மனம் போன போக்கில்

Archive for January 2009

ஒரு மருத்துவரைப் பார்ப்பதற்காக இன்று அப்போலோவுக்குச் சென்றிருந்தோம்.

வழக்கமாக அப்போலோ ரிசப்ஷனில் பச்சை, நீலம், வெள்ளை யூனிஃபார்ம் வண்ணங்கள்தான் தென்படும். ஆனால் இன்றைக்கு, எங்கு பார்த்தாலும் காக்கிச் சட்டைகள், தொப்பிகள்.

‘என்ன விசேஷம்?’ என்று விசாரித்தபோது, பக்கத்திலிருந்த ஒருவர் விளக்கினார், ‘ஜனாதிபதி வர்றாங்க சார், அதான் பாதுகாப்பெல்லாம் பலமா இருக்கு’

ஜனாதிபதி வருகிறார் என்றால், நிஜமாகவே பெரிய விஷயம்தான். ஆனால், டெல்லியில் இருக்கவேண்டிய அந்த அம்மையார், ஏன் வேலை மெனக்கெட்டு பெங்களூருக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும்?

‘ஏய் மக்கு’ என்று தலையில் குட்டினார் என் மனைவி, ‘ஜனாதிபதி வர்றார்ன்னா? பேஷன்டாதான் வரணுமா? ஏதாவது புது ஆபரேஷன் தியேட்டரைத் திறந்துவைக்க வர்றாங்களோ என்னவோ’

இருக்கலாம். யார் கண்டது? அதற்குமேல் விசாரிக்கப் பொறுமையில்லாமல் எங்கள் மருத்துவரைத் தேடினோம்.

அப்போலோ மொத்தமும் ஜூர வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. டாக்டர்கள் டை கட்டி, சூட் போட்டு கம்பீரமாக நோயாளிகளை வரவேற்றார்கள், மற்ற ஊழியர்களும்கூட மிகப் பிரமாதமாக உடுத்தியிருந்தார்கள். ஆங்காங்கே ரொம்ப உறுத்தாதவிதமான அலங்காரங்கள்கூடத் தென்பட்டன. ஓரமாக ஒரு தாற்காலிக போர்ட், ‘Work In Progress – Sorry For The Inconveniences Due To President’s Visit’ என்று அறிவிப்பதுபோல் பெருமையடித்துக்கொண்டது.

ஆனால், அங்கு வந்திருந்த நோயாளிகள் யாரும் ஜனாதிபதி வருகையால் பரவசமடைந்ததாகத் தெரியவில்லை. அவரைக்காட்டிலும், எல்சிடி தொலைக்காட்சியில் ரன் விளாசும் யுவ்ராஜ் சிங்குக்குதான் மரியாதை கொடி கட்டிப் பறந்தது.

எங்கள் மருத்துவர், பத்தாம் எண் அறையில் இருந்தார். மருத்துவ ஆலோசனைக்கான தொகையை நயா பைசா பாக்கியில்லாமல் எண்ணிக் கீழே வைத்தபிறகு, எங்களை உள்ளே அனுமதித்தார்கள்.

‘ஹலோ டாக்டர்’ என்றபடி நாங்கள் நுழைந்ததும், அவருடைய செல்பேசி ஒலித்தது, ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்ற அவர் நீலப்பல் தொழில்நுட்பத்தில் ஃபோனைத் தொடாமலே பேசத் தொடங்கினார்.

‘நான்தான்ப்பா, என்ன? எல்லாம் முடிஞ்சதா? Gunல்லாம் ரெடியா இருக்குதானே? நான் இதோ வந்து பார்க்கறேன்’

அவர் பேசப் பேச, எனக்கு பகீரென்றது. வெளியில் ஜனாதிபதி வருகைக்காக எல்லோரும் பரபரப்பாக இருக்கிறார்கள், இங்கே இந்த டாக்டர் ’துப்பாக்கி ரெடியா’ என்று விசாரித்துக்கொண்டிருக்கிறார். இதென்ன கலாட்டா?

எனக்குள் பரபரவென்று கற்பனைகள் விரிந்தன. தீவிரவாதிகள் ஜனாதிபதியைத் தாக்கத் திட்டம் போடுகிறார்கள், அதற்கு இந்த டாக்டரைப் பிடித்து ப்ளாக்மெயில் செய்து ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள், பக்கத்து அறையில் ஏகே நாற்பத்தேழோ, ஐம்பத்தொன்பதோ தயாராகிக்கொண்டிருக்கிறது, இப்போது நான் என்ன செய்யவேண்டும்? காவல்துறைக்கு ஃபோன் செய்யவேண்டுமா? அல்லது இங்கே இருக்கிறவர்களிடம் விஷயத்தைச் சொல்லலாமா? ஒருவேளை அவர்களும் இந்தச் சதியில் உடந்தையாக இருந்து என்னைப் பிடித்து ஓர் இருட்டு அறையில் அடைத்துவிட்டால்? செல்ஃபோனிலிருந்து அவசர போலீசை அழைக்க வெறும் ‘100’ போதுமா அல்லது ‘080’ சேர்க்கவேண்டுமா? நான் அவர்களை அழைத்து இந்த விஷயத்தைச் சொன்னாலும், உடனடி நடவடிக்கை எடுப்பார்களா? நேரம் போதுமா? இந்தச் சதித் திட்டத்திலிருந்து மேன்மைதகு திருமதி பிரதீபா பாடில் தப்பித்துவிடுவாரா? எப்படி?

அந்தச் சில நிமிடங்களுக்குள் ஜெஃப்ரி ஆர்ச்சர் ரேஞ்சுக்கு ஒரு முழு நீள நாவலே மனத்துக்குள் எழுதிப் பார்த்துவிட்டேன். ஒரு கத்துக்குட்டித் துப்பறிவாளனுக்குரிய லாவகத்துடன், டாக்டர் தொடர்ந்து பேசுவதைக் கவனிக்காததுபோல் ஓரக் காதால் கூர்ந்து கேட்டேன்.

அப்போதுதான், எனக்கு விஷயம் புரிந்தது. இது க்ரைம் நாவல் இல்லை, குமுதம் ஒரு பக்கக் கதை.

டாக்டர் சொன்ன ‘Gun’ காது குத்துவதற்கான கருவியாம். பக்கத்து அறையில் யாரோ ஒரு குழந்தைக்குக் காது குத்துவதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார் டாக்டர். அதை அரைகுறையாகக் கேட்டு நான் ஜேம்ஸ் பாண்ட் கனவுகளை வளர்த்துக்கொண்டுவிட்டேன்.

போகட்டும், நான் துப்பறிவாளனாக இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்காமலா போய்விடும்!

***

என். சொக்கன் …

31 01 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

ஒரு வாரமாக வீட்டில் டிவிடி ப்ளேயர் இயங்கவில்லை.

இது ஒரு பெரிய விஷயமா என்று நினைக்கலாம், எங்கள் வீட்டைப் பொறுத்தவரை இது பெரிய, மிகப் பெரிய விஷயம்தான்.

காரணம், டிவிடி ப்ளேயர் என்பது எங்கள் வீட்டில் வெறுமனே பொம்மை காட்டுகிற சாதனமாக இல்லை. அது ஓர் அன்னபூரணியாகவே இயங்கிவந்திருக்கிறது.

எங்கள் மகள்கள் இருவருக்கும், வாய் என்பது சத்தம் போட்டுக் கத்துவதற்குமட்டுமே உருவாக்கப்பட்ட உறுப்பு என்கிற எண்ணம், அதைப் பயன்படுத்திச் சாப்பிடவும் செய்யலாம் என்பதை அவர்கள் மனம் அவ்வளவாக ஏற்பதில்லை.

ஆகவே, சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தாலே அவர்கள் அலறுவார்கள், காத தூரம் ஓடிவிடுவார்கள்.

இட்லி, தோசை, பிட்ஸா, பர்கர், வாழைப்பழம், சப்போட்டா, கார்ன் ஃப்ளேக்ஸ், கடலை உருண்டை, இஞ்சி மொரபா, பாதாம் அல்வா, அரிசிக் கஞ்சி,. இப்படி எதைத் தட்டில் போட்டு நீட்டினாலும், அவர்கள் முகம் சுருங்கிவிடும், ‘ம்ஹூம், வேணாம்’ என்று எதிலும் பற்றற்ற ஞானியரைப்போல் மறுத்துவிடுவார்கள்.

நல்லவேளையாக, அவர்களைச் சாப்பிடச் செய்வதற்கு என் மனைவி ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறார். அதுதான் டிவிடி ப்ளேயர் எனும் அன்னபூரணி.

எங்கள் வீட்டில் குத்துமதிப்பாக நூற்றைம்பது அனிமேஷன் படங்கள், பாட்டுகள், பாடங்கள் போன்றவை குறுந்தகடுகளாக இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து டிவிடி ப்ளேயருக்குள் கொடுத்தால், திரையில் படம் தோன்றும், இவர்கள் வாய் தானாகத் திறக்கும்.

உதாரணமாக, மிக்கி மவுஸ் குத்தாட்டம் போடும் காட்சியைத் திரையில் காண்பித்தால், நங்கை மிகச் சரியாக ஒரு வாய் இட்லியை வாங்கிக்கொள்வாள், அதை மெதுவாக அரைக்கத் தொடங்குவாள், ஆனால், விழுங்கமாட்டாள்.

அவளை விழுங்கச் செய்வதற்கும் ஒரு மந்திரம் இருக்கிறது: டிவிடி ப்ளேயரின் ரிமோட்டில் உள்ள ‘Pause’ எனும் பொத்தான்.

’இந்தப் பொத்தான்மட்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்காவிட்டால், என்னால் இந்தக் குழந்தைகளை வளர்த்திருக்கவேமுடியாது’ என்று என் மனைவி அடிக்கடி சொல்வார். அது நூற்று எட்டு சதவிகிதம் உண்மை.

திரையில் ஆடும் மிக்கியை ‘Pause’ செய்தால், அதன் காட்சி உறைந்த மறு மைக்ரோ விநாடியில், நங்கையின் வாயில் இருக்கும் இட்லி விழுங்கப்படும், ‘ம், ப்ளே பண்ணு’ என்பாள் மந்திரம்போல.

‘நீ ஒரு வாய் வாங்கிக்கோ, அப்பதான் ப்ளே பண்ணுவேன்’

அடுத்த வாய் அவள் வாய்க்குள் போகும், ஆனால் அரைக்கமாட்டாள், ‘ப்ளே பண்ணு’ என்பாள் மறுபடி.

மீண்டும் மிக்கி மவுஸ் ஆடத் தொடங்கும், இட்லி அரைக்கப்படும், ஆனால் விழுங்கப்படமாட்டாது, அதற்கு ‘Pause’ பட்டன் தேவைப்படும்.

இப்படியாக, ’திருவிளையாடல்’ படத்தில், ‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே’ என்று சிவாஜி கணேசன் உருவத்தில் சிவபெருமான் பாடியதுபோல, ‘டிவிடி ப்ளேயர் இயங்கினால் சாப்பாடு வாங்கப்படும், அரைக்கப்படும், அதை Pause செய்தால் விழுங்கப்படும்’ என்கிற விதிமுறையை ஒரு நாளைக்கு மூன்று வேளை விடாமல் பின்பற்றிவருகிறாள் நங்கை.

சாப்பாட்டுக்குமட்டுமில்லை, ஹார்லிக்ஸ், பூஸ்ட், அல்லது பச்சைத் தண்ணீர் குடிப்பது, தலை வாருதல் போன்றவைக்கும்கூட டிவிடிக்கள் தேவைப்பட்டன. முக்கியமாக இரட்டைப் பின்னல் பின்னுகிற தருணங்களில் அவளுக்கு மிக மிகப் பிடித்த படம் திரையில் ஓடவேண்டும், இல்லாவிட்டால் வீடு இரண்டாகிவிடும், சில சமயம் மூன்றாக.

அவளைப் பார்த்து, அவளுடைய தங்கைக்கும் இதே பழக்கம் வந்துவிட்டது. இந்த ஒன்றே கால் வயதுக்கு, அவளும் டிவிடி ப்ளேயர் இன்றிச் சாப்பிட மறுக்கிறாள்.

ஆரம்பத்தில் எங்களுக்கு  இது மெகா எரிச்சலாக இருந்தது. ஆனால் போகப்போக, சாப்பாட்டுத் தட்டை எடுக்கும்போதே, இன்றைக்கு எந்தக்  குறுந்தகடை இயக்கலாம் என்றும் யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். ஏதோ பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலைமையில்தான், டிவிடி ப்ளேயர் இயங்க மறுத்துவிட்டது. வீடியோ, ஆடியோ, எம்பி3, புகைப்படத் தொகுப்பு எந்தக் குறுந்தகடை உள்ளே அனுப்பினாலும், ‘No Disk’ என்று முகத்தைத் திருப்பிக்கொள்கிறது.

வற்றாத உணவுப் பாத்திரத்தைக் கொண்ட அன்னபூரணி மெஸ்ஸில், இப்போது ஒரு வாரமாக ஸ்ட்ரைக். நாங்கள் என்செய்வோம்? எங்கே போவோம்?

ஒரு நாள், இரண்டு நாள் என்னுடைய மடிக்கணினியை வைத்துச் சமாளித்தேன். அதில் சேமித்துவைத்திருக்கும் டாம் & ஜெர்ரி, டோரா முதலான மேற்கத்திய கார்ட்டூன்களும், தெனாலிராமன், பீர்பால், ராமயாணம் போன்ற உள்ளூர்ப் படைப்புகளும் சாப்பாட்டு நேரத்தில் பயன்பட்டன.

ஆனால், தொலைக்காட்சி அளவுக்குக் கம்ப்யூட்டர் என் மனைவிக்குச் சவுகர்யப்படவில்லை, ‘உடனடியா இந்த டிவிடி ப்ளேயரை ரிப்பேர் செய்யணும்’ என்று என்னை நச்சரிக்கத் தொடங்கினார்.

சோதனைபோல, சென்ற வாரம்முழுக்க எனக்கு மாலை நேரத்தில் ஏதாவது ஒரு வேலை வந்து குறுக்கிட்டது. டிவிடி ப்ளேயரை பழுது பார்க்கக் கொண்டுசெல்வதற்கு நேரமே இல்லை.

இன்று சனிக்கிழமை. எப்படியாவது வெளியே சென்று, ஒரு மெக்கானிக்(?)கைப் பிடித்து அன்னபூரணியின் கைக் கரண்டியைச் சரி செய்துவிடவேண்டும் என்று தீர்மானித்தேன்.

ஆனால், அதிகாலை நேரத்தில் எப்படியோ என் வாயிலும் சனி புகுந்துவிட்டது, ‘கடைக்குக் கொண்டுபோறதுக்கு முன்னாடி, நானே ஒருவாட்டி அதைத் திறந்து பார்த்துடறேனே’ என்று தெரியாமல் சொல்லிவிட்டேன்.

அடுத்த நிமிடம், டிவிடி ப்ளேயர், ஸ்க்ரூ ட்ரைவர், ஸ்பேனர், அழுக்கைத் துடைக்கும் துணி முதலான சமாசாரங்களை என்முன்னே நிரப்பிவிட்டார் மனைவி, ‘எப்படியாவது சரி செஞ்சுடு, அஞ்சோ, பத்தோ பார்த்துப் போட்டுக் கொடுக்கறேன்’ என்றார்.

இந்தச் சாதனங்களில் ஒரு பெரிய ஏமாற்று என்னவென்றால், அவற்றில் வெளிப்படையாகத் தெரியும் ’ஸ்க்ரூ’க்கள் எல்லாம், சுலபத்தில் கழற்றக்கூடியவையாகத் தோன்றும். இவற்றைத் திறந்தாலே பிரச்னை சரியாகிவிடும் என்பதுபோல் ஒரு மாயத் தோற்றம், அசட்டு நம்பிக்கை நமக்குள் உருவாகிவிடும்.

நானும் சுறுசுறுப்பாக அந்த டிவிடி ப்ளேயரின் ஆறு பக்கங்களிலும் இருந்த ‘ஸ்க்ரூ’க்களைக் கழற்ற ஆரம்பித்தேன். கழற்றப்பட்ட ஆணிகள் யார் காலிலும் படாதபடி ஒரு ப்ளாஸ்டிக் பெட்டியில் போட்டு மூடிவைத்தேன்.

ஆனால், பதினெட்டு ஆணிகளைக் கழற்றியபிறகும், அந்த கன செவ்வகப் பெட்டி இடிச்சபுளிபோல் அப்படியேதான் இருந்தது, அதைத் திறக்கமுடியவில்லை.

ஸ்க்ரூக்களைக் கழற்றினால் எல்லாம் கழன்று விழவேண்டும் என்பதுதானே உலக நியதி. இந்த டிவிடி ப்ளேயர்மட்டும் ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறது?

யோசித்தபடி நான் அதனை எல்லாத் திசைகளிலும் திருப்பிப் பார்த்தேன், இழுத்துப் பார்த்தேன், ம்ஹூம், ஓர் அசைவில்லை.

ஓரமாக ஒரு சின்ன விரிசல்போல் தெரிந்தது. அதற்குள் ஸ்க்ரூ டிரைவரை நுழைத்துத் தள்ளினேன், லேசாக அசைந்தது.

ஆஹா, அன்னபூரணியின் ஆரோக்கியத்துக்கான சாவி தட்டுப்பட்டுவிட்டது. அந்த விரிசலை இன்னும் பெரிதாக்குவதுபோல் வேகமாகத் தள்ள ஆரம்பித்தேன்.

பத்து விநாடிகளுக்குப்பிறகு, ‘பட்’ என்று ஒரு சத்தம் கேட்டது, ஒரு தீப்பெட்டி அளவுத் துண்டு ப்ளாஸ்டிக் உடைந்து என் கையோடு வந்துவிட்டது.

அச்சச்சோ, இந்த டிவிடி ப்ளேயர்முழுக்க இரும்பால் செய்யப்பட்டது என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன், ப்ளாஸ்டிக் எங்கிருந்து வந்தது?

அதுமட்டுமில்லை, இந்த ப்ளாஸ்டிக் துண்டு எவ்வளவு முக்கியம்? இது உடைந்ததன்மூலம் டிவிடி ப்ளேயரின் ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுமா?

பயத்தில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் மனைவி எங்கே என்று எட்டிப் பார்த்தேன்.

அவர் சமையலறையில் சோளம் விதைத்துக்கொண்டு, ச்சே, வேகவைத்துக்கொண்டிருந்தார். இந்த ப்ளாஸ்டிக் துண்டு உடைந்ததை அவர் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அவசரமாக உடைந்த ப்ளாஸ்டிக்கை என் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.

இப்போதும், எனக்கு நம்பிக்கை தீர்ந்திருக்கவில்லை. எப்படியாவது இந்த டிவிடி ப்ளேயரைத் திறந்துவிட்டால், பிரச்னையைச் சரி செய்துவிடலாம் என்றுதான் பிடிவாதமாகத் தோன்றிக்கொண்டிருந்தது.

உண்மையில், ஒரு டிவிடி ப்ளேயருக்குள் என்னென்ன சமாசாரங்கள் இருக்கும் என்பதுகூட எனக்குத் தெரியாது. சும்மா சிவப்பு வயர், பச்சை வயர் என்று ஏதாவது விலகியிருக்கும், அதைச் சரியாக வைத்து முறுக்கினால் எல்லாம் ஒழுங்காகிவிடும் என்று அபத்தமாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

அந்த நம்பிக்கையில் மீண்டும் டிவிடி ப்ளேயரை மேல், கீழ், இட, வலமாகத் திருப்பிப் பார்க்கத் தொடங்கினேன். இப்போது மேலும் சில விரிசல்கள் தென்பட்டன. அவை தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட எஞ்சினியரிங் விரிசல்களா, அல்லது நான் இப்போது உருவாக்கிய எசகுபிசகு விரிசல்களா என்று புரியவில்லை.

மீண்டும் இன்னொரு விரிசலைத் தேர்ந்தெடுத்தேன், அதன்வழியாக ஸ்க்ரூ டிரைவரை நுழைத்து அமுக்கியதும், ‘க்ளிங்’ என்று சப்தம் கேட்டது.

இப்போது எதுவும் உடையவில்லை. ஆனால் ஏதோ உள்ளே கழன்றுகொண்டுவிட்டது தெரிந்தது. டிவிடி ப்ளேயரை ஆட்டிப் பார்த்தால் கலகலவென்று உண்டியல் குலுங்குவதுபோல் சத்தம் கேட்டது.

அத்துடன் என்னுடைய நம்பிக்கைகள் தீர்ந்துவிட்டன, ‘இதைத் திறக்கமுடியலை’ என்று சத்தமாக அறிவித்துவிட்டு எழுந்துகொண்டேன்.

இப்போது, எல்லா ஸ்க்ரூக்களையும் மறுபடிப் பூட்டி, ஒரு பெரிய பையில் அந்த டிவிடி ப்ளேயரைப் போட்டுவைத்திருக்கிறேன். குளித்துச் சாப்பிட்டுவிட்டு இதை வெளியே ரிப்பேருக்குக் கொண்டுசெல்லவேண்டும்.

ஏற்கெனவே ICUவில் இருந்த அன்னபூரணியின் ஆக்ஸிஜன் ட்யூபை உடைத்துப் போட்டிருக்கிறேன். ஒரு நல்ல டாக்டராகப் பிடித்து எல்லாவற்றையும் சரி செய்துவிடவேண்டும், அது முடியாவிட்டால், அச்சு அசல் இதேபோல் இன்னொரு டிவிடி ப்ளேயர் வாங்கிவிடவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் இரண்டரை ஜென்மத்துக்குப் புலம்பல் தாங்கமுடியாது.

நீங்களும் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். எங்கள் அன்னபூரணிக்காக இல்லாவிட்டாலும், எனக்காக!

***

என். சொக்கன் …

31 01 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இன்றைக்கு ஒரு பழைய நண்பரைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.

‘பழைய நண்பர்’ என்பதை ஒற்றை வார்த்தையாகவும் சொல்லலாம், ‘பழைய’ நண்பர், அதாவது இப்போது நண்பர் இல்லை என்கிற அர்த்தத்தில் இரண்டு வார்த்தைகளாகப் பிரித்தும் சொல்லலாம். இரண்டுமே அவருக்குப் பொருந்தும்.

அந்த நண்பரின் நிஜப் பெயர் முக்கியமில்லை, சும்மா ஒரு பேச்சுக்கு ’திவாகரன்’ என்று வைத்துக்கொள்வோம்.

பல வருடங்களுக்குமுன்னால், நானும் திவாகரனும் ஒன்றாக வேலை பார்த்துக்கொண்டிருந்தோம். அவருக்கு என்னைவிட வயது, அனுபவம், சிந்தனை முதிர்ச்சி எல்லாமே அதிகம். ஆனால் அவர் என்னுடைய Boss இல்லை, கூடுதல் மரியாதைக்குரிய நண்பர், அவ்வப்போது வழிகாட்டி, அவ்வளவுதான்.

இந்தச் சூழ்நிலையில், திடீரென்று ஒருநாள் திவாகரன் அந்த வேலையிலிருந்து விலகிக்கொண்டார், ’எங்கே போறீங்க சார்?’ என்று நாங்கள் விசாரித்தபோது, மழுப்பலாகச் சிரித்தார், வாய் திறக்கவில்லை.

எனக்கு யாரையும் தோண்டித் துருவுவது பிடிக்காது. ஒருவருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விருப்பம் இல்லை என்றால் அது அவர்களுடைய உரிமை என்று ஒதுங்கிச் சென்றுவிடுவேன்.

தவிர, திவாகரன் எனக்கு அப்போது அத்தனை நெருங்கிய நண்பரும் இல்லை, அவர் எங்கே போனால் எனக்கு என்ன? எங்கேயோ நன்றாக இருந்தால் சரி என்று விட்டுவிட்டேன்.

இப்படியாக, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன. திடீரென்று ஒருநாள் திவாகரனிடமிருந்து ஃபோன், ‘நான் உன்னை நேர்ல பார்க்கணுமே’

இந்த அழைப்பை நான் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்கவில்லை. மந்திரம் போட்டாற்போல் என் வாழ்க்கையிலிருந்து மறைந்துபோன திவாகரன் ஏன் திடுதிப்பென்று மறுபடி தோன்றுகிறார்? அதுவும் நேரில் பார்த்துப் பேசவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்? இப்படி இன்னும் ஏகப்பட்ட குழப்பக் கேள்விகளுடன் அவர் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றேன்.

அது ஒரு மிகப் பெரிய நட்சத்திர விடுதி, அத்துடன் இணைக்கப்பட்டிருந்த உணவகம் இன்னும் பிரம்மாண்டமாக இருந்தது. எங்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு சல்யூட் அடித்த பணியாளர், என்னைவிட நன்றாக உடுத்தியிருந்தார்.

அதற்குமுன் நான் இதுபோன்ற ஹோட்டல்களுக்கு அதிகம் சென்றது கிடையாது. எப்போதாவது எங்கள் நிறுவனத்தின் கூட்டங்களுக்காக சில நட்சத்திர விடுதிகளுக்குச் சென்று இனிப்பு பிஸ்கோத்து சகிதம் டீ, காபி குடித்திருக்கிறேன், அவ்வளவுதான். மற்றபடி ’செல்ஃப் சர்வீஸ்’ என்று நாகரிகமாகப் போர்ட் மாட்டிய கையேந்தி பவன்கள்தான் எனக்குச் சவுகர்யமானவை.

ஆனால், திவாகரன் அப்படி இல்லை போலிருக்கிறது. அவர் கால் மேல் கால் போட்டு உட்காரும் அழகு, கையைச் சொடுக்கி மெனு கார்ட் வரவழைக்கும் லாவகம், அதை லேசாகப் புரட்டிவிட்டுத் தனக்குத் தேவையானதை உடனே தேர்ந்தெடுக்கும் மிடுக்கு, எல்லாமே எனக்கு பிரம்மிப்பூட்டின.

பரபரவென்று எதையோ ஆர்டர் செய்துவிட்டு, அவர் என்னைப் பார்த்தார், ‘உனக்கு என்ன வேணும்?’ என்று அமெரிக்க ஆங்கிலத்தில் கேட்டார்.

பதற்றத்தில் எனக்கு எதுவும் தோன்றவில்லை, ‘ஒரு காப்பி’ என்றேன் அல்பத்தனமாக.

’அப்படீன்னா, எனக்கும் முதல்ல ஒரு காஃபி கொண்டுவந்துடுங்க’ என்றார் அவர், ‘ஷுகர் கொஞ்சம் கம்மியா’

அந்த பேரர் சல்யூட் அடித்து விலகினார். திவாகரன் என்னை நேராகப் பார்த்து, ‘நான் உன்னை எதுக்குக் கூப்டேன்னு தெரியுமா?’

’ம்ஹூம், சத்தியமாத் தெரியாது’ என்றுதான் சொல்ல நினைத்தேன். ஆனால் மழுப்பலாகச் சிரிக்கமட்டுமே முடிந்தது.

அடுத்து அவர் என்ன சொல்லப்போகிறார் என்று உள்ளுக்குள் ஏகப்பட்ட கற்பனைகள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் இப்போது யோசித்தால் அவற்றில் ஒன்றுகூட ஞாபகம் வரவில்லை – நினைவுகளைப்போல் கனவுகள் அத்தனை ஆழமாக மனத்தில் தங்குவதில்லை.

திவாகரன் அந்தப் புதிருக்கு விடை சொல்வதற்குள், காபி வந்துவிட்டது. குட்டிக் குட்டிச் செங்கல்கள்போல் அடுக்கப்பட்டிருந்த சர்க்கரைக் கட்டிகளில் இரண்டை காபியில் போட்டுக் கலந்தபடி சிரித்தார் அவர், ‘நீ இந்தக் கம்பெனியில சேர்ந்து எத்தனை வருஷம் இருக்கும்?’

நான் யோசிக்காமல், ‘இப்பதான் ரெண்டு வருஷம் முடிஞ்சிருக்கு’ என்றேன்.

‘அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்?’

எனக்கு அந்தக் கேள்வியே புரியவில்லை, ‘அடுத்து’ என்றால் என்ன அர்த்தம்? இந்த வேலையைவிட்டு நான் வேறொரு வேலைக்குப் போய்விடவேண்டும் என்கிறாரா?

அடுத்த அரை மணி நேரம் திவாகரன் அதைத்தான் சொன்னார். இந்தத் துறையில் ஒரே நிறுவனத்தில் அதிக நாள் இருந்தால், குட்டைபோல் அப்படியே தேங்கிவிடுவோம், வளரமுடியாது, நதிபோல மேலே மேலே போய்க்கொண்டிருக்கவேண்டும் என்றால், வேறு வேலைகளுக்குத் தாவுவதுதான் ஒரே வழி என்று விளக்கினார்.

எனக்குக் குழப்பமாக இருந்தது. அதுவரை நான் இந்த வேலையைவிட்டு விலகுவதுபற்றி யோசித்திருக்கவில்லை. நல்ல, சவாலான வேலை, பொறுப்புகள், நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு, கை நிறையச் சம்பளம், போதாதா?

‘ம்ஹூம், போதாது’ என்றார் திவாகரன், ‘நாளைக்கே இந்தக் கம்பெனி உன்னை வெளியே அனுப்பிட்டா, என்ன செய்வே? உனக்குன்னு ஒரு தனி அடையாளம் வேணாமா?’

இப்போது நான் குழம்பத் தொடங்கியிருந்தேன். அதைப் புரிந்துகொண்ட திவாகரன் தொடர்ந்து என்னை மூளைச் சலவை செய்தார். கூடுதல் கௌரவம், இருமடங்கு சம்பளம் என்று அவர் அடுக்கத் தொடங்கியபோதுதான், எனக்கு ஏதோ புரிந்தது, நேரடியாகவே கேட்டுவிட்டேன் ‘நீங்க ஏதோ ஒரு கம்பெனியை மனசில வெச்சுகிட்டுதான் இதெல்லாம் என்கிட்டே சொல்றீங்களா?’

‘ஆமாம்ப்பா’ என்று மறைக்காமல் ஒப்புக்கொண்டார் அவர், ‘என் ஃப்ரெண்ட் ஒருத்தர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்திருக்கார், அவங்க கம்பெனியோட இந்தியக் கிளைக்குத் திறமைசாலி ஆளுங்க வேணும்ன்னு கேட்டார், எனக்குச் சட்டுன்னு உன் ஞாபகம்தான் வந்தது’

திவாகரன் இப்படிச் சொன்னபோது, எனக்கு ஜிலீரென்றது. புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் யார்?

காபிக் கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்தார் திவாகரன், அதில் அவர் புதிதாகச் சேர்ந்திருக்கும் நிறுவனத்தின் பெயர், மற்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

’நேரம் கிடைக்கும்போது, இந்த வெப்ஸைட்டைப் பாரு, ரொம்ப நல்ல கம்பெனி, உனக்குப் பொருத்தமான வேலை, இண்டர்வ்யூகூடக் கிடையாது, ஜஸ்ட் ஒருவாட்டி ஃபோன் செஞ்சு என் ஃப்ரெண்டோட பேசிடு, உடனடியா அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் உன் வீடு தேடி வரும்’

அந்த மயக்கம் தீராமலே நான் அவரிடம் விடைபெற்றுக்கொண்டேன். அலுவலகம் சென்றதும் உடனடியாக அந்தப் புது நிறுவனத்தின் இணைய தளத்தை நாடினேன்.

திவாகரன் பொய் சொல்லவில்லை. நிஜமாகவே ரொம்பப் பெரிய கம்பெனிதான். அதன் இந்தியப் பிரிவு தொடங்கியிருப்பதாகவும், திறமைசாலிகளைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்கூடக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அன்று இரவுமுழுக்க, நான் அந்த இணைய தளத்தை மேய்ந்துகொண்டிருந்தேன், அங்கே குறிப்பிடப்பட்டிருந்த விவரங்கள், திவாகரன் கொடுத்த டிப்ஸ் அடிப்படையில் என்னுடைய ‘பயோடேட்டா’வைச் (அப்போது ‘ரெஸ்யூம்’ எனும் வார்த்தை எனக்கு அறிமுகமாகியிருக்கவில்லை) சரி(?)செய்தேன்.

இப்போது யோசித்துப்பார்த்தால், அசிங்கமாக இருக்கிறது. அப்போது எனக்குச் சோறு போட்டுக்கொண்டிருந்த கம்பெனி வழங்கிய இணையத்தில், இன்னொரு கம்பெனியில் வேலைக்குச் சேர வழி தேடியிருக்கிறேன். மகா கேவலம்!

ஆனால் அன்றைக்கு, அது பெரிய தப்பாகத் தோன்றவில்லை. சில மணி நேரங்களில் என் ‘பயோடேட்டா’ புத்தம்புது வடிவில் திவாகரன் தந்திருந்த மின்னஞ்சல் முகவரிக்குப் பறந்தது.

மறுநாள், திவாகரன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார், ‘உன் மெயில் பார்த்தேன்’ என்று சாதாரணமாகத் தொடங்கி என்னுடைய பயோடேட்டாவை மேம்படுத்த ஏகப்பட்ட டிப்ஸ் கொடுத்தார், ‘இதையெல்லாம் சரி செஞ்சு உடனடியா மறுபடி அனுப்பி வை’

இப்போது நான் அவருடைய நூலில் ஆடுகிற பொம்மையாகியிருந்தேன். இந்தமுறை அலுவலக நேரத்திலேயே யார் கண்ணிலும் படாமல் பயோடேட்டாவைப் பழுது பார்த்தேன், அவருக்கு அனுப்பிவைத்தேன்.

அடுத்த ஐந்து நிமிடத்தில், அவருடைய பதில் வந்தது, ‘All Ok, Expect Call From My Friend, Your New Boss’

மூன்று நாள் கழித்து, திவாகரனின் நண்பர், அந்தப் புது நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர் என்னை அழைத்தார், ’இப்போது நாம் பத்து நிமிடம் பேசலாமா, உங்களுக்கு வசதிப்படுமா? அல்லது வேறொரு நேரத்தில் அழைக்கட்டுமா?’ என்று மரியாதையுடன் கேட்டார்.

எனக்கு ஆச்சர்யம். வேலை கொடுக்கிற புண்ணியவான், இப்படியெல்லாமா கெஞ்சவேண்டும்? அமெரிக்காவில் அதுதான் மரபோ என்னவோ?

‘இ – இ – இப்பவே பேசலாம்’ என்று நான் தடுமாறியதும் அவர் சிரித்தார், ‘டோண்ட் வொர்ரி, இது இண்டர்வ்யூ இல்லை, ஜஸ்ட் நான் உங்களோட பேசணும், உங்களைப்பத்தித் தெரிஞ்சுக்கணும், அவ்வளவுதான்’

அவர் பேசப்பேச திவாகரன் அவரிடம் என்னைப்பற்றி நிறையச் சொல்லியிருந்தார் என்பது புரிந்தது. தன்னுடைய நிறுவனத்தைப்பற்றியும், எனது வேலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் கொஞ்சம்போல் சொல்லிவிட்டு, ‘நீங்க உங்களைப்பற்றிச் சொல்லுங்க’ என்றார்.

அதன்பிறகு, நெடுநேரம் நான்தான் பேசிக்கொண்டிருந்தேன், அவர் அதிகம் குறுக்கிடக்கூட இல்லை, என்னைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்று தோன்றியது.

கடைசியாக, ‘ரொம்ப நன்றி, உங்களுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று முடித்துக்கொண்டார் அவர், ‘சீக்கிரமே உங்களுடைய அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வரும், நாம் சேர்ந்து பணியாற்றுவோம்’

அப்பாடா, ஒரு பெரிய கண்டம் தாண்டியாயிற்று, திவாகரனுக்கு நன்றி.

அந்த விநாடியிலிருந்து, நான் திவாகர தாசனாகிவிட்டேன்.

பின்னே? எப்போதோ அவருடன் வேலை பார்த்த எனக்கு, இப்படி ஒரு நல்ல வேலையை வாங்கித்தரவேண்டும் என்று அவருக்கு என்ன அவசியம்? அவரே வலிய வந்து என்னை அழைத்து, நட்சத்திர ஹோட்டலில் காபி வாங்கிக்கொடுத்து, பேசி உற்சாகப்படுத்தி, ஆலோசனை சொல்லி, பயோடேட்டாவைப் பர்ஃபெக்ட் ஆக்கி, இவரிடம் சிபாரிசு செய்து, இண்டர்வ்யூவுக்கும் ஏற்பாடு செய்து, இதோ இப்போது அப்பாயின்ட்மென்ட் ஆர்டரும் வந்துவிடப்போகிறது. இவரைப் போற்றிப் புகழ்ந்தால் என்ன தப்பு?

திவாகரன்மட்டுமில்லை, அவருடைய மரியாதைக்குரிய நண்பரும் நம்பகமானவர்தான். சொன்னபடி இரண்டு வாரங்களில் என்னுடைய பணி நியமனக் கடிதம் கூரியரில் வந்து சேர்ந்தது.

ஆச்சர்யமான விஷயம், திவாகரன் என்னிடம் சொல்லியிருந்த சம்பளத்தைவிட,  இங்கே சுமார் 20% அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் கேட்காமலே இப்படி வாரிக் கொடுக்கிறார்களே, வாழி வாழி, போற்றி போற்றி!

துதி பாடியபடி, நான் இந்த வேலையைத் துறந்தேன், அந்த வேலைக்குத் தாவினேன், ஹைதராபாதிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்தேன், திவாகரன், அவருடைய நண்பர் இருவரும் என்னை அன்போடு வரவேற்று நட், போல்ட் பாடங்களை அக்கறையாகச் சொல்லித்தரத் தொடங்கினார்கள்.

இதுவரை, திவாகரனிடம் சற்றே அலட்டலாகப் பழகிக்கொண்டிருந்த நான், இப்போது மிகவும் அதிக மரியாதை கொடுக்க ஆரம்பித்தேன். அவரை மானசீக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, அவர் என்ன சொன்னாலும் தலைகீழாக நின்றாவது செய்து முடித்துவிடுவது என உறுதி கொண்டேன். சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் நான் அவரைப் பின்பற்றுகிறேன் என்பது வெளிப்படையாகத் தெரியும்படி நடந்துகொண்டேன்.

ஆறு மாதம் கழித்து ஒருநாள், ராத்திரி சாப்பிட்டு முடித்தபிறகு பொழுது போகாமல் அலுவலகத்தினுள் நுழைந்தேன். காகிதக் குப்பைகளாகக் குவிந்து கிடக்கும் என்னுடைய மேஜையைச் சுத்தம் செய்யலாம் என்று எண்ணம்.

அந்த மேஜையில், இந்தப் பக்கம் நானும், அந்தப் பக்கம் திவாகரனும் அமர்ந்திருந்தோம். அவர் என்னைவிட அதிகமான குப்பைகளைச் சேர்த்துவைத்திருந்தார். இரண்டறக் கலந்து கிடந்த காகிதங்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துப் படித்துக் கசக்கி எறிந்துகொண்டிருந்தேன்.

அப்போது, மிக எதேச்சையாக அந்தக் காகிதம் என் கண்ணில் பட்டது. திவாகரன் அச்சிட்டிருந்த ஒரு மின்னஞ்சல் கடிதம் அது.

சாதா மெயிலோ, ஈமெயிலோ, அடுத்தவர்களுடைய கடிதங்களைப் படிப்பது தப்புதான். ஆனால், அதில் என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதுமட்டும் எப்படியோ என் கண்ணில் பட்டுவிட்டது.

நான் அவசரமாக அலுவலகத்தை நோட்டமிட்டேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை, என்னைத்தவிர வேறு யாரும் தென்படவில்லை. தயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு லேசான பதற்றத்துடன் அந்தக் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினேன்.

அன்புள்ள திரு. திவாகரன்,

நீங்கள் சிபாரிசு செய்த திரு. கோயிஞ்சாமி நமது நிறுவனத்தில் பணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

இந்தச் சிபாரிசுக்கான அன்பளிப்புத் தொகையாக, ரூபாய் ஒன்றரை லட்சம், எண்பத்தேழு நயா பைசா உங்களுக்கு வழங்கப்படுகிறது. காசோலை குறித்த விவரங்களைக் கீழே கொடுத்திருக்கிறோம்.

இன்னும் உங்களுக்குத் தெரிந்த திறமையாளர்கள் யாரேனும் இருந்தால், விடாதீர்கள், நீங்கள் பிடித்துத் தரும் ஒவ்வொருவருக்கும் ஒன்றரை லட்சம் ரூபாயும் எண்பத்தேழு நயா பைசாக்களும் வழங்குவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்

இப்படிக்கு,

பெரிய பெருமாள்

சும்மா வேடிக்கைக்காக இப்படி மிகைப்படுத்தி எழுதியிருக்கிறேனேதவிர, அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு இன்னும் அப்படியே ஞாபகம் இருக்கிறது. காரணம், அன்று இரவில்மட்டும் அதைக் குறைந்தபட்சம் ஐம்பதுமுறையாவது வாசித்திருப்பேன்.

திவாகரன் செய்தது, நிச்சயமாகக் கொலைக் குற்றம் அல்ல. Employee Referral என்பது எல்லா நிறுவனங்களிலும் சர்வசாதாரணமாக நடக்கிற ஒரு விஷயம் என்பது இப்போது எனக்குத் தெரியும்.

ஆனால் அன்றைக்கு, அந்த மின்னஞ்சலைப் படித்தபோது நான் மொத்தமாக உடைந்துபோனேன். என்மேல் இருக்கிற அக்கறையால், அல்லது என்னுடைய திறமையின்மீது உள்ள நம்பிக்கையால் திவாகரன் என்னை இந்த வேலைக்குச் சிபாரிசு செய்தார் என்று நம்பிக்கொண்டிருந்த என்னை, அந்தக் கடிதம் உலுக்கி பூமிக்குக் கொண்டுவந்தது.

ஒன்றரை லட்ச ரூபாய் சன்மானம். அதற்காக யாரைப் பிடிக்கலாம் என்று திவாகரன் சுற்றிலும் பார்த்திருக்கிறார், என்னை வளைத்துப்போட்டுவிட்டார்.

உண்மையில், திவாகரன் செய்த இந்தக் காரியத்தால் அவரைவிட எனக்குதான் நன்மை அதிகம். ஒருவேளை அவர் என்னை வளைத்துப்போடாவிட்டால், நான் இன்னும் அந்தப் பழைய கம்பெனியிலேயே குப்பை கொட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பேனோ என்னவோ.

அதேசமயம், ஒன்றரை லட்சத்துக்காகதான் அவர் என்னிடம் தேனாகப் பேசினார், என்னுடைய இண்டர்வ்யூ கச்சிதமாக நடைபெறவேண்டும் என்று அத்தனை தூரம் உழைத்தார் என்பதையெல்லாம் யோசித்தபோது, சத்தியமாக எனக்கு மனிதர்களின்மீது நம்பிக்கையே போய்விட்டது.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், அவர் என்னை ‘வளைத்த’போது எனக்கு வேலை மாறுகிற எண்ணம்கூட இல்லை, என்னிடம் இல்லாத ஒரு தேவையை எனக்குள் உருவாக்கி, என்னுடைய நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது பச்சை நம்பிக்கை துரோகமில்லையா?

உடனடியாக, நான் திவாகரன்மேல் பாய்ந்து சண்டை போட்டேன், ‘சீ, நீயெல்லாம் ஒரு மனுஷனா? பணப் பேய்’ என்று வசனம் பேசிவிட்டு வெளியேறினேன் என்றெல்லாம் கற்பனை செய்யவேண்டாம். எதார்த்தம் அத்தனை சுவாரஸ்யமானது அல்ல.

அதன்பிறகு பல வருடங்கள் நானும் திவாகரனும் ஒன்றாக வேலை பார்த்தோம். எனக்கு அவர் எத்தனையோ விஷயங்களில் உதவியிருக்கிறார், உற்சாகப்படுத்தியிருக்கிறார், புதிய, பெரிய பொறுப்புகளைத் தந்து அழகு பார்த்திருக்கிறார்.

அதேசமயம், நான் எப்போதும் அவரிடம் ’திவாகர தாச’னாக நடந்துகொள்ளவில்லை. அலுவலகத்தில் எல்லோரிடமும் பழகுவதற்கு Professional Relationshipதான் சரியானது என்கிற பாடத்தை அவர் எனக்குச் சொல்லித்தந்து சென்றதாக இப்போது நினைக்கிறேன்.

மறுபடி சொல்கிறேன், திவாகரன் செய்தது பெரிய குற்றம் இல்லைதான். ஆனால் அந்த மின்னஞ்சல் கடிதத்தைப் படித்தபிறகு, இன்றுவரை அவரை என்னால் ஒரு நண்பராகக்கூட நினைக்கமுடியவில்லை.

அதுமட்டுமில்லை, இன்றுவரை, நெருங்கிய உறவுகள், மிகச்சில நல்ல நண்பர்கள்தவிர்த்து, என்மீது அக்கறை காட்டிப் பழகக்கூடிய யாரையும், நான் உள்மனத்தில் சந்தேகிக்கிறேன், அவர்களுக்கு இதன்மூலம் ஏதேனும் ஆதாயம் இருக்கக்கூடுமோ என்கிற அசிங்கமான சந்தேகக் கேள்வியை, ‘நிச்சயமாக இருக்கும், இருக்கவேண்டும்’ என்கிற அடாவடித்தனமான வறட்டுப் பிடிவாதத்தை என்னால் தவிர்க்கமுடிவதில்லை.

ஆகவே தோழர்காள், தயவுசெய்து அடுத்தவர்களுக்கு வரும் கடிதங்களைப் படிக்காதீர்கள், அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவர்கள் அல்ல, நாம்தான்!

***

என். சொக்கன் …

30 01 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் தென்பட்ட ஒரு தகவல் மிகவும் ஆச்சர்யம் அளித்தது.

அந்தப் புத்தகத்தைப்பற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இப்போது அதிலிருந்து ஒரு சின்னப் பகுதிமட்டும் இங்கே:

சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடு வீட்டில் பட்டினி கிடந்த சமயம், பக்கத்துத் தெருவில் வசித்து வந்த பழம் பெரும் எழுத்தாளர் சி. சு. செல்லப்பாவிடம் தன் கதைகள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்திருந்தார். அதில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பல கதைகளும் கவிதைகளும் இருந்தன. பாராட்டிய செல்லப்பா, ‘நாளை உனக்கும் வாழ்க்கை மலரும்’ என்று சொல்லி, இரண்டனா பரிசு கொடுத்தாராம்.

அங்கே இங்கே என்று கதைகள் பிரசுரமாகி வந்தன. நின்று போயிருந்த ‘மணிக்கொடி’ என்ற இலக்கியப் பத்திரிகையை மறுபடி தொடங்க முயற்சி நடந்தது. ஆசிரியர் பி. எஸ். ராமையா இவரை அங்கே உதவி ஆசிரியராக வரும்படி அழைத்திருந்தார்.

ரொம்ப சந்தோஷமாக வேலைக்குப் புறப்பட்ட சமயம், எப்போதோ இவர் மனுப் போட்டிருந்த ஒரு வெள்ளைக்காரக் கம்பெனியிலிருந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்தது.

அங்கே போக வேண்டாம் என்று தீர்மானித்து, மணிக்கொடி ஆஃபீசுக்குப் போனார். ராமையாவிடம் சொன்னதும் அவர் கண்டபடி திட்டினாராம். ‘அவர் சொன்னபடியே நான் வெள்ளைக்காரக் கம்பெனியில் வேலை பார்த்தேன்’

பி. எஸ். ராமையாவால் திசை திருப்பப்பட்டு, ‘மணிக்கொடி’ எழுத்தாளராகும் வாய்ப்பை இழந்த அந்த இளைஞர், பின்னர் தனக்கென்று எழுத்துலகில் ஓர் இடத்தைப் பிடித்தார். ஏராளமான வாசகர் கூட்டத்தையும் சேர்த்துக்கோண்டார்.

ஆனால் இன்றைக்கு, அவர் பெயரையும், மணிக்கொடி என்கிற பெயரையும் அருகருகே குறிப்பிட்டால்கூட, தீவிர வாசகர்கள் கோபித்துக்கொள்வார்கள், அந்த அளவுக்கு ‘வேறுமாதிரி’யான எழுத்துகளுக்காகப் புகழ் பெற்றுவிட்டவர் அவர்.

யார் அந்த எழுத்தாளர்? உங்கள் ஊகங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! சரியான விடையை அடுத்த பதிவில் தருகிறேன்.

***

என். சொக்கன் …

29 01 2009

‘பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

கடைசியாக அந்தக் குரலைக் கேட்டு எட்டு வருடங்கள் கடந்துவிட்டது. ஆனாலும், அதை இப்போது நினைத்தால்கூட உள்ளுக்குள் ஏதோ சிலிர்க்கிறது.

எப்போதும் இப்படிதான். அந்த வயதுப் பையன்களின் உடையாத குழந்தைக் குரல்களைக் கேட்கிறபோதெல்லாம் எனக்கு என்னவோ ஆகிவிடுகிறது. சில விநாடிகளுக்கு எதுவும் செய்ய முடியாதவனாகிப் போகிறேன். ஏதோ இனம் புரியாத சோகம், அதற்குக் காரணம் என்னவென்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

இப்படிதான் ஹைதராபாத் சென்ற புதிதில் ஒருநாள். ஏழெட்டு நண்பர்களுடன் ஹோட்டலில் கும்பலாகப் போய் உட்கார்ந்து ஜாலியாகப் பேசியபடி ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தோம்.

சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லுக்குக் காத்திருந்தபோது, அதுவரை எங்களுக்கு சப்ளை செய்த சின்னப் பையன் நேராக என்னிடம் வந்து தெலுங்கில், ‘இன்னும் எதுனா வேணுமா சார்?’ என்பதுபோல் ஏதோ கேட்டான். அதுவரை இல்லாத குற்றவுணர்ச்சி, அந்தப்  பையனின் கீச்சுக் குரலைக் கேட்டவுடன் வந்து சேர்ந்தது. இத்தனை நேரமாக, அதைக் கொண்டு வா, இதைக் கொண்டு வா என்று அந்தச் சிறுவனை விரட்டியது உறுத்தியது.

அங்கு என்றில்லை. எல்லாக் குழந்தைக் குரல்களும் என்னை உலுக்கிப்போட்டுவிடுகிறது. இந்தச் சின்ன வயதில் அவர்கள் வேலை பார்க்க நேர்கிற நிலைக்கு, மறைமுகமாக நானும் ஒரு காரணமோ என்று குற்றவுணர்ச்சியாக இருக்கிறது.

அதே நேரத்தில், எழுதுகிற புத்தி சும்மா இருப்பதில்லை. அவனை(ளை) ஆழ்ந்து கவனிக்கிற ஆசை வருகிறது. ஆனால் என்னதான் கவனித்து எழுதினாலும் நம்மால் ஒரு ரோமத்தையும் பிடுங்கிவிடமுடியாது என்று புரிகிறபோது வருத்தம் அதிகரிக்கிறது.

என்னால் முடிந்தது, அந்தச் சிறுவன் அல்லது சிறுமியின் நலனுக்காக ஒரு மௌனப் பிரார்த்தனை. அது போதும், அதன்பிறகு அடுத்த கீச்சுக் குரலைக் கேட்கிறவரை சேணம் கட்டிய குதிரைபோல் உலக சந்தோஷங்களைத் துளி உறுத்தல் இன்றி அனுபவிக்கலாம்.

‘பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

அந்தக் குரல் மறுபடியும் கேட்கிறது. நினைவுகளுக்குள் திரும்பித் தேடுகிறேன்.

ஹைதராபாத். சாலையோர மஞ்சள் நிற விளக்குகளில் நனைந்தபடி எங்கேயும் ஜனக் கூட்டம். தரையில் விரித்து ஆரஞ்சுப் பழங்கள் விற்றுக்கொண்டிருந்த காவிப்பல் பெண்ணில் தொடங்கி, ஏஸி ஷோ ரூம்கள்வரை எங்கேயும் மக்கள் நின்றிருக்க, இந்தக் குழந்தைக் குரலை எங்கே தேடமுடியும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், அந்தக் குரல் மீண்டும் சத்தமாக ஒலித்தது.

’பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

எனக்குப் பத்தடி பின்னால் நின்றிருந்த தீப்பெட்டி பஸ்ஸிலிருந்துதான் அந்தச் சத்தம் வந்துகொண்டிருந்தது. கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்துடன் நேராக அந்த பஸ்ஸை நோக்கி நடக்கிறேன்.

அதே நேரத்தில், மனத்துக்குள் என்னுடைய இன்னொரு உருவம் என்னைவிடப் பெரியதாக எழுந்து நின்று பிடிவாதமாகக் கையசைக்கிறது, ‘ஏய், உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அந்தத் தீப்பெட்டி பஸ்ஸிலயா ஏறப்போறே?’

சட்டென்று நின்றுவிடுகிறேன். நிஜமாகவே எனக்குப் பைத்தியம்தான் பிடித்துவிட்டது. இல்லாவிட்டால் போயும் போயும் தீப்பெட்டி பஸ்ஸில் ஏற நினைப்பேனா?

ஹைதராபாத் வந்து சேர்ந்த ஆரம்ப காலத்தில் நாங்கள் சந்தித்த மிகப் பெரிய ஆச்சர்யங்களில் ஒன்று, அங்கே இருந்த நான்கு வகைப் பேருந்துகள்.

முதலாவதாக, நம் ஊர் டூரிஸ்ட் பஸ்களைப்போல் உசத்தி ரகம் ஒன்று, இளநீல வண்ணத்தில் அவைகளைப் பார்க்கவே ஆசையாக இருக்கும். ஒரு பக்கம்தான் கதவு, மெத்மெத் சீட்கள், கோட் அணிந்த நடத்துனர்கள், அதுவும் பெண்கள்.

இதற்காகவே, துட்டு அதிகமானாலும் பரவாயில்லை என்று இந்த வகை பஸ்களில்தான் நாங்கள் அடிக்கடி பயணம் செய்தோம், அல்லது பயணம் செய்ய விரும்பினோம். இதமான சூழல், மிதப்பதுபோல் ஊர்ந்து செல்லும் அதிவேகத் தேர், அடிக்கடி பஸ்ஸை நிறுத்தித் துன்புறுத்தாமல், சில முக்கியமான ஸ்டாப்களில்மட்டும் நின்று செல்வதால், விரைவாகச் சென்று சேரலாம்.

ஆனால், இந்த வகை பஸ்களின் எண்ணிக்கை மிகக் குறைச்சல். இதனால், நாம் போகிற இடத்துக்கான பஸ் எப்போது வரும் என்று கடவுளுக்குக்கூடத் தெரியாது. வேறு வழியில்லாமல் நாங்கள் மற்ற மூன்று வகைப் பேருந்துகளிலும் பயணம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இரண்டாம், மூன்றாம் வகைப் பேருந்துகளில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. ஒன்றில் கொஞ்சம் தாராளமான இட வசதி, இன்னொன்றில் கொஞ்சம் – கொஞ்சமே கொஞ்சம் கூட்டம் சேர்ந்துவிட்டால் போதும், மூச்சுத் திணற ஆரம்பித்துவிடும்.

அதுமட்டுமில்லை, டிக்கெட் கொடுக்க வருகிறவர்கள் கொஞ்சமும் மரியாதை இல்லாமல் கை சொடுக்கிக் கேட்பார்கள். அவமானமாக இருக்கும்.

அதனாலேயே, நான் முடிந்தவரை இந்தப் பேருந்துகளைத் தவிர்த்துவிடுவேன். கை நிறையக் காசு சம்பாதித்துக்கொண்டிருந்த திமிர், ஆட்டோக்களுக்கு வாரியிறைக்கச் சொன்னது.

ஹைதராபாத் பேருந்துகளின் நான்காவது வகை, ‘நான்காவது தரம்’ என்றுகூடச் சொல்லலாம், ‘தீப்பெட்டி பஸ்’.

பெயர் விநோதமாக இருக்கிறது, இல்லையா? பஸ்கூட அப்படிதான்.

பத்துப் பேர் அமர முடிகிற ஒரு சின்ன வேனைவிடக் கொஞ்சம் பெரிய வண்டி. டிரைவர் முன்னால் இருப்பதுமுதல், சுற்றியுள்ள அத்தனைக் கண்ணாடிகளும் உத்திரவாதமாக உடைந்துபோயிருக்கும். மிச்சமிருக்கும் தகரமும் ’இன்றைக்கோ, நாளைக்கோ’ என்று தத்வார்த்தமாக ஒட்டியிருக்கும், பஸ்ஸைச் சுற்றிலும் ஆந்திராவின் புகழ் பெற்ற வண்ணங்கள் – பெரும்பாலும் மஞ்சள் – பூசி, அதில் நிச்சயமாக ஒரு தெலுங்குப் பட விளம்பரமும், மெடிமிக்ஸ் விளம்பரமும் போட்டிருப்பார்கள்.

தரையிலிருந்து ஓர் அடி உயரத்தில்கூட இல்லாமல் அபாயகரமாக ஓடுகிற இந்த வாகனத்தை ‘பஸ்’ எனச் சொல்வது அநியாயம். ‘தீப்பெட்டி’ என்று பொருத்தமாகப் பெயர் வைத்தவர்கள் வாயில் சர்க்கரையைக் கொட்டவேண்டும்.

தீப்பெட்டியிலாவது ஒரு குச்சிக்கும் இன்னொரு குச்சிக்கும் கொஞ்சூண்டு இடைவெளி இருக்கும். ஆனால் இந்த பஸ்களில் எள் விழுந்தால் காணாமல் போய்விடும்.

ஆனால், தீப்பெட்டி பஸ்களில் எப்போதும் மக்கள் கூட்டம். நிரம்பி வழியும். மற்ற மூன்று வகைப் பேருந்துகளைவிட, இவற்றுக்குதான் ஜனங்களின் முழு ஆதரவு. ஒருமுறைகூட இந்த வகை பஸ்களை நான் காலியாகப் பார்த்தது கிடையாது. ராத்திரி நேரத்தில்கூட, மசங்கலாக ஒளிர்கிற ஒரு மஞ்சள் லைட்டைப் போட்டுக்கொண்டு மக்களைத் திணித்தபடி பறந்துகொண்டிருப்பார்கள்.

ஜனங்கள் எந்த நம்பிக்கையில் ஏறுகிறார்கள்? காசு குறைச்சல் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், பாதுகாப்பு?

டிரைவர் ஏதோ உற்சாகத்தில் ஒரு திருப்பத்தில் வேகமாகப் போனாரென்றால், சர்வ நிச்சயமாக பஸ் தலைகீழாகக் கவிழ்ந்துபோகும். இத்தனை அபத்திரமான ஒரு விஷயத்தை அரசாங்கத்தில் எப்படி அனுமதிக்கிறார்கள்?

இலவசமாகக் கூட்டிப்போனால்கூட, நாங்கள் இந்தப் பேருந்துகளில் ஏறுவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். அத்தனை சின்ன இடத்தில் இத்தனை ஜனங்கள் மத்தியின் நெருக்கத்தில் அவஸ்தையாக நின்றுகொண்டு பயணம் செய்வதா? நினைத்தாலே வியர்க்கிறது.

இப்படியாக, முக்கால் வருடம் ஓடியிருந்த நிலையில், எங்களுடன் கல்லூரியில் படித்த ராமச்சந்திரன் ஹைதராபாத் வந்தான். ஏதோ பயிற்சித் தேர்வு எழுதுவதற்காக.

ராமச்சந்திரனுக்கு ஆந்திரா புதிது. ஆனால் அவனும், அவன் வீட்டில் எல்லோரும் நன்றாகத் தெலுங்கு பேசுவார்கள். ஆகவே, எங்களைத் தொந்தரவு செய்யாமல், அவனே ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டான்.

ஆரம்பத்தில் பையனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மாலை வீடு திரும்புவதற்காகப் புறப்பட்டபோதுதான், எங்கேயோ அரைகுறையாக விசாரித்துவிட்டு எங்கள் வீட்டுப்பக்கம் வருகிற ஒரு தீப்பெட்டி பஸ்ஸில் ஏறிவிட்டான்.

அன்று இரவு வீட்டுக்குள் நுழைந்த ராமச்சந்திரனின் தோற்றத்தை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது. தலைமுடி அநியாயத்துக்குக் கலைந்திருந்தது. சட்டை பேன்ட்டிலிருந்து பாதி வெளியே வழிந்து கசங்கியிருந்தது, கையில் இருந்த புத்தம் புது பை கிழிந்து போயிருக்க, அதற்குள் ஒரு புத்தகமும் இன்னும் சில ‘அன்றைக்கு வாங்கினவை’களும் கீழே விழுந்துவிடும்போல் தொங்கியிருந்தன, மூன்று நாள் தூங்காதவன்போல், அல்லது மூன்றரை பெக் ’ரா’வாக விழுங்கியவன்போன்ற முகபாவத்துடன் பரிதாபமாக உள்ளே வந்து விழுந்தான் அவன்.

எங்களுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை, ‘என்னாச்சுடா?’ என்று நாங்கள் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, அவன் யாரையும் கவனிக்காமல் பாத்ரூமுக்கு ஓடினான், பெரிய சத்தத்துடன் வாந்தி எடுத்தான்.

அடுத்த மூன்று நாள்களுக்கு, அவனுடைய முகத்தில் அதிர்ச்சி விலகவே இல்லை. அரையும் குறையுமாகத் தேர்வை எழுதி முடித்துவிட்டு ஊருக்கு ஓடியவன், உடனடியாக அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு பைக் வாங்கிவிட்டான், இன்றுவரை அவன் எந்தப் பேருந்திலும் ஏறியிருக்கமாட்டான் என்று நினைக்கிறேன்.

ஏற்கெனவே தீப்பெட்டி பஸ்கள்மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு, ராமச்சந்திரன் அனுபவம் ஒரு முற்றுப்புள்ளியாகிவிட்டது. இனிமேல் நடந்து போனாலும் சரி, தீப்பெட்டி பஸ்ஸில் ஏறுவதில்லை என்று தீர்மானித்துவிட்டோம்.

அதன்பிறகு, ரோட்டில் நாங்கள் சாதாரணமாக நடந்து போகும்போது அருகே ஒரு தீப்பெட்டி பஸ் ஓடினால்கூட பயமாக இருந்தது. பஸ் கவிழ்ந்து அத்தனை ஜனக்கூட்டமும் எங்கள்மேல் விழுவதுபோன்ற கற்பனையில் உடல் நடுங்க ஆரம்பித்தது. ஓரமாக ஒதுங்கிப்போனோம்.

இப்போது என்முன்னே நின்றிருக்கிற தீப்பெட்டி பஸ்ஸைப் பார்த்ததும், எனக்கு ராமச்சந்திரன் ஞாபகம், வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வாந்தி வருகிறாற்போலிருக்கிறது.

திரும்பிப் போய்விடலாமா என்று யோசித்தபோது, மறுபடியும் அந்தக் குரல், ’பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,;’

எனக்குள் இருந்த எல்லா வெறுப்புகளையும் அந்தக் குரல் துடைத்துப்போட்டுவிட்டது. ‘வாயேன் இங்கே’ என்று முகம் தெரியாத அந்தச் சின்னப் பையன் என்னைக் கூப்பிடுவதுபோலிருந்தது. கூட்டத்தின் நடுவே மெதுவாக நடந்து அந்த பஸ்ஸை அடைந்தேன்.

முதல் ஆச்சர்யம், அந்த பஸ் காலியாக இருந்தது.

கொஞ்சநஞ்சமிருந்த தயக்கத்தையும் அழித்துவிட்டு பஸ்ஸில் ஏறினேன். பெரிதாக என்ன ஆகிவிடும்? ஜம்மென்று உட்கார்ந்துகொண்டு பயணம் செய்யப்போகிறேன், இதோ நாலு ஸ்டாப் தாண்டினால் வீடு, சௌகர்யமாக இறங்கிவிடப்போகிறேன் என்று என்னைச் சமாதானம் செய்துகொண்டேன்.

தீப்பெட்டி பஸ்களில் மூன்றே சீட்கள். சாதாரணமாக மற்ற பேருந்துகளில் இருப்பதுபோலின்றி, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறாற்போல் இருக்கைகளைப் ‘ப’ வடிவத்தில் அமைத்திருந்தார்கள்.

பிரச்னை என்னவென்றால், ‘ப’வுக்கு நடுவே இருக்கிற இடம். அங்கே ஏகப்பட்ட பேர் ஏறி நின்றுகொண்டால், யாரும் யார் முகத்தையும் பார்க்கமுடியாது.

அன்றைக்கு என்னைத்தவிர அந்தப் பேருந்தில் அமர்ந்திருந்தவர்கள் இரண்டு பேர், ஒருவர் சுவாரஸ்யமாகக் காது குடைந்துகொண்டிருக்க, இன்னொருவர் செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். இவர்களில் யாருக்கும், இந்த வண்டி எப்போது புறப்படும் என்று தெரிந்திருக்காது. ஓட்டுனரையும் காணவில்லை.

எனக்கு என்ன ஆச்சு? ஏன் இந்தப் பேருந்தில் ஏறியிருக்கிறேன்? ஆட்டோ பிடித்தால் ‘ஜஸ்ட்’ ஆறரை ரூபாய், ராஜாபோல வீட்டு வாசலில் போய் இறங்கலாம். அதை விட்டு இத்தனை மனிதர்கள் விடுகிற அசுத்தக் காற்றை இவ்வளவு நெருக்கத்தில் சுவாசித்து, இவர்களுடைய வியர்வையில் நான் குளிக்கவேண்டுமா? இறங்கிவிடலாமா?

முடிவு செய்யுமுன் அந்தப் பையனைத் தேடினேன். அவன் கதவுக்கு அருகில் இருந்த கடைசி சீட்டில் இருந்தான்.

உட்காரவில்லை. முழங்காலிட்டு நின்றபடி ஜன்னல் வழியே வெளியில் பார்த்துக் கத்திக்கொண்டிருந்தான், ‘பஞ்சகுட்டா., ஆமிர்பெட்., போராபண்டா.,’

பஸ்ஸில் அப்போது கூட்டம் இல்லாததால், அந்தப் பையனை நன்கு கவனிக்கமுடிந்தது. அவன் உருவத்துக்குக் கொஞ்சமும் பொருந்தாத அளவில் சட்டை, பேன்ட், கலைந்த தலை, செருப்பில்லாத கால், முகத்தில் இன்னும் மிச்சமிருக்கிற குழந்தைத்தனம், அதற்குக் கொஞ்சமும் பொருந்தாமல் உரக்கக் கத்திக்கொண்டிருந்ததுதான் உறுத்தியது.

அவன் இன்னும் நிறுத்தாமல் கத்திக்கொண்டிருந்தான், ‘பஞ்சகுட்டா., ஆமிர்பெட்., போராபண்டா.,’

இவனுக்கு என்ன சம்பளம் இருக்கும்? அப்பா, அம்மா இருப்பார்களா? வீட்டில் என்ன கஷ்டமோ? படிக்கிற வயதில் இப்படிப் போகிற வருகிறவர்களைப் பார்த்துக் கத்த நேர்ந்தது கொடுமையில்லையா? அவன் இதையெல்லாம் யோசிப்பானா? இவன் வயதுப் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதைப் பார்க்கும்போது இவனுக்குள் ஏக்கம் வருமா? நான் ஏன் இப்படி இல்லை என்று கேள்வி கேட்டுக்கொள்வானா? அல்லது, இத்தனை கேள்விகளும் என்னுடைய கற்பனையா? இவனுக்கு இதெல்லாம் மரத்துப்போயிருக்குமோ?

ஹைதராபாதில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய விளையாட்டு அரங்கம் இருந்தது. ஒரு பிரம்மாண்டமான அறைமுழுவதையும் குழந்தை விளையாட்டுகளுக்காக ஒதுக்கியிருந்தார்கள்.

ஒருபக்கம் பெரிய சைஸில் வீடியோ கேம்கள், இன்னொருபுறம் மின்சாரத்தில் ஓடும் பொம்மைக் கார்கள், மூன்றாவது முலையில் வலைக் கம்பிகளால் அமைத்த ஓர் அறை, அதனுள் முழன்க்கால் உயரத்துக்கு ஏராளமான பிளாஸ்டிக் பந்துகள்.

அந்த வலை அறைக்குள் குழந்தைகள் நுழைவதற்கான ஒரு சின்னத் திறப்பு இருந்தது. அதன்வழியே குழந்தைகள் ‘தொம்’மென்று பிளாஸ்டிக் பந்துகளின்மீது குதிப்பதும், ஒருவர்மேல் ஒருவர் பந்துகளை வீசி எறிந்து விளையாடுவதும், உயரத்தில் இருந்த கூடையில் பந்துகளைப் போடுவதற்கு முயற்சி செய்து விழுவதும் எழுவதும் பார்க்கப் பரவசமான காட்சிகள்.

இப்போது பெங்களூரிலும் இதுபோன்ற விளையாட்டுத் தலங்களை நிறையப் பார்கிறேன், என் மகள் அவற்றில் குதித்துக் கரையேற மறுக்கிற ஒவ்வொருமுறையும், நான் சின்னப் பையனாக இருந்தபோது இதெல்லாம் அறிமுகமாகவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

ஆனால்,  ஹைதராபாத் தீப்பெட்டி பஸ்ஸில் நான் பார்த்த அந்தப் பையன்? அவன் தினமும் பயணம் செய்கிற அதே ‘பஞ்சகுட்டா, ஆமிர்பெட்’ வழியில்தான் இதுபோன்ற விளையாட்டுகள் நிரம்பியிருக்கின்றன. ஆனால் இவன், பஸ்ஸுக்குள் நின்றபடி கத்தமட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறான்.

இப்போது, தீப்பெட்டிக்குள் ஓரளவு கூட்டம் சேர்ந்துவிட்டது. இனிமேல் பஸ்ஸை எடுத்துவிடுவார்கள் என்று தோன்றியது.

பஸ்ஸுக்குள் கூட்டம் நிறைந்துவிட்டதால், அந்தப் பையன் வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான். அவன் முழங்காலிட்டு நின்றிருந்த இடத்தில், இப்போது வேறு இருவர் உட்கார்ந்திருந்தார்கள்.

நான் ஜன்னல்வழியே எட்டிப் பார்த்தேன், இன்னும் கூட்டம் சேரவேண்டுமா? எப்போது இந்த பஸ் புறப்படும்?

டிவி நாடகங்களைப்போல், நான் நினைத்த மறுவிநாடி டிரைவர் சீட்டில் ஒரு மீசை ஆசாமி ஏறி உட்கார்ந்தார். கண் மூடிப் பிரார்த்தனைபோல் ஏதோ செய்துவிட்டு பஸ்ஸைக் கிளப்பினார். முழு வண்டியும் ஒருமுறை குலுங்கியது.

நான் ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கீழே உருண்டு விழாமல் சமாளித்தேன். அந்தப் பையன் இன்னும் படியில் நின்றபடி கத்திக்கொண்டிருந்தான்.

பஸ் கிளம்பியதும், அவன் உள்ளே வந்தான். அவனேதான் கண்டக்டர்(ன்) போலிருக்கிறது. ஒவ்வொருவரிடமும் சேருமிடத்தின் பெயரைக் கேட்டுக் காசு வாங்கிக்கொண்டான், டிக்கெட் எதுவும் கிடையாது.

இதற்குள், பஸ் வேகம் பிடித்திருந்தது. வண்டியின் ஒவ்வொரு பாகமும் தனித்தனியாக ஆடுவதுபோல் தோன்றியது. முழுசாக வீடு போய்ச் சேருவேனா என்று சந்தேகம் முளைத்தது. ராமச்சந்திரன் மூளை முனையில் எட்டிப் பார்த்துச் சத்தமாக வாந்தி எடுத்தான்.

அடுத்த ஸ்டாப்பில், இன்னும் கூட்டம் சேர்ந்துவிட்டது. நான் லேசாக நெளிய ஆரம்பித்தேன். அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிட்டால், வீட்டுக்கு நடந்தேகூடப் போய்விடலாம்.

எல்லோரிடமும் காசு வாங்கி முடித்த அந்தப் பையன், ஜன்னல் அருகே வந்தான், கடைசி சீட்டுக்கும் என் சீட்டுக்கும் இருந்த இடைவெளியில் நிற்க இடம் கேட்டான். பின்சீட்டுக்காரர்கள் முணுமுணுத்தபடி நகர்ந்தார்கள்.

அவன் சிரமமாக உள்நுழைந்து நின்றுகொண்டான், ஆர்வத்துடன் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். ஆந்திரச் சட்டமன்றத்துக்குச் செய்திருந்த வண்ண விளக்கு அலங்காரங்களைப் பார்க்கையில் அவன் வாய் பிளந்து மூடியது.

எனக்குத் தெலுங்கு அரைகுறை, ஆனாலும் அவனுடன் பேசவேண்டும் என்று தோன்றியது. உடைந்த ஹிந்தியில் அவனைக் கேட்டேன், உன் பேர் என்னப்பா?’

அவன் ஏதோ பதில் சொன்னான். வாகன்ச் சத்தத்தில் தேய்ந்து போய் ஏதோ ‘கான்’ என்று முடிந்ததுமட்டும் கேட்டது. மறுபடி பெயர் கேட்பது அநாவசியம் என்று தோன்றியது.

‘படிக்கிறியா?’

இந்தக் கேள்வியும் தப்பு, ‘படிச்சியா’ என்று கேட்டிருக்கவேண்டும்.

அவன் அழகாகத் தலையசைத்து, ‘ம்ஹூம்’ என்றான், பதிலில் இருக்கிற சோகம், முகத்தில் கொஞ்சமும் தெரியவில்லை.

‘உங்கப்பா என்ன பண்றார்?’

அவன் அதற்குப் பதில் சொல்வதற்குள், அடுத்த நிறுத்தம் வந்துவிட்டது. பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு, ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டிக் கனகார்யமாகக் கத்தத் தொடங்கினான், ‘பஞ்சாகுட்டா., ஆமீர்பேட்., போராபண்டா.,’

எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம். இன்னும் அவனிடம் பேசியிருக்கலாமோ?

பேசிதான் என்ன ஆகப்போகிறது? இதோ, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்குப் போய்விடப்போகிறேன், அதன்பிறகு இவன் யாரோ, நான் யாரோ.

அந்தப் பேருந்தின் வெப்பநிலை இப்போது கணிசமாக அதிகரித்திருந்தது. நின்றிருந்தவர்கள் பெரும்பான்மையினர் உட்கார்ந்திருந்த சிறுபான்மையினரை ‘எப்போ எழுந்திருப்பே?’ என்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார்கள், இறங்கும்போது வழி விடுவார்களா என்றுகூடச் சந்தேகமாக இருந்தது.

நான் மறுபடியும் அந்தப் பையனைப் பார்த்தேன், பஸ் கிளம்பிவிட்டதால் அவன் ஜன்னலில் இருந்து தலையை விலக்கிக்கொண்டு என்னைப் பார்த்தான். பேசுவானா, மாட்டானா என்று நான் யோசிப்பதற்குள் அவனே சிரித்தான், என் கையிலிருந்த புத்தகத்தை நோக்கிக் கை காட்டினான். சந்தோஷமாக எடுத்துக் கொடுத்தேன்.

அது, ’இந்தியாடுடே’ அரசியல் பத்திரிகை. அதில் அவனுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. பொம்மை பார்க்கிற ஆர்வம்மட்டும் இருந்தது. சற்றே அசௌகர்யமாகக் கைகளை அமைத்து இடம் பண்ணிக்கொண்டு பக்கம் பக்கமாகத் திருப்பிப் படம் பார்த்தான். சினிமா பக்கத்தைப் புரட்டும்போதுமட்டும் கொஞ்சம் வேகம் குறைச்சல்.

இரண்டு நிமிடங்களுக்குள், அவன் மொத்தப் புத்தகத்தையும் புரட்டிவிட்டான், என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு நட்பாகச் சிரித்தான்.

நான் இறங்கவேண்டிய ஸ்டாப் நெருங்கிக்கொண்டிருந்தது. அவசரமாக எழுந்துகொண்டபோதுதான், எனக்கு அந்த யோசனை தோன்றியது, ‘இங்கே உட்காருப்பா’ என்று என் இடத்தைக் காட்டினேன்.

’ம்ஹூம், வேணாம் சார்’ அவன் கூச்சமாகத் தலை அசைத்து மறுத்தான்.

‘சும்மா உட்காருப்பா, எவ்வளவு நேரம் நின்னுகிட்டே வருவே? உட்காரு’ பிடிவாதமாக அவனை இழுத்து அமரவைத்தேன். சுற்றியிருப்பவர்கள் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்.

அந்தப் பையனும், இதை எதிர்பார்த்திருக்கவில்லை. சற்றே ஆச்சர்யமாக என்னைப் பார்த்தவன், சமாளித்துக்கொண்டு என் இடத்தில் அமர்ந்தான், ஜன்னல்பக்கம் திரும்பிக் கத்தத் தயாரானான்.

நான் வண்டியிலிருந்து இறங்கியதும், ஜன்னலில் அவன் முகம் பார்த்தேன், கை அசைத்தேன், அவன் கத்தலுக்கு நடுவே ஒரு சின்னப் புன்னகை செய்தான்.

திரும்பி வீடு நோக்கி நடந்தபோதும், அந்தக் குரல் முதுகுக்குப் பின்னால் கேட்டுக்கொண்டே இருந்தது, ’பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

அதுதான், தீப்பெட்டி பஸ்ஸில் என்னுடைய முதல் மற்றும் கடைசிப் பயணம். அதன்பிறகு என்றைக்கும் அந்தப் பேருந்துகளில் ஏறவேண்டும் என்று தோன்றவில்லை, அவனையும் மறுபடி சந்திக்கவில்லை.

ஆனால் அந்தக் குரல், கடைசியாக அவன் சிந்திய அந்தக் குழந்தைப் புன்னகை இரண்டும் மறக்கமுடியாதவை.

***

என். சொக்கன் …

27 01 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

போன வாரத்தில் ஒரு நாள், வழக்கம்போல் மதியச் சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்தேன். கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழையும்போதே உற்சாகக் கூக்குரலுடன் ஓடி வந்தாள் நங்கை, ‘அப்பா, பாட்டி வந்திருக்காங்களே’

’பாட்டியா? அவங்க எப்படி இங்கே வருவாங்க? சும்மா விளையாடாதேம்மா’ என்றபடி செருப்பைக் கழற்றினேன்.

ஆனால், நங்கை சொன்னதுதான் உண்மை. நிஜமாகவே அவளுடைய பாட்டி அவளைப் பார்க்கப் புறப்பட்டு வந்திருந்தார்.

அப்பா, அம்மாவைவிட, ஏனோ குழந்தைகளுக்குப் பாட்டிகளைதான் அதிகம் பிடிக்கிறது. காரணம், அவர்களுக்குதான் குழந்தைகளுடன் செலவிட அதிக நேரமும் பொறுமையும் இருக்கிறது.

நாலு வாய்ச் சாப்பாட்டை ஒன்றரை மணி நேரம் ஊட்டுவதுமுதல், விதவிதமான கதைகளைச் சலிக்காமல் திரும்பத் திரும்பச் சொல்வதுவரை பாட்டிகளின் பொறுமை அசாத்தியமானது. கிட்டத்தட்ட அதே வயதில், அதே அளவு ஓய்வு நேரத்துடன் இருக்கும் தாத்தாக்களுக்குக்கூட இந்த தேவ குணம் வாய்ப்பது இல்லை.

நங்கையின் பாட்டி அன்று அவளுக்கு ஆண்டாள் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஊர் வர்ணனையில் தொடங்கி, பெரியாழ்வாருக்கு முழ நீள தாடி, ஆண்டாளுக்கு ‘ஸ்ட்ராபெர்ரி (?) உதடு’, ‘ஆப்பிள் பழக் கன்னம்’ என்பதுவரை விளக்கமாக, பொறுமையாகக் காட்சிபூர்வமாகக் கதை விரிந்தது.

நானும் என் மனைவியும்கூட நங்கைக்கு நிறையக் கதைகள் சொல்வோம். ஆனால் அந்தக் கதைகளெல்லாம் வேகத்தடை நிறைந்த சாலையில் வண்டி ஓட்டுவதுபோல் நின்று நின்று செல்லும்.

உதாரணமாக, ஒரு வாய் இட்லியை நங்கை வாயில் போடுவோம், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம், அந்த ராஜாவுக்கு ரெண்டு பசங்களாம்’ என்று கன்னித்தீவு தினசரி கோட்டாபோல் இரண்வே வாக்கியத்தில் நிறுத்திக்கொண்டுவிடுவோம், ‘வாய்ல இருக்கிற இட்லியை முழுங்கு, அப்புறம்தான் கதை தொடரும்.’

நங்கை சும்மா இருப்பாளா?, ‘நீ கதையைச் சொல்லு, அப்போதான் விழுங்குவேன்’ என்று பிடிவாதம் பிடிப்பாள்.

உடனே இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சீண்டுவது, கோபப்படுவது, திட்டுவது என்று ஏதேனும் நடக்கும். கடைசியில் இட்லி விழுங்கப்பட்டபிறகு, கதை ரெண்டு வரி நகரும், மறுபடி ‘தொடரும்’.

இப்படி ஒவ்வொரு வாய் இட்லிக்கும் இரண்டு வரிகள் என்கிற விகிதத்தில் கதையை நகர்த்திச் செல்வதால், எங்களுடைய கதைகள் எவற்றுக்கும் சரியான நீள, அகலம் கிடையாது. கடைசி வாய் இட்லி விழுங்கப்பட்டதும், மிச்சமிருக்கிற கதையை நாலே வரியில் சொல்லி முடித்துவிடுவோம்.

பாட்டிகள் அப்படியில்லை, அவர்கள் நிஜமாகவே ஆத்மார்த்தமாகக் கதை சொல்கிறவர்கள், அதில் மயங்கிக் குழந்தைகள் சாப்பிடுமேதவிர, ‘சாப்பிட்டால்தான் கதை சொல்வேன்’ என்று பிளாக்மெயில் செய்யும் அதட்டல் அவர்களிடம் இல்லை.

நங்கைக்குப் பாட்டி சொன்ன ஆண்டாள் கதையின் மகிமை, அன்று இரவு தெரிந்தது, ‘அப்பா, என்னை ஒருவாட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டிட்டுப் போவீங்களா?’ என்றாள் கெஞ்சலாக.

நேற்றுவரை ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’ என்ற வார்த்தையே அவளுக்குப் பரிச்சயமில்லை. ஆனால் இன்று, அந்த ஊருக்குப் போகவேண்டும் என்று நினைக்கத் தொடங்கிவிட்டாள், பாட்டி சொன்ன கதை அத்தனை ஆழமாக மனத்தில் பதிந்திருக்கிறது.

பாட்டிக் கதையின் இந்தச் சொகுசை, அன்னியோன்யத்தை அச்சில் கொண்டுவந்த ஒரு புத்தகம் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. ஜயா சந்திரசேகரன் எழுதிய ‘இது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம்’. (’வரம்’ வெளியீடு – ஜூன் 2008 – 144 பக்கங்கள் – விலை ரூ 70/-).

‘ஜயாப் பாட்டி’ என்கிற செல்லப் பெயருடன் மகாபாரதக் கதையை அழகாக விளக்கிச் சொல்லியிருக்கிறார் ஜயா சந்திரசேகரன். வேகத்துக்கு வேகம், விவரணைக்கு விவரணை என எதிலும் குறை வைக்காத எழுத்து.

முக்கியமாக, ஜயாப் பாட்டியின் மொழி. நிஜமாகவே ஒரு பாட்டி நம் அருகே உட்கார்ந்து கதை சொல்வதுபோன்ற ஒரு நடை புத்தகம்முழுவதும் கையாளப்பட்டிருக்கிறது.

உதாரணமாக, மகாபாரதம் எப்படி, யாரால் எழுதப்பட்டது என்பதைச் சொல்லும் அத்தியாயத்திலிருந்து ஒரு பத்தி:

நாலு முகம் கொண்ட சாமியான பிரம்மா இருக்காரே – அவர்தான் நம்மை மாதிரி மனுஷங்களைப் பண்ணினார். அவர் மிக மிக உயர்ந்த மனிதர்களையும் உண்டு பண்ணினார். அவங்கதான் ரிஷிகள். நமக்கெல்லாம் எது நல்லது, எது கெட்டது, எப்படிச் சமத்தா இருந்தாக்க மகிழ்ச்சியா இருக்கலாம்ங்கறது எப்படிச் சொல்லித் தரதுன்னு பிரம்மா ரொம்ப திங்க் பண்ணினார். இதை யாராவது வயசுல பெரிய தாத்தா சொன்னா நல்லாயிருக்கும்னு ஐடியா பண்ணினார். வியாசர்னு ஒரு பெரீய்ய ரிஷி தாத்தா இருந்தார். அவர்கிட்டே பிரம்மா, வேதம்ங்கற புத்திமதியைக் கொடுத்தார். அதனால வியாசரை வேத வியாசர்ன்னும் சொல்லுவாங்க.

இப்படிப் புத்தகம்முழுவதும் எளிமையான பேச்சு வழக்கில் எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்குப் புரியக்கூடிய வார்த்தைகளைமட்டுமே பயன்படுத்துகிறார். உதாரணமாக, ‘போர்’ என்று சொல்லாமல், ‘டிஷ்யூம் டிஷ்யூம்’ சண்டை என்கிறார், ‘அம்பிகா, அம்பாலிகா ரெண்டு பேரும் சமத்தா பீஷ்மர் சொன்னபடி விசித்திர வீர்யனை டும் டும் மேளம் கொட்டிக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க’ என்கிறார்.

அதேசமயம், இந்தப் புத்தகத்தை வாசித்து  முடிக்கும்வரை எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்த ஒரு சந்தேகம், இதன் வாசகர்கள் யார்?

என்னதான் குழந்தை மொழியில் எழுதப்பட்டாலும், அந்த வயதுப் பிள்ளைகள் 144 பக்கம் உட்கார்ந்து படிப்பார்களா? இவ்வளவு தூரம் படிக்கக்கூடிய வயதுக்காரர்களுக்கு, இந்த மொழி அலுப்பூட்ட ஆரம்பித்திருக்காதா?

ஒருவேளை, இந்தப் புத்தகம் பாட்டி, தாத்தாவுடன் வளராத குழந்தைகளின் அப்பா, அம்மாக்களுக்கு எழுதப்பட்டதாக இருக்கலாம். அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பிரித்துவைத்துக்கொண்டு அப்படியே ஒவ்வோர் அத்தியாயமாகப் படித்துக் காட்டிவிட்டால் போதும், குழந்தைகளுக்கு ஒரு பாட்டி கதை சொன்ன அதே உணர்வு கிடைக்கும்.

எப்படியாயினும், இந்தப் புத்தகத்தின் மிகப் பெரிய குறை, ஓவியங்களுக்குச் சரியான முக்கியத்துவம் தரப்படவில்லை.

இத்தனைக்கும், நூலாசிரியர் ஜயா சந்திரசேகரனே நல்ல அழகான கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார். ஆனால், அவை மிகச் சிறிய அளவில் புத்தகம் நெடுகிலும் அச்சிடப்பட்டிருக்கின்றன.

ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கு எழுதப்படுகிற புத்தகங்களை, வயதுக்கு ஏற்பப் பிரிக்கிறார்கள். குறைந்த வயதுக் குழந்தைகளுக்குப் படம் 80%, கதை 20%, அடுத்த நிலையில் படம் 60%, கதை 40%, பிறகு இரண்டும் சரி பாதி … இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கதை / Contentன் முக்கியத்துவத்தை அதிகரித்தாலும், எல்லாப் புத்தகங்களிலும் தெளிவான, தொடர்ந்து வாசிக்க, புரட்டத் தூண்டும் படங்கள் இருக்கும்.

லூயிஸ் கரோலின் புகழ் பெற்ற ’Alice In The Wonderland’ கதையை வால்ட் டிஸ்னி அனிமேஷன் படமாக உருவாக்கினார். 1951ம் ஆண்டு வெளியாகி ’சூப்பர் ஹிட்’டான அந்தப் படம் இன்றைக்கும் CD / DVD வடிவங்களில் பரபரப்பாக விற்றுத் தீர்ந்துகொண்டிருக்கிறது.

அந்தப் படத்தின் தொடக்கத்தில், நாயகி ஆலிஸ் சொல்வாள், ‘படங்கள் / ஓவியங்கள் இல்லாத புத்தகங்களை எனக்குப் பிடிக்காது’

இதற்கு ஆலிஸின் அக்கா சொல்லும் பதில், ‘ஆலிஸ், படங்களே இல்லாத நல்ல புத்தகங்கள் இந்த உலகத்தில் நிறைய இருக்கின்றன’

‘ம்ஹும், என்னுடைய உலகத்தில் புத்தகம் என்றாலே, வெறும் படங்கள்தான்’ என்பாள் ஆலிஸ்.

அப்படி முழுக்க முழுக்கப் படங்களாக இல்லாவிட்டாலும், குழந்தைகளுக்காக எழுதப்படுகிற புத்தகத்தில் சின்னஞ்சிறியதாக ஸ்டாம்ப் சைஸ் ஓவியங்களைப் பிரசுரிப்பதில் பலன் இல்லை என்று நினைக்கிறேன். கதையை அம்மாவோ, அப்பாவோ சொல்லக் கேட்டபிறகு, அந்தக் குழந்தையே புத்தகத்தைத் தானாகப் புரட்டிக் கதையைத் திரும்பச் சொல்லவேண்டும். அதற்குப் படங்கள்தான் சரியான வழி.

அதேசமயம், ஜயாப் பாட்டியையும் குறை சொல்வதற்கில்லை. நிஜப் பாட்டிகள் கதை சொல்லும்போது மல்ட்டிகலர் ஓவியங்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டா பேசுகிறார்கள்? 🙂

இன்னொரு முக்கியமான விஷயம், மகாபாரதக் கதை என்று பொதுவாகச் சொன்னாலும், பாண்டவர்கள், கௌரவர்கள் சரித்திரத்துடன் நிறுத்திவிடாமல் இடையிடையே ஏகப்பட்ட துணைக் கதைகளைச் (யயாதி, கச்ச தேவயானி, ஏகலைவன், இன்னும் பலர்) சொல்லிச் செல்கிறார் ஜயாப் பாட்டி. இவை ஒவ்வொன்றும் பிரதான கதையைவிடச் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

அதேசமயம், இவற்றால் பல இடங்களில் கதைத் தொடர்ச்சி திணறுகிறது. இருபது, இருபத்தைந்து பக்கங்களுக்கு முன்னால் சொன்ன ஒரு விஷயத்தை திடீரென்று இங்கே நினைவுபடுத்திக் கதையைத் தொடர்வது, ’பாட்டிக் கதை’ என்கிற அழகான நீரோடை நடைக்கு ஒத்துவரவில்லை.

ஓர் அச்சுப் புத்தகம் என்கிற அளவில், ‘இது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம்’ நல்ல திருப்தி அளிக்கிறது. இன்னும் குழந்தை மனம் கொண்டவர்கள் (என்னைப்போல ;)) விறுவிறுவென்று அரை மணி நேரத்தில் வாசித்துவிடலாம்.

ஆனால், அச்சு வடிவத்தைவிட இந்தப் புத்தகம் ஒலி வடிவத்தில் வெளியானால் இன்னும் பிரமாதமாக இருக்கும் என்று தோன்றுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் பாட்டி குரலிலேயே இந்தக் கதையைக் கேட்டு ரசிக்கிற சந்தோஷம் அலாதியானதாக இருக்கும். கூடவே அனிமேஷனும் சேர்ந்துகொண்டால் இன்னும் ஜோர்!

ரொம்பப் பேராசைப்படுகிறேனோ? இப்போதைக்கு ஜயாப் பாட்டிக்கு நன்றி சொல்லி முடித்துக்கொள்கிறேன்!

இந்த நூல்பற்றிய கூடுதல் விவரங்களுக்கும், ஆன்லைனில் வாங்கவும் இங்கே க்ளிக் செய்யலாம்.

***

என். சொக்கன் …

24 01 2009

நான்கரை கிலோ மீட்டர்களைக் கடக்க ஒருவருக்கு எத்தனை நேரமாகும்?

சற்றே வேகமாக நடந்தால், நாற்பது நிமிடம், மிஞ்சிப்போனால் ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ,. படுசோம்பேறியாக இருந்தால்கூட நாலு மணி நேரம், அதற்குமேல் ஆகாது.

ஆனால் எனக்கு, முழுசாக மூன்றரை வருடங்கள் ஆனது.

சொந்த வீடு கட்டிக்கொண்டு பிடிஎம் லேஅவுட் வந்தபிறகு, நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த பழைய ஜே.பி. நகர் வீட்டைத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. கடந்த சில ஆண்டுகளில், ஒருமுறை என்றால் ஒருமுறைகூட அந்தப் பக்கம் போகும் வாய்ப்பே கிடைக்கவில்லை.

ஒருவிதத்தில், நானும் என் மனைவியும் இதனைத் திட்டமிட்டுத் தவிர்த்துவந்திருக்கிறோம் என்றுகூடத் தோன்றுகிறது. காரணம், சோம்பேறித்தனம் இல்லை, ஒருவிதமான வெறுப்பு.

மூன்று வருடம் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர்களுக்கு, அந்த வீட்டின் சொந்தக்காரர்மேல் கொஞ்சமேனும் வெறுப்பு வராவிட்டால்தான் ஆச்சர்யம்.

காரணம், இது ஒரு விநோதமான உறவு. வீட்டுச் சொந்தக்காரரைப் பொறுத்தவரை, வாடகைக்கு இருக்கிறவர் ஒரு பண மெஷின், சமூகப் படிநிலையில் தனக்குக் கீழே இருக்கிற அவரை இவர் கொஞ்சம் அசட்டையாகதான் நினைப்பார்.

ஆகவே, முதல் தேதி ஆனதும் குடித்தனக்காரர் சரியாக வாடகை தந்துவிடவேண்டும், மீதமுள்ள 29 / 30 நாள்களும் கண்ணில் படாமல் மறைந்துவிடவேண்டும். இதுதான் பெரும்பாலான வீட்டுச் சொந்தக்காரர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால், வீட்டில் குடியிருக்கிறவர்கள் அப்படி நினைப்பதில்லை, ‘மாசம் பொறந்தா காசை எண்ணி நீட்டறோம்ல? அதுக்கு நாம கேட்கிறதைச் செஞ்சு  கொடுக்கவேண்டாமா’ என்று அவர்கள் சிறுமை கண்டு பொங்குவார்கள்.

இந்தப் பொதுவிதிக்கு விலக்கான ‘ரொம்ப நல்லவங்கப்பா’ ரக வீட்டுச் சொந்தக்காரர்கள், குடித்தனக்காரர்கள் உண்டு. ஆனால் பெருநகரங்களில் அவர்கள் அதிகம் தென்படுவதில்லை.

எங்கள் வீட்டுச் சொந்தக்காரர், நிச்சயமாக ராட்சஸர் இல்லை. ஆனால் தேவதையாகவும் இல்லை.

எனக்குத் திருமணமாவதற்குமுன்பே, இந்த வீட்டைப் பார்த்து முடிவு செய்துவிட்டேன். சாஸ்திரத்துக்கு இரண்டு பெட்டிகளைக் கொண்டுவந்து உள்ளே வைத்து ரிஸர்வ் செய்தாகிவிட்டது.

அதன்பிறகு நான் விடுமுறையில் போய் திருமணம் செய்துகொண்டு திரும்பினேன், அதே வீட்டின் மாடியில் குடியிருந்த வீட்டுச் சொந்தக்காரர், என் அப்பா, அம்மா, மனைவி எல்லோரையும் அன்போடு வரவேற்றார், காபி போட்டுக் கொடுத்து உபசரித்தார்.

அவர் பேசிய ஓட்டைத் தமிழில் அசந்துபோன என் பெற்றோர், ’ரெண்டு பேரும் சின்னப் பசங்க(?), நீங்கதான் இவங்களை நல்லவிதமாப் பார்த்துக்கணும்’ என்று அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்கள்.

ஆரம்பத்தில் அவர் எங்களுடன் நன்றாகவே பழகிக்கொண்டிருந்தார். ஏதேனும் பிரச்னை என்று அவரிடம் போய் நின்றால் உதவி கிடைக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நல்ல ஆலோசனை கிடைக்கும்.

ஆனால், பேச்சுமட்டும்தான் வெண்ணெய், அவர் எங்களுக்கு வாடகைக்கு விட்டிருந்த வீடு என்னவோ, வெறும் பச்சைத் தண்ணீர் ரகத்தில்தான் இருந்தது.

அந்த வீட்டில், பகல் நேரத்திலேயே வெளிச்சம் வராது, மூன்று திசைகளிலும் மற்ற வீடுகள் நெருக்கியடித்துக்கொண்டிருப்பதால், எல்லா அறைகளிலும் அதிகாலைமுதல் இரவு தூங்கச் செல்லும்வரை கண்டிப்பாக விளக்குகள் தேவைப்படும்.

வாசல் கதவில் தொடங்கி, புழக்கடை பாத்ரூம்வரை எல்லா மர சமாசாரங்களும், குறைந்தபட்சம் பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்குமுன் செய்யப்பட்டவை. மூன்றில் ஒன்று உடைந்து தொங்கிக்கொண்டிருக்கும்.

முக்கியமாக, பிரதானப் படுக்கை அறையின் அலமாரிக் கதவைக் காணவே காணோம், ஒருகாலத்தில் அது அங்கே இருந்திருப்பதற்கான அடையாளமாக, இரண்டு ‘கீல்’கள்மட்டும் தொற்றியிருந்தன.

பாத்ரூமில் யார் குளித்தாலும், உடனடியாக அது வெள்ளப் பிரதேசமாகிவிடும், அழுக்குத் தண்ணீர் வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் சரியாக இல்லை.

கடைசியாக, மிகப் பெரிய பிரச்னை, எங்களுக்குத் தண்ணீர் இறைக்கும் மோட்டர் ஸ்விட்சை, அவர்கள் தங்களுடைய வீட்டுக்குள் மறைத்துவைத்துக்கொண்டிருந்தார்கள். எப்போதும் தண்ணீர்த் தொட்டி வறண்டுவிட்டாலும், படியேறி மேலே சென்று, ‘கொஞ்சம் மோட்டர் போடுங்களேன்’ என்று கெஞ்சவேண்டும்.

ஒருவேளை, அவர்கள் வெளியூர் சென்றிருந்தால்? இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழித்தபடி அவர்கள் சீக்கிரம் திரும்பி வரப் பிரார்த்தனை செய்யவேண்டியதுதான்!

அதெல்லாம் சரி, இப்படி ஒரு ‘சொதப்பல்’ வீட்டை நீ ஏன் தேர்ந்தெடுத்தாய் என்று நீங்கள் கேட்கலாம், ரொம்ப நியாயமான கேள்வி.

ஆனால், கல்யாணத்துக்குமுன்னால், வீடு என்பது வெறும் கதவு, நான்கு சுவர்கள், பாத்ரூம், குழாயைத் திறந்தால் தண்ணீர், அவ்வளவுதானே? அதற்குமேல் வீட்டில் இத்தனை நுட்பங்கள் இருக்கும் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

விளைவு, ட்ரெய்லரைப் பார்த்து மயங்கிப்போய் படத்திற்கு டிக்கெட் வாங்கினவன்போல் இந்த வீட்டில் மாட்டிக்கொண்டுவிட்டேன். அடுத்தடுத்த மாதங்களில், வீடு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அதிகமாகிக்கொண்டேதான் சென்றன.

இதுபற்றி நானும் என் மனைவியும் எங்கள் வீட்டுச் சொந்தக்காரரிடம் எத்தனையோமுறை கெஞ்சியிருக்கிறோம், கோபப்பட்டிருக்கிறோம், அவரும் ’செஞ்சுடலாம், செஞ்சுடலாம்’ என்று நிறைய வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார்.

ஆனால், கடைசிவரை அவர் எதையும் செய்துதரவில்லை, எங்கள் வீடு நாங்கள் முதல் நாள் பார்த்த அதே குறைகளுடன்தான் எப்போதும் இருந்தது.

கோபப்பட்டு வீடு மாறிவிடலாம் என்றால், 11 மாத ஒப்பந்தம் எங்களைத் தடுத்தது, நடுவில் பிய்த்துக்கொண்டு போனால், நாங்கள் அவரிடம் கொடுத்துவைத்திருக்கிற முன்பணத்திற்கு ஆபத்து வரும்.

ஆகவே, பல்லைக் கடித்துக்கொண்டு நாளை ஓட்டினோம், ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நேரத்தில், எங்கள் வீட்டுக்காரர் ஒரு பிரமாதமான தந்திரம் செய்தார்.

அந்த வீட்டுக்கு நாங்கள் குடிவரும்போது, மாத வாடகை ரூபாய் ஆறாயிரம். பதினொரு மாதங்கள் கழித்து இந்தத் தொகை பத்து சதவிகிதம் உயர்த்தப்படும்.

ஆனால் இப்போது, ‘நான் உங்கள் வாடகையை ஏற்றப்போவதில்லை’ என்றார் எங்கள் வீட்டுக்காரர், ‘இது நான் உங்கள் திருமணத்துக்குக் கொடுத்த பரிசாக இருக்கட்டும்’

எப்போதோ நடந்த திருமணத்துக்கு இப்போது ஏன் பரிசு? நாங்கள் யோசிக்கவேண்டுமில்லையா? மாதம் அறுநூறு ரூபாய் மிச்சமாகிறதே என்கிற சந்தோஷத்தில் தலையைப் பலமாக ஆட்டிவிட்டோம்.

இதனால், முதல் ஒப்பந்தத்தின் முடிவில் இன்னொரு 11 மாத ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. மறுபடியும், நான் என்னையும் அறியாமல் அந்த வலையில் மாட்டிக்கொண்டுவிட்டேன்.

இப்போது, எங்களுக்கு மாதம் அறுநூறு ரூபாய் மிச்சம்தான், ஆனால், கொடுக்கிற ஆறாயிரம் ரூபாய்க்கு அந்த வீடு துளியும் தகுதியில்லை. அதை நாங்கள் அப்போது உணரவில்லை.

ஒருவேளை உணர்ந்திருந்தாலும், பெரிதாக எதையும் செய்திருக்கமுடியாது, நாங்கள் என்னதான் கெஞ்சிக் கேட்டாலும் அவர் எதையும் செய்து தரப்போவதில்லை, கையாலாகாதவர்களாகச் சும்மா இருக்கவேண்டியதுதான்.

கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அந்த வீட்டின் குறைகளைச் சகித்துக்கொண்டு வாழப் பழகிவிட்டோம். வீட்டுக்காரரிடம் நாங்கள் போடுகிற (பிரயோஜனமில்லாத) சண்டைகள் குறைந்துபோயின.

சௌகர்யம் போதாவிட்டாலும், அந்த வீடு ரொம்ப ராசியானது. அங்கேதான் எங்கள் மகள் நங்கை பிறந்தாள், அலுவலகத்தில் முதல் பிரமோஷன் கிடைத்தது, முதல் பத்திரிகைத் தொடர், முதல் புத்தகம் என்று பல சந்தோஷங்கள்.

இதனால், இரண்டாம் ஆண்டின் நிறைவில் எங்களுக்கு வீடு மாறும் எண்ணம் வரவில்லை, ‘நமக்கு இந்த வீடு போதும்’ என்று ஒப்பந்தத்தை நீட்டித்துக்கொண்டுவிட்டோம், பத்து சதவிகிதக் கூடுதல் வாடகை கொடுக்கவும் சம்மதித்தோம்.

ஆனால், அந்த மூன்றாவது ஒப்பந்தக் காலம் முடியும் நேரத்தில், எங்கள் வீட்டுக்காரர் ஒரு வேலை செய்தார்.  அதனைச் ’சுத்த அயோக்கியத்தனம்’ என்றுமட்டுமே என்னால் வர்ணிக்கமுடியும்.

முதல் ஆண்டு இறுதியில், அவர் எங்களுடைய வீட்டு வாடகையை ஆறாயிரம் ரூபாயிலிருந்து பத்து சதவிகிதம் அதிகரித்திருக்கவேண்டும். ஆனால் எங்களுடைய திருமண(?)ப் பரிசாக, அவர் அந்த வாடகை உயர்வைச் செய்யவில்லை.

இதனால், இரண்டாம் ஆண்டும் தொடர்ந்து நாங்கள் ஆறாயிரம் ரூபாய்மட்டுமே மாத வாடகையாகக் கொடுத்துவந்தோம். மூன்றாம் ஆண்டில் அது பத்து சதவிகிதம் உயர்ந்து 6600 ரூபாய்கள் ஆனது.

இப்போது, பழைய ஒப்பந்தத்தின் விதிமுறையைச் சுட்டிக்காட்டிய எங்கள் வீட்டுக்காரர், ‘அப்போதே நான் உங்களுடைய வாடகையை ஏற்றியிருக்கவேண்டும், மறந்துவிட்டேன், இப்போது அந்தக் கூடுதல் தொகை அறுநூறு ரூபாயை 2 வருடங்களுக்கு மொத்தமாகக் கணக்குப் போட்டுக் கொடுங்கள்’ என்றார்.

அதாவது, 24 * 600 = கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் ரூபாயை இப்போது நாங்கள் அவருக்குத் தரவேண்டுமாம். ‘இது என்ன அநியாயம்?’ என்று நாங்கள் சண்டைக்குப் போனோம்.

அவரிடம் எப்போது எங்கள் பேச்சு எடுபட்டிருக்கிறது? ’மரியாதையாகக் காசை எண்ணிக் கீழே வை, இல்லாவிட்டால் உன்னுடைய முன்பணத்தில் கழித்துக்கொள்வேன், வீட்டை விட்டு வெளியே போ’ என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

வழக்கமாக, அவர் அப்படி முரட்டுத்தனமாகப் பேசுகிற மனிதர் இல்லை. அப்போது அவருடைய மகளுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது, அதுவிஷயமாக ஏதோ பணப் பிரச்னையா தெரியவில்லை, எங்களுக்குக் கொடுத்த திருமணப் பரிசை திரும்பப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துவிட்டார்.

அத்துடன், எங்கள் பொறுமை தீர்ந்துபோனது. இந்தப் பணம் போனால் போகட்டும், இனிமேல் இந்த வீட்டில் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தோம், உடனடியாக அடுத்த வீடு தேடும் முயற்சிகளில் இறங்கினோம்.

அதுவரை, நான் சொந்த வீடு வாங்குவதுபற்றி யோசித்தது கிடையாது. ஆனால் இப்போது, எதற்கு இன்னொருவருக்கு அடிபணிந்து வாழவேண்டும் என்று தோன்ற ஆரம்பித்தது.

அடுத்த சில நாள்களில், நாங்கள் ஒரு புதிய வீட்டுக்கான முன்பணம் செலுத்தினோம், பாடுபட்டு வங்கிக் கடன் வாங்கினோம் (ஏன் பாடுபட்டோம் என்பது தனிக் கதை :), அந்த ஒப்பந்த காலம் முடிவதற்குள் புது வீட்டுக்குக் குடிபெயர்ந்துவிட்டோம்.

எனக்கிருந்த கோபத்துக்கு, எங்களுடைய ‘புதுமனைப் புகுவிழா’வுக்குப் பழைய வீட்டுக்காரரை அழைக்கவே கூடாது என்று பிடிவாதமாக இருந்தேன். என் மனைவிதான் சமாதானப்படுத்தினார், ‘இதை இப்படி யோசிச்சுப் பாரு, அவங்க இப்படி நம்மைப் போட்டுப் படுத்தாட்டி நாம சொந்த வீடு வாங்கியிருக்கமாட்டோம், அதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்றதா நினைச்சுக்குவோமே’

நாங்கள் வேண்டாவெறுப்பாகக் கொடுத்த பத்திரிகையை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார், ‘இந்த வீடு ரொம்ப ராசி, இங்கே குடியிருந்தவங்க எல்லாரும் சொந்த வீடு கட்டிகிட்டுப் போயிருக்காங்க’ என்றார் பெருமையுடன்.

பின்னே? ஒரு வசதியும் செய்து தராமல் காசுமட்டும் கூடுதலாக வேண்டும் என்று பிடுங்கிக்கொண்டே இருந்தால்? எவனுக்குதான் சொந்த வீடு கட்டுகிற ஆசை வராது?

ஒருவழியாக நாங்கள் அந்த வீட்டைக் காலி செய்துகொண்டு எங்களுடைய வீட்டுக்குச் சென்றோம். நானும் நான்கைந்து நடை நடந்து, மூன்று ஆண்டுகளுக்குமுன் கொடுத்த முன்பணத்தில் அவர் பிடுங்கியதுபோக மிச்சத்தைப் பெற்றுக்கொண்டேன். அதன்பிறகு, அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கக்கூட இல்லை.

