கார்காலம் – 2
Posted May 9, 2011
on:- In: கார்காலம் | Fiction | Thodarkathai | Uncategorized
- 12 Comments
முன்கதை
2
திரும்பத் திரும்ப முகத்தில் அறையும் பிடிவாதமான காற்று அலுப்பூட்டுகிறது. சூட்கேஸை இன்னும் கொஞ்சம் கீழே நகர்த்திவிட்டு முடிந்தவரை ஆட்டோவின் மையத்துக்கு நகர்ந்துகொள்கிறான் அரவிந்தன்.
மணி ஏழே முக்கால். இன்னும் பதினைந்து நிமிடத்தில் விமான நிலையம் சென்றுவிடுவது சாத்தியம்தான்.
கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் பயமுறுத்தியபிறகு கடைசியாக, ‘மீட்டருக்குமேல் முப்பது ரூபாய்’ என்கிற நிபந்தனையுடன் ஓர் ஆட்டோ கிடைத்துவிட்டது. அதை விரட்டிக்கொண்டு வீட்டுக்குச் சென்று, செல்வியிடம் தாமதத்துக்கான காரணங்களைச் சுருக்கமாகத் தெரிவித்துவிட்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டு கிளம்பினால், இதோ, கூப்பிடு தூரத்தில் விமான நிலையம்.
ஒவ்வொரு முறையும் இப்படிதான் ஆகிறது. ஏதேனும் ஒரு தடங்கல் வருகிறது, அவனது பயணம் தள்ளிப்போகும், அல்லது நின்றுபோகும் என்பதுபோல் அவனிடம் ஆவலை, எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. பின்னர் ‘சேச்சே, நானாவது, தடங்கல் பண்றதாவது’, என்று பழிப்புக் காட்டிவிட்டு மறைந்துபோகிறது.
நல்லவேளையாக இதுபோன்ற கற்பனைகள், எதிர்பார்ப்புகளை அவன் செல்வியிடம் சொல்வதில்லை. ஆகவே ஏமாற்றமும் அவனோடு நிற்கிறது.
இப்போது செல்வி என்ன செய்துகொண்டிருப்பாள் என்று யோசித்தான் அரவிந்தன். சிடி ப்ளேயரில் அவளுக்குப் பிடித்த, ஆனால் சரிவரப் புரியாத கர்நாடக சங்கீதத்தை வழியவிட்டுக்கொண்டு பாத்திரம் தேய்த்துக்கொண்டிருப்பாள். அல்லது, அவனது சட்டை எதிலாவது பட்டன் பிய்ந்ததைக் கண்டுபிடித்துத் தைத்துக்கொண்டிருப்பாள். வேறென்ன ?
அவளை நினைக்கையில் வேதனை மிகுந்தது. இந்த வீட்டைத்தவிர வேறெதைக் காண்கிறாள் அவள்? இப்போதெல்லாம் அவளை வெளியே அழைத்துச்செல்வதுகூடக் குறைந்துவிட்டது. மளிகைச் சாமான்களையெல்லாம் வீட்டுக்கே கொணர்ந்து தரும் ஒரு நவீன சூப்பர் மார்க்கெட்டின் தொலைபேசி எண் கிடைத்தபிறகு அவளது வெளி நடவடிக்கைகள் வெகுவாகச் சுருங்கிவிட்டன.
செல்வியை இப்போதே பார்க்கவேண்டும்போல் உணர்ந்தான் அரவிந்தன். அவளது கன்னங்களை வருடி, திடீரென்று இப்படிக் கிளம்பவேண்டியிருப்பதன் அவஸ்தைக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தோன்றியது. உடனடியாக முடியாவிட்டாலும், ‘இதெல்லாம் நானாக விரும்பிச் செய்வதில்லை, காலம் என்னைச் செலுத்துகிற, அல்லது துரத்துகிற பாதையில் ஓடிக்கொண்டிருக்கிறேன்’ என்று எப்போதாவது அவளிடம் சொல்லவேண்டும்.
கையிலிருந்த விமான டிக்கெட்டை ஆர்வமின்றி திருப்பிப் பார்த்தான் அரவிந்தன். மும்பைக்குச் செல்லும் தேதியும் நேரமும் விமான எண்ணும் அதில் சரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் திரும்பி வருகிற தேதி இல்லை, ‘ஓபன்’ என்று பட்டையடித்து எழுதியிருந்தார்கள்.
