Archive for May 2009
ஆர்ச்சர்
Posted May 23, 2009
on:- In: Bangalore | Books | Customer Care | Customer Service | English | Events | Fans | Fiction | Humor | Language | Marketing | Pulp Fiction | Rain | Reading | Uncategorized | Visit
- 20 Comments
சென்னையில் தொடங்கிய ஜெஃப்ரி ஆர்ச்சரின் இந்திய விஜயம் (Jeffrey Archer Tour), பெங்களூரில் நிறைவடைந்தது.
கடந்த ஒரு வருடத்துக்குள் ஆர்ச்சர் இரண்டுமுறை இந்தியாவின் முக்கிய நகரங்களைச் சுற்றிவருகிறார் என்றால், அதற்குக் காரணம் இருக்கிறது. உலக அளவில் அவருடைய புத்தகங்கள் மிக அதிகமாக விற்பனையாகிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
’இது ஏதோ இன்றைக்கு நேற்றைக்கு ஏற்பட்ட பந்தம் இல்லை’ என்று ஆர்ச்சரே குறிப்பிட்டார், ‘என்னுடைய முதல் புத்தகம் (Not A Penny More, Not A Penny Less) சில ஆயிரம் பிரதிகள்தான் அச்சிடப்பட்டது. அன்றைக்கு என்னுடைய பெயரே யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் அப்போதே இந்தியாவில் அந்த நாவல் 117 பிரதிகள் விற்றது!’ என்றார்.
இப்போதும், ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகமான ‘Paths Of Glory’யை பிரபலப்படுத்துவதற்காகதான் இந்தச் சுற்றுப்பயணம். கூடவே கொசுறாக, அடுத்து வெளியாகவிருக்கும் தன்னுடைய ‘Kane and Abel’ நாவலின் புதிய வடிவத்தையும் விளம்பரப்படுத்திவிட்டுச் சென்றார் அவர்.
ஆனால், பெங்களூரில் ஜெஃப்ரி ஆர்ச்சர் கலந்துகொண்ட புத்தக அறிமுக நிகழ்ச்சி(மே 18)யில் அதிகபட்சக் கைதட்டல், வேறொரு ‘பழைய’ நூலுக்குதான் கிடைத்தது. ‘A Twist In The Tale’ சிறுகதைத் தொகுப்பின் கன்னட வடிவம் அது!
‘என்னுடைய புத்தகங்கள் இப்போது கன்னடம் உள்பட ஆறு இந்திய மொழிகளில் கிடைக்கின்றன’ என்று ஆர்ச்சர் அறிவித்தபோது, அநேகமாக பார்வையாளர்கள் எல்லோரும் நம்பமுடியாமல் வாயைப் பிளந்தார்கள். ’சும்மா காமெடி பண்றார்’ என்று எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த பெண்மணி தன் மகளிடம் கிசுகிசுத்தார்.
ஆனால், அன்றைய நிகழ்ச்சியிலேயே, ‘A Twist In The Tale’ கன்னட வடிவம் விற்பனைக்குக் கிடைத்தது. தமிழ் மொழிபெயர்ப்பும் எங்கேயாவது வைத்திருக்கிறார்களா என்று நப்பாசையோடு தேடிப் பார்த்தேன், ம்ஹூம், இல்லை.
வழக்கம்போல், ஜெஃப்ரி ஆர்ச்சரின் பேச்சு அபாரமாக இருந்தது. அவரது அதிரடிப் பரபரப்பு நாவல்களை வாசித்து ரசித்தவர்கள்கூட, இப்படி விழுந்து விழுந்து சிரிக்கும்படியான ஒரு பேச்சை அவரிடம் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
உண்மையில், அதைப் பேச்சு என்று சொல்வதுகூடத் தவறு, ஒரு சின்ன ‘One Man Show’ / ஓரங்க நாடகம்போல் நடித்துக் காட்டினார் – ஏற்ற இறக்கங்கள், சரியான இடங்களில் Pause கொடுத்து, சஸ்பென்ஸ் வைத்துப் பின் பேச்சைத் தொடரும் உத்தி, நகைச்சுவை, சுய எள்ளல், எல்லோரையும் வம்புக்கிழுப்பது, காலை வாரிவிடுவது, உடல் மொழி சேஷ்டைகள், கொனஷ்டைகள், பல குரல் மிமிக்ரி – வெறும் Story Teller-ஆக இல்லாமல், தான் ஒரு முழுமையான entertainer என்பதை மீண்டும் நிரூபித்தார் ஆர்ச்சர். தனது எழுத்து வளர்ச்சியைப் படிப்படியாக அவரே நடித்துக் காட்டியது பார்க்கப் பிரமாதமாக இருந்தது.
ஆனால் ஒன்று, ஆறு மாதங்களுக்கு முன்னால் அவருடைய பெங்களூர் நிகழ்ச்சிக்குச் சென்ற என்னைப்போன்றவர்களுக்குதான் ஒரு சின்ன ஏமாற்றம். தன்னுடைய ஆரம்ப காலப் புத்தக வெளீயீட்டு முயற்சிகள், Kane and Abel நாவலைப் Promotion செய்வதில் இருந்த பிரச்னைகள்பற்றியெல்லாம் அன்றைக்குப் பேசியதையே அச்சு அசல் ஒரு வார்த்தை, ஒரு வசனம், ஒரு வர்ணனை மாறாமல் மறுபடியும் பேசிக்கொண்டிருந்தார், புது விஷயங்கள் மிகக் குறைச்சல்!
பத்ரியின் இந்தப் பதிவிலிருந்து, சென்னையிலும் ஆர்ச்சர் இதையேதான் பேசினார் என்று அறிகிறேன், மற்ற நகரங்களிலும் அப்படிதானா என்பது தெரியவில்லை.
பெங்களூரில் ஆர்ச்சர் விழா நடைபெற்ற தினத்தன்று பெரிய மழை. குடை பிடித்துக்கொண்டுகூடத் தெருவில் நடக்கமுடியவில்லை.
ஆனாலும், விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. சொட்டச்சொட்ட நனைந்தபடி போய்ச் சேர்ந்த எனக்கு ஓரமாக நிற்கமட்டுமே இடம் கிடைத்தது.
சற்றே தாமதமாக வந்து சேர்ந்த ஆர்ச்சர், மேடை ஏறிய கையோடு (காலோடு?) இந்நகரத்தின் போக்குவரத்து நெரிசலைச் செமையாகக் கிண்டலடித்தார், ‘மன்மோகன் சிங்கின் புதிய அமைச்சரவையில் போக்குவரத்துத் துறையை என்னிடம் ஒப்படைத்தால்தான், இந்தப் பிரச்னையெல்லாம் சரியாகும் என்று நினைக்கிறேன்’ என்றார்.
