ஜனாதிபதி வருகை
Posted January 31, 2009
on:- In: மொக்கை | Bangalore | Imagination | Uncategorized
- 3 Comments
ஒரு மருத்துவரைப் பார்ப்பதற்காக இன்று அப்போலோவுக்குச் சென்றிருந்தோம்.
வழக்கமாக அப்போலோ ரிசப்ஷனில் பச்சை, நீலம், வெள்ளை யூனிஃபார்ம் வண்ணங்கள்தான் தென்படும். ஆனால் இன்றைக்கு, எங்கு பார்த்தாலும் காக்கிச் சட்டைகள், தொப்பிகள்.
‘என்ன விசேஷம்?’ என்று விசாரித்தபோது, பக்கத்திலிருந்த ஒருவர் விளக்கினார், ‘ஜனாதிபதி வர்றாங்க சார், அதான் பாதுகாப்பெல்லாம் பலமா இருக்கு’
ஜனாதிபதி வருகிறார் என்றால், நிஜமாகவே பெரிய விஷயம்தான். ஆனால், டெல்லியில் இருக்கவேண்டிய அந்த அம்மையார், ஏன் வேலை மெனக்கெட்டு பெங்களூருக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும்?
‘ஏய் மக்கு’ என்று தலையில் குட்டினார் என் மனைவி, ‘ஜனாதிபதி வர்றார்ன்னா? பேஷன்டாதான் வரணுமா? ஏதாவது புது ஆபரேஷன் தியேட்டரைத் திறந்துவைக்க வர்றாங்களோ என்னவோ’
இருக்கலாம். யார் கண்டது? அதற்குமேல் விசாரிக்கப் பொறுமையில்லாமல் எங்கள் மருத்துவரைத் தேடினோம்.
அப்போலோ மொத்தமும் ஜூர வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. டாக்டர்கள் டை கட்டி, சூட் போட்டு கம்பீரமாக நோயாளிகளை வரவேற்றார்கள், மற்ற ஊழியர்களும்கூட மிகப் பிரமாதமாக உடுத்தியிருந்தார்கள். ஆங்காங்கே ரொம்ப உறுத்தாதவிதமான அலங்காரங்கள்கூடத் தென்பட்டன. ஓரமாக ஒரு தாற்காலிக போர்ட், ‘Work In Progress – Sorry For The Inconveniences Due To President’s Visit’ என்று அறிவிப்பதுபோல் பெருமையடித்துக்கொண்டது.
ஆனால், அங்கு வந்திருந்த நோயாளிகள் யாரும் ஜனாதிபதி வருகையால் பரவசமடைந்ததாகத் தெரியவில்லை. அவரைக்காட்டிலும், எல்சிடி தொலைக்காட்சியில் ரன் விளாசும் யுவ்ராஜ் சிங்குக்குதான் மரியாதை கொடி கட்டிப் பறந்தது.
எங்கள் மருத்துவர், பத்தாம் எண் அறையில் இருந்தார். மருத்துவ ஆலோசனைக்கான தொகையை நயா பைசா பாக்கியில்லாமல் எண்ணிக் கீழே வைத்தபிறகு, எங்களை உள்ளே அனுமதித்தார்கள்.
‘ஹலோ டாக்டர்’ என்றபடி நாங்கள் நுழைந்ததும், அவருடைய செல்பேசி ஒலித்தது, ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்ற அவர் நீலப்பல் தொழில்நுட்பத்தில் ஃபோனைத் தொடாமலே பேசத் தொடங்கினார்.
‘நான்தான்ப்பா, என்ன? எல்லாம் முடிஞ்சதா? Gunல்லாம் ரெடியா இருக்குதானே? நான் இதோ வந்து பார்க்கறேன்’
அவர் பேசப் பேச, எனக்கு பகீரென்றது. வெளியில் ஜனாதிபதி வருகைக்காக எல்லோரும் பரபரப்பாக இருக்கிறார்கள், இங்கே இந்த டாக்டர் ’துப்பாக்கி ரெடியா’ என்று விசாரித்துக்கொண்டிருக்கிறார். இதென்ன கலாட்டா?
எனக்குள் பரபரவென்று கற்பனைகள் விரிந்தன. தீவிரவாதிகள் ஜனாதிபதியைத் தாக்கத் திட்டம் போடுகிறார்கள், அதற்கு இந்த டாக்டரைப் பிடித்து ப்ளாக்மெயில் செய்து ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள், பக்கத்து அறையில் ஏகே நாற்பத்தேழோ, ஐம்பத்தொன்பதோ தயாராகிக்கொண்டிருக்கிறது, இப்போது நான் என்ன செய்யவேண்டும்? காவல்துறைக்கு ஃபோன் செய்யவேண்டுமா? அல்லது இங்கே இருக்கிறவர்களிடம் விஷயத்தைச் சொல்லலாமா? ஒருவேளை அவர்களும் இந்தச் சதியில் உடந்தையாக இருந்து என்னைப் பிடித்து ஓர் இருட்டு அறையில் அடைத்துவிட்டால்? செல்ஃபோனிலிருந்து அவசர போலீசை அழைக்க வெறும் ‘100’ போதுமா அல்லது ‘080’ சேர்க்கவேண்டுமா? நான் அவர்களை அழைத்து இந்த விஷயத்தைச் சொன்னாலும், உடனடி நடவடிக்கை எடுப்பார்களா? நேரம் போதுமா? இந்தச் சதித் திட்டத்திலிருந்து மேன்மைதகு திருமதி பிரதீபா பாடில் தப்பித்துவிடுவாரா? எப்படி?
அந்தச் சில நிமிடங்களுக்குள் ஜெஃப்ரி ஆர்ச்சர் ரேஞ்சுக்கு ஒரு முழு நீள நாவலே மனத்துக்குள் எழுதிப் பார்த்துவிட்டேன். ஒரு கத்துக்குட்டித் துப்பறிவாளனுக்குரிய லாவகத்துடன், டாக்டர் தொடர்ந்து பேசுவதைக் கவனிக்காததுபோல் ஓரக் காதால் கூர்ந்து கேட்டேன்.
அப்போதுதான், எனக்கு விஷயம் புரிந்தது. இது க்ரைம் நாவல் இல்லை, குமுதம் ஒரு பக்கக் கதை.
டாக்டர் சொன்ன ‘Gun’ காது குத்துவதற்கான கருவியாம். பக்கத்து அறையில் யாரோ ஒரு குழந்தைக்குக் காது குத்துவதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார் டாக்டர். அதை அரைகுறையாகக் கேட்டு நான் ஜேம்ஸ் பாண்ட் கனவுகளை வளர்த்துக்கொண்டுவிட்டேன்.
போகட்டும், நான் துப்பறிவாளனாக இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்காமலா போய்விடும்!
***
என். சொக்கன் …
31 01 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
1 | இலவசக்கொத்தனார்
January 31, 2009 at 9:08 pm
அடப்பாவி! இப்படி ஒரு சப்பை மேட்டர் கதை எழுதுனதுக்குக் கன்னாபின்னான்னு திட்டி இருப்பேன். ஆனா நீரே குமுதம் ரேஞ்ச் கதை அப்படின்னு திட்டிக்கிட்ட பின்னாடி நான் என்ன சொல்ல்! 🙂