மனம் போன போக்கில்

Archive for January 2010

இந்த வாரம் சேலத்தில் ஒன்று பெங்களூரில் ஒன்று என இரண்டு விழாக்களுக்குச் சென்றிருந்தேன். முதலாவது வீட்டு விசேஷம், இன்னொன்று நண்பர் திருமணம்.

சேலம் விழாவில் பல உறவினர்களை ‘ரொம்ப-நாள்-கழித்து’ப் பார்க்கமுடிந்தது. பாதிப் பேரை எனக்கு அடையாளம் தெரியவில்லை, மீதிப் பேருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. எதற்கு வம்பு என்று எல்லோரும் ஒரேமாதிரியாகச் சிரித்து மகிழ்ந்துவைத்தோம். குடும்ப அமைப்பு வாழ்க!

என் தம்பி ஒரு ‘touch screen’ மொபைல் வாங்கியிருக்கிறான். இதுமாதிரி மொபைல்களைப்பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும், இப்போதுதான் ஒன்றைக் கையில் வாங்கிப் பார்க்கிறேன். மழமழவென்று தொட்டால் சிணுங்கியாக ஜோராக இருந்தது. குறிப்பாக ஸ்க்ரீனைத் தொட்டால் கேமெரா ரெடியாவதும், விரலை எடுத்தால் படம் பிடிக்கப்படுவதையும் மிட்டாய்க்கடை முன் பட்டிக்காட்டானாக ரசித்தேன்.

புகைப்படம் என்றதும் ஞாபகம் வருகிறது, மேற்படி விழாவுக்கு வந்திருந்த ஓர் இரட்டைக் குழந்தை ஜோடியை எல்லோரும் (ஒன்றாக)ஃபோட்டோ எடுக்கிறேன் பேர்வழி என்று படுத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களும் நாள்முழுக்கச் செயற்கையாக போஸ் கொடுத்து போஸ் கொடுத்து அலுத்துப்போயிருந்தார்கள் (இந்த லட்சணத்தில் அவர்கள் ஒரேமாதிரியாகச் சிரிப்பதில்லை என்று ஒருவர் மிகவும் கோபித்துக்கொண்டாராம்!)

நான் அந்தக் குழந்தைகளை ஓரங்கட்டி, ‘பயப்படாதீங்க, ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லமாட்டேன்’ என்று சமாதானப்படுத்தினேன், ‘என்ன க்ளாஸ் படிக்கறீங்க?’

’செகண்ட் ஸ்டாண்டர்ட்.’

’எந்த ஸ்கூல்?’

(நீளமாக ஏதோ பெயர் சொன்னார்கள். நினைவில்லை.)

‘உங்க ஸ்கூல்ல எக்ஸாம்ல்லாம் உண்டா?’

‘ஓ.’

‘நீங்க என்ன மார்க் வாங்குவீங்க?’

‘நான் ஃபர்ஸ்ட் ரேங்க், அவ செகண்ட் ரேங்க்.’

‘ஏய், பொய் சொல்லாதே, நாந்தான் ஃபர்ஸ்ட் ரேங்க்.’

’அதெல்லாம் இல்லை, நாம ரெண்டு பேரும் ஒரேமாதிரி இருக்கறதால டீச்சர் நான்னு நினைச்சு உனக்கு மார்க் போட்டுட்டாங்க, மத்தபடி நாந்தான் ஃபர்ஸ்ட் ரேங்க்.’

அவர்களுடைய ஸ்வாரஸ்யமான செல்லச் சண்டையைத் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பதற்குள், ‘நீங்க ட்வின்ஸா?’ என்று ஒருவர் தலை நீட்டினார்.

’ஆமா அங்கிள்’ என்று ஒரே குரலில் சொன்ன குழந்தைகளின் முகத்தில் பயம் தெளிவாகத் தெரிந்தது. அதை உண்மையாக்குவதுபோல் அவர், ‘இங்க வந்து நில்லுங்கம்மா, உங்களை ஒரே ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன்’ என்று ஆரம்பித்தார். நான் தலையில் அடித்துக்கொண்டு விலகினேன்.

இன்னொருபக்கம் எங்களுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் தனியாகக் காப்பி குடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரிடம் போய்க் குசலம் விசாரித்தேன்.

அவருடைய சொந்த ஊர் கும்பகோணம். ரொம்ப நாளாக அங்கே ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது ஒரே மகன் பெங்களூரில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேறுவிதமான சர்வர்களை மேய்த்துக்கொண்டு சௌக்கியமாக இருக்கிறான்.

ஆனால் இப்போதும், அவர் கும்பகோணத்தைவிட்டு நகர மறுக்கிறார். அவர் மகன் நாள்தவறாமல் ‘நீங்க ஏன் அங்கே தனியா கஷ்டப்படறீங்க? பேசாம என்கூட வந்துடுங்களேன்’ என்று அப்பா, அம்மாவைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறான்.

நானும் சும்மா இருக்காமல் அவரை நோண்டிவிட்டேன், ‘அதான் இவ்ளோ காலம் உழைச்சாச்சு, இனிமேலும் சிரமப்படாம பையனோட பெங்களூர் வந்துடலாம்ல?’

’உங்க ஊருக்கு வந்தா மகன் வீட்ல கஷ்டமில்லாம உட்கார்ந்து சாப்பிடலாம்ங்கறது உண்மைதான். ஆனா எங்க ஊர்ல இருக்கிற சில சவுகர்யங்கள் அங்கே கிடைக்காதே!’

அவர் இப்படிச் சொன்னது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பத்து வருடமாக பெங்களூரில் இருக்கிறேன். இங்கே கிடைக்காத சவுகர்யங்களா? என்னது?

’இப்ப கும்பகோணத்தில நான் சாதாரணமாத் தெருவில நடந்துபோறேன்னு வெச்சுக்கோங்க. எதிர்ல பார்க்கறவன்ல்லாம் மறக்காம ”என்ன மாமா, கடை லீவா?”ன்னு விசாரிப்பான்.’

‘இத்தனைக்கும் நான் அந்தக் கடைக்கு முதலாளி இல்லை. ஒரு சாதாரண சர்வர்தான். ஆனாலும் நான் ஒர்த்தன் இல்லைன்னா அந்தக் கடையே லீவ்ங்கறமாதிரி என்னை வெச்சு அந்தக் கடையையே அடையாளம் காணறாங்க. இல்லையா? இப்படி ஒரு கௌரவம் நீங்க பெங்களூர்ல நாலு தலைமுறை வேலை செஞ்சாலும் கிடைக்குமா?’

வாயடைத்துப்போய் இன்னொருபக்கம் திரும்பினால் அங்கே ஓர் இளம் தாய் ‘இந்தத் தூளி யாரோடது?’ என்று கீச்சுக் குரலில் விசாரித்துக்கொண்டிருந்தார். பதில் வரவில்லை.

அவருடைய குழந்தை அப்போதுதான் தூக்கத்தின் விளிம்பில் லேசாக முனகிக்கொண்டிருந்தது. அதற்காகக் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்று தீர்மானித்தவர் அதே தூளியில் குழந்தையைப் படுக்கப் போட்டு ஆட்டிவிட்டார். தாலாட்டுகூட தேவைப்படவில்லை. லெஃப்ட், ரைட், லெஃப்ட், ரைட் என்று ராணுவ நேர்த்தியுடன் ஏழெட்டுச் சுழற்சிகளில் குழந்தை தூங்கிவிட்டது. ’இனிமே ரெண்டு மணி நேரத்துக்குப் பிரச்னை இல்லை’ என்றபடி பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார் அவர்.

’அப்படீன்னா, கோவிலுக்குப் போய்ட்டு வந்துடலாமா?’ என்றார் எதிரில் இருந்த இன்னொருவர்.

‘இவனை எப்படி இங்கே விட்டுட்டுப் போறது?’ தூளியைக் காட்டிக் கேட்டவர் முகத்தில் நிறையக் கவலை. கூடவே, குழந்தை அசந்து தூங்கும் இந்தச் சுதந்தர இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு கோவிலுக்குப் போகிற ஆசையும்.

‘மண்டபத்தில இத்தனை பேர் இருக்காங்களே, பார்த்துக்கமாட்டாங்களா?’

‘இவ்ளோ பேர் இருக்கறதுதாம்மா பிரச்னையே’ என்றார் அவர், ‘நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருந்தா, நம்பி விட்டுட்டுப் போகலாம்.’

எதிரில் இருந்தவர் சுற்றிலும் தேடி என்னைக் கண்டுபிடித்தார், ‘சார், நீங்க கொஞ்ச நேரம் இங்கயே இருப்பீங்களா?’

‘மூணு மணிவரைக்கும் இருப்பேன்’ என்றேன் நான்.

’அப்ப பிரச்னையில்லை’ அவர் முகத்தில் நிம்மதி, ‘நாங்க பக்கத்துக் கோவில்வரைக்கும் போய்ட்டு வந்துடறோம், குழந்தை தூங்குது,  கொஞ்சம் பார்த்துக்கறீங்களா?’

‘நோ ப்ராப்ளம்.’

அப்போதும், அந்தக் குழந்தையின் தாய்க்குச் சமாதானமாகவில்லை. அறிமுகமில்லாத என்னிடம் குழந்தையை ஒப்படைத்துச் செல்ல அவர் விரும்பவில்லை. என் முகத்தில் பிள்ளை பிடிக்கிற ரேகைகள் ஏதாவது தெரிகிறதா என்று சந்தேகத்துடன் பரிசோதித்தார்.

அந்த அவசர ஸ்கேனிங்கின் இறுதியில், நான் சர்வ நிச்சயமாக ஒரு கிரிமினல்தான் என்று அவர் தீர்மானித்திருக்கவேண்டும். எதிரில் இருந்தவர் காதில் ஏதோ கிசுகிசுத்தார். என்னைக்காட்டிலும் உத்தமனான இன்னொருவனிடம்தான் குழந்தையை ஒப்படைக்கவேண்டும் என்று சொல்வாராக இருக்கும்.

அவர்களை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் நான் அங்கிருந்து கிளம்ப எழுந்தேன். அதற்குள் ஒரு மீசைக்காரர் அந்தப் பக்கமாக வர, அந்த இளம் தாய் அவரைப் பிடித்துக்கொண்டார், ‘ஏய் மாமா, சும்மாதானே இருக்கே? கொஞ்சம் உன் பேரனைப் பார்த்துக்கோ’ என்று இழுத்து உட்காரவைத்தார். திருப்தியோடு கோவிலுக்குப் புறப்பட்டார்.

நான் காப்பி குடிக்கலாமா என்று மாடிக்கு நடந்தேன். அப்போது மேலேயிருந்து இறங்கி வந்த ஒரு முதியவர், ‘இந்த ஃபோட்டோகிராஃபர் எங்கே போனான்?’ என்றார் கோபத்தோடு.

‘இது சின்ன ஃபங்ஷன்தானே மாமா, ஃபோட்டோகிராஃபர்ல்லாம் ஏற்பாடு செய்யலை. நாங்களே டிஜிட்டல் கேமெராவிலயும் செல்ஃபோன்லயும் ஃபோட்டோ எடுத்துகிட்டிருக்கோம்’ என்றேன்.

நான் இப்படிச் சொன்னதும் அவருடைய கோபம் மேலும் அதிகமாகிவிட்டது, ‘எல்லா ஃபங்ஷனுக்கும் நீங்களே இப்படி ஃபோட்டோ எடுத்துக் கம்ப்யூட்டர்ல, இன்டர்நெட்ல அனுப்பி உங்களுக்குள்ள பார்த்துக்கறீங்க. எங்களைமாதிரி வயசானவங்க என்ன செய்வோம்? இப்பல்லாம் யாரும் தங்கள் வீட்டு விசேஷத்தை ஆல்பம் போட்டு எடுத்துவைக்கணும்ன்னு நினைக்கறதே இல்லை!’ என்றார் ஆதங்கத்துடன்.

உண்மைதான். டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்கிறபோது, அந்த வெள்ளத்தில் குதிக்காதவர்கள் இப்படிப் புறக்கணிக்கப்படுகிறார்கள். தவிர்க்கமுடியாத பிரச்னை.

தவிர, டிஜிட்டல் புகைப்படங்களில் ஒரு பைசா செலவு இல்லை என்பதால் உப்புப் பெறாத விழாவுக்குக்கூட ஆயிரக்கணக்கில் எடுத்து நிரப்பிவிடுகிறோம். பன்றி குட்டி போட்டதுபோல் வதவதவென்று நிரம்பிக் கிடக்கும் இந்தப் படங்களை யாரும் அக்கறையோடு பார்ப்பதில்லை. இன்னும் எத்தனை ஃபோட்டோ பாக்கியிருக்கிறது என்று Progress Indicator-ஐ ஓரக்கண்ணால் பார்ப்பதிலேயே நேரம் ஓடுகிறது. புகைப்படங்களின் அபூர்வத்தன்மையே போய்விட்டது.

இனிமேல், காசு கணக்குப் பார்க்காமல் வீட்டு விழாக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களையாவது அச்செடுத்து ஆல்பம் போட்டுவைக்கலாம் என்று உத்தேசம்.

****

பெங்களூர் திருமணத்துக்குக் காலை ஏழரை டு ஒன்பது முகூர்த்தம். நான் சரியாகத் திட்டமிட்டு ஏழே முக்காலுக்கு அங்கே சென்று சேர்ந்தேன்.

ஆனால், அந்த நேரத்தில் மண்டபத்தில் யாரையும் காணோம். நூற்றைம்பது பிளாஸ்டிக் நாற்காலிகள்மட்டும் காலியாகக் கிடந்தன. மேடையில் யாரோ பாத்திரங்களை நகர்த்திக்கொண்டிருந்தார்கள். மற்றபடி ஆள் நடமாட்டம் இல்லை.

ஒருவேளை தவறான ஹாலுக்குள் நுழைந்துவிட்டோமோ என்று எனக்குச் சந்தேகம். வெளியே சென்று பார்த்தேன். கன்னடத்தில் மாப்பிள்ளை, பெண் பெயரைப் பூ அலங்காரம் செய்திருந்தார்கள். இதில் என்னத்தைக் கண்டுபிடிப்பது?

நல்லவேளையாக, அந்த மண்டபத்தின் வாசலில் ஒரு நைந்துபோன பலகை (ஆங்கிலத்தில்) இருந்தது. அந்தப் பெயரை என் கையில் இருந்த பத்திரிகையுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்திக்கொண்டு மறுபடி உள்ளே நுழைந்தேன்.

இப்போதும், அந்த நாற்காலிகளில் யாரையும் காணோம். நான்மட்டும் மிகுந்த தயக்கத்தோடு கடைசி வரிசையில் உட்கார்ந்தேன். காலை நேரக் குளிரில் உடம்பு நடுங்கியது.

ஓரமாக ஒரு சிறிய மேடை அமைத்து நாதஸ்வரம், மேளம், சாக்ஸஃபோன் கச்சேரி. சும்மா சொல்லக்கூடாது, என் ஒருவனுக்காக அமர்க்களமாக வாசித்தார்கள்.

அவர்களைக் குஷிப்படுத்தலாமே என்று பக்கத்தில் சென்று உட்கார்ந்துகொண்டேன். தாளத்துக்கு ஏற்பப் பலமாகத் தலையசைத்துவைத்தேன். அந்த ஹாலில் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை என்பதுதான் முக்கியக் காரணம்.

சிறிது நேரத்தில், அந்த மேளக்காரரின் வாத்தியத்தைச் சுற்றியிருந்த குஷன் போர்வையில் எலி கடித்திருப்பதுவரை கவனித்தாகிவிட்டது. இனிமேல் என்ன செய்வது என்று நான் குழம்பிக்கொண்டிருந்தபோது அதிர்ஷ்டவசமாக அந்த மாப்பிள்ளைப் பையன் எதிர்ப்பட்டான்.

‘ஹாய்’ என்று கையசைத்தேன். இன்னும் சில நிமிடங்களில் தாலி கட்டப்போகும் ஆண்களுக்கென்றே ரிஸர்வ் செய்யப்பட்டிருக்கும் அந்த அசட்டுப் புன்னகையைச் சிந்தினான். மஞ்சகச்சம் (’மஞ்சள் நிறத்துப் பஞ்சகச்சம்’ என்று விரித்துப் பொருள்கொள்வீர்!) காரணமாக மெதுவாக இறங்கிவந்து, ‘தேங்க்ஸ் ஃபார் கமிங்’ என்றான். கை குலுக்கி வாழ்த்தினேன்.

’கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, எல்லாரும் வந்துடுவாங்க’ என்று சொல்லிவிட்டு அவனும் போய்விட்டான். ஆனால் யாரும் வரவில்லை. (ஒருவேளை திருட்டுக் கல்யாணமாக இருக்குமோ?) நான் மீண்டும் தனியாக நாற்காலிகளில் உட்கார்ந்து போரடித்துப்போனேன்.

