மனம் போன போக்கில்

Archive for November 2010

தினமும் நங்கையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிற பேருந்து சிற்றுந்து கண்ணுக்குக் குளிர்ச்சியான(?) மஞ்சள் நிறம் கொண்டது. அதன் இருபுறமும் வழவழப்பான, கண்ணாடி பொருத்திய  காதுகள் உண்டு. நாள்தோறும் அதிகாலை ஆறே முக்கால் மணியளவில் எங்கள் வீட்டு வாசலுக்கே வந்து ஹாரன் அடிக்கும். நங்கையை ஏற்றிக்கொண்டு டாட்டா சொல்லிப் போகும்.

திடீரென்று ஒரு சுபயோக சுபதினத்தில் ‘இங்கெல்லாம் வரமுடியாது சார்’ என்று கையை விரித்துவிட்டார் திருவாளர் டிரைவர்.

’ஏன் சார்? என்னாச்சு?’

‘மெயின் ரோட்லேர்ந்து உள்ளே வந்துட்டுத் திரும்பிப் போறதுன்னா கால் ஹவர் ஆயிடுது சார். அப்புறம் வண்டி லேட்டா வருதுன்னு மத்த பேரன்ட்ஸ்ல்லாம் கம்ப்ளைன்ட் பண்றாங்க.’

எங்கள் வீடு பிரதான சாலையிலிருந்து சுமார் முந்நூறு மீட்டர் தூரம்தான். இங்கிருந்து திரும்பிச் செல்கிற தூரத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால்கூட அதிகபட்சம் முக்கால் கிலோமீட்டரைத் தாண்டாது. ஹாரன் ஒலித்தபின் நங்கை படிகளில் இறங்கிக் கீழே வருகிற நேரத்தைச் சேர்த்தாலும் நிச்சயம் ’கால் ஹவர்’ எல்லாம் ஆகாது.

ஆனால், திருவாளர் டிரைவரிடம் லாஜிக் பேசமுடியாது. அவர் கோபப்பட்டுவிட்டால் நமக்குதான் அசௌகர்யம். ஆகவே ‘தினமும் ஆறே முக்காலுக்குக் குழந்தையைக் கூட்டிகிட்டு மெயின் ரோட்டுக்கே வந்துடறோம்’ என்று ஒப்புக்கொண்டோம்.

‘ஆறே முக்கால் வேணாம் சார். ஏழு மணிக்கு வந்தாப் போதும்!’

‘அடப் படுபாவி. நீ கால் மணி நேரம் லேட்டாக் கிளம்பறதுக்குதான் இவ்ளோ பில்டப்பா?’ என்று மனத்துக்குள் நினைத்தபடி வெளியே இளித்தேன். ‘ஷ்யூர்’ என்றேன்.

மறுநாள் தொடங்கி நங்கையைப் பிரதான சாலைவரை அழைத்துச் சென்று பஸ் வரும்வரை காத்திருந்து ஏற்றிவிட்டுத் திரும்புவது என்னுடைய வேலையானது. இதற்காகச் சீக்கிரம் தயாராக வேண்டியிருப்பதைக் கொஞ்சம் உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளலாமே என்று என் அலுவலக நேரத்தையும் ’8 டு 5’ என மாற்றிக்கொண்டேன்.

ஒரே பிரச்னை, ஏழு மணிக்கு வருவதாகச் சொன்ன ஓட்டுனர் ஏழே கால் அல்லது ஏழு இருபதுக்குதான் வருகிறார். அதுவரை சாலையை வேடிக்கை பார்த்தபடி காத்திருக்க நேர்கிறது.

’சரி, இந்தாள் ஏழே காலுக்குதானே வர்றார்’ என்று ஒரே ஒரு நாள் ஐந்தே ஐந்து நிமிடங்கள் தாமதமாகப் போனேன். அன்றைக்குப் பார்த்து சீக்கிரமாக வந்து சேர்ந்து காத்திருந்தார். எங்கள் தலை தெரிந்ததும் முறைத்தார். ‘எவ்ளோ நேரம் சார் வெய்ட் பண்றது?’

‘யோவ், டெய்லி உனக்காக நான் வெய்ட் பண்ணலை?’ என்று அவரிடம் சொல்லமுடியுமா? குமுதம் அரசுபோல் ‘ஹிஹி’ என்று வழிந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

ஆரம்பத்தில் இப்படிப் பஸ்ஸுக்காகப் பத்து நிமிடம் நடப்பதும், கால் மணி நேரம் காத்திருப்பதும் செம கடுப்பாக இருந்தது. ‘அதான் மாசம் பொறந்தா காசு வாங்கறான்ல? வீட்டுக்கே வந்து கூட்டிகிட்டுப் போனா என்னவாம்?’ என்று எரிச்சல்பட்டேன்.

அப்புறம் கொஞ்சம் நிதானமாக யோசித்தபோது என்னுடைய கோபம் அர்த்தமில்லாதது, குழந்தைத்தனமானது என்று புரிந்தது. பள்ளிப் பேருந்து தங்கள் வீட்டு வாசலுக்கே வரவேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் எதிர்பார்ப்பார்கள். அது எதார்த்தத்தில் சாத்தியமில்லை. வீணாகும் எரிபொருளுக்காக அவர்கள் கூடுதலாகச் செலவழிக்கத் தயாராக இருந்தாலும் ஏது நேரம்? பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திச் சாலையில் நெரிசலையும் புகையையும் பெருக்கினால்தான் உண்டு. அந்தப் பெருங்கொடுமையைச் செய்வதற்குப் பதிலாக, தினமும் ஐந்து நிமிடம் நடக்கலாம். தப்பில்லை.

இப்படிப் பலவிதமாக யோசித்து என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டாலும், அவ்வப்போது (வேறு) பள்ளிப் பேருந்துகள் எங்கள் தெருவுக்குள் வந்து போவதைப் பார்க்கும்போதெல்லாம் ஓர் ஏக்கப் பெருமூச்சு வெளியாவதைத் தவிர்க்கமுடிவதில்லை. ‘ஹ்ம்ம்ம், நமக்கும் ஒரு டிரைவர் வந்து வாய்ச்சானே!’

அதேசமயம் அந்த ஐந்து நிமிட நடை, 10 நிமிடக் காத்திருப்பின்போது மற்ற குறுக்கிடல்கள் இல்லாமல் குழந்தையிடம் பேசிக்கொண்டிருக்கிற வாய்ப்பு அபூர்வமானது. ஜாலியாகக் கதை சொல்லலாம், கேட்கலாம், ரோட்டில் தென்படும் காட்சிகளைப்பற்றி அவள் கேட்கிற முடிவற்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் விழிக்கலாம், அவள் முந்தின நாள் கற்றுக்கொண்ட ரைமைச் சொல்லிக் காட்டச் சொல்லிக் கூடப் பாடலாம், ஆடலாம் (தெருவில் யாரும் கவனிக்கமாட்டார்களா என்று யோசிக்கவேண்டாம். சோம்பேறி நகரமாகிய பெங்களூரில் இந்தக் காலை நேரத்தில் ரோட்டுக்கு வருகிற யாரும் ‘சும்மா’ வருவதில்லை. நிச்சயம் ஏதாவது வேலையோடுதான் வருவார்கள். அவர்களுக்கு உங்களைக் கவனிக்க நேரம் இருக்காது!)

அப்புறம்? வேறென்ன மேட்டர் காலையிலே?

