மனம் போன போக்கில்

ரஹ்மான்

Posted on: July 27, 2009

ஏ. ஆர். ரஹ்மானின் ‘ரோஜா’ படம் வெளியானபோது, நான் பத்தாங்கிளாஸ் முடித்திருந்தேன்.

அன்றைய சுதந்தர தின விடுமுறையை (அல்லது விடுமுறை தினச் சுதந்தரத்தை) ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடிக் கொண்டாடிக்கொண்டிருந்தோம். திடீரென்று சில பையன்கள் விளையாட்டைப் பாதியில் நிறுத்திவிட்டுப் புறப்பட்டார்கள்.

‘என்னாச்சுடா? எல்லாரும் எங்கே கிளம்பிட்டீங்க?’

’டிவியில புதுப்பாடல் ப்ரொக்ராமுக்கு லேட்டாச்சு’

அப்போது சாடிலைட் சானல்கள் இந்த அளவுக்கு பிரபலமடைந்திருக்காத நேரம். புதுப்படப் பாடல்களைப் பார்க்கவேண்டுமென்றால் எப்போதாவது தூர்தர்ஷன் ஒளிபரப்புகிற நிகழ்ச்சிகள்தான் ஒரே கதி.

ஆனால், சுவாரஸ்யமான கிரிக்கெட்டை நிறுத்திவிட்டு யாராவது சினிமாப் பாட்டுப் பார்க்கப் போவார்களா? அதில் அப்படி என்ன விசேஷம்?

’ரோஜான்னு ஒரு புதுப்படம் வந்திருக்கு, அதில ஒரு பாட்டு தூள் கிளப்புது, தெரியுமா?’

அது எந்தப் பாட்டு, முதல் வரி என்ன, ஆண் குரலா, பெண் குரலா, டூயட்டா, யார் பாடியது, யார் எழுதியது, யார் நடித்தது என்பதுபோன்ற விவரங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, அந்தப் பாட்டையும்கூட அவர்கள் கேட்டிருக்கவில்லை, ஆனால் அது பிரமாதமாக இருக்கிறது என்பதைமட்டும் எப்படியோ கேள்விப்பட்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில், மைதானம் காலியாகிவிட்டது. நானும் வேறு வழியில்லாமல் வீடு போய்ச் சேர்ந்தேன், டிவி முன்னால் உட்கார்ந்தேன்.

அன்றைய ‘சிறப்புப் புதுப்பாடல்’ நிகழ்ச்சியில் கடைசிப் பாடலாக, ‘சின்னச் சின்ன ஆசை’ ஒளிபரப்பானது என்று ஞாபகம். இருள் சூழ்ந்த காட்சியமைப்பில் லேசாக ஒளி பரவ, அதற்குமுன்னால் வெள்ளித்திரையிலோ, சின்னத்திரையிலோ எப்போதும் கேட்டிருக்காத ஒரு பின்னணி இசை மயக்கியது.

அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பெயர் ஏ. ஆர். ரஹ்மான் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்த மெட்டும், இசைக் கோர்ப்பும், பாடல் பதிவு செய்யப்பட்டிருந்த விதமும், இடையில் வந்த ‘ஏலேலோ’ ஹம்மிங்கூட ரொம்ப வித்தியாசமாக இருந்தது.

பாடலின் முடிவில், ‘நல்லாதான் இருக்கு. ஆனா, …’ என்று நினைத்துக்கொண்டேன்.

அந்த ‘நல்லாதான் இருக்கு’க்குக் காரணம், ஏ. ஆர். ரஹ்மானின் திறமை. ‘ஆனா, …’வுக்குக் காரணம் என்னுடைய இளையராஜா பித்து, அதற்குக் காரணம் கமலஹாசன்.

அப்போது நானும் என் நண்பர் குழாமும் கமலஹாசனின் மிகப் பெரிய ரசிகர்களாக இருந்தோம். அவருடைய படங்கள் ஒவ்வொன்றையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவதுதான் எங்களுடைய முக்கியமான வாழ்க்கை லட்சியமாகத் தோன்றியது.

அந்தக் காலகட்டத்தில், கமலஹாசன் நடிக்கும் படங்களுக்கெல்லாம் கண்டிப்பாக இளையராஜாதான் இசையமைப்பார். இதனால், சீக்கிரத்தில் அவரும் எங்களுக்கு நெருக்கமாகிவிட்டார். கமல் நடிக்காத ராஜா படங்களின் பாடல்களையும் விரும்பி ரசிக்க ஆரம்பித்திருந்தோம். ‘நம்ம மொட்டை’ என்கிற இயல்பான நெருக்கம் வந்திருந்தது.

அப்போதைய சூழ்நிலையில், தமிழ்த் திரையுலகில் இளையராஜாவை மிஞ்சக்கூடிய, அவருடைய தனித்துவமான ஆதிக்கத்தை வீழ்த்தக்கூடிய இன்னோர் இசையமைப்பாளர் வரமுடியும் என்றுகூட யாரும் கற்பனை செய்திருக்கவில்லை. முந்தைய பத்து, பதினைந்து ஆண்டுகளில் பலர் அதற்கு முயற்சி செய்து தோற்றுப்போயிருந்தார்கள்.

அதனால்தான், ரஹ்மானின் அந்த முதல் பாடல் எப்பேர்ப்பட்டதாக இருந்தபோதும், ‘ஆனா, …’ என்று இழுக்கத் தோன்றியது. ராஜாவின் கோட்டையில் குண்டு வீச எத்தனையோ பேர் வந்துபோய்விட்டார்கள், அதுபோல் இவரும் இன்னொருவர் என்றுதான் நினைத்துக்கொண்டோம்.

எங்களுடைய கருத்தை உறுதிப்படுத்துவதுபோல, எங்கள் ‘தலைவர்’ கமலஹாசன் ஏ. ஆர். ரஹ்மானைச் சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை. ‘ரோஜா’ பாடல்கள் பெரும் வெற்றி பெற்ற அதே நேரத்தில் ’தேவர் மகன்’ல் இளையராஜா அசத்தினார், ‘நம்ம ஆளை யாராலயும் எதுவும் செய்யமுடியாது’ என்று நாங்கள் நிம்மதியடைந்தோம்.

இதற்குள், எங்களுடைய பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் தொடங்கியிருந்தன. அனைத்து ப்ளஸ்டூ புத்தகங்களையும் ஒன்றரை வருடம் முன்பாகவே உருப்போட ஆரம்பித்திருந்தோம். இந்தப் பரபரப்பில், கமலஹாசன், இளையராஜா, ரஹ்மான் எல்லோரும் மறந்துபோனார்கள்.

நாங்கள் புத்தகங்களுக்குள் மூழ்கியிருந்த நேரத்தில், ஏ. ஆர். ரஹ்மானின் கிராஃப் மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது. ’ரோஜா’வின் வெற்றியைத் தொடர்ந்து அவசரகதியில் படங்களை ஒப்புக்கொள்ளாமல் மிக நிதானமாகச் செயல்பட்டுத் தனது புதுமையான ஒலிக்குத் தமிழகத்தைப் பழக்கப்படுத்தியிருந்தார் அவர். பெரும்பாலான பிரபல டைரக்டர்கள் அவரோடு வேலை செய்யவேண்டும் என்று ரஹ்மான் வீட்டு வாசலில் க்யூ நிற்க ஆரம்பித்திருந்தார்கள்.

பின்னர் நான் கல்லூரிக்குச் சென்றபோது, அங்கே வகுப்புகளிலும் சரி, விடுதி அறைகளிலும் சரி, ராஜா கட்சி, ரஹ்மான் கட்சி என்று இரண்டு பெரிய பிரிவுகள் உருவாகியிருப்பதைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது.

ராஜா கோஷ்டியினர், அவருடைய நூற்றுக்கணக்கான இசைத் தொகுதிகளைத் தேடிப் பிடித்து வாங்கிவைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இந்தச் சேகரிப்பிலிருந்து வித்தியாசமான ஒரு பாடலைக் கேட்டுச் சிலாகிப்பது அவர்களுடைய பாணி.

ரஹ்மான் கோஷ்டி, இதற்கு நேர் எதிராக இருந்தது. அவர்களுக்குக் ‘கடந்த காலம்’ முக்கியமாகத் தோன்றவில்லை. இதோ, ரஹ்மான் அடுத்து என்ன செய்கிறார், யார் படத்துக்கு இசையமைக்கிறார், போன வாரம் வெளியான ரஹ்மான் பாடல்கள் எத்தனை ஆயிரம், எத்தனை லட்சம் விற்று சாதனை படைத்திருக்கின்றன, எத்தனை டீக்கடைகளில் ராஜாவை ரஹ்மான் Replace செய்திருக்கிறார் என்பதுபோன்ற சமீபத்திய புள்ளிவிவரங்களில் அவர்களுடைய ஆர்வம் இருந்தது.

தர்க்கப்படி பார்த்தால், அந்தப் பதினேழு வயதில் ராஜாவைவிட ரஹ்மானின் துள்ளல் இசைதான் என்னை அதிகம் கவர்ந்திருக்கவேண்டும், அதுதான் எதார்த்தம். ஆனால் எப்படியோ, எனக்கு ராஜாவின் இசைதான் நெஞ்சுக்கு நெருக்கமாகத் தோன்றியது (இன்றுவரை).

ஆகவே, நான் கல்லூரி ராஜா கோஷ்டியில் சேர்ந்துகொண்டேன். அதனாலேயே, ’இயந்திர இசை’ என்றெல்லாம் ரஹ்மானை மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தேன்.

இப்போது யோசித்தால், பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. ஆனால் அன்றைக்கு, ராஜாவின் இடத்தைப் பிடிக்க இன்னொருவர் முயற்சி செய்கிறார், அதில் கணிசமான அளவு வெற்றியும் அடைந்துவிட்டார் என்பதே எங்களுக்குப் பெரிய Blasphemyயாகத் தோன்றியது. இதுபோன்ற வெற்றுக் கிண்டல்கள், கேலிகள், அவமானப்படுத்துதல்களின்மூலம் ரஹ்மானின் அந்த முயற்சியை முறியடித்துவிடமுடியும் என்று அசட்டுத்தனமாக நம்பினோம்.

ஒருவிதத்தில், இவை எல்லாமே இயலாமையின் வெளிப்பாடுகள்தான். தமிழ் சினிமாவில் ராஜாவின் காலம் (அப்போதே) முடிந்துவிட்டது. அதை ஏற்றுக்கொண்டு, அவர் ‘செய்த’ விஷயங்களை நினைத்துமட்டும் சந்தோஷப்படுகிற மன முதிர்ச்சி எங்களுக்கு இல்லை.

அப்போதுமட்டுமில்லை, அதன்பிறகு பல ஆண்டுகளுக்கு ரஹ்மானின் பிரம்மாண்ட வெற்றிகளையோ, சாதனைகளையோ என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இத்தனைக்கும் அவருடைய வளர்ச்சி மொத்தத்தையும் ஒருவிதமான பொறாமை கலந்த பிரம்மிப்புடன் பார்த்துவந்திருக்கிறேன், பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

கல்லூரிக் காலத்திலேயே, என்னுடைய கமலஹாசன் பித்து கரைந்து மறைந்துபோனது, அதன்பிறகு சினிமா நடிகர்களுக்கு ரசிகனாக இருப்பது பெரிய முட்டாள்தனம் என்றும் புரிந்துகொண்டேன், ஒருகட்டத்தில் சினிமா பார்ப்பதையே மொத்தமாக நிறுத்திவிட்டேன். ஆனால் அப்போதும், ராஜாவைமட்டும் மற(று)க்கமுடியவில்லை.

இன்றைக்கும், நான் ஜீனியஸ் என்று இரண்டே பேரைதான் சொல்வேன். ஒன்று, சச்சின் டெண்டுல்கர், இன்னொன்று, இளையராஜா, இந்த இருவரும் இல்லாவிட்டால் என்னுடைய இத்தனை வருட வாழ்க்கை படுமோசமாகப் போரடித்திருக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

ஆனால் அதற்காக, சச்சின் என்றென்றும் விளையாடிக்கொண்டிருக்கமுடியுமா? இளையராஜா எல்லாப் படங்களுக்கும் இசையமைத்துக்கொண்டிருக்கமுடியுமா? ஒருகட்டத்தில் ராஜாவும்கூடப் பதவி விலகவேண்டியிருக்கும் என்பது புரிந்தது.

அதற்குமுன் ராஜாவை வீழ்த்த முயன்ற மற்ற இசையமைப்பாளர்களுக்கும் ரஹ்மானுக்கும் முக்கியமான வித்தியாசம், இவரிடம் ஒரு தனித்துவமான பாணி இருந்தது, அதேசமயம் நான் இன்னமாதிரி இசையைமட்டும்தான் உருவாக்குவேன் என்கிற பிடிவாதம் இல்லாமல், தனது ஞானத்தை விரிவுபடுத்திக்கொள்கிற ஆர்வம், சட்டென்று தோன்றுகிற Creative Spark-ஐமட்டும் நம்பாமல், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இழைத்து இன்னும் மேம்படுத்தமுடியும் என்கிற (இந்திய சினிமாவுக்கே புதுசான) School of thought, தனது இசை மேதைமையுடன், மற்றவர்களுடைய கருத்துகள், சிந்தனைகள், யோசனைகளையும் சேர்த்து மெருகேற்றிக்கொண்டு, அதற்கு உரிய Credit-ஐ அவர்களுக்கே தருகிற பெருந்தன்மை, இவற்றையெல்லாம்விட முக்கியமாக, தான் இருந்த இடத்திலேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்காமல் மேலே மேலே போகவேண்டும் என்கிற முனைப்பு.

இன்னொருபக்கம், இந்தியச் சூழலில் ரஹ்மானின் வெற்றிக் கதை மிக முக்கியமானது. ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர், சூழ்நிலை காரணமாக ஏழைமையில் தள்ளப்பட்டவர், மிக இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்பைத் தலையில் சுமக்க நேர்ந்தவர், படிப்பைப் பாதியில் நிறுத்தியவர், உழைப்பு ஒன்றைமட்டும் தனது முதலீடாக நினைத்தவர், மதம் மாறியவர், அதுவும் பெரும்பான்மை மதத்திலிருந்து சிறுபான்மை மதத்துக்கு மாறியவர், நல்ல சம்பளத்தில் செழிப்பாக வாழ்ந்துகொண்டிருந்தபோது, அதைவிடக் குறைந்த வருமானம் கொண்ட, ஆனால் நல்ல முன்னேற்றச் சாத்தியம் உள்ள இன்னொரு துறைக்குத் தைரியமாகத் தாவியவர், சேணம் கட்டிய குதிரைபோலத் தனது தொழில்தவிர வேறெதிலும் கவனம் செலுத்தாமல் முழு முனைப்போடு பணிபுரிந்தவர், தனது துறையில் மற்ற எல்லோரையும்விட வித்தியாசமாகச் சிந்தித்து முன்னேறியவர் … இப்படிப் பலவிதங்களில் ரஹ்மான் புதிய தலைமுறை இந்தியர்களின் பிரதிநிதியாகவே தோன்றுகிறார்.

இதனால், இந்த வருடத் தொடக்கத்தில் ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்றபோது, (ஒரு ராஜா ரசிகனாக) எனக்கு எந்த ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. இப்பேர்ப்பட்ட ஒரு திறமைசாலி, கடின உழைப்பாளி அத்தனை உயரங்களுக்குப் போகாவிட்டால்தான் அதிசயம் என்று பெருமையாகவே உணர்ந்தேன்.

அப்படி ஓர் உலக கௌரவம், அங்கீகாரம் எங்கள் செல்ல ‘மொட்டை’க்குக் கிடைக்கவில்லையே என்கிற ஏமாற்றம், அல்லது வருத்தம் இப்பவும் இருக்கிறதுதான். ஆனால், அதற்கான குறைந்தபட்ச முயற்சிகளில்கூட அவரோ, அவரைச் சுற்றியிருந்தவர்களோ ஈடுபடவில்லை எனும்போது, அந்த ஏமாற்றம் நியாயமற்றதாகிறது.

ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்று சில வாரங்களுக்குப்பின், அவருடைய வெற்றிக் கதையைப் புத்தகமாக எழுதுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் புத்தகம் இன்று வெளியாகியிருக்கிறது.

ARR_Wrapper

நான் ரஹ்மானைப்பற்றி ஒரு புத்தகம் எழுதுவேன் என்று பத்து, பதினைந்து வருடங்களுக்குமுன்னால் யாராவது சொல்லியிருந்தால், விழுந்து விழுந்து சிரித்திருப்பேன். அல்லது, கோபத்தில் அவர்கள்மீது பூட்டை எடுத்து வீசியிருப்பேன். (பூட்டு விஷயம் புரியாதவர்கள் இங்கே க்ளிக்கவும்)

ஆனால், எழுதுவது என்று உட்கார்ந்தபிறகு, நான் என்னுடைய சொந்த விருப்பு, வெறுப்புகள் புத்தகத்தில் குறுக்கிட அனுமதிக்கவில்லை. எந்த முன்முடிவுகளும் இல்லாமல், ரஹ்மான் என்கிற இசைக் கலைஞரின் வாழ்க்கைக் கதையை அணுகி, அந்தச் சரித்திரத்தினூடே அவருடைய வெற்றிக்கான காரணங்களைப் பதிவு செய்வதுதான் நோக்கம்.

இந்தப் புத்தகத்துக்காக ரஹ்மானைப்பற்றி ஏகப்பட்ட விஷயங்களைத் தேடிப் பிடித்துப் படித்துக்கொண்டிருந்தபோதுதான், நான் எதைத் தவறவிட்டிருக்கிறேன் என்பது புரிந்தது. இப்போதும், ரஹ்மானின் இசை பாணியை என்னால் முழுசாக ரசிக்கமுடியவில்லை, ஆனால் அவர் வேலை செய்கிற தன்மையும், அவரது பண்புகளும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. குறிப்பாக ’ரோஜா’வில் அறிமுகமாவதற்குமுன்னால் அவர் என்னென்ன செய்திருக்கிறார், அதன்பிறகு தனது திரை இசை வாழ்க்கையை எப்படித் திட்டமிட்டுக்கொண்டார், தன்னுடைய குழு உறுப்பினர்களை எப்படி வேலை வாங்குகிறார், சீனியர்களிடமிருந்து எவற்றை, எப்படிப் பயின்றுகொள்கிறார், தன்னிடம் பாடல் கேட்டு வரும் இயக்குனர்களிடம் பதிலுக்கு அவர் எதிர்பார்ப்பது என்ன, அது கிடைக்காதபோது எப்படி நாசூக்காக விலகிக்கொள்கிறார், தான் விரும்புவதைச் செய்து தருகிற இயக்குனர்களிடம் அவருடைய ஒன்றுதல் எப்படிச் சிறந்த பாடல்களாக வெளிப்படுகிறது, நவீன தொழில்நுட்பத்தை அவர் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார், அபூர்வமாக வரும் தோல்வியைக்கூட அவர் எப்படி அணுகுகிறார், அநாவசிய வம்புகளில் சிக்கிக்கொள்ளாமல் எப்படித் தவிர்க்கிறார், புதிய திறமைகளை எப்படித் தேடிப் பிடிக்கிறார்,  எப்படி எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்குகிறார் என்று பல விஷயங்கள், இந்த எளிய மனிதரின் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டேன், அவற்றை என்னால் இயன்றவரை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

ஆனால் ஒன்று, இதை எழுதி முடித்தபிறகும், என்னுடைய ‘ஜீனியஸ்’ பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. இப்போதும் எனது வாழ்க்கை தொடர்பான எந்தச் சம்பவத்தை யோசித்தாலும் கூடவே இளையராஜாவின் பாடல் ஒன்றுதான் ஒட்டிக்கொண்டு பின்னிசையாக வரும். அது எப்போதும் மாறாது, மாறமுடியாது.

அதேசமயம், ரஹ்மானின் திறமையை, அதற்குப் பின்னால் இருக்கிற கடின உழைப்பைப் புரிந்துகொள்ளாமல் ஒருகாலத்தில் நண்பர்கள் மத்தியில் அவரை அலட்சியப்படுத்திப் பேசியிருக்கிறேன். அதற்கு இந்தப் புத்தகத்தின்மூலம் என்னாலான பிராயச்சித்தம் செய்துவிட்டதாகவே உணர்கிறேன்.

வாய்ப்பிருந்தால், இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டுச் சொல்லுங்கள், என்னைப்போன்ற ஒரு ராஜா வெறியனின் ரஹ்மான் புத்தகம் எப்படி வந்திருக்கிறது என்று அறிந்துகொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்!

புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-187-7.html

***

என். சொக்கன் …

27 07 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

81 Responses to "ரஹ்மான்"

Many congratulations for your new book and best wishes for its success & continued success in all your endeavours !

வாழ்த்துக்கள், சொக்கன்!

ரா.கிரிதரன்

😉 best wishes

இதற்குப் பெயர்தான் oxymoron ஆ..? 🙂

உங்களிடமிருந்து ரஹ்மான் பற்றிய புத்தகம் என்று நினைக்கவே புதுசா இருக்கு.. 🙂 கூடிய விரைவில் படித்துப் பார்க்கிறேன்..

வாழ்த்துகளும் 🙂

எந்தவொரு இரு ஆளுமைகளையும் பற்றிப் பேசும் போது தேவையேயில்லாமல் தன்னிச்சையாக ஏன் அவர்களை ஒப்பிட்டுப் பேசுகிறோம் என்பது புரியவில்லை. அது ஆரோக்கியமான உரையாடலாக இருந்தாலும் சகித்துக் கொள்ளலாம். பள்ளிப்பிள்ளைகள் போல் மற்ற ரசிகர்கள் மீது சேறு இறைப்பது சகிக்க முடியாமலிருக்கிறது. மேலும் பொதுவாக தமிழர்கள் இசை ரசனை என்பது திரை இசையோடு தொடங்கி அதிலேயே முடிந்துவிடுவது வருத்தமானது. இந்திய செவ்வியல் இசை தவிர உலகம் முழுவதும் விதவிதமான இசையைப் பற்றி குறைந்த பட்சம் கூட நாம் அறிய முயலாததன் சமூகக் காரணங்கள் என்னவென்று தெரியவில்லை.

(உங்கள் பதிவிற்கு பெரிதும் தொடர்பில்லாத பொதுவான எண்ணமிது).

ராஜா வெறியனான நீங்கள் அவரைப் பற்றி அல்லாமல் ரஹ்மான் பற்றி புத்தகம் எழுத முன் வந்தது ஏன்? ரஹ்மான் ராஜாவை விட பரபரப்பானதெர்ரு விற்பனைப் பொருள் என்பதால்தானே? 🙂

ஆஹா, இது இளைஞர்களின் புத்தகம்! வாழ்த்துக்கள்.

anbudan_BALA, ரா.கிரிதரன், kana praba, Bee’morgan, sureshkannan, சத்யராஜ்குமார்

நன்றி 🙂

//பொதுவாக தமிழர்கள் இசை ரசனை என்பது திரை இசையோடு தொடங்கி அதிலேயே முடிந்துவிடுவது வருத்தமானது//

பெரும்பான்மைத் தமிழர்கள் என்றால் நீங்கள் சொல்வது சரி. இந்தியச் செவ்வியல் இசை, உலக இசையை இங்கே அறிமுகப்படுத்தும் குழுக்கள் நிறைய இருக்கின்றனவே, அவற்றுக்கு வெகுஜன அறிமுகம், அங்கீகாரம், துட்டுதான் காணோம் 🙂

//ராஜா வெறியனான நீங்கள் அவரைப் பற்றி அல்லாமல் ரஹ்மான் பற்றி புத்தகம் எழுத முன் வந்தது ஏன்? ரஹ்மான் ராஜாவை விட பரபரப்பானதெர்ரு விற்பனைப் பொருள் என்பதால்தானே?//

ராஜாவைப்பற்றி நான் எழுத நினைத்தாலும் ‘இன்னொருத்தர்’ விடமாட்டார், அது அவரோட டாபிக் என்று பிடுங்கி வைத்துக்கொண்டிருக்கிறார் 😉

Superb post!!
It ought to be mandatory reading for all the Tamil twitterers who periodically get into the same IR vs ARR argument.
Congrats on the book. எங்க ஊர்ல கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன்.

//க்கு, ராஜாவின் இடத்தைப் பிடிக்க இன்னொருவர் முயற்சி செய்கிறார், அதில் கணிசமான அளவு வெற்றியும் அடைந்துவிட்டார் என்பதே எங்களுக்குப் பெரிய Blasphemyயாகத் தோன்றியது. இதுபோன்ற வெற்றுக் கிண்டல்கள், கேலிகள், அவமானப்படுத்துதல்களின்மூலம் ரஹ்மானின் அந்த முயற்சியை முறியடித்துவிடமுடியும் என்று அசட்டுத்தனமாக நம்பினோம்.
//

இன்று வரை சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை

🙂 🙂

//அதன்பிறகு சினிமா நடிகர்களுக்கு ரசிகனாக இருப்பது பெரிய முட்டாள்தனம் என்றும் புரிந்துகொண்டேன்//

தளபதிக்கும் தல க்கும் பேனர் கட்டினால் மட்டம், இளையராஜாவுக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கும் விசிலடிச்சான் குஞ்சாக இருப்பது மேன்மையா !!

என்ன கொடுமை சார் இது

அருமையான பதிவு !

வாழ்த்துக்கள். விரைவில் ராஜாவைப்பற்றியும் எழுதுவீர்கள் என நம்புகிறோம்.

தல

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😉

உங்களுடைய இந்த பகிர்வு கலக்கல் 😉

\\ராஜாவைப்பற்றி நான் எழுத நினைத்தாலும் ‘இன்னொருத்தர்’ விடமாட்டார், அது அவரோட டாபிக் என்று பிடுங்கி வைத்துக்கொண்டிருக்கிறார் \\

அவரு யாருன்னு கூட சொல்லவேண்டாம் தல…அவரை எழுதி வெளியிட சொல்லுங்க அதுவே போதும் 😉

Vijay, புருனோ, Rajesh, கோபிநாத்,

நன்றி 🙂

//எங்க ஊர்ல கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன்//

எந்த ஊருங்க? 🙂

//தளபதிக்கும் தல க்கும் பேனர் கட்டினால் மட்டம், இளையராஜாவுக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கும் விசிலடிச்சான் குஞ்சாக இருப்பது மேன்மையா//

இதில் என்ன சந்தேகம் டாக்டர்? ராஜா, ரஹ்மானின் படைப்புத்திறனை தளபதி, தல-யின் நடிப்புத்திற(?)னுடன் ஒப்பிடமுடியுமா? 🙂

There is an obvious pride in being a fan of a creative person!

//அவரை எழுதி வெளியிட சொல்லுங்க அதுவே போதும்//

கண்டிப்பா எழுதுவார் – விரைவில்!

This article reflects how I feel about ARR. I didn’t know how to express this. Well done.

Glad to know.

Shall buy and read that book.

Greetings to you Chokkan.

Anbudan,
Srinivasan.

Dear Chokkan,

Very good one . Appadiye naan eppadi irrunthen endu solkiramathiri irrunthathu.

Oru Kaalathil Madan Mohan, Naushad, Jaidev,Salil Chowdri endu vadakku pakkam irruntha ennai Tamil pattu kelkha vaithathu Iilayaraja thaan.

Naanum Ungalai pola thaan sollikondiunthen.

எங்கள் பள்ளி நாட்களில், இளையராஜா – விஸ்வநாதன்; கமல்-ரஜினி, கவாஸ்கர்-விஸ்வநாத், பிரசன்னா-வெங்கட், சிவாஜி-எம்.ஜி.ஆர். ஆகியன பிரபலமான விவாதங்கள்.

இப்போது பிரபலமானது – மனைவியா-அம்மாவா (மனதுக்குள்ளேயே செய்து கொள்வது)

சிவாஜியை பற்றி ஒரு புத்தகம் எழுதுங்கள். நடிப்புலக மாமேதையை பற்றி படிக்க ஆவலாக இருக்கிறது.

your blogpost itself tell me about the book.

இந்த நாட்ல கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன்

Bala
Kuwait.

வாழ்த்துகள்.

நீங்க முறையாக இசை பயின்றதுண்டா? இந்தப் புத்தகத்தை வாங்கினால், ரெஹ்மானின் செவ்வியல் (மேற்கத்திய, நம்ம பக்கம்) ஒப்புமை எல்லாம் கலந்துகட்டி அறிமுகமாக அத்தியாயம் ஏதேனும் உண்டா?

ரெஹ்மானின் வாழ்க்கை, சுவையான சம்பவங்கள் என்பதை விட அவருடைய பாணி ஏன் வேறுபடுகிறது, எங்கு உள்வாங்கியுள்ளது, எவ்வாறு similarஆக இருக்கு என்பதை அறிவியல்பூர்வமாக சொல்லும் கட்டுரை அடங்கியுள்ளதா?

//Oru Kaalathil Madan Mohan, Naushad, Jaidev,Salil Chowdri endu vadakku pakkam irruntha ennai Tamil pattu kelkha vaithathu Iilayaraja thaan.//

இந்தி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் இளையராஜா
இந்தி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த இந்திக்காரர்களையும் தமிழ் பாட்டு கேட்க வைத்தது யார் என்று நினைக்கிறீர்கள் 🙂 🙂 🙂

வாழ்த்துக்கள்..

/*அதற்கான குறைந்தபட்ச முயற்சிகளில்கூட அவரோ, அவரைச் சுற்றியிருந்தவர்களோ ஈடுபடவில்லை எனும்போது, அந்த ஏமாற்றம் நியாயமற்றதாகிறது.
*/

ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? ரஹ்மான் முயற்சி எடுத்ததால் தான் அவருக்கு பாம்பே சான்ஸும் ஹாலிவுட் சான்ஸும் கிடைத்ததா? இல்லை. ரோஜாவின் தேசிய விருதும், காதலன் படத்தில் அவரது விறு விறு இசையும், பிரபு தேவாவின் ரப்பர் நடனமும் அவரது பாடல்களுக்கு நல்ல ரீச் கொடுத்தன. அதன் பிறகு வந்த ரங்கீலா அவருக்கு பாம்பேயில் ஸ்திரமான இடத்தைத் தந்தது. வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன என்பதுதான் சரி. அதன்பிறகு அவர் தன் திறமையால் முன்னேறினார்.
ராஜா தெ.இந்தியாவைத் தாண்டி போகவில்லை என்பதைவிட போக முடியவில்லை என்பதுதான் சரி. நாயகன் படம் ஒரு உலுக்கு உலுக்கி எடுத்தாலும் மணிரத்னத்தினாலும் பாம்பேக்கு உடனடியாக போக முடியவில்லையே. நாயகன் வந்து பல வருடங்களுக்குப் பின் தான் அவரும் பாம்பேக்குப் போக முடிந்தது.

இதெல்லாம் கண்ணதாசன் பாஷையில் சொல்ல வேண்டுமானால் ‘புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை’. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

shasi, Srinivasan, Kesava Pillai, R Sathyamurthy, Balakumaran, SnapJudge, புருனோ, Mani, தி.சு.பா.,

நன்றி 🙂

//சிவாஜியை பற்றி ஒரு புத்தகம் எழுதுங்கள்//

சந்தர்ப்பம் அமைந்தால் நிச்சயம் எழுதுகிறேன். நன்றி!

//இந்த நாட்ல கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன். Kuwait//

கிழக்கு புத்தகங்கள் குவைத்தில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. விசாரித்து எழுதுகிறேன்.

//நீங்க முறையாக இசை பயின்றதுண்டா?//

இல்லை. கேள்வி ஞானம்மட்டுமே

//ரெஹ்மானின் செவ்வியல் (மேற்கத்திய, நம்ம பக்கம்) ஒப்புமை எல்லாம் அறிமுகமாக அத்தியாயம் உண்டா? ரெஹ்மானின் பாணி ஏன் வேறுபடுகிறது, எங்கு உள்வாங்கியுள்ளது, எவ்வாறு similarஆக இருக்கு என்பதை அறிவியல்பூர்வமாக சொல்லும் கட்டுரை//

ஏ. ஆர். ரஹ்மானின் இசை பாணியைப்பற்றித் தனி அத்தியாயம் போட்டு விளக்கவில்லை. ஆனால் புத்தகம்முழுக்க அதுபற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் அவை (என்னைப்போன்ற) பொதுவான ரசிகர்கள் / வாசகர்கள் புரிந்துகொள்ளக்கூடிய அளவில்மட்டுமே. இசை பயின்றவர்கள் ரஹ்மானின் பாணியை இன்னும் நுணுக்கமாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்கிற **ஒரே** நோக்குடன் இந்தப் புத்தகத்தை அணுகினால் நிச்சயம் ஏமாற்றமடைவார்கள் – அப்படியொரு புத்தகத்தை எழுதக்கூடிய தகுதியும் எனக்கு இல்லை – நான் ரஹ்மானின் வாழ்க்கை, அவரது இசை பாணி வெற்றியடைந்தது என்றால் அதற்கு என்ன காரணங்கள் என்கிற அளவில்மட்டுமே எழுதியிருக்கிறேன்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், என் அம்பானி புத்தகத்தில் Chemical Engineering, சச்சின் புத்தகத்தில் Cricketing Techniques, அண்ணா புத்தகத்தில் அரசியல் நுணுக்கங்கள் எந்த அளவு இருக்குமோ, அதே அளவு இதில் ரஹ்மானின் இசை பாணி இருக்கும். அவ்வளவே.

//இந்தி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த இந்திக்காரர்களையும் தமிழ் பாட்டு கேட்க வைத்தது யார் என்று நினைக்கிறீர்கள்//

அதான் எல்லோருக்கும் தெரியுமே? 🙂 ரஹ்மான் அதைச் செய்தார் என்பதற்காக நேற்றைக்கு ராஜா செய்ததைச் சொல்லக்கூடாது என்கிறீர்களா? 🙂

//ரஹ்மான் முயற்சி எடுத்ததால் தான் அவருக்கு பாம்பே சான்ஸும் ஹாலிவுட் சான்ஸும் கிடைத்ததா? இல்லை. வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன என்பதுதான் சரி//

இந்த விஷயத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை நண்பரே. ரஹ்மானின் ஒட்டுமொத்த Career Growth-உம் அவர் மிகக் கவனமாகத் திட்டமிட்டு உழைத்து முன்னேறியது. ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அடுத்து எங்கே போகவேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார், அதற்கான வாய்ப்புகளைத் தேடியிருக்கிறார், எதுவும் அவர் மடியில் தானாக வந்து விழவில்லை என்பது என் கருத்து.

Of Course, ஆரம்ப காலத்தில் அவர் தானாக வந்த சில வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு கட்டத்துக்குப்பிறகு (இன்றுவரை) அவர் தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளை மிகவும் கவனமாகவே செய்கிறார். அந்த முனைப்பு, உழைப்பு ராஜாவிடம் இல்லை என்பது என் கருத்து – ராஜா தனது இசை மேதைமை எல்லாவற்றையும் கொண்டுவந்து தரும் என்கிற மனோநிலையில் இருந்துவிட்டார், இன்று அவர் மகன் யுவன் ஷங்கர் ராஜா தனது ‘ஸ்திர’ நிலையிலிருந்து வெளியே போகவேண்டும் என்பதற்காகச் செய்கிற சில முயற்சிகளைக்கூட, ராஜா தனது Peak காலகட்டத்தில் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன் – இது தனியே விரிவாகப் பேசவேண்டிய விஷயம்.

//ராஜா தெ.இந்தியாவைத் தாண்டி போகவில்லை என்பதைவிட போக முடியவில்லை என்பதுதான் சரி//

முழுக்க ஏற்கிறேன். அதேசமயம், அவர் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடவில்லை என்பதும் உண்மை – இது சப்பைக்கட்டு அல்ல, அவருடைய திறமையைக் குறைத்து மதிப்பிடுவதும் அல்ல.

//புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை’. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை//

அழகான Summary 🙂 நன்றி!

வாழ்த்துக்கள் சொக்கன்!

சூப்பர். வாழ்த்துக்கள். 🙂

“ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்று சில வாரங்களுக்குப்பின், அவருடைய வெற்றிக் கதையைப் புத்தகமாக எழுதுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் புத்தகம் இன்று வெளியாகியிருக்கிறது.” – This summarizes all the thoughts, actions and motives behind this article!

This is nothing different from the strategy of Sun TV/Sooriyan FM advertising “Maasillaamani”/Dhinakaran, Kumudham advertising Aahaa FM (and vice versa), Vikatan advertising “Siva Manasula Sakthi”, etc.

Mr Chokkan cannot claim that all fans of Ilayaraja feel exactly like him. What he has mentioned is just his personal opinion. It doesn’t mean that everything in his post and the comments received for it point towards the truth. People like Bruno can’t rejoice just because Chokkan has written about Rahman. Why is it always perceived that Ilayaraja fans hate Rahman irrespective of his talent while it is considered OK for ‘so called’ Rahman fans to criticize Ilayaraja without even knowing music in its shallowest depth?

Both the plus and minus of Ilayaraja’s music is its nativity. So, it is not intended to entertain cross-cultural audience. The situation would have been different if he had regularly composed for Hindi movies in the 80’s and 90’s. But, that was hampered when the movie ‘Mahadev’ was released with re-recording done by someone else, without Ilayaraja’s knowledge. Everyone knows how many tunes of his were copied with and without modifications by Hindi music directors in those days!

“ராஜா தெ.இந்தியாவைத் தாண்டி போகவில்லை என்பதைவிட போக முடியவில்லை என்பதுதான் சரி.” – Poga mudiyavillai enbadhu kooda sari illai; virumbavillai enbadhu dhaan unmai! Rajavaip poruthavarai isai mukkiyam endru ninaikkirare thavira kaLam mukkiyam endru ninaippadhillai.

How one wants to build his career is his personal choice. Just because more people know a personality, it doesn’t mean he is the greatest. Michael Jackson is (still) popular than A R Rahman, but that should be seen as the linguistic advantage of their creative language and not in any other way. Will Dan Brown be this popular today if he was born in Tamil Nadu and written ‘The Da Vinci Code’ in Tamil? It is the privilege of being a writer in the language most widely spoken in the world that he enjoys! Will you say he is more talented than Sujatha because more people in the world know him?

An important reason for the popularity of Rahman’s music is that it is nativity-free unless the director wants it otherwise. This is not a fault that I find in him. In fact, this is exactly what he mentioned in one of his earliest interviews: “isaiyil oru podhuth thanmai irukkiradhu; adhuve enakkup pidikkum; ellorum ketkak koodiya vagaiyil podhuvaana isaiyaik koduppadhaiye naan virumbigiren”. So, I think it is better to let them go in their own preferred paths towards their chosen destinations rather than pulling them together and comparing them just because we want to be amused!

There are many many Telugu, Kannada, Malayalam and some Hindi-speaking people who love Ilayaraja for being his native self for any language that he composes. In fact, listen to ‘Maa Ganga’ from ‘Naan Kadavul’ – play it to a North Indian who doesn’t know this song or this film – he will not say it is composed by a South Indian. This is enough for Raja. Nothing else is required!

Business and market form one side of a coin and skill and talent, the other. Superficial ‘fans’ of Raja may have preferred the former but true fans who have realised his music would prefer to enjoy the latter side of the coin, irrespective of whether the former exists or not!

ஜெ. உமா மகேஸ்வரன், சேவியர், Anamika,

நன்றி 🙂

//This summarizes all the thoughts, actions and motives behind this article!//

அன்புள்ள அனாமிகா, நான் மிகச் சரியாக இதே வரிக்குக் கீழே புத்தகத்தின் அட்டைப் படம் போட்டு இந்தப் பதிவின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறேன் – இதற்குத் தரப்பட்டிருக்கும் Tagகளில் ஒன்றாக ‘ViLambaram’ என்பதும் இருப்பதைக் கவனியுங்கள்.

நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல, இந்தப் பதிவின் நோக்கம், நான் எழுதிய புத்தகத்தைப்பற்றிச் சொல்வதுதான் – ராஜா, ரஹ்மான் ஒப்பீட்டு ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதுவது அல்ல. இதை நான் அப்போதும் மறைக்கவில்லை, இப்போதும் மறுக்கவில்லை.

அதேசமயம், இதை நான் வெறும் விளம்பரமாக எழுத நினைத்திருந்தால் 4 வரியில் நன்றாகப் பொம்மையெல்லாம் போட்டு அசத்தப் பார்த்திருப்பேன், இத்தனை பக்கம் வளவளவென்று எழுதி படிக்கவருகிறவர்களை விரட்டவேண்டிய அவசியம் இல்லை – ரஹ்மான் புத்தகம் எழுதிய நேரத்தில், ராஜா – ரஹ்மான் விவகாரத்தில் என்னுடைய அனுபவங்களை எழுத நினைத்தேன். அவ்வளவே – அதை நான் என்னளவில் நேர்மையாகவே எழுதியிருக்கிறேன், ரஹ்மான் புத்தகம் விற்கவேண்டும் என்பதற்காக அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடவும் இல்லை, ராஜாவைக் கீழே போட்டு மிதிக்கவும் இல்லை.