சிறிது நேரத்தில் இன்னொரு காமெடி. கல்யாணப் பெண்ணை முழு அலங்காரத்துடன் மேடைக்கு அழைத்துவந்து வீடியோ எடுத்தார்கள். கையை இப்படி வை, அப்படி வை என்று விதவிதமாகப் போஸ் கொடுக்கச்சொல்லிப் படுத்த, அவர் வெட்கத்துடன் ரியாக்ட் செய்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.

ஐந்து நிமிடத்தில் அதுவும் முடிந்துவிட்டது. மறுபடி நானும் மேளக்காரர்களும் தனிமையில் இனிமை காண முயன்றோம்.

சிறிது நேரத்துக்குப்பிறகு என்னுடைய பொறுமை தீர்ந்துபோனது. மாப்பிள்ளை, பெண்ணை மனத்துக்குள் வாழ்த்தியபடி நைஸாக நழுவி வெளியே வந்துவிட்டேன்!

***

என். சொக்கன் …

23 01 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

14012010143 14012010144

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் (புகைப்படங்களில் உள்ளது எங்கள் வாசல் கோலம், இதைத்தான் பதிவில் சேர்க்கவேண்டும் என்று நங்கையின் கட்டளை!)

***

என். சொக்கன் …

14 01 2010

சென்ற மாதத்தில் ஒருநாள், எங்களுடைய வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒருவர் இந்தியா வந்திருந்தார். பிஸி ஷெட்யூலுக்கு நடுவே அரை மணி நேரம் ஒதுக்கி எங்கள் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.

வழக்கம்போல், வாசல் கதவருகே அவருக்கு ’வருக வருக’ அறிவிப்பு வைத்தோம், பூங்கொத்து கொடுத்து வரவேற்றோம், உயர் ரக பிஸ்கோத்துகளும் குளிர்பானமும் பரிமாறி உபசரித்தோம், எங்களுடைய கார்ப்பரேட் பிரசண்டேஷனைக் காண்பித்துப் போரடித்தோம். கடைசியாக, அவர் கையில் ஒரு feedback form கொடுத்து, முந்தைய சில வருடங்களில் நாங்கள் அவருடைய நிறுவனத்துக்குச் செய்து கொடுத்த ப்ராஜெக்ட்களைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கருத்துக் கேட்டோம்.

அந்தப் படிவத்தில் Professionalism, Response time, Communication Skills, Business Understanding என்று பல தலைப்புகளில் அவர் எங்களுடைய ‘சேவை’க்கு ஒன்று முதல் ஏழுவரை மார்க் போடலாம். ஒன்று என்றால் மிக மோசம், ஏழு என்றால் மிகப் பிரமாதம்.

வந்தவர் அந்த feedback formஐ விறுவிறுவென்று நிரப்பிவிட்டார். கடைசியாக ‘Any other comments’ என்கிற பகுதிக்கு வந்தவுடன்தான், கொஞ்சம் தயங்கினார். பிறகு அதிவேகமாக அதையும் எழுதி முடித்தார்.

அவர் கிளம்பிச் சென்றபிறகு, எங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுத்திருக்கிறார் என்று ஆவலுடன் கணக்குப் பார்த்தோம். சராசரியாக ஏழுக்கு 6.7 – கிட்டத்தட்ட 96% மார்க், ஆஹா!

ஆனால், இறுதியாக ‘Comments’ பகுதியில் அவர் எழுதியிருந்த விஷயத்தைப் பார்த்தவுடன், எங்களுடைய உற்சாக பலூனில் காற்று இறங்கிவிட்டது:

உங்கள் குழுவில் எல்லோரும், சொன்ன விஷயத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு வேகமாகச் செய்துமுடித்துவிடுகிறீர்கள். அதிகக் குறைகளோ, திருத்தங்களோ இல்லை, உங்களுடன் இணைந்து வேலை செய்வது ஓர் இனிய அனுபவம்.

ஆனால், ஒரே ஒரு பிரச்னை, ஆறு மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு என்றால், உங்களுடைய ஆள்கள் நிதானமாக ஆறே காலுக்கு மேல்தான் அழைக்கிறீர்கள். இந்தத் தாமதத்துக்கு அவர்கள் வருந்துவதோ, மன்னிப்புக் கேட்பதோ கிடையாது. இது தவறு என்றுகூட அவர்கள் உணர்ந்திருப்பதாகத் தோன்றவில்லை. ஏன்?

Of Course, இது ஒரு சின்ன விஷயம்தான். ஆனால் நீங்கள் இதைச் சரி செய்துகொண்டால் அநாவசியமாக நம் எல்லோருடைய நேரமும் வீணாகாமல் இருக்கும். இந்த விமர்சனத்தை நல்லவிதமாக எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி.

இதைப் படித்துமுடித்துவிட்டு, எங்கள் குழுவில் எல்லோரும் நமுட்டுப் புன்னகை செய்தோம். காரணம், அவர் சொல்வது உண்மைதான் என்பதும், அதற்கு நாங்கள் அனைவருமே காரணம் என்பதும் எங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.

அந்தக் கூட்டத்தின் முடிவில், நாங்கள் சில தீர்மானங்களை எடுத்தோம், இனிமேல் எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி / நேரடிக் கூட்டங்களுக்குத் தாமதமாகச் செல்லக்கூடாது, குறைந்தபட்சம் பத்து நிமிடம் முன்பாகவே ஆஜராகிவிடவேண்டும், வருங்காலத்தில் நம்மீது இப்படி ஒரு குறை சொல்லப்படுவதை அனுமதிக்கக்கூடாது.

தீர்மானமெல்லாம் சரி. ஆனால் இது எதார்த்தத்தில் சாத்தியமா? ‘இந்தியாவின் தேசிய மதம் தாமதம்’ என்று ஒரு ’ஜோக்’கவிதையில் படித்தேன், IST என்பதை Indian Standard Time அல்ல, Indian Stretchable Time என்று மாற்றிச் சொல்லுகிற அளவுக்கு, தாமதம் என்பது நமது பிறவி குணம், அத்தனை சுலபத்தில் அதை மாற்றிக்கொள்ளமுடியுமா? அல்லது, இந்த வெளிநாட்டுக்காரர்களுக்குதான் இது புரியுமா?