  • சாலையில் எதிர்ப்படுகிறவர்களில் பாதிப் பேர் என்னைமாதிரிக் குழந்தையை/களை ஸ்கூல் பஸ் ஏற்றிவிட வந்தவர்கள். மீதிப் பேர் உடம்பைக் குறைக்க நடக்கிறவர்கள், அல்லது ஓடுகிறவர்கள்
  • இந்த இரண்டு கட்சியிலும் சேராத ஒரு கோஷ்டி உண்டு. ஐடி நிறுவன வாகனங்களைப் பிடிக்க ஓடுகிறவர்கள்
  • காலை நேரத்தில் வாகனங்களோடு சாலைக்கு வருகிறவர்கள் 101.45% பேர் போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதில்லை. இன்றைக்கு ’நிஜமான’ நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டுக் கூலாகச் சாலையைக் கடந்து தம் வாங்கிப் பற்றவைத்த ஒருவரைப் பார்த்தேன்
  • நாங்கள் பஸ்ஸுக்குக் காத்திருக்கும் இடத்தில் ஒரு பால் பூத் உள்ளது. அங்கே சிதறி விழும் பால் துணுக்குகளை(மட்டுமே) குடித்துக் குடித்துக் கொழுத்த வெள்ளைப் பூனை ஒன்றும் உள்ளது!
  • பெங்களூரில் அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை ரூ 9.50/- ஆனால் இந்தப் பூத்தில் பால் வாங்குகிற யாரும் பாக்கி 50 பைசாவைக் கேட்டு வாங்குவதே இல்லை. எப்போதாவது அபூர்வமாகச் சிலர் கேட்கும்போது அங்கிருக்கும் பெண்மணி மறுக்காமல் 50 காசைக் கொடுத்துவிடுகிறார். அதேபோல் மற்றவர்களுக்கும் அவரே நினைவுபடுத்திப் பாக்கிச் சில்லறையைத் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லைதான்!
  • பால் பூத்துக்கு நேர் எதிரே இருக்கும் மரத்தில் இரண்டு கழுகுகள் தினமும் உட்கார்ந்திருக்கின்றன. எதற்கு?
  • இன்னொரு பக்கம் ‘PHD ஆக வாருங்கள்’ என்று ஓர் அறிவிப்பு. ’டாக்டர்  / முனைவர் பட்டத்துக்கெல்லாம் இப்படி விளம்பரமா?’ என்று ஆச்சர்யத்தோடு கவனித்தால் பிஸ்ஸா டெலிவரிக்கு ஆள்கள் தேவை(PHD=Pizza Hut Delivery!)யாம். அடப்பாவிகளா!

***

என். சொக்கன் …

23 11 2010

இன்று காலை ட்விட்டரில் இப்படி இரண்டு வரிகள் கிறுக்கியிருந்தேன்:

  • Recommended this for a colleague who needed some book to improve his English –> http://goo.gl/vTXM1
  • I wish there is some similar book in tamil too – 30 நாள்களில் தமிழ் ஒழுங்காக எழுதுவது எப்படி? 😉

இதைப் படித்துவிட்டு நண்பர் ப்ரியா கதிரவன் ஒரு மெயில் எழுதினார்:

‘I wish there is some similar book in tamil too’

It has to be – I wish there ‘was’ some…..:-)

நான் விடுவேனா? செம புத்திசாலித்தனமா ஓர் அபத்தக் கேள்வியைக் கேட்டேன்:

இங்கே ’there was’ ஏன் வருது? இப்ப ஏதாவது புக் இருந்தா
நல்லதுன்னுதானே சொல்றேன்? ப்ரெசென்ட் டென்ஸ் வரக்கூடாதா?

இதற்கு அவர் எழுதின பதில்:

ஆங்கிலத்தில் I wish என்பது  இப்போதைக்கு நம்மிடம் இல்லாத ஒன்று இருந்து இருந்தா  நல்லா இருக்கும் ன்னு சொல்லும்போது பயன்படுத்த வேண்டியது.

கமல் தசாவதாரத்தில் சொல்வாரே…

“நான் எங்க கடவுள் இல்லன்னு சொன்னேன்…இருந்தா நல்லா இருக்கும்ன்னு தானே சொன்னேன்?”…

that is I (அதாவது கமல்)  wish there ‘was’ God.

இருந்து இருந்தா ->  So we always use past tense followed by I wish.

The first example that I read for I wish was “I wish I were a bird”

Here again there is a big lesson when to use “I wish I was” and when to use “I wish I were”…

இந்த விளக்கம் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம், எனக்கு இப்போதுதான் தெரிந்தது – இன்னும் பலருக்குப் பயன்படலாம் என்று தோன்றியது. ப்ரியா கதிரவனுடைய அனுமதியுடன் இங்கே சேர்க்கிறேன். பொறுமையாகவும் தெளிவாகவும் விளக்கம் சொன்ன அவருக்கு நன்றி!

இன்னொரு விஷயம், இதே ட்வீட்களைப் படித்துவிட்டு நண்பர் உமா மகேஸ்வரனும் ஒரு நல்ல அடிப்படை ஆங்கிலப் புத்தகத்தைச் சிபாரிசு செய்திருந்தார். ”Basic English Usage” By Swan Michael. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக வெளியீடு. முழு வடிவம் அல்லது பாக்கெட் சைஸில் கிடைக்கிறது –> http://goo.gl/bnLT2 & http://goo.gl/p2LSr

***

‘அவங்க வந்தாச்சு!’

யாரோ சத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினார்கள். சட்டென்று அந்தச் சிறைச்சாலைமுழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

மதிய நேரம் அது. பெரும்பாலான கைதிகள் தங்கள் அறைகளுக்குள் காலை நீட்டிப் படுத்திருந்தார்கள். சிலர் சுவர் ஓரமாகச் சாய்ந்து உட்கார்ந்தபடி விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் யோசனையோடு வட்டப் பாதையில் சுற்றிச்சுற்றி நடந்தார்கள். காற்றிலோ தரையிலோ சுவரிலோ படம் வரைந்து ஏதோ திட்டமிட்டார்கள். மிச்சமிருந்தவர்கள் பழைய நினைவுகளில் வருங்காலக் கனவுகளில் கற்பனைகளில் மூழ்கியிருந்தார்கள்.

ஆனால் அவர்களில் ஒருவர்கூடத் தூங்கவில்லை. எல்லோரும் இந்தக் கணத்துக்காகதான் காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தார்கள்.

‘அந்தமான் கைதிங்க வந்தாச்சு!’

அந்தக் குரல் கேட்ட மறுவிநாடி எல்லாக் கைதிகளும் தங்களுடைய அறையின் கம்பிக் கதவை நெருங்கினார்கள். அதற்குள் தலையை நுழைத்து வாசலைப் பார்க்க முயன்றார்கள்.

ம்ஹூம். பலன் இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவர்களால் அந்தச் சிறைச்சாலையின் வராண்டாவைதான் பார்க்கமுடிந்தது. அதற்குமேல் ஒரு பூச்சி புழுகூடத் தென்படவில்லை.

‘நெஜமாவே அந்தமான் கைதிங்க வந்தாச்சா?’ பக்கத்து அறையை நோக்கிக் கத்தினான் ஒருவன்.

’எனக்கு எப்படித் தெரியும்? நானும் உன்னைமாதிரிதானே ஜெயில்ல கெடக்கறேன்?’

‘அட கோவிச்சுக்காதேப்பா. உனக்கு எதுனா விஷயம் தெரிஞ்சா சொல்லு!’

அப்போது சீருடை அணிந்த வார்டர் ஒருவர் அந்தப் பக்கமாக விரைந்துவந்தார். கம்பிக் கதவில் லத்தியால் தட்டி ‘என்ன இங்கே கலாட்டா?’ என்றார் மிரட்டலாக.

‘வார்டர் சார். அந்தமான் கைதிங்க வந்தாச்சா?’

‘அப்படிதான் சொல்றாங்க’ என்றார் அவர். ‘நானும் அவங்களைப் பார்க்கதான் போய்கிட்டிருக்கேன். அப்புறமா வந்து சொல்றேன். பேசாம உள்ளே போய் உட்காருங்க.’

அந்தக் கைதிகள் எப்போது வார்டரின் பேச்சைக் கேட்டார்கள்? எப்படியாவது கழுத்தைத் திணித்துக் கம்பிகளை உடைத்துவிடமுடியாதா என்று போராடிக்கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் அந்தமான் கைதிகளைப் பார்க்க அவ்வளவு ஆசை.

‘அதோ, சங்கிலிச் சத்தம் கேட்குது’ என்றான் ஒருவன். ‘அந்தமான் கைதிங்க வந்தாச்சு!’

‘சங்கிலியா? அது எதுக்கு?’

’உனக்குத் தெரியாதா? அந்தமானுக்குப் போற கைதிங்கல்லாம் படுபயங்கரமான ரௌடிப்பசங்க. கொலை கொள்ளைக்கு அஞ்சாதவங்க. கொஞ்சம் அசந்தாலும் போலிஸ்காரங்களையே போட்டுத் தள்ளிடுவாங்க!’

‘அதனால?’

