Archive for December 24th, 2008
நொறுக்குத் தீனி – 2
Posted December 24, 2008
on:திருவல்லிக்கேணியிலுள்ள ஓர் ஓட்டலில், ‘இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாது’ என போர்ட் மாட்டியிருந்தார்கள்.
அங்கு காபி சாப்பிடப் போன நடிகவேள் எம். ஆர். ராதா ஒரு கப் காபிக்கு ஆர்டர் கொடுத்தார். சர்வர் காபி கொண்டுவந்ததும், அதைத் தள்ளிவைத்துவிட்டு, இன்னொரு காபி ஆர்டர் கொடுத்தார்.
’இதுக்கு சர்க்கரை போடுய்யா’ என்றார் ராதா.
சர்வர் மறுத்துவிட்டு போர்டைக் காட்டினார்.
உடனே ராதா, ‘தெரியுதுப்பா. இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாதுன்னுதானே போட்டிருக்கு, ரெண்டாவது காபிக்கு சர்க்கரை கொண்டா’ என்றார்.
ராதாவின் சிலேடைப் பேச்சை ரசித்தபடி முதலாளியே சர்க்கரையோடு வந்தார்.
(தகவல்: போளூர் சி. ரகுபதி – பெண்ணே நீ – டிசம்பர் 2008)
***********
இப்போ பள்ளியில முதல் மதிப்பெண் வாங்கணும்னா கடுமையா போட்டி போட வேண்டியிருக்கு. இதனால, கதைப் புத்தகங்கள் படிக்கிறது குறைஞ்சு போச்சு.
அதுக்காக, இளைய தலைமுறையினர்கிட்ட வாசிக்கும் பழக்கமே இல்லைன்னு சொல்லமுடியாது. விருப்பமான துறையா இருந்தா அவங்களே ஆர்வமாகத் தேடிப் படிக்கவும் செய்யறாங்க.
என் மகன் பத்தாவது படிக்கிறான். ‘சுட்டி விகடன்’ ஆர்வமாகப் படிப்பான், அத நான் வாங்கித் தந்துவிடுவேன்.
ஒருநாள் ‘மோட்டார் விகட’னைப் பார்த்திருக்கிறான். அதுவும் வேணும்ன்னு கேட்டான்.
எனக்கு அவனுடைய ஆர்வத்தை முதல்ல புரிஞ்சுக்கமுடியலை. அந்தப் புத்தகத்தோட விலை வேற அதிகமா இருந்ததால, ‘உனக்கெதுக்குடா அதெல்லாம்’ன்னு கேட்டேன்.
‘உன்னால கார்தான் வாங்கித் தரமுடியலை, அட்லீஸ்ட் கார் பத்தின புத்தகத்தையாவது வாங்கித் தாயேன்’னு பளிச்னு கேட்டான்.
மூஞ்சியை கர்ச்சீப்பால துடைச்சுகிட்டு, இப்போ மோட்டார் விகடன் வாங்கித் தந்துட்டு வர்றேன். சகல கார், பைக்குகளோட பேரும், ரேஸ் வீரர்களோட பேரும் அவனுக்கு இப்போ அத்துப்படி.
நான் வேற எத்தனையோ புத்தகங்களை வாங்கிக் கொடுத்தப்போ படிக்கலை. ஆனா, அவனுக்கா ஒரு விஷயத்தில ஈடுபாடு வந்ததும் தேடிப் படிக்க ஆரம்பிச்சுட்டான்.
(ராஜா (பட்டிமன்றப் பேச்சாளர்) – பேட்டி: மகாதேவன் – விகடன் புக்ஸ் – டிசம்பர் 2008)
***********
எனக்கு பதின்மூன்று வயது வரும் வரைக்கும் ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் என்று நினைத்திருந்தேன். அல்ஜிப்ரா என்ற புதுக் கணிதப் பாடம் தொடங்கியபோது எங்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர் x க்கு 3, 8 என்று இரண்டு விடைகள் இருக்கலாம் என்று கூறினார்.
இன்னும் சில வருடங்கள் கழித்து கல்லூரியில் படிக்கும்போது வால் நட்சத்திரத்தின் வால் எங்கே இருக்கிறது என்று ஒரு கேள்வி எழுந்தது. வேறு எங்கே இருக்கும், பின்னுக்குத்தான். அப்படி இல்லை. சூரியனை நோக்கிச் செல்லும்போது அது பின்னால் இருக்கும்; சூரியனை தாண்டிப் போகும்போது அது வாலை எடுத்து முன்னால் வைத்துக்கொள்ளும். அப்படிச் சொல்லித் தந்தார்கள்.
இதே மாதிரித்தான் சூரியக் குடும்பத்தில் எது கடைசிக் கிரகம் என்ற கேள்வியும். விடை எல்லோருக்கும் தெரிந்ததுதான். புளூட்டோ. ஆனால் உண்மை வேறு மாதிரியிருந்தது. சில நேரங்களில் நெப்டியூன் தன் எல்லையை மீறி புளூட்டோவையும் தாண்டி சுற்றிவரும். அப்போது நெப்டியூன்தான் கடைசிக் கிரகம்.
சமீபத்தில் பொஸ்டன் போனபோது அங்கே பிலிப்பைன் நாட்டில் இருந்து வந்த ஒருவரைச் சந்தித்தேன். இவருடைய நாடு ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்டது. ஒரு பேச்சுக்காக அவரிடம் உங்கள் நாட்டில் எத்தனை தீவுகள் என்று கேட்டு வைத்தேன்.
மிக எளிமையான கேள்வி. ஆனால் அவர் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். யோசித்துவிட்டு இரண்டு பதில்கள் கூறினார். கடல் வற்றிய சமயத்தில் 7108 தீவுகள், கடல் பொங்கும்போது 7100 தீவுகள் என்றார்.
பல வருடங்கள் சென்றபிறகுதான் ஒரு கேள்விக்கு ஒரு பதில் என்ற கணக்கு சரியல்ல என்பது புரிந்தது.
(அ. முத்துலிங்கம் – ’அ. முத்துலிங்கம் கதைகள்’ நூலின் முன்னுரையிலிருந்து – தமிழினி வெளியீடு – 2003 – விலை ரூ 350/-)
***********
கவிஞர் ருட்யார்ட் கிப்ளிங் ‘San Francisco Examiner’ என்ற பத்திரிகையில் நிருபராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவரை வேலையிலிருந்து நீக்கி உத்தரவிட்ட டிஸ்மிஸ் ஆர்டர்:
I’m Sorry Mr. Kipling, But You Just Don’t Know How To Use English Language. This Is Not A Kindergarten For Amateur Writers”
(தகவல்: DCB News – November 2008)
***********
‘பலரும் என்னைச் சாதனையாளர் என்று புகழ்கிறார்கள். ஆனால், பெரிய அளவு படிக்காததால், எனக்கு அந்தப் பெருமை எல்லாம் இல்லை. இன்னமும் படித்தவர்கள் கூட்டத்தில் அமரும்போது கூச்சப்படுகிறேன். கல்வி மட்டும்தான் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது – ஆச்சி மனோரமாவின் வாக்குமூலம் இது.
(தகவல்: மல்லிகை மகள் – டிசம்பர் 2008)