மனம் போன போக்கில்

Archive for the ‘Translation’ Category

நெய்மார் என்ற கால்பந்தாட்ட வீரர் பெயரை ஒருவர் ‘நெய்மாறன்’ என்று எழுதக் கண்டேன். வேடிக்கைக்குதான். ஆனால் ரசமான மாற்றம் அது.

சம்பந்தப்பட்ட நெய்மார் இதனை ஏற்பாரோ என்னவோ, ஆனால், நெய்மாறன் என்ற பெயர் நன்றாகவே உள்ளது. தமிழ் மரபுணர்ந்து செய்த சுவாரஸ்யமான மாற்றம்.

மாறன்: பாண்டியன், வேண்டுமானால் நெய் பூசிய வேலை ஏந்திய பாண்டியன் என்பதுபோல் இப்பெயருக்கு விளக்கம் அளிக்கலாம் 🙂

ஆனால் ஒன்று, இப்படி மாற்றுவது மரபு சார்ந்ததுதான். விபீஷணன் / லக்‌ஷ்மணன் ஆகியோர் வீடணன் / இலக்குவன் என்று மாறியது ஏனோ, அதே காரணம்தான் இதற்கும். நமக்கு வாசிக்க இலகுவான வகையில் மாற்றிப் பயன்படுத்துவது. (அதேசமயம், நெய்மார் என்பதே தமிழில் உச்சரிக்கும்வகையில் உள்ளதால், இந்தக் காரணம் இங்கே பொருந்தாது என்பதையும் சொல்லிவிடவேண்டும்.)

இன்னொரு விஷயம், சம்பந்தப்பட்ட நபருக்குத் தமிழ் தெரிந்து, அவர் இதனை ஏற்காவிட்டால் அவர் பெயரை மாற்றக்கூடாது என்பது என் கட்சி. அவர் தமிழில் எழுதுவதுபோல்தான் நாமும் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். உதா: எழுத்தாளர் சுஜாதா பெயரை சுசாதா என்று எழுதுவதை நான் ஏற்கவில்லை, not that it matters :))

சிலர் பெயர்களையும் மொழிபெயர்க்கிறார்கள். ’குமார்’ என்ற பெயரைத் தடாலென்று ‘செல்வன்’ என்று சொல்லிவிடுகிறார்கள். சம்பந்தப்பட்ட நபருக்குத் தூக்கிவாரிப் போடும் 🙂

ஆனால் இதுவும் மரபில் உள்ளதுதான். கம்பர் ராமாயணத்தைத் தமிழுக்குக் கொண்டுவரும்போது, பல வடமொழிப் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். உதாரணமாக: ருஷ்யசிருங்கர் என்ற முனிவர் பெயரைக் ‘கலைக் கோட்டு முனிவர்’ என்று அழகாக மாற்றுகிறார் அவர்.

***

என். சொக்கன் …
11 07 2014

ஓர் ஆங்கிலப் புத்தகம், ‘There lived a rich man’ என்று தொடங்குகிறது. அதைத் தமிழில் ‘அங்கு ஒரு தனவந்தர் வாழ்ந்தார்’ என்று மொழிபெயர்த்துள்ளனர்.

’தனவந்தர்’ என்பது வடமொழிச் சொல் என்பது ஒருபக்கமிருக்க, இப்போது அது தமிழ்நாட்டில் பழக்கத்திலேயே இல்லை, பழைய்ய்ய மொழி அது. அதைப் பயன்படுத்தினால், <40 வயதுள்ள, தினசரிப் பேச்சால்மட்டுமே தமிழ் Vocabularyயை வளர்த்துக்கொண்டுள்ளவர்கள் யாருக்கும் புரியாது.

சில சமயங்களில் வேண்டுமென்றே பழைய நடையில் எழுதுவது உண்டு. உதாரணமாக, நான் அடிக்கடி ‘அன்பர்காள்’ என்று தொடங்கி ஈமெயில்கள் எழுதுவேன், ’உள்ளன’ என்பதற்குப் பதில் ‘உள’ என்று பயன்படுத்துவேன், ‘யார்’ என்பதற்குப் பதில் ‘ஆர்’ என்று எழுதுவேன், இவையெல்லாம் அதிகப் பேருக்குப் புரியாது என்று தெரியும், ஆனாலும் வாசிக்க வித்தியாசமான சுவையாக இருக்கும்.

அப்படிச் சிலர் தெரிந்தே கிறுக்குத்தனம் செய்வது வேறு விதம், இந்த மொழிபெயர்ப்பாளர் ‘Rich Man’க்கு இணையாகத் ‘தனவந்தர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது அப்படி அல்ல என்று நம்புகிறேன்.

இன்னொரு விஷயம், மொழியை வார்த்தைக்கு வார்த்தை மொக்கையாகப் பெயர்க்காமல் உள்ளூர்க் கலாசார அம்சங்களையும் கொண்டுவரவேண்டும்.

உதாரணமாக, ’ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’ என்று கதை தொடங்கும் மரபு இங்கே தமிழில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி, ‘There lived a rich man’ … ’ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரர்’ என்பதுபோல் மொழிபெயர்த்தால்தான் வாசிக்க லகுவாக இருக்கும்.

இன்னோர் உதாரணம், ஓர் இன்ஷூரன்ஸ் விளம்பரத்தில் ‘Your Plan B’ என்று இருக்கிறது. இதன் அர்த்தம் ஆங்கில மொழி அறிந்தவர்களுக்குதான் புரியும்.

இதையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள். எப்படி தெரியுமா? ‘உங்கள் திட்டம் பி’ என்று.

இந்தமட்டும் ‘B’ என்பதை ‘பி’ என்று மொழிபெயர்த்தார்களே, ‘திட்டம் ஆ’ என்று எழுதாமல்!

’திட்டம் பி’ என்பதில் என்ன தவறு? என்று நீங்கள் கேட்டால், உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்று அர்த்தம், ‘Plan B’ என்பதன் அர்த்தம் புரிந்த உங்களால், ‘திட்டம் பி’ என்பதையும் அர்த்தப்படுத்திக்கொள்ளமுடிகிறது.

ஆனால் இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், ‘Plan B’ என்பதை மொழிபெயர்ப்பதன் நோக்கம், ஆங்கிலம் தெரியாத, தமிழ்மட்டுமே தெரிந்த ஒருவருக்கு அது புரியவேண்டும். அல்லவா? ‘திட்டம் பி’ என்பது அவர்களுக்குப் புரியாது, ஆங்கிலமும் தெரிந்தவர்கள் அதை ஆங்கிலத்திலேயே படித்துவிடுவார்கள், தமிழ் மொழிபெயர்ப்பு அவர்களுக்கு அவசியம் இல்லை.

ஆக, ‘Plan B’ என்பதை, ‘உங்களது மாற்றுத் திட்டம்’ என்பதுபோல் மொழிபெயர்த்தால்தான் அது உரிய நபர்களுக்குச் சென்றுசேரும். காரணம் ‘Plan B’ (அல்லது) ‘திட்டம் பி’ (அல்லது) ‘திட்டம் ஆ’ என்று பேசும் கலாசாரம் / வழக்கம் நம்மிடையே இல்லை. இது மொழிபெயர்த்த நல்லவருக்குத் தெரியவில்லை.

Of course, நான் இங்கே சொல்லியிருப்பவைதான் சிறந்த மொழிபெயர்ப்புகள் என்பதல்ல. இவை சர்வசாதாரணமான உதாரணங்கள். நாம் எல்லாரும் தினந்தோறும் இதுமாதிரி எளிய, ஆனால் அபத்தமான மொழிபெயர்ப்புத் தவறுகளைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

வருத்தமான விஷயம், ஒரு நல்ல மொழிபெயர்ப்பு எப்பேர்ப்பட்ட மேஜிக் செய்யக்கூடும், எப்படி ஒரு புதிய உலகத்தை அந்த மொழி தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடும் என்று நம் ஊரில் யாருக்கும் புரியவில்லை, அதன் முக்கியத்துவம் தெரியாமல் கடமைக்கு ஏதோ தட்டித் தள்ளுகிறார்கள். இழப்பு ஜாஸ்தி.

***

என். சொக்கன் …

27 11 2012

சென்ற வாரம் ஒரு புத்தக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சுதா மூர்த்தி எழுதிய ‘Grandma’s Bag Of Stories’ என்ற சிறுவர் கதை நூலின் வெளியீட்டு விழா அது.

(Image Courtesy : http://friendslibrary.in/books/detailedinfo/13757/Grandma&)

இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக இயங்கியவர் என்ற முறையில் சுதா மூர்த்தியைப் பலருக்கும் தெரிந்திருக்கும். அமுதசுரபி இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரைக்காகவும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பற்றி என் புத்தகத்துக்காகவும் சுதா மூர்த்தியின் வாழ்க்கை பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொண்டிருந்தேன். குறிப்பாக, ஜே. ஆர். டி. டாடாமீது அவர் கொண்டிருந்த மரியாதை மிகவும் சுவாரஸ்யமான ஒரு சங்கதி.

ஆனால் ஓர் எழுத்தாளராக சுதா  மூர்த்தி என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது. அவரது ஒன்றிரண்டு புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் அரை அத்தியாயம், முக்கால் அத்தியாயம் என்று படித்துள்ளேன், செம போர், குறிப்பாக ‘டாலர் மருமகள்’ போன்ற நவீன(?)ங்கள் அவரை ஒரு மெகா சீரியல் கண்ணீர்க் கதாசிரியராகவே நினைக்கவைத்தன. என்னை ஈர்த்த அவரது ஒரே ஒரு புத்தகம், ‘ஒரு கனவின் கதை’ (இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள்கள் குறித்து அவர் எழுதிய Nonfiction, தமிழில்: ஆரோக்கியவேலு, வானதி பதிப்பகம் வெளியீடு).

கன்னடத்தில் குறிப்பிடத்தக்க கதாசிரியையாகப் பெயர் வாங்கியபிறகு, சுதா மூர்த்தி ஆங்கிலத்தில் நிறைய எழுத ஆரம்பித்தார். அந்த வரிசையில்தான் இந்தப் ‘பாட்டிக் கதை’ப் புத்தகம் வெளியாகியுள்ளது. அவர் சிறுவயதில் கேட்ட கதைகளையும் தானே உருவாக்கிய கற்பனைகளையும் கலந்து தந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் ஈமெயிலில் வந்தபோது, அதில் கலந்துகொள்ள எனக்குப் பெரிய ஆர்வம் ஏதும் இல்லை. ஆனால் ‘விழாவின் முடிவில் புத்தகத்திலிருந்து மூன்று கதைகள் நாடக பாணியில் வாசித்துக் காண்பிக்கப்படும் (Dramatic Narration)’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது நங்கைக்குப் பிடிக்குமே என்பதற்காக அழைத்துச் சென்றேன்.

அன்றைய நிகழ்ச்சியின் அதி அற்புதமான பகுதி, அந்த Dramatic Narrationதான். பத்மாவதி ராவ் மற்றும் வசந்தி ஹரிபிரகாஷ் என்ற இருவர் புத்தகத்திலிருந்து மூன்று கதைகளை மிக அருமையாக வாசித்துக் காட்டினார்கள். குரலின் ஏற்ற இறக்கங்களும், கதாபாத்திரங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்திய மிமிக்ரியும் பின்னணிச் சத்தங்களும் முக பாவனைகளும் உடல் மொழியும் அட்டகாசம். குழந்தைகள் அனுபவித்து ரசித்தார்கள். நிகழ்ச்சி நடந்த Landmark கடையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருந்தவர்களெல்லாம் ஓடி வந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

இத்தனை அருமையான நிகழ்ச்சியை நடத்திய இருவரையும் விழா அமைப்பாளர்கள் சரியாக அறிமுகப்படுத்தவில்லை என்பதுதான் ஒரே ஒரு குறை. இவர்களில் ஒருவர் நாடகக் கலைஞர், இன்னொருவர் பத்திரிகையாளர் என்று பேச்சிலிருந்து ஊகிக்கமுடிந்தது. பின்னர் இதனை கூகுளில் தேடி உறுதிப்படுத்திக்கொண்டேன்

நிகழ்ச்சியின் முடிவில், சுதா மூர்த்தி கொஞ்சமாகப் பேசினார். ‘குழந்தைகள் பாட்டியிடம் கதை கேட்டு வளரும் சூழலே இப்போதெல்லாம் இல்லை. அந்த இடைவெளியை இதுபோன்ற புத்தகங்கள் கொஞ்சமேனும் நிறைவு செய்யும் என நம்புகிறேன்’ என்றார்.

கன்னடத்தில் ‘அஜ்ஜி’ என்றால் பாட்டி. சுதா மூர்த்தியின் நிகழ்ச்சியில் வாசித்துக் காண்பிக்கப்பட்ட ஜாலியான அந்த மூன்று ’அஜ்ஜி’க் கதைகளை என் நினைவிலிருந்து (சில சிறிய மாற்றங்கள் இருக்கலாம்) இங்கே சுருக்கமாகப் பதிவு செய்துவைக்கிறேன். பன்னிரண்டு வயதுக்கு மேலானவர்கள் இந்த வரியுடன் எஸ்கேப் ஆகவும்.

1. அஞ்சு ஸ்பூன் உப்பு

கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்பாள், அரை மணி நேரம் கழித்து ‘அந்த வேலை என்னாச்சுடீ?’ என்று விசாரித்தால், ‘எந்த வேலை?’ என்று விழிப்பாள்.

அவள் வீட்டில் எல்லாருக்கும் கீதாவை நினைத்துக் கவலை. ‘இந்தப் பெண்ணுக்கு எப்போ பொறுப்பு வருமோ’ என்று வருத்தப்படுவார்கள்.

ஒருநாள், கீதாவின் பள்ளியில் எல்லா மாணவிகளும் பிக்னிக் கிளம்பினார்கள். அதற்கு அவரவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு சாப்பாட்டுப் பண்டத்தைச் சமைத்து எடுத்துவரவேண்டும்.

கீதாவின் தாய் பிரமாதமாகச் சாம்பார் வைப்பார். வாசனையும் ருசியும் ஏழு ஊருக்கு மணக்கும்.

ஆகவே, கீதா தன் தாயிடம் ஓடினாள், ‘அம்மா, எங்க பிக்னிக்குக்கு சாம்பார் செஞ்சு தர்றியா?’ என்று கேட்டாள்.

‘ஓ, கண்டிப்பா’ என்றார் தாய். ‘எப்போ பிக்னிக்?’

‘அடுத்த வெள்ளிக்கிழமை!’

’ஓகே! அன்னிக்குக் காலையில நீ தூங்கி எழுந்திருக்கும்போது சாம்பார் தயாரா இருக்கும். சந்தோஷமா?’

கீதா உற்சாகத்துடன் தலையாட்டினாள். அதே நினைவாக அடுத்த சில நாள்கள் ஓடின.

வெள்ளிக்கிழமை அதிகாலை. கீதாவின் தாய் அவளை எழுப்பினார், ‘கீதா, சீக்கிரம் எழுந்திரும்மா, குளிச்சு ரெடியாகி பிக்னிக் போகவேண்டாமா?’

கீதா ஆர்வமாக எழுந்து உட்கார்ந்தாள். ‘சாம்பார் செஞ்சாச்சா?’

’கிட்டத்தட்ட முடிஞ்சது, இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி’ என்றார் தாய். ‘சாம்பார் நல்லாக் கொதிச்சதும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போடணும். சரியா?’

‘இதை ஏம்மா என்கிட்ட சொல்றே?’

’நான் இப்போ கோயிலுக்குப் போறேன்’ என்றார் அவளது தாய். ‘இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு நீ ஞாபகமா அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டுக் கலக்கிடு. மறந்துடாதே!’

‘சரிம்மா!’

அவர்கள் பேசுவதை கீதாவின் பாட்டி கேட்டுக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணுதான் எதையும் ஞாபகம் வெச்சுக்காதே, அதனால நிச்சயமா சாம்பார்ல உப்புப் போடறதுக்கும் மறந்துடுவா’ என்று அவர் நினைத்தார். ஆகவே, பத்து நிமிஷம் கழித்து அவரே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கிவிட்டார்.

இதே பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கீதாவின் தாத்தாவும் இதேதான் நினைத்தார். அவரும் தன் பங்குக்கு ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கினார்.

இவர்கள்மட்டுமா? கீதாவின் தந்தை, அக்கா, அண்ணன் என்று எல்லாரும் இதேபோல் ஆளாளுக்குத் தனித்தனியே ஐந்தைந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிச் சாம்பாரைக் கலக்கிவிட்டார்கள். கீதாவின் ‘ஞாபகசக்தி’மேல் அவர்களுக்கு அத்தனை நம்பிக்கை.

ஆச்சர்யமான விஷயம், அன்றைக்குக் கீதா உப்பு விஷயத்தை மறக்கவில்லை. அவளும் அதே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிவைத்தாள்.

இதற்குள் அவளுடைய தாய் கோயிலில் இருந்து வந்துவிட்டார். கொதித்த சாம்பாரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரமாக எடுத்துக் கொடுத்தார். அதைத் தூக்கிக்கொண்டு உற்சாகமாகப் பிக்னிக் கிளம்பினாள் கீதா.

அன்று இரவு அவள் திரும்பி வரும்போது வீட்டில் எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ‘என்ன கீதா? பிக்னிக் எப்படி இருந்தது?’

மறுகணம், ‘ஓஓஓஓஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள் கீதா. ‘சாம்பார்ல ஒரே உப்பு, என் க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் என்னைத் திட்டித் தீர்த்துட்டாங்க’ என்றாள்.

‘எப்படி? நான் அஞ்சு ஸ்பூன் உப்புதானே போட்டேன்?’ என்றார் பாட்டி.

‘நீ அஞ்சு ஸ்பூன் போட்டியா? நானும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டேனே’ என்றார் தாத்தா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் தந்தை.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அக்கா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அண்ணன்.

’நீங்கல்லாம் எதுக்கு உப்புப் போட்டீங்க? அம்மா என்னைதானே உப்புப் போடச் சொன்னாங்க?’ என்று மறுபடி அழுதாள் கீதா. ஆக மொத்தம் எல்லாருமாகச் சேர்ந்து அந்தச் சாம்பாரில் 30 ஸ்பூன் உப்புப் போட்டிருக்கிறார்கள்.

‘கண்ணு, நீதான் எதையும் எப்பவும் மறந்துடுவியே, உனக்கு உதவி செய்யலாம்ன்னுதான் நாங்கல்லாம் உப்புப் போட்டோம்.’

இதைக் கேட்டவுடன் கீதாவுக்குப் புத்தி வந்தது. தன்னுடைய பொறுப்பில்லாத்தனத்தால்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள். அதன்பிறகு அவள் எதையும் மறப்பதில்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்யக் கற்றுக்கொண்டாள்.

அடுத்த வாரம், கீதாவின் தாய் அவளுடைய வகுப்புத் தோழிகள் எல்லாரையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். இந்தமுறை 30 ஸ்பூன் அல்ல, சரியாக ஐந்தே ஐந்து ஸ்பூன் உப்புப் போட்ட சாம்பார், செம ருசி!

2. காவேரியும் திருடனும்

ஒரு கிராமத்தில் காவேரி என்ற பெண். அவளுடைய கணவன் ஒரு சோம்பேறி. ஆகவே தினந்தோறும் காவேரிதான் வயலில் விவசாயம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டியிருந்தது.

அவர்களுடைய வயலுக்குப் பக்கத்தில் ஒரு கோயில். அங்கே இருந்த சுவாமிக்கு ஏகப்பட்ட நகைகள் போட்டிருந்தார்கள்.

இந்த நகைகளைத் திருடுவதற்காக ஒரு திருடன் வந்தான். காவேரியின் வயலில் இருந்து சுரங்கப் பாதை அமைத்துக் கோயிலுக்குள் செல்ல நினைத்தான். அதற்காக அவளுடைய நிலத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்தான்.

ஆனால், காவேரி தன் நிலத்தை விற்க விரும்பவில்லை. ‘முடியாது’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.

’இந்த நிலத்தை வெச்சுகிட்டு நீ ஏன் கஷ்டப்படணும், வாழ்நாள்முழுக்க உட்கார்ந்து சாப்பிடறமாதிரி நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன்!’ என்றான் அந்தத் திருடன்.

இந்தத் தக்கனூண்டு நிலத்துக்கு ஆயிரம் ரூபாயா? காவேரிக்கு அவன்மேல் சந்தேகம் வந்தது.

அவள் யோசிப்பதைப் பார்த்த திருடன் அவசரமாக, ‘ரெண்டாயிரம் ரூபாய் தர்றேன்’ என்றான்.

‘ம்ஹூம், முடியாது!’

‘அஞ்சாயிரம்?’

‘ம்ஹூம்!’

’பத்தாயிரம்?’

’முடியவே முடியாது’ என்றாள் காவேரி, ‘நீ கோடி ரூபாய் தந்தாலும் நான் இந்த நிலத்தை விக்கமாட்டேன். ஏன் தெரியுமா?’

‘ஏன்?’

‘இந்த நிலத்துல ஒரு புதையல் இருக்கு. நான் இங்கே விவசாயம் செய்யறமாதிரி மண்ணைத் தோண்டித் தோண்டி அதைதான் தேடிகிட்டிருக்கேன்’ என்றாள் காவேரி. ‘இன்னிக்கோ நாளைக்கோ அடுத்த வாரமோ அடுத்த மாசமோ புதையல் கிடைச்சுடும், அப்புறம் நான் பெரிய பணக்காரியாகிடுவேன்!’

திருடன் வாயில் ஜொள் வடிந்தது. ‘நாமே இந்த நிலத்தைத் தோண்டிப் புதையலை எடுத்துவிடவேண்டியதுதான்’ என்று தீர்மானித்தான்.

அன்று இரவு. காவேரி வீட்டுக்குச் சென்றதும் திருடன் அவளுடைய வயலினுள் நுழைந்தான். அதிவேகமாகத் தோண்ட ஆரம்பித்தான்.

அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், நாலு மணி நேரம், எட்டு மணி நேரம், பொழுது விடிந்துவிட்டது, மொத்த நிலத்தையும் கொத்திக் கிளறியாகிவிட்டது. புதையலைக் காணோம். வெளிச்சம் வருவதைப் பார்த்த திருடன் பயந்து ஓடிவிட்டான்.

சிறிது நேரம் கழித்து, காவேரி நிலத்துக்கு வந்தாள். அவள் எதிர்பார்த்தபடி நிலம் மொத்தமும் பிரமாதமாக உழப்பட்டிருந்தது. ஒரு வார வேலையை ஒரே இரவில் முடித்துவிட்டான் அந்தத் திருடன்.

உற்சாகமான காவேரி தொடர்ந்து விவசாயத்தைக் கவனித்தாள். அந்த வருடம் நல்ல அறுவடை, கையில் கணிசமாகக் காசு சேர்ந்தது. சில நகைகளை வாங்கி அணிந்துகொண்டாள்.

சில மாதங்கள் கழித்து, அந்தத் திருடன் அதே ஊருக்குத் திரும்பினான். அதே காவேரியைப் பார்த்தான். அவள் கழுத்தில், காதில், கையில் தொங்கும் நகைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். ‘இந்தப் பெண்ணுக்கு எப்படியோ புதையல் கிடைத்துவிட்டது’ என்று முடிவுகட்டினான். ‘அந்தப் புதையலை நான் திருடாமல் விடமாட்டேன்!’

அன்று இரவு, அவன் மாறுவேஷத்தில் காவேரியின் வீட்டுக்குச் சென்றான். ‘ராத்திரிக்கு இங்கே திண்ணையில் தூங்கலாமா?’ என்று அனுமதி கேட்டான்.

அவனைப் பார்த்தவுடன், காவேரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. தன்னுடைய கணவனிடம் சத்தமாகப் பேசுவதுபோல் சொன்னாள், ‘அந்தாள் இங்கேயே தங்கிக்கட்டும், எனக்குக் கவலை இல்லை’ என்றாள். ‘என்ன யோசிக்கறீங்க? நம்ம புதையலையெல்லாம் அவன் திருடிகிட்டுப் போயிடுவானோன்னு பயப்படறீங்களா? உங்களுக்கு அந்தக் கவலையே வேனாம், ஏன்னா, நான் நம்ம புதையலையெல்லாம் காட்டுக்குள்ள ஒரு மரத்துல இருக்கிற பொந்துல ஒளிச்சுவெச்சுட்டேன்.’

‘எந்த மரம்?’ ஆவலுடன் கேட்டான் அவளுடைய கணவன்.

‘ஏதோ ஒரு மரம்’ என்றாள் காவேரி. ‘நீ சத்தம் போடாம உள்ளே வந்து படு!’

அவ்வளவுதான். அந்தத் திருடன் உற்சாகமாகக் காட்டை நோக்கி ஓடினான். ஒவ்வொரு மரமாகத் தேட ஆரம்பித்தான்.

இப்போதும், நீங்கள் காட்டுக்குச் சென்றால் அந்தத் திருடனைப் பார்க்கலாம், ஏதாவது மரத்தின்மேல் பரிதாபமாக உட்கார்ந்திருப்பான்.

3. எனக்கு என்ன தருவே?

மூஷிகா என்று ஓர் எலி. அதற்குச் சுயநல புத்தி அதிகம்.

ஒருநாள், அந்த ஊரில் கடுமையான புயல் காற்று, ஏகப்பட்ட மழை, வெள்ளம். இதனால் எல்லாரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.

மறுநாள் காலை, எப்படியோ ஒரு நனையாத தீப்பெட்டி மூஷிகாவுக்குக் கிடைத்தது, அதை இழுத்துக்கொண்டு தெருவில் நடந்து வந்தது.

அந்தத் தெரிவில் ஒருவர் பட்டறை வைத்திருந்தார். அவருடைய அடுப்புமுழுவதும் மழையில் நனைந்து அணைந்துபோயிருந்தது. அதை மறுபடி பற்றவைப்பதற்குத் தீப்பெட்டியும் தீக்குச்சிகளும் தேவைப்பட்டது.

இதைக் கவனித்த மூஷிகா அவரிடம் கேட்டது, ‘நான் உனக்குத் தீப்பெட்டி தர்றேன், பதிலுக்கு நீ என்ன தருவே?’

‘இந்த அடுப்பு எரியாட்டி என் வேலை நடக்காது, என் குடும்பமே பட்டினி கிடக்கும்’ என்றார் அவர்.’அதனால நீ என்ன கேட்டாலும் தர்றேன்.’

‘சரி, அப்போ அந்தப் பூசணிக்காயைக் கொடு’ என்றது மூஷிகா.

‘என்ன? காமெடி பண்றியா? இத்தனை பெரிய பூசணிக்காயை நீ என்ன செய்வே? உன்னால இதை இழுத்துகிட்டுப் போகக்கூட முடியாதே!’

‘அதைப்பத்தி உனக்கென்ன? பூசணிக்காய் கொடுத்தேன்னா தீப்பெட்டி தருவேன், இல்லாட்டி தரமாட்டேன்.’

அவர் யோசித்தார். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். ‘எலியே, ஆனாலும் உனக்கு சுயநலம் ஜாஸ்தி’ என்றபடி பூசணியை எடுக்கப் போனார்.

‘அது அங்கேயே இருக்கட்டும், நான் யாரையாவது அனுப்பி வாங்கிக்கறேன்’ என்றது மூஷிகா. தொடர்ந்து தன் போக்கில் நடந்தது.

வழியில் ஒரு விவசாயி கவலையுடன் உட்கார்ந்திருந்தார். அவரை நெருங்கிய  மூஷிகா கேட்டது, ‘அண்ணாச்சி, என்ன பிரச்னை?’

‘என்னோட மாடுங்கல்லாம் பட்டினி கிடக்குது, அதுங்களுக்குத் தீனி போட என்கிட்டே எதுவுமே இல்லை!’

‘கவலைப்படாதீங்க அண்ணே, என்கிட்ட ஒரு பெரிய பூசணிக்காய் இருக்கு, அதை வெட்டி எல்லா மாடுங்களுக்கும் கொடுத்துடலாம்.’

’அட, நெஜமாவா சொல்றே?’

‘நெஜம்தான். ஆனா, பதிலுக்கு எனக்கு என்ன தருவீங்க?’

‘நீ எதைக் கேட்டாலும் தர்றேன்!’

‘சரி, நேராப் பின்னாடி போனா ஒரு பட்டறை வரும், அங்கே என் பேரைச் சொல்லி ஒரு பூசணிக்காய் வாங்கிக்கோங்க’ என்றது மூஷிகா.

விவசாயியும் அப்படியே செய்தார். எல்லா மாடுகளும் நன்றாகச் சாப்பிட்டுப் பசியாறின.

இப்போது, மூஷிகா கள்ளப் பார்வையுடன் கேட்டது, ‘அண்ணாச்சி, எனக்குக் கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்கா?’

‘ஓ, உனக்கு என்ன வேணும்ன்னாலும் கேளு, தர்றேன்!’

‘ஒரு பசு மாட்டைக் கொடுங்க’ என்றது மூஷிகா.

‘அடப்பாவி, ஒரு பூசணிக்காய்க்குப் பசுமாடா?’ என்று அதிர்ந்தார் விவசாயி. ஆனால் மூஷிகா அவரை விடவில்லை. வற்புறுத்தி ஒரு பசுமாட்டை வாங்கிவிட்டது. அதன்மேல் உட்கார்ந்துகொண்டு கம்பீரமாகப் பயணம் செய்தது.

சற்றுத் தொலைவில் ஒரு கல்யாண விழா. அங்கே ஏகப்பட்ட கலாட்டா.

’என்னாச்சு?’ என்று விசாரித்தது மூஷிகா. ‘ஏதாவது பிரச்னையா?’

‘ஆமாம் மூஷிகா, இங்கே விருந்து சமைக்கத் துளி பால்கூட இல்லை, பால் இல்லாம பாயசம் எப்படி? பாயசம் இல்லாம கல்யாணம் எப்படி?’

‘அட, இது ஒரு பிரச்னையா? என் மாட்டுலேர்ந்து வேணும்ங்கற அளவு பாலைக் கறந்துக்கோங்க’ என்றது மூஷிகா. ‘ஆனா பதிலுக்கு நான் என்ன கேட்டாலும் தரணும்!’

’இந்தத் தக்கனூண்டு எலி என்ன பெரிதாகக் கேட்டுவிடப்போகிறது?’ என்று அவர்கள் நினைத்தார்கள். மூஷிகாவின் நிபந்தனைக் கட்டுப்பட்டார்கள்.

உடனே, மூஷிகாவின் பசு மாட்டிடம் இருந்து பால் கறக்கப்பட்டது. விருந்து தயாரானது. கல்யாணம் முடிந்தது.

இப்போது மூஷிகா மாப்பிள்ளையை நெருங்கியது, ‘உனக்குத் தேவையான நேரத்துல நான் பசு மாட்டுப் பாலைக் கொடுத்து உதவி செஞ்சேன்ல? அதுக்குப் பதிலா, உன்னோட மனைவியை எனக்குக் கொடுத்துடு’ என்றது.

மாப்பிள்ளைக்குக் கோபம், மூஷிகாவை நசுக்கிவிடுவதுபோல் முன்னே வந்தான்.

அவனுடைய மணப்பெண் அவனைத் தடுத்தி நிறுத்தினாள். ‘கொடுத்த வாக்கை மீறக்கூடாதுங்க’ என்றாள்.

‘அதுக்காக? உன்னை அந்த எலியோட அனுப்பமுடியுமா?’

‘கவலைப்படாதீங்க, என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்’ என்றாள் அவள். ’பேசாம என்னை இந்த எலியோட அனுப்பிவைங்க, அது எப்பவும் இந்தமாதிரி பேராசைப்படாதமாதிரி நான் அதுக்கு ஒரு பாடம் சொல்லித்தர்றேன்.’

அரை மனத்துடன் தலையாட்டினான் மாப்பிள்ளை. உடனே அந்த மணப்பெண் மூஷிகாவுடன் புறப்பட்டாள்.

மூஷிகாவுக்குச் செம பெருமை. காலை முதல் எத்தனை மனிதர்களை அது தந்திரமாக அடக்கி ஆண்டிருக்கிறது, அத்தனைக்கும் சிகரம் வைத்ததுபோல் இத்தனை அழகான பெண் அதற்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்.

கர்வமாக நடந்த மூஷிகாவை அந்தப் பெண் அழைத்தாள், ‘ஒரு நிமிஷம்.’

‘என்னது?’

‘இதுதான் எங்க வீடு’ என்றாள் அந்தப் பெண். ‘நான் சில பொருள்களையெல்லாம் எடுத்துகிட்டு வரட்டுமா?’

‘ஓ, தாராளமா!’ என்றது மூஷிகா. ‘போய்ட்டு வா, நான் காத்திருக்கேன்.’

சற்று நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்தாள், ‘நான்மட்டும் தனியா உங்க வீட்டுக்கு வரமுடியுமா? எனக்குப் பயமா இருக்கு’ என்றாள்.

‘அதனால?’ எரிச்சலுடன் கேட்டது மூஷிகா.

‘எனக்குத் துணையா என்னோட சிநேகிதிங்க ரெண்டு பேரைக் கூட்டிகிட்டுதான் வரட்டுமா?’

‘ஓ, இன்னும் ரெண்டு பேரா? நல்லது, சீக்கிரம் வரச்சொல்லு’ என்று ஜொள் விட்டது மூஷிகா.

மணப்பெண் மெல்ல விசிலடித்தாள், ‘கமலா, விமலா’ என்று சத்தமாக அழைத்தாள்.

மறுவிநாடி, பக்கத்து வீட்டுக் கூரையிலிருந்து இரண்டு பூனைகள் கீழே குதித்தன, மூஷிகாவைத் துரத்த ஆரம்பித்தன.

அவ்வளவுதான், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓட்டமாக ஓடித் தப்பியது மூஷிகா. அதன்பிறகு அது எப்போதும் பேராசைப்படவில்லை.

***

என். சொக்கன் …

16 02 2012

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘Animal Farm’ (குறு?)நாவலை முதன்முறையாக வாசித்தபோது, எனக்கு அது ஒரு சாதாரணமான கற்பனைக் கதையாகவே தெரிந்தது. சொல்லப்போனால் அதை ஒரு வித்தியாசமான Fairy Tale என்றே நினைத்தேன்.

Fairy Tale சரி, அது என்ன ‘வித்தியாசமான’?

மற்ற தேவதைக் கதைகளைப்போலவே இந்தக் கதையிலும் மிருகங்கள் பேசிக்கொண்டன மனிதர்களை எதிர்த்துச் சண்டை போட்டன, ஹீரோக்களும் வில்லன்களும் இயல்பாக உருவானார்கள், பரவசமான காட்சிகளும் சந்தோஷங்களும் விவரிக்கப்பட்டன.

அதற்கப்புறம்தான் வித்தியாசமே, அதுவரை எல்லாவிதங்களிலும் சமமாக இருந்த மிருகங்களில் சில திடீரென்று மனம் மாறுவதும், பழைய வில்லன்களைப்போல் தங்களுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதும் இவையே மற்றவற்றை அடக்கி ஒடுக்கப் பார்ப்பதும் எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. கதையின் முடிவு தேவதைக் கதைகளைப்போல் சந்தோஷமாக இல்லாமல் துயரமாக இருந்ததும் ஒரு முக்கியமான வேறுபாடு.

ஆனால் இத்தனைக்குப்பிறகும், என்னுடைய மரமண்டைக்கு இந்தக் கதையின் ‘உள்செய்தி’ (பழந்தமிழில் சொல்வதென்றால் ‘இறைச்சிப் பொருள்’) புரியவில்லை. அதை ஒரு கற்பனைக் கதையாகமட்டுமே (ஜார்ஜ் ஆர்வெல்கூட இதனை ‘A Fairy Story’ என்றுதான் குறிப்பிடுகிறார்) எண்ணிப் படித்தேன், முழுமையாக ரசித்தேன்.

(‘Animal Farm’ முதல் பதிப்பின் முன்னட்டை

Image Courtesy : http://en.wikipedia.org/wiki/File:AnimalFarm_1stEd.jpg)

கொஞ்ச நாள் கழித்து ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக இந்தக் கதையைப் பற்றிப் பேச்சு வந்தது. ‘அட்டகாசமான ஃபான்டஸி சார்’ என்றேன் நான் பரவசமாக.

அந்த நண்பர் என்னை அற்பமாகப் பார்த்தார். ‘இதுல ஃபேண்டஸி எங்கே வந்தது? அந்தக் கதை  மொத்தமும் உண்மையாச்சே’ என்றார்.

‘உண்மையா? என்ன சார் சொல்றீங்க?’

அவர் உலகமே இடிந்து விழுந்துவிட்டதுபோல் பதறினார். ‘அடப் படுபாவி, அந்தக் கதை எதைப்பத்தினதுன்னு உனக்கு நிஜமாத் தெரியாதா?’ என்றார். ‘Animal Farm’ல் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வோர் இடமும் ஒவ்வோர் அசைவும் ரஷ்யா  / புரட்சி / கம்ப்யூனிஸ்ட் ஆட்சி போன்றவற்றை எப்படிக் குறிப்பிடுகிறது என்று நிதானமாக விளக்கிச் சொன்னார். நான் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

என்னுடைய ஆச்சர்யத்துக்கு முதல் காரணம், அதுவரை எனக்கு ஒரு புனைவாக(Fiction)மட்டுமே தோன்றிய ‘Animal Farm’ கதை அவர் பேசியபின்னர் திடீரென்று அபுனைவாக(Nonfiction) உருப்பெற்றுவிட்டது. அது வெறும் தேவதைக் கதை அல்ல, சென்ற நூற்றாண்டின் முதல் 40 வருடங்களாக ரஷ்யாவில் நடந்த நிகழ்வுகளை மறைமுகமாக விவரிக்கிற படைப்பு.

ஜார்ஜ் ஆர்வெல் நினைத்தால் ரஷ்யக் கம்யூனிஸ்ட் அரசுபற்றிய தன் விமர்சனத்தை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியிருக்கலாம். ஆனால் இந்தக் கதையின்மூலம் அவர் அதனை ஒரு கார்ட்டூன் / கேலிச் சித்திரம்போல் பதிவு செய்துவிட்டார். (நிச்சயம் ஒருசார்பான பதிவுதான், ஆனாலும் அது அற்புதமான படைப்பு என்பதில் சந்தேகமில்லை)

என்னைப்போன்ற மக்குப் பேர்வழிகள் இந்தக் கதையைச் ‘சும்மா’ படித்து ரசிக்கலாம், விஷயம் தெரிந்தவர்கள் அரசியல் கேலியை ஒப்பிட்டு மகிழலாம், இருதரப்பினருக்கும் திருப்தி தரக்கூடிய அபூர்வக் கலவை அந்தப் புத்தகம். அதுதான் ஜார்ஜ் ஆர்வெலின் மேதைமை.

அந்த நண்பரிடம் பேசியபிறகு, நான் இணையத்துக்குச் சென்று ‘Animal Farm’ கதையின் அரசியல் பின்னணி பற்றிப் படித்தேன். யார் லெனின், யார் ஸ்டாலின், யார் ட்ராட்ஸ்கி, யார் ஹிட்லர், கதையில் வரும் காற்றாலை எதைக் குறிக்கிறது, குதிரைகள் யார், கோழிகள் யார் என்றெல்லாம் வாசித்து ஒப்பிடும்போது நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. திடீரென்று கண் திறந்துவிட்டாற்போலிருந்தது.

அதன்பிறகு, மீண்டும் ஒருமுறை ‘Animal Farm’ கதையை முழுமையாகப் படித்துப்பார்த்தேன். (இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது : http://www.gutenberg.net.au/ebooks01/0100011h.html) ஜார்ஜ் ஆர்வெல் மேதைமட்டுமல்ல, செம குறும்புக்காரர் என்பது புரிந்தது. முன்பைவிடக் கூடுதலாக ரசிக்கமுடிந்தது.

சில வருடங்கள் கழித்து, ரஷ்ய உளவுத்துறையாகிய KGBபற்றி ஒரு புத்தகம் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ‘Animal Farm’ல் வரும் கொடூர நாய்களைதான் நினைத்துக்கொண்டேன்.

ஆச்சர்யமான விஷயம், இப்போது ரஷ்யாபற்றி நான் படித்த ஒவ்வொரு விவரமும் என்னை ‘Animal Farm’ கற்பனை உலகத்துக்குள் கொண்டுசென்றது. இந்த நிகழ்ச்சியை ஜார்ஜ் ஆர்வெல் அந்தக் கதையில் சேர்த்திருக்கிறாரா, இல்லை எனில் ஏன்? ஒருவேளை சேர்த்திருந்தால் அது எப்படி அமையும், எந்தக் கதாபாத்திரம் இதைச் செய்யும், அதனால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்றெல்லாம் பலவிதமாக யோசித்துச் சந்தோஷப்படத் தோன்றியது.

இப்போது, ‘Animal Farm’ புத்தகம் ‘விலங்குப் பண்ணை’ என்ற பெயரில் தமிழில் வந்திருக்கிறது. மொழிபெயர்த்திருப்பவர் பி. வி. ராமஸ்வாமி. கிழக்கு பதிப்பகம் வெளியீடு, 144 பக்கங்கள், விலை ரூ 85.

(Image Courtesy : https://www.nhm.in/shop/978-81-8493-521-9.html)

Animal Farm ஏற்கெனவே சிலமுறை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இணையத்தில்கூட எங்கேயோ அதைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் நான் இந்தக் கதையைத் தமிழில் முழுமையாக வாசித்தது இந்தப் புத்தகத்தில்தான்.

தமிழில் மொழிபெயர்ப்புகளே குறைவு, நல்ல மொழிபெயர்ப்புகள் அதைவிடக் குறைவு. எனக்குத் தெரிந்து இதுவரை மூன்று முறை வெவ்வேறு தமிழ் மொழிபெயர்ப்புகளை வாங்கி வாசித்துவிட்டு வெறுத்துப்போய் ஒரிஜினல் ஆங்கிலப் புத்தகங்களையே மீண்டும் காசு செலவழித்து வாங்கியிருக்கிறேன்.

இதனால், ‘விலங்குப் பண்ணை’யைக் கொஞ்சம் சந்தேகத்துடன்தான் கையில் எடுத்தேன். முடிந்தால் படிக்கலாம், இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை, ஏற்கெனவேதான் ஒரிஜினலை ரெண்டு முறை படித்தாகிவிட்டதே!

’விலங்குப் பண்ணை’யில் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்திய விஷயம், பி. வி. ராமஸ்வாமியின் சரளமான மொழி நடை. அதிநவீனமாகவும் இல்லை, அரதப்பழசாகவும் இல்லை, நாற்பதுகளில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைக் கிட்டத்தட்ட எழுபது வருடம் கழித்து வாசிக்கும்போது அதே உணர்வுகளைக் கொண்டுவருவதற்கு எத்தகைய மொழியைப் பயன்படுத்தவேண்டுமோ அதை மிகுந்த தேர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார்.

குறிப்பாக, இந்தக் கதையின் ஆன்மா, எத்தனை புரட்சிகள் வந்தாலும் அப்பாவி விலங்குகள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றன என்கிற செய்தி அதன் மெலிதான பிரசார தொனியுடன் அப்படியே இந்த மொழிபெயர்ப்பில் அழகாக இறங்கியிருக்கிறது. மற்றபடி சில பத்திகள் நீளமானவை, பயன்படுத்தப்பட்டிருக்கும் சில வார்த்தைகள் வழக்கில் இல்லாதவை என்பதுபோன்ற சிறு குறைகளெல்லாம் இரண்டாம்பட்சமே.

இன்னொரு விஷயம், கதையின் மிக முக்கியமான பகுதிகளில் மூல வடிவத்தைப் படிக்கும்போது வரும் அதே உணர்வுகள் (நான் அதை ஏற்கெனவே இருமுறை வாசித்திருந்தாலும்) இங்கேயும் பிசிறின்றி வருகின்றன. வார்த்தைக்கு வார்த்தை எனச் செய்யப்படும் (Transactional) மொழிபெயர்ப்புகளில் இது சாத்தியமே இல்லை. கதையின் தன்மையை உணர்ந்து மறு உருவாக்கம் செய்தால்தான் உண்டு.

உதாரணமாக, இந்தக் கதையின் மிக முக்கியமான பகுதிகளாக நான் நினைப்பது, மிருகங்கள் இணைந்து கட்டுகின்ற காற்றாலை இரண்டு முறை இடிந்து விழுவது, வயதான மிருகங்களின் நலவாழ்வுக்கென ஒதுக்கப்பட்ட நிலங்கள் பிடுங்கப்படுவது, பன்றிகள் சுகவாழ்க்கைக்குப் பழகிக்கொண்டு மற்ற மிருகங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்வது, பாக்ஸர் என்கிற கடும் உழைப்பாளிக் குதிரையிடமிருந்து சகல உழைப்பையும் பிடுங்கிக்கொண்டு அதைச் சக மிருகங்களே கசாப்புக் கடைக்காரனுக்கு விற்றுவிடுகிற காட்சி, எழுதப் படிக்கத் தெரிந்த, தெரியாத மிருகங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொய்ப் பிரசாரத்தின்மூலம் மூளை மழுங்கச்செய்யப்படுவது, திடீரென்று தோன்றும் வேட்டை நாய்கள் நிகழ்த்தும் கொடூரங்கள்… இந்தக் காட்சிகள் ஒவ்வொன்றிலும் எழவேண்டிய தன்னிரக்கம், கோபம், ஆத்திரம், சோகம், பயம் போன்ற உணர்வுகள் அனைத்தும் தமிழ் மொழிபெயர்ப்பில் மறுபடி வாசிக்கும்போதும் அதேபோல் எழுகின்றன. இதற்கு ஒருபாதிக் காரணம் ஜார்ஜ்  ஆர்வெல் என்றால், இன்னொருபாதிக் காரணம் பி. வி. ராமஸ்வாமியின் மொழிபெயர்ப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் இதுதான். நீங்கள் இதுவரை ‘Animal Farm’ வாசித்ததில்லை என்றால், தாராளமாக இதை நம்பி வாங்கலாம். அதற்கு நீங்கள் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை, என்னைப்போல் அரசியல் தெரியாத கோயிந்துகளாலும் ரசிக்கமுடிகிற படைப்பு இது.

***

என். சொக்கன் …

28 01 2012

நான் எழுதிய Infosys நாராயணமூர்த்தி வாழ்க்கை வரலாறு தற்போது ஹிந்தியில் வெளியாகியுள்ளது. மொழிபெயர்த்தவர்: மகேஷ் ஷர்மா. வெளியீடு: பிரபாத் பிரகாஷன் (நியூ ஹொரைசான் மீடியா வழியாக), டெல்லி. விலை: ரூ 200/-

Infosys_Narayana_Murthy_Hindi_Prabhat_Prakashan_N_Chokkan

’நாராயண’மூர்த்தி என்று பெயர் வைத்ததால்தானோ என்னவோ, ஏற்கெனவே இந்தப் புத்தகம் தமிழில் மூன்று, ஆங்கிலத்தில் இரண்டு, மலையாளத்தில் ஒன்று என ஐந்து ஆறு அவதாரங்கள் எடுத்திருக்கிறது. இப்போது ஏழாவதாக ஹிந்தி அவதாரம். இன்னும் மூன்றுதான் பாக்கி 🙂

Infosys நாராயணமூர்த்திஇன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்திஒலிப்புத்தகம்: இன்ஃபோசிஸ்  நாராயணமூர்த்தி

Narayana Murthy - IT GuruNarayana Murthy ഇന്‍ഫോസിസ്‌ നാരായണമൂര്‍ത്തി

***

என். சொக்கன் …

16 10 2009

Update – 17 நவம்பர் 2009

எட்டாவது அவதாரம் – குஜராத்தியில் – Narayana Murthy: Mulyona Jatanni Anokhi Safar – மொழிபெயர்ப்பு: ஆதித்ய வாசு – வெளியீடு: R. R. Sheth & Co., – 120 பக்கங்கள் – விலை ரூ 90/-

நேற்று Twilight நாவலின் ரத்தக் காட்டேரிக் கதாநாயகனைப்பற்றி எழுதியபோது குறிப்பிட மறந்த ஒரு விஷயம்:

Bram Stokerன் புகழ் பெற்ற (& முன்னோடி) ரத்தக் காட்டேரிப் புதினம் ‘டிராகுலா’ இப்போது தமிழில் மலிவுப் பதிப்பாகக் கிடைக்கிறது. வெளியீடு: ‘இனிய உதயம்’  ஏப்ரல் 2009 இதழ், மொழிபெயர்ப்பு: ஜெகாதா, விலை: ரூ 10/-

மொழிபெயர்ப்புத் தரம் எந்த அளவு நன்றாக இருக்கும் என்று சொல்லமுடியாது. பத்து ரூபாய்தானே, சும்மா முயற்சி செய்யலாம்! (நான் வாங்கிவிட்டேன், இன்னும் படிக்கவில்லை!)

UPDATE: இந்த மொழிபெயர்ப்பு வடிவம் இணையத்தில் முழுமையாகக் கிடைக்கிறது என்று ஒரு நண்பர் மின்னஞ்சல்மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவருக்கு நன்றி : http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=1779

***

என். சொக்கன் …

06 04 2009

சில வாரங்களுக்குமுன்னால், Stephenie Meyer என்பவர் எழுதிய ’Twilight’ நாவலை அவசியம் வாசிக்கும்படி ஒரு நண்பர் சிபாரிசு செய்தார். கூடவே, ‘இந்த எழுத்தாளர் ஹாரி பாட்டர் ஜே. கே. ரௌலிங்கிற்கு இணையாக எழுதுகிறார்’ என்று ஓர் ஒப்பீட்டையும் கொளுத்திப் போட்டார்.

நான் ஜே. கே. ரௌலிங்கின் தீவிர வாசகன். அவரைப்போல் இவர் எழுதுகிறார் என்று கேள்விப்பட்டதும், ‘ஹா, ரௌலிங்மாதிரி இன்னொருத்தரா, அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே கிடையாது’ என்று ஒருபக்கம் அவநம்பிக்கைப்பட்டேன், ‘ஒருவேளை, அப்படி இருந்துவிட்டால்?’ என்று இன்னொருபக்கம் நம்பிக்கையும் தோன்றியது.

ஹாரி பாட்டர் வரிசை நாவல்களுக்கு ரௌலிங் மூடு விழா நடத்தியதில் இருந்து, என்னைப்போன்ற பாட்டர் பிரியர்களுக்கு அவஸ்தைதான். நடுவில் அவர் எழுதி வெளிவந்த ’இத்தனூண்டு’ சிறுகதைப் புத்தகம் எங்கள் யானைப் பசிக்குச் சோளப்பொறியாகக்கூட அமையவில்லை.

அந்த வெற்றிடத்தை, Twilight வரிசை நாவல்கள் நிரப்புமா? ஹாரி பாட்டர் தரத்துக்கு Creativeஆக இல்லாவிட்டாலும், அதில் நான்கில் ஒரு பங்கைத் தொட்டால்கூடப் போதும் என்கிற எதிர்பார்ப்புடன்தான் நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்கினேன்.

File:Stephenie Meyer Eclipse Tour.jpg

முதல் அத்தியாயத்திலிருந்தே, Stephenie Meyer கதை சொல்லும் விதம் என்னை ஈர்த்துவிட்டது. மிகவும் நிதானமான, விளக்கமான சூழ்நிலை வர்ணனைகளுடன் கதாபாத்திரங்களை சாங்கோபாங்கமாக அறிமுகப்படுத்தி வாசகர்களை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டு, அதன்பிறகு சீரான வேகத்தில் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னகர்த்திச் செல்கிற ’பழைய’ உத்தியை மிக அழகாகப் பயன்படுத்தியிருந்தார் அவர்.

அதேசமயம், சில அத்தியாயங்களுக்குப்பிறகு இந்த பாணிக் கதை சொல்லல் எனக்கு அலுத்துவிட்டது. குறிப்பாகக் கதையில் வரும் கதாநாயகி எதற்கெடுத்தாலும் யோசியோ யோசி என்று யோசித்துக்கொண்டிருப்பது வெறுப்பேற்றியது.

டீன் ஏஜ் பெண்கள் இப்படியா தலை முடி அலங்காரத்திலிருந்து ஒவ்வொன்றுக்கும் அடுத்தவர்கள் அதைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று யோசித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்? ஒருவேளை அப்படியே இருந்தாலும்கூட, அந்தச் சிந்தனை ஓட்டங்களைப் பக்கம் பக்கமாக ‘அப்படியே’ பதிவு செய்வதன்மூலம் கதையின் சுவாரஸ்யம் கெட்டுப்போய்விடுகிறது. வெகுஜனக் கதையாகவும் இல்லாமல், இலக்கியப் படைப்பாகவும் இல்லாமல் நடுவே திகைத்துப்போய் நிற்கிறது நாவல்.

இதைப்பற்றியெல்லாம் ஆசிரியர் Stephenie Meyer கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஜே. கே. ரௌலிங்கின் ’எல்லோரும் விரும்பிப் படிக்கும்படி சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் திறமை’யில் ஒரு சதவிகிதத்தைக்கூட இவரால் எட்டிப்பிடிக்கமுடியாது என்று எனக்குப் புரிந்துவிட்டது.

இத்தனைக்கும், Twilight நாவலின் கதாநாயகன், அவனுடைய குடும்பத்தினர் எல்லோரும் ரத்தக் காட்டேரிகள் (Vampires). இவர்களும் வழக்கமான (நம்மைப்போன்ற) பொதுஜனங்களும் சேர்ந்து வாழ்வதை வைத்து எத்தனையோ சுவாரஸ்யமான பிரச்னைகள், காட்சிகளைப் பின்னலாம். ‘Muggle’ என்கிற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ஜே. கே. ரௌலிங் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறார்!

ஆனால், Stephenie Meyer என்ன செய்கிறார்? மில்ஸ் & பூன் கதையில் தெரியாத்தனமாக ஒரு ரத்தக் காட்டேரி நுழைந்துவிட்டதுபோல் முழுக்க முழுக்க ரொமான்ஸ் நாவலாகவே இதனை எழுதிச் செல்கிறார். இதனால் அவர் முன்வைக்கிற திடுக்கிடும் திருப்பங்கள்கூட, தேனில் நனைத்த மிளகாய் பஜ்ஜிபோல் அசட்டுத் தித்திப்பாக இருக்கின்றன.

Stephenie Meyerமேல் தப்பில்லை. அவர் Twilight வரிசை மொத்தத்தையும் ஒரு ரொமான்ஸ் நாவலாக நினைத்துதான் எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. தனது முக்கிய வாசகர்களான டீன் ஏஜ் பெண்களைத்தவிர வேறு யாரையும் அவர் திருப்தி செய்ய நினைக்கவில்லை. அத்தனை இனிப்பு, அத்தனை ’பிங்க்’தனம் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை.

File:Book jacket of Twilight.jpeg

எனக்கு இந்த நாவலைச் சிபாரிசு செய்த அந்த நண்பரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர் அகப்பட்டால், ‘Twilight நல்ல நாவல்தான். ஆனால் ஜே. கே. ரௌலிங் பாணி வேறு, Stephenie Meyer பாணி வேறு. இருவரையும் இனிமேல் ஒப்பிடமாட்டேன்’ என்று ஆயிரத்தெட்டு முறை இம்போஸிஷன் எழுதச் சொல்லவேண்டும்.

Twilight நாவலைப் படித்து முடித்தபிறகு, அதைப்பற்றி இணையத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சுவாரஸ்யமான செய்தி கண்ணில் பட்டது.

இந்த நாவல்முழுவதும் ’பெல்லா’ என்கிற கதாநாயகியின் பார்வைக் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. அவளுக்கும் எட்வர்ட் எனும் ரத்தக் காட்டேரிக்கும் ஏற்படுகிற காதல்தான் கதையின் முக்கியமான முடிச்சு.

நாவல் வெளியாகி, நன்கு பிரபலமடைந்தபிறகு, இதே கதையை எட்வர்ட் கோணத்திலிருந்து மறுபடியும் எழுத முயற்சி செய்திருக்கிறார் Stephenie Meyer. சில பிரச்னைகளால் அந்த ‘இன்னொரு’ நாவல் பாதியில் நின்றுவிட்டது.

ஆனால், ஒரே கதையை, வெவ்வேறு கோணங்களில் இருந்து சொல்லமுடியும் என்கிற யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்மூலம் நமக்குப் பல புதிய தரிசனங்கள் கிடைக்கக்கூடும்.

திரைப்படங்களில் இந்த உத்தி நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் எழுத்தில்? வாசகர்களுக்கு ஒரே விஷயத்தை ’மறுபடி’ வாசிக்கிறோம் என்கிற எண்ணம் ஏற்பட்டு அலுப்பூட்டாமல், சுவாரஸ்யம் குறையாமல் இதனைச் செய்யமுடியுமா? பெரிய சவால்தான்.

Stephenie Meyer இதனை எந்த அளவு சிறப்பாகச் செய்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் நான் படித்த இன்னொரு புத்தகம், நாம் பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப ஒரே திசையிலிருந்து பார்த்து வந்த ஒரு விஷயத்துக்குப் புதிய ஒரு கோணத்தைக் காண்பித்தது.

Twilightபோல, அது புனைகதை (Fiction) நூல் அல்ல. ஒரு தனி மனிதரின் வாழ்க்கையைச் சொல்லும் சுயசரிதைப் புத்தகம். ஆனாலும், ஒரு க்ரைம் நாவலுக்கு இணையான சுவாரஸ்யத்தை அதில் பார்க்கமுடிந்தது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃபின் சுயசரிதையான ‘In The Line Of Fire’, தமிழில் ‘உடல் மண்ணுக்கு’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. மொழிபெயர்ப்பு: நாகூர் ரூமி. (கிழக்கு பதிப்பகம் வெளியீடு – 511 பக்கங்கள் – விலை ரூ 250/-)

உடல் மண்ணுக்கு

இந்தியாவில் உள்ள நமக்கு, பாகிஸ்தான் எப்போதும் ஓர் எதிரி தேசமாகமட்டுமே அறிமுகமாகியிருக்கிறது. எங்கேனும் இந்தியா – பாகிஸ்தான் மக்கள் ஒருவருக்கொருவர் நேசமாகப் பழகினார்கள், பரஸ்பரம் உதவிக்கொண்டார்கள் என்பதுபோன்ற செய்திகள், அனுபவக் கட்டுரைகளைப் பார்த்தால்கூட, அது நிச்சயமாக ஒரு விதிவிலக்காகதான் நமக்குத் தோன்றுகிறது.

இதனால், நம்மைப் பொறுத்தவரை பாகிஸ்தான் மக்கள் எல்லோரும் ரௌடிகள். நமது எல்லைப் பகுதிக் கம்பி வேலிகளில் ஒரு சின்ன இடைவெளி தென்பட்டால்கூட உடம்பைக் குறுக்கிக்கொண்டு உள்ளே நுழைந்து அட்டூழியம் செய்கிறவர்கள்.

அடுத்து, இந்தியாவின் ராணுவ பலத்தோடு ஒப்பிட்டால், பாகிஸ்தான் ஒரு சின்னத் தூசு. ஆனால் நாமாக யாரையும் தாக்கவேண்டாம் என்று இந்தியா கௌரவமாக ஒதுங்கியிருப்பதால், ‘டாய், நான் யார் தெரியுமா? பிச்சுடுவேண்டா’ என்று ’அடாவடி மைனர்’கள்போல் பாகிஸ்தான் ஆட்டம் போடுகிறது.

கடைசியாக, இந்தியா நினைத்தால் ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் அரை நொடியில்(?) அழித்துவிடலாம். போனால் போகிறது, நம்மிடமிருந்து பிரிந்து சென்ற சின்னப் பையன்கள்தானே என்று நாம் அவர்களை விட்டுவைத்திருக்கிறோம்.

இப்படி பாகிஸ்தான்பற்றி ஏகப்பட்ட ‘நம்பிக்கை’களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் நாம். இவையெல்லாம் உண்மையா, பொய்யா, அல்லது இரண்டும் கலந்த கலவையா என்றுகூட யோசிக்கவிடாமல் நம் மீடியாக்கள் பார்த்துக்கொள்கின்றன.

இதுபோன்ற ஒரு சூழலில், பர்வேஸ் முஷரஃபின் இந்தச் சுயசரிதை ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தை நமக்குக் காட்டுகிறது. கடந்த அறுபத்து சொச்ச ஆண்டுகளில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த நல்லது, கெட்டதுகளை அங்குள்ள ஒருவரின் பார்வையில் வாசிக்கமுடிகிறது.

இதைக் கேட்பதற்கு உங்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் புத்தகம் வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள், இது மிகவும் கசப்பான மருந்து என்பது புரிந்துவிடும்.

காரணம், நாம் இதுவரை கேட்டுப் பழகிய, உண்மையான உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிற விஷயங்கள் எல்லாவற்றிற்கும், இன்னொரு கோணம் இருக்கமுடியும் என்கிற விஷயமே நமக்குப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. நமக்கு மிகவும் பிடித்த, நாம் மிகவும் மரியாதை செலுத்துகிற ஒரு பிரபலத்தைப்பற்றி யாராவது குறை சொன்னால் திடுதிப்பென்று ரத்தம் கொதிக்குமே. அதுபோன்ற ஓர் உணர்வுதான் இந்தப் புத்தகம் முழுக்க.

’உதாரணமாக, தனது ராணுவ வாழ்க்கையைச் சொல்லும் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில், பர்வேஸ் முஷரஃப் சர்வ சாதாரணமாக ‘எதிரி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அது இந்தியாவைதான் குறிப்பிடுகிறது என்று உணரும்போது சட்டென்று நம் உடல் விறைத்துக்கொள்கிறது. ’இந்தியாவைப்போய் எதிரி என்று குறிப்பிடுகிறாரே. இந்த ஆளுக்கு என்ன பைத்தியமா?’ என்று அபத்தமாக ஒரு கேள்வி தோன்றுகிறது.

இந்தியாவின் பார்வையில் பாகிஸ்தானிகள் எல்லோரும் ரௌடிகளாகத் தோன்றினால், அங்குள்ள மீடியாக்கள் நம்மையும் ரௌடிகளாகதானே சித்திரிக்கும்? நாம் ‘பாகிஸ்தான் ஊடுறுவல்’ என்று சர்வ சாதாரணமாகக் குறிப்பிடும் விஷயத்திற்கு, அவர்கள் கோணத்தில் வேறொரு நியாயம் இருக்குமில்லையா? அது உண்மையோ, பொய்யோ அதை நேரடியான வார்த்தைகளில் முஷரஃப் சொல்லும்போது, நெளியவேண்டியிருக்கிறது.

முஷரஃப் இத்துடன் நிறுத்துவதில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்கள் ஒவ்வொன்றிலும், அவர் தன் பக்கத்து விளக்கத்தைத் தருகிறார். இந்தச் சிறிய, பெரிய யுத்தங்கள் அனைத்திலும், பாகிஸ்தான் ராணுவம்தான் வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிடுகிறார்.

இதற்கு ஒரு சிறிய உதாரணமாக, கார்கில் யுத்தத்தை எடுத்துக்கொள்ளலாம். இதுபற்றி நமக்குத் தெரிந்த (அல்லது, நமக்குச் சொல்லப்பட்டிருக்கும்) தகவல்கள் என்ன?

பாகிஸ்தான் ராணுவம் நம் எல்லைக்குள் அத்துமீறி ஊடுறுவியது. கார்கில் எனும் குளிர் பிரதேசத்தில் நமது ராணுவ வீரர்கள் தைரியமாகப் போரிட்டு பாகிஸ்தானிகளைத் துரத்தியடித்தார்கள். தப்புச் செய்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு நல்ல சூடு கிடைத்தது. சரியா?

’ம்ஹூம், இல்லவே இல்லை’ என்கிறார் முஷரஃப். ’இந்திய ராணுவம்தான் எல்லையில் ஊடுறுவி எங்களைத் தாக்க முயன்றது. வேறு வழியில்லாமல் நாங்கள் பதிலுக்குத் தாக்கி அவர்களை விரட்டியடித்தோம், இந்தப் போரில் எங்களுக்குதான் மகா வெற்றி. அதை ஜீரணித்துக்கொள்ளமுடியாமல் இந்தியா சர்வதேச அரங்கில் என்னென்னவோ கதைகளைச் சொல்லி எங்கள்மேல் சேறு பூசியது. அரசியல் அழுத்தம் கொடுத்து எங்கள் ராணுவத்தைப் பின்வாங்கச் செய்துவிட்டு, அவர்களே போரில் ஜெயித்ததுபோல் ஒரு பொய்யை ஜோடித்துவிட்டது’

கார்கில் யுத்தத்தில்மட்டுமில்லை. பாகிஸ்தான் எனும் தேசம் உருவானதுமுதல், பல சந்தர்ப்பங்களில் இந்திய ராணுவம் அவர்களுடைய எல்லையில் விஷமம் செய்துவந்திருப்பதாகச் சொல்கிறார் முஷரஃப். ஒவ்வொருமுறையும் பாகிஸ்தான் ராணுவம் சரியான பதிலடி கொடுத்து ஊடுறுவல் முயற்சிகளை முறியடித்திருக்கிறதாம்.

பர்வேஸ் முஷரஃப் அரிச்சந்திரன் இல்லை. அவர் சொல்வதெல்லாம் 100% நிஜம் என்று யாரும் (முக்கியமாக இந்தியர்கள்) ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அதேசமயம், கார்கில் யுத்தம் போன்ற முக்கியமான நிகழ்வுகளைப்பற்றிய நமது ஊடகப் பதிவுகள் முழுக்க நேர்மையானவைதானா என்கிற கேள்வியும் இதன்மூலம் எழுகிறது. முஷரஃப் சொல்வது பொய் என்று நிராகரிக்கும் உரிமை நமக்கு இருப்பதுபோல், அவர்களும் நமது கோணத்தை நிராகரிக்கலாம் இல்லையா? இந்தியா, பாகிஸ்தான் விஷயத்தில் மிகைப்படுத்துதல் இல்லாத உண்மையான உண்மை எங்கே இருக்கிறது?

இன்றைக்கு பர்வேஸ் முஷரஃபை ஒரு தோல்வியடைந்த ஆளுமையாகச் சொல்கிறவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அதேசமயம், ’சரிவுப் பாதையில் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தானை அவர்தான் கியர் மாற்றி உருப்படியாக்கினார்’ எனும் பாராட்டுகளும் ஆங்காங்கே கேட்கின்றன. இந்த விஷயத்திலும், ’உண்மையான உண்மை’ நமக்குக் கிடைப்பது சிரமம்தான்!

ஆனால் ஒன்று, இந்தப் புத்தகம் காட்டும் முஷரஃப் மிகவும் மாறுபட்டவர். பின்னட்டைக் குறிப்பு சொல்வதுபோல், அவர் ஒரு மிகத் தேர்ந்த சித்திரிப்பாளராக இந்நூலில் அறிமுகமாகிறார்.

முக்கியமாக, புத்தகத்தின் முதல் பாகத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். முஷரஃபின் இளமைப் பருவத்து நினைவுகள், ராணுவத்தில் சேர்ந்த கதை, அங்கே அவர் சந்தித்த ஆரம்ப கால அனுபவங்கள் போன்றவை மிக மிகச் சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் புத்தகத்தை நான் வாசிக்கத் தொடங்கிய நேரம். ’எனக்கு ஏதாவது கதை சொல்லுப்பா’ என்று கேட்டுக்கொண்டு வந்தாள் நங்கை.

எனக்குப் புத்தகத்தை மூடி வைக்கவும் மனம் இல்லை. அவளை ஏமாற்றவும் விரும்பவில்லை. ஆகவே, முஷரஃபின் சின்ன வயதுக் கதைகளைப் படித்து அவளுக்குச் சொல்ல ஆரம்பித்தேன்.

அடுத்த அரை மணி நேரத்துக்குள் முதல் ஐந்து அத்தியாயங்களை வாசித்து, அவளுக்குச் சுருக்கமாக விவரித்தாகிவிட்டது. அவளும் அம்புலி மாமாக் கதை கேட்கும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். முன் அட்டையைக் காண்பித்து, ‘இதுதான் முஷரஃப் மாமாவா?’ என்று சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டாள்.

அதன்பிறகு, முஷரஃபின் ராணுவ வாழ்க்கை அனுபவங்கள் தொடங்கின. ’அதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சுக் கேட்டுக்கலாம்’ என்று அவளை விரட்டிவிட்டேன்.

ஆரம்ப காலத்திலிருந்து ராணுவத்தில் தான் படிப்படியாக வளர்ந்த கதையை மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார் முஷரஃப். ஆரம்பத்தில் அடாவடி இளைஞராக எல்லோரையும் முறைத்துக்கொண்டு இருந்தவர், பிறகு ராணுவத்தின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டு, பேச்சைக் குறைத்து, செயலைக் கூட்டி, அடிமட்டம்முதல் எல்லோருடனும் கலந்து பழகி, கோஷ்டி அரசியலைப் புரிந்துகொண்டு, அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது எப்படி என்று கணக்குப் போட்டு, அடுத்தடுத்த வளர்ச்சிகள் என்ன என்று திட்டமிட்டு … தனக்கென்று அவர் ஒரு தொண்டர் படையை எப்படி அணு அணுவாகச் சேர்த்திருக்கிறார் என்று வாசிக்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவத்தில் முஷரஃப் வளர்ந்த கதை, ‘Team Building’ எனும் கலைக்கான ஒரு நல்ல உதாரணம். வெவ்வேறு தருணங்களில் தன்னை முன்னிறுத்திக்கொள்வது எப்படி என்பதைமட்டும் மிகச் சரியாகச் செய்து, அதன்மூலம் அதிவேகமான ஒரு வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறார் அவர்.

ஐநூறு பக்கங்களுக்குமேல் விரியும் இந்தப் பெரிய புத்தகத்தின் மிக முக்கியமான பகுதி, மூன்றாவது பாகம் – நவாஸ் ஷெரீஃப் முஷரஃபை விமானத்துடன் கடத்தப் பார்த்த கதை. இந்த அறுபது பக்கங்களில் நாம் பார்க்கும் திருப்பங்கள், விறுவிறுப்பு எல்லாம் Best Seller க்ரைம் இலக்கியங்களில்கூடக் கிடைக்காது.

யோசித்துப் பாருங்கள். எந்தவிதமான தகவல் தொடர்பும் இல்லாமல் மேலே வானத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். அவருடைய விமானத்தில் எரிபொருள் குறைந்துகொண்டிருக்கிறது. அவரை பாகிஸ்தானில் எங்கேயும் தரையிறங்க விடுவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கிறது பாகிஸ்தான் அரசாங்கம்.

இந்தச் சூழ்நிலையில், முஷரஃப் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், கட்டளையிடாமல் அவரது தொண்டர் படையினர் ஒரு ராணுவப் புரட்சியினைத் தொடங்கி நடத்துகிறார்கள். விமானத்தில் எரிபொருள் தீர்ந்து காலியாவதற்குச் சற்று முன்னே, அவரைப் பத்திரமாகக் கீழே கொண்டுவருகிறார்கள். தரையிறங்கியதும் அவர் நேராகச் சென்று ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எல்லாம் மிகக் கச்சிதமாக நடந்து முடிகிறது.

அப்படியானால், இந்தக் கடத்தல் நாடகத்துக்கு முன்னால் முஷரஃப் எத்தனை கவனத்துடன் திட்டமிட்டு உழைத்திருக்கவேண்டும் என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது. முஷரஃப் சொல்வதுபோல் இந்த எதிர்ப் புரட்சி ‘சட்டென்று’ நடந்த ஒரு விஷயமாக இருக்க வாய்ப்பே இல்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே ஊகித்து, அப்படி நடந்துவிட்டால் என்ன செய்யவேண்டும் என்று தனது குழுவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துத் தயார் நிலையில் வைத்திருந்தால்மட்டுமே இது சாத்தியம். Crisis Managementக்கு இதைவிடக் கச்சிதமான ஓர் உதாரணம் கிடைக்காது.