அடுத்தபடியாக, ‘நான் சமாஜ்வாதிக் கட்சியில் சேரப்போகிறேன்’ என்று அறிவித்தார். ஒரு சின்ன சஸ்பென்ஸ் கொடுத்து, ‘ஏனெனில், அவர்கள்தான் கம்ப்யூட்டரைத் தடை செய்யப்போகிறார்களாம், எனக்கும் கம்ப்யூட்டர் என்றால் ஆகாது, என்னுடைய ஒவ்வொரு நாவலையும், ஒவ்வொரு வடிவத்தையும் நான் கைப்பட எழுதுகிறேன்’ என்றார்.
இதில் ஆச்சர்யமான விஷயம், சொந்தமாக வலைப்பதிவு வைத்திருந்தாலும், ஜெஃப்ரி ஆர்ச்சர் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது இல்லை. அவர் காகிதத்தில் எழுதித் தருவதைதான் மற்றவர்கள் டைப் செய்து அவருடைய வலைப்பதிவில் இடுகிறார்கள். அநேகமாக உலகிலேயே பேனா கொண்டு வலைப்பதிவு எழுதும் ஒரே ஆள் ஆர்ச்சராகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அது சரி, சமாஜ்வாதிக் கட்சி கம்ப்யூட்டரைமட்டுமா தடை செய்யப்போகிறது? ’ஆங்கிலப் புத்தகங்களையும் இந்த நாட்டில் நுழையவிடமாட்டோம்’ என்று சொல்கிறார்களே.
அதற்கும் ஆர்ச்சரே பதில் சொன்னார், ‘அவர்கள் என் ஆங்கிலப் புத்தகத்தைத் தடை செய்தால் என்ன? இப்போதுதான் நான் இந்திய எழுத்தாளனாகிவிட்டேனே, என்னுடைய தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடப் புத்தகங்களை மக்கள் வாங்கிப் படிக்கட்டும்’
அங்கே தொடங்கிய கைதட்டல், விசில், கூச்சல் ஒலி அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஓயவில்லை. அரசியல் கூட்டத்தில் உட்கார்ந்திருப்பதுபோல் இருந்தது.
ஆர்ச்சரின் எழுத்து போலவே, அவருடைய ஆங்கிலப் பேச்சும் எளிமையாக, தெளிவாக, புரிந்துகொள்ளச் சுலபமாக இருக்கிறது. எழுத்து, சினிமா, விளையாட்டு (கிரிக்கெட்) என்று ஆர்ச்சர் எதைப்பற்றிப் பேசினாலும் சுவாரஸ்யம் குறையவில்லை. ரசிகர்களின் கேள்விகளுக்கும் அதே உற்சாகத்துடன் பதில் அளித்தார்.
ஒரே பிரச்னை, அவருக்குப் புகைப்படம் எடுக்கிறவர்களைப் பிடிப்பதில்லை, ‘ஒவ்வொரு ஃப்ளாஷ் வெளிச்சமும் என் பேச்சு / சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்கிறது’ என்று அலுத்துக்கொண்டார்.
விழா தொடங்குவதற்குமுன்பிருந்தே, ஆர்ச்சரிடம் புத்தகங்களில் கையெழுத்து வாங்குவதற்காக ஒரு நீண்ட வரிசை நின்றிருந்தது. அதில் 75% இளம் பெண்கள், கண் சிமிட்டாமல் மேடையைப் பார்த்தபடி கால் கடுக்க நின்றுகொண்டிருந்தார்கள் – கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து, அறிமுக நிகழ்ச்சி முடிந்து அவர் கையெழுத்துப் போடத் தொடங்கும்வரை ஒருவர்கூட அந்தப் பக்கம், இந்தப் பக்கம் நகரவில்லை. க்யூ நீண்டுகொண்டிருந்ததேதவிர, கொஞ்சம்கூடக் குறையவில்லை.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த Landmark நிறுவனத்தைப்பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அன்றைக்கு அந்தக் கடையில் எங்கே பார்த்தாலும் ஆர்ச்சர்தான் தென்பட்டார், அவருடைய புத்தகங்களையே செங்கல் செங்கலாக அடுக்கி எல்லாத் திசைகளிலும் சுவர் எழுப்பியிருந்தார்கள். அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள் கொஞ்சம் எழுந்து நின்றால் அப்படியே ஒரு நாவலைக் கையில் எடுத்துப் புரட்டலாம், உட்கார்ந்து ஒரு பக்கமோ, ஓர் அத்தியாயமோ படிக்கலாம், பிடித்திருந்தால் உடனடியாகக் காசோ, கடன் அட்டையோ கொடுத்து அங்கேயே அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொள்ளலாம், பணம் செலுத்துமிடம் எங்கே என்று தேடி அலையவேண்டியதில்லை, அங்கே போய் வரும்வரை நம்முடைய நாற்காலி பத்திரமாக இருக்குமா, அல்லது வேறு யாராவது அபேஸ் செய்துவிடுவார்களா என்று பயப்படவேண்டியதில்லை.
இதை ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், சமீபத்தில் ‘Paco Underhill’ எழுதிய ‘Why We Buy: Science Of Shopping’ என்கிற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். சிறிய, நடுத்தரக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், உணவகங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், புத்தக, இசை விற்பனைக் கடைகள் போன்ற பல Retail தலங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, ஒரு வாடிக்கையாளர் ஏன் ஒரு பொருளை வாங்குகிறார், ஏன் வாங்குவதில்லை, அவரை அதிகம் வாங்கச் செய்யவேண்டுமென்றால் அதற்குக் கடைக்காரர்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது, அதில் அவர்கள் எப்படிச் சொதப்புகிறார்கள் என்று பல விஷயங்களை போரடிக்காத மொழியில் மிகச் சுவாரஸ்யமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பல Retail நுணுக்கங்களை Landmark மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இது ஜெஃப்ரி ஆர்ச்சர் விழாவில்மட்டுமில்லை, பல மாதங்களாக அவர்களுடைய கடை அமைப்பு, விற்பனைமுறை, விளம்பர / Presentment உத்திகள், வாடிக்கையாளர் சேவை போன்றவற்றைக் கவனித்த அடிப்படையில் சொல்கிறேன்.
‘Why We Buy’ புத்தகத்தைப்பற்றி உதாரணங்களுடன் தனியே எழுதவேண்டும். இன்னொரு சந்தர்ப்பத்தில் நேரம் இருந்தால் பார்க்கலாம், இப்போதைக்கு, அன்றைய விழாவிலும், ஆறு மாதங்களுக்கு முன்னால் நடைபெற்ற இன்னொரு புத்தக அறிமுக விழாவிலும், புதிதாக எழுதுகிறவர்களுக்கு ஜெஃப்ரி ஆர்ச்சர் குறிப்பிட்ட சில முக்கியமான ஆலோசனைகளைமட்டும் தொகுத்துச் சொல்லி முடித்துக்கொள்கிறேன். (முழுவதும் நினைவில் இருந்து எழுதியது, சில தகவல் பிழைகள் இருக்கலாம், ஆனால் புதிதாக எதையும் நான் ‘நுழைக்க’வில்லை)
- ஒருகட்டத்தில், எனக்கு உருப்படியாக வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, வேறு வழியில்லாமல்தான் எழுதத் தொடங்கினேன்
- என்னுடைய முதல் புத்தகத்தை, எல்லோரும் ‘உடனடி ஹிட்’ என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. மொத்தம் பதினாறு பதிப்பாளர்கள் அந்த நாவலைத் ‘தேறாது’ என்று நிராகரித்துவிட்டார்கள். அதன்பிறகுதான், ஒரு பதிப்பகம் என்னை நம்பிப் புத்தகத்தை வெளியிட்டது, அதுவும் 3000 பிரதிகள்மட்டும்
- பின்னர், அடுத்த பதிப்பில் இருபத்தைந்தாயிரம் பிரதிகள் குறைந்த விலையில் வெளியிட்டார்கள். அத்தனையும் ஒரே மாதத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டது. இன்றுவரை, அந்தப் புத்தகம் கோடிக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறது!
- இந்த வெற்றிக்குக் காரணம், திரும்பத் திரும்ப எழுதுவது. என்னுடைய ஒவ்வொரு நாவலையும், குறைந்தபட்சம் பத்துமுறையாவது மாற்றி எழுதுகிறேன், ஒவ்வொருமுறையும் வேகத்தை, விறுவிறுப்பை, சுவாரஸ்யத்தைக் கூட்டினால்தான், ஜெட் வேகத்தில் பறக்கும், வாசகர்களை விரும்பி வாங்கவைக்கும் ரகசியம் இதுதான்
- பலர் என்னிடம், ‘நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்’ என்று சொல்கிறார்கள், அதன் அர்த்தம், அவர்கள் முதல் வடிவம் (டிராஃப்ட்) எழுதியிருக்கிறார்கள் என்பதுதான், அதன்பிறகுதான் ஏகப்பட்ட வேலை இருக்கிறது
- ஆயிரம் Manuscriptsல் ஒன்றுதான் பதிப்பாளர்களால் ஏற்கப்பட்டு அச்சாகிறது, அப்படி அச்சாகும் ஆயிரம் புத்தகங்களில் ஒன்றுதான் நன்கு விற்பனையாகிறது. ஆக, நம் வெற்றிக்கான சாத்தியம் One In A Million – இதை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருந்தால், அசட்டையாக எழுதமாட்டோம், ஒவ்வொரு வரியையும் மெருகேற்றி ஒழுங்குபடுத்துவோம்
- என்னதான் நம்முடைய எழுத்தானாலும், அது சரியில்லை என்று தெரிந்தபிறகும், அதைக் கட்டி அழுதுகொண்டிருக்கக்கூடாது, குப்பையில் வீசிவிட்டுத் திரும்ப எழுதவேண்டும்
- நாவல் எழுதும்போதெல்லாம், அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்துவிடுவேன். அதன்பிறகு, 6 முதல் 8, 10 முதல் 12, மதியம் 2 முதல் 4, 6 முதல் 8 என, இரண்டு மணி நேரம் எழுத்து, இரண்டு மணி நேரம் ஓய்வு. இப்படியே சுமார் ஐம்பது நாள் உழைத்தபிறகுதான், என்னுடைய நாவலின் முதல் வடிவம் தயாராகிறது
- என்னுடைய நாவலில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்துக்குப் பிரச்னை வந்தால், அதை எப்படி அவிழ்ப்பது என்று யோசிப்பேன், பிரச்னையை இருமடங்காக்கி அழகு பார்ப்பேன், அப்போதுதான், சிக்கலில் இருந்து கதை எப்படி விடுபடும் என்று வாசகன் ஆவலோடு எதிர்பார்ப்பான், அப்படி விடுபடும்போது மிகப் பெரிய திருப்தி அடைவான்
- எனக்கு ’ரைட்டர்ஸ் ப்ளாக்’ எனப்படும் மனத்தடை வந்ததே இல்லை, என்னுடைய அடுத்த மூன்று புத்தகங்கள் என்ன என்பது எனக்கு இப்போதே தெரியும், இயல்பாக என்னிடம் இருந்து கதைகள் வந்து கொட்டுகின்றன, நான் ஒரு ‘பிறவி கதைசொல்லி’ என்று நினைக்கிறேன், கடவுளுக்கு நன்றி!
- எதை எதை எழுதலாம் என்று நான் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன், புது யோசனைகள் தோன்றும்போது அதில் சேர்த்துக்கொள்வேன், அது சிறுகதையா, நாவலா என்று உடனே தோன்றிவிடும் – எக்காரணம் கொண்டும் நான் ஒரு சிறுகதையை நாவலாக இழுக்கமாட்டேன்
- நாவலுக்கும் சிறுகதைக்கும் என்ன வித்தியாசம்? கடைசி வரியை நோக்கி நகர்வது சிறுகதை, ஆனால் நாவல் அப்படி இல்லை, முதல் பாதி எழுதும்போது அடுத்து என்ன நடக்கும் என்பதுகூட எனக்குத் தெரியாது
- நான் ஒரு கதைசொல்லிமட்டுமே, இதைத்தவிர வேறு எதுவும் செய்வதாக இல்லை, Non Fiction, Autobiographyயெல்லாம் எழுதுகிற யோசனை இல்லை
- இந்தியாவுக்கு இது என்னுடைய ஐந்தாவது பயணம், சென்றமுறை இங்கே வரத் திட்டமிட்டபோது, இந்த ஊர் எழுத்தாளர்கள் யாரையேனும் வாசிக்க விரும்பினேன், நண்பர்களிடம் ஆலோசனை கேட்டேன், ‘ஆர் கே நாராயண்’ என்று சிபாரிசு செய்தார்கள். அவருடைய புத்தகங்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்தேன், பிரமாதமான எழுத்தாளர், அவரைப்போல் எளிய மொழியில் அற்புதமான அனுபவங்களை எழுதுவது, சுவாரஸ்யமாகச் சொல்லிப் படிக்கவைப்பது மிகச் சிரமமான வேலை – அவருக்கு நீங்கள் ஒரு சிலை வைக்கவில்லையே என்பதுதான் எனக்கு வருத்த(?)மாக இருக்கிறது
- இதேபோல் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பும் சில எழுத்தாளர்கள்: சகி, ஓ ஹென்றி மற்றும் மாப்பஸான்
- ட்வென்டி ட்வென்டி என்பது, கிரிக்கெட் அல்ல, அது வெறும் பொழுதுபோக்கு – Load Of Rubbish – விவிஎஸ் லஷ்மணும் ராகுல் திராவிடும் கொல்கத்தாவில் இரண்டு நாள் கஷ்டப்பட்டு ஒரு போட்டியை ஆஸ்திரேலியாவின் கைகளில் இருந்து பிடுங்கி இந்தியாவுக்குக் கொடுத்தார்களே, அதுதான் நிஜமான கிரிக்கெட், மற்றதெல்லாம் சும்மா பம்மாத்து!
- சச்சின் டெண்டுல்கர் எனக்குப் பிடிக்கும், சிறந்த வீரராகமட்டுமில்லை, இந்தியாவின் கலாசாரத் தூதுவராக அவரை மதிக்கிறேன்
- நான் ஓர் எளிய மனிதன், கடினமாக உழைத்து, படிப்படியாக முன்னுக்கு வந்தவன், இதேபோல் என்னுடைய கதை நாயகர்களும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறார்கள், முன்னேறுகிறார்கள், அது ரசிகர்களுக்குப் பிடிக்கிறது, தாங்களும் இப்படி வளரமுடியும் என்று நம்பிக்கை கொள்கிறார்கள், அந்தத் திருப்தியே எனக்குப் போதும்!
***
என். சொக்கன் …
23 05 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
மூடு மந்திரம்
Posted May 22, 2009
on:- In: Change | Creativity | Crisis Management | Fear | Forget It | God | Learning | Life | Music | Reading | Religion | Technology | Uncategorized
- 18 Comments
ஏழாங்கிளாஸோ, எட்டாங்கிளாஸோ படிக்கும்போது எதேச்சையாகத் தொடங்கிய பழக்கம், இன்றுவரை தொடர்ந்துவருகிறது – குளிக்கும்போது கந்தர் சஷ்டி கவசம் சொல்வது.
இதற்கான காரணம், அந்தக் கந்தர் சஷ்டி கவசத்திலேயே இருக்கிறது – ’ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேசமுடனொரு நினைவதுவாகிக் கந்தர் சஷ்டிக் கவசம் இதனை சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் …’ என்று தொடர்வதை நான் கொஞ்சம் லேசாக வளைத்து, ‘ஆசாரத்துடன் அங்கம் துலக்கியபடி’ என்று மாற்றிக்கொண்டுவிட்டேன்.
இன்னொரு காரணமும் உண்டு. குளித்து முடித்துவிட்டு உம்மாச்சி முன்னால் நின்று கந்தர் சஷ்டி கவசம் படிக்கவேண்டுமென்றால், அதற்குக் கொஞ்ச நேரம் செலவாகும். பள்ளி / கல்லூரி / அலுவலகம் போகிற பதற்றத்தில் அவசரமாகப் படிப்பேன், வேண்டுமென்றோ, அல்லது தெரியாமலோ சில வரிகளைத் தவறவிடுவேன், அதெல்லாம் சாமி குத்தமாகிவிடாதா?
அதற்குப் பதிலாக அந்தக் குளிக்கும் நேரம் வீணாகதானே போகிறது, அப்போது நிதானமாகக் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லிக்கொண்டால் ஆச்சு, ‘பரவாயில்லை, பையன் நன்றாக Time Management செய்கிறான்’ என்று உம்மாச்சியும் என்னை அங்கீகரித்துவிடுவார்.
இதில் ஒரு பெரிய சவுகர்யம், கந்தர் சஷ்டி கவசம் மிக எளிமையானது, சிரமமில்லாமல் பாடக்கூடிய மெட்டு, பல்லை உடைக்காத, சுலபமாகப் புரிந்துகொள்ளமுடிகிற தமிழ் வார்த்தைகள். நடுவில் சில வரிகள் மறந்துவிட்டாலும், மெட்டின் உதவியுடன் அர்த்தத்தை நினைவில் வைத்துக்கொண்டு பாட்டைப் பிடித்துவிடலாம் – சுமாரான ஞாபக சக்தி கொண்டவர்களுக்குக்கூட, பத்து நாள் பயிற்சியிலேயே மொத்தமும் தலைகீழ்ப் பாடமாகிவிடும்.
இதனால், குளிக்கும்போது கந்தர் சஷ்டி கவசம் சொல்வதில் எனக்கு எந்தப் பிரச்னையும் தெரியவில்லை. சுமார் ஏழு முதல் எட்டு நிமிடங்களுக்குள் சொல்லி முடித்துவிடுகிற இந்தக் கவசம், என்னுடைய குளிக்கும் நேரத்துக்கும் கச்சிதமாகப் பொருந்திப்போனது.
பள்ளியில் படித்துக்கொண்டிருந்தவரை, தண்ணீர் பைப் சத்தத்துக்குமேல் உரக்கக் கத்திக் கவசம் சொல்வேன். ஆனால் கல்லூரி விடுதிக்குச் சென்றதும், மற்றவர்களுக்குக் கேட்டுவிடுமோ, அவர்கள் கேலி செய்வார்களோ என்கிற கூச்சம். குரலை நிறையத் தணித்து, எனக்குமட்டும் கேட்கும்படி கிசுகிசுப்பான ‘ஹஸ்கி’ வாய்ஸில் ‘துதிப்போர்க்கு வல்வினைபோம்’ என்று தொடங்கி மளமளவென்று முடித்துவிடத் தொடங்கினேன். இன்றுவரை, ஒரு நாள்கூட இந்தப் பழக்கத்தைத் தவறவிட்டது கிடையாது.
ஆனால், சமீப காலமாக, இதில் ஒரு பெரிய பிரச்னை.
நான் அதிகம் தொலைக்காட்சி பார்ப்பது கிடையாது. காலை நேரத்தில் சில செய்தித் துணுக்குகளோ, விருந்தினர் பேட்டியோ, யோகாசனமோ, சுய முன்னேற்றத் தத்துவங்களோ, பழைய பாட்டுகளோ அதுவாகக் காதில் விழுந்தால்தான் உண்டு.
அந்தப் பழைய பாட்டுகள், அங்கேதான் பிரச்னை.
கறுப்பு வெள்ளை காலத்தில் மெட்டுகளுக்குதான் முதல் மரியாதை. எளிய வாத்திய அமைப்புகளை வைத்துக்கொண்டு, கேட்கிறவர்கள் சுலபமாகத் திரும்பப் பாடும்படியான அற்புத கீதங்களை உருவாக்கினார்கள்.
இதனால், இந்தப் பாடல்களை ஒருமுறை கேட்டாலே போதும், வரிகள் நினைவில் இல்லாவிட்டாலும் அந்த மெட்டு மனத்துக்குள் உருள ஆரம்பித்துவிடும்.
என் தலைவலி என்னவென்றால், பல்வேறு தொலைக்காட்சிகளில் ‘தேன் கிண்ணம்’, ‘அமுத கானம்’, ‘தேனும் பாலும்’ போன்ற பெயர்களைக் கொண்ட இந்தப் பழைய பாட்டு நிகழ்ச்சிகள் எல்லாமே, காலை எட்டரை முதல் ஒன்பதரைக்குள்தான் ஒளிபரப்பாகின்றன. அதுதான் என்னுடைய ‘குளிக்கும் நேரம்’.
இதனால், குளியலறைக்குள் நுழைவதற்குச் சற்று முன்பாக, ஏதேனும் ஒரு பழைய பாட்டு என் காதில் விழுகிறது. அப்புறம் உள்ளே நுழைந்த மறு நிமிடம், கந்தர் சஷ்டி கவசத்துக்குத் தாவுவது என்றால், முடியுமா?
உதாரணமாக, இன்று காலை நான் குளிக்கக் கிளம்பியபோது, கலைஞர் டிவியில் எல். ஆர். ஈஸ்வரி ‘காதோடுதான் நான் பேசுவேன்’ என்று குழைந்துகொண்டிருந்தார். இதனால், கந்தர் சஷ்டி கவசமும் அதே மெட்டில்தான் எனக்குப் பாட வருகிறது, பழைய மெட்டுக்குப் பழகிய வரிகள் இதனால் மறந்துபோகிறது.
இப்படி ஒரு நாள், இரண்டு நாள் இல்லை, இதுவரை சற்றேறக்குறைய நூற்றைம்பது பழைய பாட்டு மெட்டுகளில் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாட முயன்று தோற்றுப்போயிருக்கிறேன். என்னதான் கஷ்டப்பட்டு முயற்சி செய்து இருக்கிற சொற்ப மூளையைப் பழைய மெட்டுக்கு இழுத்துப் பார்த்தாலும், பலன் இல்லை.
சினிமாப் பாட்டில் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாடுவது ஒன்றும் கொலைக் குற்றம் இல்லை. ஆனால், மெட்டு மாறுவதால் எனக்கு வரிகள் விட்டுப்போகிறது, கவனத்தைச் செலுத்தி ஒழுங்காகக் கவசம் சொல்லமுடியவில்லையே என்று குற்றவுணர்ச்சியாக இருக்கிறது.
இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு? குளிக்கச் செல்வதற்கு பத்து நிமிடம் முன்னதாக டிவியை அணைத்துவிடலாமா? என்னுடைய ‘ஊர் சுற்றும்’ மனத்தின் பிரச்னைக்காக, வீட்டில் உள்ள மற்றவர்களின் ரசனையை, பொழுதுபோக்கைக் கெடுப்பது நியாயமில்லையே?
தவிர, Distraction என்பது தொலைக்காட்சி வழியேதான் வரவேண்டுமா? பக்கத்து வீட்டில் ரேடியோ அலறினால்? ஒருவேளை நான் குளிக்கச் செல்வதற்குச் சில விநாடி முன்னால் என் செல்பேசி ‘இளமை எனும் பூங்காற்று’ பாட்டுக்கு முன் வருகிற மெல்லிசையில் அழைத்தால்? அல்லது என் மனைவியின் செல்பேசி ‘மனம் விரும்புதே உன்னை, உன்னை’ என்று ஹரிணி குரலில் கூவினால்? அந்த மெட்டுகளெல்லாம் கந்தர் சஷ்டி கவசத்தின்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு துன்புறுத்துமே!
ஆக, நான் கண்ணையோ, காதையோ மூடிக்கொள்வதால் இந்தப் பிரச்னையைத் தீர்க்கமுடியாது. வேறு ஏதாவது ஒரு வழியை யோசிக்கவேண்டும், மெட்டு மாறினாலும் கந்தர் சஷ்டி கவசத்தின் வரிகளைத் தவறவிடாதபடி ஓர் உத்தியை அமல்படுத்தவேண்டும்.
பேசாமல், கந்தர் சஷ்டி கவசக் கையடக்கப் புத்தகம் ஒன்றைக் குளியலறையினுள் கொண்டுசென்றுவிட்டால் என்ன? அதைப் பார்த்துப் படித்தால் வரிகளை மறக்கவோ, தவறவிடவோ வாய்ப்பில்லையே!
செய்யலாம். ஆனால், குளித்துக்கொண்டே புத்தகத்தைப் புரட்டுவது எப்படி? ஒரே நாளில் மொத்தமும் நனைந்து நாசமாகிவிடாதா?
இது ஒரு பெரிய பிரச்னையா? புத்தகமாக அன்றி, ஒரே காகிதத்தில் வரும்படி கந்தர் சஷ்டி கவசத்தை அச்சிட்டு, குளியலறைச் சுவரில் ஒட்டவைத்துவிட்டால் ஆச்சு!
அதையும் செய்து பார்த்தேன். இரண்டே நாளில் நான் ஒட்டவைத்த காகிதம் நனைந்து உரிந்து கீழே விழுந்துவிட்டது.
சரி, தண்ணீர் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி மேலே பாதுகாப்பாக ஒட்டலாமா?
ஒட்டலாம். ஆனால், என்னால் இங்கே தண்ணீரை முகந்து ஊற்றியபடி, அல்லது ஷவரில் நனைந்தபடி தூரத்தில் உள்ள அந்த எறும்பு சைஸ் எழுத்துகளைப் படிக்கமுடியவில்லை. எக்கி எக்கிப் பார்த்துப் படித்தால் கழுத்து வலிக்கிறது, இங்கே குளிக்க வந்தோமா, அல்லது படிக்க வந்தோமா என்று சந்தேகமாக இருக்கிறது.
கடைசியாக ஒரு வழி செய்தேன். கந்தர் சஷ்டி கவசத்தை ஒரு நல்ல கெட்டித் தாளில் அச்சிட்டு, அதைக் கடையில் கொடுத்து எல்லாப் பக்கங்களிலும் கச்சிதமாக மூடி Laminate செய்துவிட்டேன் – கந்தர் கவசத்துக்கு, கச்சிதமான பிளாஸ்டிக் கவசம்!
அதன்பிறகு, எந்தப் பிரச்னையும் இல்லை. தினந்தோறும் குளிக்கப் போகும்போது கையில் டவலோடு இந்த லாமினேட் மூடு மந்திரத்தையும் எடுத்துக்கொண்டு போகிறேன், அதை ஒரு க்ளிப்மூலம் ஷவருக்குக் கீழே மாட்டிவிடுகிறேன், அல்லது ஜன்னலுக்குக் கீழே பொருத்திக்கொள்கிறேன். ஜாலியாகக் குளித்தபடி, அன்றைக்கு என் நாக்கில் உருள்கிற ஏதோ ஒரு மெட்டில் கந்தர் சஷ்டி கவசத்தை ஒரு வரி மீதம் வைக்காமல், தப்பில்லாமல் பார்த்துப் படித்துவிடுகிறேன். பின்னர் தலை / உடல் துவட்டிக்கொள்ளும்போது லேசாக நனைந்திருக்கும் லாமினேட் கவசத்தையும் அப்படியே துடைத்துவிட்டால் ஆச்சு.
இணையம் வழியாகவும், DTH கூடை ஆண்டெனாக்களின் வழியாகவும் நம் வீடுகளுக்குள்ளேயே வந்து அருள்பாலிக்கிற கடவுள், என்னுடைய இந்த எளிய நவீனமயமாக்கலை ஆட்சேபிக்கமாட்டார் என்று நம்புகிறேன். சுபமஸ்து!
***
பின்குறிப்பு: இது என் நூறாவது பதிவு. இதுவரை சகித்துக்கொண்டு படித்தவர்களுக்கு நன்றி, இனிமேல் படிக்கப்போகிறவர்களுக்கும் 🙂
***
என். சொக்கன் …
22 05 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
வியர்வைமுதல் மழைவரை
Posted May 5, 2009
on:- In: Bangalore | Characters | Election | Hosur | Life | Money | People | Rain | Salem | Train Journey | Travel | Uncategorized
- 14 Comments
சென்ற வார இறுதியில், சேலத்துக்குத் திடீர்ப் பயணம்.
கடைசி நேரத்தில் கிளம்பியதால், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யக்கூட முடியவில்லை. பொதுப் பெட்டியின் நெரிசலில்தான் திண்டாடித் தடுமாறிப் போய்ச் சேர்ந்தோம்.
பெங்களூரில் கிளம்பியபோது மூன்று லிட்டர் தண்ணீர் வாங்கிக்கொண்டோம். ஐந்து மணி நேரப் பயணத்துக்கு அது போதுமாக இருக்கும் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் மதிய நேர ரயில் என்பதால், எல்லோருக்கும் செம தாகம். குழந்தைகளே ஆளுக்கு முக்கால் லிட்டர் குடித்திருப்பார்கள், மீதமிருந்தது எங்களுக்குப் போதவில்லை. ரயில் தருமபுரியைத் தாண்டுவதற்குள் எல்லா பாட்டில்களும் காலி.
எங்களுடைய கெட்ட நேரம், அனைத்து ரயில் நிலையங்களிலும் மாறி மாறி பஜ்ஜி, பகோடா, வடைதான் வந்துபோகிறதேதவிர, எங்கேயும் தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. இறங்கிப்போய் எங்கேயாவது தேடிப் பிடித்து வாங்கலாம் என்றால், கூட்ட நெரிசல், கூடவே, நான் திரும்புவதற்குள் ரயில் புறப்பட்டுவிடும் என்கிற பயம்.
இதனால், நாங்கள் சேலம் வந்து சேர்ந்தபோது எல்லோரும் ‘தண்ணீர், தண்ணீர்’ என்று கதறாத குறை. ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் கண்ணில் எதிர்ப்பட்ட முதல் கடையில் நுழைந்து ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கித் திறந்து கவிழ்த்துக்கொண்டேன்.
அரை பாட்டிலைக் காலி செய்தபிறகு, உலகம் கொஞ்சம் தெளிவாகத் தெரிந்தது. கடைக்காரரைப் பார்த்து நட்பாகப் புன்னகை செய்து, ‘எவ்ளோ?’ என்றேன்.
‘பதினஞ்சு ரூபாய்’ என்றார் அவர்.
எனக்குக் கொஞ்சம் சந்தேகம். பாட்டிலைத் திருப்பிப் பார்த்தேன், ‘MRP: Rs 13/-‘ என்று எழுதியிருந்தது.
’இதில பதிமூணுதானே போட்டிருக்கு?’
‘பதினஞ்சு ரூவாதான் விலை’ என்றார் அவர், ‘பணத்தைக் கொடுத்துட்டுக் கிளம்புங்க’
நான் இருபது ரூபாய் கொடுத்தேன். மீதிச் சில்லறை ஐந்து ரூபாய்மட்டும் கிடைத்தது.
‘இன்னும் ரெண்டு ரூபாய் கொடுங்க, பதிமூணுதான் இங்கே விலை போட்டிருக்கு’ என்றேன் கொஞ்சம் குரலை உயர்த்தி.
பின்னாலிருந்து யாரோ வந்தார்கள், ‘ஹலோ மிஸ்டர், சொல்றது புரியலியா? இங்கே பாட்டில் தண்ணி பதினஞ்சு ரூபாதான், அநாவசியமா கலாட்டா எதுவும் செய்யாம ஒழுங்கா நடையைக் கட்டுங்க’
பேசியவருடைய உருவத்தில், குரலில் துஷ்டத்தனம் அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது. கொஞ்சம் குரலை இறக்கி, ‘MRPக்கு மேல விலை வெச்சு விக்கக்கூடாது, சட்டப்படி அது தப்பு, தெரியாதா?’ என்றேன்.
’சரி, நாங்க தப்பு செஞ்சவங்களாகவே இருந்துட்டுப் போறோம், நீங்க தாராளமா கோர்ட்ல கேஸ் போட்டு ஜெயிச்சு அந்த ரெண்டு ரூபாயை வாங்கிக்கலாம்’ என்றார் அவர் நக்கலாக.
’சரி, பில் கொடுங்க’
’இந்தக் கடையில எப்பவும் எவனுக்கும் பில் கொடுத்தது கிடையாது’ முரட்டுத்தனமாகப் பதில் வந்தது.
அதற்குமேல் என்ன பேசுவது என்று எனக்குப் புரியவில்லை. பில் இல்லாமல் எந்தக் கோர்ட்டிலும் கேஸ் போடமுடியாது. பில் தரமாட்டேன் என்று சொல்வது முதல் குற்றம், MRPக்குமேல் விலை வைத்து விற்பது இரண்டாவது குற்றம், ஆனால் ஒன்றின்மூலம் இரண்டாவதை நிரூபிக்கமுடியாமல் போகிறது.
இதே சினிமாவாக இருந்தால், எங்கிருந்தோ ஒரு கதாநாயகன் வருவான், பாய்ந்து எகிறிச் சண்டை போட்டு நியாயத்தை நிலைநாட்டுவான்.
சேலத்தில் அந்த ராத்திரி பத்தரை மணிக்கு யாரும் நியாயத்தைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உடனடிக் கதாநாயகனாக என் உடம்பிலும் வலு போதாது, ஆகவே, ‘அந்த இரண்டு ரூபாய் அவர்களுக்கு ஒட்டாமல் போகட்டும்’ என்று மனத்துக்குள் சபித்துக்கொண்டு வெளியே வந்தேன்.
ஆட்டோ பிடித்து, கிட்டத்தட்ட நள்ளிரவு நேரத்தில் வீடு போய்ச் சேர்ந்தோம். தூங்கிக்கொண்டிருப்பவர்களைத் தொந்தரவு செய்வதுகுறித்த கவலையுடன் அழைப்பு மணியை அழுத்தினோம்.
ஆனால், அங்கே யாரும் தூங்கியிருக்கவில்லை. ஐபிஎல் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஓரக்கண்ணால் உத்தப்பாவின் பவுண்டரியைப் பார்த்தபடி, ‘வாங்க, வாங்க’ என்று வரவேற்றார் என் அப்பா, ’என்ன, ட்ரெயின் லேட்டா?’
‘ஆமாம்ப்பா’ என்றபடி சமையலறைக்குள் பாய்ந்தோம். பசி!
மறுநாள், உடனடியாக பெங்களூர் திரும்பவேண்டியிருந்தது. அப்போது கண்ணில் பட்ட சில விஷயங்களைமட்டும் சுருக்கமாக எழுதி முடித்துக்கொள்கிறேன்:
* சேலம் ரயில் நிலையத்தில் ஒரு ‘வாசல் வடிவ Metal Detector’ இருக்கிறது. ஆனால், அங்கிருக்கும் காவலர்களுக்கு அதை எப்படிப் பயன்படுத்துவது என யாரும் சொல்லித்தரவில்லைபோல!
பாதுகாப்பு விதிமுறைகளின்படி, ரயில் நிலையத்தினுள் நுழைகிறவர்களைதான் Metal Detectors கொண்டு பரிசோதிக்கவேண்டும். ஆனால் இங்கே, ரயில் நிலையத்திலிருந்து வெளியேறுகிறவர்களைக் கர்ம சிரத்தையாகப் பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள், இன்னொரு வாசலின்வழியே உள்ளே நுழைகிறவர்களுக்கு எந்தப் பரிசோதனையும் கிடையாது!
***
இந்திய ரயில்வேயின் மூன்று நோக்கங்கள்: Safety, Security, Punctuation, ச்சே, Punctuality.
இந்த மூன்றையும், தமிழில் எப்படி மொழிபெயர்ப்பீர்கள்?
Safety = பாதுகாப்பு, ஓகே!
Punctuality = காலம் தவறாமை, அதுவும் ஓகே!
Security?
தர்மபுரி ரயில் நிலையத்தில் ‘Security’ என்பதற்குத் தமிழில் ‘பயனீடு’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். சரியா? இதற்கு என்ன அர்த்தம்?
***
சேலம் பெங்களூர் பாஸஞ்சர் ரயிலில் எவ்வளவு கூட்டம் நிரம்பியிருந்தாலும் சரி, சில்லறை விற்பனையாளர்கள் எப்படியோ கூடை சகிதம் உள்ளே நுழைந்துவிடுகிறார்கள். இரண்டு முதல் பத்து, பதினைந்து ரூபாய்க்குள் என்னென்னவோ சமாசாரங்கள் கிடைக்கின்றன.
வடை, பஜ்ஜி, போண்டாவை ஏற்கெனவே குறிப்பிட்டுவிட்டேன். மிச்சமிருப்பவற்றை நினைவில் உள்ளவரை இங்கே பதிவு செய்துவைக்கிறேன். வருங்கால சமுதாயம் இதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளட்டும் 🙂
நுங்கு, பலாச்சுளை, புதினாக் கீரை, பஜ்ஜி, சமோசா, உரித்த, உரிக்காத வேர்க்கடலைப் பொட்டலங்கள், பிங்க் வண்ணப் பஞ்சு மிட்டாய், கொண்டைக்கடலைச் சுண்டல், மாங்காய், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், கையடக்க டார்ச் லைட், ஜவ்வாதுப் பொடி, பிண்ட தைலம், குழந்தைகளுக்கான பொம்மைகள், வண்ணம் தீட்டும் புத்தகங்கள், மசாலா பொரி, கை முறுக்கு, தட்டுவடை, புதுப்பட சிடி, உள்ளே என்ன சாதம் இருக்கிறது என்று கையால் அமுக்கிக் கண்டுபிடிக்கும் கலவை சாப்பாட்டுப் பொட்டலங்கள், சப்பாத்தி, பரோட்டா, டீ, காபி, மோர், எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத், கடலை மிட்டாய், தேங்காய் பர்பி, தேன் மிட்டாய், தலைவலி சூரணம், சின்னச் சின்ன சதுரங்களாக சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை முதலிய வாசனைப் பொருள்கள், வாழைப்பழம், வேகவைத்த மரவள்ளிக் கிழங்கு, … இன்னும் என் கண்ணில் படாத துண்டு, துக்கடா சமாசாரங்கள் பாதிக்குப் பாதி இருக்கும்.
இவற்றை விற்கிறவர்கள் எல்லோரும் சிறு வியாபாரிகள், மஞ்சள் பை, வயர் பை, கூடை, கன செவ்வக வடிவ மளிகைப் பை, அட்டைப் பெட்டி, கித்தான் பை, பிளாஸ்டிக் பக்கெட், எவர்சில்வர் கூஜா, டிரம், டிரே என்று எதெதிலோ தங்களுடைய விற்பனைப் பொருள்களைப் போட்டுக்கொண்டு கூட்டத்துக்குள் எப்படியோ புகுந்து புறப்படுகிறார்கள். ஒருகட்டத்தில், இந்த ரயிலில் பயணிகள் ஜாஸ்தியா, அல்லது வியாபாரிகள் ஜாஸ்தியா என்று எனக்குச் சந்தேகமே தோன்றிவிட்டது.
உட்கார இடம் கிடைக்காமல் கீழே தரையில் சரிந்து படுத்திருந்த ஒருவர், தன்னை லேசாக உரசிச் சென்ற வியாபாரியைக் கோபித்தார், ‘ஏம்ப்பா, புள்ளகுட்டிங்களெல்லாம் படுத்திருக்காங்க, இப்படிக் கண் மண் தெரியாம ஓடறியே’
அந்த வியாபாரி திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னார், ‘நாங்களும் புள்ளகுட்டிங்களுக்காகதான் சார் ஓடறோம்’
***
சேலத்தில் இருந்தவரை, வியர்வை குழாய்போலக் கொட்டிக்கொண்டிருந்தது. ஆனால் ரயில் தர்மபுரியைத் தாண்டியபிறகு மழைக்காற்று, இனிய தென்றல், அவ்வப்போது ஜிலீர் தூறல்.