அது நிற்க. நேற்று காலை நடந்த இன்னொரு விஷயத்தைச் சொல்கிறேன்.

கடந்த சில வாரங்களாக, சனி, ஞாயிறுகளில் நங்கை ஒரு நடன வகுப்புக்குச் செல்கிறாள். இதற்காக, அப்போலோ மருத்துவமனைக்குப் பின்னால் உள்ள தனியார் பயிற்சிப் பள்ளி ஒன்றுக்கு அவளை அழைத்துச் செல்வதும், திரும்பக் கூட்டிவருவதும் என்னுடைய பொறுப்பு.

நேற்று காலை, ஒன்பது மணிக்கு வகுப்பு. ஏழரைக்கு எழுந்து தயாரானால்தான் சரியான நேரத்துக்குப் போய்ச் சேரமுடியும்.

சரியாக ஏழு முப்பத்தைந்துக்கு நங்கையை உசுப்பத் தொடங்கினேன், ‘சீக்கிரம் எழுந்திரும்மா, டான்ஸ் க்ளாஸுக்கு லேட்டாச்சு.’

அவள் செல்லமாகச் சிணுங்கினாள், ‘போப்பா, எனக்குத் தூக்கம் வருது.’

‘நீ இப்ப எழுந்திருக்கலைன்னா, உனக்குப் பதிலா நான் க்ளாஸுக்குப் போய் டான்ஸ் ஆடுவேன்.’

நான் நடனம் ஆடுகிற காட்சியைக் கற்பனை செய்துகொண்டாளோ என்னவோ, கெட்ட சொப்பனம் கண்டவள்போல் விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள் நங்கை.

அடுத்த அரை மணி நேரம் வழக்கம்போல் fast forwardல் ஓடியது. எட்டே காலுக்குக் குழந்தை சாப்பிட உட்கார்ந்துவிட்டாள்.

அப்போதும், எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான், ‘15 நிமிஷத்தில ரெண்டு இட்லி சாப்பிட்றுவியா?’

நான் இப்படிச் சொன்னதும் என் மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது, ‘பாவம், வாரத்தில ஒரு நாள்தான் குழந்தைக்கு ரெஸ்டு, அன்னிக்கும் இப்படி விரட்டினா என்ன அர்த்தம்?’ என்றார்.

‘அதுக்காக? க்ளாஸ்ன்னா கரெக்ட் டைம்க்குப் போகவேண்டாமா?’

’பத்து நிமிஷம் லேட்டாப் போனா ஒண்ணும் ஆகாது!’

’தயவுசெஞ்சு குழந்தைமுன்னாடி அப்படிச் சொல்லாதே’ என்றேன் நான்,’எதையும் சரியான நேரத்தில செய்யணும்ன்னு நாமதான் அவளுக்குச் சொல்லித்தரணும், லேட்டானாத் தப்பில்லைன்னு நாமே கத்துக்கொடுத்துட்டா அப்புறம் அவளுக்கு எப்பவும் அதே பழக்கம்தான் வரும்.’

வழக்கமாகச் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்வதற்குப் புதுப்புதுக் கதைகளை எதிர்பார்க்கிற நங்கை, இன்றைக்கு எங்களுடைய விவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே வேகமாகச் சாப்பிட்டுவிட்டாள், 8:29க்குப் படியிறங்கி ஆட்டோ பிடித்தோம், 8:55க்கு வகுப்புக்குள் நுழைந்தோம்.

அங்கே யாரும் வந்திருக்கவில்லை. ஓரமாக இரண்டு பாய்கள்மட்டும் விரித்துவைத்திருந்தார்கள், உட்கார்ந்தோம்.

ஒன்பது மணிக்குள் அந்தக் கட்டடத்தின்முன் வரிசையாகப் பல ஸ்கூட்டர்கள், பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள். நங்கை வயதிலும், அவளைவிடப் பெரியவர்களாகவும் ஏழெட்டுப் பெண்கள், பையன்கள் வந்து இறங்கினார்கள். பாயில் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள். எல்லோரும் நடன ஆசிரியருக்காகக் காத்திருந்தோம்.

மணி ஒன்பதே கால் ஆச்சு, ஒன்பதரை ஆச்சு, இதற்குள் கிட்டத்தட்ட பதினைந்து மாணவர்களுக்குமேல் வந்து காத்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசிரியரைக் காணோம்.

நான் மிகவும் எரிச்சலாக உணர்ந்தேன். முந்தைய இரண்டு வகுப்புகளிலும் இதே கதைதான் என்பது ஞாபகம் வந்தது. முன்பு எங்கள் அலுவலகத்துக்கு விஜயம் செய்த அந்தக் கஸ்டமரின் கஷ்டத்தை இப்போது தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.

நங்கையால் எப்போதும் ரொம்ப நேரம் ஒரே இடத்தில் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாது, ’மிஸ் எப்பப்பா வருவாங்க?’ என்று கேட்டபடி நெளிந்தாள், கையைக் காலை நீட்டினாள், எழுந்து நின்று குதித்தாள்.

நான் மற்ற மாணவர்களை நோட்டமிட்டேன். எல்லோரும் இந்தத் தாமதத்தை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுபோல் அமைதியாக விட்டத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு சமர்த்துப் பெண் நோட்டைத் திறந்து ஹோம்வொர்க் எழுதிக்கொண்டிருந்தது.

ஒன்பதே முக்காலுக்குமேல், அந்த நடன ஆசிரியை ஆடி அசைந்து வந்து சேர்ந்தார். இவ்வளவு நேரம் காத்திருந்த எங்களிடம் பேருக்கு ஒரு ‘ஸாரி’கூடக் கேட்கவில்லை. எல்லோருக்கும் ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டு, எதுவுமே நடக்காததுபோல் வகுப்பை ஆரம்பித்துவிட்டார்.

நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்ப வந்து நங்கையை அழைத்துச் செல்லவேண்டும்.

ஆட்டோவில் வீடு திரும்பும்போது, அவருடைய மாணவர்களை நினைத்து எனக்குக் கவலையாகவே இருந்தது. அவர் நடனம் ஒழுங்காகச் சொல்லித்தருகிறாரா, தெரியவில்லை. ஆனால் இப்படி வகுப்புகள் அவர் நினைத்த நேரத்துக்குதான் ஆரம்பிக்கும் என்கிற மனப்போக்கு, ’எதிலும் தாமதம் என்பது தப்பில்லை, அதுதான் எதார்த்தம்’ என்கிற புரிதல் குழந்தைகளிடம் வளர்வது நல்லதில்லையே. நாளைக்கே ‘என்னைமட்டும் சீக்கிரமா எழுப்பிக் கிளப்பறீங்க, அங்கே அந்த மிஸ் லேட்டாதானே வர்றாங்க?’ என்று நங்கை கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்லமுடியும்?

இன்னும் இரண்டு வகுப்புகள் பார்க்கப்போகிறேன், அந்த நடனமணி தொடர்ந்து நேரத்தை மதிக்காதவராகவே நடந்துகொண்டால், விஷயத்தைச் சொல்லி விலகிவிட உத்தேசம், இந்த வயதில் குழந்தை நடனம் கற்றுக்கொள்வதைவிட, இதுமாதிரி விஷயங்களைப் பழகிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

***

என். சொக்கன் …

11 01 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நாளை (10 ஜனவரி 2010, ஞாயிறு) மதியம் 12 மணிக்கு, ஆஹா FM வானொலி(91.9)யின் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் எனது ”பெப்ஸி” மற்றும் “கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு” நூல்களைப்பற்றிய அறிமுகம் / கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

பெப்ஸிகோக் : ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு

சுவாரஸ்யமான இந்த அரட்டையின் வழியே, பெப்ஸி, கோக் நிறுவனங்களின் சரித்திரம், சண்டை, Colawars  உள்ளிட்ட பல விஷயங்களைத் தொட்டுச்சென்றிருக்கிறோம். கோலா விளம்பரங்களைப்பற்றி விளம்பரத்துறை நிபுணர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் பேட்டியும் நடுவே இடம்பெறும். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்: சித்ரா.

ஆஹா FM சென்னையில்மட்டும்தான் ஒலிபரப்பாகிறது. இணையத்தில் கேட்க விரும்புகிறவர்கள் http://www.loka.fm என்ற தளத்தில் பதிவு செய்துகொண்டு, அரை மணி நேரத் தாமதத்தில் (அதாவது, இந்திய நேரம் 12 மணி நிகழ்ச்சி 12:30க்கு வரும்) இந்த நிகழ்ச்சியைக் கேட்கலாம்.

நண்பர்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கருத்துச் சொல்லவும், மற்றவர்களுக்குத் தகவல் சொல்லவும். நன்றிகள் 🙂

இந்தப் புத்தகங்களை இணையத்தில் வாங்க:

***

என். சொக்கன் …

09 01 2010

இந்த நிகழ்ச்சிபற்றிய செய்தியைப் பரவலாக்க, இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

பில் கேட்ஸ் -  சாஃப்ட்வேர் சுல்தான்

எனது ‘பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்’ புத்தகத்தின் விமர்சனம்: செந்தில் குமரன் வலைதளத்திலிருந்து:

நான் கட்டற்ற மென்பொருள் மற்றும் ரிச்சர்ட் ஸ்டால்மேனின் தீவிர விசிறி, பின்பு ஏன் பில் கேட்ஸைப் பற்றி படிக்க வேண்டும்? “See both sides of the coin”  என்ற பிரபல வாக்கியம் தான் இதற்கு காரணம். இந்த புத்தகம் அதற்கான சிறந்த கருவி, ஏனெனில், இந்த புத்தகம் பில் கேட்ஸை ஒரு தராசில் நிறுத்தி, தேவையான அளவு தெளிவாக இரண்டு பக்கங்களையும் (நல்லது, தீயது) விளக்குகிறது

விமர்சனம் + அறிமுகத்துக்கு நன்றி செந்தில்குமரன். பில் கேட்ஸ்போலவே Open Source இயக்கத்தைப்பற்றியும் விரிவாக எழுதவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான வாய்ப்புக் கிடைக்கவேண்டும். பார்க்கலாம்.

இந்த விமர்சனத்தை முழுவதும் படிக்க: http://www.stylesen.org/bill_gates_software_sultan

’பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்’ புத்தகம்பற்றிய கூடுதல் விவரங்கள், ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8368-437-8.html

இந்தப் புத்தகத்தின் மற்ற வடிவங்கள்:

சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகங்களை வாங்க: கிழக்கு பதிப்பகம் ஸ்டால் எண் P-1 & ப்ராடிஜி P-32

எனது மற்ற புத்தகங்கள்: http://nhm.in/shop/N.-Chokkan.html

***

என். சொக்கன் …

02 01 2010

இந்தப் புத்தாண்டின் முதல் காலை, மூன்றரை மணி நேரத் தாமதமான ஒரு ரயிலுக்காகக் காத்திருந்து போரடித்துப்போனேன்.

அதிசயமாக, பெங்களூர் ரயில் நிலையத்தில் இன்று கூட்டமே இல்லை. பயணச் சீட்டு வழங்கும் கவுன்டர்களுக்குமுன்னால் அனுமார் வால்போல் வரிசைகள் மடங்கி மடங்கி நீளாமல் காற்று வாங்கின, ‘ஏய் ஒழுங்கா லைன்ல நில்லு’ என்று முரட்டுக் கன்னடத்தில் அதட்டும் போலீஸ்காரர்களைக் காணோம், எதிரே வருகிறவர்கள் யார் எவர் என்றுகூடப் பார்க்காமல் இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடுகிறவர்கள், சக்கரம் பொருத்திய சூட்கேஸ்களுக்குக் கீழே நம் கால்களை நசுங்கச் செய்கிறவர்கள் தென்படவில்லை, பிளாட்ஃபாரங்களில் கீழே படுத்து உருளலாம்போலக் காலியிடம்.

ஒருகாலத்தில் இதற்கெல்லாம் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்தேன். அதன்பிறகு, விடுமுறை நாள்களில் பெங்களூர் காலியாகதான் இருக்கும் என்பது பழக ஆரம்பித்துவிட்டது. இங்கே வேலை செய்கிறவர்களில் பெரும்பாலானோர் அக்கம்பக்கத்து (அல்லது தூர தேசத்து) மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சேர்ந்தாற்போல் ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு அல்லது சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை கிடைத்தால் டூய் ஓட்டம் பிடித்துவிடுவார்கள், சாலைகளில் நடக்கிறவர்கள், வாகனங்கள் அதிகமில்லாமல் வலை கட்டி டென்னிஸ் விளையாடலாம்போல ஈயாடும்.

இன்றைக்கு நான் தேடிச் சென்றிருந்த ரயில், ஏழே காலுக்கு வரவேண்டியது, ஆனால் பத்து மணிக்கு மேல்தான் எதிர்பார்க்கலாம் என்று அறிவித்துவிட்டார்கள். அதுவரை இங்கேயே காத்திருப்பதா, அல்லது வீட்டுக்குப் போய்த் திரும்பலாமா என்கிற குழப்பத்திலேயே பாதி நேரத்தைக் கொன்றேன், மீதி நேரம் பிளாட்ஃபாரத்தின் மேலிருக்கும் பாலத்தில் முன்னும் பின்னும் நடந்ததில் தீர்ந்தது.

வழக்கமாக ரயில்களை நாம் பக்கவாட்டுத் தோற்றத்திலோ, அல்லது முன்னால் விரைந்து வருகிற எஞ்சின் கோணத்தில்தான் பார்த்திருப்போம். இன்றைக்குக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிளாட்ஃபார மேல் பாலத்தில் நடந்துகொண்டிருந்ததால், சுமார் இருபது ரயில்களை உச்சிக் கோணத்திலிருந்து பார்க்கமுடிந்தது. பளீரென்ற வண்ணத்தில், ஆங்காங்கே சதுர மூடிகளுடன் (எதற்கு?) ஒரு Giant Treadmillபோல அவை ஊர்ந்து செல்வதைப் பார்க்க மிகவும் விநோதமாக இருந்தது.

அதேசமயம், இந்தப் பாலத்தின் இருபுறச் சுவர்களில் ஆங்காங்கே சிறு இடைவெளிகள் இருப்பது ஏன் என்று புரியவில்லை. யாரும் தவறி விழ வாய்ப்பில்லை, ஆனால் எவராவது தற்கொலை நோக்கத்துடன் எகிறிக் குதித்தால் நேராக மோட்சம்தான், ரயில்வே நிர்வாகம் இதைக் கவனித்து மூடிவைத்தால் நல்லது.

பெங்களூர் ரயில் நிலையத்தில் மொத்தம் பத்து பிளாட்ஃபாரங்கள். எல்லாவற்றுக்கும் அழகாகப் பெயர்ப்பலகை எழுதிவைத்திருக்கிறார்கள். ஆனாலும் நடக்கிற மக்களில் பெரும்பாலானோர் பதற்றத்தில் எதையும் கவனிப்பதில்லை, கண்ணில் படுகிறவர்களிடம் ‘எட்டாவது பிளாட்ஃபாரம் எதுங்க?’ என்று அழாக்குறையாகக் கேட்கிறார்கள். போர்டைக் கவனிக்காவிட்டாலும், ஒண்ணு, ரெண்டு, மூணு என்று எண்ணக்கூடவா தெரியாது?

ஆறே முக்கால் மணியிலிருந்து அங்கே காத்திருந்த நான், சுமார் எட்டரைக்குப் பொறுமையிழந்தேன். காரணம், பசி.

ரயில் வருவதற்கு எப்படியும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது, அதற்குள் சாப்பிட்டுவிடலாம் என்று பாலத்தின் மறுமுனையை அடைந்தால், பளபளவென்று ஒரு கடை (பெயர்: Comesum) எதிர்ப்பட்டது. உள்ளே நுழைந்து ஒரு சாதா தோசை கேட்டால், முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு செவ்வக டோக்கன் கொடுத்தார்கள்.

‘எவ்ளோ நேரமாகும்?’

‘ஜஸ்ட் டென் மினிட்ஸ், உட்காருங்க.’

உட்கார்ந்தேன். கடையின் விளம்பரங்கள், பளபளப்புகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பசியில் எதுவும் சரியாகத் தென்படவில்லை.

சுமார் பன்னிரண்டு நிமிடங்கள் கழித்தும், என்னுடைய தோசை வரவில்லை, ‘என்னாச்சு?’ என்று விசாரித்தபோது, ‘தோசா மாஸ்டர் இன்னும் வரலை’ என்றார்கள்.

‘தோசை போடறதுக்கு எதுக்குய்யா தனியா ஒரு மாஸ்டர்? நீங்களே மாவை ஊத்திச் சுட்டு எடுங்களேன்?’

‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது சார்’ என்றார் கவுன்டரில் இருந்தவர், ‘அவர் வராம தோசை ரெடியாகாது.’

