Archive for December 16th, 2008
திருடனுக்கு நன்றி
Posted December 16, 2008
on:எங்கள் அடுக்ககத்தில் நேற்று ஒரு சின்ன திருட்டுச் சம்பவம்.
காலை ஏழு மணியளவில் எல்லா வீட்டு வாசல்களிலும் பால் பாக்கெட்கள் போடப்படும். அவரவர் சோம்பேறித்தனத்தின் அடிப்படையில் மக்கள் எட்டு, எட்டரை, அல்லது ஒன்பது மணிக்கு அந்த பாக்கெட்களை உள்ளே எடுத்துச் செல்வார்கள்.
சனி, ஞாயிறு என்றால் நிலைமை இன்னும் மோசம், மாலை நாலு, ஐந்துவரைகூடப் பாக்கெட்கள் சில வீடுகளின் வாசலில் பரிதாபமாகக் கிடக்கும். அவற்றைப் பார்க்கையில், எனக்கு ஒரு விநோதமான கற்பனை தோன்றும். இப்போது கிளியோபாட்ரா உயிரோடு இருந்திருந்தால், நாம் ’Water Bed’டில் தூங்குவதுபோல், பால் நிரப்பப்பட்ட ‘Milk Bed’, ‘Milk Pillow’ செய்து தூங்குவாளோ?
அது நிற்க. திருட்டுச் சம்பவத்துக்கு வருவோம்.
ஏழு மணிக்குப் பால் பாக்கெட்கள் விநியோகம், ஆனால் எட்டு மணிக்குதான் மக்கள் அவற்றை எடுத்துச் செல்கிறார்கள். இதைக் கவனித்த எவனோ ஒருவன், ஏழே காலுக்கு உள்ளே புகுந்து, எல்லா பாக்கெட்களையும் திருடிச் சென்றுவிட்டான்.
அதன்பிறகு வாட்ச்மேனைக் கூப்பிட்டுச் சத்தம் போடுவது, அவருடைய Boss எவரோ அவரை அழைத்துக் கத்துவது என எல்லா சுப சடங்குகளும் அரங்கேறின. பால் பாக்கெட்கள் போனது போனதுதான்.
இன்று காலை, வழக்கமான நடை பயணத்துக்காக வெளியே வந்தபோது கவனித்தேன், எந்த வீட்டு வாசலிலும் பாக்கெட்கள் இல்லை, ‘எல்லாம் உடனே உள்ள எடுத்துட்டுப் போய்ட்டாங்க சார்’ என்றார் பால் காரர்.
திருடனுக்கு நன்றி. அவன் திருடியது பால் பாக்கெட்களைமட்டுமல்ல, எங்களுடைய சோம்பேறித்தனத்தையும்தான்!
***
என். சொக்கன் …
16 12 2008
ஒரு ஹீரோ, பல வில்லன்கள்
Posted December 16, 2008
on:- In: Bangalore | Bold | Characters | Classroom | Confidence | Fear | Health | People | Play | Positive | Safety | Security | Uncategorized
- 6 Comments
நேற்று ஒரு மென்திறன் (Soft Skill) பயிற்சி வகுப்புக்குச் சென்றிருந்தேன். பேச்சுவாக்கில், இந்திய சினிமாக்களின் சண்டைக் காட்சிகளைப்பற்றி விவாதம் வந்தது.
எங்களுக்குப் பயிற்சி தருகிறவர் ஒரு மனவியல் நிபுணர். அவர் பெயர் எரிக் (http://www.humanfactors.com/about/eric.asp). என்னுடன் உட்கார்ந்திருக்கிற மாணவர்கள் பலர், இவர் பேசுவதைக் கேட்பதற்காகவே பம்பாய், டெல்லி, கல்கத்தாவிலிருந்து பயணம் செய்து வந்திருந்தார்கள்.
சுவாரஸ்யமான இந்தப் பயிற்சியைப்பற்றிப் பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன். இப்போது நாங்கள் பேசிய ‘சண்டை’ விஷயம்.
ஒருவர் சொன்னார், ‘இந்திய சினிமாக்களில் சண்டைக் காட்சிகள் நம்பமுடியாதவை, ஒரு ஹீரோ, பத்து வில்லன்களை ஒரே நேரத்தில் அடிப்பார், அது எப்படி சாத்தியம்?’
சட்டென்று எரிக்கின் பதில் வந்தது, ‘சாத்தியம்தான்’
‘எப்படிச் சொல்கிறீர்கள்?’
‘என் சகோதரி ஒரு தற்காப்புக் கலை நிபுணர். மிகச் சிறிய வயதிலிருந்து கை, கால்களின் இயக்கத்தை நுணுக்கமாகப் பயின்றிருக்கிறார், உங்களுக்கும் எனக்கும் சுவாசம் என்று ஒரு விஷயம் இருப்பதே தெரியாதபடி மூக்கு, நுரையீரல் தொடர்ந்து இயங்குகிறதில்லையா? அதுபோல, சண்டையின்போது அவருக்குக் கை, கால்கள் சுதந்தரமாக இயங்கும், அதைப்பற்றி அவர் யோசிக்கவே வேண்டியதில்லை’
‘அதனால் என்ன?’
‘கை கால்கள் சுதந்தரமாக இயங்குவதால், அவரால் ஒரே நேரத்தில் ஆறு, எட்டு, ஏன் பத்துப் பேருடைய இயக்கத்தைக்கூடக் கவனித்துத் திட்டமிட (Strategize) முடியும், அதன்படி தனது தாக்குதல் பாணியை மாற்றிச் சண்டையிடமுடியும்’
‘நிஜமாகவா சொல்கிறீர்கள்?’
‘சர்வ நிச்சயமாக, அவர் ஒரே நேரத்தில் பத்து பேரை சாதாரணமாக அடித்து திசைக்கு ஒருவராகச் சிதறச் செய்வதைப் பலமுறை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்’ என்றார் எரிக், ‘இனிமேல் உங்களுடைய சண்டை ஹீரோக்களைக் கிண்டலடிக்காதீர்கள், அவர்கள் செய்வது சாத்தியம்தான்’
எரிக் சொன்ன இன்னொரு விஷயம் ‘கஜினி’ படத்தில் வரும் Short Term Memory Lossபற்றியது. சூர்யா, அமீர் கான் போன்ற திரைப்பட ‘கஜினி’கள் இல்லாமல், நிஜ வாழ்க்கையில் அந்தக் குறைபாடு கொண்டவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று அற்புதமாக விளக்கினார்.
***
என். சொக்கன் …
16 12 2008