சுமார் மூன்றரை வருடங்கள் கழித்து, சமீபத்தில் அந்தப் பழைய தெருவின் வழியே நடந்து போகும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே நான் என்ன எதிர்பார்த்தேன் என்று தெரியவில்லை, ஆனால், உள்ளுக்குள் ஏதேதோ கலவை உணர்ச்சிகள், பெரிதாக என்னவோ நிகழப்போகிறது என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் நிகழவில்லை. அதே பழைய வீடு, வாசலில் புங்கை மரம், இரும்பு கேட், அதில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டுகூட மாறவில்லை.

கீழ் வீடு, மேல் வீடு என இரண்டு கதவுகளும் சாத்தியிருந்தன. எனக்குப் படியேறத் தோன்றவில்லை. சுத்தமாக ஆர்வம் இல்லை, ஏதேனும் தானாகக் கண்ணில் பட்டால்மட்டும் கவனிக்கத் தயாராக இருந்தேன்.

வருடத்துக்குப் பத்து சதவிகிதம் வாடகை உயர்வு என்கிற கணக்கின்படி பார்த்தால், இப்போது அந்த வீட்டின் வாடகை கிட்டத்தட்ட பத்தாயிரத்தைத் தொட்டிருக்கும், அவ்வளவு காசு கொடுத்து இந்த ஒன்றுமில்லாத வீட்டில் யார் தங்குகிறார்கள்? இத்தனை வருடத்தில் வீட்டுச் சொந்தக்காரர் ஏதேனும் புதிய வசதிகளைச் சேர்த்திருப்பாரா, பழைய பிரச்னைகளைத் தீர்த்திருப்பாரா, எங்களுக்குப்பிறகு அங்கே தங்கியவர்களுடன் வீட்டுச் சொந்தக்காரருக்கு சுமுக உறவு இருந்ததா, அல்லது அவர்களும் வெறுத்துப்போய் புது வீடு கட்டிக்கொண்டார்களா?

பல கேள்விகளுடன் நான் அந்த வீட்டைக் கடந்து நடந்தேன், தெரு முனையைத் தாண்டும்போது, நாங்கள் முன்பு குடியிருந்த கீழ் வீட்டுக் கதவு திறக்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

நான் திரும்பிப் பார்க்கவில்லை.

***

என். சொக்கன் …

22 01 2009

மலேசியாவிலிருந்து திரும்பி வந்தாகிவிட்டது. ஆனால் எழுத நினைத்த சில குறிப்புகள் இன்னும் மீதமிருக்கின்றன. அவற்றை முழுப் பதிவாக எழுதினால் பழைய வாடை அடிக்கும். ஆகவே இங்கே சுருக்கமாகப் பட்டியல் போட்டுவிடுகிறேன்.

  1. மலாய் மொழியில் ஆங்கில வார்த்தைகளுக்குக் குழப்படியாக ஸ்பெல்லிங் மாற்றிவிடுகிறார்கள். அதுவும் யோசித்துப் பார்க்க ஜாலியாகதான் இருக்கிறது. உதாரணமாக, நண்பர் முகேஷுடன் காரில் சென்றபோது கோலா லம்பூர்ச் சாலைகளில் நான் பார்த்த சில வார்த்தைகள் – இவை ஒவ்வொன்றும் ஆங்கிலத்தில் எதைக் குறிக்கின்றன என்று யோசியுங்கள்: Ekspress, Sentral, Stesen, Klinik, Kolej
  2. கோலா லம்பூர் விமான நிலையத்துக்கு அதிவேக ரயிலில் சென்றேன், மலிவு விலை (35 வெள்ளி), மிகச் சுத்தமான இருக்கைகள், மற்ற வசதிகள், Non-Stop சேவை என்பதால், ‘சரியாக இருபத்தெட்டு நிமிடத்தில் விமான நிலையம்’ என்று அறிவித்தார்கள், இரண்டு நிமிடம் முன்னதாகவே சென்று சேர்ந்துவிட்டோம்
  3. அத்தனை பெரிய கோலா லம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ஏனோ ஏழு மணிக்கே கூட்டம் குறைவு. அதுவும் எங்கள் விமானம் கிளம்பும் வாசலில் ஆள், அரவமில்லாமல் இருட்டிக் கிடந்தது, தனியே உட்கார்ந்திருக்கப் பயமாகிவிட்டது
  4. மறுபடியும் அசைவ உணவுபற்றிப் புலம்பினால் ‘தடித் தாண்டவராயா’ என்று யாரேனும் அடிக்க வருவார்கள். ஆனாலும், இதைச் சொல்லாமல் இருக்கமுடியாது: வகைக்கு இரண்டாக அத்தனை பளபளப்பு உணவகங்கள் கொண்ட கோலா லம்பூர் விமான நிலையத்தில் சைவச் சாப்பாடு – ஒரு வெஜிடபிள் சாண்ட்விச்கூட எங்கேயும் கிடைக்கவில்லை, ராப்பிச்சைக்காரன்போல் ஒவ்வொரு கடை வாசலாக ஏறி, இறங்கித் தோற்றபிறகு, கடைசியாக ஓர் இத்தாலிய உணவகத்தில் தக்காளி, வெங்காய பிட்ஸா கிடைத்தது, ஒரே ஒரு துண்டு இந்திய மதிப்பில் 125 ரூபாய், ஆறி அவலாகப் போன பிட்ஸாவுக்குத் தொட்டுக்கொள்ள பழப் பச்சடி, 250 ரூபாய் … ஏதோ, பசித்த நேரத்தில் இதுவேனும் கிடைத்ததே என்று அவசரமாக விழுங்கிவைத்தேன்
  5. விமானத்தில் என்னருகே அமர்ந்திருந்த பெரியவர், ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறார், ‘அங்கே ஏற்கெனவே ஜனவரி 17 பிறந்துவிட்டது, ஆனால் இங்கே இன்னும் ஜனவரி 16தான்’ என்று புலம்பினார், ‘ஒருவேளை இந்தியா போய் இறங்கினால் ஜனவரி 15ஆக இருக்குமோ’ என்று அநியாயத்துக்குப் பதற்றப்பட்டவருக்கு நல்வழி சொல்லித் தேற்றினேன்
  6. இந்தமுறை, எனக்குத் தமிழ் பேப்பர் கிடைக்கவில்லை, அரை கிலோ எடையிருந்த ஆங்கிலச் செய்தித் தாளைத் தூக்கிப் படித்தாலே கை வலித்தது. ஆனாலும் அதில் ஒரு சுவாரஸ்ய செய்தியைப் படித்துக் கண்கள் பனித்தன, இதயம் இனித்தது: மலேசியாவில் வருடத்துக்கு 1000 வெள்ளி(இந்திய மதிப்பில் 12000 ரூபாய்களுக்கு மேல்)வரை புத்தகம் வாங்குவதற்காகச் செலவிட்டால் வருமான வரி விலக்கு உண்டாமே, நம் ஊரிலும் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க இப்படி ஒரு விதிமுறையைக் கொண்டுவரக்கூடாதா? மத்திய அரசில் பதிப்பாளர்களுக்கென்று ஒரு லாபி இருந்தால் வேலை நடக்குமோ, என்னவோ
  7. ஜனவரி 16ம் தேதி நள்ளிரவுக்குச் சற்று முன்னால், இந்தியா வந்திறங்கினேன். மலேசியப் பதிவுகள் இத்துடன் முற்றும், நீங்கள் பிழைத்தீர்கள்!

***

என். சொக்கன் …

21 01 2009

*************************

முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்:

மலே மலே மலே மலேசியா

முந்தாநாள் காலையில், சிங்கப்பூரிலிருந்து சில பெருந்தனக்காரர்கள் வந்திருந்தார்கள்.

எல்லாம் நம் ஊர்க் காரர்கள்தான். போன தலைமுறையில் அங்கே செட்டிலாகிவிட்டவர்கள். ஏதோ பெரிய தொழில் செய்து சௌக்கியமாக வாழ்கிறார்கள்.

அவர்களுடைய தொழிலை அடுத்த நிலைக்கு விரிவுபடுத்த, இணைய தளம் தேவைப்படுகிறது. அதில் அவர்களின் தயாரிப்புகளைப்பற்றி விரிவாகப் படிக்கும் வசதி, கடன் அட்டை பயன்படுத்தி வாங்கும் வசதி, ஏற்கெனவே வாங்கியவர்கள் குற்றம், குறை சொல்லும் வசதி எனச் சகலமும் வேண்டும் என்று கேட்டு வந்திருந்தார்கள்.

’வருக வருக மகா ஜனங்களே’ என்று நாங்கள் அவர்களை வரவேற்று உட்காரவைத்து, வழக்கமான Corporate Presentation(இதற்கு என்ன தமிழ் வார்த்தை?)ஐ நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு விளக்கிச் சொல்லி போரடித்தோம். அவர்களும் புரிந்ததுபோல் தலையைப் பெரிதாக ஆட்டினார்கள்.

பின்னர், அவர்களுடைய தொழில்பற்றி நாங்கள் என்ன புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை விவரித்தோம். கிட்டத்தட்ட இதேமாதிரியான வேறு வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்றும் மேம்போக்காகச் சொன்னோம்.

உடனடியாக, நம்மவர்களுக்குச் சுவாரஸ்யம் பொங்கியது, ’யார் அந்த முந்தைய வாடிக்கையாளர்கள்? அவர்களுக்கு நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள்’ என்று கேட்டார்கள்.

‘அச்சச்சோ, அதை வெளியில் சொல்வது நியாயமாக இருக்காது’ என்றார் எங்கள் விற்பனைப் பிரதிநிதி, கழுத்து ’டை’யை இறுக்கிக்கொண்டு, ‘வாடிக்கையாளர்களின் விவரங்களை ஒருபோதும் வெளியில் சொல்வதில்லை என்பதில் நாங்கள் மிகப் பிடிவாதமாக இருக்கிறோம்’ என்று மார் தட்டினார்.

இப்படி ஒரு மர்ம முடிச்சைப் போட்டால், அவர்கள் சும்மா இருப்பார்களா? ‘எங்கள் காதில்மட்டும் ரகசியமாகச் சொல்லுங்களேன் ப்ளீஸ்’ என்று கெஞ்சினார்கள்.

‘ம்ஹூம், சான்ஸே இல்லை’ என்றார் மரியாதைக்குரிய விற்பனைப் பிரதிநிதி, ‘அவர்கள் பெயரை அல்லது தொழில் ரகசியங்களை நாங்கள் உங்களுக்குச் சொன்னால், பின்னர் உங்களுடைய விவரங்களை நாங்கள் வேறு யாரிடமேனும் சொல்லவேண்டியிருக்கும், தயவுசெய்து மன்னியுங்கள்’

இப்படி அவர் சொன்னதும், சிங்கப்பூர் பெருந்தனக்காரர்களுக்கு ரொம்பத் திருப்தி. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துத் தலையாட்டிக்கொண்டதும், எனக்கு ஜெஃப்ரே ஆர்ச்சரின் சிறுகதை ஒன்று ரா. கி. ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் ஞாபகம் வந்தது.

அந்தச் சிறுகதையின் பெயர் என்ன என்று நான் யோசித்து முடிப்பதற்குள், வந்தவர்கள் தங்களுடைய தொழில் ரகசியங்களை விவரிக்கத் தொடங்கினார்கள், நாங்கள் பேசுவது மொத்தமும் டிஜிட்டல் ஆடியோவாகப் பதிவாகிக்கொண்டிருந்தபோதும், பலர் அநாவசியமாகக் குறிப்பெழுதிக்கொண்டிருந்தார்கள்.

’ஒரு கஸ்டமர் உங்களுக்கு ஃபோன் செய்யும்போது, அவரைப்பற்றிய விவரங்களை நீங்கள் எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?’

‘ரொம்பச் சுலபம், ஒவ்வொருத்தருக்கும் ஒரு கஸ்டமர் நம்பர் இருக்கு, அதை வெச்சு அவங்களோட டீடெய்ல்ஸ் தேடி எடுத்துடுவோம்’

’இதுபற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாச் சொல்லமுடியுமா?’

‘அதுக்கு நீங்க மிஸ்டர் ஜனார்தன்கிட்டே பேசணும்’ அவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

யார் அந்த ஜனார்தன்? வெளியே பீங்கான் குவளையில் நிமிடத்துக்கு ஒரு காபி குடித்துக்கொண்டு காத்திருக்கிறாரே, அவரா?

‘சேச்சே, அவர் எங்க ட்ரைவர்’ என்றார் ஒருவர், ‘ஜனார்தன் ரொம்ப பிஸி, சிங்கப்பூர்ல எங்க கஸ்டமர் டேடா மேனேஜர்’

Customer தெரியும், Data தெரியும், Manager தெரியும், அதென்ன Customer Data Manager? எனக்குப் புரியவில்லை, கொஞ்சம் நோண்டினேன்.

இந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் முந்தைய, இன்றைய வாடிக்கையாளர்களைப்பற்றிய எல்லா விவரங்களையும் பதிவு செய்து, ஒழுங்குபடுத்தி, தேவையான நேரங்களில் வெளியிலெடுத்துத் தருகிற பொறுப்பு எல்லாம் வல்ல ஜனார்தனுடையது. அங்கே அவருடைய தலைமையில் இயங்கும் எட்டு பேர் இந்த விவரங்களை வரிசைப்படுத்தித் தொகுத்திருக்கிறார்கள், தொகுத்துக்கொண்டிருக்கிறார்கள், இனிமேலும் தொகுப்பார்கள்.

அப்படியானால், எங்கள் வேலை சுலபமாகிவிட்டது. ஜனார்தன், அவருக்குக் கீழே வேலை பார்க்கும் மென்பொருளாளர்களிடம் பேசினால் போதும், வாடிக்கையாளர் விவரங்கள் எந்த Databaseல் வைக்கப்பட்டிருக்கின்றன, எந்த வடிவத்தில், கட்டமைப்பில் இருக்கின்றன, அவற்றை எங்களுடைய மென்பொருள் எப்படிப் படித்துப் பயன்படுத்தலாம் என்றெல்லாம் புரிந்துகொண்டு வேலையைத் தொடங்கிவிடலாம்.

‘ஜனார்தன் ரொம்ப புத்திசாலி’ என்றார் சிங்கப்பூர்ப் பெரியவர், ‘அவருடைய டீம்ல எல்லாப் பசங்களும் நல்ல சுறுசுறுப்பு, எந்தத் தகவல் கேட்டாலும் நொடியில கொண்டாந்துடுவாங்க’

‘அவங்க என்னட டேடாபேஸ், சாஃப்ட்வேர் பயன்படுத்தறாங்க? உங்களுக்குத் தெரியுமா?’

’அதெல்லாம் ஜனார்தனுக்குதான் தெரியும்’ என்றார் மறுபடி, ‘நான் அவரோட நம்பர் தர்றேன், நீங்க அவர்கிட்டயே பேசிக்குங்க’

பிரச்னையில்லை. ஜனார்தனின் மென்பொருளுடன் எங்களுடைய இணைய தளத்துக்கு நேரடித் தொடர்பு (Integration) உருவாக்கிவிட்டால் வேலையில் பாதி முடிந்துவிடும்.

அதன்பிறகு நாங்கள் ரிலாக்ஸ் ஆகிவிட்டோம். ’வேலை எளிமையானதுதான், சீக்கிரத்தில் செய்துவிடலாம்’ என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, காசு விவகாரங்களைப் பேசுவதற்காக மேல் மாடிக்கு அனுப்பிவைத்தோம்.

அத்துடன், அன்றைய கூட்டம் முடிவடைந்தது, எல்லோரும் அவரவர் இருக்கைக்குத் திரும்புவதற்குமுன்னால், எல்லாம் வல்ல ஜனார்தனிடம் ஒரு வார்த்தை பேசிவிடலாமே என்று தோன்றியது.

IP Phone இருக்க பயமேன்? உடனடியாக ஜனார்தனை அழைத்தோம், ‘சுப்ரமண்யம், சுப்ரமண்யம், சண்முகநாதா சுப்ரமண்யம்’ என்று காலர் ட்யூன் ஓடியது.

ஆஹா, பக்தி மயமான ஜனார்தன், டேட்டா மயமான ஜனார்தன், எங்கள் ப்ராஜெக்ட் சீக்கிரத்தில் முடிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை பிறந்தது.

ஜனார்தனுக்குக் கீச்சுக் குரல். எங்கள் நிறுவனத்தின் பெயர் சொன்னதும், ‘தெரியும்ங்க, பாஸ் சொன்னார்’ என்றார் இந்திய ஆங்கிலத்தில், ‘சார் தமிழா?’

‘அட, எப்படிக் கண்டுபிடிச்சீங்க?’

‘குரல் தெரியுது சார்’ என்றார் பெருமிதத்துடன், ‘நான் திருச்சி, நீங்க?’

‘நாம அப்புறம் நிதானமாப் பேசுவோம் சார், இங்கே என்னோட இன்னும் நாலு பேர் காத்திருக்காங்க’

’அவங்களும் தமிழா?’

நான் கஷ்டப்பட்டு எரிச்சலை அடக்கிக்கொண்டேன். எல்லாம் வல்ல ஜனார்தனைக் கோபித்துக்கொண்டால் எங்கள் ப்ராஜெக்ட் அம்பேல்.

பொறுமையாக, நாங்கள் இதுவரை பேசிய விவரங்கள் அனைத்தையும் அவருக்கு விளக்கிச் சொன்னோம், ’நாங்க வடிவமைக்கப்போற Web Siteக்கும் உங்க Customer Databaseக்கும் Integration செய்யணும், அதுபத்தி உங்ககிட்ட பேசலாம்ன்னு கூப்டோம்’

அவர் உற்சாகமாக, ‘ஓ, பேசலாமே’ என்றார், ‘உங்களுக்கு என்ன விவரம் வேணும்ன்னு சொல்லுங்க, நான் ஹெல்ப் பண்றேன்’

நான் தொண்டையைச் செருமிக்கொண்டு கேள்விகளை ஆரம்பித்தேன், ‘நீங்க கஸ்டமர் விவரமெல்லாம் எந்த டேடாபேஸ்ல வெச்சிருக்கீங்க, அதை எப்படி வெளியே எடுக்கறீங்க, SQL Query-ஆ, அல்லது வேற மெத்தட்ஸ் வெச்சிருக்கீங்களா?’

மறுமுனையில் அவரிடம் ஒரு நீண்ட அமைதி. சில விநாடிகளுக்குப்பிறகு, நான் தொலைபேசி இணைப்பு சரியாக இருக்கிறதா என்று சந்தேகப்படத் தொடங்கியபோது, ஜனார்தன் மீண்டும் பேசினார், ‘சார், எனக்கு ஒரு சந்தேகம்’

‘என்னது?’

‘நீங்க ஏதோ டேடாபேஸ்ன்னு சொன்னீங்களே, அப்படீன்னா என்ன?’

நான் ஆடிப்போய்விட்டேன். எல்லாம் வல்ல ஜனார்தனுக்கு டேடாபேஸ் என்றால் என்ன என்பது தெரியாதா? இதென்ன கலாட்டா?

‘சார், உங்க கஸ்டமர் விவரமெல்லாம் நீங்க எங்கே, எப்படிச் சேமித்து வெச்சிருக்கீங்க?’

‘எல்லாத் தகவலும் ஒழுங்கா ப்ரின்ட் செஞ்சு, ஃபைல் போட்டு, ஏரியாவாரியா தனித்தனி கேபினெட்ல பிரிச்சுவெச்சிருக்கோம் சார்’ என்றார் அவர், ‘நம்ம பசங்க ரொம்ப சுறுசுறுப்பு, ஒவ்வொருத்தனும் எந்த கஸ்டமர்பற்றின விவரங்கள் எங்கே இருக்கு-ன்னு மனப்பாடமா வெச்சிருக்கானுங்க, உங்களுக்கு எந்த டீடெய்ல்ஸ் வேணும்ன்னாலும் ரெண்டு நிமிஷத்தில தேடி எடுத்துக் கொடுத்துடுவானுங்க’

அவர் தொடர்ந்து பேச, எங்களுக்குக் கண்ணைக் கட்ட ஆரம்பித்திருந்தது.

***

என். சொக்கன் …

21 01 2009

நேற்றே கோவிலுக்குச் செல்வதாகத் திட்டம், குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால் இன்றைக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

ஜுரத்தில் சோர்ந்து படுத்திருந்த குழந்தை, இன்றைக்குப் பழையபடி எல்லோரையும் மிரட்டத் தொடங்கிவிட்டதால், உம்மாச்சியை ஏமாற்றவேண்டாமே என்று கோவிலுக்குக் கிளம்பினோம், கூடவே பக்கத்திலிருக்கும் பூங்காவும் திட்டத்தில் சேர்ந்துகொண்டது.

நாங்கள் ஆட்டோவில் சென்று இறங்கியபோது, கோவில் வாசல் திறந்திருக்கவில்லை. ’நல்லதாப் போச்சு’ என்று பூங்காவினுள் நுழைந்தோம்.

பெங்களூரில், குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளில் ஒவ்வொரு தெருவுக்கும் குறைந்தபட்சம் ஒரு பூங்காவேனும் இருக்கிறது. காலையில் இரண்டு, மாலையில் இரண்டு எனச் சரியாக தினமும் நான்கு மணி நேரம்மட்டும் திறந்து மூடப்படுவதால், பெரும்பாலான பூங்காக்கள் நன்கு பராமரிக்கப்படுகின்றன.

இந்த விஷயத்தில் மக்களையும் பாராட்டவேண்டும். நூற்றுக்குத் தொண்ணூறு பேர் பூங்காக்களை அசிங்கப்படுத்துவதில்லை, புல் தரையில்கூட நடப்பதில்லை. ஒரே நேரத்தில் எல்லோருக்கும் இப்படி ஒரு பொறுப்பு எங்கிருந்து வந்ததோ, தெரியவில்லை.

எந்தப் பூங்காவினுள் நுழைந்தாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் எனக் குறைந்தது ஆறு மொழிகள் கலந்துகட்டிக் கேட்கும். உதாரணமாக இன்றைக்கு என் மனைவி உதிர்த்த ஒரு முத்து, ‘ஒண்ணு இல்லி ரா, இல்லாட்டி அக்கட ஹோகு!’.

கோரமங்களாவில் நாங்கள் சென்ற கோவிலுக்கு எதிரே இரண்டு, இடதுபக்கத்தில் ஒன்று என மொத்தம் மூன்று பூங்காக்கள். அவற்றில் ‘இங்கி-பிங்கி-பாங்கி’ போட்டு ஒன்றைத் தேர்ந்தெடுத்து நுழைந்தோம்.

இந்தப் பூங்காவின் மையத்தில், குழந்தைகள் விளையாடுவதற்காகப் பரவலாக மணலைப் போட்டு இடம் ஒதுக்கியிருந்தார்கள். அதில் சறுக்கு மரம், சீ-சா, ஊஞ்சல், இன்னும் என்னென்னவோ.

ஏற்கெனவே நிறையக் குழந்தைகள் ஓடி விளையாடிக்கொண்டிருந்ததால், அநேகமாக எல்லா விளையாட்டுகளுக்கும் க்யூ வரிசை காத்திருந்தது. நங்கை மிகச் சரியாக பத்து விநாடிகளில் ஆர்வம் இழந்து, ‘நாம கோவிலுக்கே போலாம்பா’ என்றாள்.

நங்கையிடம் நான் இதனை அடிக்கடி கவனித்திருக்கிறேன். என்னைப்போலவே, அவளுக்கும் வரிசையில் காத்திருக்கப் பிடிப்பதில்லை, அது எத்தனை முக்கியமான விஷயமாக இருப்பினும், ‘எனக்குத் தேவையில்லை’ என்று திரும்பி வந்துவிடுகிறாள்.

நல்ல வேளையாக, அங்கே சறுக்கிக்கொண்டிருந்த வேறு சில குழந்தைகள் நங்கையை வலிய அழைத்துத் தங்களுடன் இணைத்துக்கொண்டார்கள். அதன்பிறகு, அவளுக்கு நாங்கள் தேவைப்படவில்லை.

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அவள் விளையாடிச் சலித்தபிறகு, கோவிலுக்குச் சென்றோம். அங்கேயும் செருப்பு விடும் இடத்தில் தொடங்கி, கடவுள் சன்னிதிவரை சகலத்துக்கும் கூட்டம், க்யூ.

தரிசன வரிசையில் காத்திருக்கும் நேரத்தைச் சுவாரஸ்யமாக்கியது, கோவிலின் ஓரமாகக் கண்மூடி அமர்ந்திருந்த ஒரு பெண்மணி. தமிழில் கொஞ்சம், தெலுங்கில் கொஞ்சம், சமஸ்கிருதத்தில் மிச்சம் என்று வரிசையாகப் பல பாடல்களை உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தார் அவர்.

அவருடைய எளிமையான உருவத்துக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத கணீர் குரல், அத்தனை கூட்டத்திலும் ஸ்பீக்கரே தேவைப்படாமல் அவர் குரல் எல்லோருக்கும் கேட்டுக்கொண்டிருந்தது.

பின்னர் தரிசனம் முடிந்து வீடு திரும்பும்போதும், அந்தப் பெண்மணியைக் கவனித்தேன். நவக்கிரகங்கள் ஒன்பதும் வெவ்வேறு திசைகளைக் கவனித்துக்கொண்டிருக்க, அவை ஒவ்வொன்றையும் நேருக்கு நேர் பார்ப்பதுபோல் ஆங்காங்கே நகர்ந்து நின்று வெவ்வேறு பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார் அவர்.

வீடு திரும்பும் வழியில், ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல். ஒவ்வொரு சிக்னலிலும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் காத்திருக்கவேண்டியிருந்தது. மக்கள் இந்த நேரத்தை வீணாக்கவேண்டாமே என்று பல குட்டி வியாபாரிகள் முளைத்துவிடுகிறார்கள்.

பெங்களூரில் வார நாள்கள் என்றால் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக மணிக்கணக்காகப் பயணம் செய்கிறவர்கள் அதிகம், வார இறுதியில் குடும்பத்துடன் சொந்த வாகனத்தில் வெளியே சென்று திரும்புகிறவர்களும் அதிகம். இவர்களில் யாரும், போக்குவரத்து சிக்னல்களில் காத்திருப்பதைத் தவிர்க்கவே முடியாது.

இந்த அபாக்கியவான்களைக் குறிவைத்து, பெங்களூரில் தினந்தோறும் பல லட்ச ரூபாய்களுக்கு வியாபாரம் நடக்கிறது. பொம்மைகள், புத்தகங்கள், தொப்பி, கையுறைகள்,  சீசனுக்கு ஏற்ப இன்னும் என்னென்னவோ பொருள்கள் இந்தப் போக்குவரத்து சிக்னல் வியாபாரிகளிடம் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

என்ன, விலைதான் கொஞ்சம் அதிகம், அவர்கள் நூறு ரூபாய் சொல்லும் பொருளைப் பன்னிரண்டு ரூபாய் என்கிற அளவில் குறைத்துக் கேட்க தைரியம் இல்லாவிட்டால், ஏமாந்துபோவோம். எப்போது பச்சை விழுமோ என்கிற டென்ஷனில் இருக்கிற நம்முடைய பரபரப்பு / பதற்றத்தை இவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுவிடுகிறார்கள்.

இன்றைக்கு எங்கள் ஆட்டோவுக்குள் தலையை நுழைத்த ஒரு வியாபாரி, எங்களைப் புறக்கணித்துவிட்டு, நேரடியாக நங்கையிடம் பலூனை நீட்டினார், ‘பாப்பா, பலூன் சூப்பரா இருக்கு, அப்பாகிட்டே சொல்லும்மா, வாங்கித் தருவார்’

எனக்குச் சட்டென்று கோபம் வந்தது. எங்கள் மகளுக்கு என்ன தேவை என்று முடிவு செய்ய இந்த ஆள் யார்?

ஆனால், இப்படி வலுக்கட்டாயமாகக் குழந்தைகளிடம் நீட்டப்படும் பொருள்களில் பெரும்பாலானவை அவர்களுக்கு உடனே பிடித்துவிடுகின்றன, ‘வாங்கிக் கொடுப்பா’ என்று அவர்கள் கெஞ்ச, அதை மறுக்கமுடியாமல், ஏற்கவும் முடியாமல் பெற்றோர் திண்டாட, குழந்தைகள்மீது கோபப்பட, அவர்கள் கோபித்துக்கொண்டு அழ, ஒரு சிறு குடும்பக் கலவரமே ஏற்பட்டுவிடுகிறது.

தேவையில்லாத பொருள்கள்மீது ஆசைப்படுவது குழந்தைகளின் பிரச்னைமட்டுமல்ல. ஷாப்பிங் மால்களில் கண்ணில் படுவதையெல்லாம் எடுத்து வண்டிக்குள் போட்டுவிட்டுக் கடன் அட்டையைத் தேய்ப்பது ‘வளர்ந்த’ பெரியவர்கள்தானே?

எது எப்படியாகினும், நங்கைக்கு நான் அந்த பலூனை வாங்கித் தரவில்லை, ‘நாளைக்கு ஆஃபீஸ் விட்டு வரும்போது, வேற பலூன் வாங்கிட்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டேன்.

இதற்கு முதல் காரணம், அந்த வியாபாரி எனது ‘அதிகார’ எல்லையில் குறுக்கிட்டது என் ஈகோவுக்குப் பிடிக்கவில்லை, இன்னொரு காரணம், இதுபோன்ற பலூன்களில் நிரப்பப்படும் வாயுக்களால் ஏதோ பிரச்னை என்று சமீபத்தில் படித்திருந்தேன், இந்த பலூனோ, அல்லது அதை நிரப்புகிற வாயு இயந்திரமோ வெடித்து இரண்டு குழந்தைகள் படுகாயப்பட்டிருந்தார்கள்.

எனக்கு விஷயம் முழுசாகத் தெரியவில்லை, யாரோ சொல்லிக் கேட்டதுதான். ஆனால், இதுபோன்ற விஷயத்தில் எதற்கு ரிஸ்க்? நங்கைக்கு இனிமேல் ஊதப்படாத பலூன்கள்மட்டுமே வாங்கித் தருவது எனக் கொள்கை தீர்மானம் எடுத்திருக்கிறேன்.

இன்றைய மாலைப் பயணம், நெரிசலில் தொடங்கி, நெரிசலில் முடிந்தது. இடையில் தென்றல் காற்றுபோல ஒரு சந்தோஷம், பூங்காவுக்கும் கோவிலுக்கும் இடையில் இருந்த ஒரு பழைய புத்தகக் கடையில் அதிசயமாகச் சில தமிழ்ப் புத்தகங்கள் கிடைத்தன. பிரபஞ்சன் சிறுகதைகள் முழுத் தொகுப்பும் (இரண்டு பாகங்கள்), ரொம்ப நாளாக வாங்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த விஷ்ணுபுரமும் பாதி விலைக்கு வாங்கினேன்.

மூன்றும் மிகப் பெரிய புத்தகங்கள், நிச்சயமாக இப்போதைக்கு வாசிக்க முடியப்போவதில்லை. என்றாலும், நினைத்த புத்தகங்களை வாங்கி வீட்டில் அடுக்குவதும் ஒரு சந்தோஷம்தான், அதனால் ஏற்படுகிற புத்தக நெரிசலும்கூட இன்ப அவஸ்தைதான்.

***

என். சொக்கன் …

18 01 2009

விடுதி அறையைக் காலி செய்துவிட்டுக் கீழே இறங்கியபிறகுதான் ஞாபகம் வந்தது, பாத்ரூமில் ஒரு புத்தகத்தை மறந்து வைத்துவிட்டேன்.

சட்டென்று மீண்டும் லிஃப்டுக்குள் நுழைந்து ‘15’ என்கிற பொத்தானை அழுத்தினேன். அந்த மகா இயந்திரம் சலனமில்லாமல் என்னை முறைத்தது.

இந்த ஹோட்டலில் இது ஒரு பெரிய அவஸ்தை, யார் வேண்டுமானாலும் பதினைந்தாவது மாடிக்குச் சென்றுவிடமுடியாது, அந்த மாடியில் தங்கியிருப்பவர்கள்மட்டுமே அங்கே அனுமதிக்கப்படுவார்கள்.

நாம் எங்கே தங்கியிருக்கிறோம் என்று அந்த லிஃப்டுக்கு எப்படித் தெரியும்?

ரொம்பச் சுலபம். எங்களுடைய அறை ஒவ்வொன்றுக்கும், சாவிக்குப் பதிலாக ஒரு மின்சார அட்டை கொடுத்திருந்தார்கள், அந்த அட்டையை லிஃப்டில் செருகினால்தான், அது பதினைந்தாவது மாடிக்குச் செல்லும், இல்லையென்றால் அப்படியே தேமே என்று நின்றுகொண்டிருக்கும்.

அதே ஹோட்டலின் 14, 11வது மாடிகளில் என்னுடைய நண்பர்கள் மூவர் தங்கியிருந்தார்கள், அங்கேயும் நான் போகமுடியாது, அவர்களாகக் கீழே வந்து, தங்களுடைய அறை அட்டையைப் பயன்படுத்தி என்னை மேலே அழைத்துச் சென்றால்தான் உண்டு.

கொஞ்சம் சிரமம்தான். ஆனால், கோலா லம்பூர்போன்ற குற்றம் மலிந்த நகரத்தில், இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அவசியம்.

அந்த ஹோட்டலில் நான் தங்கியிருந்தவரை, இந்த லிஃப்ட் பத்திரத்தின் ஓர் அடையாளமாகவே எனக்குத் தோன்றியது. இதை மீறி யாரும் நம்மைக் கொள்ளையடித்துச் சென்றுவிடமுடியாது என நினைத்தேன்.

கொள்ளையடிப்பதுபற்றி நான் யோசிக்கக் காரணம், எனக்குமுன்னால் மலேசியா வந்த என் நண்பர் ஒருவர், வழிப்பறிக்காரன் ஒருவனிடம் ஏகப்பட்ட பணத்தை இழந்திருந்தார். அவர் எனக்கு ஏகப்பட்ட ‘அறிவுரை’களைச் சொல்லி ’ஜாக்கிரதை’யாக அனுப்பிவைத்திருந்தார்.

ஆகவே, இந்த லிஃப்ட், மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் பெரிய தலைவலியாக நினைக்கவில்லை. உடம்புக்கு, உடைமைக்குப் பிரச்னை எதுவும் இல்லாமல் பத்திரமாக ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்றுதான் எண்ணிக்கொண்டேன்.

ஆனால் இப்போது, ‘பாதுகாப்புத் திலக’மாகிய இதே லிஃப்ட், என்னைப் பதினைந்தாவது மாடிக்கு அனுப்ப மறுக்கிறது. மின்சார அட்டையைச் செருகாவிட்டால் உன்னை எங்கேயும் அழைத்துச் செல்லமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.

பிரச்னை என்னவென்றால், நான் ஏற்கெனவே என்னுடைய அறையைக் காலி செய்துவிட்டேன், எனது மின்சார அட்டையையும் திருப்பிக் கொடுத்தாகிவிட்டது.

அவசரமாக நான் வரவேற்பறைக்கு ஓடினேன், என்னுடைய பிரச்னையைச் சொல்லி, எனது அறைச் சாவி, அதாவது மின்சார அட்டை வேண்டும் என்று கேட்டேன்.

அவர்கள் நட்பாகப் புன்னகைத்து, ‘நோ ப்ராப்ளம்’ என்றார்கள், ‘நீங்கள் இங்கே கொஞ்சம் காத்திருங்கள், நாங்கள் உங்களுடைய முன்னாள் அறைக்குச் சென்று புத்தகம் இருக்கிறதா என்று பார்க்கிறோம்’

‘முன்னாள் அறை’ (Ex-Room) என்று அவர்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திய வார்த்தை எனக்குத் திகைப்பூட்டியது, நம்பமுடியாததாகக்கூட இருந்தது.

இரண்டு நிமிடம் முன்புவரை அது என்னுடைய அறை, எப்போது வேண்டுமானாலும் நான் அங்கே போகலாம், தரையில், படுக்கையில், தண்ணீருக்குள் விழுந்து புரளலாம், அழுக்குப் பண்ணலாம், இஷ்டம்போல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால் இப்போது, அது எனது ‘முன்னாள் அறை’யாகிவிட்டது. இனிமேல் கெஞ்சினாலும், கொஞ்சினாலும் அதனைத் திரும்பப் பெறமுடியாது.

அடுத்த இருபது நிமிடங்கள், ஊசிமேல் உட்கார்ந்திருப்பதுபோல் அவஸ்தையாக இருந்தது. புத்தகம் போனால் போகட்டும் என்று வீசி எறிந்துவிட்டுப் போகவும் மனம் இல்லை, சட்டென்று போய் எடுத்துக்கொண்டு வந்துவிடவும் முடியவில்லை. வேறு வழியில்லாமல் செய்தித் தாளைப் புரட்டியபடி வரவேற்பறைப் புண்ணியவான்களுடைய கருணைக்காகக் காத்திருக்கவேண்டியிருந்தது.

ஒருவழியாக, அவர்களுடைய அருள் கிடைத்தது. எனது புத்தகமும் திரும்பி வந்தது. அதன்மேல் ‘மகிழ்ச்சியாகப் பயணம் செய்யுங்கள்’ என்று வாழ்த்தும் ஓர் வண்ண அட்டை, அதில் ஒரு லாலி பாப் குச்சி மிட்டாய் செருகப்பட்டிருந்தது.

இனிப்பும் புளிப்பும் கலந்த லாலி பாப்பைச் சுவைத்தபடி, நான் என்னுடைய ‘முன்னாள் விடுதி’யிலிருந்து வெளியேறினேன்.

***

என். சொக்கன் …

17 01 2009

*************************

முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்:

மலே மலே மலே மலேசியா

சில வருடங்களுக்குமுன்னால் ‘டைம்’ என்று ஒரு படம் வந்தது, எத்தனை பேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது.

’டைம்’ பாடல்களைக் கேட்டுவிட்டு, அந்தப் படத்தின்மீது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டேன். ‘யாரோ தெலுங்கில் பெரிய இயக்குனராம், Picturizationல் அசத்துவாராம்’ என்றெல்லாம் நண்பர்கள் சொல்லிப் பரபரப்பூட்டினார்கள்.

கடைசியில், அந்தப் படம் மகா மொக்கை. இப்படி ஒரு குப்பைக் கதையை நம்பி யார் பணம் போட்டார்களோ என்று வேதனையாகவும் வெறுப்பாகவும் இருந்தது.

ஆனால், ’டைம்’க்காக இளையராஜா இசைத்த பாடல்களை, இன்றைக்கும் கேட்கச் சலிப்பதில்லை, முக்கியமாக சுஜாதா பாடிய, ‘நிறம் பிரித்துப் பார்த்தேன்’ என்ற பாட்டு.

ஆரம்பத்தில் ‘இத்தனை மெது(Slow)வாக ஒரு பாட்டா?’ என்று சலிப்பாகதான் இருந்தது. ஆனால் இரண்டு முறை கேட்பதற்குள், அந்தப் பாடல் என்னை முழுமையாக வசீகரித்துவிட்டது.

காதல்வயப்பட்ட பெண்ணின் உணர்வுகளை இயல்பாகச் சொல்லும் திரைப் பாடல்கள் தமிழில் அதிகம் இல்லை, ஒன்று, கதாநாயகியைக் குறும்புப் பெண்ணாகச் சித்திரித்து காடு, மேடெல்லாம் ஓட விட்டு, இயற்கையை ரசிக்கச் சொல்லி அலைக்கழிப்பார்கள், இல்லாவிட்டால் அநியாயத்துக்கு வெட்கப்பட வைத்து, கதாநாயகன் காலில் விழும்படியான வழிபாட்டுப் பாட்டுகளைப் பாடவைப்பார்கள்.

இந்தப் பாடல் அந்த இரண்டு வகைகளிலும் சேராமல் தனித்து நிற்கிறது. மென்மையும், கம்பீரமும் கலந்த ஒரு காதலாக, ஆண்டாள் பாசுரத்துக்கு நவீன வார்த்தைகள், இசை கொடுத்தாற்போல.

சுஜாதாவின் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் எனக்கு அழுகை வருவதுபோலிருக்கும், ஆனால் அழமுடியாது, அதேசமயம் சிரிக்கவும் முடியாது, மகிழ்ச்சிப்படவும் தோன்றாது. எளிமையான வரிகளை(பழநிபாரதி?)க் காயப்படுத்தாத ராஜாவின் இசை ஓர் ஆனந்தத் தாலாட்டாக இருப்பினும், தூங்கக்கூட முடியாது, பாடல் ஒலித்து முடிந்ததும், திரும்ப இன்னொருமுறை கேட்கவேண்டும் என்று நினைப்பேன், ஆனால் ’மனசுமுழுக்க நிறைந்திருக்கிற இந்தக் கனம், அவஸ்தை போதும், மறுபடி இதைக் கேட்காமல் விலகி ஓடிவிடவேண்டும்’ என்றும் தோன்றும், அப்படி ஓர் இனம் புரியாத இம்சைக்கு ஆளாக்கிவிடுகிற விநோதமான பாடல் இது.

’டைம்’க்குப்பிறகு, இளையராஜா நிறைய படங்களுக்கு இசையமைத்துவிட்டார், அதில் எத்தனையோ நல்ல, மிக நல்ல, அற்புதமான பாடல்களெல்லாம் வந்திருக்கின்றன, ஆனால் ‘நிறம் பிரித்துப் பார்த்தேன்’க்கு இணையான ஓர் உணர்வுபூர்வமான பாடல் நான் இதுவரை கேட்கவில்லை.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இரண்டு நாள் முன்புவரை.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘நந்தலாலா’ இசைத் தொகுப்பில், ‘மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊருஎங்கும் தேரு போகுது’ என்று ஒரு பாடல். கிட்டத்தட்ட ‘நிறம் பிரித்துப் பார்த்தேன்’ மெட்டுச் சாயலிலேயே அமைந்துள்ளது, சில சமயங்களில் அதன் காப்பிதான் இது என்றுகூடத் தோன்றுகிறது.

வித்தியாசம் என்னவென்றால், இது காதல் பாட்டு இல்லை, குழந்தைப் பாட்டு.

பாடல் வரிகளும் சரி, மெட்டு, பின்னணி இசையும் சரி, நிஜமாகவே ஒரு தேர் மெல்லமாக ஊர்ந்து செல்வதுபோலவும், அதன்பின்னே நாமும நான்கரை நிமிடங்கள் பயணிப்பதுபோலவும் ஓர் உணர்வை உண்டாக்குகின்றன.

நந்தலாலாத் தேர் செல்லும் பாதை, சமதளமாக இல்லை, அவ்வப்போது ஏற்ற, இறக்கங்கள் குறுக்கிடுகின்றன, அங்கெல்லாம் மெட்டும் இசையும் ஏறி, இறங்குகிறது, சடன் ப்ரேக் போட்டு நிற்கிறது,  மறுபடியும் மெல்ல வேகம் பிடித்து ஊர்ந்து செல்கிறது.

இந்த பாணிக்கு ஓர் உதாரணம் சொல்வதென்றால், ’அஞ்சலி’ படத்தில், ‘வேகம் வேகம் போகும் போகும்’ என்கிற பாட்டு. அதைக் கேட்கும்போதே அதிரடி வேகத்தில் செல்லும் ஒரு வாகனத்தில் நாம் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றும்.

இதேபோல் இன்னொரு பாட்டு, ‘ஓரம்போ, ஓரம்போ’, தாறுமாறாக வளைந்து செல்லும் சைக்கிள் பயணத்தை இசையாகவும் மெட்டாகவும், பாடுகிற பாணியாகவும் மொழிபெயர்த்திருப்பார் இளையராஜா.

’அஞ்சலி’யில் விண்வெளிப் பயணம், ‘ஓரம்போ’வில் சைக்கிள் பயணம், ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’யில் ஜாகிங் பயணம், ‘நந்தலாலா’வில் சுகமான தேர்ப் பயணம்.

கடந்த இரண்டு தினங்களில் இந்தப் பாட்டைக் குறைந்தபட்சம் நூறு தடவையாவது கேட்டுவிட்டேன், அசைந்து அசைந்து நடந்து வரும் ஒரு தேராக ஏராளமான குழந்தைப் பருவ நினைவுகளைக் கிளறியபடி இந்தப் பாடல் மனத்தில் அழுந்தப் பதிந்துவிட்டது. ஒவ்வொருமுறை பாடல் முடியும்போதும் ‘ஐயோ, தேரிலிருந்து இறங்கவேண்டுமே!’ என்று வருத்தமாக இருக்கிறது.

’நந்தலாலா’வில் இந்தப் பாடல்மட்டுமில்லை, அநேகமாக எல்லாமே குழந்தைப் பாடல்கள்தான், ராஜா அடித்து ஆடியிருக்கிறார்.

’குழந்தைப் பாடல்’கள் என்றால், ‘அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா’ ரகம் இல்லை, குழந்தைகளின் மன உணர்வுகளை இசையில், மெட்டில், ஒலிகளில் வெளிப்படுத்துகிற நுணுக்கமான கலை இது. அரை டவுசர் பருவத்துக்கே மீண்டும் நம்மைக் கூட்டிச் சென்றுவிடக்கூடியது.

அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் இந்தப் பாடல்களைக் கேட்டுப்பாருங்கள், எளிமையான, உணர்வுபூர்வமான மெட்டுகளுக்கு, ஆடம்பரம் இல்லாத இசைச் சட்டை போட்டு உட்காரவைத்திருக்கும் ராஜாவின் தந்திரத்தை நீங்களும் ரசிக்கலாம்.

ஒரே குறை, நம் மண்ணின் மெட்டுகளாகத் தோன்றுகிறவற்றுக்கு அதீதமான மேற்கத்திய இசைக் கோர்ப்பு சேர்த்ததுதான்  கொஞ்சம் உறுத்துகிறது, பலாச்சுளையை சீஸில் தோய்த்துச் சாப்பிடுவதுபோல.

***

சில பின்குறிப்புகள்:

1.  இயக்குனர் மிஷ்கின் ’நந்தலாலா’ பாடல்களில் சிலவற்றைமட்டுமே படமாக்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். தனக்குத் தேவை இரண்டு பாடல்கள்தான் என்று தெரிந்தும்கூட, ராஜாவை இன்னும் வேலை வாங்கி நிறைய நல்ல பாட்டுகளை வாங்கியிருக்கிறார், அவருக்கு நன்றி!

2. ’நந்தலாலா’ பாடல்களில் ஓர் அதிசயம், அநேகமாக எந்தப் பாடலிலும் ஓர் ஆங்கில வார்த்தைகூட இல்லை (நான் கவனித்தவரையில்).

3. தமிழ்த் திரைக் கலைஞர்களில், இளையராஜா அளவுக்குத் தனது கலைத் திறமையின் சகல சாத்தியங்களையும் முழுமையாகப் பயன்படுத்துகிற / நிரூபிக்கிற வாய்ப்புக் கிடைத்தவர்கள் அநேகமாக யாருமே இல்லை. ஓர் திரை இசையமைப்பாளராக என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் செய்து பார்த்துவிட்ட இளையராஜா, பணம், புகழ், ரசிகர்கள், பாராட்டுகள், விருதுகள் என எல்லாமே நிறைய சம்பாதித்துவிட்டார், அதன்பிறகும் தொடர்ந்து பாடல்களை உருவாக்கிக்கொண்டிருக்க அவருக்கு எது ஊக்கம்? திரும்பத் திரும்ப அதே சூழ்நிலைகள், அதே பல்லவி, அனுபல்லவி, சரணக் கட்டமைப்பு என்று போரடிக்காதா?

அடுத்தபடியாக, ஒருகாலத்தில் நிஜமான ‘ராஜா’வாக இருந்த இளையராஜா, இப்போது பத்தோடு பதினொன்றுதான். உணர்ச்சிவயப்படாமல் யோசித்தால், அவர் பாடலைத் தேடிப் பிடித்துக் கேட்கிற ரசிகர்களைத்தவிர, மற்றவர்கள் ராஜாவைப் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.

இந்தச் சூழ்நிலையை அவர் எப்படிப் பார்க்கிறார்? தன்னுடைய சொந்த மகன், மற்ற புதிய இசையமைப்பாளர்களின் பாடல்கள் அடைகிற பிரபல்யத்தில் ஒரு சின்னத் துளியைக்கூடத் தன்னால் எட்டிப்பிடிக்கமுடிவதில்லையே என்று அவர் வருந்துவாரா? பிரபல்யம் என்பது தரத்துக்கான அளவுகோல் இல்லைதான். என்றாலும், தான் ராஜாவாக வாழ்ந்த வீட்டில் இன்னொருவர் கொடி பறப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்காதா? அதற்கும் இசைதான் அவருக்கு மருந்தா?

இப்போதைய மனோநிலையில், இளையராஜா தனது சுயசரிதையை எழுதினால் ஒரு ஜீனியஸின் மனம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும்.

***

என். சொக்கன் …

17 01 2009

தக்காளி, வெங்காய பிட்ஸா சாப்பிட்டுக் கொண்டாடிய பொங்கலன்று, நண்பர் முகேஷிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.

‘நீங்கள் தற்போது மலேசியாவில் இருக்கிறீர்கள் என்று வாசித்தேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், எங்களுடைய குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடலாமே’

முகேஷின் இந்த மின்னஞ்சலை நான் வாசிக்கும்போது, பொங்கல் தினம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆகவே, நாங்கள் நேரில் சந்திக்கமுடியவில்லை, தொலைபேசியில்மட்டும் பேசினோம்.

திருநெல்வேலியைச் சேர்ந்த முகேஷ், இங்கே சொந்தத் தொழில் செய்கிறார். வலைப்பூக்கள், தமிழ்த் தளங்களை வாசிப்பது பிடித்தமான பொழுதுபோக்கு, ‘எழுதவேண்டும் என்று ஆசை, ஆனால் மனம் ஒன்ற மறுக்கிறது’ என்றார்.

‘மனம் ஒன்றும்வரை காத்திருந்தால் சரிப்படாது, ட்விட்டரிலாவது எழுதத் தொடங்குங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன்.

முகேஷ் என்னைச் சந்திக்கவேண்டும் என்பதில் மிகப் பிடிவாதமாக இருந்தார், என்னுடைய மலேசியப் பதிவுகளில் நான் எழுதிய சில விஷயங்களைப் பொய்யென்று நிரூபிக்க விரும்பினாரோ என்னவோ.

முதலாவதாக, கோலா லம்பூரில் எங்கு பார்த்தாலும் பிரம்மாண்டக் கட்டடங்கள் என்று எழுதியிருந்தேன். அது பிரதான நகரத்தில்மட்டும்தான், இதை உறுதிப்படுத்துவதற்காக, சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவிலிருந்த ‘புத்ர ஜெயா’ என்ற இடத்துக்கு என்னைக் கடத்திச் சென்றார் முகேஷ்.

கிட்டத்தட்ட ஹிந்தி (சமஸ்கிருத?) சினிமா டைட்டில்போல் இருக்கும் ’புத்ர ஜெயா’விலும் ஏகப்பட்ட கட்டடங்கள் உண்டு. ஆனால் அடுக்கிவைத்த தீப்பெட்டிகளைப்போல அருகருகே உயர்ர்ரமாக நிறுத்திவைத்துப் பயமுறுத்தாமல், நன்கு பரவ விட்டிருக்கிறார்கள். ஒரு கட்டடத்துக்கும் இன்னொரு கட்டடத்துக்கும் நல்ல இடைவெளி, நிமிர்ந்து பார்த்தால் காங்க்ரீட் அன்றி, நிஜமான வானம் தெரிகிறது, பிசிறில்லாத தார்ச் சாலைகள், பாம்புகளைப்போல் வளைந்து நெளியும் நவீன போக்குவரத்து சிக்னல்கள், மரங்களைதான் காணோம்.

புத்ர ஜெயாவில் பெரும்பாலும் அரசு அலுவலகங்கள்தான், மத்தியில் ஓர் அழகிய மசூதி, பிரதமர் அலுவலகம், தேசிய, மாநிலக் கொடிகள் ஏற்றப்பட்ட ஒரு பெரிய மைதானம், பக்கத்தில் படியிறங்கிச் சென்றால் ஏரிக்கரைப் பூங்காற்று.

ஒரு கடையில் ஆரஞ்சுப் பழரசம் வாங்கிக் கொண்டோம், ஏராளமான குழல் வடிவப் பனிக்கட்டிகளை நிரப்பிக் கொடுத்தார்கள். பணம் கொடுத்துவிட்டு நிமிர்ந்தால், கவுன்டருக்குப் பின்னால் ‘எங்க்க்கேயோ பார்த்த்த மய்க்க்ம்’ என்று உதித் நாராயண் தமிழைக் கொன்றுகொண்டிருந்தார்.

லேசான சிகரெட் வாடையடிக்கும் ஏரிக்கரைக் காற்றில் பழரசம் குடித்தபடி நிறையப் பேசினோம், மலேசியாவில் யாரெல்லாம் வசிக்கிறார்கள், எங்கே தமிழர்கள் அதிகம், அவர்கள் என்னமாதிரி வேலை பார்க்கிறார்கள், அங்கிருந்து இங்கே வருகிறவர்களுக்கு என்ன மரியாதை, எந்தப் பொருளை எங்கே வாங்கினால் மலிவு, இரு சக்கர வாகனங்கள் நிறையத் தென்படுகிறதே ஏன், பெட்ரோல் விலை அதிகமா, குறைவா, மலாய் பாஷை கற்றுக்கொள்வது எளிதா, இங்கே மருத்துவ சிகிச்சைக்கு ரொம்பச் செலவாகும் என்கிறார்களே, நிஜமா, அக்கம்பக்கத்தில் என்னென்ன நாடுகள், சிங்கப்பூருக்கு ரயிலில் போனால் எவ்வளவு நேரமாகும், குமுதம், விகடனெல்லாம் இங்கே கிடைக்கிறதா … என்னுடைய முடிவில்லாத கேள்விகளுக்கெல்லாம் முகேஷ் ரொம்பப் பொறுமையாக பதில் சொன்னார்.

இதற்குமுன் நான் அவரைச் சந்தித்தது இல்லை, மின்னஞ்சலில்கூடப் பேசியதில்லை, அவராக வலிய வந்து என்னை அழைக்காவிட்டால், நானே சென்று பேச மிகவும் தயங்கியிருப்பேன்.

இதனால்தான், எனக்கு அநேகமாக ‘ரயில் சிநேகம்’ என்பதே இல்லை, ஏதோ இனம் புரியாத தயக்கத்தால், ரயில் ஏறியதும் உச்சி பர்த்தில் ஏறிப் படுத்துவிடுவேன், அங்கே ஒரு புத்தகத்தைப் பிரித்துவைத்துக்கொண்டால் உலகம் மறந்துவிடும்.

என்னிடம் என் மனைவிக்குப் பிடிக்காத, அடிக்கடி கேலி செய்கிற குணம் இதுதான். எனக்கு மனிதர்களைக் கவனிக்கப் பிடிக்கும், ஆனால் புதியவர்களிடம் பேசுவதற்குத் தயக்கம் அதிகம், ஒதுங்கிப் போய்விடுவேன்.

ஆனால் முகேஷிடம் அதுபோன்ற தயக்கங்கள் இல்லை. முதல் சந்திப்பிலேயே நன்கு சகஜமாகப் பேசுகிற தேவ குணம் அவருக்கு வாய்த்திருந்தது.

புத்ர ஜெயாவிலிருந்து நாங்கள் மீண்டும் கோலா லம்பூரினுள் வந்தோம், இந்தியர்கள் நிறைய வாழும் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றார் முகேஷ்.

பிரச்னை என்னவென்றால், அதற்குள் மணி ஒன்பதரையைத் தாண்டிவிட்டது. அநேகமாக எல்லாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. முகேஷுக்கு ரொம்ப வருத்தம்.

‘பரவாயில்லைங்க, நாளன்னிக்கு நான் நிஜ இந்தியாவையே பார்த்துக்கறேன்’ என்றேன நான்.

அப்போதும் அவர் திருப்தியடையவில்லை. சுற்றிச் சுற்றி ஏதேனும் கடைகள் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தோம். ஆங்காங்கே ஒன்றிரண்டு கடைகள் திறந்திருந்தன. ஆனால் அவற்றில் உருப்படியாக வாங்கக்கூடியவை எதுவும் இல்லை. காலியாகக் கிடந்த ஓர் இருட்டுச் சந்தில் திரும்பி வெளியே வந்தால், ‘வில்லு’ பேனரில் விஜய் சிரித்துக்கொண்டிருந்தார்.

கடைசியாக நாங்கள் சென்ற இடம், ஒரு வாரச் சந்தை. வழக்கமாக பேருந்துகள், மற்ற வாகனங்கள் வந்துபோகிற ஓர் இடத்தை, வியாழக்கிழமைகளில்மட்டும் வளைத்துப்போட்டுச் சந்தையாக மாற்றியிருந்தார்கள்.

அந்தச் சந்தைக்குள் நுழைந்துவிட்டால், நாம் இருப்பது மலேசியா என்கிற எண்ணம் மறந்துபோகிறது, சுற்றி எங்கிலும் தமிழ்க் குரல்கள்தான் பலமாகக் கேட்டுக்கொண்டிருந்தன, மிச்சமிருந்த இடங்களில் சீனப் புது வருடத்தைக் கொண்டாடும் பொருள்களின் அணிவகுப்பு.

பஜ்ஜி, போண்டா, பக்கோடாவில் தொடங்கி விதவிதமான உணவுப் பொருள்கள், அழகு சாதனங்கள், காய்கறிகள், பழங்கள், திருட்டு சிடி-கள், துணிமணிகள், குளிர்க் கண்ணாடிகள், காலணிகள், இன்னும் என்னென்னவோ, ஏகப்பட்ட தள்ளுவண்டிக் கடைகளுக்கு நடுவே, போனால் போகிறது என்று மக்கள் வந்து போக இடம் விட்டிருந்தார்கள்.

’பிங்க்’ பிரியையாகிய நங்கைக்காக ஒரு கைப்பை வாங்கிக்கொண்டேன், மிக்கி மவுஸ் பொம்மை போட்ட இரவு உடை ஒன்று சின்னச் செருப்புடன் கிடைத்தது. மற்றபடி உணவு வகைகளை முயன்று பார்க்க எனக்குக் கொடுத்துவைக்கவில்லை.

அதற்குபதிலாக, இரவு முகேஷ் வீட்டில் ஜோரான வெண்பொங்கல், ரவா கேசரி, அவருடைய சுட்டிப் பெண் அமிர்தர்வர்ஷினியுடன் விளையாட்டு என நேரம் போனதே தெரியவில்லை. விமானம் ஏறாமலே இந்தியாவுக்கு ஒரு மினி பிக்னிக் போய் வந்ததுபோல் உற்சாகமாக உணர்ந்தேன்.

நள்ளிரவு கடந்து எனது அறைக்குத் திரும்பியபோது, மனம் லேசாகியிருந்தது. முகம் தெரியாத ஒருவனுக்காக, அரை நாளைச் செலவிடும் அன்பு, அக்கறை மிகுந்த ந(ண்)பர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள், நானும் பழகிக்கொள்ளவேண்டும், இனிமேலாவது!

***

என். சொக்கன் …

16 01 2009

 

*************************

முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்:

மலே மலே மலே மலேசியா

அந்த உணவகத்தினுள் நாங்கள் வலது கால் வைத்து இடது காலை நகர்த்துவதற்குள் இருவர் எங்களை வழிமறித்தார்கள், ‘ஹலோ சார், ரிஸர்வேஷன் இருக்கா?’

’அஃப்கோர்ஸ்’ என்றார் எங்களுடன் வந்திருந்த சீனர். அவர் தன்னுடைய பெயரைச் சொல்ல, அவர்கள் தங்களுடைய சித்திரகுப்தப் பேரேட்டில் அவசரமாகத் தேடி முகம் மலந்தார்கள், ‘நன்றி கணவான்களே, உங்களுக்கான இருக்கைகள் தயாராக இருக்கின்றன’

எங்களுக்கு வழிகாட்டிய பெண்ணுக்கு இந்திய முகம், ஆனால் பேச்சில் அது தெரியவில்லை. கண்ணாடிக் கூண்டுக்குள் ஒளிந்திருந்த எங்கள் மேஜையைக் காண்பித்துவிட்டு அவர் விலகிக்கொள்ள, எதற்கெடுத்தாலும் ‘அஃப்கோர்ஸ்’ சொல்லும் சீனரிடம் நான் விசாரித்தேன், ‘இங்கே பஃபே லஞ்ச் என்ன விலை?’

‘98 ரிங்கிட்ஸ்’ என்றார் அவர்.

நான் திகைத்துப்போனேன், 98 மலேசிய வெள்ளி என்பது, இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய்க்கு மேல்!

சாப்பாட்டுக்கு இத்தனை ரூபாய் செலவழிக்கவேண்டுமா என்று நான் தயங்குவதைப் புரிந்துகொண்டதுபோல், ‘அஃப்கோர்ஸ்’ என்றார் அவர், ‘இந்த ஏரியாவில் இவ்வளவு விலை கொடுத்துதான் சாப்பிடவேண்டும், வேறு வழியில்லை’

ஆயிரத்திருநூறு ரூபாய்க்கு அப்படி என்னதான் சாப்பாடு போடுகிறார்கள்? அந்த அறையை மெல்லச் சுற்றிவந்தேன்.

வழக்கமாக இந்தியாவில் பஃபே உணவு என்றால் நீளமாக ஒரு மேஜை போட்டு நேர் கோடு கிழித்தாற்போல் உணவு வகைகளை வைத்திருப்பார்கள், எல்லோரும் அதே வரிசையில்தான் சாப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாற்போலிருக்கும்.

ஆனால் இங்கே, சின்னச் சின்ன வட்டங்களாக மேஜைகளை அமைத்து, கிட்டத்தட்ட ஒரேமாதிரியான வகையைச் சேர்ந்த உணவு வகைகளை ஆங்காங்கே தொகுத்திருந்தார்கள். இந்த வட்டத்தில் சூப், அந்த வட்டத்தில் ப்ரெட், இன்னொரு வட்டத்தில் நூடுல்ஸ் இப்படி.

பிரச்னை என்னவென்றால், சகலத்திலும் மாமிச வாடை.

அநேகமாக உலக உயிரினங்கள் அனைத்தும் அங்கே பலவிதமாகச் சமைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலானவை அவற்றின் நிஜ வாழ்க்கை வடிவத்தில் அப்படியே நறுக்கப்பட்டுக் கிடந்தன.

நெடுநேரம் சுற்றி வந்தும், என்னால் சைவ உணவு எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. சாதாரண ரொட்டியில்கூட மேலே கறுப்பாக எதையோ புதைத்துவைத்திருந்தது சந்தேகமூட்டியது.

கடைசியில், எங்களுக்கு வழிகாட்டிய இந்திய(?)ப் பெண்ணைத் தஞ்சமடைந்தேன், ‘அம்மணி, யான் ஒரு தாவர பட்சிணி, எமக்கு உண்ணக்கூடியதாக இங்கு ஏதேனும் கிட்டுமா?’

நல்லவேளையாக, அவர் என்னைப் புழுவைப்போல் பார்க்கவில்லை. ஒருவேளை அப்படிப் பார்த்திருந்தால் உடனடியாக என்னைச் சமைத்து ஒரு தட்டில் துண்டு போட்டிருப்பார்.

‘உங்களுக்கு வேணும்ன்னா, நான் எங்க செஃப்பை வெஜிட்டேரியன் சமைக்கச் சொல்றேன்’

‘கண்டிப்பா வேணும், வெஜிட்டேரியன்ல என்ன கிடைக்கும்?’

‘நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ்’

‘எனக்கு ஃப்ரைட் ரைஸ் ஓகே’ என்றேன், நிம்மதியாக என் இருக்கைக்குத் திரும்பினேன்.

என்னுடன் வந்திருந்த ஏழு பேரும் ஏற்கெனவே இடுப்புப் பெல்டை நெகிழ்த்திக்கொண்டு ஒரு கட்டு கட்டத் தொடங்கியிருந்தார்கள். நான்மட்டும் பரிதாபமாக காலித் தட்டுடன் காத்திருந்தேன்.

கால் மணி நேரம் கழித்து, நான் கேட்ட வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் வந்தது. அதன் உச்சியில், அழகாக ஒரு முட்டை.

‘ஐயையோ, நான் முட்டை கேட்கலையே’

‘இது காம்ப்ளிமென்டரி சார்’ என்று ஜோக்கடித்தார் அந்த சர்வர் பெண் (சர்வி?), எனக்கு முட்டையும் ஆகாது என்று ஆரம்பத்திலேயே சொல்லாதது என் தப்புதான்.

என் புத்தியை நொந்துகொண்டு, அவருக்குப் பிரச்னையை விளக்கினேன், அவரும் புரிந்ததுபோல் தலையைத் தலையை ஆட்டினார், கொண்டு வந்த உணவைத் தட்டோடு திரும்பக் கொண்டு சென்றுவிட்டார்.

ஏழு நிமிடக் காத்திருப்புக்குப்பிறகு, மீண்டும் ஃப்ரைட் ரைஸ் வந்தது, இந்தமுறை அதன் உச்சியில் முட்டை இல்லை.

அதற்குபதிலாக, முட்டையை உடைத்து ஃப்ரைட் ரைஸ்மீது ஊற்றியிருந்தார்கள்.

நான் சொன்னதை அந்தப் பெண் என்ன புரிந்துகொண்டதோ, உள்ளே சென்று என்ன சொல்லிவைத்ததோ, கடவுளுக்குதான் வெளிச்சம்.

‘இந்த ஃப்ரைட் ரைஸும் எனக்கு ஆகாது’ என்று திருப்பிக் கொடுத்தேன், முட்டை, மாமிசம் இல்லாத உணவுதான் எனக்கு வேண்டும் என்று நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக விளக்கிச் சொன்னேன்.

‘ஓகே சார்’ என்று எப்போதும்போல் புன்னகைத்தார் அவர். உணவுத் தட்டைப் பறிமுதல் செய்துகொண்டு போய்விட்டார்.

இதற்குள் என்னுடன் வந்திருந்தவர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள், ‘அச்சச்சோ, நீங்க வெஜிட்டேரியனா’ என்று என்னிடம் பரிதாபமாகக் கேட்டபடி எல்லோரும் ஐஸ் க்ரீமை மொசுக்க, நான் தூரத்திலிருக்கும் சமையலறைக் கதவையே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அந்த அறையில், சுமார் அரை டன் உணவு இருந்திருக்கும். ஆனால் அவற்றில் நான் சாப்பிடக்கூடியது எதுவும் இல்லை. கொடுமை!

இவ்வளவு விலை கொடுத்துப் பட்டினி கிடக்கவேண்டும் என்று யார் அழுதார்கள்? இந்த பிஸினஸ் லஞ்ச் களேபரமெல்லாம் இல்லாவிட்டால் நான் பக்கத்திலிருக்கும் ஃபுட் கோர்டுக்குப் போய், சென்னா மசாலா தொட்டுக்கொண்டு சந்தோஷமாக சப்பாத்தி சாப்பிட்டிருப்பேன்.

எல்லோரும் சாப்பிட்டு முடித்து எழுந்தபிறகு, எனக்கான ஃப்ரைட் ரைஸ் வந்தது. அவசரமாக அதன் தலையில் குத்தி உடைத்துப் பார்த்தேன். உள்ளே, சிக்கன் துண்டுகள்!

98 வெள்ளிக்கு, நேற்று மதியம் நான் சாப்பிட்டது வெறும் ஐஸ் க்ரீம்தான்!

***

என். சொக்கன் …

14 01 2008

*************************

முந்தைய கோலா லம்பூர் பதிவு:

மலே மலே மலே மலேசியா

’கேட் மூடியாச்சா?’

‘ஓ, யெஸ்’

‘ரொம்ப சந்தோஷம்’ என்றவர் சட்டென எழுந்துகொண்டார், பின்வரிசையில் காலியாக இருந்த நான்கு நாற்காலிகளைத் துண்டு போட்டு ரிஸர்வ் செய்து வைத்தார், பள்ளப்பட்டி டவுன் பஸ் கணக்காக.

பெங்களூரிலிருந்து கோலாலம்பூர் வரும் மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சுத்தமாகக் கூட்டம் இல்லை. அநேகமாக ஆறு இருக்கைகளில் ஒருவர் என்கிற விகிதத்தில்தான் மக்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள்.

இதனால், பெரும்பாலானோர் (நான் இல்லை) ரயில்வே பர்த்போல நீண்டு படுத்துப் போர்த்தித் தூங்கிக்கொண்டு சௌக்கியமாகப் பயணம் செய்தார்கள். அந்த சுகத்தை முழுசாக அனுபவிக்கவிடாமல், கண் மூடித் திறப்பதற்குள் மலேசியா வந்துவிட்டது.

அந்தச் சொற்ப தூரமும் எனக்குத் தூக்கம் வரவில்லை, சிறிது நேரம் சென்ற நூற்றாண்டுத் தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றைப் படித்தேன், அதன்பிறகு, விட்டத்திலிருந்து தொங்கும் தொலைக்காட்சியில் வண்ணமயமான மலேசியச் சுற்றுலா விளம்பரங்களை ஒளிபரப்பத் தொடங்கினார்கள்.

விமானத்தின் ’பொழுதுபோக்கு அட்டவணை’ப் புத்தகத்தைப் புரட்டியபோது, மூன்று நாள் தாடி பரத் புகைப்படத்துடன் ’முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ இடம்பெற்றிருந்தது. ஆனால் நிஜத்தில் ஏதோ ஒரு டாகுமென்டரி படத்தை ஒளிபரப்பி போரடித்தார்கள்.

சரி, ஜன்னலுக்கு வெளியே ஏதாவது தெரிகிறதா என்று வேடிக்கை பார்க்கலாம் என்றால், கும்மிருட்டு. வெளிநாட்டு விமானங்களெல்லாம் ராத்திரி நேரத்தில்தான் பறக்கவேண்டும் என்று விதிமுறை போட்டவனை உதைக்கவேண்டும்.

இப்படியாக நான் அலுத்துச் சலித்துக் களைத்த நேரத்தில் கொஞ்சம்போல் தூக்கம் வந்தது. கண்ணை மூடிக் கனவு காண ஆரம்பித்த மறுவிநாடி, விளக்குகளை எரியவிட்டு வரவேற்பு விளம்பரம் போட ஆரம்பித்தார்கள்.

கண்கள் எரிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கினோம்.  அரசாங்க முத்திரை குத்திக்கொண்டு பெட்டி சகிதம் வெளியே வந்தபோது டாக்ஸி காத்திருந்தது.

ஆறு வருடங்களுக்குமுன்னால் பார்த்த கோலாலம்பூர் விமான நிலையம், அதனைப் பிரதான நகரத்துடன் இணைக்கும் சாலை எதுவும் அதற்கப்புறம் அதிகம் மாறியிருப்பதாகத் தெரியவில்லை. அப்போது பார்த்த அதே மோஸ்தரில்தான் இப்போதும் இருக்கிறது.

இந்தமுறை எங்களுக்கு வேலை கோலாலம்பூர் (இதை ஏன் ஆங்கிலத்தில் ‘கோலா லம்பூர்’ என்று பிரித்து எழுதுகிறார்கள்?) மைய நகரத்தில். நான்கு பேர் கக்கத்தில் ஆளுக்கொரு மடிக்கணினியுடன் கிளம்பி வந்திருக்கிறோம். இந்த வாரம்முழுக்க இங்கேதான் வாசம்.

இப்படி ஒரு பயணம் வரப்போகிறது என்று முன்கூட்டியே தெரியும், ஆனால் மிகச் சரியாக இந்த வாரத்தில் வரும் என்பது தெரியாது. இதனால் சென்னை புத்தகத் திருவிழாவுக்குச் செல்ல இருந்த திட்டம் பாழ், இந்த வருடப் பொங்கல் எனக்கு மலேசியாவில்தான் என்று இறைவன் எழுதிவைத்துவிட்டான், என்ன செய்ய?

கோலாலம்பூர் நகரக் கட்டடங்கள் மூன்று வகை. பெரியவை, மிகப் பெரியவை, பிரம்மாண்டமானவை. நடுநடுவே எப்போதாவது தென்படும் ஒற்றை மாடி, இரட்டை மாடிக் கட்டடங்களை மக்கள் புழுவைப்போல் பார்க்கிறார்கள்.

2002ல் கோலாலம்பூர் வந்தபோது, புகழ் பெற்ற பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களைப் பார்க்கவேண்டும் என்று யார் யாரையோ விசாரித்துப் பல் உடைந்தேன். கடைசியில் ஒரு நண்பர் தன்னுடைய குடும்பத்துடன் என்னையும் காரில் போட்டுக்கொண்டு அழைத்துவந்து சுற்றிக்காட்டினார்.

இந்தமுறை அந்த அவஸ்தையே இல்லாமல், இரட்டைக் கோபுரங்களுக்கு இடது பக்கம் இருக்கும் அலுவலகத்தில் வேலை, வலதுபக்கம் இருக்கும் ஒரு விடுதியில் தங்குதல். ஜன்னலைத் திறந்தாலே திகட்டத் திகட்ட இரட்டைக் கோபுர தரிசனம்தான்.

இரட்டைக் கோபுரத்தைச் சுற்றியிருக்கும் மற்ற கட்டங்களும், அதைப்பார்த்துக் காப்பியடித்ததுபோல் கண்ணாடி, உலோகக் கலவையில் அசத்துகின்றன. அதற்குப் பக்கத்தில் ஓர் அழகிய நீரூற்று, பச்சைப்பசேல் பூங்கா.

நீரூற்றின் கரையிலும் சரி, பூங்காவின் புல்தரைகளிலும் சரி, மக்கள் ஜோடியாக நின்றபடி எதிராளியைக் தரைக் கீழ் கோணத்திலிருந்து புகைப்படம் எடுத்துத் தரச் சொல்கிறார்கள், ‘பின்னாடி ட்வின் டவர்ஸ் முழுஸ்ஸா வர்றமாதிரி பாத்துக்கோங்க சார்’

எங்களுடைய விடுதிக்கும் ட்வின் டவர்ஸுக்கும் அரை கிலோ மீட்டர் தூரம்தான். அந்தச் சொற்ப தொலைவை நடக்கமுடியாதவர்களுக்காக ஒரு பேட்டரி கார் (பெரும்பாலும் காலியாக) அங்கும் இங்கும் போய் வந்துகொண்டிருக்கிறது. கோட், சூட் சகிதம் நான்கு நான்கு நிமிடப் பயணங்களாக அந்த வண்டியை நாள்முழுக்க ஓட்டுகிற மலேசிய இளைஞரின் பொறுமையை வியக்கிறேன்.

மலேசியக் கட்டடங்களில் கண்ணாடி, உலோகத்துக்கு அடுத்தபடியாக நிறையக் கண்ணில் படுவது சாப்பாட்டுக் கடைகள். ‘ஃபுட் கோர்ட்’ என்று நாகரிகமாகப் பெயர் வைத்து சில ஆயிரம் சதுர அடி பரப்பில் சாதம், சப்பாத்தி, பிட்ஸா, பிரியாணி, சிக்கன், மட்டன், மீன் சகல வாடைகளும் கலந்தடித்துக் குழப்புகிறது.

இங்குள்ள மக்களுக்குப் பொரித்த பண்டங்கள் மிகவும் பிடிக்கும்போல, எண்ணைப் பலகாரங்களைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்து விளம்பரப்படுத்தாத கடைகளே இல்லை.

ஆங்காங்கே தென்படும் இந்தியக் கடைகளை ஆசையாகப் பார்த்தபடி தொடர்ந்து நடக்கிறோம். ஒரு வாஷ் பேசினுக்குமேலே, ‘Eight Steps For Hand Wash’ என்று ஓவியங்களுடன் அக்கறையாக ஒரு செய்முறை விளக்கம் எழுதி ஒட்டியிருக்கிறார்கள், எதற்கு?

விமானத்தில் தூங்காதது இப்போது கண்ணைச் சுழற்றுகிறது, அவசரமாக இன்றைய வேலையை முடித்துக்கொண்டு விடுதிக்குத் திரும்பிவிட்டோம். ஜன்னல்வழியே மழை அடித்துப் பெய்துகொண்டிருக்கிறது, இதோ, ’Publish’ பொத்தானை அழுத்திவிட்டுத் தூங்கப்போகவேண்டியதுதான்!

***

என். சொக்கன் …

12 01 2009

அநியாயம் 1:

சென்னையில் ஒரு பிரபலமான தங்கும் விடுதி. எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் அங்கே சென்று அறை வாடகை எவ்வளவு?’ என்று விசாரித்திருக்கிறார்.

’ஒரு ரூமுக்கு ஒரு நாள் வாடகை x ரூபாய், இந்த மூணு ரூமுக்குமட்டும் ஆயிரம் ரூபாய் ஜாஸ்தி’

‘ஏன்? அந்த அறைகள்ல என்ன ஸ்பெஷல்?’

‘அந்த மூணு ரூம்லயும் ஜன்னலைத் திறந்தா நீச்சல் குளம் தெரியும் சார், அந்த ‘வ்யூ’வுக்குதான் ஸ்பெஷல் ரேட்’

இப்படி வரவேற்பறையிலேயே வெளிப்படையாகச் சொல்லிக் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களாம். அங்கே காசு கொடுத்துத் தங்கி, அந்த நீச்சல் குளத்தைப் பயன்படுத்தும் பெண்கள்தான் பாவம்!

அநியாயம் 2:

கேரளாவில் ஒரு பிரபலமான கோவில். அங்கே கொடுக்கும் பிரசாதப் பாயசம் இன்னும் பிரபலமானது.

இப்போதெல்லாம், அந்தப் பாயசத்தை நல்ல அலுமினிய டின்களில் அடைத்து, சிந்தாமல், கெடாமல், கலப்படத்துக்கு வழியில்லாமல் பாதுகாப்பாக விற்கிறார்கள். சந்தோஷம்.

ஆனால், அந்த டின்களின்மேல் விலை இல்லை, சைவமா, அசைவமா என்று குறிக்கும் பச்சை / சிவப்புப் பொட்டுகள் இல்லை, என்றைக்குத் தயாரித்தார்கள், எப்போது காலாவதியாகும் என்கிற ‘Expiry Date’ இல்லை, எந்த விவரமும் இல்லை.

சட்டப்படி இது தவறில்லையா? உம்மாச்சி கண்ணைக் குத்தமாட்டாரா? எந்த நம்பிக்கையில் இதைப் பிள்ளைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பது?

***

என். சொக்கன் …

09 01 2008

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால், நீங்கள் உங்களுடைய திருமணம், குழந்தை பிறப்பு, காதுகுத்து, புதுமனை புகுவிழா, புத்தம்புது வாகன வெள்ளோட்டம், இன்னபிற சுப நிகழ்வுகளுக்கு ‘ட்ரீட்’ எனப்படும் சிறப்பு விருந்து வழங்க விரும்புவீர்களானால், அதற்கு ஏகாதசி தினமே உகந்தது.

ஏகாதசிக்கும் விருந்துச் சாப்பாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் அன்றைக்கு விருந்து கொடுத்தால், பர்ஸ் ரொம்பப் பழுக்காமல் தப்பித்துக்கொள்ளலாம் என்பதை நேற்று தெரிந்துகொண்டேன்.

விருந்து கொடுத்தது நானில்லை, எங்கள் குழுவைச் சேர்ந்த ஒரு பெண். சமீபத்தில்தான் அவருக்குத் திருமணமாகியிருக்கிறது, அதை முன்னிட்டு எங்களை விருந்துக்கு அழைத்திருந்தார்.

எங்களுடைய குழு சிறியதுதான். மொத்தம் எட்டு உருப்படிகள், அதில் நாலு பேர் சுத்த சைவம் – முட்டைகூடச் சாப்பிடமாட்டோம்.

மீதமுள்ள நாலு பேர், சுத்த அசைவம், ஓடுவது, நடப்பது, பறப்பது, உருள்வது, நீந்துவது, எல்லாவற்றையும் உண்பது என்கிற கொள்கை கொண்டவர்கள்.

இதனால், எங்கள் குழுவில் யார் யாருக்கு ட்ரீட் கொடுப்பதென்றாலும் சரி, நிச்சயமாக ஓர் அசைவ உணவகத்துக்குதான் செல்லவேண்டும். இது ஓர் எழுதப்படாத விதி.

ஆனால் நேற்றைக்கு (வைகுண்ட ஏகாதசி) தினம், இந்த விதி பொருந்தவில்லை. காரணம், அசைவப் பிரியர்களும் நேற்று தாற்காலிக சைவமாகிவிட்டார்கள்.

ஆகவே, நாங்கள் கும்பலாக ஒரு சைவ உணவகத்தைச் சென்றடைந்தோம். ட்ரீட் கொடுத்த பெண்ணுக்கு நிறைய பணம் மிச்சம் என்று ரகசியத் தகவல்.

அந்தப் பெண்ணின் பெயர் முக்கியமில்லை, வேண்டுமென்றால் ‘விமலா’ என்று வைத்துக்கொள்ளலாம்.

விமலாவின் சொந்த ஊர் அஹமதாபாத் பக்கத்தில் இருக்கிறது. அவரை மணந்திருக்கிறவர், ராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.

ம்ஹும், தப்பு, தன்னுடைய கணவரை யாரும் ‘டாக்டர்’ என்று குறிப்பிட்டால் விமலாவுக்குப் பிடிப்பதில்லை, ‘அவர் டாக்டர் இல்லை, சர்ஜன்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் – நேற்றைய விருந்தின்போதுமட்டும் இந்த வாசகத்தைக் குறைந்தபட்சம் எட்டுமுறை கேட்டேன்.

அதேசமயம், பெருமைக்குரிய அறுவைச் சிகிச்சை நிபுணரான தன்னுடைய புதுக் கணவர்மீது விமலாவுக்கு ஒரே ஒரு சிறிய வருத்தம் உண்டு. ஏனெனில், அவர் வெங்காயம் சாப்பிடுகிறார்.

வெங்காயம்? உரித்துப் பார்த்தால் ஒன்றுமே இருக்காதே, அதற்கா வருத்தம்?

காரணம் இருக்கிறது, விமலா ஜைன மரபைப் பின்பற்றுகிறவர். வெங்காயம், பூண்டு கண்ணால்கூடப் பார்க்கமாட்டார்.

இதனால், நாங்கள் ஒவ்வொருமுறை குழுவாகச் சாப்பிடச் செல்லும்போதும், விமலாவைக் கிண்டல், கேலி செய்யாதவர்கள் இல்லை, ‘வெங்காயம் இல்லாம சமைச்சா மஹா கேவலமா இருக்குமே, நீங்க எப்படி, மூக்கைப் பிடிச்சுகிட்டு சாப்ட்றுவீங்களா?’

உடனே அவர் ஆவேசமாகச் சண்டைக்கு வருவார், ‘வெங்காயம் இல்லாமயும் நாங்க நல்லாவே சமைப்போம்’

‘சும்மா அளந்துவிடாதீங்க, வெங்காயம் இல்லாம உங்களால மசால் வடை செய்ய முடியுமா?’

‘ஓ, நல்லா செய்வேனே’

‘நீங்க செய்வீங்க, யார் சாப்பிடறது?

இப்படிச் சும்மா, அவர் மனத்தைப் புண்படுத்திவிடாதபடி ஜாலியாகதான் கிண்டலடிப்போம். இப்போது, விமலாவின் கணவர் வெங்காயம் சாப்பிடுகிறவர் என்று தெரிந்தபிறகு, அந்தக் கிண்டல் வேறு திசையில் திரும்பியது.

’உங்க கணவர் எப்படி? நீங்க வெங்காயம் போட்டுச் சமைக்கணும்ன்னு கட்டாயப்படுத்துவாரா?’

‘கண்டிப்பா மாட்டார், அவர் என்னோட விருப்பங்களை மதிக்கிறவர்’

‘அது எப்படி நிச்சயமா சொல்றீங்க?’

’எனக்கு அவரைத் தெரியும், அவர் என் பேச்சைத் தட்டமாட்டார்’

இவர் இப்படிச் சொன்னதும், இன்னொருவருக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது, ‘அதெல்லாம் ஆரம்பத்தில அப்படிதான் இருக்கும், இன்னும் ஆறு மாசம் கழிச்சுப் பாருங்க’

‘நோ சான்ஸ்’ முதன்முறையாக விமலா முகத்தில் கோபம், ‘அவர் என்னிக்கும் இப்படியேதான் இருப்பார், மாறமாட்டார்’

‘ஹலோ, நீங்க புதுசாக் கல்யாணமானவங்க, அந்த வேகத்தில சொல்றீங்க, நாங்கல்லாம் அனுபவப்பட்டவங்க, சொன்னாக் கேளுங்க, இதான் எதார்த்தம்’

அப்போதும் விமலா அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை, குஜராத்தி மொழியில் ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ வகைப் பழமொழிகள் இல்லைபோல.

இதனால், தன்னுடைய கணவர் என்றைக்கும் குணம் மாறமாட்டார் என்பதில் விமலா மிகுந்த உறுதியுடன் இருந்தார். அதற்காக பெட் கட்டக்கூட(!)த் தயாராக இருந்தார்.

திருமண வாழ்க்கைபற்றிப் பந்தயமா? அதுவும் வெங்காயத்தை வைத்தா? யார் இதற்கு நடுவர்கள்? ஆறு மாதம் கழித்து விமலாவின் அறுவைச் சிகிச்சை நிபுணக் கணவர் பால் மாறிவிட்டாரா, இல்லையா என்பதை எப்படித் தீர்மானிப்பது?

அநேகமாக, அங்கிருந்த எல்லோர் மனத்திலும் இந்தக் கேள்விகள் எழுந்திருக்கும், அவற்றை வெளிக்காட்டிக்கொள்ளாமல், சமர்த்தாக ’ஹரா பரா கபாப்’ தொட்டுக்கொண்டு தக்காளி சூப் சாப்பிடத் தொடங்கினோம்.

***

என். சொக்கன் …

08 01 2009

கல்லூரி நண்பன் ஒருவனை நீண்ட நாள்களுக்குப்பின் சந்தித்தேன். டெல்லி அருகே குர்காவ்னில் வேலை செய்துகொண்டிருக்கிறான், மனைவி, ஆறு வயதுப் பெண் குழந்தையுடன் அங்கேயே வசிக்கிறான்.

நான் பணி நிமித்தம் மூன்று முறை குர்காவ்ன் சென்று திரும்பியிருக்கிறேன், மற்றபடி அந்த ஊரைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆகவே குர்காவ்ன் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று அவனிடம் விசாரித்தேன்.

’என்ன வாழ்க்கையோ போ’ என்று சலித்துக்கொண்டான்.

இந்த பதிலை அவனிடம் நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அவனும் அவனுடைய மனைவியும் காதலித்து மணந்தவர்கள், பெரிய நிறுவனமொன்றில் நல்ல வேலையில் இருக்கிறார்கள், நிச்சயமாக இந்தியர்களின் சராசரி வருமானத்துக்குப் பலபடிகள் மேலேதான் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள், குர்காவ்னில் சொந்த வீடு, கார், பக்கத்திலேயே குழந்தையைச் சேர்க்க சர்வதேசப் பள்ளி, வேறு என்ன வேண்டும் மனிதனுக்கு?

என்னுடைய கருத்தை அவன் ஏற்கவில்லை, ‘இங்கெல்லாம் எவ்வளவு சம்பாதிச்சாலும் போதாதுப்பா’ என்றவன், அதற்கு ஓர் உதாரணமும் சொன்னான்.

அவனுடைய மகள், ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறாள், அவளுடைய மாதப் பள்ளிக் கட்டணத்தில், நாங்கள் இருவரும் எஞ்சினியரிங் முழுக்கப் படித்து முடித்துவிட்டோம்.

விஷயம் அதில்லை, அந்தச் சிறுமி கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து பள்ளி சென்றால், சக மாணவர்கள், மாணவிகள் கேட்கிறார்களாம், ‘இந்த வெகேஷனுக்கு நீங்க புதுசா எந்த நாட்டுக்குப் போனீங்க?’

ஆறு வயதில் இதுபோன்ற Peer Pressure தொடங்கினால், இது எங்கே போய் முடியும்?

***

என். சொக்கன் …

07 01 2009

எனது ‘கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு’ புத்தகத்தின் அறிமுகம்: பத்ரியின் ‘எண்ணங்கள்’ தளத்திலிருந்து:

கோக-கோலா – பெப்ஸி சண்டைகள், இருவரும் எடுக்கும் வியூகங்கள், விளம்பரப் போர்கள், ‘புது கோக்’, மக்கள் அதை எதிர்த்து சிலிர்த்து எழுவது, கோக-கோலா கையில் இருந்த காசை வீணாக்கி கொலம்பியா பிக்சர்ஸை வாங்குவது, பின் அதை விற்றுவிட்டு மீளுவது என்று கோக-கோலா நிறுவனத்தின் முழு வாழ்க்கையையும் விவரித்துச் செல்கிறது என்.சொக்கன் எழுதியுள்ள இந்தப் புத்தகம்.

லீனியர் கதைகூறல்தான். பெரும் தரிசனங்கள் ஏதும் கிடைக்காது. ஆனால் உலகத் தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் தொடராக கிழக்கு பதிப்பகம் கொண்டுவந்துள்ள இந்தப் புத்தகத்தில் தொழில்முனைவோர் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.

முழுவதும் படிக்க: நா.எ.செ.பு – 2: கோக-கோலா

 

நன்றி: பத்ரி

***

என். சொக்கன் …

06 01 2009

நம் ஊரில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கொஞ்சம்தான். ஆனால் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ இல்லாதவர்கள் ரொம்பக் குறைவு.

இப்போதெல்லாம், எதற்கெடுத்தாலும் புகைப்படம் கேட்கிறார்கள். வங்கிக் கணக்கு, வீட்டுக் கடன், தொலைபேசி, செல்ஃபோன், தண்ணீர், மின்சார, இணைய இணைப்புகள், சமையல் எரிவாயு, சம்பள வரி, ஆயுள், மருத்துவக் காப்பீடு, சந்தை முதலீடுகள், வெளிநாட்டுப் பயணங்கள் என எல்லாவற்றிற்க்கும் புறநானூற்றுத் தமிழன்போல் நெஞ்சு நிமிர்த்திய மார்பளவு புகைப்படத்தை எடுத்துக்கொடுத்து தாவு தீர்கிறது.

தாவுமட்டும் தீர்ந்தால் பரவாயில்லை, புகைப்படமும் தீர்ந்து போகிறது. அதுதான் பெரிய பிரச்னை.

எங்கள் அலுவலகத்தில் பிரபாகர் என்று ஒரு கணக்காளர் இருக்கிறார். அவருக்கு இருபது நாளைக்கு ஒருமுறை போரடித்தால் என்னைத் தொலைபேசியில் அழைத்து, ‘சார், ரெண்டு ஃபோட்டோ வேணுமே’ என்பார்.

‘எதுக்கு ஃபோட்டோ?’ என்று காரணம் கேட்டால், நீளமாக ஏதாவது விளக்கம் சொல்வார். அதற்குப் பயந்து அவர் கேட்கும்போதெல்லாம் ஒரு ஃபோட்டோவை எடுத்து நீட்டிவிடுவேன்.

ஒவ்வொருமுறை பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்கும்போதும், அதன் நெகடிவ் பிரதியை ஞாபகமாகக் கேட்டு வாங்கி வைத்துக்கொள்கிற புண்ணியவான்கள் இருக்கிறார்கள். எனக்கு அத்தனை சமர்த்துப் போதாது.

அப்போதைக்கு, எத்தனை ஃபோட்டோ வேண்டும்? இரண்டா? சரி, இரண்டுக்கு நான்காக எடுத்துக் கொடுத்துவிடுவேன், அதோடு கணக்குத் தீர்ந்தது. அடுத்தமுறை ஃபோட்டோ தேவையென்றால், புதிதாக எடுத்துக்கொண்டால் ஆச்சு.

இப்படி ஒவ்வொருமுறையும் புதுப்புது புகைப்படங்கள் எடுப்பதில் ஒரு பெரிய பி்ரச்னை, நான் கண்டிப்பாக ஃபோட்டோ ஸ்டூடியோவுக்கு நேரில் சென்றாகவேண்டும். ஆஃபீஸ் பையனை அனுப்பிச் சமாளிக்கமுடியாது.

தவிர, ஃபோட்டோ எடுக்கும் தினத்தன்று கண்டிப்பாக ஷேவ் செய்திருக்கவேண்டும். இல்லையென்றால் எட்டு மணி நேர தாடியிலேயே நான் பிறவி தீவிரவாதிபோல் தோற்றமளிப்பேன்.

இப்படிப் பல காரணங்களால், நான் நினைத்த மாத்திரத்தில் புதிய புகைப்படங்கள் எடுக்கமுடியாமல் போகும், அப்போதெல்லாம் வேறு வழியில்லாமல் என் மனைவியின் உதவியை நாடுவேன். அவர் வீட்டையே புரட்டிப்பார்த்து எப்படியாவது ஒன்றிரண்டு புகைப்படங்களைத் தேடி எடுத்துவிடுவார்.

ஆனால், அந்தப் படங்களில் ஒன்று, 2003ல் எடுத்ததாக இருக்கும், இன்னொன்று, 1998 அல்லது 1995ம் ஆண்டுச் சரக்காகத் தோன்றும். இரண்டிலும் இருப்பது ஒரே நபர்தான் என்று நான் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள்.

அந்த இரண்டு புகைப்படங்களையும் திரும்பத் திரும்பப் புரட்டிப் பார்த்தபிறகு நான் பரிதாபமாகக் கேட்பேன்,  ‘ஒரேமாதிரி ரெண்டு ஃபோட்டோ இல்லையா?’

’இது கிடைச்சதே பெரிய விஷயம்’ என்பதுபோல் ஒரு பார்வை பதிலாகக் கிடைக்கும், அதன்பிறகு, ‘வேணும்ன்னா ஒரே ஃபோட்டோவை ரெண்டு ஜெராக்ஸ் எடுத்துக்கோ’

கிண்டலைக் கவனியுங்கள், கலர் ஜெராக்ஸ்கூடக் கிடையாது, வெறும் கறுப்பு வெள்ளை ஜெராக்ஸ், என் மூஞ்சிக்கு அது போதும்!

இந்தக் கேலி ஒருபக்கமிருக்க, இப்படி ஒவ்வொருமுறையும் வீட்டைப் புரட்டிப் போட்டுத் தேடினால் புகைப்படங்கள் கிடைத்துக்கொண்டே இருப்பதற்கு, அது என்ன அமுதசுரபியா? போன வாரத்தில் ஃபோட்டோக்கள் தீர்ந்துவிட்டன. 1994ம் வருடம் நான் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்திற்காக எடுத்த புகைப்படம்வரை சகலத்தையும் பயன்படுத்தியாகிவிட்டது.

‘இன்னொருவாட்டி ஃபோட்டோ கீட்டோன்னு இந்தப் பக்கம் வரவேண்டாம்’ என்று அன்பாக எச்சரித்தார் மனைவி, ‘இனிமேல் நானே உட்கார்ந்து வரைஞ்சாதான் உண்டு.’

அந்த அவஸ்தைக்கு ஆளாகவேண்டாமே என்று ஒரு முடிவெடுத்தேன். இந்தமுறை இரண்டு, நான்கு புகைப்படங்களெல்லாம் போதாது, மொத்தமாக இருபதோ, முப்பதோ பிரதிகள் எடுத்துவைத்துக்கொள்ளலாம். ஏழெட்டு மாதங்களுக்குத் தாங்கும்.

இன்று காலை ஷேவ் செய்ததும், ஸ்டூடியோவைத் தேடிப் புறப்பட்டேன். வீட்டிலிருந்து பன்னிரண்டு நிமிட நடை தூரம்.

அது ஒரு சின்னக் கடைதான். ஆனால் பெயர்ப் பலகையிலேயே ஒரு புதுமை செய்திருந்தார்கள்.

அந்த பெயர்ப் பலகையில் ஒரு கேமெராவின் ஓவியம் (அல்லது, உருவம்) சுமாராக வரையப்பட்டிருந்தது, அதன் ஃப்ளாஷ் பகுதியில் ஒரு சிறிய அலங்கார விளக்கு.

இந்த விளக்கு தொடர்ந்து எரிவதில்லை. மின்னி மின்னி அணையும் வகையைச் சேர்ந்தது. ஆகவே, தூரத்திலிருந்து அந்த பெயர்ப் பலகையைப் பார்க்கும்போது, சாலையில் நடந்து போகிற நம்மீது யாரோ ஃப்ளாஷ் அடித்துப் படம் பிடிப்பதுபோல் தோன்றும்.

புதுமையான இந்தச் சமாசாரத்தை, நான் எப்போதோ கவனித்தது. இப்போது அதை ஞாபகப்படுத்திக்கொண்டு அதே ஸ்டூடியோவைத் தேடிச் சென்றேன்.

பெயர்ப் பலகையிலிருந்த கேமெரா ஃப்ளாஷ் இந்தப் பகல் வேளையிலும் அநாவசியமாக மின்னி அணைந்துகொண்டிருந்தது. அதன் அருகே இருந்த குறுகலான வழியில் புகுந்து, அதைவிடக் குறுகலான படிகளில் ஏறித் திரும்பினால், ஸ்டூடியோ.

உண்மையில், அது ஒரு சிறிய அறைமட்டுமே. அதை முக்கால் – கால் என்று தடுத்து, ஒரு பெரிய மேஜையை அலுவலகமாகவும், மிச்சத்தை ஸ்டூடியோவாகவும் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

’ஸ்டூடியோ’வில் மூன்று குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. அவற்றின் அம்மாவாகத் தோன்றியவர், ‘சும்மா இருங்கடா’ என்று பிள்ளைகளை அதட்டிவிட்டு என்னிடம் வந்தார், ‘என்ன வேணும் சார்?’

‘பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ’

‘எந்த பேக்கேஜ்ன்னு பாருங்க சார்’ என்று என்னிடம் சில அட்டைகளை நீட்டிவிட்டு அவர் மீண்டும் உள்ளே ஓடினார், குழந்தைகளை ஒழுங்குபடுத்தி ஓரமாக உட்காரவைத்துவிட்டு, சுவரோரத் திரைகளை இழுத்துக் காண்பித்து, ‘உங்களுக்கு என்ன பேக்ரவுண்ட் வேணும் சார்? மஞ்சள்? நீலம்? பச்சை? கறுப்பு? வெள்ளை?’ என்றார்.

அந்தக் கேள்வி என்னை வெகுவாகக் கலங்கடித்துவிட்டது, புகைப்படம் என்றால் புகைப்படம்தானே, அதன் பின்னணி நிறம்கூடவா முக்கியம்?

அப்போதைக்கு என் கண்ணில் தோன்றியது பச்சை நிறம், அதையே பின்னணியாக அமைக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

அவர் பச்சை நிறத் திரையை நன்றாக இழுத்துவிட்டார், மற்றவற்றை ஓரமாக விலக்கினார். பெரிய குடை பொருத்திய மஞ்சள் விளக்குகளை மூலைக்கு ஒன்றாக நிறுத்தி ஒழுங்குபடுத்தினார்.

இதற்குள் நான் அவர் கொடுத்த அட்டைகளைப் புரட்டிப் பார்த்து இன்னும் குழம்பியிருந்தேன், 24 பாஸ்போர்ட் சைஸ், 8 ஸ்டாம்ப் சைஸ், 1 போஸ்ட்கார்ட் சைஸ், 16 பாஸ் போர்ட் சைஸ், 20 ஸ்டாம்ப் சைஸ் என்று விதவிதமான கூட்டணிகளில் எது சிறந்தது என்று புரியவில்லை.

நிஜ வாழ்க்கையில் ஸ்டாம்ப், போஸ்ட்கார்ட் சைஸ் ஃபோட்டோக்களெல்லாம் எதற்கேனும் பயன்படுமா? பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன் ஒப்பிடுகையில், இவற்றுக்கு என்ன எண்ணிக்கையில் முக்கியத்துவம் தரலாம்? யோசித்தபோது என்னுடைய குழப்பம் மேலும் அதிகரித்தது.

இந்த வம்பே வேண்டாம், எனக்குச் சகலமும் பாஸ்போர்ட் அளவு ஃபோட்டோக்கள் போதும்.

‘32 ஃபோட்டோ 60 ரூபாய் சார்’ என்றார் அந்தப் பெண்மணி.

பரவாயில்லையே, ரொம்ப மலிவாக இருக்கிறதே என்று யோசித்தபடி சம்மதமாகத் தலையாட்டினேன்.

அவர் அந்தச் சிறிய அறையின் மூலையைக் கை காட்டினார். அங்கே ஓர் ’அரை ஆள் உயரக் கண்ணாடி’, அதன்முன்னால் சீப்பு, பவுடர், மை டப்பா, இன்னபிற மேக்-அப் வஸ்துக்கள்.

என் முகத்துக்கு அலங்காரமெல்லாம் பிரயோஜனப்படாது என்பது தெரியும். இருந்தாலும் அவர்முன்னால் அதைக் காட்டிக்கொள்ளவேண்டாமே என்று லேசாகத் தலை வாருவதுபோல் பாவ்லா செய்தேன், புகைப்படத்துக்குத் தயாராகிவிட்டேன்.

அவர் என்னை மையமாக நிறுத்திவைத்து மேலே, கீழே, வலது, இடது என எல்லாத் திசைகளிலும் தலையைச் சுழற்றவைத்தார். குடை வெளிச்சம் என்மீது படுகிறதா என்று பரிசோதித்தார்.

அதேசமயம் எனக்குக் கைகளை எப்படி வைத்துக்கொள்வது என்று குழப்பம்,  என்னதான் மார்பளவு புகைப்படத்தில் கைகள் தெரியாது என்றாலும், படம் எடுத்து முடிக்கும்வரை அவற்றைப் பிடுங்கி ஓரமாக வீசிவிடவா முடியும்? கைகளைக் கட்டிக்கொள்வதா, பின்னால் வைத்துக்கொள்வதா, பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பதா?

நான் யோசித்து முடிப்பதற்குள், அவர் தனது சிறிய கேமெராவை முடுக்கிவிட்டார். ’க்ளிக்’கிற்குபதில், ‘டொய்ங்’ என்று ஒரு சிறு சப்தம் கேட்டது.

’மன்னிக்கணும் சார், பேட்டரி தீர்ந்துடுச்சு’ என்றவர், நிலைக் கண்ணாடிக்குக் கீழே தாவினார், அங்கே மின்சாரம் ஏறிக்கொண்டிருந்த இரண்டு சிறு ‘செல்’களை எடுத்து கேமெராவுக்குள் போட்டார்.

மறுபடி நான் தலையை மேலே, கீழே, இடம், வலம் சுற்றித் தயாரானேன், அவரும் கேமெராவை இயக்கினார், மீண்டும் அதே ‘டொய்ங்’ சப்தம், கேமெரா அணைந்துவிட்டது.

‘இன்னிக்குக் காலையில இருந்து இந்த ஏரியாவிலே கரன்ட் இல்லை சார்’ என்றார் அவர், ‘அதான் எந்த பேட்டரியும் சார்ஜ் ஆகலை’

‘இப்ப என்ன பண்றது?’

‘ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்ணுங்க சார், அதுக்குள்ள பேட்டரி சார்ஜ் ஆயிடும்’ என்றார் அவர்.

எனக்கு எரிச்சல், காலை நேரத்தில் நான் அலுவலகம் போகவேண்டாமா? இங்கே உட்கார்ந்து தேவுடு காக்கதான் எனக்கு சம்பளம் தருகிறார்களா?

கடும் உழைப்பாளியாகத் தோன்றிய அந்தப் பெண்மணியுடைய அப்பாவி முகத்தின்முன், என்னால் எரிச்சலை வெளிக்காட்டமுடியவில்லை, ‘பக்கத்தில ஒரு சின்ன வேலை இருக்கு, பத்து நிமிஷத்தில வந்துடறேன்’ என்று கிளம்பிவிட்டேன்.

குறுகல் படிகளில் இறங்கும்போது என்னுடைய கோபம் அதிகமாகியிருந்தது, இந்தமாதிரி சின்னக் கடையைத் தேடி வந்தது என்னுடைய தப்பு, கேமெராவை நம்பிப் பிழைக்கிறவர்கள், அதற்குத் தேவையான மின்சாரத்தை ஒழுங்காகச் சேமித்துவைக்கவேண்டாமா? இவர்களெல்லாம் கடை நடத்திவில்லை என்று யார் அழுதார்கள்?

சாலையின் அடுத்த பக்கத்திலேயே ஒரு பெரிய ஸ்டூடியோ இருந்தது, கண்ணாடிக் கதவுகள், ஜிகினாக் கத்தரிப்புகளெல்லாம் போட்டு படுஜோராகப் பளபளத்த அந்தக் கடையில், இதுபோல ’பேட்டரி சார்ஜ் ஆகலை சார்’ பிரச்னையெல்லாம் நிச்சயமாக இருக்காது.

இனிமேல் இதுபோன்ற கடைகளுக்குதான் வரவேண்டும், அநாவசியமாகக் கண்ட கடைகளில் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று நினைத்தபடி உள்ளே நுழைந்தேன், முன்னே உட்கார்ந்திருந்தவர் ‘வாங்க சார்’ என்று புன்னகையோடு வரவேற்றார், ‘என்ன ஃபோட்டோ எடுக்கணும்ங்க?’

‘பாஸ்போர்ட் சைஸ்’

அவர் வண்ண வண்ண அட்டைகளை எடுத்துக் காண்பிக்குமுன் அவசரமாக ‘32 பாஸ்போர்ட்’ என்றேன், ‘எவ்ளோ?’

’ஜஸ்ட் செவன்டி ருபீஸ்’

அந்தக் கடையைவிட பத்து ரூபாய் அதிகம். அதனால் என்ன, நல்ல தரமான சேவைக்கு நூறு ரூபாய்கூடக் கூடுதலாகத் தரலாம்.

இந்தப் புன்னகைக்காரர் உடனடியாகக் கேமெராவைக் கையில் எடுக்கவில்லை, கம்ப்யூட்டரில் பில் அச்சடித்து நீட்டிவிட்டுக் காசு கேட்டார்.

நான் நூறு ரூபாய் கட்டி மீதிச் சில்லறையைப் பெற்றுக்கொண்டேன். அடுத்து என்ன, ஃபோட்டோ எடுக்கவேண்டியதுதானே?

‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார், உள்ளே கஸ்டமர் இருக்காங்க’ என்று கண்ணாடிக் கதவைக் காட்டினார் அவர்.

நான் நம்பிக்கையில்லாமல் எட்டிப் பார்த்தபோது, இந்த ஸ்டூடியோவினுள் பல வசதியான சோஃபாக்கள் இருப்பது தெரிந்தது. ராஜா காலக் கேடயங்கள், ஈட்டிகள், பூ ஜாடி, இன்னும் என்னென்னவோ வைத்திருந்தார்கள். அவர் சொன்ன ‘கஸ்டம’ரைதான் காணோம்.

ஆனால், ஸ்டூடியோ வாசலில் நிறைய செருப்புகள் கிடந்தன. உள்ளே இருப்பவர்கள் வெளியே வந்து அந்தச் செருப்புகளை அணிந்துகொண்டு கிளம்பும்வரை, வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்.

நான் அங்கே மாட்டியிருந்த பல்விதமான புகைப்படங்களை நோட்டமிடத் தொடங்கினேன். கன்னத்தில் கை வைத்த ஒரு வளையல் பெண், போஸ்ட் கார்ட், 4X6, 6X8, 8X10 என்று பல அளவுகளில் ஒரேமாதிரி வெட்கப்பட்டுக்கொண்டிருந்தார், அவருக்குக் கீழே நைந்துபோன ஒரு பாட்டி தாத்தா, புதுமைப்படுத்தப்பட்டுப் புன்னகைத்தார்கள். இன்னொரு சுட்டிப் பையன் பூங்கா, கடற்கரை, பாலைவனம், நிலா ஆகிய நான்கு இடங்களில் ஒரேமாதிரி போஸில் நின்றான்.

நான் அங்கே மாட்டியிருந்த விலைப் பட்டியலைத் தலைகீழ்ப் பாடம் செய்து முடித்தபோது, ஸ்டூடியோவின் கதவு திறந்தது. உள்ளேயிருந்து ஒரு மினி திருவிழாக் கூட்டமே வெளியில் வந்தது, ‘நீங்க போலாம் சார்’

சந்தோஷமாக உள்ளே நுழைந்தேன், கண்ணியமாக உடுத்திய புகைப்படக்காரர் என்னைப் புன்னகைத்து வரவேற்றார்.

அவருடைய கட்டளைகளுக்குப் பணிந்து தலையை இடம், வலம், மேலே, கீழே நகர்த்தியபோது நினைத்துக்கொண்டேன், ’இந்நேரம் எதிர்க் கடையில் பேட்டரி சார்ஜ் ஆகியிருக்கும், எனக்கும் பத்து ரூபாய் மிச்சமாகியிருக்கும்’

***

என். சொக்கன் …

05 01 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,743 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2009
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031