//This is nothing different from the strategy of Sun TV/Sooriyan FM advertising “Maasillaamani”/Dhinakaran, Kumudham advertising Aahaa FM (and vice versa), Vikatan advertising “Siva Manasula Sakthi”, etc.,//

கண்டிப்பாக. உலக அளவில் எல்லோரும் செய்வதுதானே இது? எந்த எழுத்தாளரின் வலைப்பதிவில் அவர்கள் எழுதிய புதுப் புத்தகம்பற்றிய அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது? இங்கேகூட (அதுவும் ‘விளம்பரம்’ என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டு) இதை எழுதாவிட்டால் நாங்கள் வேறு எங்கே எழுதமுடியும்?

என்னுடைய வலைப்பதிவைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரியும். நான் இங்கே என் புத்தகங்களை / பத்திரிகைக் கட்டுரைகள் / தொடர்களைப்பற்றி எழுதுவது மிக அபூர்வம், இப்படி ஏதாவது புதுப் புத்தகம் / தொடர் வெளியானால்மட்டுமே அவைபற்றி எழுதுகிறேன், அதைக்கூடச் செய்யக்கூடாது என்றால், என்னால் ஏற்கமுடியவில்லை.

//Mr Chokkan cannot claim that all fans of Ilayaraja feel exactly like him. What he has mentioned is just his personal opinion. It doesn’t mean that everything in his post and the comments received for it point towards the truth//

நான் அப்படி இந்தப் பதிவில் எங்கேயும் எழுதியிருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு தொனி என்னையும் மீறி விழுந்திருந்தால், சுட்டிக்காட்டுங்கள், மன்னிப்புக் கேட்டுத் திருத்திவிடுகிறேன்.

ஒருவேளை ‘நாங்கள்’ ‘செய்தோம்’ என்பதுபோன்ற வார்த்தைகள் உங்களை இப்படி நினைக்கத் தூண்டியிருக்கலாம் என்று நினைக்கிறேன். அவை என்னையும் என்னுடைய (கல்லூரி) நண்பர்களையும் குறிப்பிடுபவை, அனைத்து ராஜா ரசிகர்களையும் குறிப்பிட்டுப் பேசுபவை அல்ல

I repeat – this is purely my personal opinion / feelings about Rahman – I don’t (and can’t) claim it as a ‘அகில உலக ராஜா ரசிகர் மன்றத்தினரின் அதிகாரப்பூர்வமான ஒப்புதல் வாக்குமூலம்’. சரியா?

இதற்குமேல் நீங்கள் எழுதியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் ராஜா – ரஹ்மான் தொடர்பானவை. அதற்கு நான் ஏதாவது பதில் சொன்னால் அது இன்னும் தவறாகப் புரிந்துகொள்ளப்படி வாய்ப்பிருக்கிறது. ஆகவே, சுருக்கமாக ஒரு தன்னிலை விளக்கம் சொல்லி முடித்துக்கொள்கிறேன்: நிச்சயமாக இந்தப் பதிவுக்கு விளம்பர நோக்கமும் இருக்கிறது. அதுமட்டுமே நோக்கம் என்று நீங்கள் நினைத்தால், நான் பொறுப்பில்லை!

அனாமிகா!

//This summarizes all the thoughts, actions and motives behind this article!

This is nothing different from the strategy of Sun TV/Sooriyan FM advertising “Maasillaamani”/Dhinakaran, Kumudham advertising Aahaa FM (and vice versa), Vikatan advertising “Siva Manasula Sakthi”, etc.//

விளம்பர யுக்தி என்றால் உடனே சன் டிவி மட்டும்தானா? சொக்கன் எழுதிய புத்தகத்தைப் பற்றி அவரோட பதிவில் எழுதாமல் வேறு எங்கே எழுதுவார்? ஜெஃப்ரி ஆர்ச்சரிலிருந்து, ‘கற்றது தமிழ்’ இயக்குநர் இராம் வரை பதிவுகளில் தங்கள் ஆக்கங்களைப் பற்றி எழுதிக் கொண்டுதானிருக்கிறார்கள். சரி… ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்கிறீர்கள் போலிருக்கிறது.

சொக்கன்!

//இன்றைக்கும், நான் ஜீனியஸ் என்று இரண்டே பேரைதான் சொல்வேன். ஒன்று, சச்சின் டெண்டுல்கர், இன்னொன்று, இளையராஜா, இந்த இருவரும் இல்லாவிட்டால் என்னுடைய இத்தனை வருட வாழ்க்கை படுமோசமாகப் போரடித்திருக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை.//

🙂 இன்னமும் 5 வருடங்களில் சச்சின் மேலிருக்கும் பித்தும் கரைந்து போகாதா? இப்படிப்பட்ட ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நிறைய ஜீனியஸ் காத்துக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் அறிமுகம் கிடைக்க :))

இம்மாதிரியான புத்தகங்களை குறுகிய காலத்தில் முழுமையாக கொண்டு வருவதற்கான உழைப்பு மிகவும் கடுமையானது. அதுவும் நீங்கள் தொடர்ந்து அலுப்பில்லாமல் பல குறிக்கோள்களை வெற்றிகரமாகத் தாண்டிக் கொண்டு செல்கிறீர்கள். மிகவும் பாராட்டத்தக்கது. ஏனோ அதைப் பாராட்டாமல் மக்கள் இராஜா, ரகுமான் சண்டைக்குள் புகுவதற்கு இடமளிக்குமாறு இந்தப் பதிவை எழுதிவிட்டீர்கள் என்று தோன்றுகிறது.

மேலும் பல புத்தகங்கள் இன்னமும் சிறப்பாக எழுத வாழ்த்துகள். கலக்குங்கள்!

Sridhar Narayanan,

நன்றி 🙂

//இன்னமும் 5 வருடங்களில் சச்சின் மேலிருக்கும் பித்தும் கரைந்து போகாதா?//

ராஜாபற்றிய பித்து கரைந்துவிட்டது என்றா சொன்னேன்? இல்லையே 😉

ஒரு நண்பர் கூகுள் அரட்டையில் இதுபற்றிக் கேட்டார், ’இத்தனை படிக்கறீங்க, ஓர் எழுத்தாளர்கூடவா உங்களுக்கு ஜீனியஸாத் தோணலை?’ என்று – அவருக்கு ஸ்மைலிதான் பதிலாகத் தரமுடிந்தது.

சச்சின் – ராஜா விஷயம் ஸ்வீப்பிங் ஸ்டேட்மென்ட் என்பது புரிகிறது. ஆனால் நான் என்ன செய்ய? என்னால் அவர்கள் இருவருக்கு இணையாக வேறு யாரையும் நிறுத்திவைத்துப் பார்க்கமுடிவதில்லை – எந்தத் துறையிலும் சரி – இது அதீத உணர்ச்சிவயப்படலாக இருந்தாலும், அதை மறைக்காமல் ஒப்புக்கொள்வதில் எனக்குத் தயக்கம் எதுவும் இல்லை – இதேபோல் உங்களுக்கும் மற்ற எல்லோருக்கும் ஒரு ஜீனியஸ் பட்டியல் மனத்துக்குள் இருக்கும் என்று நினைக்கிறேன் 🙂

//நிறைய ஜீனியஸ் காத்துக் கொண்டிருக்கிறார்கள்//

இந்த மனத்தடை உடைந்தால்தான் நான் அவர்களை ஜீனியஸாக ஏற்றுக்கொள்வேனோ? 😉 உங்கள் கருத்துக்கான காரணம் இப்போது புரிகிறது 🙂

//இம்மாதிரியான புத்தகங்களை குறுகிய காலத்தில் முழுமையாக கொண்டு வருவதற்கான உழைப்பு மிகவும் கடுமையானது. அதுவும் நீங்கள் தொடர்ந்து அலுப்பில்லாமல் பல குறிக்கோள்களை வெற்றிகரமாகத் தாண்டிக் கொண்டு செல்கிறீர்கள். மிகவும் பாராட்டத்தக்கது. ஏனோ அதைப் பாராட்டாமல் மக்கள் இராஜா, ரகுமான் சண்டைக்குள் புகுவதற்கு இடமளிக்குமாறு இந்தப் பதிவை எழுதிவிட்டீர்கள் என்று தோன்றுகிறது//

அப்படி நினைத்து எழுதவில்லை. எனக்கு ‘நீங்க எப்படி எழுதறீங்க’ என்கிற கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாது. அதனால் எழுதிய விஷயத்தைப்பற்றிய என் உணர்வுகளைப் பதிவு செய்தேன். அவ்வளவுதான்.

திரு. சொக்கன் அவர்களே,

//அன்புள்ள அனாமிகா, நான் மிகச் சரியாக இதே வரிக்குக் கீழே புத்தகத்தின் அட்டைப் படம் போட்டு இந்தப் பதிவின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறேன் – இதற்குத் தரப்பட்டிருக்கும் Tagகளில் ஒன்றாக ‘ViLambaram’ என்பதும் இருப்பதைக் கவனியுங்கள்.//

இதை நான் கவனிக்கவில்லை; மன்னிக்கவும்! கவனித்திருந்தாலும் இல்லாவிடிலும் என் பக்கத்திலிருந்து ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். உங்கள் வலைப்பதிவில் நீங்கள் விளம்பரம் செய்வதை நான் தவறென்று கூறவில்லை. அப்படிக் கூறுவதும் தவறு. நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்; இப்பொருளைப் பற்றித் தான் எழுத வேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

என் ஒரே ஆதங்கம் என்னவென்றால் நீங்கள் தொடர்பில்லாமல் இளையராஜாவை இத்தலைப்பிற்குள் இழுத்திருப்பது! உங்கள் பதிவின் தலைப்பு ரஹ்மானாக இருக்கையில் நீங்கள் ஏன் ராஜாவின் மீதான உங்கள் அபிமானத்தை இக்கட்டுரையில் காண்பிக்க நினைக்க வேண்டும்? காலம் காலமாக ராஜா ரசிகராக நீங்கள் உணரப்பட்டிருக்கிறீர்களே, அதைத் தாண்டி ரஹ்மானிடம் நீங்கள் கண்ட நல்ல விஷயங்களை எடுத்துரைத்து உங்கள் வாசகர்களின் மனநிலையை உங்கள் புத்தகத்தின் பாடுபொருளுக்காக மாற்றியமைக்க நீங்கள் செய்யும் ஒரு தந்திரம் போல் இது தோன்றுகிறதே! இதைக் கண்டு தான் நான் வருந்துகிறேன். நான் முதலிலேயே சொன்னதைப் போல் ராஜாவைக் குறிப்பிடாமல் ரஹ்மானைப் பற்றி மட்டுமே நீங்கள் எழுதியிருந்தால் உங்கள் விளம்பர நோக்கத்தில் பிழை இருந்திருக்காது!

//நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல, இந்தப் பதிவின் நோக்கம், நான் எழுதிய புத்தகத்தைப்பற்றிச் சொல்வதுதான் – ராஜா, ரஹ்மான் ஒப்பீட்டு ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதுவது அல்ல.//

இது உண்மையானால், நீங்கள் உங்கள் பதிவில் பல சொற்றொடர்களைத் தவிர்த்திருக்கலாம். மேற்குறிப்பிட்ட சொற்றொடருக்கும் ‘‘ரஹ்மான் புத்தகம் எழுதிய நேரத்தில், ராஜா – ரஹ்மான் விவகாரத்தில் என்னுடைய அனுபவங்களை எழுத நினைத்தேன்” என்னும் சொற்றொடருக்கும் பொருத்தம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

//ராஜாவைக் கீழே போட்டு மிதிக்கவும் இல்லை//

//ஒருவிதத்தில், இவை எல்லாமே இயலாமையின் வெளிப்பாடுகள்தான். தமிழ் சினிமாவில் ராஜாவின் காலம் (அப்போதே) முடிந்துவிட்டது. அதை ஏற்றுக்கொண்டு, அவர் ‘செய்த’ விஷயங்களை நினைத்துமட்டும் சந்தோஷப்படுகிற மன முதிர்ச்சி எங்களுக்கு இல்லை. //

//ஒருகட்டத்தில் ராஜாவும்கூடப் பதவி விலகவேண்டியிருக்கும் என்பது புரிந்தது.//

மேற்கண்ட சொற்றொடர்களைப் பார்த்து விட்டு நீங்களே சொல்லுங்கள் – இது oxymoron கிடையாதா? நீங்கள் குறிப்பிட்டிருக்கும் “அப்போதே” என்பது 1994ஆம் ஆண்டு என்று (தோராயமாக) வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், கடந்த 15 ஆண்டுகளாக நீங்கள் ராஜாவை விட்டு விலகிப் போய் விட்டீர்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டியிருக்கும்.

//அதைக்கூடச் செய்யக்கூடாது என்றால், என்னால் ஏற்கமுடியவில்லை//

மன்னிக்கவும். நான் அவ்வாறு கூறவில்லை. தொடர்ந்து உங்கள் படைப்புகளை உங்கள் வலைப்பதிவில் விளக்கமாகவே எழுதுங்கள். இன்னும் சொல்லப் போனால், அப்படி எழுதாமல் இருப்பது தான் இன்றைய வணிகமயமான உலகில் மிகப் பெரிய முட்டாள்தனமாக இருக்கும். ஆனால், நீங்கள் ‘ViLambaram’, ‘A. R. Rahman’ என்னும் tags-ஐ மட்டுமின்றி ‘Ilayaraja’ என்னும் tag-ஐயும் உபயோகித்திருப்பது தான் இங்கு சிக்கலை உருவாக்குகிறது. இளையராஜாவைப் பயன்படுத்தி, குறிப்பாக இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் இடையே அவர்களுடைய ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் நடத்தப்படும் குழாயடிச் சண்டையைப் பயன்படுத்தி உங்கள் புத்தகத்தைப் பற்றி விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன். நீங்கள் அந்த நோக்கத்தில் எழுதினீர்கள் என்று சொல்லவில்லை. ஆனால், உங்கள் எழுத்துக்களைப் படிப்பவர்கள் அவற்றை எந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்வார்கள் என்று இன்னொரு முறை நீங்கள் சிந்திக்கலாமே என்று தான் சொல்ல வருகிறேன்.

//நான் அப்படி இந்தப் பதிவில் எங்கேயும் எழுதியிருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு தொனி என்னையும் மீறி விழுந்திருந்தால், சுட்டிக்காட்டுங்கள், மன்னிப்புக் கேட்டுத் திருத்திவிடுகிறேன்.//

அப்படி ஒரு தொனி உங்கள் எழுத்தில் இல்லை. இந்த வாக்கியங்கள் உங்களுக்காக எழுதப்பட்டவை அல்ல. நண்பர் புருனோ இங்கே தன் கருத்துக்களைப் பதிக்கத் தொடங்கிவிட்டார். அவர் போன்றவர்கள் இக்கருத்தை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வார்கள் என்று எனக்குத் தெரியும். அதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை வாக்கியம்.

//அதுமட்டுமே நோக்கம் என்று நீங்கள் நினைத்தால், நான் பொறுப்பில்லை!//

நான் அப்படி நினைக்கவில்லை. என் பின்னூட்டத்திற்கு பதில் எழுதியதற்கு மிக்க நன்றி!

ஸ்ரீதர்,

உங்கள் கேள்விக்கும் சேர்த்தே பதில் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. சொல்ல விஷயம் இருப்பதால் சொல்கிறேன்.

என் பின்னூட்டத்திற்கு பதில் எழுதியதற்கு மிக்க நன்றி!

//உங்களுக்கும் மற்ற எல்லோருக்கும் ஒரு ஜீனியஸ் பட்டியல் மனத்துக்குள் இருக்கும் என்று நினைக்கிறேன் //

கண்டிப்பாக உண்டு. ஆனால் அந்தப் பட்டியலை சோதனைகுட்படுத்திக் கொண்டே இருப்பேன். touch of genius என்று சொல்வார்கள். ஒருவரின் ஏதோ ஒரு செயலில் அது பளீரென்று தெரியும். அந்த மாதிரி அனுபவம் நிறைய ஏற்பட்டு இருக்கிறது.

சச்சின் ஜீனியஸ் பட்டியலிலிருந்து ‘consistent performer with great humility’ என்ற பட்டியலுக்கு மாற்றிக் கொண்டுவிட்டேன் தற்சமயம். 🙂

//Mr Chokkan cannot claim that all fans of Ilayaraja feel exactly like him. What he has mentioned is just his personal opinion. It doesn’t mean that everything in his post and the comments received for it point towards the truth.//

அது அவரது தனிப்பட்ட கருத்து. அதை அவர் தெளிவாகவே கூறியிருக்கிறார்

//People like Bruno can’t rejoice just because Chokkan has written about Rahman.//

சொக்கன் எழுதுவதற்கும் நாங்கள் மகிழ்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

// Why is it always perceived that Ilayaraja fans hate Rahman irrespective of his talent//

உங்கள் மறுமொழியை பார்த்து வேறு எப்படி perceive செய்து கொள்வது தான்

// while it is considered OK for ’so called’ Rahman fans to criticize Ilayaraja without even knowing music in its shallowest depth?//

இளையராஜாவின் இசையை நான் விமர்சணம் செய்தது கிடையாது. நான் அவரது இசையின் ரசிகன்.

ஆனால் அவரது நேர்மை(குறைவை) நான் விமர்சிக்க தயங்கியது கிடையாது

நான் ரஜினி ரசிகன் தான். ஆனால் ”குசேலன் statementஐ” விமர்சித்தேன்

இளையராஜா மாபெரும் இசை மேதை என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது

ஆனால் அவர் தொடமுடியாத உயரங்களை எல்லாம் தொட்டவர் ரஹ்மான் என்பதை யாராலும் மறுக்க முடியாது

அஞ்சலி, அக்னி நட்சத்திரம் எல்லாம் கேட்டுவிட்டு ராஜாவின் இசைக்கு nativity தான் காரணம் என்றெல்லாம் சொல்லாதீர்கள். பாரதிராஜாவின் பாதிப்பால் 80களில் கிராம வாசனை வீசியது அவ்வளவே. அதனால் ராஜா இசை nativity என்பதெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது.

தேனியில் கிராமத்தில் பிறந்த ராஜா தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று கலக்கினார். அப்படிபட்டவருக்கு பாம்பேக்கு போக எவ்வளவு நேரம் பிடிக்கும். வாய்ப்பு வரவில்லை நண்பரே. இப்பொழுது ரஹ்மானுக்கு ஹாலிவுட்டிலிருந்து அழைப்பு வந்தால் அதற்கு ரஹ்மானின் முயற்சி தான் காரணம் என்றா சொல்ல முடியுமா? கண்டிப்பாக கிடையாது. ஜெய் ஹோவும், ஆஸ்கார் விருதின் கவுரவமும் தான் ஹாலிவுட் வாய்ப்பை அவருக்குப் பெற்று தரும் என்று என்னால் ஆனித்தரமாக சொல்ல முடியும். ரஹ்மானின் திறமையால் எல்லா வாய்ப்புகளும் அவருக்கு தானாக வருகிறது என்பதே சரி. ரஹ்மான் தன் திறமையால் நல்ல பாடல்களைத் தந்தார். அதனால் அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தன என்று தான் சொல்ல முடிகிறது. அவர் கவனமா ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தார் என்றால் ஹாலிவுட் வாய்ப்புக்காக அவர் இப்பொழுது LA வில் குடிபுகுந்து இருக்க வேண்டும். இல்லையே?

முயற்சியால் வாய்ப்பா? அல்ல வாய்ப்புக்கு பின் முயற்சியா? என்றால் ரஹ்மான் இசை பயணத்தில் பின்னதே! நன்றி. தி.சு.பா.

//How one wants to build his career is his personal choice. Just because more people know a personality, it doesn’t mean he is the greatest. Michael Jackson is (still) popular than A R Rahman, but that should be seen as the linguistic advantage of their creative language and not in any other way. Will Dan Brown be this popular today if he was born in Tamil Nadu and written ‘The Da Vinci Code’ in Tamil? It is the privilege of being a writer in the language most widely spoken in the world that he enjoys! Will you say he is more talented than Sujatha because more people in the world know him?//

டான் பிரவுன் ஆங்கிலேயர்
சுஜாதா தமிழர்

மைக்கேல் ஜாக்சன் ஆங்கிலேயர்
இளையராஜா தமிழர்
ஏ.ஆர்.ஆர் தமிழர்

ஆக உங்கள் உதாரணத்தில் கோளாறு உள்ளது 🙂 🙂 🙂

// இன்னமும் 5 வருடங்களில் சச்சின் மேலிருக்கும் பித்தும் கரைந்து போகாதா? //

அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பித்து கண்டிப்பாக கரையும் ஆனால் எப்படி பிராட்மனின் மேலுள்ள பித்து கரைந்து போகவில்லையோ, எப்படி விவியன் ரிச்சர்ட்சின் மேலுள்ள பித்து கரைந்து போகவில்லையோ அது போல் சச்சின் மேலிருக்கும் பித்து (அதாவது அவர் ஜீனியஸ் என்ற பித்து) கரையாது

ரகுமானின் முக்கிய பலம பன்முகத்தன்மை ( versatility) . அருமையான புது பாடகர்களை அறிமுகபடுத்துகிறார். புத்தகத்தை வாசித்து விட்டு சொல்கிறேன் 🙂

//எப்படி விவியன் ரிச்சர்ட்சின் மேலுள்ள பித்து கரைந்து போகவில்லையோ அது போல் சச்சின் மேலிருக்கும் பித்து (அதாவது அவர் ஜீனியஸ் என்ற பித்து) கரையாது//

உங்களுக்கு கரையாதிருக்கலாம் டாக்டர். சொக்கனுக்கு கமல் மேல் இருக்கும் பித்து கரைந்து போயிருக்கிறத். அதற்காக நான் கமலை குறைவாக மதிப்பிடவில்லை. சொக்கன் இவர்தான் ஜீனியஸ்’ என்ற பித்து நிலையை கடந்து வந்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டே அதை எழுதினேன்.

அது மட்டுமல்லாமல் ‘இரண்டே பேர்தான்’ என்று தனது பரப்பளவை குறுக்கிக் கொண்டது போல் தோன்றியது. அதனால் அப்படி எழுதினேன்.

அனாமிகா, Sridhar Narayanan, புருனோ, தி.சு.பா., Prakash,

நன்றி 🙂

//என் ஒரே ஆதங்கம் என்னவென்றால் நீங்கள் தொடர்பில்லாமல் இளையராஜாவை இத்தலைப்பிற்குள் இழுத்திருப்பது!//

உங்கள் முந்தைய பின்னூட்டத்தில் நான் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் பதில் சொல்லிவிட்டேன். மன்னிக்கவும்.

ரஹ்மானுக்குத் தொடர்பில்லாத ராஜாவை இந்தப் பதிவில் இழுத்துவிட்டது உண்மைதான். ஆனால் நான் ரஹ்மான்பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன் என்றதும், அட்லீஸ்ட் என்னுடன் பழகிய நண்பர்களுடைய உடனடி Reaction, ‘நீதான் பெரிய ராஜா பித்தனாச்சே, நீ எப்படி ரஹ்மான்பத்தி எழுதப் போச்சு?’ என்பதாகதான் இருக்கு. அதற்கு விளக்கம் கொடுப்பதாக நினைத்தே ராஜாவை இங்கே இழுத்தேன், மற்றபடி சண்டையைத் தூண்டிவிட்டுக் குளிர்காய்கிற நோக்கம் சத்தியமாக இல்லை, நம்புங்கள் 🙂

//ராஜாவைக் குறிப்பிடாமல் ரஹ்மானைப் பற்றி மட்டுமே நீங்கள் எழுதியிருந்தால் உங்கள் விளம்பர நோக்கத்தில் பிழை இருந்திருக்காது!//

உண்மைதான். ஆனால் ரஹ்மான்பற்றி(மட்டும்) நான் உணர்ந்தவற்றையெல்லாம் புத்தகத்தில் எழுதிவிட்டேன். பேசாமல் அதிலிருந்து ஓர் அத்தியாயத்தை இங்கே எடுத்துப்போட்டிருக்கலாம் 🙂

//நீங்கள் குறிப்பிட்டிருக்கும் “அப்போதே” என்பது 1994ஆம் ஆண்டு என்று (தோராயமாக) வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், கடந்த 15 ஆண்டுகளாக நீங்கள் ராஜாவை விட்டு விலகிப் போய் விட்டீர்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டியிருக்கும்//

ரஹ்மான் ஜெயித்துவிட்டார் என்பது ஒரு Statement. அதனால் நான் ராஜாவைவிட்டு விலகிவிட்டேன் என்பது அர்த்தமாகிவிடாது. தற்சமயம் ஜெயித்துக்கொண்டிருக்கிறவர்களுக்குமட்டும்தான் ரசிகர்கள் இருக்கவேண்டுமா என்ன?

//இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் இடையே அவர்களுடைய ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் நடத்தப்படும் குழாயடிச் சண்டையைப் பயன்படுத்தி உங்கள் புத்தகத்தைப் பற்றி விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன்//

எனக்கு இல்லை. அப்படி ஒரு நோக்கமும் இல்லை. தவறுதலாக அப்படி ஒரு தொனி வந்திருக்கலாம். அதற்காகவே இந்த விவாதம் நீளமானாலும் பரவாயில்லை என்று திரும்பத் திரும்ப விளக்கம் சொல்லிவிடுகிறேன் 🙂

//கண்டிப்பாக உண்டு. ஆனால் அந்தப் பட்டியலை சோதனைகுட்படுத்திக் கொண்டே இருப்பேன்//

நான்தான் சொன்னேனே – நான் ஒருவரை (இருவரை 🙂 ஜீனியஸ் என்று சொல்லியிருப்பது அவர்களுடைய திறமை குறித்த Logical அலசல் / சீர்தூக்கிப் பார்த்தலின் அடிப்படையில் அல்ல, இந்த இரு துறைகளிலும் இவர்களைவிடப் பெரிய மேதைகள் இருக்கலாம், இனி வரலாம், நான் சொல்வது, முழுக்க முழுக்க Emotional, அதன் அடிப்படையில் என்னை பாதித்த, நான் ஜீனியஸாக நினைக்கிற இந்த இருவரை, இன்னொரு ஜீனியஸால் நிச்சயம் Replace செய்யமுடியாது – இதை எப்படி விளக்கிச் சொல்வது என்று தெரியவில்லை 🙂

//அவர் கவனமா ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தார் என்றால் ஹாலிவுட் வாய்ப்புக்காக அவர் இப்பொழுது LA வில் குடிபுகுந்து இருக்க வேண்டும். இல்லையே? முயற்சியால் வாய்ப்பா? அல்ல வாய்ப்புக்கு பின் முயற்சியா? என்றால் ரஹ்மான் இசை பயணத்தில் பின்னதே!//

🙂 நண்பரே, இந்த வாதத்தை நான் முழுமையாக ஏற்கவில்லை. இப்போது அவர் LAல் குடியேறாவிட்டாலும், அவரது படத் தேர்வுகளில் வருங்காலத் திட்டம் புரிகிறது – இப்போதுமட்டுமில்லை, முன்பு எப்போதும் ரஹ்மானின் Career Growth அவரால் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டது என்றுதான் நான் நினைக்கிறேன் – நிச்சயம் இதை ஒரு குறையாகச் சொல்லவில்லை, Brilliance-எனவே நினைக்கிறேன்!

//மேற்கண்ட சொற்றொடர்களைப் பார்த்து விட்டு நீங்களே சொல்லுங்கள் – இது oxymoron கிடையாதா? நீங்கள் குறிப்பிட்டிருக்கும் “அப்போதே” என்பது 1994ஆம் ஆண்டு என்று (தோராயமாக) வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், கடந்த 15 ஆண்டுகளாக நீங்கள் ராஜாவை விட்டு விலகிப் போய் விட்டீர்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டியிருக்கும்.//

சொக்கன் விலகிக்போகவில்லை. ஆனால் (உங்களையும் சொக்கனையும் போல் சிலரைத்தவிர) பெரும்பாண்மையான இசை ரசிகர்களின் மனதை ரஹ்மான் கவர்ந்து விட்டார் என்று பொருள் என்று நான் நினைக்கிறேன்

உதாரணமாக சச்சினை விட்டு சொக்கனோ நானோ விலக்கிபோகவில்லை. ஆனால் (என்னையும் சொக்கனையும் போல் சிலரைத்தவிர) பெரும்பாண்மையான (Sridhar Narayanan உட்பட) கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் வேறு ஆட்டக்காரர்கள் கவர்ந்து விட்டனர்

எனக்கு பிடித்தது தான் உலகில் சிறந்தது என்ற மாயையிலிருந்து வெளிவந்தால் பிரச்சை தீர்ந்தது.

My favourite need not be the world’s best
World Best need not be my favourite

உங்களுக்கு பிடித்த பெண் என்றால் உங்கள் அம்மா / மனைவி / மகள் என்று இருக்கலாம் (உதாரணத்திற்காக)

ஆனால் சிறந்த பாடகி என்றால் அது லதா மங்கேஷ்கரோ அல்லது எம்.எஸோ அல்லது ஜானகியோவாகத்தான் இருக்க முடியும் (உதாரணத்திற்காக)

இதே தான் இசையிலும்

புரிகிறதா

//உங்களுக்கு கரையாதிருக்கலாம் டாக்டர். //

நான் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேனே. நான் கூறியதில் இரண்டாம் பகுதியை மட்டும் தான் வாசித்தீர்களா

அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பித்து கண்டிப்பாக கரையும் ஆனால் எப்படி பிராட்மனின் மேலுள்ள பித்து கரைந்து போகவில்லையோ, எப்படி விவியன் ரிச்சர்ட்சின் மேலுள்ள பித்து கரைந்து போகவில்லையோ அது போல் சச்சின் மேலிருக்கும் பித்து (அதாவது அவர் ஜீனியஸ் என்ற பித்து) கரையாது

சிறந்த பாட்ஸ்மேன் என்பது objective criteria
ஜீனியஸ் என்பது subjective criteria

சிறந்த பாட்ஸ்மேன் (அதிக ஓட்டங்கள்/ அதிக அவரேஜ் / அதிக செஞ்சுரி) அனைவருக்கும் ஒருவர் தான்

ஆனால் ஜீனியஸ் என்பது நபருக்கு நபர் மாறுபடும்

உதாரணமாக என்னைப்பொருத்தவரை ஜீனியஸ் பட்டியலில் சச்சினும், லாராவும், வாசிம் அக்ரமும் உண்டு. சொக்கனின் ஜீனியஸ் பட்டியலும் அதே போல் தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்லவே

டாக்டர்,

எனது கேள்வியை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது. அந்தக் கேள்வி அவரே அவரைக் கேட்டுக் கொள்ளத் தூண்டும் விதத்தில் அமைந்த கேள்வி. அவ்வளவுதான் மேதைமை, திறமை பற்றியெல்லாம் வகுப்பெடுக்க நான் புகவில்லை. அவர் கணிப்பு காலம் முழுவதும் மாறாமல் இருந்தாலும் சரிதான். இத்துடன் முடித்துக் கொள்கிறேன் 🙂

Dear Sir,

music lovers esp.tamil people like all the three maestros msv,raja and arr anna.these three peoples name will be forever and no one can deny that.

i salute these three maestros not only for their music but as a human being these three people are totally different from others.

among the three arr stands ahead as he always encourages others if they dont perform well and make them to feel comfortable.respecting others and hard work are the other two things e.one should learn from him though he reached many heights in his career,still he is the same person like he was when roja released.

God Bless Him.

all the best for ur book sir,u can contact me if u need any info on arr,i am keen to help u to make the book very intresting.its a small help from a fan of arr

Murali Ramakrishnan
Coimbatore.

”எனக்கு பிடித்தது தான் உலகில் சிறந்தது என்ற மாயையிலிருந்து வெளிவந்தால் பிரச்சை தீர்ந்தது.

My favourite need not be the world’s best
World Best need not be my favourite”

Doctor..100/100 unnmai…

//இதெல்லாம் கண்ணதாசன் பாஷையில் சொல்ல வேண்டுமானால் ‘புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை’. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.//

Appo ARR enna Puthiyillaatha muttaala?

Mutta pasangala. Please read what you publish.

புருனோ, Sridhar Narayanan, Murali Ramakrishnan, Kesava Pillai, venkatesan,

நன்றி 🙂

//எனக்கு பிடித்தது தான் உலகில் சிறந்தது என்ற மாயையிலிருந்து வெளிவந்தால் பிரச்சை தீர்ந்தது. My favourite need not be the world’s best. World Best need not be my favourite//

//சொக்கனின் ஜீனியஸ் பட்டியலும் அதே போல் தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்லவே//

ரொம்ப அழகாகச் சொன்னீர்கள் டாக்டர் 🙂

//i salute these three maestros not only for their music but as a human being these three people are totally different from others.
among the three arr stands ahead//

அந்த ஒப்பீடு வேண்டாம் என்கிறார்கள் பெரும்பாலானோர். நம்மால் (நான் உள்பட) அதை ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை 🙂

//u can contact me if u need any info on arr//

மிக்க நன்றி. ஏதேனும் தகவல்கள் தேவையானால் அவசியம் எழுதுகிறேன்.

//Appo ARR enna Puthiyillaatha muttaala? Mutta pasangala. Please read what you publish//

நண்பரே, நீங்கள் கண்ணதாசனின் அந்த Classic வரிகளுடைய அர்த்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

வெற்றி பெற்ற **எல்லோரும்** புத்திசாலிகள் அல்ல, புத்திசாலிகள் **எல்லோரும்** வெற்றி பெறுவது இல்லை. இதன் அர்த்தம், ஜெயித்தவர்கள் எல்லோரும் முட்டாள்கள், தோற்றவர்கள் எல்லோரும் புத்திசாலிகள் என்பது அல்ல. All permutations and combinations are possible 🙂

ஆக, ராஜா உலக அளவில் ஜெயிக்கவில்லை என்பதால் அவர் முட்டாள் அல்ல என்பதுமட்டும்தான் அவர் சொன்னதன் நோக்கம், You can’t assume the opposite about Rahman 🙂

Venkatesan ஆர்வம் மிகுதியால் கோபம் கொண்டுள்ளார். என். சொக்கன் அவர்களுக்கு நன்றி. கண்ணதாசன் வரிகளுக்கு மிக சரியானதொரு பதிலைத் தந்தீர்கள். அய்யா! நானும் ரஹ்மான் அபிமானி தான். ராஜா வெறியன். அதனால் ரஹ்மானைக் குறைத்து மதிப்பிடவில்லை. நான் எழுதிய பின்னூட்டங்களை சில முறை வாசித்தீர்களானால் நான் ரஹ்மான் மீது கொண்ட அபிமானம் உங்களுக்கு விளங்கும்.

நான் சொல்ல வந்ததை என். சொக்கன் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். நான் ரஹ்மானைத் தவறாக ஒரு வரியில் கூட சொல்லவில்லை. ராஜாவுக்கு வக்காலத்து வாங்கினேன். நன்றி.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் சொக்கன். இளையராஜா பாடல்கள் எனக்கும் பிடிக்கும். ரஹ்மான் வந்ததிலிருந்து நான் கட்சி மாறி விட்டேன்

இந்த அவசர யுகத்திற்கு ரஹ்மானின் இசைதான் பொருத்தமாக இருக்கிறது

///அதற்குமுன் ராஜாவை வீழ்த்த முயன்ற மற்ற இசையமைப்பாளர்களுக்கும் ரஹ்மானுக்கும் முக்கியமான வித்தியாசம், இவரிடம் ஒரு தனித்துவமான பாணி இருந்தது, அதேசமயம் நான் இன்னமாதிரி இசையைமட்டும்தான் உருவாக்குவேன் என்கிற பிடிவாதம் இல்லாமல், தனது ஞானத்தை விரிவுபடுத்திக்கொள்கிற ஆர்வம், சட்டென்று தோன்றுகிற Creative Spark-ஐமட்டும் நம்பாமல், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இழைத்து இன்னும் மேம்படுத்தமுடியும் என்கிற (இந்திய சினிமாவுக்கே புதுசான) School of thought, தனது இசை மேதைமையுடன், மற்றவர்களுடைய கருத்துகள், சிந்தனைகள், யோசனைகளையும் சேர்த்து மெருகேற்றிக்கொண்டு, அதற்கு உரிய Credit-ஐ அவர்களுக்கே தருகிற பெருந்தன்மை, இவற்றையெல்லாம்விட முக்கியமாக, தான் இருந்த இடத்திலேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்காமல் மேலே மேலே போகவேண்டும் என்கிற முனைப்பு/////

Very true.His unique style of working and his dedication and his sincerity towards god are the main reason for his success..

I also love Raja sir songs..Dont worry that Raja sir didnt get an Oscar..I remeber ARR’s words : “Ilayaraja avargalin isai oscar ai vidavum periyathu”..

I will try to buy your book 🙂

Dear Chokkan sir,
After i read your book only i came to know about many details about A.R. Rahman(Allah Rakka Rahuman), that much help you did through your book.

Your writing way is unique sir , even a single line also contains inormation and intresting, i just complete the book in 2 hours. your titles are super sir.

Dear sir,
It was very intresting to read about SLUMDOG MILLIONARE preparation and the conversation between Dany Boile and ARR through email.

And now only i know ARR s other language films and his rewards

புருனோ,

//அது அவரது தனிப்பட்ட கருத்து. அதை அவர் தெளிவாகவே கூறியிருக்கிறார்//

நாங்கள் இருவரும் இதைப் பற்றிய எங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதை முந்தைய பின்னூட்டங்களில் காணலாம். என் கருத்தை அவரும் அவர் கருத்தை நானும் ஒப்புக்கொண்டுவிட்டோம். அத்தோடு இந்த விவாதத்தை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

//சொக்கன் எழுதுவதற்கும் நாங்கள் மகிழ்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை//

நீங்கள் மகிழ்கிறீர்கள் என்று ஒப்புக் கொள்கிறீர்களே, இது போதும்!

//உங்கள் மறுமொழியை பார்த்து வேறு எப்படி perceive செய்து கொள்வது தான்//

நன்கு நோக்கினீர்களானால் நான் ரஹ்மானை என் மேற்கண்ட பதிவுகளில் எங்கேயும் குற்றம் சாட்டவில்லை. ஆனாலும் நான் அப்படிக் கூறியதாய் நினைத்துக் கொண்டு என் பின்னூட்டத்தை நீங்கள் விமர்சிப்பது என் பின்னூட்டத்தில் உள்ள உண்மைக்குச் சான்றாகிறது!

//ஆனால் அவரது நேர்மை(குறைவை) நான் விமர்சிக்க தயங்கியது கிடையாது//

யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை தான். ஆனால் ராஜாவின் நேர்மையை எந்த ஆதாரமும் இல்லாமல் உங்கள் யூகங்களின் அடிப்படையில் நீங்கள் பல தளங்களில் ‘விமர்சித்து’ வருவது தெரிந்ததே! அதனால் தான் என் முதல் பின்னூட்டத்திலேயே உங்கள் பெயரைக் குறிப்பிட்டு அனைவருக்கும் எச்சரிக்கை செய்தேன்!

உங்கள் கூற்றுப்படி ராஜா நேர்மையற்றவர் என்றே வைத்துக்கொள்வோம். அதற்கும் சொக்கன் அவர்களின் இந்த இடுகைக்கும் என்ன தொடர்பு? இங்கே நீங்கள் அதைப்பற்றி ஏன் எழுத வேண்டும்? இது ஒன்றே சொல்கிறது: எந்தக் களமாக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் ராஜா ஒரு தவறான மனிதர் என்று ஜோடிக்க நீங்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதை! “வளர்க” உம் “தொண்டு”!

//ஆனால் அவர் தொடமுடியாத உயரங்களை எல்லாம் தொட்டவர் ரஹ்மான் என்பதை யாராலும் மறுக்க முடியாது//

இந்த மாதிரியான சொல்லாடல்களை எப்படி எடுத்துக் கொள்வதென்று புரியவில்லை! நன்கு வாதம் செய்பவர்கள் யாராலும் மறுக்க முடியாத வகையில் ஆதாரங்களை எடுத்து வைக்க வேண்டும். இப்படி வெறும் கருத்துக்களைக் கொண்டு வாதிட எண்ணக் கூடாது. இது போன்ற தடாலடியான அறிக்கைகளை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். அப்படிச் செய்பவர்களில் எவர் குரல் ஓங்கிக் கேட்கிறதோ அவர் வாக்கே உண்மையென நினைக்கப்படும்!

மேலும், இது போல் பொதுப்படையாகப் பேசாமல் குறிப்பாக எந்த விஷயங்களில் ரஹ்மான் (ராஜாவை விட அதிகமாக) சாதித்திருக்கிறார் என்று பட்டியலிட்டு அவற்றில் எவை எவை இசை சார்ந்த சாதனைகள், எவை எவை வர்த்தகம் சார்ந்த வெற்றிகள் என்று பிரித்து, ஒரு நன்கு கற்ற (ராஜா/ரஹ்மான்) சார்புனிலை இல்லாத இசை விமர்சகனின் நோக்கிலிருந்து விளக்கினால் அது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும்.

தி.சு.பா. அவர்களே,

//அஞ்சலி, அக்னி நட்சத்திரம் எல்லாம் கேட்டுவிட்டு ராஜாவின் இசைக்கு nativity தான் காரணம் என்றெல்லாம் சொல்லாதீர்கள்.//

Nativity என்ற சொல்லின் பொருள் குறித்த உங்கள் புரிதலைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன். அந்த சொல்லை கிராமிய அல்லது நாட்டுப்புற என்ற பொருளில் நான் பயன்படுத்தவில்லை. எந்த படைப்புக்கும் ஒரு nativity உண்டு. அஞ்சலி, அக்னி நட்சத்திரம் போன்ற படங்கள் நவீனத்துவ சூழலில் எண்பதுகளின் இறுதியில் தமிழ் பேசும் பெருநகரங்களைக் கதைக்களங்களாகக் கொண்டவை. அவற்றிற்கான nativity அப்படங்களின் இசையில் நிச்சயம் உண்டு. உதாரணமாக, இவ்விரு படங்களில் எந்தப் பாடலிலும் தபேலா தாளக்கருவியாகப் பயன்படுத்தப்படவில்லை.

மேலும் ராஜாவின் இசைக்குக் காரணம் nativity என்று நான் கூறவில்லை. அவருடைய இசையில் உள்ள nativity யே அந்தக் குறிப்பிட்ட இசைப்படைப்புக்கான nativity யை முழுதும் தெரியாதவர்கள், அதை நன்கு தெரிந்தவர்கள் அளவுக்கு ரசிக்க முடியாமல் தடுத்து விடும் வாய்ப்பிருக்கிறது என்றே கூறினேன்.

//பாரதிராஜாவின் பாதிப்பால் 80களில் கிராம வாசனை வீசியது அவ்வளவே. அதனால் ராஜா இசை nativity என்பதெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது.//

பாரதிராஜாவின் படங்களில் கிராம வாசனை வீசியதற்கு அவருக்கு கிராமத்து nativity அத்துபடியாய் இருந்தது ஒரு காரணமென்றால் ராஜாவின் nativity நிறைந்த இசையும் ஒரு காரணம். அந்த ராஜாவின் படங்களுக்கு இந்த் ராஜாவின் இசை எந்த அளவுக்கு துணையாய் இருந்தது என்பது எல்லோருக்குமே தெரிந்த செய்தி.

ஆனால், ராஜாவின் இசையில் வெளிவந்த கிராமத்தைக் கதைக்களமாகக் கொண்ட படங்களில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான படங்கள் தான் பாரதிராஜாவின் இயக்கத்தின் வெளிவந்தவை. ’அன்னக்கிளி’ தேவராஜ் மோகன் முதல் ’விருமாண்டி’ கமலஹாசன் வரை பல இயக்குனர்களின் படங்களில் உள்ள nativity மிகுந்த அனைத்துப் பாடல்களையும் மறந்துவிட்டு எல்லாப் புகழையும் பாரதிராஜாவிற்குத் தூக்கிக் கொடுக்கிறீர்களே, இதை அவரே ஏற்றுக்கொள்ள மாட்டார்!

//தேனியில் கிராமத்தில் பிறந்த ராஜா தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று கலக்கினார்//

ஒப்புக் கொண்டமைக்கு நன்றி!

//அப்படிபட்டவருக்கு பாம்பேக்கு போக எவ்வளவு நேரம் பிடிக்கும். வாய்ப்பு வரவில்லை நண்பரே.//

அதையே தான் நானும் சொல்கிறேன். அவருக்கு ரொம்ப நேரம் பிடித்திருக்காது. ஆனால், ஹிந்தித் திரையுலகம் அவருடைய கொள்கைக்கு ஒத்து வரவில்லை. பாடல்களுக்கு இசை ஒருவர் பிண்ணனி இசை அமைப்பது வேரொருவர் என்றிருந்த அவர்களின் வழக்கத்தில் ராஜாவிற்கு உடன்பாடு இல்லை. அவர் என்ன தான் அவ்விஷயத்தில் நிபந்தனைகள் விதித்தாலும் அவர் பேச்சுக்கு அங்கு மரியாதை இல்லாமல் போனதால் தான் அவர் ஹிந்திப் படஙளைத் தவிர்த்தார்.

மேலும், தெற்கிலிருந்து சென்றவர்களில் மிகச் சிலரே ஹிந்தித் திரைப்பட ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். பாக்யராஜ் போன்றவர்கள் கூட ஹிந்தியில் படமெடுக்கும் போது அவர்களால் ராஜாவை இசையமைக்க வைக்க முடியவில்லை. இத்தனைக்கும் அசல் தமிழ்ப்பதிப்பில் அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். காரணம், என்ன தான் இயக்குனராக இருந்தாலும், எல்லா முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் அவர்களிடம் கொடுக்கப்படவில்லை. பெரிய ஹிந்தி நடிகர்களை வைத்து பெரிய தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் அப்படங்கள் உருவானதால் அந்த நிலை. அதனால் தான், இளையராஜா இசையமைத்த ஏற்க்குறைய எல்லா ஹிந்திப் படங்களுமே தென்னக இயக்குனர்களின் படங்களாகவே அறியப்பட்டன! இவ்வகையில் பார்க்கப்போனால் சீனி கம் தான் அவரது முதல் ‘ஹிந்தி’ப் படம்!

ஹிந்தி இயக்குனர்கள் தமிழ்ப் படங்களை ஹிந்தியில் மறு ஆக்கம் செய்த போது அவர்கள் ராஜாவின் பாடல்களை எடுத்துக் கொண்டார்களே தவிர அவரையே இசையமைக்க அழைக்கவில்லை. பாலுமகேந்திரா ஒரு விதிவிலக்கு.

இதில் வேடிக்கை என்னவென்றால், ராஜாவின் மெட்டைத் தழுவிய பாடல் தான் அப்படத்தின் பெரிய ஹிட்டாக இருக்கும். ஆனால், அந்த இசையமைப்பாளர் அந்தப் பாடலைத் தன் பாடல் போல் பாவித்துக் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் அந்தப் பெருமையை அள்ளிக்கொண்டு போய்விடுவார்! ‘இளையநிலா பொழிகிறது’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘அப்பனீ தீயனி தெப்பா’ (தெலுங்கு), ‘ராக்கம்மா கையத் தட்டு’, என்று இதற்கான எடுத்துக்காட்டுப் பட்டியல் மிக நீளம்.

இங்கு விவாதித்துக் கொண்டு இருக்கும் எத்தனை பேருக்குத் தெரியும் ஹிந்தி இசை அமைப்பாளர்கள் ஆனந்த்-மிலிந்த், ராஜாவின் இசையை காப்பி அடிப்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அப்படிச் செய்வதற்குத் தாங்கள் வெட்கப்படவில்லையென்றும் அதற்குக் காரணம் ராஜாவின் இசை கடவுளிடம் இருந்து வருவது போன்றது; அதை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறியது?

சிகப்பு ரோஜாக்கள் படமும் பூவிழி வாசலிலே படமும் ஹிந்தியில் மறு ஆக்கம் செய்யப்பட்ட போது அவற்றின் பிண்ணனி இசை தமிழ்ப் பதிப்புகளைப் போல் வரவில்லை என்று வருந்தி அந்த்த் தயாரிப்பாளர்கள் ராஜாவிடம் திரும்பி வந்து பிண்ணனி இசையை மட்டும் அமைக்கச் செய்தது எத்தனை பேருக்குத் தெரியும்? இத்த்னைக்கும் மேற்குறிப்பிட்ட படங்களுக்கு இசையமைத்தவர்கள் சாதாரண ஆட்கள் அல்ல. அவர்கள்: (முறையே) ஆர்.டி. பர்மன் மற்றும் பப்பிலஹரி!

பிற்காலத்தில் (2001), லஜ்ஜா என்னும் திரைப்படத்திற்கு ராஜா பிண்ணனி இசை அமைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி விரும்பினார். அந்தப் படத்திற்கான பிண்ணனி இசை ஹங்கேரி புடாபெஸ்ட் ரேடியோ சிம்ஃபொனி இசைக்குழுவைக் கொண்டு ராஜாவால் அமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து பேசுவதற்கு முன், எண்பதுகளிலிருந்து இன்று வரை ராஜா எத்தனை ஹிந்திப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டு பேசுவது எல்லோருக்குமே நல்லது.

//மேலும், தெற்கிலிருந்து சென்றவர்களில் மிகச் சிலரே ஹிந்தித் திரைப்பட ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். பாக்யராஜ் போன்றவர்கள் கூட ஹிந்தியில் படமெடுக்கும் போது அவர்களால் ராஜாவை இசையமைக்க வைக்க முடியவில்லை. இத்தனைக்கும் அசல் தமிழ்ப்பதிப்பில் அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். காரணம், என்ன தான் இயக்குனராக இருந்தாலும், எல்லா முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம்
அவர்களிடம் கொடுக்கப்படவில்லை. பெரிய ஹிந்தி நடிகர்களை வைத்து பெரிய தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் அப்படங்கள் உருவானதால் அந்த நிலை. அதனால் தான், இளையராஜா இசையமைத்த ஏற்க்குறைய எல்லா ஹிந்திப் படங்களுமே தென்னக இயக்குனர்களின் படங்களாகவே அறியப்பட்டன! //

அப்படி பட்ட் சூழலில் கூட, ராஜாவால் சாதிக்க முடியாய சூழலில் கூட சாதித்தவர் ரஹ்மான்

//தொடர்ந்து பேசுவதற்கு முன், எண்பதுகளிலிருந்து இன்று வரை ராஜா எத்தனை ஹிந்திப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டு பேசுவது எல்லோருக்குமே நல்லது.//

தெரியவில்லை. நீங்கள் கூறினால் கேட்டுக்கொள்கிறோம். ஏற்றுக்கொள்கிறோம்

ஆனால் எண்பதுகளிலிருந்து இன்று வரை ராஜா இசையமைத்த படங்களை விட தொன்னுறுகளிலிருந்து இன்று வரை ரஹ்மான் இசையமைத்தது அதிகம் என்றே நினைக்கிறேன்.

thisuba, துபாய் ராஜா, கே. எம். அமீர், Harish.M, Gobi, அனாமிகா, புருனோ,

நன்றி 🙂

ஒரு சின்ன கோரிக்கை – இந்தப் பதிவின் நோக்கம் திசைமாறுவதாக உணர்கிறேன் – நான் ஏற்கெனவே சொன்னதுபோல், ராஜா, ரஹ்மான் ஒப்பிடும் நோக்கத்தில்மட்டும் நான் இந்தப் பதிவை எழுதவில்லை, கட்டுரைப் பொருளுக்குத் தேவையான அளவுமட்டுமே (Birds’ Eye Viewபோல) அவர்களைப்பற்றி ஒப்பிட்டு எழுத நேர்ந்தது, இதுபற்றிய முழுமையான விவாதம் தேவை, ஆனால் அதற்கான தளம் இதுவல்ல.

ஆகவே, இனிவரும் கருத்துகள் இந்தப் பதிவைப்பற்றியவையாகமட்டும் இருந்தால் நல்லது – புலவர்களுக்குள் சண்டை வரலாம், நம்மைப்போன்ற ரசிகர்களுக்குள் வேண்டாமே 😉

உங்கள் புரிதலுக்கு அட்வான்ஸ் நன்றி!

தி.சு.பா.,

//இப்பொழுது ரஹ்மானுக்கு ஹாலிவுட்டிலிருந்து அழைப்பு வந்தால் அதற்கு ரஹ்மானின் முயற்சி தான் காரணம் என்றா சொல்ல முடியுமா? கண்டிப்பாக கிடையாது. ஜெய் ஹோவும், ஆஸ்கார் விருதின் கவுரவமும் தான் ஹாலிவுட் வாய்ப்பை அவருக்குப் பெற்று தரும் என்று என்னால் ஆனித்தரமாக சொல்ல முடியும்.//

ஆஸ்கார் விருதைப் பெற்றுத்தந்த ஜெய்ஹோ பாடல் இடம்பெற்ற படம் அவருக்கு எப்படி வந்தது? அப்படம் ஹாலிவுட் படம் இல்லையா? எல்லா விஷயங்களுக்கும் ஏதோ ஒரு முயற்சி தேவைப்படுகிறது. இதை ரஹ்மானே அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் கூறியிருக்கிறார். அதையே தான் இங்கு எல்லோரும் சொன்னார்கள். யாரும் அதைத் தவறாகச் சொன்னது போல் தெரியவில்லை. அந்த முயற்சியை ரஹ்மான் செய்ததில் தவறும் இல்லை. ஆனால், நீங்கள் மட்டும் ஏன் எல்லோரும் அவரைத் தவறாகப் பேசியதைப் போல் நினைத்துக் கொண்டு பதட்டப்படுகிறீர்கள்?

//அவர் கவனமா ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தார் என்றால் ஹாலிவுட் வாய்ப்புக்காக அவர் இப்பொழுது LA வில் குடிபுகுந்து இருக்க வேண்டும். இல்லையே?//

இன்றைய காலகட்டத்தில் எங்கு இருந்து வேண்டுமானாலும் இசையமைக்க முடியும்! ஹாலிவுட்டில் குடியேரித்தான் ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பதில்லை.

//டான் பிரவுன் ஆங்கிலேயர்
சுஜாதா தமிழர்

மைக்கேல் ஜாக்சன் ஆங்கிலேயர்
இளையராஜா தமிழர்
ஏ.ஆர்.ஆர் தமிழர்

ஆக உங்கள் உதாரணத்தில் கோளாறு உள்ளது//

புருனோ,

நீங்கள் சீரியஸாகத் தான் பேசுகிறீர்களா? உங்கள் புரிதலில் தான் கோளாறு உள்ளதைப் போல் எனக்குத் தோன்றுகிறது!

சரி, உங்களுக்குப் புரிவதற்காக இன்னும் எளிதாகச் சொல்கிறேன்: டான் பிரவுன் ஆங்கிலத்தில் எழுதுவதால் அவருடைய எழுத்து சுஜாதாவின் எழுத்தை விட அதிகமான பேரால் படிக்கப்படுகிறது. அதனால், சுஜாதாவை விட டான் பிரவுன் கெட்டிக்காரர் என்றால் ஒப்புக் கொள்ள முடியுமா என்று தான் கேட்டேன்!

சொக்கன்,

//உங்கள் முந்தைய பின்னூட்டத்தில் நான் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் பதில் சொல்லிவிட்டேன். மன்னிக்கவும். ரஹ்மானுக்குத் தொடர்பில்லாத ராஜாவை இந்தப் பதிவில் இழுத்துவிட்டது உண்மைதான். ஆனால் நான் ரஹ்மான்பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன் என்றதும், அட்லீஸ்ட் என்னுடன் பழகிய நண்பர்களுடைய உடனடி Reaction, ‘நீதான் பெரிய ராஜா பித்தனாச்சே, நீ எப்படி ரஹ்மான்பத்தி எழுதப் போச்சு?’ என்பதாகதான் இருக்கு. அதற்கு விளக்கம் கொடுப்பதாக நினைத்தே ராஜாவை இங்கே இழுத்தேன், மற்றபடி சண்டையைத் தூண்டிவிட்டுக் குளிர்காய்கிற நோக்கம் சத்தியமாக இல்லை, நம்புங்கள்//

நான் சுட்டிக்காட்டியதை ஒப்புக் கொண்டமைக்கு நன்றி! உங்களை நம்புகிறேன்.

//பேசாமல் அதிலிருந்து ஓர் அத்தியாயத்தை இங்கே எடுத்துப்போட்டிருக்கலாம்//

ஆமாம்! நீங்கள் அதைச் செய்திருந்தால் எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது!

//அதனால் நான் ராஜாவைவிட்டு விலகிவிட்டேன் என்பது அர்த்தமாகிவிடாது. தற்சமயம் ஜெயித்துக்கொண்டிருக்கிறவர்களுக்குமட்டும்தான் ரசிகர்கள் இருக்கவேண்டுமா என்ன?//

நீங்கள் விலகியது 1995க்குப் பிந்தைய ராஜாவிடம் இருந்து என்று சொல்ல வந்தேன். இப்போதும் சொல்கிறேன். தற்போது ராஜா ஜெயிப்பதில்லை என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள். இதை நீங்கள் அவரை ஒப்பந்தம் செய்ய வரும் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மற்றும் ஹிந்தித் தயாரிப்பாளர்கள் & இயக்குனர்களிடம் சொன்னால் பரவாயில்லை! 25 படங்களை அவர் கையில் ஒப்படைத்து அவர்கள் எடுத்திருக்கும் ’ரிஸ்க்’கை நீங்களாவது அவர்களுக்குப் புரிய வைத்து அவர்களை ராஜாவின் ‘ஜெயிக்காத’ இசையிலிருந்து காப்பாற்றலாமே!

புருனோ,

//சொக்கன் விலகிக்போகவில்லை. ஆனால் (உங்களையும் சொக்கனையும் போல் சிலரைத்தவிர) பெரும்பாண்மையான இசை ரசிகர்களின் மனதை ரஹ்மான் கவர்ந்து விட்டார் என்று பொருள் என்று நான் நினைக்கிறேன்//

நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. ராஜாவின் பல பாடல்கள் பிரபலமாகாததற்கும் ரஹ்மான் இசை ரசிகர்களின் மனதைக் கவர்ந்ததற்கும் தொடர்பு இருப்பது போல் ஒரு மாயத்தோற்றம் உருவாகி நீண்ட நாட்களாகின்றன. இதைப் பற்றி விரிவாக எழுதினால் தான் என் கருத்துக்கான ஆதாரங்களை என்னால் முன்வைக்க இயலும். அது ராஜா Vs ரஹ்மான் என்னும் இந்த (வழக்கமான) தலைப்பை விட்டு வேறு எங்கெங்கோ செல்லும் என்பதால் அந்த விவாதத்தை வேறொரு தளத்தில் வைத்துக் கொள்வோம். சரியா?

//எனக்கு பிடித்தது தான் உலகில் சிறந்தது என்ற மாயையிலிருந்து வெளிவந்தால் பிரச்சை தீர்ந்தது.

My favourite need not be the world’s best
World Best need not be my favourite//

இதை நீங்களும் உணர வேண்டும், புருனோ! இன்னும் சொல்ல வேண்டுமென்றால், “All hits are not great compositions; All great compositions do not become hits” என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

//அப்படி பட்ட் சூழலில் கூட, ராஜாவால் சாதிக்க முடியாய சூழலில் கூட சாதித்தவர் ரஹ்மான்//

நான் குறிப்பிட்ட சூழல் எண்பதுகளில் இருந்தது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அந்தச் சூழல் மாறிவிட்டது. மேலும், ராஜா தன் இயல்பிலிருந்து மாற விரும்பவில்லை என்பதும் ரஹ்மான் அன்றைய உலகமயமான சூழலுக்குப் பொருத்தமானவராகத் தோன்றினார் என்பதும் காக்கை அமரப் பழம் விழுந்த்ததைப் போல் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நிகழ்ந்தவை! நான் முந்தைய பதிவில் எழுதியதைப் போல் இதை ஒரு தனிப் பதிவாக நாம் வாதிடலாம். இங்கு வேண்டாம்.

//ஆனால் எண்பதுகளிலிருந்து இன்று வரை ராஜா இசையமைத்த படங்களை விட தொன்னுறுகளிலிருந்து இன்று வரை ரஹ்மான் இசையமைத்தது அதிகம் என்றே நினைக்கிறேன்.//

எண்ணிக்கை தான் முக்கியம் என்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்!

சொக்கன்,

//இதுபற்றிய முழுமையான விவாதம் தேவை, ஆனால் அதற்கான தளம் இதுவல்ல.//

இந்த விஷயத்தில் நான் உங்கள் கட்சி தான்! உங்களின் இந்தப் பதிவைப் படிக்கும் முன்னரே நான் ஏறக்குறைய இதே தொனியில் சில மறுமொழிகளை எழுதி விட்டதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

நீங்களும் இப்போது கேட்டுக் கொள்வதால் இந்த விவாதத்தை இப்போதைக்கு இங்கு முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஆனால், அதற்கு மற்றவர்களும் மனம் வைக்க வேண்டுமே! எது எப்படியோ, என் கருத்துக்களைத் தணிக்கை செய்யாமல் அப்படியே வெளியிட்டமைக்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

எல்லோருக்கும் வணக்கம்!

அனாமிகா,

உங்கள் புரிதலுக்கு நன்றி – இந்த வலைப்பதிவில் இதுவரை பின்னூட்டங்களை எடிட் / நிராகரிப்பு செய்தது இல்லை – எப்போதாவது சில எழுத்துப் பிழைகளைத் திருத்தியது உண்டு, தேவையற்ற இணைப்பு(URL)களை நீக்கியது உண்டு, மற்றபடி கருத்தில் கை வைத்தது இல்லை – இந்த ராஜா ரஹ்மான் விஷயத்தைக்கூட, விவாதிக்கக்கூடாது என்பதல்ல, இன்னொரு தளத்தில் செய்யலாம் என்பதுதான் என் கருத்து.

//சிவாஜியை பற்றி ஒரு புத்தகம் எழுதுங்கள். நடிப்புலக மாமேதையை பற்றி படிக்க ஆவலாக இருக்கிறது.//

வழிமொழிகிறேன்.

ஆனால் எழுதிவிட்டு எம்.ஜி.ஆர் ரசிகனான நான் சிவாஜி பற்றி புத்தகம் எழுதுவேன்னு நினைத்துக்கூட பார்க்கவில்லை-ன்னு சொல்லிடாதீங்க ..ஹி..ஹி.

இந்த புத்தகத்தையும் படிக்க ஆவலாயிருக்கிறேன்.

சமீபத்தில் தான் வல்லினம் மெல்லினம் இடையினம் படித்தேன் ..மிக எளிய நடையில் சுவாரஸ்யமாக இருந்தது ..வாழ்த்துகள்!

ஜோ,

நன்றி 🙂

//ஆனால் எழுதிவிட்டு எம்.ஜி.ஆர் ரசிகனான நான் சிவாஜி பற்றி புத்தகம் எழுதுவேன்னு நினைத்துக்கூட பார்க்கவில்லை-ன்னு சொல்லிடாதீங்க ..ஹி..ஹி.//

ரஜினியைப்பத்தி எழுதினா வேணும்ன்னா அப்படிச் சொல்லலாம் 😉

ஒரு நெப்போலியன் பற்றி எழுதிவிட்டீர்கள். அடுத்த நெப்போலியன் பற்றி ஒரு புத்தகங்கள் எழுதுங்களேன்

அமைச்சரின் உதவியாளர்
நடிகர்
கட்சிக்காரர்
எம்.எல்.ஏ
எம்.பி
மத்திய அமைச்சர்

மற்றும்

ஒரு மென்பொருள் நிறுவனத்தலைவர் என்று பன்முகம் கொண்டவர் அவர்

நான் மோகனின் படு தீவிர ரசிகர். அவரது ஆரம்ப கால படங்களிலிருந்து தற்போதைய சுட்டபழம் வரை ஒவ்வொரு படத்தையும் குறைந்தது மூன்று முறையாவது பார்த்து ரசித்து வியந்திருக்கிறேன். அதுபோக உங்கள் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் பலவற்றையும் நான் நிறைய படித்திருக்கிறேன். தாங்கள் தங்களது அருமையான எழுத்தினால் என் அரும’மைக்’ கதாநாயகன் மோகனது வாழ்க்கையை பதிவு செய்து உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மோகன் குறித்த பல்வேறுவிதமான தகவல்களை தந்துதவ நான் தயாராக இருக்கிறேன்.

நன்றி சொக்கன்,

அன்புடன் (எதிர்பார்ப்புடன்)
(மோகன்) சுந்தரம்

வாழ்த்துக்கள்! podcast இணைப்பு கிடைக்குமா?

சுந்தரம் சொன்னதை வழிமொழிகிறேன். அப்படியே என்னுடைய கோரிக்கையாக, என்னத்த கன்னையா, கறுப்பு சுப்பையா, வெள்ளை சுப்பையா, டி. ராஜேந்தர், ஒருவிரல் கிருஷ்ணாராவ், லூஸ்மோகன், குண்டு கல்யாணம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளையும் உங்கள் மேலான கைவண்ணத்தில் படிக்க விரும்புகிறேன். முடியுமானால் டிராபிக் ராமசாமி அவர்களின் அற்புத சுகமளிக்கும் ஆனந்த வாழ்க்கையையும் எழுதுங்கள்.

i want bindugosh’s biography.

சொக்கர்வாள்! ரகுமானின் தங்கச்சியும் அவர் வீட்டு நாய்க்குட்டியும் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார்களாம். எப்போது பயோக்ரபி எழுதப்போகிறீர்?

அழகு சுந்தரம்,

Romba Nakkal ya !!! any way, i enjoyed….

Regards

ram

[…] (இந்த ’க்ளாஷ்’ பற்றி முன்பே இன்னொரு பதிவில் எழுதியிருந்தேன். இப்போது […]

Expecting a book on RAJA sir soon 🙂

//Expecting a book on RAJA sir soon//

A.Raja
Ilayaraja
Ramalinga Raju

எல்லாம் சேர்த்து எழுதுங்கள்

[…] அடிப்படையில் இளையராஜாவின் ரசிகராக இருந்தாலும், அதை அப்படியே தள்ளி […]

திரு சொக்கன் அவர்களுக்கு,

ரகுமானின் ரசிகனாகிய நான் , உங்களுடைய நல்லாத்தான் இருக்கு…ஆனா ……என்று இழுப்பதின் உணர்வுகளை இப்போது நான் கேட்கும் சந்தோஷ் நாராயணன் மற்றும் பிறரின் சிறந்த இசையை கேட்கும்போது புரிய வைக்கிறது.

யாருக்கும் யாரும் மாற்று அல்ல.ஒவ்வொருவரின் தனித்தன்மையை ரசிப்பதோடு நிறுத்துவதே சிறந்தது என்றும் , இங்கே ராஜாவா ரகுமானா என்று சண்டையிடுவதில் அர்த்தம் இல்லை என்பதும் என் கருத்து.

தங்களின் இந்தப் பதிவை அப்படியே எடுத்து என்னுடைய ரகுமான் ரசிகர் முகப்புத்தகப் பக்கத்தில் பிரசுரித்துரிக்கிறேன்.ஆட்சபனை தெரிவித்தால் நீக்கி விடுகிறேன்.

முகப்புத்தக பக்க இணைப்பு :
https://www.facebook.com/arrdrive#

நன்றி.

Good introspection brother… I had similar thought process… basically Knowledge resolves all our commotion… Let it be internal or external to our conscious…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,058 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

July 2009
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
%d bloggers like this: