Archive for March 2010
எடைக்கு எடை
Posted March 27, 2010
on:- In: (Auto)Biography | Bangalore | Books | Characters | Coimbatore | Customer Care | Customer Service | Customers | Hyderabad | Memories | Price | Reading | Uncategorized | Value
- 16 Comments
புத்தகப் பிரியர்கள் பலருக்கு, புதுப் புத்தகம் எதுவானாலும் பிரித்து, அதனால் முகத்தைப் போர்த்தி, அந்த மணத்தை உள்வாங்குகிற சுகமான அனுபவம் பிடித்திருக்கும்.
நானும் அந்த வகைதான். ஆனால் எனக்கென்னவோ பழைய புத்தகக் கடைகளை ஒரு மாற்று அதிகம் பிடிக்கும்.
என்னுடைய தனிப்பட்ட தொகுப்பில் குறைந்தபட்சம் 60% புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளில் அள்ளியவையாகதான் இருக்கும். காரணம் பணத்தை மிச்சப்படுத்துவது அல்ல. புத்தக விஷயத்தில் நான் காசுக் கணக்குப் பார்ப்பது இல்லை.
மாறாக, பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கும் பொக்கிஷங்களும், அவை கிடைப்பதில் இருக்கும் எதிர்பாராத தன்மையும் அலாதியானவை. லாண்ட்மார்க்கில், க்ராஸ்வேர்டில், ஒடிஸியில் இதைப் பார்க்கமுடியாது.
இத்தனைக்கும், நான் தூசு ஒவ்வாமை(Dust Allergy)யால் அவதிப்படுகிறவன். தினமும் காலையில் ஷூ அணிவதற்குமுன்னால் அதைத் துணியால் லேசாகத் தட்டினால்கூட எனக்கு ஏழெட்டு தும்மல்கள் வரும். இதனாலேயே என் மனைவி வீட்டைச் சுத்தப்படுத்துகிற, பரணில் இருந்து எதையாவது எடுத்துத் தருகிற வேலைகளுக்குமட்டும் என்னை அழைக்கமாட்டார் (ஹையா, ஜாலி ஜாலி!)
ஆனால், பழைய புத்தகக் கடைகளுக்குள் நுழையும்போதுமட்டும், எப்படியோ இந்தத் தூசு ஒவ்வாமையெல்லாம் காணாமல் போய்விடுகிறது. புத்தகம் வாங்குகிறேனோ, இல்லையோ, மணிக்கணக்காக அவற்றைப் புரட்டுவது, எந்தப் புத்தகம் எப்போது என்னமாதிரியான பதிப்பு வந்திருக்கிறது, அச்சு எப்படி, தாள் எப்படி, புகைப்படங்கள் எப்படி, அட்டை வடிவமைப்பு எப்படி, விலை என்ன, முன்னுரை யார், பின்னட்டையில் எழுதியவர் புகைப்படம் உண்டா, ஆசிரியரை முன்னிறுத்துகிறார்களா, அல்லது பதிப்பகத்தையா, அல்லது புத்தகத் தலைப்பையா, இது யாருக்கான புத்தகம், அவர்களுடைய எதிர்பார்ப்பை இது நிறைவு செய்திருக்குமா, அல்லது தோற்றுப்போயிருக்குமா, இதைப் பழைய புத்தகக் கடையில் வீசியது யார், அப்போது அவர்கள் மனோநிலை என்ன, இந்தக் கடைக்காரர் இதை என்ன விலைக்கு வாங்கியிருப்பார், நமக்கு (அதாவது எனக்கு) என்ன விலைக்கு விற்பார், அவருக்கு இதன் மதிப்பு தெரிந்திருக்குமா (இங்கே மதிப்பு என்பது Value மற்றும் Price), இதே புத்தகத்தை நான் புதிதாக வாங்கினால் என்ன விலை இருக்கும், அந்தப் புது editionல் நான் கூடுதலாகப் பெறுவது என்ன? இழப்பது என்ன? இதுமாதிரி நுணுக்கமான தயாரிப்புகளெல்லாம் இப்போது ஏன் வருவதில்லை … இப்படி ஒவ்வொரு புத்தகத்தைப்பற்றியும் விதவிதமாக யோசித்துக்கொண்டிருந்தால் நேரம் ஓடுவதே தெரியாது.
இதனால், என்னுடைய கண் பார்வை எல்லைக்குள் ஏதாவது பழைய புத்தகக் கடைகள் தென்பட்டுவிட்டால், என்னுடன் இருக்கும் நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்கள். Bar வாசலில் ஒரு மொடாக்குடியனை teetotaler சிநேகிதர்கள் கலாய்ப்பதுபோல, ‘சரி சரி, நடக்கட்டும்’ என்பார்கள்.
என் மனைவிக்குமட்டும் இந்த விளையாட்டே ஆகாது, ‘பழைய புத்தகக் கடைக்கெல்லாம் நீ தனியாப் போய்க்கோ, அப்புறம் எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை, என்னோட வரும்போது இந்த வேலை வாணாம்’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். (பாவம், அவரை எந்தக் காலத்தில் என்ன பாடு படுத்தினேனோ!)
இந்தப் பழைய புத்தகப் பரவசம் எனக்குக் கல்லூரி நாளிலேயே வந்துவிட்டது. எங்கள் கல்லூரியிலிருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ’சாயிபாபா காலனி’ என்ற பகுதியில் ராஜா என்பவர் ஒரு பழைய புத்தகக் கடை வைத்திருந்தார். அங்கே நான் ரெகுலர் கஸ்டமர்.
நான் கல்லூரியில் படிக்க ஆரம்பித்த நேரத்தில், ராஜா கடை இரண்டு டேபிள்கள் அளவுக்குச் சிறியதாக இருந்தது. அடுத்த சில மாதங்களுக்குள் மளமளவென்று விரிவுபடுத்தி உள்ளே ஒரு கடையை வாடகைக்கு எடுத்து ஜமாய்த்துவிட்டார். நான் நான்காவது வருடம் வந்தபோது அதே சாயிபாபா காலனியில் இன்னொரு ‘ப்ராஞ்ச்’கூட தொடங்கிவிட்டார்.
ராஜாவிடம் ஒரு நல்ல பழக்கம், அவருக்குப் புத்தக ரசிகர்களின் மனோநிலை புரியும். அவர்கள் விரும்பும் புத்தகங்களுக்கு வேண்டுமென்றே அதிகம் விலை வைத்து ஏமாற்றமாட்டார். கையில் காசு இல்லாமல் சும்மா புத்தகங்களைத் தடவிப் பார்த்துவிட்டுப் போகிறேன் என்று வருகிறவனிடமும் முகம் சுளிக்கமாட்டார். அவருக்குப் புத்தகம் விற்பது வெறும் தொழிலாக அன்றி, ஒரு பரவசமான அனுபவமாக இருந்தது – கிட்டத்தட்ட ஒரு ‘antics shop’, ம்ஹூம், தப்பு, ‘antique shop’ நடத்துகிறவரைப்போல.
கோவையில் இருந்த காலகட்டத்தில் என் பெற்றோர் எனக்கு அனுப்பிய பாக்கெட் மணியில் பெரும்பகுதி ராஜாவின் கடையில்தான் (அப்போது புதுப் புத்தகங்களை முழு விலை கொடுத்து வாங்கும் வசதி இல்லை, மனமும் இல்லை) சென்று சேர்ந்தது. பலவிதமான (குப்பை, நல்ல) புத்தகங்களைத் தேடிப் படிக்கும் பழக்கமும் வந்தது.
இப்போதும், நான் கோவை சென்றால் ராஜா கடைக்குச் செல்லாமல் வருவதில்லை. என் மகளின் புத்தக அலமாரியிலும் ராஜா அன்போடு தேர்ந்தெடுத்துக் கொடுத்த நூல்கள் உள்ளன. நான் எழுதிய புத்தகம் ஒன்றைக்கூட அவருக்கு நன்றியுடன் சமர்ப்பித்திருக்கிறேன்.
1998க்குப்பிறகு நான் தமிழகத்தில் வாழும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. அவ்வப்போது அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கும் touristடாகமட்டுமே இருக்கிறேன். ஆகவே, தமிழ்ப் பழைய புத்தகக் கடைகளின்மீது எனக்கிருந்த நேசத்தை ஆங்கிலத்தின்மீது திருப்பிக்கொள்ளவேண்டிய கட்டாயம்.
அந்தவிதத்தில் ஹைதராபாத், பெங்களூரு இரண்டுமே என்னை ஏமாற்றவில்லை. கதை, கட்டுரை, வரலாறு, அறிவியல் எனப் பலவிதமான ஆங்கிலப் புத்தகங்களை இந்த இரு நகரங்களின் பழைய புத்தகக் கடைகளில் பீறாய்ந்திருக்கிறேன்.
ஒருமுறை, அலுவல் நிமித்தமாக டோக்கியோ சென்றிருந்தேன். திரும்பிய இடமெல்லாம் ஜப்பானிய மொழிமட்டுமே தென்பட்ட அந்த நகரத்தில்கூட, எனக்கு ஒரு பழைய புத்தகக் கடை சிக்கிவிட்டது. அங்கே சில மணி நேரம் செலவிட்டு ஓர் அட்டகாசமான வண்ணப் புத்தகத்தை (ஆங்கிலம்தான்) பேரம் பேசாமல் வாங்கிவந்தேன். ‘ஃபாரின் போய்ப் பழைய புத்தகம் வாங்கிட்டு வந்த ஒரே ஆள் நீதான்’ என்று என் நண்பர்கள் இப்போதும் கேலி செய்வார்கள்.
பெங்களூருவில் எனக்கு மிகவும் பிடித்த பழைய புத்தகக் கடை ‘Blossom’. எம்ஜி ரோட்டுக்கு இணையாக ஓடும் Church Street சாலையில் உள்ள ப்ளாசமைப் பல நண்பர்களுக்குச் சிபாரிசு செய்திருக்கிறேன். சமீபத்தில்கூட ’அகம் புறம் அந்தப்புரம்’ புகழ் முகில் படை, பரிவாரங்களோடு புறப்பட்டு வந்து நிறைய அபூர்வமான புத்தகங்களை அள்ளிச் சென்றார். (‘Blossom’ கடையின் இணைய தளம்: http://www.blossombookhouse.com/)
பழைய புத்தகக் கடை அனுபவங்களைப்பற்றி இப்போது இத்தனை விரிவாக எழுதக் காரணம் உண்டு. இன்றைக்கு பெங்களூரு ஜெயநகர் பகுதியில் ஓர் ATMமைத் தேடிக்கொண்டிருந்த நேரம், வித்தியாசமான ஒரு போர்ட் கண்ணில் பட்டது, ‘Old Books For Sale: Pay By Weight.’
குழப்பத்தோடு படிகளில் ஏறினேன். பழைய புத்தகக் கடைதான். ஆனால் மற்ற கடைகளைப்போலின்றி இங்கே புத்தகங்களை வித்தியாசமாக ரகம் பிரித்திருந்தார்கள், ‘Per Kg 50 Rupees’, ‘Per Kg 70 Rupees’, ‘Per Kg 100 Rupees’ என்று ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள்.
அதாவது, உங்களுக்குப் பிடித்த புத்தகம் எதையும் தேர்ந்தெடுக்கலாம். எடை போடலாம். அதற்கு ஏற்ப விலை. ’கிலோ 50 ரூபாய்’ பிரிவில் நீங்கள் ஒரே ஒரு மெல்லிய புத்தகம் எடுத்து அது 100 கிராம்மட்டும் எடை வந்தால், அதன் விலை ஐந்து ரூபாய். அதே புத்தகம் ‘கிலோ 250 ரூபாய்’ பிரிவில் இருந்தால், அதன் விலை 25 ரூபாய்.
’Of course, Its just a different pricing strategey’ என்றுதான் முதலில் அலட்சியமாக நினைத்தேன். அப்புறம் கொஞ்சம் லேசாக மேய்ந்தபோது, நிஜமாகவே பல புத்தகங்களை மிகக் குறைவான விலைக்கு வாங்குவது சாத்தியம் என்று புரிந்தது. புத்தகங்களுக்கு எடை பார்த்து விலை நிர்ணயிக்கிற விளையாட்டு செம ஜாலியாகவும் தோன்றியது. இரண்டு மணி நேரம் செலவழித்துப் பொறுக்கியெடுத்து ஒரு மூணு கிலோ அள்ளிவந்தேன்.
ஆர்வமுள்ளவர்கள் + பெங்களூருவில் உள்ளவர்கள் ஜெயநகர் 4th Block புதிய பேருந்து நிலையம், பழைய புட்டண்ணா தியேட்டர் இரண்டிற்கும் எதிரே உள்ள இந்தக் கடைக்கு ஒரு நடை சென்றுவரலாம். புத்தக Collection ஆரம்பிக்க விரும்புகிறவர்களுக்கு இது நல்ல சாய்ஸ் – நாவல்கள், பிஸினஸ் புத்தகங்கள், சுய முன்னேற்றக் கையேடுகள், ஆரோக்கியம், சமையலில் ஆரம்பித்து சிறு குழந்தைகளுக்கான Board Booksவரை சகலமும் கிடைக்கிறது. வகை, எடைக்கு ஏற்ப விலை.
முக்கியமான விஷயம், யாராக இருந்தாலும் இன்னும் ரெண்டு நாள் கழித்துச் செல்லுங்கள், நாளைக்கு நான் மீண்டும் ஒரு வேட்டைக்குப் போவதாக இருக்கிறேன் 😉
***
என். சொக்கன் …
27 03 2010
ட்டூட்டி ஃப்ரூட்டி
Posted March 15, 2010
on:- In: (Auto)Biography | Bangalore | Characters | Coimbatore | Confidence | Crisis Management | Fear | Food | Importance | Learning | Life | Memories | Money | Price | Uncategorized
- 22 Comments
சென்னையிலிருந்து வந்த நண்பர் ஒருவரைப் பார்க்க நேற்றைக்கு எம்.ஜி.ரோட் போயிருந்தேன்.
மகாத்மா காந்தியின் பெயர் கொண்ட பெங்களூரு எம்ஜிரோட்டைக் கடந்த பல மாதங்களாக அவரைப்போலவே அரை நிர்வாணமாக்கியிருக்கிறார்கள். வலதுபக்கம் உள்ள கோவண சைஸ் சாலையில்மட்டும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து நகர, மீதமிருக்கும் பகுதியை மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.
நண்பர் அவருடைய ஹோட்டல் வாசலில் காத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன், ‘என்னங்க உங்க ஊர் ட்ராஃபிக் ரொம்ப மோசம்!’ என்றார்.
‘தெரியும்’ என்றேன், ‘பெங்களூருக்கு வர்றவங்க எல்லோரும் முதல்ல சொல்ற வாக்கியம் இதுதான்!’
‘அப்ப, அடுத்த வாக்கியம்?’
’அதை இங்கே சொன்னா சென்சார் ஆயிடும், நாம ஒரு காஃபி சாப்பிடுவோமா?’
’வெய்யில் நேரத்தில காஃபி எதுக்கு? வாட் அபவுட் ஐஸ்க்ரீம்?’ பக்கத்துக் கடையைச் சுட்டிக்காட்டினார். நுழைந்தோம்.
சீருடை அணிந்த பேரர் வழவழா மெனு கார்டைக் கொண்டுவந்தார். அதில் சற்றேறக்குறைய நூற்றைம்பது ஐஸ்க்ரீம் ரகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அநேகமாக அனைத்தும் ஒரே விலை. (ஆனால், பெங்களூரில் யார் விலையைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள்?)
நண்பர் மெனு கார்டில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பெயரைத் தொட்டார், ‘எனக்கு ட்டூட்டி ஃப்ரூட்டி’ என்றார், ‘உங்களுக்கும் அதே சொல்லட்டுமா?’
’ஐயோ வேண்டாம்’ அவசரமாக மறுத்தேன், ‘எனக்கு ட்டூட்டி ஃப்ரூட்டின்னாலே அலர்ஜி.’
‘மெடிக்கல்?’
‘ம்ஹூம், மென்டல்.’
‘தெரிந்தவிஷயம்தானே?’ என்பதுபோல் அவர் என்னை ‘ஒருமாதிரி’யாகப் பார்த்தார், ‘ஐஸ்க்ரீம்ல என்ன சார் மென்டல் ப்ராப்ளம்?’ என்றார் மிகுந்த சலிப்போடு.
’அது பெரிய கதை, இப்போ வேணாம். அப்புறமா ப்ளாக்ல எழுதறேன்’ என்று சொல்லிவிட்டு ஒரு சாதாரண வெனில்லா ஐஸ்க்ரீமுக்கு ஆர்டர் செய்தேன்.
As Promised, அந்தக் கதை இங்கே.
*****
எல்லாக் கல்லூரி விடுதிகளையும்போலவே, எங்கள் ஹாஸ்டலிலும் ஒவ்வோர் அறைக்கும் பூட்டு உண்டு, சாவி உண்டு. ஆனால் அவற்றுக்கு மரியாதைதான் கிடையாது.
பெரும்பாலான பூட்டுகளைச் சத்தமாக அதட்டினாலே திறந்துவிடும். இல்லாவிட்டால் நம் பாக்கெட்டில் இருக்கும் ஏதாவது ஒரு சாவியை நுழைத்துக் குத்துமதிப்பாகத் திருப்பினால் வாயைப் பிளந்துகொள்ளும்.
இந்தத் திருட்டுத்தனங்களுக்கெல்லாம் இடம் கொடுக்காத ’பலே’ பூட்டுகளும் உண்டு. ஆனால் அந்த அறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பூட்டுக்கு ஏழெட்டுப் போலிச் சாவிகள் தயாரித்து, அவற்றை முக்கிய, அமுக்கிய நண்பர்களிடமெல்லாம் பகிர்ந்துகொடுத்திருப்பார்கள். இதனால், அந்தப் பூட்டுகளின் கற்பும் கேள்விக்குறியே.
சில அறைகளில், ஒரே வாசலுக்கு இரட்டைப் பூட்டு போட்டிருப்பார்கள். இதனால், இரண்டு அறை நண்பர்களும் தங்களுடைய ஒற்றைச் சாவியை வைத்து எப்போது வேண்டுமானாலும் அறையைத் திறக்கலாம், பூட்டலாம்!
ஒரே பிரச்னை, பெரும்பாலான நேரங்களில் இந்தப் பூட்டுகளில் ஒன்று நோஞ்சானாக இருந்துவிடும். ’A chain is as strong as its weakest link’ தியரிப்படி, அந்த அறைகளைப் பூட்டி ஒரு பயனும் கிடையாது.
ஒருவேளை, இந்த விதிமுறைகள் அனைத்தையும் மீறி செம ஸ்ட்ராங்காக, போலிச் சாவிக் கள்ளக் காதலன்கள் இல்லாத ஒரு பூட்டை எவனாவது தன்னுடைய அறைக்குப் போட்டான் என்று வையுங்கள், அவன் காலி. சுற்றியிருக்கிற எல்லோரும் ’ரூமை அப்படிப் பத்திரமாப் பூட்டிவைக்கிற அளவு என்னடா பெரிய ரகசியம்’ என்று அவனைக் கிண்டல் செய்தே நோகடித்துவிடுவார்கள்.
கடைசியாக, அதிமுக்கியமான விஷயம், எங்கள் விடுதி அறைகளின் கதவுகள் அனைத்தும் மிகப் பலவீனமானவை என்பதால், உசத்தியான பூட்டுப் போட்டுப் பெரிய பிரயோஜனம் ஒன்றும் இல்லை.
இதனால், பெரும்பாலான பையன்கள் தங்களுடைய அறைக் கதவில் சும்மா சாஸ்திரத்துக்கு ஒரு பூட்டை மாட்டிவைத்திருப்பார்கள். மற்றபடி எல்லா அறைகளும் எந்நேரமும் திறந்துதான் கிடக்கும்.
அப்படியானால், பாதுகாப்பு?
என்ன பெரிய பாதுகாப்பு? காலேஜ் பையன் ரூமில் திருடுவதற்கு என்ன பெரிதாக இருந்துவிடப்போகிறது?
அது சரி. கொஞ்சம் ப்ரைவஸி வேண்டாமா?
அப்போதெல்லாம் நாங்கள் ‘ப்ரைவஸி’ என்கிற வார்த்தையைக் கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. அதன் அர்த்தத்தை மதித்ததும் கிடையாது.
ரொம்ப யோசித்தால், ப்ரைவஸி சம்பந்தப்பட்ட ஒரே ஒரு சமாசாரம்மட்டும் ஞாபகம் வருகிறது. கல்லூரியில் (அல்லது அதற்குமுன்பு பள்ளியிலேயே) காதல்வயப்பட்ட பையன்கள் தங்களுடைய சூட்கேஸ்களை எப்போதும் பூட்டியே வைத்திருப்பார்கள். அதற்குள் இருக்கும் கடிதங்கள் அல்லது புகைப்படங்களைத் தேட்டை போட ஒரு கோஷ்டி சுற்றிக்கொண்டிருக்கும். அது தனிக்கதை. இங்கே வேண்டாம்.
மறுபடி எங்கள் விடுதிக்கு வருகிறேன். திறந்து கிடக்கும் ரூம்கள், பூட்டாத பூட்டுகளைக் கொஞ்சம் மனக்கண்ணில் விரித்துவைத்துக்கொள்ளுங்கள்.
இந்த விஷயத்தை இவ்வளவு விளக்கமாக ஏன் சொல்கிறேன் என்றால், இப்படிப் பாதுகாப்பு விஷயத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்த விடுதியில்தான், என்னுடைய குறிப்பு நோட் ஒன்று காணாமல் போய்விட்டது.
உடனடியாக, நான் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்தேன். ‘எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று கையை விரித்துவிட்டார்கள்.
என்னுடைய குறிப்பு நோட்டைத் திட்டம் போட்டுத் திருடுகிற அளவுக்கு நான் ஒன்றும் அணு விஞ்ஞானி கிடையாது. ஏதோ வகுப்பில் ப்ரொஃபஸர் சொன்னதைக் கிறுக்கிவைத்திருப்பேன். அவ்வளவுதான். அதைத் தேடிக் கண்டுபிடித்துப் பயனப்டுத்துகிற அளவு அதில் எதுவும் விசேஷம் இருந்திருக்காது.
ஆனால் ஏனோ, அப்போது அந்தக் குறிப்பு நோட்டு எனக்கு மிகவும் அவசியப்பட்டிருக்கிறது. ஹாஸ்டல்முழுவதும் ஒவ்வொரு ரூமாக அலைந்து திரிந்து அதைத் தேடியிருக்கிறேன். கிடைக்கவில்லை.
கடைசியாக, இனிமேல் அந்த நோட் கிடைக்காது என்று நான் நொந்துபோயிருந்த நேரத்தில், ஒரு நண்பர் என்னைத் தேடி வந்தார். அவர் பெயர் கிருஷ்ணன் என்று வைத்துக்கொள்வோமே.
இந்த நண்பர் என்னுடைய ஹாஸ்டலிலேயே இல்லை, சற்றுத் தள்ளியிருக்கும் இன்னொரு விடுதிக் கட்டடத்தில் தங்கியிருந்தார். ஆனால் எப்படியோ, தொலைந்துபோன என் நோட்டு அவர் கையில் கிடைத்திருக்கிறது.
எப்போதும், கிடைக்காது என்று நினைத்த பொருள் கிடைத்துவிட்டால் நாம் எக்ஸ்ட்ராவாக உணர்ச்சிவயப்படுவோம். அன்றைக்கு நான் அவர் காலில் விழாத குறை. குறைந்தது நூறு தடவையாவது அவருக்கு நன்றி சொல்லியிருப்பேன்.
என் குறிப்பு நோட்டைக் கண்டுபிடித்துக்கொடுத்த கிருஷ்ணன், பதிலுக்கு என்னிடம் ஒரு ட்ரீட் எதிர்பார்த்தார். நோட் கிடைத்த குஷியில் நானும் ஓகே சொல்லிவிட்டேன்.
ஒரு சுபயோக சுபதினத்தில், நாங்கள் அந்த ’ட்ரீட்’டுக்குப் புறப்பட்டோம். எங்களோடு துணைக்கு என் அறை நண்பன் ஒருவனையும் கூட்டிக்கொண்டேன் (கொழுப்புதானேடா உனக்கு!).
ஹோட்டலில் இடம் பிடித்து உட்கார்ந்ததும், கிருஷ்ணன் என்னிடம் மெனு கார்டை நீட்டினார். நான் அதை விநோதமாகப் புரட்டிப்பார்த்தேன்.
‘என்னாச்சு?’
‘இட்லி, தோசையெல்லாம் காணமே!’
அவர் பெரிதாகச் சிரித்தார், ‘இந்த ஹோட்டல்ல அதெல்லாம் இருக்காது! ஒன்லி நார்த் இண்டியன் & சைனீஸ்!’
வட இந்திய, சீன உணவுவகைகளைமட்டுமே பரிமாறுகிற ஒரு ஹோட்டல் எதற்காகக் கோயம்பத்தூரில் இருக்கவேண்டும் என்று நான் ஆச்சர்யப்பட்டேன். அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை (பந்தா குறைஞ்சுடக்கூடாதில்ல?)
அப்புறம், அவரே ஏதோ ஆர்டர் செய்தார். நானும் பாக்கெட்டில் இருந்த பணத்தைக் கணக்குப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டேன்.
நல்லவேளையாக, அந்த ஹோட்டலில் எந்தப் பண்டமும் யானை விலை, குதிரை விலை இல்லை. நான் கொண்டுபோயிருந்த பணத்தில் மூவரும் நன்கு திருப்தியாகவே சாப்பிடமுடிந்தது.
கடைசியாக, சாப்பிட்டு முடித்தபிறகு, ‘ஐஸ்க்ரீம்?’ என்றார் கிருஷ்ணன்.
இதுவரை போட்ட பட்ஜெட் கணக்குப்படி என் பையில் இன்னும் கொஞ்சம் பணம் பாக்கியிருந்தது. அந்தத் தைரியத்தில், ‘ஓகே’ என்றேன்.
மூன்று ஐஸ்க்ரீம் என்ன பெரிய விலை ஆகிவிடும்? முப்பது ரூபாய் வருமா? (பதினைந்து வருடங்களுக்குமுன்னால்) அவ்வளவுதானே? என்சாய்!
கிருஷ்ணன் எங்கள் மூவருக்கும் ‘ட்டூட்டி ஃப்ரூட்டி’ ஆர்டர் செய்தார். அழகான கண்ணாடிக் குவளையில் (கிண்ணம் அல்ல) நீளமான ஸ்பூனுடன் வந்து சேர்ந்தது. பலவண்ணங்களில் அடுக்கடுக்காக ஐஸ்க்ரீம், ஆங்காங்கே தூவிய உலர்பழங்கள், முந்திரி, பாதாம், இன்னபிற அதிகலோரி பொருள்கள்.
அத்தனை பெரிய குவளையைப் பார்த்தவுடனேயே, நான் சந்தேகப்பட்டிருக்கவேண்டும். ஆனால் உள்ளே இருந்த ஐஸ்க்ரீம் என்னை உருகச் செய்துவிட்டது. எல்லாவற்றையும் மறந்து ‘ட்டூட்டி ஃப்ரூட்டி’யை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
கொஞ்ச நேரம் கழித்து, பில் வந்தது. அது என்னுடைய பாக்கெட்டில் இருந்த பணத்தைவிட நூறு ரூபாய் கூடுதலாக இருந்தது.
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அது எப்படி? ஸ்பூனுக்கு ஸ்பூன், பைசாவுக்குப் பைசா கணக்குப் போட்டுதானே சாப்பிட்டோம்? தப்பு நடக்க வாய்ப்பில்லையே.
அவசரமாகப் பில்லை மேய்ந்தால், கடைசி ஐட்டம், மூன்று ட்டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம்கள் – 150 ரூபாய்!
அடப்பாவிகளா, ஒற்றை ஐஸ்க்ரீம் ஐம்பது ரூபாயா? எல்லாத்துக்கும் மெனு கார்டைப் பார்த்தவன் இந்தக் கடைசி மேட்டர்ல ஏமாந்துட்டேனே!
Of course, ஐம்பது ரூபாய்க்கு அந்தக் குவளை நிறைய ஐஸ்க்ரீம் என்பது நியாயமான கணக்குதான். ஆனால் பாக்கெட்டில் பணம் இல்லையே, என்ன செய்வது? மாவாட்டச் சொல்லிவிடுவார்களோ? வடக்கத்தி உணவில் மாவு உண்டா, இல்லையா, தெரியவில்லையே!
நான் நெருப்பைத் தின்றவன்போல் விழித்துக்கொண்டிருப்பதைப்பார்த்துக் கிருஷ்ணன் விசாரித்தார், ‘என்னாச்சு?’
‘ஒரு சின்ன மிஸ்டேக்’ என்று வழிந்தேன். நிலைமையைச் சொன்னேன்.
அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ஆனால் அவரிடமும் நூறு ரூபாய் இல்லை, என் ரூம்மேட்டிடமும் இல்லை. இருவருடைய பர்ஸ்களையும் கவிழ்த்துத் தேடியதில் சுமார் அறுபது ரூபாய்மட்டும் சிக்கியது. இன்னும் நாற்பது குறைகிறதே!
‘சரி, நீங்க இங்கேயே உட்கார்ந்திருங்க, நான் வெளிய போய் ஏதாவது கிடைக்குதான்னு பார்த்துட்டு வர்றேன்’ என்று புறப்பட்டார் அவர்.
இந்த ராத்திரி நேரத்தில் என்ன செய்யப்போகிறார்? ஒருவேளை, அகப்படுகிறவர்களிடம் பிக்பாக்கெட் அடிப்பாரோ? அபத்தமாக யோசனைகள் தோன்றின.
என்னுடைய ரூம் மேட் என்னைவிட பயந்திருந்தான். போனவர் வருவாரோ, மாட்டாரோ என்கிற கவலை அவனுக்கு.
கடைசியில், சுமார் இருபது நிமிடங்கள் கழித்து கிருஷ்ணன் வந்துவிட்டார், ‘கிளம்பலாம்’ என்றார்.
‘என்னாச்சு?’
‘மேனேஜரைப் பார்த்துப் பேசினேன். நம்ம காலேஜ் ஐடி கார்டைக் காண்பிச்சேன், கொஞ்சம் பணம் குறையுது, நாளைக்குக் கொண்டுவந்து தந்துடறேன்னு சொன்னேன், ஓகே சொல்லிட்டார்.’
அப்பாடா. நிம்மதியாக வெளியே வந்தோம்.
அதிகபட்சம் பத்து நிமிடம் இருக்கும். ஆனால், பையில் போதுமான காசு இல்லை என்கிற ஒரே காரணத்தால் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்து, தவித்துப்போய் உட்கார்ந்திருந்த அந்த நேரத்தை என்றைக்கும் மறக்கமுடியாது.
கெட்டதிலும் ஒரு நல்லது, இந்தச் சம்பவத்துக்குப்பிறகு ஹோட்டல்களில்மட்டுமல்ல, வேறு எங்கேயும், போதுமான பணம் இருக்கிறதா என்று பர்ஸைத் திறந்துபார்க்காமல் நான் உள்ளே நுழைவது இல்லை. பாக்கெட்டில் நாலு க்ரெடிட் கார்ட் வைத்திருந்தாலும், காசுக்கு இருக்கிற மரியாதையே தனி.
கடைசியாக, அன்றைக்குச் செய்த தப்புக்கு ஓர் அடையாளத் தண்டனையாக இன்றுவரை நான் ’ட்டூட்டி ஃப்ரூட்டி’யையும் சாப்பிடுவதில்லை!
இந்தப் பதிவை இப்படிச் சோகமாகவும் சென்டிமென்டாகவும் முடிக்கவேண்டாம் – உங்களுடைய ஃபேவரிட் ஐஸ்க்ரீம் எது? ஏன்? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன், சிறந்த பதிலுக்கு ஒரு ட்டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம், … வேண்டாம், ஒரு புத்தகம் பரிசு 🙂
***
என். சொக்கன் …
15 03 2010