‘கொஞ்ச நேரம் முன்னாடி பத்து நிமிஷத்தில ஆயிடும்ன்னு சொன்னீங்களே!’

‘தோசா மாஸ்டர் வந்தப்புறம் பத்து நிமிஷம்.’

‘அவர் எப்ப வருவார்?’

‘தெரியலியே.’

எனக்குப் பசியும் எரிச்சலும் சேர்ந்து கத்த ஆரம்பித்தேன். கன்னடத்தில் சண்டை போடத் தெரியாது என்பதாலும், தமிழில் கோபப்பட்டுப் பிரயோஜனமில்லை என்பதாலும், ஆங்கிலம்தான் சரளமாக வந்தது, ‘தோசா மாஸ்டர் இல்லைன்னா நீங்க என்கிட்டே காசு வாங்கியிருக்கக்கூடாது, டோக்கன் கொடுத்திருக்கக்கூடாது. இது என்ன நியாயம்?’

‘கோவப்படாதீங்க சார், வேணும்ன்னா பூரி வாங்கிக்கோங்க, அதே முப்பது ரூபாய்தான்.’

’முடியாது, எனக்கு ஒண்ணு தோசை வேணும், இல்லாட்டி என் காசைத் திருப்பித் தரணும்.’

வழக்கமாக என்னுடைய கத்தல்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது. ஆனால் இன்றைக்கு அந்த ஆள் என்ன நினைத்தானோ, புது வருடத்தின் முதல் நாள் காலங்காத்தாலே சண்டை வேண்டாம் என்று காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.

முன்பைவிட அதிகப் பசி, ப்ளஸ் கோபத்துடன் நான் ரயில் நிலையத்துக்கு வெளியே வந்தேன். வேறு ஏதாவது ஹோட்டல் எதிர்ப்படுகிறதா என்று தேடியபோது உள்ளே ஒரு நப்பாசை, ‘பேசாம அந்த பூரியையாவது வாங்கித் தின்னிருக்கலாம், வீண் கௌரவம் பார்த்து இப்பப் பட்டினிதான் மிச்சம்!’

பொதுவாக ரயில் நிலையங்களுக்கு அருகே இருக்கும் ஹோட்டல்கள் விலை மிகுதியாகவும், சுவை, தரம் குறைவாகவும்தான் இருக்கும். ஆனால், பசிக்குப் பாவமில்லை, கண்ணில் பட்ட ஒரு சிறிய உணவகத்துக்குள் நுழைந்து அதே சாதா தோசையைக் கேட்டேன், இங்கே விலை பதினைந்து ரூபாய்தான்.

அந்த ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கே ஒன்றும் மரியாதை இல்லை, இங்கே இந்த ஆள் பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு என்ன செய்யப்போகிறார்? யோசனையோடுதான் பணத்தைக் கொடுத்தேன்.

என்னிடம் காசை வாங்கிய கையோடு, பில்லைக்கூட எழுதாமல் அவர் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார், ‘ஒரு சாதா.’

அப்புறம் நான் மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு உள்ளே போவதற்குள் தட்டில் சட்னி, சாம்பார் எல்லாம் ரெடியாகியிருந்தது. நான் கொடுத்த பில்லை வாங்கிக் கம்பியில் குத்தி முடித்தவுடன் சுடச்சுட தோசை வந்துவிட்டது.

அந்தப் பளபளாக் கடையோடு ஒப்பிட்டால், இங்கே சுவை, தரம், Speed of Service எதற்கும் குறைச்சல் இல்லை, இத்தனையும் பாதிக்குப் பாதி விலையில். ஆனால், கூட்டம் அம்முவதென்னவோ காஸ்ட்லி கடையில்தான்.

Of Course, ரயில் பயணம் செய்கிறவர்கள் கண்ட இடத்தில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் அதற்காக, பளபளா கடைகள் எல்லாவிதத்தில் தரமானவை என்கிற குருட்டு நம்பிக்கையும், இதுமாதிரி கடைகளை முதல் பார்வையிலேயே ஒதுக்கிவைக்கிற மனப்பான்மையும் நியாயமில்லை.

சூடான தோசையை வெளுத்துக்கட்டிவிட்டு நுரை பொங்கும் ஃபில்டர் காஃபியுடன் வெளியே வந்தால், நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரயில் இன்னும் சில நிமிடங்களில் ஏழாவது பிளாட்ஃபாரத்துக்கு வந்து சேரும் என அறிவித்தார்கள்.

அவசரமாகக் காஃபியை விழுங்கிவிட்டுப் பாலத்தைத் தேடி ஓடினேன். ஏழாவது பிளாட்ஃபாரம் எங்கப்பா? இப்போது, என் கண்ணுக்குப் பெயர்ப்பலகைகள் தென்பட மறுத்தன.

எப்படியோ ஏழாம் நம்பரைக் கண்டுபிடித்துப் படிகளில் இறங்கினால், ரயில் ஏற்கெனவே வந்திருந்தது, ‘ஸாரிப்பா, ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’

‘இல்லை, ஜஸ்ட் மூணு மணி நேரம்’ அசட்டுத்தனமாகச் சிரித்துவைத்தேன், ‘பாவம், ரயில் லேட்டானா அதுக்கு நீங்க என்ன செய்வீங்க?’

‘இவ்ளோ நேரம் காத்திருக்கறதுன்னா ரொம்ப போரடிச்சிருக்குமே.’

’உண்மைதான்’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்குள், ‘பகவத் கீதா’மாதிரி இல்லாவிட்டாலும், ஒரு ‘பகவத் சாதா’ பாடமாவது கற்றுக்கொள்ள முடிந்ததே. புத்தாண்டுக்கு நல்வரவு!

***

என். சொக்கன் …

01 01 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,750 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2010
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031