மனம் போன போக்கில்

(ஈ)மெயில் சிநேகம்

Posted on: January 16, 2009

தக்காளி, வெங்காய பிட்ஸா சாப்பிட்டுக் கொண்டாடிய பொங்கலன்று, நண்பர் முகேஷிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.

‘நீங்கள் தற்போது மலேசியாவில் இருக்கிறீர்கள் என்று வாசித்தேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், எங்களுடைய குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடலாமே’

முகேஷின் இந்த மின்னஞ்சலை நான் வாசிக்கும்போது, பொங்கல் தினம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆகவே, நாங்கள் நேரில் சந்திக்கமுடியவில்லை, தொலைபேசியில்மட்டும் பேசினோம்.

திருநெல்வேலியைச் சேர்ந்த முகேஷ், இங்கே சொந்தத் தொழில் செய்கிறார். வலைப்பூக்கள், தமிழ்த் தளங்களை வாசிப்பது பிடித்தமான பொழுதுபோக்கு, ‘எழுதவேண்டும் என்று ஆசை, ஆனால் மனம் ஒன்ற மறுக்கிறது’ என்றார்.

‘மனம் ஒன்றும்வரை காத்திருந்தால் சரிப்படாது, ட்விட்டரிலாவது எழுதத் தொடங்குங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன்.

முகேஷ் என்னைச் சந்திக்கவேண்டும் என்பதில் மிகப் பிடிவாதமாக இருந்தார், என்னுடைய மலேசியப் பதிவுகளில் நான் எழுதிய சில விஷயங்களைப் பொய்யென்று நிரூபிக்க விரும்பினாரோ என்னவோ.

முதலாவதாக, கோலா லம்பூரில் எங்கு பார்த்தாலும் பிரம்மாண்டக் கட்டடங்கள் என்று எழுதியிருந்தேன். அது பிரதான நகரத்தில்மட்டும்தான், இதை உறுதிப்படுத்துவதற்காக, சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவிலிருந்த ‘புத்ர ஜெயா’ என்ற இடத்துக்கு என்னைக் கடத்திச் சென்றார் முகேஷ்.

கிட்டத்தட்ட ஹிந்தி (சமஸ்கிருத?) சினிமா டைட்டில்போல் இருக்கும் ’புத்ர ஜெயா’விலும் ஏகப்பட்ட கட்டடங்கள் உண்டு. ஆனால் அடுக்கிவைத்த தீப்பெட்டிகளைப்போல அருகருகே உயர்ர்ரமாக நிறுத்திவைத்துப் பயமுறுத்தாமல், நன்கு பரவ விட்டிருக்கிறார்கள். ஒரு கட்டடத்துக்கும் இன்னொரு கட்டடத்துக்கும் நல்ல இடைவெளி, நிமிர்ந்து பார்த்தால் காங்க்ரீட் அன்றி, நிஜமான வானம் தெரிகிறது, பிசிறில்லாத தார்ச் சாலைகள், பாம்புகளைப்போல் வளைந்து நெளியும் நவீன போக்குவரத்து சிக்னல்கள், மரங்களைதான் காணோம்.

புத்ர ஜெயாவில் பெரும்பாலும் அரசு அலுவலகங்கள்தான், மத்தியில் ஓர் அழகிய மசூதி, பிரதமர் அலுவலகம், தேசிய, மாநிலக் கொடிகள் ஏற்றப்பட்ட ஒரு பெரிய மைதானம், பக்கத்தில் படியிறங்கிச் சென்றால் ஏரிக்கரைப் பூங்காற்று.

ஒரு கடையில் ஆரஞ்சுப் பழரசம் வாங்கிக் கொண்டோம், ஏராளமான குழல் வடிவப் பனிக்கட்டிகளை நிரப்பிக் கொடுத்தார்கள். பணம் கொடுத்துவிட்டு நிமிர்ந்தால், கவுன்டருக்குப் பின்னால் ‘எங்க்க்கேயோ பார்த்த்த மய்க்க்ம்’ என்று உதித் நாராயண் தமிழைக் கொன்றுகொண்டிருந்தார்.

லேசான சிகரெட் வாடையடிக்கும் ஏரிக்கரைக் காற்றில் பழரசம் குடித்தபடி நிறையப் பேசினோம், மலேசியாவில் யாரெல்லாம் வசிக்கிறார்கள், எங்கே தமிழர்கள் அதிகம், அவர்கள் என்னமாதிரி வேலை பார்க்கிறார்கள், அங்கிருந்து இங்கே வருகிறவர்களுக்கு என்ன மரியாதை, எந்தப் பொருளை எங்கே வாங்கினால் மலிவு, இரு சக்கர வாகனங்கள் நிறையத் தென்படுகிறதே ஏன், பெட்ரோல் விலை அதிகமா, குறைவா, மலாய் பாஷை கற்றுக்கொள்வது எளிதா, இங்கே மருத்துவ சிகிச்சைக்கு ரொம்பச் செலவாகும் என்கிறார்களே, நிஜமா, அக்கம்பக்கத்தில் என்னென்ன நாடுகள், சிங்கப்பூருக்கு ரயிலில் போனால் எவ்வளவு நேரமாகும், குமுதம், விகடனெல்லாம் இங்கே கிடைக்கிறதா … என்னுடைய முடிவில்லாத கேள்விகளுக்கெல்லாம் முகேஷ் ரொம்பப் பொறுமையாக பதில் சொன்னார்.

இதற்குமுன் நான் அவரைச் சந்தித்தது இல்லை, மின்னஞ்சலில்கூடப் பேசியதில்லை, அவராக வலிய வந்து என்னை அழைக்காவிட்டால், நானே சென்று பேச மிகவும் தயங்கியிருப்பேன்.

இதனால்தான், எனக்கு அநேகமாக ‘ரயில் சிநேகம்’ என்பதே இல்லை, ஏதோ இனம் புரியாத தயக்கத்தால், ரயில் ஏறியதும் உச்சி பர்த்தில் ஏறிப் படுத்துவிடுவேன், அங்கே ஒரு புத்தகத்தைப் பிரித்துவைத்துக்கொண்டால் உலகம் மறந்துவிடும்.

என்னிடம் என் மனைவிக்குப் பிடிக்காத, அடிக்கடி கேலி செய்கிற குணம் இதுதான். எனக்கு மனிதர்களைக் கவனிக்கப் பிடிக்கும், ஆனால் புதியவர்களிடம் பேசுவதற்குத் தயக்கம் அதிகம், ஒதுங்கிப் போய்விடுவேன்.

ஆனால் முகேஷிடம் அதுபோன்ற தயக்கங்கள் இல்லை. முதல் சந்திப்பிலேயே நன்கு சகஜமாகப் பேசுகிற தேவ குணம் அவருக்கு வாய்த்திருந்தது.

புத்ர ஜெயாவிலிருந்து நாங்கள் மீண்டும் கோலா லம்பூரினுள் வந்தோம், இந்தியர்கள் நிறைய வாழும் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றார் முகேஷ்.

பிரச்னை என்னவென்றால், அதற்குள் மணி ஒன்பதரையைத் தாண்டிவிட்டது. அநேகமாக எல்லாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. முகேஷுக்கு ரொம்ப வருத்தம்.

‘பரவாயில்லைங்க, நாளன்னிக்கு நான் நிஜ இந்தியாவையே பார்த்துக்கறேன்’ என்றேன நான்.

அப்போதும் அவர் திருப்தியடையவில்லை. சுற்றிச் சுற்றி ஏதேனும் கடைகள் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தோம். ஆங்காங்கே ஒன்றிரண்டு கடைகள் திறந்திருந்தன. ஆனால் அவற்றில் உருப்படியாக வாங்கக்கூடியவை எதுவும் இல்லை. காலியாகக் கிடந்த ஓர் இருட்டுச் சந்தில் திரும்பி வெளியே வந்தால், ‘வில்லு’ பேனரில் விஜய் சிரித்துக்கொண்டிருந்தார்.

கடைசியாக நாங்கள் சென்ற இடம், ஒரு வாரச் சந்தை. வழக்கமாக பேருந்துகள், மற்ற வாகனங்கள் வந்துபோகிற ஓர் இடத்தை, வியாழக்கிழமைகளில்மட்டும் வளைத்துப்போட்டுச் சந்தையாக மாற்றியிருந்தார்கள்.

அந்தச் சந்தைக்குள் நுழைந்துவிட்டால், நாம் இருப்பது மலேசியா என்கிற எண்ணம் மறந்துபோகிறது, சுற்றி எங்கிலும் தமிழ்க் குரல்கள்தான் பலமாகக் கேட்டுக்கொண்டிருந்தன, மிச்சமிருந்த இடங்களில் சீனப் புது வருடத்தைக் கொண்டாடும் பொருள்களின் அணிவகுப்பு.

பஜ்ஜி, போண்டா, பக்கோடாவில் தொடங்கி விதவிதமான உணவுப் பொருள்கள், அழகு சாதனங்கள், காய்கறிகள், பழங்கள், திருட்டு சிடி-கள், துணிமணிகள், குளிர்க் கண்ணாடிகள், காலணிகள், இன்னும் என்னென்னவோ, ஏகப்பட்ட தள்ளுவண்டிக் கடைகளுக்கு நடுவே, போனால் போகிறது என்று மக்கள் வந்து போக இடம் விட்டிருந்தார்கள்.

’பிங்க்’ பிரியையாகிய நங்கைக்காக ஒரு கைப்பை வாங்கிக்கொண்டேன், மிக்கி மவுஸ் பொம்மை போட்ட இரவு உடை ஒன்று சின்னச் செருப்புடன் கிடைத்தது. மற்றபடி உணவு வகைகளை முயன்று பார்க்க எனக்குக் கொடுத்துவைக்கவில்லை.

அதற்குபதிலாக, இரவு முகேஷ் வீட்டில் ஜோரான வெண்பொங்கல், ரவா கேசரி, அவருடைய சுட்டிப் பெண் அமிர்தர்வர்ஷினியுடன் விளையாட்டு என நேரம் போனதே தெரியவில்லை. விமானம் ஏறாமலே இந்தியாவுக்கு ஒரு மினி பிக்னிக் போய் வந்ததுபோல் உற்சாகமாக உணர்ந்தேன்.

நள்ளிரவு கடந்து எனது அறைக்குத் திரும்பியபோது, மனம் லேசாகியிருந்தது. முகம் தெரியாத ஒருவனுக்காக, அரை நாளைச் செலவிடும் அன்பு, அக்கறை மிகுந்த ந(ண்)பர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள், நானும் பழகிக்கொள்ளவேண்டும், இனிமேலாவது!

***

என். சொக்கன் …

16 01 2009

 

*************************

முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்:

மலே மலே மலே மலேசியா

7 Responses to "(ஈ)மெயில் சிநேகம்"

//முகம் தெரியாத ஒருவனுக்காக, அரை நாளைச் செலவிடும் அன்பு, அக்கறை மிகுந்த ந(ண்)பர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள்,//

முகம் தெரியாவிட்டால் என்ன? எழுத்துக்களின் மூலம்,
உங்கள் மனம் தெரிகிறதல்லவா?
உங்கள் மனத்தோடு நாங்கள் பல நாள் பழகியதோழர்கள்!

ஆதித்தன்,

நன்றி!

That’s the power of your writing..

உங்கள் எழுத்துக்கள் எங்களுக்கும் உங்களுக்கும் பல நாள் பழகியது போல ஒரு நட்பை உருவாக்கிவிடுகிறது.

பிறரிடம் புத்தகங்களை recommend செய்யும்போது ‘இது என் நண்பனின் bookகாக்கும்’ என்ற பெருமிதமும் உண்டாகிறது..

நட்பை போல எந்த வித எதிர்பாப்பும் இல்லாத ஒரு relationship…

by the by..did Mukesh started writing or tweeting after that ?

அன்புடன்,
சுவாசிகா
http://swachika.wordpress.com

sir,
mugam theriyaadha enakku, en gaandai neekka, minimum maasam 2 latcham sambalam varum velaiai vaangi thaanga.

pleaseeeeeeeeeeeeeeeee

thanks,
venkatasubramani

மை ஃபிரண்ட், சுவாசிகா, venkat,

நன்றி.

//did Mukesh started writing or tweeting after that ?//

After I left Malaysia, He stopped responding to my mails, Not sure if I said something wrong during our meeting(s) 😦

//minimum maasam 2 latcham sambalam varum velaiai vaangi thaanga//

ஸாரி, ராங் ந(ம்)பர், இந்த பின்னூட்டம் நௌக்ரி டாட் காம் அல்லது மான்ஸ்டர் டாட் காம் முகவரிகளுக்குப் போகவேண்டியது 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,069 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2009
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
%d bloggers like this: