாங்கள்தான் அதிக நேரம் விளையாடவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதாக எனக்குத் தோன்றியது. அது இயல்புதான் என்பதும் புரிந்தது.

ஆனால், இதுமாதிரி பிரச்னைகள் முளைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கான காரணம் ஓர் ஏழைக் குழந்தையின்மீதுதான் சுமத்தப்பட்டது. சொன்னால் நம்பமாட்டீர்கள், ஐந்தாறு வயதுச் சின்னப் பையன் ஒருவனைப்பார்த்து (ஆங்கிலக்) கெட்டவார்த்தையில் திட்டி, ‘இனிமே இதுமாதிரி ரௌடி(?)ங்க இருக்கிற இடத்துக்கு என் பிள்ளைங்களை அழைச்சுகிட்டு வரமாட்டேன்’ என்று முழங்கினார் ஒரு தாய்.

இந்தப் பிரச்னைக்கு நீண்ட காலத் தீர்வு என்ன என்று பலவிதமாக யோசித்துப்பார்த்தேன். பூங்காவைப் பெரிதாக்குவதுதவிர வேறு எந்த யோசனையும் தோன்றவில்லை.

போன வாரத்தில் ஒருநாள் அபூர்வமாக அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீடு திரும்பிவிட்டேன். குழந்தைகளை அழைத்துக்கொண்டு பூங்காவுக்குப் போகலாம் என்று முடிவானது.

பூங்கா வாசலில் ஒரு காக்கிச் சட்டைக்காரர். கதவைத் திறந்து குழந்தைகளைமட்டும் உள்ளே அனுமதித்தார், ‘நீங்க வெளியதான் சார் இருக்கணும்’ என்றார்.

’ஏன்?’

‘செகரெட்டரி அப்படிதான் சார் சொல்லியிருக்கார், பெரியவங்க யாரையும் உள்ளே விடறதில்லை.’

எனக்குக் குழப்பம், ‘செகரெட்டரியா? அது யாரு?’

என் மனைவி விளக்கிச் சொன்னார், ‘இந்தப் பார்க் பராமரிப்புக்காக ஒரு சங்கம் அமைச்சிருக்காங்க, இந்த ஏரியாவில ஏழெட்டுப் பேர் அதில மெம்பர்ஸ், அவங்களுக்கு ஒர் தலைவர், செகரெட்டரில்லாம் இருக்காங்க.’

‘அட, இந்த வாட்ச்மேன்லாம் அவங்க ஏற்பாடுதானா?’

‘ஆமா.’

‘இதுக்கெல்லாம் பணம்?’

’எல்லாம் நம்ம காசுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் மாசம் இருநூறு ரூபா தரணும்ன்னு ஏற்பாடு.’

நான் அதிர்ச்சியோடு பூங்காவுக்குள் பார்த்தேன். எல்லாமே பூசி மெழுகிய மேல்தட்டு வாரிசுகள். குடிசைக் குழந்தைகள் ஒன்றுகூட இல்லை.

***

என். சொக்கன் …

27 07 2010

நேற்றைக்குத் தயிர் பாக்கெட் வாங்குவதற்காகத் தெரு முனை மளிகைக்கடைக்குச் சென்றிருந்தேன். கடைக்காரரின் நல விசாரிப்புக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போது, பின்னால் நச்சரிப்புச் சத்தம், ‘அப்பா, சாக்லெட் வாங்கிக் கொடுப்பா.’

நான் ஓரமாக ஒதுங்கிக்கொள்ள, அந்தப் பிள்ளையின் தந்தை முன்னே வந்தார், ‘ஒரு சாக்லெட் கொடுங்க.’

‘எது சார்?’

‘ஏதாச்சும் ஒண்ணு’ என்றார் அவர் எரிச்சலாக, ‘இப்போதைக்கு இவன் வாய் அடங்கினாப் போதும்.’

கடைக்காரர் ஐந்து ரூபாய் விலையில் ஒரு பட்டை சாக்லெட்டை எடுத்து நீட்டினார். அதை லேசாகப் பிரித்து மகனிடம் கொடுத்துவிட்டு இவர் மளிகை லிஸ்டைக் கையில் எடுத்துக்கொண்டார்.

சாக்லெட்டை லேசாகக் கடித்த அந்தப் பையனுக்கு, அதைச் சுற்றியிருந்த உறை ரொம்ப இடைஞ்சலாக இருந்தது, அப்பாவின் சட்டை நுனியைப் பிடித்து இழுத்து ‘இதை எங்கப்பா போடறது?’ என்றான்.

‘எதை?’

‘சாக்லெட் ரேப்பரை.’

‘குப்பைதானே? அப்படியே ஓரமா வீசிப் போடு’ என்றார் அவர் அலட்சியமாக.

எனக்கு அப்படியே அந்த ஆளை இழுத்துவைத்து அறையலாமா என்று ஆத்திரம் வந்தது. சுயபுத்திதான் இல்லை, அடுத்த தலைமுறையையுமா இப்படிக் கெடுக்கவேண்டும்? குப்பையைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அப்புறமாகக் குப்பைத்தொட்டி எதிர்ப்படும்போது அதில் போடவேண்டும் என்று சொல்லித்தரமுடியாதா?

நான் பார்த்தவரை, இந்த விஷயத்தில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்கிற வித்தியாசமே இல்லை. எப்பேர்ப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவர்களும், தங்கள் பிள்ளைகளுக்குப் பல் முளைத்தவுடன் ஆங்கிலம், ஹிந்தி, குதிரையேற்றம், பரதநாட்டியம், கம்ப்யூட்டர், நானோ டெக்னாலஜியெல்லாம் வரிசைக்கிரமமாகச் சொல்லித்தரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள், அதற்காகக் காசைக் கொட்டத் தயாராக இருக்கிறார்களேதவிர, க்யூ வரிசையில் நின்று நம்முடைய முறைக்காகக் காத்திருப்பது, டிராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால் வண்டியை நிறுத்துவது, குப்பையை ஒழுங்காக அதற்குரிய இடத்தில் போடுவது என்பதுபோன்ற சின்னச் சின்னச் சமூகப் பொறுப்பு சமாசாரங்களைக் கற்றுத்தர நினைப்பதில்லை. இதெல்லாம் அவசியமில்லை என்று தீர்மானித்துவிடுகிறார்களோ என்னவோ.

போன வாரத்தில் ஒருநாள், மதியச் சாப்பாட்டு நேரம், எங்கள் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து நடைபாதையில் நடந்துகொண்டிருந்தேன். பின்னால் ஹாரன் ஒலி கேட்டது, திரும்பிப் பார்த்தால் சுமார் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பையன், பின்னால் அதே வயதில் ஒரு பெண், பிளாட்ஃபாரத்தில் நடப்பதற்கான பாதையில் பைக்கை ஓட்டிக்கொண்டு வந்திருந்தார்கள்.

வழக்கமாக இதுபோல் யாராவது ஹாரன் அடித்தால் ஒதுங்கி வழிவிடுவதுதான் என் வழக்கம். அன்றைக்குப் பசி காரணமோ என்னவோ, கொஞ்சம் கோபமாக, ‘Platform Footpath is meant for walking’ என்றேன்.

உடனே அந்தப் பையன் ‘போடா மயிரு’ என்றான் (தமிழில்), பின்னால் உட்கார்ந்திருந்த அவன் தோழி நடு விரலை உயர்த்தி அசிங்கச் சைகை காட்டினாள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

***

என். சொக்கன் …

29 12 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நேற்று நங்கையைக் கூட்டிக்கொண்டு ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். வழியில் தென்பட்ட எல்லாப் பொருள்களைப்பற்றியும் நிமிடத்துக்கு ஏழெட்டு கேள்விகள் என்கிற விகிதத்தில் கேட்டபடி நடந்துவந்தாள், பதில்களை எதிர்பார்க்கக்கூட இல்லை.

கடையில் நாங்கள் வாங்கிய பொருள்களின் மொத்த விலை 56 ரூபாய் ஆனது. நான் அறுபது ரூபாய் கொடுத்தேன்.

‘ஒர் ரூவா சில்லறை கொடுங்க சார்’

பர்ஸுக்குள் தேடினேன். ஒற்றை நாணயம் எதுவும் அகப்படவில்லை, ‘இல்லைங்களே’

‘சரி, அப்ப நாலு ரூபாய்க்கு ஏதாச்சும் வாங்கிக்கோங்க’

‘ஓகே, ஏதாவது சாக்லெட் கொடுங்களேன்’

‘ம்ஹூம்’ என்று மறுத்துவிட்டார் அவர், ‘எங்க கடையில சாக்லெட் விக்கறதில்லை’

எனக்கு ஆச்சர்யம். இந்தப் பாரதப் புனித பூமியில் சாக்லெட் விற்காத கடைகளும் உண்டா?

என்னுடைய குழப்பத்தைப் பார்த்த அவர் சிரித்தபடி சொன்னார், ‘உங்களைமாதிரிதான் சார், சில்லறை இல்லாத எல்லோரும் தேவையே இல்லாம சாக்லெட் வாங்கிட்டுப் போறாங்க, அவங்களா விரும்பி வாங்கினாக்கூடப் பரவாயில்லை, Impromptu buying, அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை, அதைத் தின்னு பல் கெடும், உடம்பு குண்டாகும், எதுக்கு? நம்ம கடைக்கு வர்றவங்க ஏதாச்சும் பயனுள்ள பொருள்களைதான் வாங்கணும்-ங்கறது என் பாலிஸி’, நங்கையின் கன்னத்தைத் தட்டினார், ‘என்னம்மா? பென்சில் வாங்கிக்கறியா? எரேஸர், ஷார்ப்னர் எதுனா தரட்டுமா?’

’மூணுமே கொடுங்க’

அவர் சிரித்தபடி இரண்டு கறுப்புப் பென்சில்களைமட்டும் எடுத்துக் கொடுத்தார், ‘நாலு ரூபாய் ஆச்சு சார், நன்றி!’

இப்போது நடந்ததை ப்ளாகில் எழுதினால் யாரும் நம்பமாட்டார்கள், நான் சும்மா ‘Feel Good’ கற்பனைக் கதை எழுதுகிறேன் என்றுதான் சொல்வார்கள் என நினைத்துக்கொண்டே படிகளில் இறங்கிவந்தேன். நங்கை பென்சிலை இறுகப் பற்றிக்கொண்டு புதிய கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள்.

அவளைக் கொஞ்சம் திசை மாற்றுவதற்காக, ’ஏதாவது விளையாடலாமா?’ என்றேன்.

‘ஓ, எங்க ஸ்கூல்ல இன்னிக்கு ஒரு சைன்ஸ் கேம் சொல்லிக்கொடுத்தாங்களே’

‘என்னது?’

‘Solid Vs Liquid’

‘அப்டீன்னா?’

‘நான் ஒரு பொருள் பேர் சொல்வேன், அது Solid-ஆ, அல்லது Liquid-ஆ-ன்னு நீ சொல்லணும்’

‘ஓகே’, வழியெல்லாம் பதில் தேவைப்படாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டு நடப்பதற்கு இந்த அற்ப விளையாட்டு எவ்வளவோ பரவாயில்லை.

நங்கை தன் கையில் இருந்த பழத்தைக் காண்பித்துத் தொடங்கினாள், ‘வாழைப்பழம்?’

‘Solid’

’ஜூஸ்?’

‘Liquid’

எங்களை ஒரு சைக்கிள் கடந்துபோனது, அதைச் சுட்டிக் காட்டி, ’சைக்கிள்?’

‘Solid’

கடைசியாக, சாலைப் பள்ளத்தைக் காண்பித்து, ‘Hole?’

இதற்கு என்ன பதில் சொல்வது? உள்ளே ஏதுமற்ற பள்ளம் Solid-ஆ, Liquid-ஆ? பேய் முழி முழித்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.

***

என். சொக்கன் …

29 09 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சென்ற சனிக்கிழமை ஒரு முக்கியமான வேலையாக எம். ஜி. ரோடு பழைய புத்தகக் கடைகளுக்கு திக்விஜயம். மூன்று பைகளில் புத்தகங்களை நிறைத்துக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினேன்.

வழக்கமாக நான் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தவுடன் ஏதாவது ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டுவிடுவேன். பெங்களூரில் சைக்கிள்முதல் லாரிவரை சகல வாகனங்களும் டிராஃபிக் நெரிசலில் நின்று நின்று ஊர்வதுதான் வழக்கம் என்பதால், ஒரு மணி நேரப் பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 20 முதல் 30 பக்கங்கள்வரை படித்து முடித்துவிடலாம்.

அன்றைக்கு, ஆட்டோ ஒரு சிக்னலில் நின்றிருந்தபோது எதேச்சையாக மீட்டரைப் பார்த்தேன், ‘38 ரூபாய்’ என்று காட்டியது.

சில விநாடிகள் கழித்து, பச்சை விளக்கு விழுந்தது, ஆட்டோ புறப்பட்டது, சட்டென்று மீட்டரில் இருந்த தொகை முப்பத்தெட்டிலிருந்து நாற்பத்தெட்டுக்குத் தாவியது.

நான் திகைத்துப்போனேன். ஆட்டோ மீட்டரில் சூடு வைப்பார்கள், தெரியும், ஆனால் அதுகூட ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று படிப்படியாகதானே ஏறும்? இப்படி திடுதிப்பென்று பத்து ரூபாய் எகிறுவதாகக் கேள்விப்பட்டதில்லையே!

அடுத்த குழப்பம், இப்போது நான் என்ன செய்யவேண்டும்? என்னை ஏமாற்றப்பார்க்கிற இந்த ஆட்டோ டிரைவருடைய சட்டையைப் பிடிக்கவேண்டுமா? ‘அன்னியன்’போல அவர்மீது பாய்ந்து பிராண்டவேண்டுமா?

என்னுடைய கன்னடம், மிக எளிய வார்த்தைகள், வாக்கியங்களால் ஆனது, அதில் இரண்டு வார்த்தைகளுக்கு மூன்று இலக்கணப் பிழைகளாவது இருக்கும், ஆங்காங்கே ஆங்கிலம், ஹிந்தி, சில சமயம் தெலுங்கு வார்த்தைகளைக்கூடச் சேர்த்துக் கலப்படம் செய்ய நான் வெட்கப்படுவதில்லை.

இந்த ஓட்டைக் கன்னடத்தை வைத்துக்கொண்டு, யாரிடமும் சுமுகமாகப் பேசலாம், ஆனால் சண்டை போடமுடியாது.

வேண்டுமானால், ஆட்டோ டிரைவரிடம் தமிழில் கண்டபடி கத்தலாம், கெட்ட வார்த்தையில் திட்டலாம், அதெல்லாம் அந்த டிரைவருக்குச் சுத்தமாகப் புரியப்போவதில்லை, ஒருவேளை புரிந்தாலும், நிச்சயமாக அதை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்.

தவிர, நிஜமாகவே அந்த மீட்டர் முப்பத்தெட்டிலிருந்து நாற்பத்தெட்டுக்குத் தாவியது என்பதை நான் எப்படி நிரூபிப்பேன்? இப்போது மீட்டர் சரியாகதானே ஓடிக்கொண்டிருக்கிறது? சில நிமிடங்களுக்குமுன்னால் அப்படி ஓர் ஊழல் நடந்தது என்பதற்கு என்ன சாட்சி? இந்த டிரைவரோ, போலீஸோ, நீதிமன்றமோ என்னை எப்படி நம்பும்? இதற்காக ஒவ்வொருமுறை ஆட்டோ ஏறும்போதும் அதன் மீட்டரை வீடியோ படம் எடுத்துவைக்கவா முடியும்?

இத்தனை அவஸ்தைகளோடு ஒப்பிட்டால், பத்து ரூபாய் என்பது சாதாரணத் தொகை. பேசாமல் நான் என்னுடைய புத்தகத்தைப் படிக்கத் திரும்பிவிட்டேன்.

***

என். சொக்கன் …

31 08 2009

’கலைஞன்’ என்ற படத்தில், கமலஹாசன் ஒரு நடனக் கலைஞராக வருவார், ‘கலைஞன் கட்டுக் காவல் விட்டோடும் காற்றைப்போல, சிறிய வட்டத்துக்குள் நிற்காத ஊற்றைப்போல’ என்று ECG கிராஃப்போல ஏறி ஏறி இறங்குகிற ட்யூனுக்குள் வாலி ஒளித்துவைத்த வரிகளை SPB குரலில் பாடி ஆடிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று சின்ன வயது ஞாபகம் வந்துவிட, துள்ளலெல்லாம் மறந்து மேடையிலேயே அத்தனை ரசிகர்கள் முன்னிலையில் உணர்ச்சிவயப்பட்டு விசும்ப ஆரம்பித்துவிடுவார்.

அப்புறம் சில நிமிடங்கள் கழித்து சுதாரித்துக்கொள்ளும் கமல், நிலைமையைச் சமாளிப்பதற்காக ஒரு பிட்டைப் போடுவார், ‘ஒரு கலைஞனுக்குப் பாராட்டுகள், கைதட்டல்தான் முக்கியம், ஆகவே நிறையப் பாராட்டுங்கள்’ என்று அவர் ஏதோ உணர்ச்சிமயமாகப் பேசிவைக்க, ரசிகர்களாகிய துணை நடிகர்களும் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் கண்டபடி கைதட்டி ஸ்பீக்கரைக் கிழிப்பார்கள்.

கலைஞர்களுக்குமட்டுமில்லை, உங்களுக்கும் எனக்கும்கூடப் பாராட்டுகள் முக்கியம்தான். ‘இன்னிக்கு நீங்க ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க’ என்பதுபோன்ற சாதாரண வாசகங்கள் தொடங்கி, ஏதாவது ஒரு வேலையை உருப்படியாகச் செய்து சக ஊழியர் அல்லது மேலதிகாரியிடம் வாங்குகிற முதுகுதட்டல், ஷொட்டுகள்வரை அவ்வப்போது இந்த மானசீகக் கைதட்டல்கள் இல்லாவிட்டால், யாரும் ’காலை எழுந்தவுடன் ஆஃபீஸ்’ என்று உற்சாகமாகக் கிளம்பிவரமாட்டார்கள் என நினைக்கிறேன்.

இணையத்தில்மட்டுமென்ன? ஒரு பதிவு எழுதி ‘Publish’ பொத்தானை அமுக்கிய இரண்டாவது நிமிடத்திலிருந்து, யாராவது feedback அனுப்பமாட்டார்களா என்று மெயில்பாக்ஸைத் தேட ஆரம்பித்துவிடுகிறோம். மின்னஞ்சலிலோ, கூகுள் அரட்டையிலோ யாராவது கூப்பிட்டு இரண்டு வரி பாராட்டிவிட்டால் அன்று முழுக்க மிதந்துதான் நடக்கவேண்டியிருக்கிறது.

நாங்கள் Corporate Clients-க்கு Training எடுக்கும்போதெல்லாம், அதன் முடிவில் மாணவர்களுக்கு Feedback Forms கொடுப்போம் – முன்பு பேப்பரில் எழுதச் சொல்வோம், இப்போது அவர்கள் ஆன்லைனிலேயே நிரப்பவேண்டியதுதான், எப்படியாயினும், பூஜ்ஜியம் முதல் ஐந்துவரை நம்முடைய வகுப்புக்கு மக்கள் என்ன மரியாதை தருகிறார்கள் என்பது உடனுக்குடன் தெரிந்துவிடும்.

சென்னையில் ‘தி ஹிந்து’ அலுவலகத்துக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள கேன்ட்டீனில் ஒரு வித்தியாசமான சமாசாரம் பார்த்தேன். சாப்பிட்டுவிட்டுக் கை கழுவும் இடத்தில் நிறைய சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறப் பந்துகளை ஒரு குடுவையில் நிரப்பிவைத்திருந்தார்கள்.

‘இது எதுக்கு?’ என்னை அழைத்துச்சென்ற நண்பரிடம் விசாரித்தேன்.

‘ஓ, அதுவா? கேன்ட்டீன் சாப்பாட்டுக்கு Feedback’

எனக்குப் புரியவில்லை, அவர் விளக்கினார், ‘ஒவ்வொரு நாளும் சாப்பிட்டுக் கைகழுவி முடிச்சப்புறம், நமக்கு அன்றைய சாப்பாடு பிடிச்சிருந்தா ஒரு பச்சைப் பந்தை எடுத்து இந்த ஜாடியில போடணும், பிடிக்கலைன்னா சிவப்புப் பந்து, நிச்சயமாத் தெரியலை, குழப்பமா இருக்குன்னா மஞ்சள் பந்து, இப்படி ஒவ்வொரு நாளும் ஜாடியில எத்தனை பந்து எந்தெந்த நிறத்திலே இருக்குன்னு எண்ணிப் பார்த்து Feedback Score கணக்கிடுவாங்க’

மேடைக் கச்சேரி செய்கிற கர்நாடக சங்கீதப் பாடகர்களுக்கு இந்தப் பிரச்னையே இல்லை, ஒவ்வொரு வரிக்கும் தொடையைத் தட்டித் தாளம் போட்டபடி ரசிகர்கள் ஆனந்தமாகத் தலையாட்டுவது அவர்களுக்கு மினி கைதட்டல்களாகவே கேட்கும்.

ஆனால், கல்யாணக் கச்சேரிப் பாடகர்களுக்கு இந்தப் பாக்கியம் வாய்ப்பதில்லை. அவர்கள் எப்பேர்ப்பட்ட திறமைசாலிகளாக இருந்தாலும் சரி, என்னதான் பிரமாதமாகப் பாடினாலும் சரி, பெரும்பாலான மக்கள் தங்களுடைய சலசல பேச்சில்தான் கவனமாக இருப்பது வழக்கம்.

ஒருமுறை திருப்பூரில் என் சிநேகிதன் தங்கை திருமணம், வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒரு மிகப் பெரிய பாடகியின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவருடைய பெயரைச் சொன்னால் பிரச்னை வரும், நான் அந்தக் கச்சேரிக்காகவே கோயம்பத்தூரிலிருந்து திருப்பூர் ஓடினேன் என்பதைமட்டும் சொல்லிவிடுகிறேன்.

ஆனால், அங்கே போய்ச் சேர்ந்த எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அப்பேர்ப்பட்ட பாடகிக்கு ஒரு சரியான மேடைகூட அமைத்துத் தராமல் அந்தக் கல்யாண மண்டபத்தின் ஒரு மூலைக்கு ஒதுக்கிவிட்டிருந்தார்கள், நான்கைந்து ஸ்பீக்கர்களில் நிரம்பி வழியும் அவருடைய கணீர் குரலைத் தாண்டி எட்டுத் திசைகளிலும் அரட்டை இரைச்சல், எதிரே முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த சில சீனியர் சிட்டிசன்களைத்தவிர வேறு யாரும் அவருடைய பாட்டுத்திறமையைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

இப்படி ரசிக்கவோ, பாராட்டவோ தெரியாத ஜனங்களுக்குமத்தியில் பாடுவது அந்தக் கலைஞர்களுக்கு எப்பேர்ப்பட்ட கொடுமையாக இருந்திருக்கவேண்டும்! ஆனால் அதை அந்தக் கல்யாண வீட்டில் யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை, ‘அதான் காசு வாங்கிட்டேல்ல? மூலையில உட்கார்ந்து பாடு’

Feedback தருவது, பாராட்டுவதுகூட ஒரு கலைதான். இதற்குத் தனிப்பட்ட திறமையைவிட, மனசுதான் வேண்டும். அது பலருக்கு அமைவதில்லை.

இதற்கு நேரெதிராக, மிகப் பெரிய மனதுக்காரர் ஒருவரை சென்ற வாரம் சந்தித்தேன். அவரைப்பற்றி எழுதுவதற்குதான் இம்மாம்பெரிய பீடிகை.

நான் டெல்லியிலிருந்து பெங்களூருக்குப் பயணம் செய்த விமானத்தில், அவர் எனக்குப் பக்கத்து இருக்கை, மோகன்போல மீசை, நல்ல உயரம், சியாமள வண்ணம்.

விமானம் புறப்பட்டுச் சில நிமிடங்கள் கழித்து, அவர் ஒரு பொத்தானை அழுத்தி ஏர் ஹோஸ்டஸை அழைத்தார், ‘எனக்குக் கழுத்து வலிக்குது, உங்ககிட்ட ஏதாவது பெயின் கில்லர் இருக்குமா?’

’ஷ்யூர் சார்’, அவர் ஒரு மஞ்சள் நிற மருந்தைக் கொண்டுவந்து கொடுத்தார், ‘ஐஸ் க்யூப்ஸ் கொண்டுவரட்டுமா சார்?’

‘வேணாங்க, இதுவே போதும்’ அவர் அந்த மருந்தைப் பரபரவென்று கழுத்தில் தடவிக்கொண்டார். அப்போதும் வலி குறையவில்லை என்பது அவருடைய முகபாவனையில் தெளிவாகத் தெரிந்தது.

இப்போது அந்த விமானப் பணிப்பெண் ஒரு சின்னத் தலையணை கொண்டுவந்து அவர் முதுகில் வைத்தார், ‘கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க சார், எல்லாம் சரியாயிடும்’

‘தேங்க் யூ’, அவர் ட்யூபைத் திருப்பிக் கொடுத்துவிட்டு லேசாகச் சரிந்து ஓய்வெடுத்தார். இமைகளை மூடினாலும், கண்கள் இலக்கில்லாமல் அங்கும் இங்கும் அலைபாய்வது தெரிந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில், அந்தப் பணிப்பெண் அவருக்கு ஏகப்பட்ட சேவைகளைச் செய்துகொண்டிருந்தார், முதலில் ஐஸ் கட்டிகளும், அதில் நனைத்த பூந்துவாலைகளும் வந்தன, அது சரிப்படவில்லை என்றதும் வெந்நீர் ஒத்தடம் தருகிற உபகரணம் ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார், பழைய மஞ்சள் ட்யூபுக்குப் பதில் இன்னொரு சிவப்பு ட்யூப் மருந்து வந்தது, இதெல்லாம் அவருக்குப் பலன் அளிக்கிறதா என்பதுதான் தெரியவில்லை.

சிறிது நேரத்துக்குப்பிறகு, எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது. என்னருகே உட்கார்ந்திருந்தவர் சாப்பிட மறுத்துவிட்டார்.

நீங்கள் நினைத்தது சரி, மீண்டும் அந்தப் பணிப்பெண் தோன்றினார், ‘சார், சாப்பிடாம இருந்தீங்கன்னா வலி அதிகமாத் தெரியும், தயவுசெஞ்சு எதாச்சும் சாப்பிடுங்க, நான் உங்களுக்கு பிஸ்கெட்ஸ், ஃப்ரூட்ஸ், ஜூஸ் ஏதாவது கொண்டுவரட்டுமா?’

கடைசியில் அவர் ஒரு வாழைப்பழமும் தேங்காய் குக்கீஸும் சாப்பிட்டார். அந்தத் தட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான வண்டி வருவதற்குள், நன்றாகத் தூங்கிவிட்டார்.

முக்கால் மணி நேரம் கழித்து அவர் விழித்தபோது, விமானம் பெங்களூரை நெருங்கிக்கொண்டிருந்தது. தலையணை சரிய எழுந்து நின்றவர், தன்னுடைய ஃபேவரிட் பணிப்பெண்ணைத் தேட ஆரம்பித்தார்.

உடனடியாக, அந்தப் பெண் எங்கிருந்தோ ஓடி வந்தார், ‘இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க சார்?’

‘பெட்டர்’ என்றார் அவர், ‘ஃப்ளைட் லாண்ட் ஆகப்போகுதா?’, அவருடைய பதற்றத்தைப் பார்த்தால் விமானத்தைக் கடத்த நினைத்து மறந்துபோய் தூங்கிவிட்டவரைப்போல் தெரிந்தது.

’ஆமா சார், இன்னும் டென் மினிட்ஸ்’

’எனக்கு ஒரு Feedback Form வேணுமே’

‘இதோ கொண்டுவர்றேன் சார்’

இரண்டாவது நிமிடம் Feedback Form வந்து சேர்ந்தது. அவர் தனது பேனாவைப் பிதுக்கிக்கொண்டு விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தார்.

சிறிது நேரத்துக்குள், அந்தப் பக்கம்முழுக்க எழுதிமுடித்துவிட்டார், அடுத்த பக்கமும் தொடர்ந்தார். ஒருவேளை என்னைமாதிரி நீளநீளமாக வலைப்பதிவு எழுதிப் பழக்கமோ என்னவோ.

பத்து நிமிடத்தில், விமானம் ஒரு மிகப் பெரிய படிக்கட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் தவழ்ந்து இறங்குவதுபோல் தரையை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தது. அவர் எழுதி முடித்துவிட்டு, அந்தப் பணிப்பெண்ணைத் தேடினார், ரேடியோ நாடகம்போல் அவர் உடனே வந்து நின்றார், ‘எஸ் சார்?’’

‘உங்க பேர் என்ன?’

’ரீனா தாமஸ்’

’ஸ்பெல்லிங் சொல்லுங்க’

அவர் சொல்லச்சொல்ல கவனமாக அதனை Feedback Formல் நிரப்பினார், ‘இது கரெக்டா இருக்கா?’

‘யெஸ் சார்’

‘இங்கே கொஞ்சம் உட்காருங்க’ அந்தப் பக்கமிருந்த காலி இருக்கையைக் காட்டினார் அவர்.

ரீனா தாமஸுக்குத் தயக்கம், விருந்தினர்முன்னால் உட்காரக்கூடாது என்று அவருக்குச் சொல்லித்தரப்பட்டிருக்கிறதோ என்னவோ, ‘இருக்கட்டும் சார், பரவாயில்லை’ என்றார்.

இப்போது அவர் தான் எழுதிய Feedback வாசகங்களைக் கவனமாகப் படிக்க ஆரம்பித்தார். அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் கவனிக்கிறார்களே என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் நன்கு சத்தமாகவே படித்தார், இந்த விமானம் ஏறியதுமுதல் சென்ற நிமிடம்வரை ரீனா தாமஸ் அவருக்குச் செய்த சேவைகளையெல்லாம் குறிப்பிட்டு, தாராளமான வார்த்தைகளில் பாராட்டியிருந்தார்.

அவர் படிக்கப் படிக்க, ரீனா தாமஸ் முகத்தில் பரவிய சிவப்பை வார்த்தைகளில் வர்ணிப்பது சிரமம். அவர் தினம் தினம் வானத்தில் பறந்து சென்றாலும், நிஜமான மிதப்பை அப்போதுதான் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

முழுக்கப் படித்து முடித்துவிட்டு, பசைக் காகிதத்தைக் கிழித்து ஒட்டினார் அவர், ‘தேங்க் யூ, மிஸ் ரீனா’ என்று அவர் கையில் கொடுத்தார், ‘இந்த Feedback எங்கே போகுமோ எனக்குத் தெரியாது, இதைப் படிக்கிறவங்க உங்ககிட்டே இதைச் சொல்வாங்களாங்கறதும் தெரியலை, அதனாலதான் முதல்ல உங்ககிட்டே படிச்சுக் காட்டிடணும்ன்னு நினைச்சேன், தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்’

இப்போது விமானம் தரையிறங்க ஆரம்பித்திருந்தது. ஜன்னல் கண்ணாடிவழியே Horizontal கோடுகளைக் கிழித்துச் சென்றது மழை.

***

என். சொக்கன் …

24 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

ஒரு மாதம் முன்பாக, அவர் என்னைத் தேடி வந்திருந்தார்.

அவர் பெயர் ஸ்ரீமதி. ஆறு மாதங்களுக்குமுன்புவரை எங்களுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். சில தனிப்பட்ட காரணங்களால் பணியிலிருந்து விலகிவிட்டார்.

இப்போது, அவருக்கு இன்னோர் இடத்தில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. இங்கே அவர் வாங்கிக்கொண்டிருந்ததைப்போல் இருமடங்குக்குமேல் சம்பளம், வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள், இன்னபிற சவுகர்யங்கள்.

ஆனால், நான்கு சுற்று நேர்முகத்தேர்வுகளுக்குப்பிறகும், அந்த நிறுவனம் ஸ்ரீமதியின் வேலை நியமனத்தை இன்னும் உறுதி செய்யவில்லை. அதற்குமுன்னால், அவருடைய முந்தைய பணியிடத்தில் உள்ள சிலரின் Reference (இதற்கு என்ன தமிழ் வார்த்தை?) கேட்டிருக்கிறார்கள்.

‘ரெஃபரன்ஸ்க்காக நான் உங்க பேர், நம்பரை அவங்களுக்குக் கொடுக்கலாமா சார்?’

‘ஓ, தாராளமா’

அவருடைய ‘தேங்க் யூ’வில் உண்மையான நன்றி தெரிந்தது. அதன்பிறகு சிறிது நேரம் வேறு ஏதோ பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு அவர் விடை பெற்றுச் சென்றார்.

இரண்டு நாள் கழித்து, நான் ஒரு சூப்பர் மார்க்கெட் க்யூவில் நின்றுகொண்டிருந்தபோது என் செல்பேசி ஒலித்தது, ‘ஹலோ, நாங்க ____ கம்பெனியிலிருந்து பேசறோம், உங்களோட வொர்க் பண்ண மிஸ். ஸ்ரீமதி எங்க கம்பெனியில வேலைக்கு விண்ணப்பம் செஞ்சிருக்காங்க, அவங்களைப்பத்திக் கொஞ்சம் உங்ககிட்ட பேசமுடியுமா?’

நான் பதில் சொல்வதற்குள், எனக்குமுன்னே வரிசையில் நின்றிருந்தவர்கள் இருவரும் பணம் செலுத்திவிட்டுப் போய்விட்டார்கள். அடுத்து, என் முறை.

இந்த நேரத்தில் நான் செல்பேசியில் விலாவரியாகப் பேசிக்கொண்டிருந்தால், கவுன்டரில் இருக்கிற கன்னிகை மனத்துக்குள் திட்டுவாள், பின்னால் காத்திருப்பவர்கள் வெளிப்படையாகவே திட்டுவார்கள், எல்லோருடைய நேரமும் வீணாகும், தேவையா?

ஆகவே, மறுமுனையில் இருந்தவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன், ‘ஒரு ட்டூ மினிட்ஸ் கழிச்சுக் கூப்பிடமுடியுமா?’

’நோ ப்ராப்ளம்’ என்றபடி அவர் இணைப்பைத் துண்டித்தார்.

நான் நிம்மதியாகப் பணத்தைச் செலுத்திவிட்டு வெளியே வந்தேன், மறுசுழற்சி பிளாஸ்டிக் பையினுள் தேடி, பார்லே குழுமத்திலிருந்து சமீபத்தில் அறிமுகமாகியிருக்கும் டக்கரான ‘LMN‘ எலுமிச்சை பானத்தைத் திறந்து குடித்தேன், செல்ஃபோனில் இளையராஜாவின் லேட்டஸ்ட் கன்னடப் பாடல் ‘ரங்கு ரங்கு’வை ஒலிக்கவிட்டபடி சாலையைக் கடந்து நடந்தேன்.

இதற்குள், நிச்சயமாகப் பத்து நிமிடமாவது கடந்திருக்கும். ஆனால் ‘ட்டூ மினிட்ஸ்’ல் திரும்ப அழைப்பதாகச் சொன்ன அவர்கள் என்னைக் கூப்பிடவில்லை.

அப்போதுமட்டுமில்லை, அன்று முழுக்க, அடுத்த ஒரு வாரத்துக்கு அந்த நிறுவனத்திலிருந்து யாரும் என்னை அழைக்கவில்லை. தேவைப்பட்டால் கூப்பிடுவார்கள் என்று நானும் சும்மா இருந்துவிட்டேன்.

நேற்று காலை, ஸ்ரீமதி என்னைத் தொலைபேசியில் அழைத்தார், ‘சார், நான் சொன்னேனே, அந்தக் கம்பெனியிலிருந்து உங்களுக்கு யாராவது ஃபோன் பண்ணாங்களா?’

‘ஆமாம் ஸ்ரீமதி, ஒரு ஃபோன் வந்தது’

‘நீங்க என்ன சொன்னீங்க?’

‘நான் அப்போ கொஞ்சம் பிஸியா இருந்தேன், அதனால ட்டூ மினிட்ஸ் கழிச்சுக் கால் பண்ணச் சொன்னேன், ஆனா அவங்க அதுக்கப்புறம் என்னைக் கூப்பிடவே இல்லை’

மறுமுனையில் நிசப்தம். சில விநாடிகளுக்குப்பிறகு, ‘கூப்பிடவே இல்லையா?’ என்று அதிர்ச்சியாகக் கேட்டார் அவர்.

‘இல்லைங்க ஸ்ரீமதி’ நான் என் குற்றவுணர்ச்சியைக் குறைத்துக்கொள்வதற்காகத் தொடர்ந்து பேசினேன், ‘அவங்க மறுபடி கூப்பிட்டிருந்தா நான் உங்களைப்பத்தி நல்லவிதமா சொல்லியிருப்பேன், பட் ஏனோ அவங்க கால் பண்ணவே இல்லை’

ஸ்ரீமதி என்னை நம்பினாரா, இல்லையா, தெரியவில்லை, ‘சரி சார், நான் கொஞ்சம் விசாரிச்சுட்டு, அப்புறமாக் கூப்பிடறேன்’ என்று ஃபோனை வைத்துவிட்டார்.

இரண்டு மணி நேரம் கழித்து, மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு வந்தது, ‘சார், அவங்க என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க’

‘எ-என்னாச்சு ஸ்ரீமதி’

‘ஆமா சார், நீங்க பிஸியா இருக்கீங்கன்னதும் அவங்க உங்க கம்பெனியிலயே இன்னொருத்தரைக் கூப்பிட்டுப் பேசியிருக்காங்க, அவர் என்னைப்பத்தி ரொம்ப நெகட்டிவ்வா சொல்லியிருக்கார்போல, அதனால எனக்குக் கொடுக்கறதா இருந்த அந்த Offer-ஐ இன்னொருத்தருக்குக் கொடுத்துட்டாங்களாம்’

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது, இப்படியெல்லாமா செய்வார்கள்?

இப்போது, அவர் அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்திருந்தார், ‘உங்க கம்பெனியில ஒன்னரை வருஷம் சின்ஸியரா வேலை பார்த்தேன் சார், என்னைப்பத்தி நல்லவிதமா எதுவும் சொல்லவேணாம், உதவி செய்யவேணாம், இப்படி எனக்குக் கிடைச்ச நல்ல சான்ஸையும் அழிக்காம இருக்கலாம்ல? இப்ப நான் என்ன செய்வேன் சார்?’

அவர் திட்டுவது என்னையா? அல்லது, அவரைப்பற்றித் தவறாகக் கருத்துச் சொன்ன அந்த இன்னொருவரையா? எனக்குச் சரியாகப் புரியவில்லை.

ஆனால், அழுகிறவர்களுக்கு உடனடியாகச் சமாதானம் சொல்வதைவிட, அவர்களை அழ விடுவதுதான் உத்தமமான விஷயம். ஆகவே, செல்பேசியின் சத்த அளவைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, அடுத்த சில நிமிடங்கள் அவருடைய அழுகையை, புலம்பலைப் பொறுமையாகக் கேட்டு ‘உம்’ கொட்டிக்கொண்டிருந்தேன்.

அவருக்கு என்னால் என்ன ஆறுதல் சொல்லமுடியும்? அவர் வேலைக்குச் சேர்வதாக இருந்த நிறுவனம், மிக மிகப் பெரியது. அங்கே அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைத்திருக்கவேண்டும். ஆனால், எங்கள் நிறுவனத்தில் வேலை செய்கிற இன்னொருவரால், அந்த அபூர்வமான வாய்ப்பு பறிபோயிருக்கிறது.

அதுமட்டுமில்லை, இனி அவர் எங்கே விண்ணப்பம் செய்தாலும், நிச்சயமாக முந்தைய நிறுவனத்திலிருந்து Reference கேட்பார்கள். எதை நம்பி, யாருடைய பெயரைக் கொடுப்பார் அவர்?

அப்போதுதான் எனக்கு இன்னொரு திகிலான கற்பனை தோன்றியது. ஒருவேளை, நான்தான் ஸ்ரீமதியைப்பற்றி எதிர்மறையான விமர்சனம் சொல்லி அவருடைய வேலைவாய்ப்பைக் கெடுத்துவிட்டதாக அவர் நினைக்கிறாரோ? நிஜமாகவே நான் அவர்களிடம் எதுவும் பேசவில்லை என்பதை எப்படி அவருக்கு நிரூபிப்பேன்?

இப்படி நினைக்க ஆரம்பித்ததும், என்னுடைய குற்றவுணர்ச்சி அதிகமாகிவிட்டது. சாதாரண சூப்பர் மார்க்கெட் க்யூ, அது ரொம்ப முக்கியமா? இரண்டு நிமிடம் அவரைப்பற்றி நல்லவிதமாகப் பேசிவிட்டு, அதன்பிறகு பில் போட்டிருந்தால் நான் என்ன குறைந்துபோயிருப்பேனா? ‘எல்லாம் ட்டூ மினிட்ஸ் கழிச்சுப் பேசிக்கலாம்’ என்று நான் அலட்சியம் காட்டியதால்தானே அவர்கள் இன்னொருவரை அழைத்தார்கள்? அதனால்தானே இந்தப் பெண்ணின் வேலைவாய்ப்பு கெட்டுப்போச்சு?

யார் கண்டது? ஒருவேளை நான் அந்த அழைப்பைத் துண்டிக்காமல் தொடர்ந்து பேசியிருந்தால், இப்போது ஸ்ரீமதி தொலைபேசியில் அழுகிற அவசியம் ஏற்பட்டிருக்காதோ என்னவோ.

ஸ்ரீமதி சிறிது நேரம் அழுதார், நிறைய நேரம் புலம்பினார், அதன்பிறகு அவரே ஏதோ ஒருவிதத்தில் சமாதானம் அடைந்தார், ‘சரி சார், உங்க உதவிக்கு நன்றி’ என்று வஞ்சப் புகழ்ச்சி அணியில் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

இனிமேல், ஸ்ரீமதி இழந்த அந்த வேலையைத் திரும்ப வாங்கித்தருவதற்கு என்னால் எதுவும் செய்யமுடியாது. ஆனால் அடுத்தமுறை ‘ட்டூ மினிட்ஸ்’ என்று என் சவுகர்யத்துக்காக ஒரு விஷயத்தைத் தள்ளிப்போடுவதற்குமுன்னால், கொஞ்சமாவது யோசிப்பேன்.

***

என். சொக்கன் …

10 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

அந்தப் பெண்மணி தங்க நிறச் சேலை உடுத்தியிருந்தார். ‘குமரேசன் டெக்ஸ்டைல்ஸ்’ என்று கொட்டை எழுத்தில் பொறித்த வெள்ளை நிறப் பையை அழுந்தப் பிடித்திருந்தார். அவருடைய முந்தானையைப் பிடித்துக்கொண்டு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன்.

அவர்கள் ரயிலில் இருந்து இறங்கியபோது நான் கவனிக்கவில்லை. ரயில் புறப்பட்டுச் சென்றபின்னர், ‘அப்பா எங்கடா?’ என்று அந்தப் பெண்மணி சத்தமாக அலறியபோதுதான் திரும்பிப் பார்த்தேன்.

‘தெர்லம்மா’ என்றான் மகன், ‘ரயில்லர்ந்து எறங்காம அப்படியே போய்ட்டார்போல’

‘அய்யய்யோ’ என்று தலையில் கை வைத்துக்கொண்டு அப்படியே மடிந்து உட்கார்ந்தார் அந்தப் பெண். குழந்தைகள் புரியாமல் அவரைச் சுற்றிவந்தன.

சில நிமிடங்களுக்குப்பிறகு, அவர் சுதாரித்துக்கொண்டார். நாக்கை லேசாகக் கடித்துக்கொண்டபடி ’குமரேசன் டெக்ஸ்டைல்ஸ்’ பையைப் புரட்டிப் போட்டுத் தேடி அந்த மொபைல் ஃபோனைக் கையில் எடுத்தார்.

அதுவரை, அவரைப் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கும் கொஞ்சம் கவலையாகதான் இருந்தது. ஸ்டேஷன் மாறி இறங்கிவிட்ட குடும்பம், அதுவும் பார்ப்பதற்குப் பக்கா கிராமத்து மனிதர்களாகத் தெரிகிறார்கள், கன்னடம் தெரியுமோ, தெரியாதோ, இத்தனை பெரிய பெங்களூரில் எப்படி ஒருவரை ஒருவர் தேடிப் பிடித்துக்கொள்ளப்போகிறார்கள்?

ஆனால், இப்போது அந்தப் பெண்மணியின் கையில் மொபைல் ஃபோன் உள்ளது என்று தெரிந்ததும், பிரச்னையின் தீவிரம் சடாரென்று இறங்கிவிட்டாற்போல் தோன்றியது. நாங்களெல்லாம் நிம்மதிப் பெருமூச்சுடன் ஆசுவாசமடைந்தோம்.

மனைவிக்கு செல்ஃபோன் இருக்கிறது என்றால், அநேகமாக அவருடைய கணவரிடமும் ஒரு செல்ஃபோன் இருக்கவேண்டும், அழைத்து விவரத்தைச் சொல்லிவிட்டால் அவர் வந்து இவர்களை அழைத்துச் சென்றுவிடுவார். சுபம்.

ஆனால், நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத திருப்பமாக, அவருடைய செல்ஃபோன் அணைந்துபோயிருந்தது.

’என்னாச்சுடா?’ என்று மகனை விசாரித்தார் அவர், ‘எந்த பட்டனை அமுக்கினாலும் ஒண்ணும் வரமாட்டேங்குது’

அந்த மகனுக்குச் சுமார் பத்து வயது இருக்கலாம், செல்ஃபோனை மேலும் கீழும் புரட்டிப் பார்த்துவிட்டு அதன் ‘On / Off’ பொத்தானை நன்கு அழுத்தினான். ம்ஹூம், பலன் இல்லை.

’பேட்டரி போய்டிச்சும்மா’ என்றான், ‘சார்ஜர் வெச்சிருக்கியா?’

‘தோ இருக்கே’, மறுபடி குமரேசன் டெக்ஸ்டைல்ஸ் பை புரட்டிப்போடப்பட்டது. கடைசியில் நீண்ட வால் கொண்ட எலிக்குட்டியாக அந்த Nokia Charger வெளியே வந்தது.

சார்ஜர் சரி, மின்சாரம்?

இப்போதெல்லாம் பெரிய ரயில் நிலையங்களில் மொபைல் ஃபோன்களைச் சார்ஜ் செய்வதற்காகவே விசேஷ வசதிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் உட்கார்ந்திருந்த எளிய ரயில் நிலையத்தில் (“Bangalore East”) அந்த வசதியெல்லாம் கிடையாது.

உயிரில்லாத செல்ஃபோன், சார்ஜர் சகிதம் அந்தக் குடும்பம் ஒட்டுமொத்த பிளாட்ஃபாரத்தையும் அலசியது. அவர்கள் பயன்படுத்தும்படியான மின்சார இணைப்புகள் எவையும் கிடைக்கவில்லை.

இப்போது அந்தப் பெண்மணி லேசாக விசும்பத் தொடங்கியிருந்தார், ‘இதிலதானேடா எல்லா நம்பரும் இருக்கு? பேட்டரி சார்ஜ் பண்ணாம பார்க்கமுடியாதா?’

‘முடியாதும்மா’ என்றான் மகன், ‘அப்பா நம்பர் எங்கயாச்சும் பேப்பர்ல எழுதி வெச்சிருக்கியா?’

‘இல்லியே, மூணாம் நம்பரை அழுத்தினா அவருக்குப் போவும், இந்த ஃபோன்ல அழுத்திப் பார்க்கலாமா?’ என்று STD கூண்டினுள் உட்கார்ந்திருந்த தொலைபேசியைக் காட்டினார் அவர்.

‘ம்மா, சும்மாயிரும்மா’ மகன் அவரை அதட்டினான், ‘நம்பர் இல்லாம யாருக்கும் ஃபோன் செய்யமுடியாது’

‘உங்கப்பன் நம்பர்தான் இதுக்குள்ள மாட்டிகிட்டிருக்கே’ என்று செல்ஃபோனை வீசி எறிவதுபோல் பாவனை செய்தார் அவர், ‘இப்ப என்ன செய்யறது?’

இதற்குள், சுற்றியிருந்த சிலர் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்திருந்தார்கள், ‘என்னாச்சும்மா?’ என்று அதட்டல் தொனியில் விசாரித்தார் ஒருவர்.

அதற்காகவே காத்திருந்ததுபோல் அந்தப் பெண்மணி தனது புலம்பலைத் தொடங்கிவிட்டார். தன்னுடைய கிராமத்தின் பெயர், அங்கே தாங்கள் செய்துவருகிற விவசாயம்பற்றிய விவரங்கள், பெங்களூர் வந்த காரணம், இங்கே மெயின் ஸ்டேஷன் வருவதற்குள் இவர்கள்மட்டும் தவறிப்போய் இறங்கிவிட்ட கதை, இப்போது கணவரின் செல்ஃபோனைத் தொடர்புகொள்ளமுடியாமல் தவிக்கும் நிலைமை என்று சகலத்தையும் கொட்டிவிட்டார்.

மாலை நேர ரயில் நிலையங்களில் அரட்டைப் பிரியர்கள் அதிகம். அவர்கள் இந்தக் கதையைக் கேட்டு ‘அடடா’ என்று உச்சுக்கொட்டினார்கள்.

‘ஏம்மா, நம்பர்ல்லாம் ஒரு பேப்பர்ல எழுதி வெச்சுக்கறதில்லையா?’ என்றார் ஒருவர்.

‘அதான் ஃபோன்ல இருக்குங்களே’

‘இப்படி ஃபோன் பேட்டரி டெட் ஆயிடுச்சுன்னா, சமாளிக்கவேண்டாமா?’ என்றார் அவர், ‘விவரம் தெரியாம இந்தமாதிரி பெரிய ஊருக்கெல்லாம் வரக்கூடாதும்மா’

’ஆமாங்க’ என்று பரிதாபமாகத் தலையை ஆட்டிய அந்தப் பெண், மீண்டும் அழத் தொடங்கினார், ‘இவங்கப்பன் இப்போ எங்கே இருக்காரோ, என்ன பண்றாரோ தெரியலையே’

’நீ ஒண்ணும் கவலைப்படாதேம்மா, இப்ப அடுத்த ரயில் வரும், நேரா ஏறிகிட்டு மெயின் ஸ்டேஷன் போயிடு, அங்கே உன் புருஷனைக் கண்டிப்பாக் கண்டுபிடிச்சுடலாம்’

அவர் இப்படிச் சொன்னதும், எனக்குச் சிரிப்புதான் வந்தது. இந்த நேரத்தில் பெங்களூர் பிரதான ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஜனக் கூட்டம் இருக்கும். அதற்கு நடுவே இந்தப் பெண் தன்னுடைய கணவரை எப்படிக் கண்டறியமுடியும்?

தவிர, இவர் அங்கே போகும்போது, அவர் கிளம்பி இங்கே வந்துவிட்டால்? பிரச்னை இன்னும் பெரிதாகிவிடுமே.

நிலைமையின் தீவிரம் இப்போது அந்தப் பெண்மணிக்குப் புரிந்துவிட்டது. மூளை உறைந்துபோனவராகப் பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டார்.

இனிமேல் அவரால் எந்தப் புதிய யோசனையையும் சிந்திக்கமுடியாது. இது புரிந்ததும், கூட்டம் சுறுசுறுப்பானது, அவரவர் தங்களுக்குத் தோன்றிய உத்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

’அந்த செல்ஃபோன், சார்ஜரை’ என்கிட்ட கொடுங்க’ என்றார் ஒருவர், ‘ஏ தம்பி, நீ என்கூட வாப்பா’ என்று அவனையும் இழுத்துக்கொண்டு தூரத்திலிருந்த ரயில் அதிகாரி அலுவலகத்தை நோக்கி நடந்தார்.

ஐந்து நிமிடத்தில் அவர்கள் திரும்பி வந்தார்கள். அந்த அலுவலகத்திலும் செல்ஃபோனை சார்ஜ் செய்கிற வசதி இல்லையாம்.

‘அது என்ன கம்பெனி செல்ஃபோன்ங்க?’, கூட்டத்தில் யாரோ விசாரித்தார்கள்.

‘நோக்கியா’

’என்னோட ஃபோனும் ஃநோகியாதான்’ என்றபடி அவர் தனது செல்பேசியை எடுத்தார், ‘அப்படியே பேட்டரியை மாத்திப் போட்டா வேலை செய்யும்ல?’

நான் குறுக்கிட்டேன், ‘நோகியாவிலேயே வெவ்வேற ஃபோனுக்கு வெவ்வேறவிதமான பேட்டரி உண்டுங்க, மாத்திப் போட்டு ரிஸ்க் எடுக்காதீங்க’

அவர் என் பேச்சை நம்பவில்லை, ‘எல்லா நோகியா பேட்டரியும் ஒண்ணுதான்’ என்றபடி இரண்டு ஃபோன்களையும் துகிலுரித்தார், பேட்டரிகளை மாற்றி இணைக்க முயன்றார்.

ம்ஹூம், பொருந்தவில்லை. அவர் எரிச்சலுடன் தன்னுடைய ஃபோனைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.

அங்கிருந்த வேறு சிலருடைய பேட்டரிகளையும் முயன்று பார்த்தோம். சரிப்படவில்லை.

அடுத்தபடியாக, ‘சிம் கார்டை மாத்திப் பார்த்தா என்ன?’ என்றார் ஒருவர்.

‘இந்தம்மா சிம் கார்ட்லதான் எல்லா நம்பரையும் ஸ்டோர் பண்ணியிருப்பாங்கன்னு என்ன நிச்சயம்?’ இன்னொருவர் மடக்கினார், ‘ஒருவேளை ஃபோன்ல போட்டிருந்தாங்கன்னா?’

‘இருக்கட்டும்ங்க, ஒரு முயற்சிதானே? செஞ்சு பார்த்தா தப்பில்லையே’

இந்த யோசனை எங்கள் எல்லோராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணின் செல்ஃபோனில் இருந்து சிம் கார்டை உருவி, இன்னொரு ஃபோனிற்கு மாற்றினார்கள்.

ஆனால், இதைச் செய்தவர் ஏதோ ஞாபகத்தில் சிம் கார்டைத் திசை மாற்றிப் போட்டுவிட்டார். அது உள்ளே சிக்கிக்கொண்டுவிட்டது.

’அச்சச்சோ’ என்று பதறியவர் அதைப் பின்னோக்கி இழுத்தார், வரவில்லை.

’விஷயம் தெரியாம எதையும் செய்யக்கூடாது’ யாரோ நக்கலாகப் பேசினார்கள்.

‘ஏன், நீதான் வந்து செய்யறது?’ இவர் கோபமாகக் கத்தினார்.

‘சரி சரி, ஆகவேண்டிய வேலையைப் பாருங்கப்பா, இந்தம்மாவேற ஓலைப்பாய்ல தூறல் போட்டமாதிரி ஓயாம அழுதுகிட்டிருக்கு’

மாட்டிக்கொண்ட சிம் கார்டை இன்னொருவர் கட்டை விரல் கொண்டு அழுத்தி வெளியில் எடுக்க முயன்றார். அது இன்னும் வலுவாகச் சிக்கிக்கொண்டுவிட்டது. ‘ச்சே’ என்றபடி மீண்டும் அழுத்த, பட்டென்று இரண்டாக உடைந்து ஒரு துண்டுமட்டும் அவர் கையில் வந்துவிட்டது.

சிம் கார்ட் உடைந்த விஷயம் அந்தப் பெண்ணுக்கு இன்னும் தெரிந்திருக்கவில்லை. அவர் முகத்தை மூடிக்கொண்டு அழுதபடி இருந்தார்.

கூட்டத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம், உடைந்து போன அந்த சிம் கார்டை இனி பயன்படுத்தமுடியுமா? எங்களில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

சிம் கார்ட் உடைந்த விவரம் தெரியாதபடி அந்தப் பெண்ணின் செல்ஃபோனைப் பொட்டலம் கட்டினார் ஒருவர். சார்ஜரையும் ஃபோனையும் அவர் கையிலேயே ஒப்படைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

அதன்பிறகு, கூட்டத்தில் யாரும் ஆலோசனை சொல்லவில்லை, புதிய விஷயங்களை முயன்று பார்க்கவில்லை, ‘பேப்பர்ல நம்பர்  எழுதி வெச்சுக்காம இந்தமாதிரி கிளம்பி வரக்கூடாதும்மா’ என்கிற விமர்சனம்மட்டும் திரும்பத் திரும்ப அந்தப் பெண்ணின்மீது ஏற்றப்பட்டது.

இப்போது, அந்தப் பெண் தன் கணவரைத் தொடர்புகொள்ள எந்தவிதமான வழியும் இல்லை. அவராகத் திரும்பி வந்து இவரை அழைத்துச் சென்றால்தான் உண்டு.

பெங்களூர் வரும் பேஸஞ்சர் ரயில்கள், இப்படி ஏழெட்டு சிறிய ரயில் நிலையங்களில் நிற்கக்கூடும். அவற்றில் எதில் இந்தப் பெண் இறங்கியிருக்கக்கூடும் என்று அவருடைய கணவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவருடைய செல்பேசியும் அணைந்திருப்பதால் அவர் இவரை அழைக்கமுடியாது.

அவர் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால், பிரதான ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் அடுத்த பேஸஞ்சரைப் பிடித்து எதிர்த் திசையில் ஒவ்வொரு ரயில் நிலையமாக இறங்கி, ஏறவேண்டும், அப்போது இவர்களை அவர் கண்டுபிடிக்கச் சாத்தியங்கள் அதிகம்.

முற்றிலும் விதிவழியே தள்ளப்பட்டுவிட்ட அந்தப் பெண்ணின் கதறலை நாங்கள் இயலாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். அவரைப் பார்த்துப் பரிதாபப்படுவது, அவருடைய கணவர் திரும்பி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்வது இவைதவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

இருட்டு மங்கும் நேரத்தில், என்னுடைய ரயில் மிகத் தாமதமாக வந்து சேர்ந்தது. அநேகமாக அங்கிருந்த எல்லோரும் அந்த ரயிலில் ஏறிக்கொண்டுவிட, பிளாட்ஃபாரத்தில் அந்தப் பெண்மணிமட்டும் தனியே, இன்னும் அழுதுகொண்டிருந்தார். அவரது குழந்தைகள் செய்வதறியாது அவரைச் சூழ்ந்து நின்றிருந்தார்கள்.

***

என். சொக்கன் …

13 05 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

கார்த்திகேயன் என்கிற அந்தச் சிறுவனை (அல்லது இளைஞனை) நான் இன்றுவரை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் என்னுடைய கல்லூரி நாள்களில் பல மணி நேரம் நான் அவனாக இருந்திருக்கிறேன்.

குழப்புகிறதா? ‘ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே’க்குப் போய் விளக்குகிறேன்.

பன்னிரண்டாம் வகுப்பை முடித்து நான் கல்லூரியில் சேர்ந்தபோது, அட்மிஷனுக்காக அப்பா என்னுடன் வந்தார். மறுநாள் தொடங்கி எனக்கு ஹாஸ்டல் வாசம் என்பதால், பெட்டி, படுக்கைகள் எல்லாம் மும்முரமாகக் கட்டப்பட்டன.

அன்று மாலை, அப்பா அலுவலகத்திலிருந்து திரும்பியபோது அவர் கையில் இரண்டு துண்டுச் சீட்டுகள். அவற்றை மேஜைமேல் கவனமாக வைத்துவிட்டு என்னை அழைத்தார்.

நான் அந்தச் சீட்டுகளை ஆவலுடன் பார்த்தேன், ‘இது என்னதுப்பா?’

‘பஸ் பாஸ்’ என்றார் அப்பா, ஒரு கைக்குழந்தையைத் தூக்கும் லாவகத்துடன் அந்தச் சீட்டுகளை வாஞ்சையுடன் எடுத்து என்னிடம் கொடுத்தார், ‘கசக்கிடாதே, ஜாக்கிரதையாப் பாரு.

அப்போது எனக்கு ‘பஸ் பாஸ்’ என்ற வார்த்தையின் அர்த்தமே புரிந்திருக்கவில்லை, அப்பாவைக் குழப்பத்துடன் பார்த்தேன்.

அவர் எனக்குப் பொறுமையாக விளக்கிச் சொன்னார், ‘நாளைக்கு நீயும் நானும் கோயம்பத்தூர் போறோம்ல? அதுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவேணாமா?’

’ஆமா, எடுக்கணும்’

‘இந்த பஸ் பாஸ் நம்ம கையில இருந்தா, நாம டிக்கெட் எடுக்கவேண்டியதில்லை, இலவசமாப் பயணம் செய்யலாம்’ என்றபோது அப்பா முகத்தில் அளவற்ற பெருமிதம். குத்துமதிப்பாக நூறு ரூபாயோ என்னவோ மிச்சப்படுத்திவிட்ட திருப்தி.

எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. நிஜமாகவே இந்தப் பாஸைக் காண்பித்தால் பஸ்ஸில் பயணச் சீட்டு வாங்கவேண்டியதில்லையா? அந்தக் காகிதம் எனக்கு ஒரு மந்திரத் தகடுபோல் தோன்றியது.

இதனால், முன்பைவிட அதிக ஆர்வத்துடன் அந்தச் சீட்டைக் கவனிக்கத் தொடங்கினேன். உச்சியில் அரசாங்கப் போக்குவரத்துக் கழக இலச்சினை. அதற்குக் கீழே சிவப்பு மையில் ’கருப்பசாமி’ என்று எழுதி அடிக்கோடிட்டிருந்தது.

கருப்பசாமியா? யார் அது?

அப்பாவிடம் கேட்டபோது அவர் சிரித்தார், ‘என் ஃப்ரெண்ட்தான், கவர்ன்மென்ட் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்ல கண்டக்டரா இருக்கார், அவர்தான் இந்த பாஸை நமக்கு வாங்கிக் கொடுத்தது’

அவசரமாக இன்னொரு சீட்டைப் பார்த்தேன். அதில் அதே சிவப்பு மை கொண்டு ‘கார்த்திகேயன்’ என்று எழுதியிருந்தது.

‘இந்தக் கார்த்திகேயனும் உங்க ஃப்ரெண்டாப்பா?’ அப்பாவியாகக் கேட்டேன்.

‘மக்கு’ என்று தலையில் குட்டினார் அவர், ‘ஒழுங்காப் படி’

அவர் காண்பித்த இடத்தில் தொடர்ந்து படித்தேன், ‘கார்த்திகேயன்’ என்கிற பெயருக்குக் கீழே, ‘வயது: 17’ என்று எழுதியிருந்தது.

‘கார்த்திகேயன் கருப்பசாமியோட பையன்’ என்று அறிவித்தார் அப்பா, ‘அதுதான் உன்னோட பாஸ், நாளைக்கு பஸ்ல வரும்போது யாராவது கேட்டா, என் பேர் கார்த்திகேயன்னு சொல்லணும், ஏதாச்சும் உளறிக்கொட்டி அசிங்கப்படுத்திடாதே?’

எது அசிங்கம்? திருட்டுப் பெயரில் பயணம் செய்வதா? அல்லது, உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்வதா?

அந்த வயதில் அப்பாவிடம் அப்படிக் கேட்கிற தைரியம் வந்திருக்கவில்லை. அவர் சொல்கிறார் என்றால் அது சரியாகதான் இருக்கும் என்று ஒரு குருட்டு நம்பிக்கை.

ஆகவே, நான் அந்தக் கார்த்திகேயன்பற்றி அப்பாவிடம் எதுவும் பேசவில்லை. அவர் கொடுத்த இரண்டு சீட்டுகளையும் அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

மறுநாள், அதிகாலையில் கிளம்பினோம். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து டிக்கெட் வாங்கும்வரை எனக்குப் படபடப்புதான், எந்த நேரத்தில் எதையாவது உளறி மாட்டிக்கொள்வேனோ என்று பயமாக இருந்தது. அதிகாலைக் குளிரையும் மீறி நான் பலமாக நடுங்கிக்கொண்டிருந்தேன்.

ஆனால், நான் பயந்ததுபோல் எதுவும் நடந்துவிடவில்லை. கண்டக்டர் அப்பாவின் பாஸை வாங்கிப் பார்த்தார், என்னையும் கவனித்தார், ‘உங்க பையனா?’ என்று கேட்டார், ‘இவன்தான் கார்த்திகேயனா?’ என்று விசாரிக்கவில்லை.

அப்பா முகத்தில் உணர்ச்சியே இல்லாமல் அமர்ந்திருந்தார். டிக்கெட்டுக்காக அவருடைய கை நீண்டிருந்தது.

’மத்தவங்களுக்கு டிக்கெட் போட்டுட்டு வர்றேன்’ என்றார் கண்டக்டர், எங்களுடைய இரண்டு பாஸ்களைக் குறுக்கே மடித்துத் தன்னுடைய அரைக் காகித அளவு டிக்கெட் புத்தகத்தின் மத்தியில் செருகிக்கொண்டார்.

அதைப் பார்த்த எனக்கு, பயம் அதிகமாகிவிட்டது. போச்சு, இந்த கண்டக்டர் நான் கார்த்திகேயன் இல்லை என்பதைக் கண்டுபிடித்துவிட்டார், பஸ் நேராக அடுத்த ஊர்க் காவல் நிலையத்துக்கு ஓடப்போகிறது, என்னைப் பிடித்து ஜெயிலில் போடப்போகிறார்கள்.

எனக்கிருந்த பதற்றத்தில் ஒரு துளிகூட அப்பாவுக்கு இல்லை. அவர் இதுபோல் ‘கருப்பசாமி’ பாஸில் நிறையப் பயணம் செய்திருப்பார்போல, கம்பீரமாகச் சாய்ந்து உட்கார்ந்து குமுதம் படித்துக்கொண்டிருந்தார்.

நான் பொய் சொல்லாத பையன் கிடையாது. அதுவரை அப்பாவிடமும் அம்மாவிடமும் அத்தையிடமும் எண்ணற்ற பொய்களைச் சொல்லி மாட்டிக்கொள்ளாமல் தப்பியிருக்கிறேன், மாட்டிக்கொண்டு அடி வாங்கியுமிருக்கிறேன்.

ஆனால் இந்தமுறை, அப்பாவுக்குத் தெரிந்து, அவருடைய வழிகாட்டுதலில் பொய் சொல்வது மிகவும் விநோதமான ஓர் அனுபவமாக இருந்தது. அப்பா செய்வது, நான் செய்வது தப்பில்லையா என்று தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருந்தது.

சுமார் அரை மணி நேரம் கழித்து, கண்டக்டர் எங்களிடம் வந்தார். இரண்டு டிக்கெட்களை அப்பா கையில் திணித்தார். நட்பாகப் புன்னகை செய்துவிட்டு மற்ற பயணிகளைக் கவனிக்கப் போய்விட்டார்.

’அவ்ளோதான், இதுக்குப்போய் பயந்தியே’ என்பதுபோல் அப்பா என்னைப் பார்த்தார், சிரித்தார். எனக்குச் சிரிப்பு வரவில்லை.

அந்தப் பேருந்து கோவை சென்று சேரும்வரை நான் பயந்துகொண்டுதான் இருந்தேன். பொய்ப் பெயரில் பாஸ் கொடுத்துவிட்டு இந்த அப்பாவால் எப்படி நிம்மதியாகக் கால் மேல் கால் போட்டு அமரமுடிகிறது?

ஒருவழியாக, நாங்கள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கினோம். அப்போதும், எந்தப் பதற்றமும் இல்லாமல் அப்பா நிதானமாக நடந்தார்.

நல்லவேளையாக, எங்கள் கல்லூரிக்குச் செல்கிற ’70ம் நம்பர்’ மருத மலை டவுன் பஸ்ஸில் ‘பாஸ்’ செல்லாது. ஆகவே, நாங்கள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணம் செய்தோம். ரொம்ப நிம்மதியாக உணர்ந்தேன்.

அப்புறம், அப்பா என்னைக் கல்லூரியில் சேர்த்தார், விடுதியில் சேர்த்தார், பக்கெட், மக், தட்டு, தம்ளர், இன்னபிற சமாசாரங்களையெல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு, என் அழுகைக்கு நடுவே கிளம்பினார்.

அப்பா கிளம்பிப்போய் ரொம்ப நேரமானபிறகு எனக்கு அந்தச் சந்தேகம் வந்தது. அவர் ஊருக்குத் திரும்பியது இன்னொரு கருப்பசாமி பாஸிலா? அல்லது, இந்தமுறை காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருப்பாரா?

சீக்கிரத்திலேயே, அந்தப் புதிருக்கான விடை தெரிந்தது.

நான் கல்லூரியில் சேர்ந்து இரண்டு வாரம் கழித்து, ஆகஸ்ட் 15 சுதந்தர தின விடுமுறை. ’ஊருக்கு வர்றேன்ப்பா, உங்களையெல்லாம் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு’ என்று அப்பாவிடம் கெஞ்சினேன்.

அவர் உடனடியாக ‘ஓகே’ சொன்னது எனக்கு ஆச்சர்யம். சாதாரணமாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பஸ் செலவு, பயண அலுப்பு, படிப்பு கெட்டுப்போதல் போன்ற காரணங்களைச் சொல்லி மறுப்பதுதான் அவருடைய வழக்கம். ஏனோ, இந்தமுறை சட்டென்று சம்மதித்துவிட்டார்.

இரண்டு நாள் கழித்து, அப்பாவிடமிருந்து எனக்கு ஒரு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தால், அதே ’பழைய கார்த்திகேயன்’ பஸ் பாஸ்!

அவ்வளவுதான். எனக்கு உடம்பெல்லாம் வெலவெலத்துவிட்டது. முன்பாவது, தப்புச் செய்து மாட்டிக்கொண்டால் காப்பாற்ற அப்பா இருந்தார், இப்போது தன்னந்தனியாக நான் இந்தப் பாஸை வைத்துக்கொண்டு பயணம் செய்யவேண்டும், நிச்சயமாக சிக்கிக்கொண்டுவிடுவேன் என்று எனக்கு உறுதியாகத் தோன்றியது.

ஆனால், அப்பாவிடம் மறுக்கமுடியாது. என்னுடைய பயம், அவருக்கு எப்போதும் புரியாது.

சரி, அப்பாவுக்குத் தெரியாமல் இந்தப் பாஸைக் கிழித்துப் போட்டுவிட்டுக் காசு கொடுத்துப் பயணம் செய்தால் என்ன?

செய்யலாம். ஆனால் இத்தனை பெரிய பொய்யை, குற்றத்தைக் கட்டமைப்பதில் எனக்கு அனுபவம் குறைவு. ஆகவே, வீட்டுக்குச் சென்றதும் கண்டிப்பாக அப்பாவிடம் மாட்டிக்கொள்வேன். தவிர, என்னிடம் அப்போது அவ்வளவு காசு இல்லை.

இதனால், வேறு வழியில்லாமல், அதே பஸ் பாஸில் பயணம் செய்தேன். என்னிடம் டிக்கெட் கேட்ட கண்டக்டரிடம், ’என் பெயர் கார்த்திகேயன்’ என்று வலியச் சொல்லி பஸ் பாஸைக் கொடுத்தேன்.

அவர் என் முகத்தைப் பார்க்கவில்லை, விசாரிக்கவில்லை, டிக்கெட் கொடுத்துவிட்டார். எனது இரண்டாவது ஊழலை வெற்றிகரமாக நிறைவேற்றியாகிவிட்டது.

அதோடு நிற்கவில்லை, மறுபடி ஊரிலிருந்து கிளம்பியபோதும் சரி, அதன்பிறகு ஒவ்வொருமுறை கல்லூரியிலிருந்து வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தபோதும் சரி, கார்த்திகேயன் பஸ் பாஸ் எங்கள் வீடு தேடி வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக, எனக்கு அந்த முகம் தெரியாத கார்த்திகேயன்மீது ஒரு நேசம் உருவாகிவிட்டது? அவன் யார், எப்படி இருப்பான், வெள்ளையா, கறுப்பா, உயரமா, குள்ளமா, நன்றாகப் படிப்பானா, முட்டாளா, இப்போது கல்லூரியில் படிக்கிறானா, அல்லது படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகிறானா என்று விதவிதமான கேள்விகள், கற்பனைகள்.

என்னுடைய கல்லூரி நண்பர்கள் யாருக்கும் இந்தக் கார்த்திகேயன் விஷயத்தைப்பற்றித் தெரியாது. அவர்களிடம் சொன்னால், என்னைக் காட்டிக்கொடுத்துவிடுவார்களோ என்று பயம்.

இதனால், நான் கல்லூரிக் காலம்முழுக்கத் தனியாகதான் பயணம் செய்யவேண்டியிருந்தது. ஒரு முறைகூட, எங்கள் ஊர், அல்லது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிநேகிதர்களுடன் நான் பஸ்ஸில் சென்றது கிடையாது.

கார்த்திகேயன் விஷயத்தில் ஆரம்பத்தில் எனக்கு இருந்த பயம், கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிட்டது. பஸ்ஸில் உட்கார்ந்திருக்கிற நேரம்மட்டும் என் பெயர் கார்த்திகேயன் என்பதாக என் மூளையே நம்பத் தொடங்கிவிட்டது. இந்தத் தவறில் நாம் மாட்டிக்கொள்ள வாய்ப்பே இல்லை, சுலபமாகத் தப்பித்துவிடலாம் (I can easily get away with it) என்று தோன்றிவிட்டது.

அதேசமயம், அடுத்தவருடைய பஸ் பாஸைப் பொய்ப் பெயரில் பயன்படுத்துவதுபற்றிய பயம் விலகினாலும், அதன் உறுத்தல் இன்னும் மிச்சமிருந்தது. அரசாங்கத்தை ஏமாற்றுகிறோம், யாருக்கோ கிடைக்கவேண்டிய சலுகைகளை நாம் பயன்படுத்திக்கொள்கிறோம் என்று நினைக்கையில் கூனிக் குறுகினேன்.

இதனால், இரண்டாம் வருடம் தாண்டியபிறகு நான் ஊருக்குச் செல்லும் தருணங்கள் குறையத் தொடங்கின. தவிர்க்க இயலாத சந்தர்ப்பம் நேர்ந்தால் ஒழிய, பல வார இறுதி விடுமுறைகளை விடுதி அறையில்தான் கழித்தேன்.

நான் கல்லூரியில் படித்த நான்கு வருடங்களில், அநேகமாக இருபது அல்லது இருபத்தைந்து முறை கார்த்திகேயனின் பஸ் பாஸைப் பயன்படுத்தியிருப்பேன் என்று நினைக்கிறேன். இதன்மூலம் நான் செய்த ஊழல் சுமார் 2500 ரூபாய் இருக்கலாம்.

அப்போது நான் இதை எதிர்க்க நினைத்திருந்தாலும், என்னுடைய வளர்ப்புமுறை அதனை அனுமதித்திருக்காது. அப்பா எது சொன்னாலும் தலையாட்டிப் பழகிவிட்டதால், ‘அதிகப் பிரசங்கி’ பட்டத்துக்குப் பயந்து, இந்த ஊழலையும் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகிவிட்டது.

’கார்த்திகேயன்’ பஸ் பாஸ்மூலம் நான் ஏமாற்றிய இந்தப் பணத்தை எப்படியாவது அரசாங்கத்துக்குத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு நான் Impractical இல்லை. ஆனால் இந்தச் சம்பவம் எனக்குள் ஏற்படுத்திய குற்றவுணர்ச்சி, என்னை முற்றிலும் வேறோர் ஒழுங்குத் தளத்தில் (180 Degrees Opposite) இயங்குமாறு தூண்டியது.

உதாரணமாக, சிக்னலில் சிவப்பு விளக்கைத் தாண்டி ஓடவேண்டும் என்று எனக்கு எப்போதும் தோன்றியது கிடையாது, என் ஐந்து வயது மகளுடன் பேருந்தில் செல்லும்போது, கண்டக்டர் அவளுக்கு டிக்கெட் வேண்டாம் என்று சொன்னாலும் வற்புறுத்தி டிக்கெட் வாங்குகிறேன். எங்காவது வரிசையில் காத்திருக்கும்போது, வாய்ப்புக் கிடைத்தாலும் முந்திச் சென்று ஏமாற்றவேண்டும் என்று தோன்றுவதில்லை,  என் மனைவியோ, மகளோ அப்படிச் செய்தால், ‘அது தவறு’ என்று அழுத்தமாகச் சொல்லிக் கண்டிக்கிறேன். கடைச் சிப்பந்திகள் தவறிப்போய் எனக்கு அதிகப் பணம் – ஐந்து ரூபாயோ, ஐம்பது ரூபாயோ கூடுதலாகக் கொடுத்துவிட்டால், அவர்களை வலியத் தேடிச் சென்று அதனைத் திருப்பிக் கொடுக்கிறேன், அவர்கள் எனக்குச் சாதகமாக வரும்படி கணக்குப் போட்டுவிட்டால், உடனடியாகத் திருத்துகிறேன். அதன்மூலம் எனக்கு ஏற்படக்கூடிய இழப்பை நஷ்டமாகக் கருதுவது இல்லை.

இந்த ‘அல்ப’ சமாசாரங்களையெல்லாம் நான் பெரிய சாதனைகளாகச் சொல்லவரவில்லை. ஆனால், தினசரி வாழ்க்கையில் ஊழல் செய்யக் கிடைக்கும் அபூர்வத் தருணங்களை, அவை எவ்வளவு சிறியவையாக / பெரியவையாக இருந்தாலும் சரி,  மறுசிந்தனை இல்லாமல் நிராகரிப்பதற்கான பயிற்சியை எனக்குக் கொடுத்தது அந்த முகம் தெரியாத கார்த்திகேயன்தான்.

கருப்பசாமியும் அவர் மகன் கார்த்திகேயனும் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என் அப்பாவுக்குக்கூட அது தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அப்போதைக்கு அவர்களை இலவசப் பயணத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் அவரும் அவர்களை சுத்தமாக மறந்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது. அந்தக் கார்த்திகேயனுக்குக்கூட, இப்படி அவனுடைய பெயரைப் பயன்படுத்தி இன்னொருவன் பலமுறை திருட்டுப் பயணம் செய்திருக்கிறான் என்பது தெரிந்திருக்க நியாயம் இல்லை.

ஆனால், நாம் பயணம் செய்கிற ரயிலில் திடீரென்று ஏறி, ஒரு நல்ல பொருளை நம்மிடம் விற்றுவிட்டுச் சட்டென்று அடுத்த பெட்டிக்குத் தாவி மறைந்துவிடுகிற ஒரு வியாபாரியைப்போல, முகம் தெரியாத அந்தக் கார்த்திகேயனை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது.

***

என். சொக்கன் …

08 05 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் (அல்லது, சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!)

இன்றைக்கு ஒரு புதுப் படப் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். மென்மையான மெட்டு, நல்ல வரிகள், இடையில் கல் மாட்டியதுபோல, ‘மௌண மொளி’ என்றார் பாடகர். அதற்குமேல் அந்தப் பாட்டைக் கேட்கப் பிடிக்கவில்லை.

இத்தனைக்கும் அந்தப் பாட்டை எழுதிய கவிஞர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர், கவிதைகளிலும் திரைப் பாடல்களிலும் மிக நன்றாக எழுதக்கூடியவர். ஆனால் ‘மௌன மொழி’ என்று பாடகரைத் திருத்தி, மீண்டும் அந்த வரியைப் பதிவு செய்யச் சொல்ல அவருக்குத் தோன்றவில்லை, அல்லது அதிகாரம் இல்லை, அல்லது அலட்சியம்.

’இதையெல்லாம் ஒரு பாடலாசிரியர் செய்துகொண்டிருக்கமுடியுமா?’ என்று கேட்காதீர்கள். எழுத்தின்மீது அக்கறை கொண்டவர்கள், தங்கள் படைப்பின்மீது மரியாதை கொண்டவர்கள் செய்வார்கள், செய்யதான் வேண்டும்.

வைரமுத்து தன்னுடைய ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ புத்தகத்தில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

அவர் எழுதிய ‘ஈரமான ரோஜாவே’ பாடல் பதிவாகிக்கொண்டிருக்கிறது. பாடுபவர் கே. ஜே. யேசுதாஸ்.

வைரமுத்துவுடன் ஒப்பிடுகையில் யேசுதாஸ் ரொம்ப சீனியர். எத்தனையோ தமிழ்ப் பாட்டுகளை ஊதித் தள்ளியிருக்கிறார். ஆனால் அப்போது அவருக்கு(ம்) ல, ள, ழ வித்தியாசம் கொஞ்சம் தகராறுதான்.

’ஈரமான ரோஜாவே’ பாட்டில் ஒரு வரி, ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’ என்று வரும். அந்த வரியை யேசுதாஸ் ‘தண்ணீரில் மூள்காது’ என்று பாடினாராம்.

உடனே, வைரமுத்து திருத்தியிருக்கிறார், ‘மூள்காது இல்லை, மூழ்காது’

யேசுதாஸ் பக்கா Professional. கவிஞர் சொன்னபடி திருத்திப் பாடினார்.

ஆனால் இப்போதும் ‘மூழ்காது’ வரவில்லை, ‘மூள்காது’வுக்கும் ‘மூழ்காது’வுக்கும் இடையே ஏதோ ஒரு சத்தம்தான் வருகிறது.

வைரமுத்து சும்மா இருந்திருக்கலாம், ‘சீனியர் பாடகர், தேன் போலக் குரல், அதில் பிழைகள் தெரியாது, போகட்டும்’ என்று விட்டிருக்கலாம். ஆனால் அவரோ, விடாமல் திருத்துகிறார், ‘மூழ்காது-ன்னு அழுத்திப் பாடுங்க’

யேசுதாஸ் ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றுமுறை திருத்திப் பாடிப் பார்த்தார். முடியவில்லை. கடைசியில் அவருக்குக் கோபம், ‘நான் சாகும்வரை திருத்துவீங்களா?’ என்று வைரமுத்துமேல் எரிந்து விழுந்தாராம்.

அதற்கு வைரமுத்து சொன்ன பதில், ‘தமிழ் சாகாதவரை திருத்துவேன்’

வைரமுத்துவின் பெரும்பாலான ‘சுயசரிதை’க் குறிப்புகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ இந்தச் சம்பவம் அச்சு அசல் அப்படியே நடந்திருக்காவிட்டாலும், ஓரளவு உண்மையாகதான் இருக்கும் என்று தோன்றுகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில், வைரமுத்துவேகூட தனது பாடல் வரிகள் சிதைக்கப்படுவதைக் கண்டுகொள்வதில்லை. மற்ற (இளைய தலைமுறை)ப் பாடலாசிரியர்கள் இன்னும் மோசம். எதையோ எழுதிக் கொடுத்துவிட்டோம், பாடுகிறவர்கள் அவர்கள் விருப்பம்போல் பாடிக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்போல.

இதை இன்னொரு கோணத்திலிருந்து யோசித்தால், இன்றைய சினிமாவில் பாடுகிறவர்கள், இசையமைப்பவர்கள் எல்லோரும் இளைஞர்கள். அவர்கள் தலைமுறைக்கு ‘நல்ல தமிழ்’ முழுமையாக அறிமுகமாகவில்லை.

இதனால், ஒருவேளை பாடகர் தப்பாகப் பாடினாலும்கூட இதுதான் சரி என்று கண்டுபிடித்துத் திருத்துவதற்கு யாரும் இல்லை. இதற்காகப் பாடலாசிரியர்கள் ஒவ்வொரு பாடல் பதிவுக்கும் வந்து போய்க்கொண்டிருக்கமுடியுமா?

எதார்த்தமான, ஆனால் படு அபத்தமான வாதம் இது.

திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கேமெரா கோணம், வெளிச்சம், நடிகர்கள் அணியும் உடைகள், அரங்கப் பொருள்கள், மற்றவை எப்படி அமையவேண்டும் என்று எந்த அளவு மெனக்கெடுகிறார்கள். அதில் ஏதாவது ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் கண்டுபிடித்து உடனடியாகத் திருத்துவதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள்தானே?

காட்சிகளுக்கு இப்படி மெனக்கெடுகிறவர்கள், பாடல் வரிகள்மட்டும் எப்படிப் போனாலும் பரவாயில்லை என்று நினைப்பது என்ன நியாயம்? அவற்றில் நிகழ்கிற தவறுகளுக்குப் பாடலாசிரியர் பொறுப்பு என்று இசையமைப்பாளர் நினைக்கிறார், இவர்தான் பொறுப்பு என்று அவர் நினைக்கிறார், கடைசியில் கெட்டுப்போவது யாருடைய படைப்பு? தன் பெயரில் பிசிறில்லாத படைப்புகள்மட்டுமே வரவேண்டும் என்று நினைக்கும் பெருமிதம் எங்கே போயிற்று?

திரைப்படம் என்பது மிகப் பெரிய Team Work. அதில் எத்தனையோ பேர் சேர்ந்து உழைக்கிறார்கள். பாடல் பதிவு நடக்கிற ஏழெட்டு நாள்மட்டும் ஒரு தமிழாசிரியரையோ, அல்லது ஒழுங்காகத் தமிழ் வாசிக்க, எழுதத் தெரிந்த ஒருவரையோ நியமித்தால் என்ன? அப்படி என்ன அவர்கள் லட்சமும் கோடியுமா சம்பளமாகக் கேட்டுவிடப்போகிறார்கள்?

சென்ற வருடம், ‘மயிலு’ என்ற திரைப்படத்தின் பாடல் பதிவைக் கலைஞர் தொலைக்காட்சியில் காட்டினார்கள். கார்த்திக், திப்பு, இன்னும் சிலர் சேர்ந்து ஒரு கிராமியப் பாட்டைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பாடுவதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த இசையமைப்பாளர் இளையராஜா, திடீரென்று ஒலிப்பதிவை நிறுத்திவிட்டார், ‘நீங்க பாடினதில ஒரு சின்னத் திருத்தம், பயிரு இல்லைப்பா, பயறு’ என்றார்.

‘பயிர்’ என்றால், வயலில் விளைவது – நெற்பயிர், கோதுமைப் பயிர். இப்படி.

ஆனால், ‘பயறு’ என்பது பருப்பு வகையைக் குறிக்கிறது – ‘தட்டைப் பயறு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அந்தப் பாட்டில் வருவது ‘பயறு’தான், ‘பயிரு’ அல்ல. இந்த நுணுக்கமான வித்தியாசம், கிராமத்தையே பார்த்திருக்காத இளம் பாடகர்களுக்குப் புரிந்திருக்கும் என எதிர்பார்ப்பது தவறுதான்!

ஒருவேளை ‘பயறு’வை அவர்கள் ‘பயிரு’ என்று மாற்றிப் பாடிவிட்டால்கூட, என்ன பெரிதாகக் குடி முழுகிவிடும்? இதையெல்லாம் யார் கவனிக்கப்போகிறார்கள்? ‘பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்’ என்கிற வரியைக்கூட ஏற்றுக்கொண்டு ‘ஹிட்’டாக்கிய தமிழகம் இல்லையா இது?

ஆனால், கவிஞர்கூடப் பக்கத்தில் இல்லாத நேரத்தில், ஒலிப்பதிவை நிறுத்தி அந்த ஒற்றை வார்த்தையைத் திருத்தவேண்டும் என்று அந்த இசையமைப்பாளருக்குத் தோன்றியதே. ஏன்?

இந்த ஒரே காரணத்துக்காக, இளையராஜாமீது ஆயிரம் குறை சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். ‘அவர் நினைக்கிறது அப்படியே வரணும்ன்னு எதிர்பார்ப்பார். சர்வாதிகாரி’ என்றுதான் அவரைப்பற்றிய பிம்பம் பதிவாகியிருக்கிறது.

ஆனால், எல்லாம் ஒழுங்காக வரவேண்டும் என்று நினைப்பது சர்வாதிகாரம் இல்லை. கலைமீது இருக்கும் அக்கறை, தன்னுடைய படைப்பின்மீது இருக்கும் முனைப்பு. அது இல்லாமல் அலட்சியம் செய்தால் நமக்கு ‘மௌண மொளி’கள்தான் பரிசாகக் கிடைக்கும்.

முக்கியமான பின்குறிப்பு: ‘மௌண மொளி’ப் பாடலின் இசையமைப்பாளர், அதே இளையராஜாவின் சொந்த மகன்தான். அப்பாவிடம் இதைமட்டும் அவர் கற்றுக்கொள்ளவில்லைபோல!

***

என். சொக்கன் …

14 04 2009

நேற்று வழக்கமான மாலை நடை நேரம். காதில் ஓர் ஆடியோ புத்தகத்தை மாட்டிக்கொண்டு தினசரிப் பாதையில் போய்க்கொண்டிருந்தபோது யாரோ என்னைக் கை தட்டிக் கூப்பிட்டார்கள்.

பெங்களூரில் பொதுவாக யாரும் யாரையும் கை தட்டி அழைக்கிற பழக்கம் இல்லை. ஆகவே கொஞ்சம் ஆச்சர்யத்துடன்தான் திரும்பிப் பார்த்தேன்.

இன்னொரு ஆச்சர்யமான விஷயம், நாராசமான போக்குவரத்து ஒலியைத் தடுப்பதற்காகவே காதுகளில் சத்தமாக எம்பி3 திரை போட்டுக்கொள்வது என்னுடைய வழக்கம். அதையும் மீறி இவர் என்னுடைய கவனத்தைக் கவர்ந்துவிட்டார் என்றால், அவரது கை தட்டல் எத்தனை பலமாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்.

நாம் திரும்பிப் பார்த்ததும் அவர் வாயெல்லாம் பல், ‘என்ன சார், சௌக்யமா?’ என்றார் மிகுந்த அக்கறையுடன்.

நானும் ear-phoneகளைக் கழற்றிவிட்டு அவரை நலம் விசாரித்தேன், ‘என்னங்க? எதுனா புது புஸ்தகம் வந்திருக்கா?’

அவர் வழக்கம்போல், ‘தெரியலை சார்’ என்றார், ‘நீங்களே உள்ள வந்து பாருங்களேன்’

அந்தக் கடை மிகச் சிறியது. அலுவலகத்தில் நான் அமர்ந்திருக்கும் மேஜைகூட இதைவிடச் சற்றே பெரியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்தச் சிறிய இடத்துக்குள் எப்படியோ நுணுக்கி நுணுக்கி ஏகப்பட்ட செய்தித் தாள்கள், புத்தகக் கட்டுகளை அடுக்கிவைத்திருந்தார் அவர். ஆங்காங்கே பழைய சாக்குப் பைகள், காலி பாட்டில்கள், சப்பையாக நசுங்கிய அட்டைப் பெட்டி(?)கள், ஓரமாக எடை போடும் இயந்திரம் ஒன்று.

இதுமாதிரி கடைகளை நீங்களும் நிறையப் பார்த்திருப்பீர்கள். பழைய பேப்பர், புத்தகங்களை எடைக்கு எடுத்துக்கொண்டு கிலோவுக்கு ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ கொடுப்பார்கள். சாக்குப் பை, தராசுடன் வீடு வீடாக வருகிற ‘மொபைல்’ வியாபாரமும் இதில் உண்டு.

இப்படி நாம் எடைக்குப் போடும் ‘பழையது’கள் அதன்பிறகு என்ன ஆகிறது என்று எனக்கு இதுவரை தெரியாது. மறுசுழற்சி செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உறுதியாகச் சொல்வதற்கில்லை.

அது சரி. இந்தப் பழைய பேப்பர் கடைக்காரர் எனக்கு எப்படிச் சிநேகிதமானார்? அது ஒரு சுவாரஸ்யமான கதை!

நாங்கள் வழக்கமாக காபிப்பொடி வாங்குகிற இடத்துக்குப் பக்கத்தில்தான் இவருடைய கடை. அந்தச் சிறிய பொந்துக்குள் காகிதக் கட்டுகளுக்குமேல் எப்படியோ காலை மடக்கி அமர்ந்திருப்பார். சில சமயங்களில் அவருடைய மனைவி, மகனும் உள்ளே இருப்பார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் எப்படி உள்ளே போனார்கள், எப்படி வெளியே வருவார்கள் என்று யோசிப்பதற்கே அதிசயமாக இருக்கும்.

அப்போதும், அவர் எனக்கு ஒரு வேடிக்கைக் காட்சியாகதான் தோன்றினாரேதவிர, அவர் கடைக்குள் சென்று பார்க்கவேண்டும் என்று நினைத்தது கிடையாது. பழைய பேப்பர் கடைக்குள் எனக்கு என்ன வேலை?

பின்னர் ஒருநாள், எதேச்சையாக அவர் கடையைக் கவனித்தபோது பேப்பர் கட்டுகளுக்கு நடுவே பிதுங்கிக்கொண்டிருந்த ஒரு காமிக்ஸ் புத்தகம் என் கண்ணில் பட்டது. சட்டென்று கடைக்குள் பாய்ந்துவிட்டேன்.

நான் ஒரு காமிக்ஸ் பைத்தியம். Archies, Dilbert, Garfield மூன்றும் உயிர். அடுத்த நிலையில் Peanuts, Calvin & Hobbs மற்றும் MAD.

ஏனோ, Super-man, He-man, Hulk ரக ஆக்‌ஷன் காமிக்குகள் எனக்குப் பிடிக்காது. மற்றபடி லேசாக நகைச்சுவை தூவின பொம்மைக் கதைகள் எதுவானாலும் விரும்பிப் படிப்பேன்.

அன்றைக்கு நான் அங்கே பார்த்த காமிக்ஸ் புத்தகம் எது என்று இப்போது நினைவில்லை. ஆனால் அந்தப் பழைய பேப்பர் கடையில் நான் அதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதுமட்டும் உண்மை.

அடுத்த நிமிடம், அதைவிடப் பெரிய ஆச்சர்யம் ஒன்று காத்திருந்தது.

நான் எடுத்த காமிக்ஸ் புத்தகத்தை அந்தக் கடைக்காரரிடம் காண்பித்து, ‘இது என்ன விலை?’ என்று கேட்டேன்.

அவர் என்னை விநோதமாகப் பார்த்துவிட்டு, ‘நீங்களே ஏதாவது கொடுங்க சார்’ என்றார்.

வழக்கமாக இதுபோல் சொல்கிறவர்கள்மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் எவ்வளவு கொடுத்தாலும் ‘போதாது’ என்பதுபோல் முறைப்பார்கள். அதற்குப் பதிலாக அவர்களே ஒரு விலை சொல்லிவிட்டால் நல்லது என்பது என் கட்சி.

ஆகவே, நான் தொடர்ந்து வற்புறுத்தினேன், ‘பரவாயில்லை, சொல்லுங்க’

அவர் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு ரொம்ப யோசித்தார். பிறகு அவருக்கே நம்பிக்கையில்லாததுபோல் கைகளைக் கட்டிக்கொண்டு, ‘ரெண்டு ரூபா?’ என்றார்.

முதலில் என் காதில் ஏதோ கோளாறு என்றுதான் நினைத்தேன். பின்னே? பெங்களூரில் இரண்டு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்?

சாதாரணமாக ஒரு காமிக் புத்தகம் அதன் அளவைப் பொறுத்து பத்து ரூபாயிலிருந்து இருநூறு, முன்னூறு ரூபாய்வரை செல்லும். பழைய புத்தகக் கடையில் வாங்கினால் அதன் விலை ஐம்பது சதவிகிதம்வரை குறையலாம்.

ஆகவே, அவர் சொன்ன ‘இரண்டு ரூபாய்’ விலையை என்னால் நம்பவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

ஆனால் அவர், என்னுடைய திகைப்பைத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார், ’இந்தப் புத்தகத்துக்கு இரண்டு ரூபாய் ஜாஸ்தி’ என்று நான் நினைப்பதாக அவர் எண்ணிவிட்டார். கொஞ்சம் அதட்டினால், ‘எட்டணா கொடுங்க சார் போதும்’ என்று சொல்லியிருப்பார்போல.

ஒருவழியாக நான் சுதாரித்துக்கொண்டு அவருக்கு இரண்டு ரூபாய் கொடுத்தேன். முடிந்தவரை குரலைச் சாதாரணமாக வைத்துக்கொண்டு, ‘வேற எதுனா காமிக்ஸ் இருக்கா?’ என்றேன்.

’எனக்குத் தெரியாது சார், நீங்களே பார்த்துக்கோங்க’ என்று அவர் கடையிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

நானும் மிக ஆவலுடன் கடைக்குள் புகுந்து தேடினேன். இரண்டு ரூபாய்க்கு காமிக்ஸ் புத்தகம் என்றால் சும்மாவா?

அந்தக் கடைமுழுக்க வுமன்ஸ் எராவும் இந்தியா டுடேயும்தான் நிறைந்து கிடந்தது. ஆங்காங்கே குமுதம், கல்கி, மங்கையர் மலர், ஒன்றிரண்டு கன்னட இதழ்கள், விமானத்தில் பயணிகளுக்குப் படிக்கத் தரும் Inflight Magazines, தாஜ் குழுமத் தங்குமிடங்களில் விருந்தினர்களுக்குத் தரப்படும் கலாசார இதழெல்லாம்கூடக் கிடைத்தது.

ஆனால், எதுவும் புதிது இல்லை. அரதப் பழசு. அவற்றுக்கு நடுவே என்னுடைய தூசு அலர்ஜியைப் போறுத்துக்கொண்டு ஏதேனும் உருப்படியாகத் தென்படுகிறதா என்று வலை வீசவேண்டியிருந்தது.

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடத் தேடலுக்குப்பிறகு எனக்கு மூன்று காமிக்ஸ் புத்தகங்கள், ஒரு நாவல், இரண்டு குழந்தைக் கதைகள் கிடைத்தன. எல்லாவற்றுக்கும் சேர்த்து அவர் பத்து ரூபாய்மட்டும் வாங்கிக்கொண்டார்.

எனக்கு அவரை ஏமாற்றுகிறோமோ என்று ஒரு குற்ற உணர்ச்சி. கவலையுடன் என் மனைவியிடம் வந்து விஷயத்தைச் சொன்னேன்.

இதுமாதிரி சமாசாரங்களில் அவர் ரொம்பக் கில்லாடி. என் கையிலிருந்த புத்தகங்களை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, ‘இதெல்லாம் சேர்த்தாலும் கால் கிலோ தேறாது’ என்றார்.

‘பழைய புத்தகம் கிலோ அஞ்சு ரூபான்னு வெச்சாலும்கூட, அவருக்கு இது ஒண்ணே கால் ரூபாய்க்குக் கிடைச்சிருக்கும், நீ 12 ரூபாய் கொடுத்திருக்கே, அதுவே ஜாஸ்தி’

என் மனைவியின் லாஜிக் சுத்தமானதுதான். அந்தக் கடைக்காரரைப் பொறுத்தவரை இவை புத்தகங்களே அல்ல, வீசி எறியப்பட்ட காகிதக் குப்பைகள். அவ்வளவுதான். அதற்கு இந்த விலையே அதிகம்.

ஆனால் எனக்கு அவற்றின் நிஜமான மதிப்பு தெரியுமல்லவா? கல்லூரியில் ‘Value Engineering’ பாடமெல்லாம் படித்து மறந்திருக்கிறேனே!

இந்த ஏழு புத்தகங்களை நான் வேறொரு ‘நிஜமான’ பழைய புத்தகக் கடையில் வாங்கியிருந்தால் குறைந்தபட்சம் நூற்றைம்பது ரூபாய் செலவழிக்க வேண்டியிருந்திருக்கும். அந்தக் கணக்கில் யோசித்தால், நான் செய்தது மிகப் பெரிய தவறு என்று எனக்கே புரிந்தது.

ஆனால், சரி, தவறு பார்த்தா வாழ்க்கையில் எல்லாம் நடக்கிறது? அதன்பிறகு அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவர் என்னைப் பார்த்துப் பல் இளிப்பதும், நான் அவருடைய கடையை ரெய்ட் செய்து சில புத்தகங்களை அடிமாட்டு விலைக்கு அள்ளிவருவதும் தொடர்ந்தது.

ஒவ்வொருமுறையும் நான் தேர்ந்தெடுக்கும் புத்தகங்களுக்கு அவர் நம்பமுடியாத விலைதான் நிர்ணயித்தார். அதிகபட்சம் ஒரு புத்தகத்துக்கு ஒன்றரையிலிருந்து இரண்டரை ரூபாய். அதற்குமேல் மறந்தும் கேட்கமாட்டார்.

இதனால், ஒவ்வொருமுறையும் நான் அவருக்கு அதிகபட்சம் ஐந்து அல்லது பத்து ரூபாய்தான் தரவேண்டியிருக்கும். அதை வாங்கிக்கொள்கிறபோது அவர் முகத்தில் மலர்கிற சிரிப்பைப் பார்க்கவேண்டும் – பத்து ரூபாய்க்கு ஒரு மனிதன் இவ்வளவு சந்தோஷப்படமுடியுமா என்கிற ரகசியம் எனக்கு இதுவரை புரியவில்லை.

அதேசமயம், அவருடைய அறியாமையை நான் எனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறேன் என்கிற உறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது. அதனால்தானோ என்னவோ, கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய கடைப் பக்கம் போவதைக் குறைத்துக்கொண்டுவிட்டேன்.

இத்தனைக்கும், தினசரி அதே பாதையில்தான் நடந்து செல்கிறேன். நேற்று அவர் என்னைக் கவனித்துக் கை தட்டி அழைக்கும்வரை, அவரையோ அவரது கடையையோ எனக்குச் சுத்தமாக நினைவில்லாமல் போய்விட்டது.

சில நண்பர்களை ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கும்போதும், அந்த இடைவெளி தெரியாது. சென்றமுறை விட்ட அதே இடத்திலிருந்து பேச்சைத் தொடரமுடியும்.

அதுபோல, நேற்றைக்கும் நான் பழைய உற்சாகத்துடன் அவருடைய காகிதக் கட்டுகளுக்குள் புகுந்து புறப்பட்டேன். சில நாவல்கள், நான்கு காமிக்ஸ் புத்தகங்கள் கிடைத்தன.

இந்தமுறை, நான் அவரிடம் விலை கேட்கவில்லை. வழக்கமாக அவர் ஒரு புத்தகத்துக்கு எவ்வளவு தொகை நிர்ணயிப்பார் என்பது எனக்குத் தெரியும். குத்துமதிப்பாக அதைப்போல் இரண்டு மடங்கு கணக்கிட்டு நானே கொடுத்துவிட்டேன். ஏதோ, Inflation காலத்தில் அவருக்கு என்னால் முடிந்த உதவி, என் குற்றவுணர்ச்சிக்கும் கொஞ்சம் மருந்து.

அவர் எப்போதும்போல் முகம் மலர்ந்து சிரித்தார். ‘அடிக்கடி வந்து போங்க சார்’ என்றார்.

கண்டிப்பாக வருவேன். தினமும் இந்த வழியாகதானே நடக்கப்போகிறேன்?

***

என். சொக்கன் …

31 03 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

‘பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

கடைசியாக அந்தக் குரலைக் கேட்டு எட்டு வருடங்கள் கடந்துவிட்டது. ஆனாலும், அதை இப்போது நினைத்தால்கூட உள்ளுக்குள் ஏதோ சிலிர்க்கிறது.

எப்போதும் இப்படிதான். அந்த வயதுப் பையன்களின் உடையாத குழந்தைக் குரல்களைக் கேட்கிறபோதெல்லாம் எனக்கு என்னவோ ஆகிவிடுகிறது. சில விநாடிகளுக்கு எதுவும் செய்ய முடியாதவனாகிப் போகிறேன். ஏதோ இனம் புரியாத சோகம், அதற்குக் காரணம் என்னவென்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

இப்படிதான் ஹைதராபாத் சென்ற புதிதில் ஒருநாள். ஏழெட்டு நண்பர்களுடன் ஹோட்டலில் கும்பலாகப் போய் உட்கார்ந்து ஜாலியாகப் பேசியபடி ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தோம்.

சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லுக்குக் காத்திருந்தபோது, அதுவரை எங்களுக்கு சப்ளை செய்த சின்னப் பையன் நேராக என்னிடம் வந்து தெலுங்கில், ‘இன்னும் எதுனா வேணுமா சார்?’ என்பதுபோல் ஏதோ கேட்டான். அதுவரை இல்லாத குற்றவுணர்ச்சி, அந்தப்  பையனின் கீச்சுக் குரலைக் கேட்டவுடன் வந்து சேர்ந்தது. இத்தனை நேரமாக, அதைக் கொண்டு வா, இதைக் கொண்டு வா என்று அந்தச் சிறுவனை விரட்டியது உறுத்தியது.

அங்கு என்றில்லை. எல்லாக் குழந்தைக் குரல்களும் என்னை உலுக்கிப்போட்டுவிடுகிறது. இந்தச் சின்ன வயதில் அவர்கள் வேலை பார்க்க நேர்கிற நிலைக்கு, மறைமுகமாக நானும் ஒரு காரணமோ என்று குற்றவுணர்ச்சியாக இருக்கிறது.

அதே நேரத்தில், எழுதுகிற புத்தி சும்மா இருப்பதில்லை. அவனை(ளை) ஆழ்ந்து கவனிக்கிற ஆசை வருகிறது. ஆனால் என்னதான் கவனித்து எழுதினாலும் நம்மால் ஒரு ரோமத்தையும் பிடுங்கிவிடமுடியாது என்று புரிகிறபோது வருத்தம் அதிகரிக்கிறது.

என்னால் முடிந்தது, அந்தச் சிறுவன் அல்லது சிறுமியின் நலனுக்காக ஒரு மௌனப் பிரார்த்தனை. அது போதும், அதன்பிறகு அடுத்த கீச்சுக் குரலைக் கேட்கிறவரை சேணம் கட்டிய குதிரைபோல் உலக சந்தோஷங்களைத் துளி உறுத்தல் இன்றி அனுபவிக்கலாம்.

‘பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

அந்தக் குரல் மறுபடியும் கேட்கிறது. நினைவுகளுக்குள் திரும்பித் தேடுகிறேன்.

ஹைதராபாத். சாலையோர மஞ்சள் நிற விளக்குகளில் நனைந்தபடி எங்கேயும் ஜனக் கூட்டம். தரையில் விரித்து ஆரஞ்சுப் பழங்கள் விற்றுக்கொண்டிருந்த காவிப்பல் பெண்ணில் தொடங்கி, ஏஸி ஷோ ரூம்கள்வரை எங்கேயும் மக்கள் நின்றிருக்க, இந்தக் குழந்தைக் குரலை எங்கே தேடமுடியும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், அந்தக் குரல் மீண்டும் சத்தமாக ஒலித்தது.

’பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

எனக்குப் பத்தடி பின்னால் நின்றிருந்த தீப்பெட்டி பஸ்ஸிலிருந்துதான் அந்தச் சத்தம் வந்துகொண்டிருந்தது. கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்துடன் நேராக அந்த பஸ்ஸை நோக்கி நடக்கிறேன்.

அதே நேரத்தில், மனத்துக்குள் என்னுடைய இன்னொரு உருவம் என்னைவிடப் பெரியதாக எழுந்து நின்று பிடிவாதமாகக் கையசைக்கிறது, ‘ஏய், உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அந்தத் தீப்பெட்டி பஸ்ஸிலயா ஏறப்போறே?’

சட்டென்று நின்றுவிடுகிறேன். நிஜமாகவே எனக்குப் பைத்தியம்தான் பிடித்துவிட்டது. இல்லாவிட்டால் போயும் போயும் தீப்பெட்டி பஸ்ஸில் ஏற நினைப்பேனா?

ஹைதராபாத் வந்து சேர்ந்த ஆரம்ப காலத்தில் நாங்கள் சந்தித்த மிகப் பெரிய ஆச்சர்யங்களில் ஒன்று, அங்கே இருந்த நான்கு வகைப் பேருந்துகள்.

முதலாவதாக, நம் ஊர் டூரிஸ்ட் பஸ்களைப்போல் உசத்தி ரகம் ஒன்று, இளநீல வண்ணத்தில் அவைகளைப் பார்க்கவே ஆசையாக இருக்கும். ஒரு பக்கம்தான் கதவு, மெத்மெத் சீட்கள், கோட் அணிந்த நடத்துனர்கள், அதுவும் பெண்கள்.

இதற்காகவே, துட்டு அதிகமானாலும் பரவாயில்லை என்று இந்த வகை பஸ்களில்தான் நாங்கள் அடிக்கடி பயணம் செய்தோம், அல்லது பயணம் செய்ய விரும்பினோம். இதமான சூழல், மிதப்பதுபோல் ஊர்ந்து செல்லும் அதிவேகத் தேர், அடிக்கடி பஸ்ஸை நிறுத்தித் துன்புறுத்தாமல், சில முக்கியமான ஸ்டாப்களில்மட்டும் நின்று செல்வதால், விரைவாகச் சென்று சேரலாம்.

ஆனால், இந்த வகை பஸ்களின் எண்ணிக்கை மிகக் குறைச்சல். இதனால், நாம் போகிற இடத்துக்கான பஸ் எப்போது வரும் என்று கடவுளுக்குக்கூடத் தெரியாது. வேறு வழியில்லாமல் நாங்கள் மற்ற மூன்று வகைப் பேருந்துகளிலும் பயணம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இரண்டாம், மூன்றாம் வகைப் பேருந்துகளில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. ஒன்றில் கொஞ்சம் தாராளமான இட வசதி, இன்னொன்றில் கொஞ்சம் – கொஞ்சமே கொஞ்சம் கூட்டம் சேர்ந்துவிட்டால் போதும், மூச்சுத் திணற ஆரம்பித்துவிடும்.

அதுமட்டுமில்லை, டிக்கெட் கொடுக்க வருகிறவர்கள் கொஞ்சமும் மரியாதை இல்லாமல் கை சொடுக்கிக் கேட்பார்கள். அவமானமாக இருக்கும்.

அதனாலேயே, நான் முடிந்தவரை இந்தப் பேருந்துகளைத் தவிர்த்துவிடுவேன். கை நிறையக் காசு சம்பாதித்துக்கொண்டிருந்த திமிர், ஆட்டோக்களுக்கு வாரியிறைக்கச் சொன்னது.

ஹைதராபாத் பேருந்துகளின் நான்காவது வகை, ‘நான்காவது தரம்’ என்றுகூடச் சொல்லலாம், ‘தீப்பெட்டி பஸ்’.

பெயர் விநோதமாக இருக்கிறது, இல்லையா? பஸ்கூட அப்படிதான்.

பத்துப் பேர் அமர முடிகிற ஒரு சின்ன வேனைவிடக் கொஞ்சம் பெரிய வண்டி. டிரைவர் முன்னால் இருப்பதுமுதல், சுற்றியுள்ள அத்தனைக் கண்ணாடிகளும் உத்திரவாதமாக உடைந்துபோயிருக்கும். மிச்சமிருக்கும் தகரமும் ’இன்றைக்கோ, நாளைக்கோ’ என்று தத்வார்த்தமாக ஒட்டியிருக்கும், பஸ்ஸைச் சுற்றிலும் ஆந்திராவின் புகழ் பெற்ற வண்ணங்கள் – பெரும்பாலும் மஞ்சள் – பூசி, அதில் நிச்சயமாக ஒரு தெலுங்குப் பட விளம்பரமும், மெடிமிக்ஸ் விளம்பரமும் போட்டிருப்பார்கள்.

தரையிலிருந்து ஓர் அடி உயரத்தில்கூட இல்லாமல் அபாயகரமாக ஓடுகிற இந்த வாகனத்தை ‘பஸ்’ எனச் சொல்வது அநியாயம். ‘தீப்பெட்டி’ என்று பொருத்தமாகப் பெயர் வைத்தவர்கள் வாயில் சர்க்கரையைக் கொட்டவேண்டும்.

தீப்பெட்டியிலாவது ஒரு குச்சிக்கும் இன்னொரு குச்சிக்கும் கொஞ்சூண்டு இடைவெளி இருக்கும். ஆனால் இந்த பஸ்களில் எள் விழுந்தால் காணாமல் போய்விடும்.

ஆனால், தீப்பெட்டி பஸ்களில் எப்போதும் மக்கள் கூட்டம். நிரம்பி வழியும். மற்ற மூன்று வகைப் பேருந்துகளைவிட, இவற்றுக்குதான் ஜனங்களின் முழு ஆதரவு. ஒருமுறைகூட இந்த வகை பஸ்களை நான் காலியாகப் பார்த்தது கிடையாது. ராத்திரி நேரத்தில்கூட, மசங்கலாக ஒளிர்கிற ஒரு மஞ்சள் லைட்டைப் போட்டுக்கொண்டு மக்களைத் திணித்தபடி பறந்துகொண்டிருப்பார்கள்.

ஜனங்கள் எந்த நம்பிக்கையில் ஏறுகிறார்கள்? காசு குறைச்சல் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், பாதுகாப்பு?

டிரைவர் ஏதோ உற்சாகத்தில் ஒரு திருப்பத்தில் வேகமாகப் போனாரென்றால், சர்வ நிச்சயமாக பஸ் தலைகீழாகக் கவிழ்ந்துபோகும். இத்தனை அபத்திரமான ஒரு விஷயத்தை அரசாங்கத்தில் எப்படி அனுமதிக்கிறார்கள்?

இலவசமாகக் கூட்டிப்போனால்கூட, நாங்கள் இந்தப் பேருந்துகளில் ஏறுவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். அத்தனை சின்ன இடத்தில் இத்தனை ஜனங்கள் மத்தியின் நெருக்கத்தில் அவஸ்தையாக நின்றுகொண்டு பயணம் செய்வதா? நினைத்தாலே வியர்க்கிறது.

இப்படியாக, முக்கால் வருடம் ஓடியிருந்த நிலையில், எங்களுடன் கல்லூரியில் படித்த ராமச்சந்திரன் ஹைதராபாத் வந்தான். ஏதோ பயிற்சித் தேர்வு எழுதுவதற்காக.

ராமச்சந்திரனுக்கு ஆந்திரா புதிது. ஆனால் அவனும், அவன் வீட்டில் எல்லோரும் நன்றாகத் தெலுங்கு பேசுவார்கள். ஆகவே, எங்களைத் தொந்தரவு செய்யாமல், அவனே ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டான்.

ஆரம்பத்தில் பையனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மாலை வீடு திரும்புவதற்காகப் புறப்பட்டபோதுதான், எங்கேயோ அரைகுறையாக விசாரித்துவிட்டு எங்கள் வீட்டுப்பக்கம் வருகிற ஒரு தீப்பெட்டி பஸ்ஸில் ஏறிவிட்டான்.

அன்று இரவு வீட்டுக்குள் நுழைந்த ராமச்சந்திரனின் தோற்றத்தை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது. தலைமுடி அநியாயத்துக்குக் கலைந்திருந்தது. சட்டை பேன்ட்டிலிருந்து பாதி வெளியே வழிந்து கசங்கியிருந்தது, கையில் இருந்த புத்தம் புது பை கிழிந்து போயிருக்க, அதற்குள் ஒரு புத்தகமும் இன்னும் சில ‘அன்றைக்கு வாங்கினவை’களும் கீழே விழுந்துவிடும்போல் தொங்கியிருந்தன, மூன்று நாள் தூங்காதவன்போல், அல்லது மூன்றரை பெக் ’ரா’வாக விழுங்கியவன்போன்ற முகபாவத்துடன் பரிதாபமாக உள்ளே வந்து விழுந்தான் அவன்.

எங்களுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை, ‘என்னாச்சுடா?’ என்று நாங்கள் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, அவன் யாரையும் கவனிக்காமல் பாத்ரூமுக்கு ஓடினான், பெரிய சத்தத்துடன் வாந்தி எடுத்தான்.

அடுத்த மூன்று நாள்களுக்கு, அவனுடைய முகத்தில் அதிர்ச்சி விலகவே இல்லை. அரையும் குறையுமாகத் தேர்வை எழுதி முடித்துவிட்டு ஊருக்கு ஓடியவன், உடனடியாக அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு பைக் வாங்கிவிட்டான், இன்றுவரை அவன் எந்தப் பேருந்திலும் ஏறியிருக்கமாட்டான் என்று நினைக்கிறேன்.

ஏற்கெனவே தீப்பெட்டி பஸ்கள்மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு, ராமச்சந்திரன் அனுபவம் ஒரு முற்றுப்புள்ளியாகிவிட்டது. இனிமேல் நடந்து போனாலும் சரி, தீப்பெட்டி பஸ்ஸில் ஏறுவதில்லை என்று தீர்மானித்துவிட்டோம்.

அதன்பிறகு, ரோட்டில் நாங்கள் சாதாரணமாக நடந்து போகும்போது அருகே ஒரு தீப்பெட்டி பஸ் ஓடினால்கூட பயமாக இருந்தது. பஸ் கவிழ்ந்து அத்தனை ஜனக்கூட்டமும் எங்கள்மேல் விழுவதுபோன்ற கற்பனையில் உடல் நடுங்க ஆரம்பித்தது. ஓரமாக ஒதுங்கிப்போனோம்.

இப்போது என்முன்னே நின்றிருக்கிற தீப்பெட்டி பஸ்ஸைப் பார்த்ததும், எனக்கு ராமச்சந்திரன் ஞாபகம், வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வாந்தி வருகிறாற்போலிருக்கிறது.

திரும்பிப் போய்விடலாமா என்று யோசித்தபோது, மறுபடியும் அந்தக் குரல், ’பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,;’

எனக்குள் இருந்த எல்லா வெறுப்புகளையும் அந்தக் குரல் துடைத்துப்போட்டுவிட்டது. ‘வாயேன் இங்கே’ என்று முகம் தெரியாத அந்தச் சின்னப் பையன் என்னைக் கூப்பிடுவதுபோலிருந்தது. கூட்டத்தின் நடுவே மெதுவாக நடந்து அந்த பஸ்ஸை அடைந்தேன்.

முதல் ஆச்சர்யம், அந்த பஸ் காலியாக இருந்தது.

கொஞ்சநஞ்சமிருந்த தயக்கத்தையும் அழித்துவிட்டு பஸ்ஸில் ஏறினேன். பெரிதாக என்ன ஆகிவிடும்? ஜம்மென்று உட்கார்ந்துகொண்டு பயணம் செய்யப்போகிறேன், இதோ நாலு ஸ்டாப் தாண்டினால் வீடு, சௌகர்யமாக இறங்கிவிடப்போகிறேன் என்று என்னைச் சமாதானம் செய்துகொண்டேன்.

தீப்பெட்டி பஸ்களில் மூன்றே சீட்கள். சாதாரணமாக மற்ற பேருந்துகளில் இருப்பதுபோலின்றி, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறாற்போல் இருக்கைகளைப் ‘ப’ வடிவத்தில் அமைத்திருந்தார்கள்.

பிரச்னை என்னவென்றால், ‘ப’வுக்கு நடுவே இருக்கிற இடம். அங்கே ஏகப்பட்ட பேர் ஏறி நின்றுகொண்டால், யாரும் யார் முகத்தையும் பார்க்கமுடியாது.

அன்றைக்கு என்னைத்தவிர அந்தப் பேருந்தில் அமர்ந்திருந்தவர்கள் இரண்டு பேர், ஒருவர் சுவாரஸ்யமாகக் காது குடைந்துகொண்டிருக்க, இன்னொருவர் செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். இவர்களில் யாருக்கும், இந்த வண்டி எப்போது புறப்படும் என்று தெரிந்திருக்காது. ஓட்டுனரையும் காணவில்லை.

எனக்கு என்ன ஆச்சு? ஏன் இந்தப் பேருந்தில் ஏறியிருக்கிறேன்? ஆட்டோ பிடித்தால் ‘ஜஸ்ட்’ ஆறரை ரூபாய், ராஜாபோல வீட்டு வாசலில் போய் இறங்கலாம். அதை விட்டு இத்தனை மனிதர்கள் விடுகிற அசுத்தக் காற்றை இவ்வளவு நெருக்கத்தில் சுவாசித்து, இவர்களுடைய வியர்வையில் நான் குளிக்கவேண்டுமா? இறங்கிவிடலாமா?

முடிவு செய்யுமுன் அந்தப் பையனைத் தேடினேன். அவன் கதவுக்கு அருகில் இருந்த கடைசி சீட்டில் இருந்தான்.

உட்காரவில்லை. முழங்காலிட்டு நின்றபடி ஜன்னல் வழியே வெளியில் பார்த்துக் கத்திக்கொண்டிருந்தான், ‘பஞ்சகுட்டா., ஆமிர்பெட்., போராபண்டா.,’

பஸ்ஸில் அப்போது கூட்டம் இல்லாததால், அந்தப் பையனை நன்கு கவனிக்கமுடிந்தது. அவன் உருவத்துக்குக் கொஞ்சமும் பொருந்தாத அளவில் சட்டை, பேன்ட், கலைந்த தலை, செருப்பில்லாத கால், முகத்தில் இன்னும் மிச்சமிருக்கிற குழந்தைத்தனம், அதற்குக் கொஞ்சமும் பொருந்தாமல் உரக்கக் கத்திக்கொண்டிருந்ததுதான் உறுத்தியது.

அவன் இன்னும் நிறுத்தாமல் கத்திக்கொண்டிருந்தான், ‘பஞ்சகுட்டா., ஆமிர்பெட்., போராபண்டா.,’

இவனுக்கு என்ன சம்பளம் இருக்கும்? அப்பா, அம்மா இருப்பார்களா? வீட்டில் என்ன கஷ்டமோ? படிக்கிற வயதில் இப்படிப் போகிற வருகிறவர்களைப் பார்த்துக் கத்த நேர்ந்தது கொடுமையில்லையா? அவன் இதையெல்லாம் யோசிப்பானா? இவன் வயதுப் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதைப் பார்க்கும்போது இவனுக்குள் ஏக்கம் வருமா? நான் ஏன் இப்படி இல்லை என்று கேள்வி கேட்டுக்கொள்வானா? அல்லது, இத்தனை கேள்விகளும் என்னுடைய கற்பனையா? இவனுக்கு இதெல்லாம் மரத்துப்போயிருக்குமோ?

ஹைதராபாதில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய விளையாட்டு அரங்கம் இருந்தது. ஒரு பிரம்மாண்டமான அறைமுழுவதையும் குழந்தை விளையாட்டுகளுக்காக ஒதுக்கியிருந்தார்கள்.

ஒருபக்கம் பெரிய சைஸில் வீடியோ கேம்கள், இன்னொருபுறம் மின்சாரத்தில் ஓடும் பொம்மைக் கார்கள், மூன்றாவது முலையில் வலைக் கம்பிகளால் அமைத்த ஓர் அறை, அதனுள் முழன்க்கால் உயரத்துக்கு ஏராளமான பிளாஸ்டிக் பந்துகள்.

அந்த வலை அறைக்குள் குழந்தைகள் நுழைவதற்கான ஒரு சின்னத் திறப்பு இருந்தது. அதன்வழியே குழந்தைகள் ‘தொம்’மென்று பிளாஸ்டிக் பந்துகளின்மீது குதிப்பதும், ஒருவர்மேல் ஒருவர் பந்துகளை வீசி எறிந்து விளையாடுவதும், உயரத்தில் இருந்த கூடையில் பந்துகளைப் போடுவதற்கு முயற்சி செய்து விழுவதும் எழுவதும் பார்க்கப் பரவசமான காட்சிகள்.

இப்போது பெங்களூரிலும் இதுபோன்ற விளையாட்டுத் தலங்களை நிறையப் பார்கிறேன், என் மகள் அவற்றில் குதித்துக் கரையேற மறுக்கிற ஒவ்வொருமுறையும், நான் சின்னப் பையனாக இருந்தபோது இதெல்லாம் அறிமுகமாகவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

ஆனால்,  ஹைதராபாத் தீப்பெட்டி பஸ்ஸில் நான் பார்த்த அந்தப் பையன்? அவன் தினமும் பயணம் செய்கிற அதே ‘பஞ்சகுட்டா, ஆமிர்பெட்’ வழியில்தான் இதுபோன்ற விளையாட்டுகள் நிரம்பியிருக்கின்றன. ஆனால் இவன், பஸ்ஸுக்குள் நின்றபடி கத்தமட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறான்.

இப்போது, தீப்பெட்டிக்குள் ஓரளவு கூட்டம் சேர்ந்துவிட்டது. இனிமேல் பஸ்ஸை எடுத்துவிடுவார்கள் என்று தோன்றியது.

பஸ்ஸுக்குள் கூட்டம் நிறைந்துவிட்டதால், அந்தப் பையன் வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான். அவன் முழங்காலிட்டு நின்றிருந்த இடத்தில், இப்போது வேறு இருவர் உட்கார்ந்திருந்தார்கள்.

நான் ஜன்னல்வழியே எட்டிப் பார்த்தேன், இன்னும் கூட்டம் சேரவேண்டுமா? எப்போது இந்த பஸ் புறப்படும்?

டிவி நாடகங்களைப்போல், நான் நினைத்த மறுவிநாடி டிரைவர் சீட்டில் ஒரு மீசை ஆசாமி ஏறி உட்கார்ந்தார். கண் மூடிப் பிரார்த்தனைபோல் ஏதோ செய்துவிட்டு பஸ்ஸைக் கிளப்பினார். முழு வண்டியும் ஒருமுறை குலுங்கியது.

நான் ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கீழே உருண்டு விழாமல் சமாளித்தேன். அந்தப் பையன் இன்னும் படியில் நின்றபடி கத்திக்கொண்டிருந்தான்.

பஸ் கிளம்பியதும், அவன் உள்ளே வந்தான். அவனேதான் கண்டக்டர்(ன்) போலிருக்கிறது. ஒவ்வொருவரிடமும் சேருமிடத்தின் பெயரைக் கேட்டுக் காசு வாங்கிக்கொண்டான், டிக்கெட் எதுவும் கிடையாது.

இதற்குள், பஸ் வேகம் பிடித்திருந்தது. வண்டியின் ஒவ்வொரு பாகமும் தனித்தனியாக ஆடுவதுபோல் தோன்றியது. முழுசாக வீடு போய்ச் சேருவேனா என்று சந்தேகம் முளைத்தது. ராமச்சந்திரன் மூளை முனையில் எட்டிப் பார்த்துச் சத்தமாக வாந்தி எடுத்தான்.

அடுத்த ஸ்டாப்பில், இன்னும் கூட்டம் சேர்ந்துவிட்டது. நான் லேசாக நெளிய ஆரம்பித்தேன். அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிட்டால், வீட்டுக்கு நடந்தேகூடப் போய்விடலாம்.

எல்லோரிடமும் காசு வாங்கி முடித்த அந்தப் பையன், ஜன்னல் அருகே வந்தான், கடைசி சீட்டுக்கும் என் சீட்டுக்கும் இருந்த இடைவெளியில் நிற்க இடம் கேட்டான். பின்சீட்டுக்காரர்கள் முணுமுணுத்தபடி நகர்ந்தார்கள்.

அவன் சிரமமாக உள்நுழைந்து நின்றுகொண்டான், ஆர்வத்துடன் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். ஆந்திரச் சட்டமன்றத்துக்குச் செய்திருந்த வண்ண விளக்கு அலங்காரங்களைப் பார்க்கையில் அவன் வாய் பிளந்து மூடியது.

எனக்குத் தெலுங்கு அரைகுறை, ஆனாலும் அவனுடன் பேசவேண்டும் என்று தோன்றியது. உடைந்த ஹிந்தியில் அவனைக் கேட்டேன், உன் பேர் என்னப்பா?’

அவன் ஏதோ பதில் சொன்னான். வாகன்ச் சத்தத்தில் தேய்ந்து போய் ஏதோ ‘கான்’ என்று முடிந்ததுமட்டும் கேட்டது. மறுபடி பெயர் கேட்பது அநாவசியம் என்று தோன்றியது.

‘படிக்கிறியா?’

இந்தக் கேள்வியும் தப்பு, ‘படிச்சியா’ என்று கேட்டிருக்கவேண்டும்.

அவன் அழகாகத் தலையசைத்து, ‘ம்ஹூம்’ என்றான், பதிலில் இருக்கிற சோகம், முகத்தில் கொஞ்சமும் தெரியவில்லை.

‘உங்கப்பா என்ன பண்றார்?’

அவன் அதற்குப் பதில் சொல்வதற்குள், அடுத்த நிறுத்தம் வந்துவிட்டது. பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு, ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டிக் கனகார்யமாகக் கத்தத் தொடங்கினான், ‘பஞ்சாகுட்டா., ஆமீர்பேட்., போராபண்டா.,’

எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம். இன்னும் அவனிடம் பேசியிருக்கலாமோ?

பேசிதான் என்ன ஆகப்போகிறது? இதோ, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்குப் போய்விடப்போகிறேன், அதன்பிறகு இவன் யாரோ, நான் யாரோ.

அந்தப் பேருந்தின் வெப்பநிலை இப்போது கணிசமாக அதிகரித்திருந்தது. நின்றிருந்தவர்கள் பெரும்பான்மையினர் உட்கார்ந்திருந்த சிறுபான்மையினரை ‘எப்போ எழுந்திருப்பே?’ என்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார்கள், இறங்கும்போது வழி விடுவார்களா என்றுகூடச் சந்தேகமாக இருந்தது.

நான் மறுபடியும் அந்தப் பையனைப் பார்த்தேன், பஸ் கிளம்பிவிட்டதால் அவன் ஜன்னலில் இருந்து தலையை விலக்கிக்கொண்டு என்னைப் பார்த்தான். பேசுவானா, மாட்டானா என்று நான் யோசிப்பதற்குள் அவனே சிரித்தான், என் கையிலிருந்த புத்தகத்தை நோக்கிக் கை காட்டினான். சந்தோஷமாக எடுத்துக் கொடுத்தேன்.

அது, ’இந்தியாடுடே’ அரசியல் பத்திரிகை. அதில் அவனுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. பொம்மை பார்க்கிற ஆர்வம்மட்டும் இருந்தது. சற்றே அசௌகர்யமாகக் கைகளை அமைத்து இடம் பண்ணிக்கொண்டு பக்கம் பக்கமாகத் திருப்பிப் படம் பார்த்தான். சினிமா பக்கத்தைப் புரட்டும்போதுமட்டும் கொஞ்சம் வேகம் குறைச்சல்.

இரண்டு நிமிடங்களுக்குள், அவன் மொத்தப் புத்தகத்தையும் புரட்டிவிட்டான், என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு நட்பாகச் சிரித்தான்.

நான் இறங்கவேண்டிய ஸ்டாப் நெருங்கிக்கொண்டிருந்தது. அவசரமாக எழுந்துகொண்டபோதுதான், எனக்கு அந்த யோசனை தோன்றியது, ‘இங்கே உட்காருப்பா’ என்று என் இடத்தைக் காட்டினேன்.

’ம்ஹூம், வேணாம் சார்’ அவன் கூச்சமாகத் தலை அசைத்து மறுத்தான்.

‘சும்மா உட்காருப்பா, எவ்வளவு நேரம் நின்னுகிட்டே வருவே? உட்காரு’ பிடிவாதமாக அவனை இழுத்து அமரவைத்தேன். சுற்றியிருப்பவர்கள் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்.

அந்தப் பையனும், இதை எதிர்பார்த்திருக்கவில்லை. சற்றே ஆச்சர்யமாக என்னைப் பார்த்தவன், சமாளித்துக்கொண்டு என் இடத்தில் அமர்ந்தான், ஜன்னல்பக்கம் திரும்பிக் கத்தத் தயாரானான்.

நான் வண்டியிலிருந்து இறங்கியதும், ஜன்னலில் அவன் முகம் பார்த்தேன், கை அசைத்தேன், அவன் கத்தலுக்கு நடுவே ஒரு சின்னப் புன்னகை செய்தான்.

திரும்பி வீடு நோக்கி நடந்தபோதும், அந்தக் குரல் முதுகுக்குப் பின்னால் கேட்டுக்கொண்டே இருந்தது, ’பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

அதுதான், தீப்பெட்டி பஸ்ஸில் என்னுடைய முதல் மற்றும் கடைசிப் பயணம். அதன்பிறகு என்றைக்கும் அந்தப் பேருந்துகளில் ஏறவேண்டும் என்று தோன்றவில்லை, அவனையும் மறுபடி சந்திக்கவில்லை.

ஆனால் அந்தக் குரல், கடைசியாக அவன் சிந்திய அந்தக் குழந்தைப் புன்னகை இரண்டும் மறக்கமுடியாதவை.

***

என். சொக்கன் …

27 01 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

அநியாயம் 1:

சென்னையில் ஒரு பிரபலமான தங்கும் விடுதி. எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் அங்கே சென்று அறை வாடகை எவ்வளவு?’ என்று விசாரித்திருக்கிறார்.

’ஒரு ரூமுக்கு ஒரு நாள் வாடகை x ரூபாய், இந்த மூணு ரூமுக்குமட்டும் ஆயிரம் ரூபாய் ஜாஸ்தி’

‘ஏன்? அந்த அறைகள்ல என்ன ஸ்பெஷல்?’

‘அந்த மூணு ரூம்லயும் ஜன்னலைத் திறந்தா நீச்சல் குளம் தெரியும் சார், அந்த ‘வ்யூ’வுக்குதான் ஸ்பெஷல் ரேட்’

இப்படி வரவேற்பறையிலேயே வெளிப்படையாகச் சொல்லிக் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களாம். அங்கே காசு கொடுத்துத் தங்கி, அந்த நீச்சல் குளத்தைப் பயன்படுத்தும் பெண்கள்தான் பாவம்!

அநியாயம் 2:

கேரளாவில் ஒரு பிரபலமான கோவில். அங்கே கொடுக்கும் பிரசாதப் பாயசம் இன்னும் பிரபலமானது.

இப்போதெல்லாம், அந்தப் பாயசத்தை நல்ல அலுமினிய டின்களில் அடைத்து, சிந்தாமல், கெடாமல், கலப்படத்துக்கு வழியில்லாமல் பாதுகாப்பாக விற்கிறார்கள். சந்தோஷம்.

ஆனால், அந்த டின்களின்மேல் விலை இல்லை, சைவமா, அசைவமா என்று குறிக்கும் பச்சை / சிவப்புப் பொட்டுகள் இல்லை, என்றைக்குத் தயாரித்தார்கள், எப்போது காலாவதியாகும் என்கிற ‘Expiry Date’ இல்லை, எந்த விவரமும் இல்லை.

சட்டப்படி இது தவறில்லையா? உம்மாச்சி கண்ணைக் குத்தமாட்டாரா? எந்த நம்பிக்கையில் இதைப் பிள்ளைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பது?

***

என். சொக்கன் …

09 01 2008


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 636,382 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930