வழியில் எதிர்ப்பட்ட கிராமச் சுவர்கள் அனைத்திலும் தேர்தல் விளம்பரங்கள். மிஞ்சிய இடங்களில் அநேகமாக எல்லா வண்ணங்களிலும் கட்சிக் கொடிகள்.
ஓசூரில் இறங்கியபோது, பலமான காற்று புழுதியை வாரி இறைத்தது. ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து பஸ் பிடிப்பதற்குள் கண், காது, மூக்கெல்லாம் மண் படர்ந்துவிட்டது.
வரிசையாக வந்த எந்தப் பேருந்திலோ, ஷேர் ஆட்டோவிலோ என்னால் ஏறமுடியவில்லை. என்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மற்ற பலசாலிகள் முன்னேறிச் சென்றுகொண்டே இருந்தார்கள்.
இன்னும் சிறிது நேரம் காத்திருக்கலாமா என்று யோசித்தபோது மழை பிடித்துக்கொண்டது. நல்லவேளையாக ஓர் ஆட்டோக்காரர் என் மேல் பரிதாபப்பட்டு அருள் புரிந்தார்.
ஓசூரில் என் மாமா பையன் ம்யூச்சுவல் ஃபண்ட் விற்கிறான். அவனுடைய ’ஒன் மேன் ஆர்மி’ அலுவலகத்துக்கு திடீர் விஜயம் செய்தேன்.
நல்ல பெரிய அலுவலக அறை. அதன் நடுவே அவன்மட்டும் தன்னந்தனியே உட்கார்ந்திருந்தான். சுற்றிலும் விளம்பர நோட்டீஸ்கள், போஸ்டர்கள், மேலேயிருந்து தொங்கும் அறிவிப்புகள், விண்ணப்பப் படிவங்கள்.
அந்த விளம்பரங்களை நிதானமாகப் பார்த்தபோது, சில விஷயங்கள் புரிந்தன:
-
ம்யூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்களின் மொழி விசேஷமானது. நாம் எத்தனை சிரமப்பட்டுப் படித்தாலும் அது நமக்குப் புரியாது, புரியவும் கூடாது
-
ஆங்கில விளம்பரங்கள்கூட ஓரளவு பரவாயில்லை. தமிழ் விளம்பரங்கள் இன்னும் மோசம். எட்டு வரிக்குமேல் படித்தால் தலை வலிக்கும், பதினாறு வரியைத் தாண்டினால் பைத்தியம் பிடிக்கும்
-
அவர்கள் தருகிற விளக்கப் படங்களை வலது, இடது, கீழ், மேல் எந்தத் திசையிலும் திருப்பிப் பார்க்கலாம், எந்தப் பிரயோஜனமும் இருக்காது. அவற்றை அலங்கரிப்பு அம்சங்களாகமட்டுமே பார்த்து வியப்பது நல்லது
-
இந்த விளம்பரங்களைத் தயாரிக்க நிறைய புகைப்படங்கள் வேண்டும். அவை கீழ்க்கண்ட பத்து வகைகளுக்குள் அடங்குபவையாக இருக்கவேண்டும்:
-
மலர்ந்து சிரிக்கும் ஆண், பெண் முகங்கள்
-
கன்னத்தில் கை வைத்த, அல்லது தலையில் விரல்களை அழுத்தியபடி, அல்லது நெற்றிச் சுருக்கத்தை நீவியபடி குழம்புகிற ஆண் முகங்கள், இதில் பெண்களும் வரலாம், ஆனால் மேக் அப் கலையாமல் கவலைப்படவேண்டும்
-
குழந்தைகள் – இவர்கள் டாக்டர், எஞ்சினியர், வழக்கறிஞர், விண்வெளி வீரர் வேஷம் அணிந்திருக்கவேண்டும். பெருமையோடு கேமெராவை நிமிர்ந்து பார்க்கவேண்டும்
-
பிறந்த நாள் விழாக் கொண்டாடுகிற, அல்லது ஒரு பச்சைப்பசேல் சூழலில் விடுமுறையை அனுபவிக்கிற குடும்பங்கள், அந்த ஃப்ரேமின் நடு மத்தியில், மகன் அல்லது மகளைக் கட்டி அணைக்கும் பெற்றோர்
-
மகனை அல்லது மகளைத் தலைக்கு மேல் தூக்கிப் போடும் தந்தை
-
டை அணிந்த, கழுத்து சுளுக்கும் அளவுக்கு மேல் நோக்கி ம்யூச்சுவல் ஃபண்ட் வளர்ச்சியைப் பார்க்கிற ஆண்கள், பெண்கள்
-
இடுப்பில் கை வைத்தபடி ‘self sufficient’ பெருமிதத்துடன் முன்நோக்கிப் பார்க்கும் ஆண்கள், கிட்டத்தட்ட அதே பாவனையில், ஆனால் நெஞ்சுக்குக் குறுக்கே கை கட்டிய பெண்கள்
-
ஓட்டப் பந்தயத்தில் ஓடும் வீரர்கள், அவர்களில் ஒருவர்மட்டும் மற்ற எல்லோரையும்விடப் பல படிகள் முன்னே இருக்கவேண்டும்
-
வானத்திலிருந்து கொட்டுகிற, அல்லது செடிகளில் காய்க்கிற கரன்சி – ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டுகள்மட்டும்
-
கட்டை விரல் உயர்த்தி ‘தம்ப்ஸ் அப்’ சின்னம் காட்டும் ஆண், பெண்கள்
-
-
இந்தப் பத்து வகை புகைப்படங்களையும் பொருத்தமான வகையில் கலந்து மிக்ஸியில் அடித்தால், ம்யூச்சுவல் ஃபண்ட் விளம்பரம் தயார்
***
ஓசூரிலிருந்து பெங்களூர் திரும்பும் பேருந்தில் ‘அறிந்தும், அறியாமலும்’ படம் முக்கால் மணி நேரம் பார்த்தேன். நன்கு சுவாரஸ்யமாக இருந்தது.
இந்தப் படத்தில் எல்லோரும் சிலாகிக்கிற பிரகாஷ் ராஜ், ஆர்யாவைவிட, அந்தச் சின்னப் பையனின் ஹீரோ கதாபாத்திரம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. சாதாரணமாக இருந்த ஒரு பையனுக்கு திடுதிப்பென்று ஒரு தாதா அப்பா, தாதா அண்ணன் கிடைத்தால் அவன் எப்படி அதனை ஏற்கமுடியாமல் தடுமாறுவானோ அதை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார்.
அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில், சில்க் போர்ட் பேருந்து நிறுத்தம் வந்துவிட்டது. கொட்டும் மழையில் இறங்கி வீடு நோக்கி ஓடினேன்.
***
என். சொக்கன் …
05 05 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க