’கோர்ட்ல தண்டனை அறிவிச்சவுடனே அவங்களுக்குக் கையிலே காலிலே இடுப்பிலேன்னு மூணு சங்கிலிகளை மாட்டிடுவாங்க. அதுக்கப்புறம் இருவத்தஞ்சு வருஷத்துக்கு அவங்க அதோடயே வாழவேண்டியதுதான்.’

‘இருவத்தஞ்சு வருஷமா?’

’என்னப்பா இதுக்கே வாயைப் பொளக்கறே. அம்பது வருஷம் நூறு வருஷம் ஐநூறு வருஷம்ன்னு அந்தமானுக்குப் போறவங்ககூட உண்டு. தெரியாதா?’

நிஜமா பொய்யா என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் கைதிகள் கதை அளந்துகொண்டிருக்க அவர்களுடைய வார்டர் பரபரப்பாக நடந்தார். ஜெயிலின் முன்பகுதியை நெருங்கினார்.

இப்போது சங்கிலிச் சத்தம் இன்னும் பலமாகக் கேட்டது. நிஜமாகவே அந்தமான் கைதிகள் வந்திருக்கவேண்டும்!

அநேகமாக அந்தச் சிறைச்சாலையில் இருந்த வார்டர்கள், காவலர்கள், மற்ற பணியாளர்கள் எல்லோரும் அங்கே கூடியிருந்தார்கள். மேலதிகாரிகள் கண்ணில் பட்டுவிடாமல் ரகசியமாக ஒளிந்து நின்றபடி எட்டிப் பார்த்தார்கள்.

அங்கே தாடியும் மீசையுமாக இருபது அழுக்கு உருவங்கள் நின்றிருந்தன. எல்லோரையும் கனமான சங்கிலிகளால் கட்டிப்போட்டிருந்தார்கள். ஆனால் அவர்களுடைய முரட்டு உடம்புகளைப் பார்க்கும்போது இந்தச் சங்கிலிகளெல்லாம் சர்வ சாதாரணமாகத் தோன்றின.

‘இவங்கல்லாம் என்ன தப்புச் செஞ்சாங்க?’ ஒரு வார்டர் கிசுகிசுப்பான குரலில் கேட்டார்.

‘தெரியலையே!’ இன்னொருவர் உதட்டைப் பிதுக்கினார். ’ஆனா இதுங்க மூஞ்சைப் பார்த்தாலே தெரியுது. மகாமோசமான ஆளுங்க-ன்னு.’

‘பின்னே? சும்மாவா சர்க்கார் செலவு பண்ணி இவங்களையெல்லாம் அந்தமானுக்கு அனுப்பிவைக்குது?’

எப்படியாவது அந்த ‘ஸ்பெஷல்’ கைதிகளின் முகங்களைப் பார்த்துவிடவேண்டும் என்று அங்கிருந்த பணியாளர்கள், காவலர்கள் எல்லோரும் முட்டி மோதினார்கள். இவர்களில் யார் யார் என்னென்ன குற்றங்களைச் செய்திருப்பார்கள் என்று தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள்.

சில நிமிடங்கள் கழித்து அந்தக் கைதிகள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையை நோக்கி நடந்தார்கள். கூடவே சில மேலதிகாரிகளும்.

அவ்வளவுதான். சிறைப் பணியாளர்கள் எல்லோரும் தலைதெறிக்க ஓடி மறைந்தார்கள்.

புதிய கைதிகள் இரும்புச் சங்கிலிகளை இழுத்துக்கொண்டு நடக்க பழைய கைதிகள் அவர்களை ஆவலோடு பார்த்தார்கள். ஆனால் யாரும் வாயைத் திறக்கவில்லை.

அந்தமானுக்குச் செல்லவிருக்கும் கைதிகள் எல்லோரும் ஒரு பெரிய அறையில் அடைக்கப்பட்டார்கள். வெளியே ஒன்றுக்கு இரண்டு பூட்டுகள்!

அதேநேரம் சிறைமுழுவதும் அவர்களைப்பற்றிதான் பேசிக்கொண்டிருந்தது. இந்தக் கைதிகளெல்லாம் எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? எந்தக் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றிருக்கிறார்கள்? இவர்கள் எப்போது அந்தமான் போவார்கள்? எப்படிப் போவார்கள்? கப்பலிலா? ஒருவேளை கப்பலில் இருந்து குதித்து இவர்கள் தப்பித்துவிட்டால்? அந்தமான் போய்ச் சேர்ந்தபிறகு அவர்கள் அங்கே எத்தனை வருடங்களைக் கழிக்கவேண்டும்? அங்கிருக்கும் படுபயங்கர சிறைச்சாலை எப்படிப்பட்டது? அங்கே இவர்கள் என்னமாதிரி தண்டனை அனுபவிப்பார்கள்? நாள்முழுவதும் ஜெயிலில் சும்மா உட்கார்ந்திருக்கவேண்டுமா? அல்லது வேலை செய்யச் சொல்வார்களா? அங்கே சாப்பாடு படுமோசமாமே? தப்புச் செய்தால் தினசரி சவுக்கடி உண்டாமே? அந்தமான் கொசுக்கள் கைதிகளைத் தூக்கிப் போட்டு விளையாடுமாமே?

உண்மையில் கைதிகள், வார்டர்கள், பணியாளர்கள் யாருக்கும் இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில்கள் தெரிந்திருக்கவில்லை. எப்போதோ எங்கேயோ கேள்விப்பட்ட விஷயங்களை நிஜமா புருடாவா என்றுகூட உறுதிப்படுத்திக்கொள்ளாமல் இஷ்டத்துக்குக் கண், காது, மூக்குவைத்து அளந்துவிட்டுக்கொண்டிருந்தார்கள்.

இதனால் அவர்கள் எல்லோரும் தாங்கள் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் என்பதையே தாற்காலிகமாக மறந்துபோயிருந்தார்கள். பின்னே? இந்தப் புதுக் கைதிகள் அந்தமானில் சந்திக்கப்போகும் கொடுமைகளோடு ஒப்பிட்டால் இந்த ஜெயிலெல்லாம் சொர்க்கமில்லையா?

’அந்தமான் கைதிங்கல்லாம் இப்போ என்ன செஞ்சுகிட்டிருப்பாங்க?’

‘வேற என்ன? செஞ்ச தப்பை நினைச்சு அழுதுகிட்டிருப்பாங்க’ அலட்சியமாகச் சொன்னார் ஒரு வார்டர். ‘இனிமே வருத்தப்பட்டு என்ன புண்ணியம்? அந்தமானுக்குப் போய் சவுக்கடி வாங்க ஆரம்பிச்சா வாழ்நாள்முழுக்க அழவேண்டியதுதான்!’

‘இல்ல வார்டர் சார். ஏதோ சிரிப்புச் சத்தம் மாதிரில்ல கேட்குது?’

வார்டர் ஆச்சர்யமாகக் கூர்ந்து கேட்டார். ‘அட ஆமா!’

அந்தமான் கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த அந்த அறையிலிருந்து பெரிய கூச்சல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. சிலர் பலமாகச் சிரித்தார்கள். பாட்டுப் பாடினார்கள். கடவுளைக் கூப்பிட்டுக் கெட்ட வார்த்தையில் திட்டினார்கள். அடுத்தவர்களைச் செல்லமாகக் கேலி செய்தார்கள். கொஞ்சம் அழுதார்கள். பிறகு மறுபடி சிரித்தார்கள். சிரித்துக்கொண்டே அழுதார்கள். அழுதுகொண்டே சிரித்தார்கள்.

’இவங்களுக்கெல்லாம் கிறுக்குப் பிடிச்சுடுச்சா என்ன? இன்னும் பத்து நாள்ல அந்தமானுக்குப் போய் உதை தின்னப்போறாங்க. இப்ப என்ன சிரிப்பு வேண்டிக்கெடக்கு?’

யார் என்ன சொன்னாலும் அந்தக் கைதிகள் அடங்கவில்லை. அடுத்த சில நாள்கள் அவர்களுடைய கூச்சல், கும்மாளம், கூக்குரல், கேலி, கிண்டல், சண்டை, அழுகை, சிரிப்பு, ஆபாச வசவுகள், கெஞ்சல்கள், கதறல்கள் அந்தச் சிறைச்சாலை முழுவதையும் நிறைத்திருந்தன.

திடீரென்று ஒருநாள் அங்கே இன்னொரு பரபரப்பு. ‘அந்தமானுக்குக் கப்பல் தயாராகிவிட்டது. கைதிகள் புறப்படவேண்டியதுதான்!’

இந்தக் குறுகிய காலகட்டத்துக்குள் ஒட்டுமொத்தச் சிறைச்சாலையையும் தங்களுடைய அடாவடியால் ஆக்கிரமித்திருந்த அந்தமான் கைதிகள் சங்கிலி ஒலிக்க நடந்தார்கள். மற்ற கைதிகள் வழக்கம்போல் அவர்களை வெறித்துப் பார்த்தார்கள். தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டார்கள்.

அந்தக் கைதிகள் அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஜெயிலுக்கு வெளியே காத்திருந்த போலிஸ் வேனில் ஏறி உட்கார்ந்தார்கள். கதவுகள் பூட்டப்பட்டன. வண்டி துறைமுகத்தை நோக்கி விரைந்தது.

துறைமுகத்தில் ஏகப்பட்ட போலிஸ் பாதுகாப்பு. பல சிறைச்சாலைகளில் இருந்து வருகிற கைதிகள் எல்லோரையும் பத்திரமாகக் கப்பலேற்றி அந்தமானுக்கு அனுப்பவேண்டுமே என்கிற பதற்றத்தில் எல்லோரும் சுறுசுறுப்பாக வளையவந்துகொண்டிருந்தார்கள்.

பெரும்பாலான கைதிகள் தங்களுடைய சிறைச்சாலைகளில் இருந்து நடந்தே வந்திருந்தார்கள். சிலருக்கு வேன் யோகம் வாய்த்திருந்தது. அபூர்வமாக ஒன்றிரண்டு பேர்மட்டும் போலிஸ் காரில் பத்திரமாக வந்து இறங்கினார்கள்.

இவர்கள் எல்லோரும் கை விலங்கு, கால் சங்கிலியோடு அப்படியே கப்பலில் ஏறினார்கள். அங்கே அடித்தளத்தில் அவர்களுக்கென்று ஒரு கூண்டு தயாராக இருந்தது.

கைதிகள் அனைவரும் உள்ளே நுழைந்தபிறகு அந்தக் கூண்டு அடைத்துப் பூட்டப்பட்டது. காவலர்களும் அதிகாரிகளும் மேல் தளத்துக்குச் சென்றுவிட மிச்சமிருந்த வெளிச்சமும் காணாமல் போனது.

அந்தச் சிறிய கூண்டுக்குள் ஹிந்தி, உருது, பெங்காலி, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி என்று எல்லா பாஷைகளும் இரைச்சலாகக் கேட்டுக்கொண்டிருந்தன. ஒருவருடைய கேள்வி இன்னொருவருடைய பதில்மேல் ஏறிக்கொள்ள கடைசியில் யார் என்ன பேசுகிறார்கள் என்று யாருக்கும் புரியவில்லை.

இருட்டோ இருட்டு. கொஞ்சம்கூடக் காற்று இல்லை. வியர்வையைத் துடைக்கலாம் என்றால் பக்கத்தில் இருப்பவன்மேல் மோதவேண்டியிருக்கிறது. கடல் அலைகளில் கப்பல் தள்ளாட வாந்தி வயிற்றைப் புரட்டியது.

நிற்கவே இடம் இல்லை. எங்கே உட்கார்வது? படுப்பது? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அவஸ்தை? ஒருவேளை வாழ்நாள்முழுவதும் அந்தமானில் அனுபவிக்கப்போகும் வேதனைகளுக்கு இப்போதிலிருந்தே பயிற்சி கொடுத்துத் தயார் செய்கிறார்களோ?

கூண்டுக்குள்ளிருந்த கைதிகள் குறுகுறுப்போடு அக்கம்பக்கம் நோட்டமிட்டார்கள். அவர்களுடைய கண்கள் இப்போது இருட்டுக்குப் பழகிவிட்டதால் சுற்றியிருந்தவர்களைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது.

பெரும்பாலான முகங்களில் துஷ்டத்தனம் வெளிப்படையாகத் தெரிந்தது. ‘அந்தமான் என்ன? எந்தமான் வந்தாலும் என்னை ஒண்ணும் பண்ணமுடியாது’ என்று அடாவடியாக நெஞ்சு நிமிர்த்தி நின்றார்கள்.

இன்னும் சிலர் அமைதியாக ஏதோ யோசித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போது கொலை, கொள்ளை, வழிப்பறி கேஸில் அந்தமான் போகிறவர்களாகத் தெரியவில்லை. அரசியல் கைதிகளாக இருக்கலாம்.

அதிரடி கேஸோ அரசியல் கேஸோ அந்தமான் ஜெயிலுக்கு எல்லாக் கைதிகளும் ஒன்றுதான். அதை இந்த மனிதக் கூண்டு சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் அவர்களுக்குச் சாப்பாடு வந்தது. பட்டாணியும் பொட்டுக்கடலையும்.

’இது என்னய்யா சாப்பாடு? ரொட்டி இல்லையா? சோறு, ரசம், குழம்பு, அரைத் துண்டு மீன்கூடக் கிடைக்காதா?’

‘ஒண்ணும் கிடையாது. அந்தமான் போய்ச் சேர்றவரைக்கும் எல்லாரும் இதைத்தான் சாப்பிடணும்!’

அவர்கள் பரிதாபமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். வேறுவழியில்லாமல் பட்டாணியை எடுத்து மென்றார்கள்.

அரை மணி நேரம் கொறித்தும் யாருக்கும் கால் வயிறுகூட நிரம்பவில்லை. கிடைத்த இடத்தில் சுருண்டு படுத்துக்கொண்டார்கள்.

இது ராத்திரியா? பகலா? நாம் கப்பல் ஏறி எவ்வளவு நேரமாச்சு? இன்னும் அந்தமான் சென்று சேர எவ்வளவு நாளாகும்? யாருக்கும் தெரியவில்லை.

அதனால் என்ன? கூண்டுமுழுவதும் இருட்டு. ராத்திரி என்று நினைத்துக்கொண்டு தூங்கவேண்டியதுதான்.

அந்தச் சிறிய கூண்டுக்குள் எத்தனை பேர் சுருண்டு படுக்கமுடியும்? எப்படியோ சமாளித்துப் படுத்தார்கள். கண்ணை மூடினார்கள்.

சிறிது நேரத்தில் அங்கே ஏதோ கெட்ட நாற்றம் அடித்தது. நிமிர்ந்து பார்த்தால் ஒரு கைதி நின்றவாக்கில் ஒரு டிரம்முக்குள் உச்சா போய்க்கொண்டிருந்தார்.

‘யோவ், உனக்கு அறிவில்ல? இங்கயேவா அசிங்கம் பண்ணுவாங்க?’

‘பின்னே? வேற எங்க பண்றதாம்?’ அந்தக் கைதி அலட்சியமாகக் கேட்டபோதுதான் மற்றவர்களுக்கு விஷயம் புரிந்தது. இன்னும் சில நாள்களுக்கு அத்தனை கைதிகளுக்கும் உச்சா, கக்கா எல்லாமே இந்த ட்ரம்தான்.

‘இத்தனை நாத்தத்துக்கு நடுவில எப்படிய்யா தூங்கறது?’ யாரோ எரிச்சலோடு கத்தினார்கள்.

சத்தம் போட்டு என்ன பிரயோஜனம்? மேலே சொகுசு அறைகளில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கும் ஆங்கிலேயக் கனவான்களின் காதுகளில் விழப்போவதில்லை. எதுவும் மாறப்போவதில்லை.

அவர்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு படுத்தார்கள். தூக்கம் வர மறுத்தது.

அடுத்த சில மணி நேரங்களுக்குள் அந்த ட்ரம் நிரம்பி வழிந்தது. அதைச் சுத்தப்படுத்தக்கூட யாரும் இறங்கி வரவில்லை.

மறுபடி அந்த ட்ரம்பக்கமாகப் போய் ஒதுங்கவேண்டியிருக்குமோ என்கிற பயத்திலேயே அவர்கள் எதுவும் சாப்பிடவில்லை. வெறும் வயிற்றுடனே பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

நாள், நேரக் கணக்கெல்லாம் மறந்துபோன ஒரு சமயத்தில் மேல்தளத்திலிருந்து கட்டளை வந்தது. ’எல்லோரும் தயாராகிக்கொள்ளுங்கள்!’

இதன் அர்த்தம், அந்தமான் நெருங்கிவிட்டது.

கைதிகள் பயத்தோடு படிகளில் ஏறி மேலே வந்தார்கள். நான்கைந்து நாளாக வியர்வையில்மட்டுமே குளித்த தேகங்கள் அழுக்கும் நாற்றமுமாக மண்டிக் கிடந்தன. சோர்ந்த கண்களோடு கடலை நோட்டமிட்டார்கள்.

கன்னங்கரேல் நிழல் படிந்த கறுப்புத் தண்ணீர் ‘காலா பானி’ அவர்களுக்குள் பயத்தைச் செருகியது. சற்றுத் தொலைவில் மதில் சுவர்கள் தேவைப்படாத தீவுச்சிறை. இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் அங்கே அடைக்கப்படுவார்கள்.

எத்தனைக் காலத்துக்கு? திரும்பவும் இதேமாதிரி ஒரு கப்பலில் தாய்நாடு திரும்பிச் செல்லமுடியுமா? அல்லது நிரந்தரமாக இங்கேயே மண்ணோடு மக்கிப்போகவேண்டியதுதானா?

அத்தனை பேரும் இவ்வளவு நேரமாக மறந்திருந்த ‘தண்டனை’ இப்போது அவர்களுடைய முதுகில் ஏறி உட்கார்ந்துகொண்டது. நெஞ்சுக்குள் கனம் ஏறியது. மிகுந்த தவிப்போடு தூரத்தில் தெரியும் பச்சைப்பசேல் தீவைப் பரிதாபமாக வெறித்துப் பார்த்தார்கள்.

கொஞ்சநேரத்தில் சிறு படகுகள் கப்பலின் அருகே வந்து நின்றன. கைதிகள் ஒவ்வொருவராகக் கீழே இறக்கப்பட்டு அந்தப் படகுகளில் உட்கார்ந்தார்கள்.

படகுகள் கரை தொட்ட நேரம் அங்கே இன்னொரு செட் போலிஸ்காரர்கள் காத்திருந்தார்கள். பெரும்பாலும் இந்திய முகங்கள்தான். ஒன்றிரண்டு வெள்ளைக்காரர்களும் தென்பட்டார்கள்.

கொத்துக்கொத்தாக வந்து இறங்கிய கைதிகள் ஒரு மூலையில் நிறுத்தப்பட்டார்கள். எல்லோர் கையிலும் படுக்கை, பாத்திரங்கள்.

சிறிது நேரத்துக்குள் அத்தனைக் கைதிகளும் கரை இறங்கிவிட்டார்கள். ‘எல்லோரும் ரெண்டு ரெண்டு பேரா நடங்க’ உருதுவில் கட்டளை பறந்தது.

அவர்கள் சற்றுத் தொலைவில் தெரியும் அந்தச் சிறைச்சாலைக் கட்டடத்தை நோக்கி மெல்லமாக நடந்தார்கள். அவ்வப்போது ‘நேராப் போ’, ‘அவன்மேல இடிக்காதே’, ‘வேகமா நட’ என்று காவலர்களின் அதட்டல் சத்தம் அவர்களை வழிநடத்தியது.

ஒருவழியாக அவர்கள் அந்தக் கோட்டை வடிவக் கட்டடத்தின் வாசலை நெருங்கினார்கள். பிரம்மாண்டமான இரும்புக் கதவுகள் திறக்கப்பட்டன. கைதிகளை எண்ணி உள்ளே அனுப்பிக் கதவைப் பூட்டினார்கள்.

ஜெயிலுக்குள் இன்னும் பலவிதமான காவலர்கள் இருந்தார்கள். கைதிகளை வரிசையாக ஒழுங்குபடுத்தி நிற்கவைத்தார்கள். அவர்களுடைய இரும்புச் சங்கிலிகள், விலங்குகள் நீக்கப்பட்டன. எல்லோருக்கும் சீருடை (வெள்ளைச் சட்டை, டிராயர், தொப்பி) வழங்கப்பட்டது.

இப்போது கைதிகள் எல்லோரும் தோட்டம்மாதிரித் தோற்றமளித்த ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டார்கள். அங்கே ஜெயிலர் காத்திருந்தார்.

அவர் பெயர் மிஸ்டர் பேரி. அயர்லாந்தைச் சேர்ந்தவர். குள்ளமான உருவம். ஆனால் இடுப்புப் பக்கம் தொப்பை பிதுங்கி வழிந்தது. அதைவிட அதிகமாகக் கண்களில் கோபமும் மிரட்டலும் அதட்டலும் பொங்கியது. அவர் ஒரு வார்த்தை பேசுவதற்குமுன்பாகவே அவருடைய கோடாரி மீசையும் உதட்டுச் சுருட்டும் கைதிகளை என்னவோ செய்தது.

சில நிமிட அமைதிக்குப்பிறகு மிஸ்டர் பேரி பேச ஆரம்பித்தார். ‘இந்த ஜெயிலைச்சுத்தி இருக்கிற காம்பவுண்ட் சுவரைப் பார்த்தீங்களா? ரொம்பக் குட்டை. யார் வேணும்ன்னாலும் அதிகம் சிரமப்படாம தாண்டிக் குதிச்சுடலாம்!’

‘இவ்ளோ பெரிய ஜெயிலைக் கட்டினவங்க அந்தக் காம்பவுண்ட் சுவரைமட்டும் ஏன் பெரிசாக் கட்டலைன்னு யோசிக்கறீங்களா? அதுக்கு ஒரு காரணம் இருக்கு!’

’இந்த ஜெயில்லேர்ந்து யாரும் தப்பிச்சுப் போகமுடியாது. அப்படியே தப்பிச்சுட்டாலும் அந்தமான்லேர்ந்து தப்பிச்சுடமுடியாது. சுத்திப் பல நூறு மைல் தூரம் வெறும் கடல்தான். அதைத் தாண்டித் தப்பிக்கலாம்ன்னு முயற்சி செஞ்சீங்கன்னா பசியிலயே உசிரு போயிடும்!’

’அதனால என்ன? பக்கத்தில நிறையக் காடு, மலையெல்லாம் இருக்கே. அங்கே நுழைஞ்சு தப்பிச்சுடலாம்ன்னு யோசிக்கறீங்களா? அதுவும் முடியாது!’

‘அந்தமான் காடுகளுக்குள் வாழற பழங்குடி மக்கள் சாதாரணமானவங்க இல்லை. சட்டை, டிராயர் போட்டுகிட்டு எவனாவது வர்றான்னு பார்த்தா நடு நெத்தியில ஒரே அம்புதான். உங்களைத் தூக்கிட்டுப் போய் அடுப்புல வெச்சிச் சமைச்சுச் சாப்ட்றுவாங்க.’

’சுருக்கமாச் சொல்றதுன்னா உங்களுக்கு வேற வழியே இல்லை. இந்த ஜெயில்லேர்ந்து தப்பிக்கலாம்ங்கற எண்ணத்தைத் தூக்கித் தூரப் போட்டுட்டு ஒழுங்கா மரியாதையா இங்கே இருக்கிற விதிமுறைகளை மதிச்சு நடக்கப் பழகிக்கோங்க. அதுதான் உங்களுக்கு நல்லது!’

’எனக்குச் சுத்திவளைச்சுப் பேசறது பிடிக்காது. நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு ரொம்பக் கெட்டவன். உங்ககிட்ட நான் நல்லபடி பழகுவேனா இல்லை கெட்டவனா மாறுவேனா-ங்கறது உங்க கையிலதான் இருக்கு. ஞாபகம் வெச்சுக்கோங்க!’

பேரி ’அவ்வளவுதான்’ என்பதுபோல் கண் ஜாடை காட்டினார். ஓரமாக நின்றிருந்த காவலர்கள் கைதிகளைச் சுற்றி வளைத்தார்கள். எல்லோரையும் இரண்டு இரண்டு பேராக வரிசையில் நிற்கவைத்து உள்ளே அனுப்பினார்கள்.

அப்போதுதான் அந்தக் கட்டடத்தின் முழுப் பிரம்மாண்டமும் கைதிகளின் கண்ணை நிறைத்தது. மூன்று மாடிகளோடு ஏழு திசைகளில் கிளை பரப்பி நிற்கும் அந்தமான் செல்லுலர் ஜெயில்!

மிஸ்டர் பேரி சொன்ன வார்த்தைகளை நினைக்கும்போது எல்லாக் கைதிகளுக்கும் வயிற்றைப் பிரட்டியது. வெளியேறுவதற்கான வாசல் எதுவும் இல்லாத ஓர் ’ஒருவழிப்பாதை’க்குள் நுழைவதைப்போல் உணர்ந்தார்கள்.

***

அந்தமான் சி‌றை அல்லது இருட்டு உலகம்

’அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்’ என்கிற எனது புதிய புத்தகத்துக்காக எழுதப்பட்ட முதல் அத்தியாயம் இது. சில தவிர்க்கமுடியாத காரணங்களால் அது புத்தகத்தில் இடம்பெறவில்லை. ஆகவே, ஒரு முன்னோட்டமாக இங்கே தந்துள்ளேன்.

அந்தமானில் செல்லுலார் ஜெயில் அமைக்கப்படுவதற்கு முன்னால் தொடங்கி அது தேசிய நினைவகமாக மாறும் வரையிலான முழுமையான வரலாறை இந்தப் புத்தகத்தில் சொல்ல முயன்றுள்ளேன். தண்டனைக் குடியிருப்பு, செல்லுலார் ஜெயில் கட்டப்படுதல், அங்கே கைதிகள் நடத்தப்பட்ட விதம், உள் அரசியல், தினசரி வேலைகள், கொடூரத் தண்டனைகள், அந்தமானில் வாழ்ந்த முன்னாள் கைதிகளின் வாழ்க்கை, கைதிகளின் போராட்டங்கள், அரசாங்கக் கண் துடைப்புகள், ஜெயிலர்களின் ஆதிக்கம், அது உடைந்த கதை, செல்லுலார் ஜெயில் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்ட விதம், பின்னர் ஜப்பானியர்கள் வந்து அதை மொத்தமாகத் திறந்துவிட்டது, பிறகு அவர்களே செய்த அராஜகங்கள், அந்தமானில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், இந்தியச் சுதந்தரத்துக்குப்பின் செல்லுலார் ஜெயில் என்ன ஆனது, அதை இடிக்கப் பார்த்தது யார், அதைத் தடுத்தது யார், இப்போதைய நிலைமை எனச் சகலமும் இந்தப் புத்தகத்தில் உண்டு.

வாய்ப்பிருந்தால் இந்தப் புத்தகத்தை வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். இதுபற்றி மேல்விவரம் அறியவும், புத்தகத்தை வாங்கவும் இங்கே செல்லலாம் –> https://www.nhm.in/shop/978-81-8493-544-8.html

***

என். சொக்கன் …

13 11 2010

’தமிழோவியம்’ இணைய இதழின் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள எனது கட்டுரை ஒன்று –> http://www.tamiloviam.com/site/?p=1022

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

***

என். சொக்கன் …

04 11 2010

Update: Copy pasting the article + comments here for backup:

காந்தி பவன்

November 3, 2010 by என். சொக்கன் · 2 Comments

1948 ஜனவரி 21ம் தேதி. டெல்லி. பிர்லா இல்லம்.

டெல்லி போலிஸ் டி.ஐ.ஜி.யாகிய டி. டபிள்யூ. மெஹ்ரா காந்தியைப் பார்க்கக் காத்திருந்தார். அவருடைய நேர்த்தியான சீருடையின்மீது குளிருக்கு வசதியாக ஓர் ஓவர்கோட். உள்ளுக்குள் நூற்று மூன்று டிகிரி ஜூரம் கொதித்துக்கொண்டிருந்தது.

ஆனால் இன்றைக்கு அவர் லீவ் எடுக்கமுடியாது. அவசியம் காந்தியைப் பார்க்கவேண்டும். நிறையப் பேசவேண்டும்.

முந்தின நாள் மாலைதான் மகாத்மா காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் சில விஷமிகள் ஊடுருவியிருந்தார்கள். மதன்லால் என்ற இருபது வயது இளைஞன் ஒரு வெடிகுண்டைக் கொளுத்திவிட்டுத் தப்பி ஓடும்போது பிடிபட்டிருந்தான்.

நல்லவேளையாக அந்த வெடிவிபத்தில் யாருக்கும் உயிர் இழப்போ, காயங்களோ இல்லை. முக்கியமாக காந்திமீது ஒரு சின்னக் கீறல்கூட விழவில்லை.

ஆனால் அதற்காக டெல்லி போலிஸ் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியவில்லை. குண்டு வெடித்துப் புகை ஓய்ந்த அடுத்த சில நிமிடங்களுக்குள் அவர்களுடைய அடுத்த பிரச்னை ஆரம்பமாகிவிட்டது.

காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வைத்ததாகக் கைது செய்யப்பட்ட மதன்லால் தனி ஆள் இல்லை என்று தெரிகிறது. ‘வோ ஃபிர் ஆயேகா’ என்று அவன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

‘வோ ஃபிர் ஆயேகா’ … ‘அவன் மறுபடி வருவான்!’

யார் அந்த அவன்?

அதைத்தான் மதன்லால் சொல்ல மறுக்கிறான். நிஜமாகவே தெரியவில்லையா? அல்லது சொல்லக்கூடாது என்று பிடிவாதமாக முரண்டு பிடிக்கிறானா?

மெஹ்ராவின் கட்டளைப்படி டெல்லி போலிஸ் மதன்லாலைப் பிழிந்து நொங்கெடுத்திருந்தார்கள். அத்தனை அடி, உதையையும் வாங்கிக்கொண்டு ஒருசில வார்த்தைகளைதான் கக்குகிறானேதவிர ‘வோ ஃபிர் ஆயேகா’ என்பது யாரைப்பற்றி என்றுமட்டும் தெளிவாகச் சொல்ல மறுக்கிறான்.

மதன்லாலை வழிக்குக் கொண்டுவருவது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்குள் அவனுடைய கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கவேண்டும். அவர்கள் மறுபடி காந்தியின்மீது குறிவைத்துவிடாதபடி தடுக்கவேண்டும். ஒருவேளை அவர்கள் மீண்டும் இந்தப் பக்கம் புறப்பட்டு வந்தால் வாசலிலேயே பிடித்து உள்ளே தள்ளவேண்டும். அத்தனைக்கும் பெரியவருடைய ஒத்துழைப்பு தேவை.

மெஹ்ரா நம்பிக்கையோடு காத்திருந்தார். காந்தியைக் காப்பாற்றுவது தன்னுடைய தனிப்பட்ட கடமை என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.

சிறிது நேரத்தில் மெஹ்ராவுக்கு அழைப்பு வந்தது. கைகளைக் குவித்து வணங்கியபடி உள்ளே சென்றார். ‘வாழ்த்துகள் பாபு!’

‘வாழ்த்துகளா? எதுக்கு?’ காந்தியின் குரல் சற்றே பலவீனமாக ஒலித்தது. சில நாள்களுக்கு முன்பாக அவர் நிகழ்த்திய உண்ணாவிரதம் அவருடைய உடம்பை குறுக்கிப்போட்டிருந்தது.

ஆனாலும் அவருடைய கம்பீரம்மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை.

மெஹ்ரா மரியாதையாக பதில் சொன்னார். ‘நாங்க உங்களுக்கு ரெண்டு விஷயத்துக்காக வாழ்த்துச் சொல்லணும் பாபுஜி. போன வாரம் உங்க உண்ணாவிரதம் வெற்றிகரமா முடிஞ்சதுக்காக

ஒரு வாழ்த்து, நேத்து பாம் விபத்தில நீங்க உயிர் பிழைச்சதுக்காக இன்னொண்ணு.’

காந்தி சிரித்தார். ‘நான் என்னோட வாழ்க்கையைக் கடவுள் கையில ஒப்படைச்சுட்டேன்.’

‘இருந்தாலும் உங்க உயிரைக் காப்பாத்தவேண்டியது எங்க பொறுப்பில்லையா?’

‘அதுக்கு என்ன செய்யப்போறீங்க?’

‘இங்கே பிர்லா ஹவுஸ்ல பாதுகாப்பை அதிகம் பண்ணியிருக்கோம்’ என்றார் மெஹ்ரா. ‘இனிமே பிரார்த்தனைக்கு வர்ற ஒவ்வொருத்தரும் ஏதாவது ஆயுதம் வெச்சிருக்காங்களான்னு பரிசோதனை செய்யாம உள்ளே விடப்போறதில்லை. அதுக்கு உங்க அனுமதி வேணும்.’

‘நான் இதை ஒப்புக்கமுடியாது’ என்றார் காந்தி. ‘அவங்க பிரார்த்தனைக்காக வர்றாங்க. ஒரு கோவிலுக்குள்ள வர்றவங்களைத் தடுத்து நிறுத்திச் சோதனை போடுவீங்களா?’

‘அதில்ல பாபுஜி. உங்களைக் கொல்லறதுக்கு ஒரு பெரிய கூட்டமே அலையறதா எங்களுக்குத் தகவல் கிடைச்சிருக்கு. அவங்க இங்கே நுழைஞ்சிடாம பார்த்துக்கணுமில்லையா?’

காந்தி மீண்டும் சிரித்தார். முந்தின நாள் பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்தபோதுகூட அவருக்கு ஏதும் விபரீதமாகத் தோன்றவில்லை. ராணுவ வீரர்கள் ஏதோ ஆயுதப் பயிற்சி நடத்துகிறார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டார்.

ஆனால் இப்போது அவருக்கு நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்திருந்தது. நேற்றைக்கு வெடித்தது ஒற்றைக் குண்டு அல்ல, ஒரு பெரிய சதித் திட்டத்தின் ஆரம்பப் புள்ளி என்று உணர்ந்துகொண்டிருந்தார்.

இன்று காலையில்கூட ஒரு தொண்டர் அவரிடம் சொன்னார். ‘பாபுஜி, நேத்திக்கு அந்தப் பையன் வெச்ச வெடிகுண்டைப் பத்தி எல்லோரும் பரபரப்பாப் பேசிக்கறாங்களே. எனக்கென்னவோ அது ஒரு பெரிய பிரச்னையாத் தெரியலை. ஒரு சாதாரண விஷயத்தை இவங்க எல்லோருமாச் சேர்ந்து ஊதிப் பெரிசாக்கிட்டாங்க-ன்னு நினைக்கறேன்.’

அப்போதும் காந்தியால் புன்னகை செய்யமுடிந்தது. ‘முட்டாள், இதுக்குப் பின்னாடி ஒரு பெரிய சதித் திட்டம் இருக்கறது உனக்குப் புரியலையா?’

அந்தத் தொண்டருக்குப் புரியவில்லை. டி.ஐ.ஜி. மெஹ்ராவுக்குப் புரிந்திருந்தது. அதனால்தான் பிர்லா இல்லத்துக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக முடிவெடுத்திருந்தார்.

ஆனால் காந்தி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சதிகாரர்களால் தன் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்கிற விஷயம் தெளிவாகத் தெரிந்தபோதும் ‘எனக்குப் பாதுகாப்பு ராமர்மட்டும்தான்’ என்று சொல்லிவிட்டார்.

‘பாபுஜி, அந்தப் பையன் மதன்லாலோட கூட்டாளிங்க மறுபடி இங்கே வரமாட்டாங்க-ங்கறது என்ன நிச்சயம்?’

‘ஆஃபீசர், என் வாழ்க்கையை எப்போ முடிக்கணும்ங்கறது அந்த ராமருக்குத் தெரியும். அவர் ஒரு முடிவெடுத்துட்டார்ன்னா லட்சக்கணக்கான போலிஸ்காரங்க பாதுகாப்புக்கு வந்தாலும் என்னைக் காப்பாத்தமுடியாது. அதேசமயம் என்னால இந்த உலகத்துக்கு இன்னும் ஏதாவது பிரயோஜனம் இருக்குன்னு ராமர் நினைச்சார்ன்னா, நிச்சயமா அவர் என்னைச் சாக விடமாட்டார்.’

காந்தி ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை யாராலும் மாற்றமுடியாது என்பது மெஹ்ராவுக்குத் தெரியும். பெருமூச்சோடு எழுந்துகொண்டார். ‘பாபுஜி, தயவுசெஞ்சு இங்கே பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வர்றவங்களைப் பரிசோதனை செய்யறதுக்காவது அனுமதி கொடுங்களேன்!’

‘கூடாது. நீங்க அப்படி ஏதாவது செஞ்சீங்கன்னா நான் இங்கே இருக்கமாட்டேன். உடனடியா டெல்லியை விட்டுக் கிளம்பிடுவேன்.’

கடைசியில் காந்தியின் பிடிவாதம்தான் ஜெயித்தது. அன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் போலிஸ் காக்கிச்சட்டைகள் ஒன்றுகூடத் தென்படவில்லை. பிரார்த்தனைக்காக வந்த மக்களை யாரும் பரிசோதனை செய்யவில்லை – பத்து நாள் கழித்து நாதுராம் விநாயக் கோட்ஸே துப்பாக்கியோடு வந்தபோதுகூட தடுக்காமல் உள்ளே அனுமதித்துவிட்டார்கள்.

மற்ற விஷயங்களில் எப்படியோ. ‘என்னுடைய காவலுக்குப் போலிஸ்காரர்கள் தேவை இல்லை’ என்கிற காந்தியின் கொள்கையை அவரது சீடர்கள் மறக்காமல் பின்பற்றுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பு சென்ற வாரத்தில் அமைந்தது.

பெங்களூரு குமாரகிருபா சாலையோரமாக குதிரைப் பந்தயங்கள் தூள் பறக்கும் ரேஸ் கோர்ஸ். அங்கிருந்து சற்றுத் தொலைவு நடந்தால் ஆடம்பரம் வழியும் பச்சைப்பசேல் கால்ஃப் மைதானம். இவை இரண்டுக்கும் நடுவே அந்த அமைதியான வளாகம் இருக்கிறது.

முதல் கட்டடத்தில் ‘காந்தி பவன்’ என்றெழுதிய பெயர்ப்பலகை துருப்பிடித்துக் கிடக்க, பக்கத்தில் உள்ள ‘கஸ்தூரிபா பவன்’க்குமட்டும் யாரோ புதுசாகப் பெயின்ட் அடித்திருக்கிறார்கள்.

ஆனால் இரண்டு கட்டடங்களிலும் வாசல்கள் அகலத் திறந்து கிடக்கின்றன. பாதுகாப்புக்கு யாரும் இல்லை.

பெங்களூரில் மூன்று, நான்கு வீடுகளைக் கொண்ட தக்கனூண்டு அபார்ட்மென்ட்களுக்குக்கூட 24*7 செக்யூரிட்டிகளை உட்காரவைப்பதுதான் சம்பிரதாயம். இந்த ‘வாட்ச்மேன்’கள் நாள்முழுவதும் செய்தித்தாள் படித்தபடியோ, வீட்டு உரிமையாளர்களுக்குக் கார் துடைத்துக் கழுவி எக்ஸ்ட்ரா சம்பாதித்தபடியோ, நடுப்பகலிலும் குறட்டை விட்டுத் தூங்கியபடியோ நேரத்தைப் போக்கினாலும்கூட ஒரு சாஸ்திரத்துக்கு அவர்கள் இருந்தால்தான் கட்டடத்துக்குப் பாதுகாப்பு என்பது ஐதீகம்.

அதோடு ஒப்பிடும்போது அத்தனை பெரிய ‘காந்தி பவ’னில் காக்கிச் சட்டைக் காவலர்கள் யாரும் தென்படாதது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. ‘அண்ணல் காட்டிய வழியம்மா’ என்று பாதுகாப்புச் செலவை மிச்சப்படுத்துகிறார்களோ என்னவோ!

காந்தி பவனுக்குள் நுழைந்தவுடன் வலதுபக்கம் ஓர் அகலப்பாட்டைப் படிகள் மேலேறுகின்றன. அதன்வழியே சென்றால் ‘மகாத்மாவின் வாழ்க்கை புகைப்படக் கண்காட்சி’ என்று அறிவிக்கும் அறை வாசலில் மூன்று கருப்பு நிறப் பூட்டுகள் தொங்குகின்றன.

இதை எப்போது திறப்பார்கள்? யாரிடம் விசாரிப்பது? சுற்றிலும் ஆள் அரவம் இல்லை. இடது பக்கமிருந்த ‘வினோபா அறை’யும் பூட்டப்பட்டிருந்தது.

இங்கேயே எவ்வளவு நேரம் காத்திருப்பது? இறங்கிக் கீழே போய்விடலாமா என்று யோசித்தபோது எங்கிருந்தோ இரண்டு வெள்ளைப் புறாக்கள் படபடத்தபடி பறந்து வந்தன. சுவரிலிருந்த காந்தி ஓவியத்தின் காலருகே அவை வந்து உட்கார்ந்த அழகை நான் அப்படியே புகைப்படம் எடுத்திருந்தால் சத்தியமாக யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.

சுமார் ஐந்து நிமிடக் காத்திருப்புக்குப்பிறகும் யாரும் வருவதாகத் தெரியவில்லை. புறாக்கள்கூட போரடித்துக் கிளம்பிச் சென்றுவிட்டன. நானும் படிகளில் கீழே இறங்கினேன். இடதுபக்கம் அலுவலகம். அங்கேயும் விளக்கு எரிந்ததேதவிர மானுடர்கள் யாரையும் காணமுடியவில்லை.

அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஓர் அகல மேஜை போட்டு அன்றைய ஆங்கில, கன்னடச் செய்தித்தாள்களைப் பரத்தியிருந்தார்கள். அவையும் படிக்க ஆளின்றிக் கிடந்தன.

யாராவது வரும்வரை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் ‘பேஜ் 3’ படித்துக்கொண்டு காத்திருக்கலாமா என்று யோசித்தபோது வலதுபக்கம் ஓர் அறையின் கதவுகள் திறந்தன. அங்கே ‘க்ரந்தாலய்’ (நூலகம்) என்று எழுதப்பட்டிருந்தது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மானுடா? அவசரமாக உள்ளே பாய்ந்தேன்.

நூலகத்தினுள் சற்றுமுன் வெளியேறிச் சென்றவரைத்தவிர வேறு வாசகர்கள் யாரும் இல்லை. ஒரே ஒரு பெண்மணி கம்ப்யூட்டரில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவரை நெருங்கி ‘இந்த ஃபோட்டோ எக்ஸிபிஷன் எப்போ திறப்பாங்க மேடம்?’ என்றேன்.

‘அது ஆகஸ்ட் 15 டைம்லமட்டும்தாங்க திறக்கறது’ கூலாகச் சொன்னார் அவர்.

‘அப்ப இந்த லைப்ரரி?’

‘இது தினமும் திறந்திருக்கும். மார்னிங் 10:30 டு ஈவினிங் 5.’

பெங்களூரு காந்தி பவனைப்பற்றி எனக்குச் சொல்லி அனுப்பிய நண்பர்கள் எல்லோரும் காந்தியின் வாழ்க்கையை விவரிக்கிற அந்தப் புத்தகக் கண்காட்சியைதான் வியந்து புகழ்ந்திருந்தார்கள்.

ஆனால் அதற்கு இன்னும் ஏழெட்டு மாதம் காத்திருக்கவேண்டும் என்பதால் இப்போதைக்கு அந்த நூலகத்தை அலசத் தீர்மானித்தேன்.

சுமார் 750 சதுர அடிப் பரப்பளவு கொண்ட நல்ல பெரிய அறை அது. அதில் நான்கு நீண்ட வரிசைகளாகப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. நடுவில் பெரிய மேஜை வைத்து மாத இதழ்கள், வாராந்தரிகளைப் பரப்பியிருந்தார்கள்.

இது என்னமாதிரி நூலகம் என்பதைப் புரிந்துகொள்வதற்காக எல்லா அலமாரிகளையும் ஒருமுறை வலம் வந்தேன். பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடப் புத்தகங்கள்தான்.

ஆங்காங்கே தமிழ், தெலுங்கு, ஒரியா, பெங்காலி, மலையாளம் என்று சகல இந்திய மொழிகளையும் பார்க்கமுடிந்தது. குழந்தைகளுக்கென்று தனிப் பிரிவு.

ஆச்சர்யமான விஷயம், அங்கிருந்த புத்தகங்களில் பெரும்பாலானவை காந்தி எழுதியவை. அல்லது அவரைப்பற்றி மற்றவர்கள் எழுதியவை.

முக்கியமாக நான்கு அலமாரிகள் நிறைய அடுக்கப்பட்டிருந்த காந்தியின் புத்தகங்களைப் பார்க்கப் பார்க்கத் திகைப்பாக இருந்தது. ஒரு முழு நேரப் பத்திரிகையாளர் அல்லது எழுத்தாளர்கூட அந்த அளவுக்கு எழுதிக் குவித்திருக்கமுடியாது. அரசியல், சமூகப் பணிகளுக்கு இடையே அவர் இவ்வளவு எழுத நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்றால் எழுத்தின்மூலம் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவந்துவிடமுடியும் என்பதில் அவருக்கு எப்பேர்ப்பட்ட நம்பிக்கை இருந்திருக்கவேண்டும் என்பது புரிந்தது.

அளவு ஒருபக்கமிருக்க, அவர் எழுதத் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்புகளும் மிகுந்த ஆச்சர்யம் அளித்தன. ஆன்மிகம், அரசியல், தத்துவம், இயற்கை உணவு, வாழ்க்கைமுறை, கல்வி, சுய முன்னேற்றம், பிரார்த்தனை என்று அவர் எதையும் விட்டுவைத்திருப்பதாகத் தெரியவில்லை. கதை, கவிதைகூட எழுதியிருக்கிறாரோ என்னவோ, என் கண்ணில் படவில்லை.

காந்தி எழுதியது ஒருபக்கமிருக்க, அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள், தொண்டர்கள், பக்தர்கள் எழுதிய புத்தகங்கள் இன்னும் ஏராளமாகக் குவிந்திருக்கின்றன. குறிப்பாகக் காந்தியின் உதவியாளர்களாகப் பணியாற்றிய மகாதேவ தேசாய் மற்றும் ப்யாரேலால் இருவரும் அவரைப்பற்றித் தலையணை தலையணையாகப் பல ஆயிரம் பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கிறார்கள்.

இதுதவிர காந்தியோடு சுதந்தரப் போராட்டத்தில் பணியாற்றிய தலைவர்கள், நண்பர்கள், எப்போதோ ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியைப் பார்த்து நாலு வரி பேசியவர்கள், ரயில் நிலையத்தின் ஓரத்திலிருந்து அவரைத் தரிசித்துப் புளகாங்கிதம் அடைந்தவர்கள், அவருடன் பழகிப் பேட்டி எடுத்த பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், பணிவிடை செய்த தொண்டர்கள் என மேலும் பலர் தங்களுடைய அனுபவங்களைப் பரவசத்தோடு எழுதிவைத்திருக்கிறார்கள். ‘பம்பாயில் காந்தி’, ‘கல்கத்தாவும் காந்தியும்’, ‘காந்தியின் தென் இந்தியப் பயணம்’ என்று வேறொரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அவரது வாழ்க்கையை அலசுகிற புத்தகங்களும் உள்ளன. உலகெங்குமிருந்து பத்திரிகையாளர்களும் பேராசிரியர்களும் காந்தியின் கொள்கைகள், கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து மற்ற பெரும் தலைவர்களோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள்.

காந்தியைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு அந்த நூலகம் ஒரு பொக்கிஷம். துப்பாக்கிக் காவல் தேவைப்படாத புதையல்.

பெங்களூர்வாசிகள் முடிந்தால் ஒரு சனிக்கிழமை (ஞாயிறு வார விடுமுறை) குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு ஒரு நடை சென்று வாருங்கள் !

Comments

2 Responses to “காந்தி பவன்”

  1. Thanks N Chokkan sir….

    raj says:
  2. எங்களுக்கு ரோபோ பார்க்க தான் நேரம் இருக்கிறது . யாராவது செலிப்ரிட்டி இந்த எடத்துக்கு வந்தால் தான் இங்கேயும் கூட்டம் கூடும் !!!

    இத எல்லாம் பார்க்க நல்ல வேலை காந்தி உயிரோட இல்லை !!

 


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,740 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2010
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930