Archive for December 2010
- In: Book Fair 2011 | Books | Chennai | Uncategorized
- 5 Comments
பல்வேறு பதிப்பகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சி 2011ல் வெளியிடவிருக்கும் புதுப் புத்தகங்களைப்பற்றிய தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவை ஒரே இடத்தில் தேடும் வசதியோடு இல்லை என்பது ஒரு பெரிய குறை.
நான் புத்தகக் கண்காட்சிக்குக் கிளம்பும்போதே இந்த வருடம் வாங்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலை அச்சிட்டு எடுத்துக்கொண்டு செல்வதுதான் வழக்கம். அப்போதுதான் நேரம் வீணாகாமல் இருக்கும் – முக்கியமான எந்தப் புத்தகத்தையும் தவறவிட்டுவிடமாட்டோம் – பட்டியலின்படி வாங்கவேண்டியதை வாங்கியபிறகு கண்ணில் படுபவை, கவனம் ஈர்ப்பவை என்று இன்னும் பலவற்றை அள்ளுவது தனிக்கதை 🙂
என்னைப்போல புத்தகக் கண்காட்சிக்கு விருப்பப் பட்டியலோடு செல்ல விரும்புகிறவர்கள் பலர் இருக்கலாம். அவர்களுக்கு ஒரு தக்கனூண்டு டேட்டாபேஸ் எழுதி யாராவது உதவினால் புண்ணியமாகப் போகும்.
இப்போதைக்கு, சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் புதுப் புத்தகங்களைப்பற்றி எனக்கு அவ்வப்போது கிடைக்கும் விவரங்களை இந்த கூகுள் ஸ்ப்ரெட்ஷீட்டில் சேர்க்கப்போகிறேன். இது முழுமையான பட்டியல் அல்ல. நான் எதையாவது தவறவிட்டிருந்தால் (அல்லது தவறான விவரத்தைச் சேர்த்திருந்தால்) nchokkan@gmail.com என்ற முகவரிக்கு எழுதிச் சொல்லவும். நன்றி.
***
என். சொக்கன் …
27 12 2010
திரும்பிப் போகலாம்
Posted December 7, 2010
on:- In: E-zines | Media | Memories | Memory | Short Story | Uncategorized
- 11 Comments
முன்குறிப்பு: ’பண்புடன்’ குழுமத்தின் தீபாவளி மலர் (கொஞ்சம் லேட்டாக
) வெளிவந்துள்ளது. அதைப் படிக்க இந்த இணைப்புக்குச் செல்லலாம் –> http://www.scribd.com/doc/44817485/deepavali-panbudan1
இந்த மலரில் வெளியாகியுள்ள எனது சிறுகதை ஒன்றை Backupக்காக இங்கே குறித்துவைக்கிறேன்:
திரும்பிப் போகலாம்
அன்புடையீர்,
எங்களது ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தங்கள் வரவு, நல்வரவாகுக.
இந்தத் தளம், இன்றைய இணையத் தொழில்நுட்பத்தின் சகல சாத்தியங்களையும், அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பத்துடன் கவனமாக இணைத்து உருவாக்கப்பட்டது. இதுபோல் ஒரு தளம் இதுவரை இல்லை, இனிமேலும் இருக்காது என்று எங்களால் உறுதிபடச் சொல்லமுடியும்.
முதலில், இந்தத் தளம் யாருக்கு? எதற்கு?
அடிப்படையில் இது ஒரு வாழ்க்கைப் பதிவு. கிட்டத்தட்ட டைரிபோல, உங்களுடைய தினசரி நடவடிக்கைகளை, நினைவுகளை, குறிப்புகளை, கற்பனைகளை, கவலைகளை, சந்தோஷங்களையெல்லாம் நீங்கள் இங்கே உங்கள் மொழியிலேயே பதிவு செய்து வைக்கலாம்.
இந்த வசதிதான் எல்லாத் தளங்களிலும் இருக்கிறதே, இணையத்தில் ’தமிழ் வலைப்பூ’ என்று தேடினால் ஆயிரக்கணக்கில் வந்து கொட்டுகிறதே, பிறகு எப்படி ‘திரும்பிப் போகலாம்’ தளம் விசேஷமானது?
எங்கள் தளத்தின் சிறப்பு, இது வாழ்க்கையைப் பதிவு செய்வதுமட்டுமில்லை. அன்றைய தினத்துக்கே உங்களைத் திரும்ப அழைத்துச் சென்றுவிடக்கூடிய தொழில்நுட்பத்தைக் கைக்கொண்டிருக்கிறது.
உதாரணமாக, எங்கள் தளத்தின் கற்பனை உறுப்பினர் ஒருவர், சில மாதங்களுக்குமுன் இப்படி ஒரு பதிவை எழுதியிருக்கிறார்:
’இன்றைக்கு நல்ல குளிர். இரண்டு ஸ்வெட்டர்கள் மாட்டிக்கொண்டு, கம்பளியைப் போர்த்திக்கொண்டு நன்றாகத் தூங்கினேன்!’
அவர் இந்தப் பதிவை எழுதி ரொம்ப நாளாகிவிட்டது, குளிர் காலம் போய், வெயில் காலம் ஆஜர்.
ஆனால் இப்போது, அவருக்கு மீண்டும் அந்தக் குளிரை அனுபவிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அவர் என்ன செய்வார், பாவம்?
கவலையே வேண்டாம், அவர் எங்களுடைய ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்துக்கு வந்து, இந்தக் குறிப்பிட்ட பதிவைத் தேர்ந்தெடுத்து, ‘திரும்பிப் போகலாம்’ என்ற பொத்தானை அமுக்கினால் போதும்.
மறுவிநாடி, வியர்த்து விறுவிறுத்துக்கொண்டிருக்கும் அவருடைய வீடுமுழுவதும் குளிர் சூழ்ந்துகொள்ளும். அவர் உடம்பில் இரண்டு ஸ்வெட்டர்கள், ஒரு கம்பளி எல்லாம் தானாக வந்து சேரும்.
ஆச்சர்யமாக இருக்கிறதா? இதைத்தான் நாங்கள் அடுத்த தலைமுறை இணையத் தொழில்நுட்பம் என்று குறிப்பிட்டோம்.
யோசித்துப்பாருங்கள், உங்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ சுப நினைவுகள் இருக்கின்றன, உதாரணமாக, முதல் காதல், முதல் முத்தம், முதல் வேலை, முதல் சம்பளம், முதன்முறை உங்கள் மனைவியை(அல்லது கணவரை)ச் சந்தித்தது, திருமண நாள் (சிலருக்கு விவாகரத்து நாள்), பரிசு வாங்கியது, பாராட்டுகளை வாங்கியது, அவ்வளவு ஏன், மனத்துக்குப் பிடித்த உணவை நிறையச் சாப்பிட்டுவிட்டு சோஃபாவில் கவிழ்ந்து கிடந்து டிவி பார்ப்பதுகூட ஓர் இனிமையான ஞாபகம்தானே?
இந்த மென்மை நினைவுகளெல்லாம், நம்முடைய மூளையில் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. அவற்றை அவ்வப்போது வெளியில் எடுத்து அசைபோடுவது அலாதியான ஓர் அனுபவம்.
ஆனால், இவை வெறும் ஞாபகங்கள்தான். காகிதத்தில் சர்க்கரை என்று எழுதிச் சாப்பிட்டால், இனிக்காது.
அதற்குபதிலாக, அந்த நினைவுகள் நிகழ்ந்த அதே நாளுக்குத் திரும்பச் சென்று, மீண்டும் வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்கும்? நிஜமான சர்க்கரை, தித்திக்குமில்லையா?
அதாவது, உங்களுடைய முதல் காதலியைச் சந்தித்த அதே தினத்துக்கு இப்போது நீங்கள் மறுபடி பயணம் செய்யலாம். அப்போது உங்களுக்கு வயது என்ன? பதினாறா? பன்னிரண்டா? அந்த வயதுக்கே உங்கள் உடலும் மனமும் சென்றுவிடும், உணர்வுகள், சிந்தனைகள் எல்லாம் அப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப இருக்கும்.
எங்களுடைய நவீன தொழில்நுட்பம், இத்துடன் நின்றுவிடுவதில்லை, உங்களுடைய அந்த முதல் காதலியையும் நாங்கள் அந்த அனுபவத்தில் நேருக்கு நேர் கொண்டுவருகிறோம்.
இது எப்படி சாத்தியம்?
அதற்கு நீங்கள் எங்களுடைய தளத்தில் பதிவு எழுதும்போதே, உங்களுடைய நினைவுகளை முழுமையாகக் குறிப்பிடவேண்டும். உங்கள் காதலியின் பெயர், வயது, நிறம், உயரம், எடை, சந்தித்தபோது அவர் அணிந்திருந்த உடையின் நிறம், வகை என்று சகல விவரங்களையும் நீங்கள் நுணுக்கமாகக் குறிப்பிட்டால், அவருடைய நெற்றிப் பொட்டு, காது லோலாக்குவரை சகலத்தையும் எங்களால் மீண்டும் உருவாக்கிவிடமுடியும்.
அதேசமயம், நீங்கள் எதையாவது பதிவு செய்ய மறந்துவிட்டால்? அதனால் நிகழ்கிற பிரச்னைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது.
உதாரணமாக, உங்கள் காதலியின் மூக்கு மிகவும் கூர்மையானது, அவரிடம் உங்களுக்குப் பிடித்த அம்சமே, அந்தக் கூர் மூக்குதான்.
இந்த விவரத்தை நீங்கள் உங்கள் பதிவில் மறக்காமல் குறிப்பிடவேண்டும். ஒருவேளை அப்படிக் குறிப்பிடாவிட்டால், நீங்கள் மீண்டும் அதே நாளுக்குத் திரும்பிச் செல்லும்போது, உங்கள் காதலிக்குக் கூர் மூக்கு இருக்காது, சாதாரணமான மூக்குதான் இருக்கும்.
ஆகவே, எங்கள் தளத்தில் பதிவுகள் எழுதும்போது, எந்த விவரத்தையும் விட்டுவைக்காதீர்கள், நுணுக்கமாக, விரிவாக, விளக்கமாகப் பதிவு செய்துவைத்தால்தான், அது உங்களுக்குப் பிற்காலத்தில் பயன்படும்.
ஆனால், நான் இப்படி அந்தரங்கமான விஷயங்களை எழுதப்போய், அதை மற்றவர்கள் படித்துவிடமாட்டார்களா?
உங்களுக்கு அந்தப் பயமே வேண்டியதில்லை. எங்களுடைய நவீன தொழில்நுட்பம் உங்கள் நினைவுகளை வேறு யாரும் பார்க்கமுடியாதபடி, படிக்கமுடியாதபடி, பயன்படுத்தமுடியாதபடி தடுத்துவிடுகிறது.
சரி, நான் என் நினைவுகளை எழுதுகிறேன், நடுவில் ஒரு பொய்யான தகவலை எழுதினால் என்ன ஆகும்?
நீங்கள் எழுதுவது உண்மையா, பொய்யா என்று எங்களால் கண்டுபிடிக்க இயலாது. ஆகவே, நீங்கள் பொய்யான, பொருந்தாத ஒரு விவரத்தை எழுதினாலும் அது நிஜத்தில் அப்படியே நிகழ்ந்துவிடும்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், இந்த ஒரு விஷயத்துக்காகவே எங்களுடைய தளத்தைப் பயன்படுத்துகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
உதாரணமாக, எங்களுடைய உறுப்பினர் கந்தசாமி ஒரு நோஞ்சான், யாரேனும் பலமாகத் தட்டினால் கீழே விழுந்து உடைந்துவிடுவார்.
இதனால், கந்தசாமிக்கு உள்ளுக்குள் ஒரு பெரிய ஆசை: நான் ஒரு பெரிய பலசாலியாக, எல்லோர்மீதும் ஆதிக்கம் செலுத்துகிறவனாக, அடித்து உதைப்பவனாக மாறவேண்டும்!
இதற்காக, அவர் எங்களுடைய தளத்தைப் பயன்படுத்துகிறார். நிஜமான நோஞ்சான் நினைவுகளைப் பதிவு செய்யாமல், கற்பனையில் தன்னை ஒரு பலசாலியாக வர்ணித்துக் கதைகள் எழுதுகிறார், தன் பலத்தைப் பார்த்து மயங்கும் பெண் கதாபாத்திரங்களை அவரே உருவாக்குகிறார், பிறகு அந்தக் கனவைக் கண்முன்னே வாழ்ந்து பார்க்கிறார்.
நீங்களும் கந்தசாமியைப்போல் கற்பனைக் கதைகள் எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை. நிஜமான அனுபவத்துக்கு மத்தியில், ‘இப்படி நேர்ந்திருக்கலாமே’ என்று நீங்கள் நினைத்து ஆதங்கப்படுகிற சமாசாரங்களையும் இணைத்து எழுதிக்கொள்ளலாம்.
உதாரணமாக, நீங்கள் ஓர் அரசு அலுவலகத்துக்குச் செல்கிறீர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்தபிறகு, அங்குள்ள அதிகாரி உங்கள் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடுவதற்கு நூறு ரூபாய் கேட்கிறார். வயிறு எரிய அந்தத் தொகையைக் கொடுத்துவிட்டு வீடு வருகிறீர்கள்.
இந்த நினைவுகளை எழுதும்போது, நீங்கள் கொஞ்சம் அதனை மாற்றி எழுதலாம். லஞ்சம் கேட்ட அந்த அரசு அதிகாரிக்கு நீங்கள் கும்மாங்குத்து விடுவதுபோலவோ, காவல்துறையில் புகார் கொடுத்து அவரை ஜெயிலில் தள்ளுவதுபோலவோ குறிப்பு எழுதிக்கொள்ளலாம். பிறகு அவற்றை நிஜத்தில் நிகழ்த்திப் பார்க்கலாம்.
சில சமயங்களில், உங்களுடைய வெவ்வேறு நினைவுகளை ஒன்றாகச் சேர்க்கவேண்டும் என்கிற விருப்பம் உங்களுக்கு ஏற்படலாம். உதாரணமாக, பெங்களூருக்கு அலுவல் நிமித்தம் சென்றிருக்கிறீர்கள், அப்போது, ‘இங்கே என் மனைவி, குழந்தை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று யோசிக்கிறீர்கள்.
ரொம்பச் சுலபம், பெங்களூர் நினைவுகளில் இருந்து ஒரு பகுதி, பிறகு நீங்கள் உங்கள் ஊரில் மனைவி, குழந்தைகளுடன் பார்க்குக்கோ, பீச்சுக்கோ சென்ற ஓர் அனுபவம், இரண்டையும் இணைத்து ஒரு புது நினைவை உருவாக்கலாம், அதைக் கண்முன்னே வாழ்ந்து பார்க்கலாம்.
இப்படி ஒவ்வொரு பதிவாக, ஒவ்வொரு நினைவாக உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இங்கே மறுபடி, நீங்கள் விரும்பும் விதத்தில் வாழ்ந்து பார்க்கலாம், எந்தத் தடையும் கிடையாது, வானம்கூட எல்லை இல்லை.
இதற்காக நாங்கள் வசூலிக்கும் கட்டணம் பின்வருமாறு:
1. நீங்கள்மட்டும் இடம்பெறுகிற ஓர் அரை மணி நேர நினைவுகள் அல்லது கற்பனைகளை மீண்டும் வாழ்ந்து பார்ப்பதற்கு: ரூபாய் பன்னிரண்டாயிரம் மட்டும்!
2. அதே நினைவில், உங்களுடன் இன்னொருவரும் இடம்பெறவேண்டும் என்றால்: ரூபாய் இருபதாயிரம் மட்டும்!
3. அந்த இன்னொருவர், எதிர்பாலினராக இருந்தால் (ஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண்): ரூபாய் முப்பத்தொன்பதாயிரம் மட்டும்!
4. அரை மணி நேரத்துக்குமேல் நீள்கிற ஒவ்வொரு நிமிடத்துக்கும்: ரூபாய் ஆயிரம் மட்டும்!
5. உங்கள் நினைவில் கூடுதலாக இடம்பெறும் ஒவ்வொரு நபருக்கும்: ரூபாய் ஆறாயிரம் முதல் பத்தாயிரம்வரை!
இந்த அளவு குறைவான கட்டணத்தில் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் விரும்பும்வகையில் திரும்ப வாழமுடிகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி. இந்தத் தொகையை நீங்கள் தவணை முறையில் செலுத்துவதற்கான வசதியும் உண்டு.
சில எச்சரிக்கைக் குறிப்புகள்:
எங்களுடைய இணைய தளத்தில் ஒருவர் எழுதும் நினைவுகளை, மற்றவர்கள் பார்க்கமுடியாதபடி தடுத்திருக்கிறோம். இதற்காக நாங்கள் உலகின் மிகச் சிறந்த நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்.
அதேசமயம், இந்த வேலிகளையெல்லாம் தாண்டித் திருடவேண்டும் என்கிற நோக்கத்துடன் வருகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வேகத்துக்கு நாங்கள் தடை போடமுடியாது.
எங்களால் இயன்றவரை, இந்த நினைவுத் திருடர்களின் கையில் உங்களுடைய பதிவுகள் சிக்கிவிடாதபடி நாங்கள் பாதுகாக்கிறோம். ஒருவேளை இந்தப் போட்டியில் அவர்கள் ஜெயித்துவிட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது.
இப்படி ஏதும் விபரீதம் நேர்ந்து, உங்களுடைய நினைவுகள் அவர்கள் கையில் சிக்கினால், அவர்கள் அதனை எப்படி வேண்டுமானாலும் தவறாகப் பயன்படுத்தலாம், இந்த ஆபத்துக்கு நீங்கள் தயாராக இருப்பது நல்லது.
நல்ல வேளையாக, நினைவுத் திருடர்களிடமிருந்து தப்புவதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது.
பெரும்பாலான திருடர்களுக்கு, தனிப்பட்ட நபர்களின் நினைவுகளில் ஆர்வம் இருப்பதில்லை. இரண்டு பேர், அதுவும் ஆண், பெண் சம்பந்தப்பட்ட ஞாபகங்களைதான் அவர்கள் முனைந்து தேடுகிறார்கள், அதை வாசித்துக் கிளுகிளுப்பு அடைவது, தங்களுக்குப் பிடித்தவண்ணம் அதனை மாற்றி அனுபவிப்பது என்று தவறு செய்கிறார்கள்.
அவர்களிடமிருந்து தப்பவேண்டுமென்றால், நீங்கள் நிறையத் தனிநபர் நினைவுகளை எழுதிக் குவிக்கவேண்டும், இடையிடையே ஓரிரு அந்தரங்கமான ஆண் – பெண் நினைவுகள், சம்பவங்களும் வரலாம், ஆனால் மேலோட்டமாகப் பார்க்கிறபோது உங்களுடைய சிந்தனைகளில் திருடுவதற்கு எதுவும் இருக்காது என்கிற எண்ணம் திருடர்களுக்கு வரவேண்டும். அப்போது அவர்கள் உங்களுடைய நினைவுகளைச் சீண்டமாட்டார்கள்.
அடுத்தபடியாக, நீங்கள் இந்தத் தளத்தினுள் நுழைவதற்காக நாங்கள் கொடுத்திருக்கும் ரகசியச் சொல், பத்திரமாகப் பாதுகாக்கப்படவேண்டும். அதை நீங்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூடாது – சொந்தக் கணவன் / மனைவி / மகன் / மகள் / சகோதரர்கள் / நண்பர்கள் யாரிடமும்!
ஏனெனில், அந்தச் சொல்மட்டும் இன்னொருவருக்குத் தெரிந்துவிட்டால், அவ்வளவுதான். அவரே நீங்களாக மாறிவிடலாம், உங்களுடைய அடையாளத்தைத் திருடிக்கொண்டு வாழத் தொடங்கலாம், அதுபோன்ற ஒரு விபரீதத்துக்கு நீங்களாகவே வலியச் சென்று இடமளித்துவிடாதீர்கள்.
கடைசியாக, நீங்கள் ஏதேனும் சட்டப்படி குற்றமான செயல்களில் ஈடுபட்டால் (உதாரணம்: சிவப்பு விளக்கு எரியும்போது போக்குவரத்து சிக்னலைக் கடப்பது, அடுத்தவர்களிடம் திருடுவது, கொலை, இன்னபிற) தயவுசெய்து அந்த நினைவுகளை இங்கே பதிவு செய்யாதீர்கள்.
காரணம், ஒருவேளை அரசாங்கம் உங்கள்மீது சந்தேகப்பட்டு எங்களை அணுகினால், நாங்கள் உங்களுடைய சகல நினைவுகளையும் பதிவு செய்து அவர்களிடம் தரவேண்டியிருக்கும், எங்களுக்கு வேறு வழி இல்லை.
அதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்களுடைய நினைவுகளே உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லிவிடும், வசமாக மாட்டிக்கொள்வீர்கள், ஜாக்கிரதை.
எங்களுடைய சேவையைப் பயன்படுத்திப் பலன் அடைந்த சில வாடிக்கையாளர்களின் அனுபவம்:
* நான் கடந்த இருபத்தெட்டாம் தேதி வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன். அன்றிலிருந்து, நான் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த தினம்பற்றிய நினைவுகள் என்னை வருத்திக்கொண்டிருக்கின்றன. அவற்றை ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தில் பதிவு செய்து மீண்டும் வாழ்ந்து பார்த்தேன், இப்போது சந்தோஷமாக எனது ஓய்வுக் காலத்தைக் கழிக்கிறேன், நன்றி – சேகர், சென்னை.
* எனக்குத் திருமணமாக நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன, ஒரு பையன், ஒரு பெண், மூன்று பேரன்கள், ஒரு பேத்தி என்று சந்தோஷமான வாழ்க்கை. ஆனால் இன்னும், என்னால் என்னுடைய முதல் காதலை மறக்கமுடியவில்லை.
அது காதல் இல்லை, வெறும் இனக் கவர்ச்சிதான் என்பது புரிகிறது. எதுவாயினும், ஒரு பெண் அதனை வெளிப்படையாகச் சொல்கிற சூழல் நம்முடைய சமூகத்தில் இல்லை.
இந்தச் சூழ்நிலையில், ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளம்தான் எனக்கு அந்த அபூர்வமான வாய்ப்பை வழங்கியது. என்னை முதன்முதலாகக் காதலித்த அந்த அவனை, மீண்டும் ஒருமுறை சந்தித்து, பேசி மகிழ்ந்தேன், நன்றி – பெயர் வெளியிட விரும்பவில்லை, திருவனந்தபுரம்.
* பத்தாம் வகுப்புவரை நான் நன்றாகதான் படித்துக்கொண்டிருந்தேன், அதன்பிறகுதான் கெட்ட நினைவுகளில் பாதை மாறிவிட்டேன், கல்லூரிப் படிப்பு, வேலை, சொந்தத் தொழில் என சகலத்திலும் தில்லுமுல்லுகள் செய்து முன்னுக்கு வந்த எனக்கு, ஆரம்ப காலப் புனித வாழ்க்கையை மறுபடி வாழ்ந்துபார்க்கும் சந்தர்ப்பத்தை ‘திரும்பிப் போகலாம்’ வழங்கியது, இதன்மூலம் என்னுடைய குற்றவுணர்ச்சி குறைகிறது, ’அடிப்படையில் நான் நல்லவன்தான், இந்தச் சமூகம்தான் என்னைக் கெட்டவனாக்கிவிட்டது’ என்று நம்பத் தொடங்கியிருக்கிறேன், நன்றி – பெயர் வெளியிட விரும்பவில்லை, மும்பை.
* காதலிக்கும்போது, அவர் நல்லவராகதான் இருந்தார், கல்யாணத்துக்குப்பிறகுதான் அவருடைய சுபாவம் மாறிவிட்டது, எதற்கெடுத்தாலும் திட்டு, சந்தேகம், என்னை மனைவியாக இல்லை, ஒரு மனுஷியாகக்கூட மதிப்பதில்லை, இப்படிப்பட்ட ஒருவரையா காதலித்தேன் என்கிற வேதனையில் மூழ்கியிருக்கிற நான், அவ்வப்போது எங்களுடைய பழைய, இனிய நினைவுகளைத் திரும்பவும் வாழ்ந்து பார்ப்பதற்கு இந்தத் தளம் உதவுகிறது, இதில் வரும் காதலரை வெட்டி, என்னுடைய நிஜக் கணவர்மீது ஒட்டிவிடமுடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும், அதற்கான தொழில்நுட்பம் வளரும்வரை, ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளம்தான் என்னுடைய தோழி, வழிகாட்டி, குரு, கடவுள் எல்லாமே, நன்றி – குங்குமா, சென்னை.
* பல ஆண்டுகளுக்குமுன்னால், நான் பள்ளியில் படித்த காலத்தில், திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றேன், அதன்பிறகு, இன்றுவரை எனக்கு வாழ்க்கையில் வேறு எந்தப் பரிசும் கிடைக்கவில்லை, பிறந்தநாள் பரிசுகள்கூட.
இந்த வேதனையை மறக்க, எனக்கு ‘திரும்பிப் போகலாம்’ தளம் உதவுகிறது, என்னுடைய அந்தப் பரிசு அனுபவத்தை இதுவரை நாற்பது, ஐம்பதுமுறை மீண்டும் கண் முன்னே வாழ்ந்து பார்த்திருக்கிறேன், ஒவ்வொருமுறை பரிசு வாங்கும்போதும், எனக்குள் தன்னம்பிக்கை பொங்குகிறது, நம்மால் இன்னும் நிறைய சாதிக்கமுடியும் என்கிற எண்ணம் உருவாகிறது, நன்றி – கணேசன், மதுரை
* என் மகன்கள் இருவரும் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்கள், என்னதான் அவர்களுடன் அடிக்கடி தொலைபேசியில், இணைய அரட்டையில் பேசினாலும், அருகருகே உட்கார்ந்து மகிழ்வதுபோல் வருமா? இப்போதெல்லாம் அவர்களுடைய தினசரி நடவடிக்கை நினைவுகளை எங்களுடன் இணைத்து நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம், மகன்களுடன் ஒரே வீட்டில் வசிப்பதுபோல் உணர்கிறோம், நன்றி – நரசிம்மன், சுமதி, தாம்பரம்
இது ஒரு சிறிய சாம்பிள்தான், இதுபோல் இன்னும் எண்ணற்ற அனுபவங்களை, பாராட்டுகளை எங்களுடைய இணைய தளத்தில் வாசிக்கலாம்.
எதிர்மறை விமர்சனங்கள்:
ஒருபக்கம் எங்களுக்குப் பாராட்டுகள் குவியும் அதே நேரத்தில், ’திரும்பிப் போகலாம்’ இணைய தளம் இயற்கைக்கு எதிரானது என்று பல எதிர்மறை விமர்சனங்களும் எழுந்துள்ளன. அவற்றுக்குப் பதில் விளக்கம் சொல்லவேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.
முதலாவதாக, ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தைக் கடுமையாக விமர்சிக்கிறவர்கள் யாரும், இதன் சேவைகளைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள் இல்லை, சும்மா வெளியில் இருந்துகொண்டு இவர்கள் கூச்சல் போடுவதற்கு வேறு உள்நோக்கங்கள் இருக்கின்றன.
பழைய நினைவுகளை மனத்தில் மறுபடி வாழ்ந்து பார்க்காதவர்கள் அநேகமாக யாருமே இல்லை. அதையே நிஜத்தில் வாழ்ந்து பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை நாங்கள் தருகிறோம், இதில் என்ன தவறு இருக்கமுடியும்?
தினந்தோறும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் எங்களுடைய தளத்தில் லட்சக்கணக்கான நினைவுகளைப் பதிவு செய்கிறார்கள், மறுபடி வாழ்ந்து பார்க்கிறார்கள், இத்தனை பேரின் ஆதரவு எங்களுக்குக் குவிவதால், பலருக்குப் பொறாமை, அவர்கள்தான் எங்களுடைய தளம் தவறானது என்று தொடர்ந்து பிரசாரம் செய்கிறார்கள்.
அவர்கள் எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புவது ஒன்றுதான், ஒரே ஒருமுறை எங்கள் தளத்துக்குள் வந்து பாருங்கள், ஏதேனும் ஒரு பழைய நினைவைப் பதிவு செய்து, மறுபடி வாழ்ந்து பாருங்கள், அதன்பிறகு நீங்கள் திரும்பிச் செல்லவேமாட்டீர்கள், அதற்கு நாங்கள் உத்திரவாதம்!
அறிமுகச் சலுகை:
இந்தத் தளத்துக்கு முதன்முறை வருகை தரும் உங்களுக்கு, ஒரு சிறப்புப் பரிசு. இரண்டு நிமிட நினைவு ஒன்றை மீண்டும் வாழ்ந்து பார்க்கும் அபூர்வமான அனுபவத்தை முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம்.
கீழே உள்ள பொத்தானை க்ளிக் செய்து, ’திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தில் உறுப்பினராகுங்கள், உங்களுடைய இரண்டு நிமிட அனுபவத்தைப் பதிவு செய்யுங்கள், அதனை மறுபடி இன்னொருமுறை வாழ்ந்து பாருங்கள்.
இந்த அனுபவம் உங்களுக்கு முழுத் திருப்தி அளிக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதை நேருக்கு நேர் அனுபவித்து நிச்சயபடுத்திக்கொண்டபின்னர், நீங்கள் எங்களுடைய முழுமையான சேவையைப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒருவேளை உங்களுக்கு இதில் திருப்தி இல்லாவிட்டால், நாங்கள் உங்களை எந்தவிதத்திலும் வற்புறுத்தப்போவதில்லை, அந்த இரண்டு நிமிடங்களின் முடிவில் நீங்கள் உடனடியாக இந்தத் தளத்தை மூடிவிட்டு வெளியே சென்றுவிடலாம். அதன்பிறகு உங்களை எப்போதும் தொந்தரவு செய்வதில்லை என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.
நன்றி, கீழே ‘க்ளிக்’குங்கள், வாழ்க்கையை மீண்டும் நல்லவிதமாக வாழுங்கள், அட்வான்ஸ் வாழ்த்துகள்!
***
என். சொக்கன் …
07 12 2010
ரெண்டு ரூபாய்
Posted December 2, 2010
on:- In: (Auto)Biography | Auto Journey | நவீன அபத்தங்கள் | Bangalore | Characters | Cheating | Confusion | Corruption | Courtesy | Crisis Management | Customer Care | Customer Service | Customers | Honesty | Integrity | Learning | Life | Money | People | Price | Pulambal | Travel | Uncategorized
- 16 Comments
ஆட்டோ நின்றது. மீட்டர் 22 ரூபாய் காட்டியது.
என்னிடம் (அபூர்வமாக) ஏழு பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தன. மூன்றை எடுத்துக் கொடுத்தேன்.
‘சில்லறை இல்லை சார்’ என்றார் டிரைவர். ‘ரெண்டு ரூபாய் இருக்கா, பாருங்களேன்.’
நான் பர்ஸிலும் பாக்கெட்டிலும் தேடினேன். ம்ஹூம். ஐம்பது காசுகூட இல்லை. ‘எங்கேயாவது சில்லறை கிடைக்குதா பாருங்க’ என்றேன் அவரிடம்.
அந்த நெடுஞ்சாலையில் சிறிய / நடுத்தரக் கடைகளே இல்லை. ’ஷாப்பர்ஸ் ஸ்டாப்’பினுள் நுழைந்து பத்து ரூபாய்க்குச் சில்லறை கேட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்கள்.
இப்போது டிரைவர் தன்னுடைய பாக்கெட்டில் தேடினார். மூன்று ஒற்றை ரூபாய் நாணயங்கள்மட்டும் தட்டுப்பட்டன.
ரூ 22க்குப் பதிலாக ரூ 27 கொடுக்க எனக்கு மனம் இல்லை. அவர் நல்ல டிரைவர் போலிருக்கிறது. ஐந்து ரூபாய் கூடுதலாக எடுத்துக்கொள்ள அவருக்கும் மனம் இல்லை. இருவரும் மௌனமாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருந்தோம். Who will blink first?
கடைசியாக அவர்தான் வாய் திறந்தார். ‘பரவாயில்லை சார். அடுத்தவாட்டி பார்க்கும்போது ரெண்டு ரூபாய் கொடுங்க’ என்று பத்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார்.
அடுத்தவாட்டி? ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் புழங்கும் இந்த பெங்களூருவில் இவரை நான் இன்னொருமுறை சந்திப்பதற்கான வாய்ப்புகள் / Probability கிட்டத்தட்ட பூஜ்ஜியம். ஆக, இந்தப் பத்து ரூபாயை நான் வாங்கிக்கொண்டால் அவர் எனக்கு 2 ரூ தானம் கொடுத்திருப்பதாகவே அர்த்தம்.
அப்போதாவது நான் மறுத்திருக்கலாம். எத்தனையோ ஆட்டோ டிரைவர்கள் அயோக்கியத்தனமாகக் காசு பிடுங்குகிறார்கள். மீட்டருக்குச் சூடு வைக்கிறார்கள். பயணிகளை மிரட்டி எக்ஸ்ட்ரா வாங்குகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் இவர் 2 ரூபாயை விட்டுத்தர நினைக்கிறார். அந்த நல்லெண்ணத்துக்குப் பரிசாக நான் 5 ரூபாய் கொடுத்திருக்கலாம். அது ஒரு பெரிய தொகை அல்ல.
ஆனால் இதே விஷயத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது, நானே எத்தனையோமுறை ஆட்டோ டிரைவர்களிடம் தெரிந்து / தெரியாமல் காசு இழந்திருக்கிறேன். அதற்குப் பதிலாக இப்போது 2 ரூபாய் குறைத்துக் கொடுத்தால் என்ன தப்பு?
தப்புதான். யாரிடமோ காசைத் தொலைத்துவிட்டு இவரிடம் 2 ரூபாய் பிடுங்கிக்கொள்வது என்ன நியாயம்? ராபின்ஹூட்கூடக் கெட்டவர்களிடம் திருடிதான் நல்லவர்களுக்குக் கொடுத்தான். நான் அதை ரிவர்ஸில் செய்வது அநியாயமில்லையா?
இதையெல்லாம் உள்ளே யோசித்தேனேதவிர கை அல்பத்தனமாக நீண்டு அந்தப் பத்து ரூபாயை வாங்கிக்கொண்டுவிட்டது. ஒரு நல்ல ஆட்டோ டிரைவரிடம் 2 ரூபாய் திருடிவிட்டேன்
***
என். சொக்கன் …
02 12 2010