நிற்க. இதற்குமேல் தொடர்ந்து எழுதினால், பர்வேஸ் முஷரஃபை ஒரு ’மேனேஜ்மென்ட் குரு’வாகவே நான் அங்கீகரித்துவிடுவேன். ஆகவே, இந்தப் புத்தகத்தின் கடைசிப் பகுதியைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.

முஷரஃப் ஆட்சிக்கு வரும்வரை ஒரு விறுவிறுப்பான மசாலாப் படம்போல் விரியும் இந்தப் புத்தகம், அதன்பிறகு ‘முஷரஃப் முன்னேற்றக் கழக’த்தின் தேர்தல் அறிக்கைபோலத் தடம் மாறிவிடுகிறது. ஆட்சிக்கு வந்தபின் நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன், இதையெல்லாம் வேறு யாரும் செய்திருக்கமுடியாது என்று திரும்பத் திரும்ப ஒரேமாதிரி சொல்லிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். கூடவே, தன்னுடைய அரசாங்கத்தின் செயல்கள் ஒவ்வொன்றையும் நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளும்.

எவ்வளவு எழுதி என்ன? முஷரஃபை உலக உத்தமராக யாரும், அவருடைய சொந்தத் தேசத்தினர்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சுயசரிதை எழுதப்பட்டபோது பாகிஸ்தான் அதிபராக உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருந்த அவர், இப்போது இருந்த சுவடு தெரியாமல் போய்விட்டார்.

இதிலும் ஒரு மேனேஜ்மென்ட் தத்துவம் இருக்கிறதோ?

***

என். சொக்கன் …

05 04 2009

இலங்கையில் ஓர் அரசன். அவனுக்கு இரண்டு மகன்கள்.

தன்னுடைய மகன்களுக்கு நல்ல குணங்களைச் சொல்லிக் கொடுக்க நினைத்த அரசன், ஐநூறு புத்த பிட்சுகளை அழைக்கிறான். அவர்களுக்கு நல்ல விருந்துச் சாப்பாடு போட்டு உபசரிக்கிறான்.

விருந்து முடிந்தபிறகு, பிட்சுக்கள் எல்லோரும் சாப்பிட்டு மீதி இருக்கும் உணவை அரசன் மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறான். அதைத் தனித்தனி தட்டுகளில் வைத்துவிட்டு, தன் மகன்களை அழைக்கிறான்.

’கண்ணுங்களா, நம்ம குடும்பத்தை, குலத்தைப் பாதுகாக்கிறவர்கள் இந்த பிட்சுகள்தான். அவர்களை எப்போதும் மறக்கமாட்டோம்-ங்கற நினைப்போட இந்த முதல் தட்டில் உள்ள உணவைச் சாப்பிடுங்க’

அரசனின் மகன்கள் மறுபேச்சு இல்லாமல் அந்தச் சாப்பாட்டை உண்டு முடிக்கிறார்கள். அடுத்து, இரண்டாவது தட்டைக் காண்பிக்கிறான் அரசன்.

‘அண்ணன், தம்பி நீங்க ரெண்டு பேரும் எப்போதும் சண்டை போட்டுக்கக்கூடாது, ஒண்ணா ஒற்றுமையா வாழணும், அந்த உறுதியோட இந்த ரெண்டாவது தட்டில் உள்ள உணவைச் சாப்பிடுங்க’

மறுபடியும், அரசனின் மகன்கள் மகிழ்ச்சியோடு சாப்பிடுகிறார்கள். அரசன் கடைசியாக மிச்சம் உள்ள மூன்றாவது தட்டைக் காண்பித்துச் சொல்கிறான்:

‘நம்ம ஊர்ல உள்ள தமிழர்களோட நீங்க எப்பவும் சண்டை போடக்கூடாது, அதுக்காக இந்த மூணாவது தட்டில் உள்ள உணவைச் சாப்பிடுங்க’

இப்போது, அந்த இளவரசர்களின்  முகம் மாறுகிறது. தட்டைத் தள்ளிவிடுகிறார்கள், சாப்பிட மறுத்துவிடுகிறார்கள்.

ஒருபக்கம், பத்து, பன்னிரண்டு வயதுச் சின்னப் பையன்களுக்குச் சக மனிதர்கள்மீது இத்தனை வெறுப்பா, பகைமை உணர்ச்சியா என்கிற கேள்வி. இன்னொருபக்கம், இன்றைய இலங்கையில் நடைபெறும் படுகொலைகளின் பின்னணியில் இந்தக் கதையை யோசித்துப் பார்க்கும்போது, நிஜமாகவே அதிர்ச்சியாகதான் இருக்கிறது.

இந்தக் கதை இடம்பெற்றிருக்கும் நூல், மகா வம்சம். கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் மஹாநாம தேரா என்பவரால் தொகுக்கப்பட்ட இந்தப் புத்தகம், இலங்கையின் பூர்வ சரித்திரமாக மதிக்கப்படுகிறது.

நிஜமாகவே மகா வம்சம் சரித்திரம்தானா? அல்லது, முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்ட கதைகள், மிகை உணர்ச்சிகளின் தொகுப்பா? உண்மை இந்த இரண்டுக்கும் நடுவில் எங்கோ இருக்கலாம்.

சில ஆண்டுகளுக்குமுன்னால் ஏதோ ஒரு பத்திரிகைக் கட்டுரைக்கான ஒரு தகவலைத் தேடி மகா வம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது அதில் ஆங்காங்கே தென்பட்ட ‘மேஜிக்கல்’ அம்சங்கள் வியப்பூட்டின. பின்நவீனத்துவ பாணியில் ஓர் இதிகாசத்தை யாரோ எழுதியிருக்கிறார்கள் என்பதுபோல் அரைகுறையாகப் புரிந்துகொண்டேன். அத்துடன் அதை மறந்துவிட்டேன்.

அதன்பிறகுதான் மகா வம்சம் தமிழில் வெளிவந்தது. இதனை மொழிபெயர்த்திருப்பவர், ஆர். பி. சாரதி. (கிழக்கு பதிப்பக வெளியீடு – ஜனவரி 2007 – 238 பக்கங்கள் – விலை: ரூ 130/-)

மகாவம்சம்

இந்த நூலின் பின்னட்டையிலிருந்து ஒரு வாசகம்:

சிங்களப் பேரினவாதம்’ என்று தமிழர்களால் வருணிக்கப்பட்டு, இன்றளவும் இலங்கையில் கொழுத்து விட்டெரியும் இனப் பிரச்னையின் வேர், மகாவம்சத்தில் இருந்துதான் உதிக்கிறது. அதனால்தான், சர்ச்சைக்குரிய ஒரு நூலாக மகா வம்சம் கருதப்படுகிறது

மகா வம்சத்தைத் தமிழர்கள் ஏற்கிறார்களோ, புறக்கணிக்கிறார்களோ, சிங்களவர்கள் இதனை ஒரு புனித நூலாகக் கருதுகிறார்கள். மூன்றாவது தட்டுச் சோற்றைச் சாப்பிட மறுத்த இளவரசர்களைப்போல, அவர்கள் முரட்டுத்தனமாகத் தமிழர்கள்மீது இன்னும் பகைமை கொண்டிருப்பதன் ஆதி காரணம் இதுவாக இருக்கலாம்.

அப்படி என்னதான் சொல்கிறது மகா வம்சம்?

நம் ஊர் ராமாயணம், மகா பாரதம்போல் மகா வம்சத்தில் சுவாரஸ்யமான ஒரு கதைத் தொடர்ச்சி இல்லை. வரிசையாக இலங்கையை ஆண்ட அரசர்களின் வாழ்க்கைக் கதைதான். ஏதோ ஓர் அரசர், அவருடைய புத்த மதப் பிரியம், பிட்சுக்கள்மீது அவர் செலுத்திய மரியாதை, கட்டிய கோவில்கள், நிகழ்த்திய மதமாற்றங்கள், அப்புறம் அடுத்த அரசர் என்று கோடு போட்டதுபோல் நீண்டு செல்லும் பதிவுகள்.

மதன் எழுதிய ‘வந்தார்கள், வென்றார்கள்’ படித்தவர்களுக்கு மகா வம்சம் செம போர் அடிக்கும். காரணம், முகலாய ஆட்சியின் மிகச் சுவாரஸ்யமான சம்பவங்களை நேர்த்தியாகத் தொகுத்துச் சுவையான கதைப் பின்னணியில் விவரித்திருந்தார் மதன். அதற்கு நேரெதிராக, மகா வம்சத்தில் ஒரே கதையைப் பல அத்தியாயங்களாகக் காபி – பேஸ்ட் செய்து படிப்பதுபோல் இருக்கிறது.

ராமாயணம், மகாபாரதம், முகலாய சரித்திரம், மகா வம்சம் நான்கையும் ஒரே புள்ளியில் வைத்து ஒப்பிடுவது சரியில்லைதான். ஆனாலும், மகா வம்சம்மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் படிக்கத் தொடங்கியவர்களுக்கு அது ஓர் ஒழுங்கற்ற கட்டமைப்பு கொண்ட பிரதியாகத் தோன்றுவது சாத்தியமே.

நல்லவேளையாக, ஆர். பி. சாரதி அவர்களின் சரளமான தமிழ் மொழிபெயர்ப்பு வாசிக்கச் சுகமாக இருக்கிறது. குறிப்பாக, ஆங்காங்கே தென்படும் மாந்த்ரீக எதார்த்த (Magical Realism) அம்சங்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. உதாரணத்துக்குச் சிலது:

  • ஓர் இளவரசி, யாத்திரை போகிறாள். அவள் போன கோஷ்டியை ஒரு சிங்கம் தாக்குகிறது. ஆனால், அவளைப் பார்த்ததும் காதல் கொண்டு, வாலை ஆட்டிக்கொண்டு, காதுகளைப் பின்னே தள்ளிக்கொண்டு பக்கத்தில் வருகிறது. அவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். சிங்க வடிவத்தில் அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறார்கள். (இங்கிருந்துதான் ‘சிங்கள’ இனம் தொடங்குகிறது)
  • இன்னோர் இடத்தில், ஏரியிலிருந்து கிளிகள் தொண்ணூறாயிரம் வண்டிச் சுமை நெல்லைக் கொண்டுவருகின்றன. அதைச் சுண்டெலிகள் அரிசி முனை முறியாமல், உமி, தவிடு இல்லாமல் கைக்குத்தல் அரிசியாகச் சுத்தமாக்குகின்றன
  • பாலி என்ற இளவரசி, சாப்பாட்டுக்காகத் தட்டு வேண்டி ஆல மர இலைகளைப் பறிக்கிறாள். உடனே அவை தங்கப் பாத்திரங்களாக மாறுகின்றன
  • போதி மரத்தை வெட்டக்கூடாது. அதுவே விடுபட்டுக் கீழே விழுந்தால்தான் உண்டு. அதற்காக ஒரு ரசாயன(?)ப் பேனா இருக்கிறது. தங்கப் பிடி வைத்த அந்தப் பேனாவால் போதி மரக் கிளையில் ஒரு கோடு போட்டுவிட்டு வணங்கினால், மரம் தானே துண்டாகிக் கீழே விழுந்து நிற்கிறது

இப்படித் தொடங்கும் புத்தகம், கொஞ்சம் கொஞ்சமாக மாயங்கள் குறைந்து, அற்புதங்கள் என்று சொல்லத் தகுந்த விஷயங்கள் அதிகரிக்கிறது. ஆரம்பத்தில் கதைகள்மட்டும் வருகின்றன. பின்னர் ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் ஒரு தத்துவம் தவறாமல் தென்படுகிறது. இப்படி:

புனிதர்கள் மிகச் சிறந்த ஆசிகளைப் பெற, சிறப்பான தூய பணிகளைச் செய்வார்கள். அவ்வாறு சிறந்த தூய பலரைத் தொண்டர்களாகப் பெறுவதற்காக, அவர்களையும் தூய மனத்துடன் பணியாற்றச் செய்வார்கள்

மகா வம்சம் இலங்கையின் சரித்திரமாகச் சொல்லப்பட்டாலும், ஆங்காங்கே இந்திய வாசனையும் அடிக்கிறது. சில சமயங்களில் நாம் நன்கு கேட்டிருக்கக்கூடிய உள்ளூர்க் கதைகளுக்கு வெளிநாட்டுச் சாயம் பூசியதுபோல் தோன்றுகிறது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக, எலரா என்ற தமிழ் அரசனின் கதை.

எலராவுடைய படுக்கைக்கு மேல் ஒரு மணி கட்டப்பட்டிருக்கிறது. நீதி கேட்டு வருகிறவர்கள் எந்நேரமும் அதை அடிக்கலாம்.

ஒருநாள், எலராவின் மகன் தேரில் போகும்போது தெரியாமல் ஒரு கன்றுக் குட்டியைக் கொன்றுவிடுகிறான். வேதனையில் அந்தப் பசு எலராவுடைய மணியை அடிக்க, அவன் அதே தேர்ச் சக்கரத்தின் அடியின் தன் மகனைக் கிடத்திக் கொன்று தண்டனை கொடுக்கிறான்.

நம் ஊர் மனு நீதிச் சோழன் கதையும் கிட்டத்தட்ட இதேதான். ஆனால் எலராவின் கதையில் இன்னொரு சம்பவம் கூடுதலாக இருக்கிறது.

இன்னொரு நாள், எல்ரா வீதியில் போய்க்கொண்டிருக்கும்போது, அவனுடைய வாகனத்தின் முனை புத்த ஸ்தூபியின்மீது இடித்துவிடுகிறது. வேண்டுமென்றே செய்யாவிட்டாலும், அது தவறுதான் என்பதை உணர்ந்த அரசன் எல்ரா, வீதியில் படுத்துக்கொண்டு, தன்மீது தேரை ஏற்றிக் கொல்லும்படி உத்தரவிடுகிறான். புத்த பிட்சுக்கள் அவனை மன்னித்து ஆசி வழங்குகிறார்கள்.

இன்னோர் அரசனுக்கு, பத்து மகன்கள், ஒரு மகள். அந்தப் பெண் பிறந்ததும், ‘இவளுடைய மகன், தன்னுடைய மாமன்களை, அதாவது அந்தப் பெண்ணின் அண்ணன்களைக் கொல்லப்போகிறான்’ என்று ஜோதிடம் சொல்கிறது.

பதறிப்போன அண்ணன்கள், கம்சனைப்போல் ரொம்ப நாள் காத்திருக்காமல், உடனே தங்களுடைய தங்கையைக் கொன்றுவிட முடிவெடுக்கிறார்கள். அவர்களுடைய அப்பா தலையிட்டுத் தடுத்து நிறுத்துகிறார்.

பிறகு, அவர்கள் அந்தத் தங்கையைச் சிறை வைக்கிறார்கள். அப்படியும் அவள் ஒருவனைக் காதலித்து, கல்யாணம் செய்து, குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை கை மாறி இன்னோர் இடத்தில் வளர்கிறது.

இதைக் கேள்விப்பட்ட மாமன்கள், அந்த ஏரியாவில் உள்ள குழந்தைகளையெல்லாம் கொல்ல ஏற்பாடு செய்கிறார்கள். அப்படியும் அந்தக் குழந்தைமட்டும் என்னென்னவோ மாயங்களைச் செய்து வளர்கிறது, அதுவும் இடையனாக.

இப்படிப் பல இடங்களில் மகா வம்சமும் இந்தியாவில் நாம் கேட்டிருக்கக்கூடிய இதிகாச, புராண, செவி வழிச் செய்திகள், குழந்தைக் கதைகளும் கலந்து வருகின்றன – சம்பவங்களில்மட்டுமில்லை, சில வர்ணனைகளில்கூட இதுபோன்ற ஒற்றுமைகள் இருப்பது ஆச்சர்யம்தான்.

கடைசியாக, புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு குட்டிக் கதைகளைச் சொல்லவேண்டும்.

தேவனாம் பிரியதிசா என்ற ஓர் அரசன். அவனைச் சந்திக்கும் துறவிகள் அரசனைப் பரிசோதிப்பதற்காகச் சில கேள்விகளைக் கேட்கிறார்கள்.

‘அரசே, இந்த மரத்தின் பெயர் என்ன?’

‘மாமரம்’

‘இதன் பக்கத்தில் மேலும் ஒரு மாமரம் இருக்கிறதா?’

‘பல மாமரங்கள் இருக்கின்றன’

‘மாமரங்களையடுத்து வேறு மரங்கள் இருக்கின்றனவா?’

‘மாமரம் தவிரவும் பல வேறு மரங்கள் இருக்கின்றன’

‘இவற்றைத் தவிர வேறு ஏதாவது மரம் இருக்கிறதா?’

‘இதோ, இந்த மாமரம்தான் இருக்கிறதே?’

கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ காமெடியை நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுங்கள். அடுத்த கேள்வியையும் படித்துவிடுங்கள்:

’அரசே, உனக்கு உறவினர்கள் இருக்கிறார்களா?’

‘பலர் இருக்கிறார்கள் ஐயா’

‘உறவினர்கள் அல்லாத பலரும்கூட இருக்கிறார்கள் அல்லவா?’

‘உறவினர்களை விட அதிகமான அளவில் இருக்கிறார்கள்’

‘நீ கூறிய உறவினர்கள், உறவினரல்லாத பிறரைத் தவிரவும் இன்னும் யாராவது இருக்கிறார்களா?’

‘நான் இருக்கிறேனே ஐயா’

‘அரசே, நீ புத்திசாலிதான்’

நேர்முகத் தேர்வில் அடுத்தடுத்து ஒரேமாதிரி இரண்டு கேள்விகள் கேட்கக்கூடாது என்கிற நவீன மனித வளத் தத்துவம் அந்தத் துறவிக்குத் தெரியவில்லைபோல, அரசனின் புத்திசாலித்தனத்தை தாராளமாகப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.

இந்த அரசன் புத்திசாலி என்றால், இன்னோர் அரசன் வீண் குறும்புத்தனத்தால் அழிகிறான். அவன் கதை இப்படி:

ஒரு காவலன் அரசனைப்போலவே தோற்றம் கொண்டிருந்தான். வேடிக்கைக்காக, அவனை அரசனைப்போலவே அலங்கரித்து, சிம்மாசனத்திலும் அமரவைப்பான். அரசன் காவல்காரனுடைய உடை, தலைப்பாகைகளை அணிவான். கையில் கோலுடன் காவல் பணி மேற்கொள்வான்.

ஒருநாள், இவ்வாறு வேடமிட்ட காவல்கார அரசனைப் பார்த்து, காவல்கார வேடத்தில் இருந்த உண்மையான அரசன் பலமாகச் சிரித்தான்.

‘என் முன்னே காவல்காரன் சிரிப்பதா?’ என்று அவனைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டுவிட்டான் காவல்கார அரசன்.

அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை, ஒருவர் இலங்கை அரியணையில் அமர்ந்தாலே, இதுபோன்ற கிறுக்குத்தனங்களும், இரக்கமில்லாத மனமும் தானாக வந்துவிடும்போலிருக்கிறது!

***

என். சொக்கன் …

28 02 2009

மலேசியாவிலிருந்து திரும்பி வந்தாகிவிட்டது. ஆனால் எழுத நினைத்த சில குறிப்புகள் இன்னும் மீதமிருக்கின்றன. அவற்றை முழுப் பதிவாக எழுதினால் பழைய வாடை அடிக்கும். ஆகவே இங்கே சுருக்கமாகப் பட்டியல் போட்டுவிடுகிறேன்.

  1. மலாய் மொழியில் ஆங்கில வார்த்தைகளுக்குக் குழப்படியாக ஸ்பெல்லிங் மாற்றிவிடுகிறார்கள். அதுவும் யோசித்துப் பார்க்க ஜாலியாகதான் இருக்கிறது. உதாரணமாக, நண்பர் முகேஷுடன் காரில் சென்றபோது கோலா லம்பூர்ச் சாலைகளில் நான் பார்த்த சில வார்த்தைகள் – இவை ஒவ்வொன்றும் ஆங்கிலத்தில் எதைக் குறிக்கின்றன என்று யோசியுங்கள்: Ekspress, Sentral, Stesen, Klinik, Kolej
  2. கோலா லம்பூர் விமான நிலையத்துக்கு அதிவேக ரயிலில் சென்றேன், மலிவு விலை (35 வெள்ளி), மிகச் சுத்தமான இருக்கைகள், மற்ற வசதிகள், Non-Stop சேவை என்பதால், ‘சரியாக இருபத்தெட்டு நிமிடத்தில் விமான நிலையம்’ என்று அறிவித்தார்கள், இரண்டு நிமிடம் முன்னதாகவே சென்று சேர்ந்துவிட்டோம்
  3. அத்தனை பெரிய கோலா லம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ஏனோ ஏழு மணிக்கே கூட்டம் குறைவு. அதுவும் எங்கள் விமானம் கிளம்பும் வாசலில் ஆள், அரவமில்லாமல் இருட்டிக் கிடந்தது, தனியே உட்கார்ந்திருக்கப் பயமாகிவிட்டது
  4. மறுபடியும் அசைவ உணவுபற்றிப் புலம்பினால் ‘தடித் தாண்டவராயா’ என்று யாரேனும் அடிக்க வருவார்கள். ஆனாலும், இதைச் சொல்லாமல் இருக்கமுடியாது: வகைக்கு இரண்டாக அத்தனை பளபளப்பு உணவகங்கள் கொண்ட கோலா லம்பூர் விமான நிலையத்தில் சைவச் சாப்பாடு – ஒரு வெஜிடபிள் சாண்ட்விச்கூட எங்கேயும் கிடைக்கவில்லை, ராப்பிச்சைக்காரன்போல் ஒவ்வொரு கடை வாசலாக ஏறி, இறங்கித் தோற்றபிறகு, கடைசியாக ஓர் இத்தாலிய உணவகத்தில் தக்காளி, வெங்காய பிட்ஸா கிடைத்தது, ஒரே ஒரு துண்டு இந்திய மதிப்பில் 125 ரூபாய், ஆறி அவலாகப் போன பிட்ஸாவுக்குத் தொட்டுக்கொள்ள பழப் பச்சடி, 250 ரூபாய் … ஏதோ, பசித்த நேரத்தில் இதுவேனும் கிடைத்ததே என்று அவசரமாக விழுங்கிவைத்தேன்
  5. விமானத்தில் என்னருகே அமர்ந்திருந்த பெரியவர், ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறார், ‘அங்கே ஏற்கெனவே ஜனவரி 17 பிறந்துவிட்டது, ஆனால் இங்கே இன்னும் ஜனவரி 16தான்’ என்று புலம்பினார், ‘ஒருவேளை இந்தியா போய் இறங்கினால் ஜனவரி 15ஆக இருக்குமோ’ என்று அநியாயத்துக்குப் பதற்றப்பட்டவருக்கு நல்வழி சொல்லித் தேற்றினேன்
  6. இந்தமுறை, எனக்குத் தமிழ் பேப்பர் கிடைக்கவில்லை, அரை கிலோ எடையிருந்த ஆங்கிலச் செய்தித் தாளைத் தூக்கிப் படித்தாலே கை வலித்தது. ஆனாலும் அதில் ஒரு சுவாரஸ்ய செய்தியைப் படித்துக் கண்கள் பனித்தன, இதயம் இனித்தது: மலேசியாவில் வருடத்துக்கு 1000 வெள்ளி(இந்திய மதிப்பில் 12000 ரூபாய்களுக்கு மேல்)வரை புத்தகம் வாங்குவதற்காகச் செலவிட்டால் வருமான வரி விலக்கு உண்டாமே, நம் ஊரிலும் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க இப்படி ஒரு விதிமுறையைக் கொண்டுவரக்கூடாதா? மத்திய அரசில் பதிப்பாளர்களுக்கென்று ஒரு லாபி இருந்தால் வேலை நடக்குமோ, என்னவோ
  7. ஜனவரி 16ம் தேதி நள்ளிரவுக்குச் சற்று முன்னால், இந்தியா வந்திறங்கினேன். மலேசியப் பதிவுகள் இத்துடன் முற்றும், நீங்கள் பிழைத்தீர்கள்!

***

என். சொக்கன் …

21 01 2009

*************************

முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்:

மலே மலே மலே மலேசியா


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 636,479 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930