சலிப்பு கலந்த பெருமூச்சுடன் நிமிர்ந்துகொண்டான் அரவிந்தன். தினசரி ஆஃபீசுக்குச் செல்வதென்றாலும் சரி, இப்படி அலுவல்நிமித்தம் பயணங்கள் போவதென்றாலும் சரி, வீட்டிலிருந்து கிளம்புகிற நேரம்மட்டுமே உறுதி செய்யப்பட்டதாக இருப்பதும், திரும்புகிற நேரத்தை வேறு யாரோ எதுவோ தீர்மானிப்பதும் ஏன்?
மேலே ஏதோ ஒரு விமானம் ராட்சஸமாகச் சப்தம் எழுப்பிக்கொண்டு விரைந்தது. பக்கத்து ஆட்டோவிலிருந்து அந்த விமானத்தைச் சுட்டிக்காண்பித்துக் கையாட்டி வழியனுப்பினாள் ஒரு பிஞ்சுப் பாப்பா.
அந்தக் குழந்தையைப் பார்க்கையில் எதற்காகவோ அரவிந்தனுக்குக் கண்ணில் நீர் தளும்பியது. செல்வியை எப்போதாவது எங்காவது விமானத்தில் அழைத்துக்கொண்டுபோகவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
ஒருகாலத்தில், விமானத்தில் செல்வது என்றாலே அவனுக்குப் பெருமிதமும் கர்வமும் பொங்கும். எக்ஸிபிஷன் போகிற குழந்தையின் ஆர்வத்தோடு அதை எதிர்பார்ப்பான். கண்ணில் படுகிற நண்பர்கள், உறவினர்களிடமெல்லாம் ‘நான் நாளைக்கு ஏரோப்ளேன்ல போறேன்’, என்று ஏதேனும் ஒருவிதத்தில் தெரிவித்துவிடுவான்.
ஆனால் இவர்கள் தன்னை விமானத்தில் அனுப்புவதென்பது போகிற ஊரில் நினைத்த நேரம்வரை கட்டிப்போட்டுவிடுவதற்கான யுக்திதான் என்று புரிந்தபின், விமானங்கள் அவனுக்குள் எந்தப் பரவசத்தையும் உண்டாக்குவதில்லை. திரும்புகிற தேதி எப்போதும் திறந்தே கிடக்கும் விமான டிக்கெட்களைப் பார்த்தால் வெறுப்புதான் மண்டியது.
அரவிந்தன் அடிக்கடி இப்படி விமானத்தில் பறக்கிறான் என்பதில் செல்விக்கும் கொஞ்சம் பெருமைதான். இங்கே வந்த புதிதில் தனது ஒவ்வொரு விமானப் பயண அனுபவத்தையும் நொடிக்கணக்கில் நுணுக்கமாக அவன் விவரிக்கவேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாள்.
ஒவ்வொருமுறையும், விமான டிக்கெட்டைப் பார்த்து ‘ஐயோ, இவ்ளோ காசா?’, என்று பெருமிதம் கலந்த ஆச்சரியம் கொள்வதில் அவளது பரவசம் தொடங்கும். விமானம் எப்படித் தரையிலிருந்து மேலே உயரும்? எப்போதும் சாய்ந்த கோணத்தில்தான் பறக்குமா? அல்லது, சமதளம்போல் பறக்குமா? உயரத்தில் பறக்கும்போது அவனுக்கு வயிற்றைப் புரட்டுமா? வாந்தி வருமா? காதுக்குள் ஜிவ்வென்று இருக்குமா? மேகங்களுக்குமேலே, அல்லது அவற்றுக்குள் பறக்கிறபோது நீ எப்படி உணர்ந்தாய்? சீட் பெல்ட் கட்டிக்கொள்ளாவிட்டால் தவறிக் கடலில் விழுந்துவிடுவோமா? பெங்களூருக்கும் டெல்லிக்கும் இடையே குத்துமதிப்பாக எத்தனை கடல்கள் உண்டு? அவற்றின்மீது பறக்கும்போது கீழே தண்ணீர் தெரியுமா? மீன்கள்? மனிதர்களே எறும்புமாதிரி, கட்டிடங்கள் பெட்டிமாதிரித் தெரிவதாகச் சொல்கிறார்களே, அது உண்மையா? விமான இறக்கைகளில் விளக்கு வைத்திருக்கிறார்களே, அது எதற்கு? – இப்படி ஏராளமான அறிவியல், புவியியல், வாழ்வியல் சார்ந்த கேள்விகள் அவளுக்கிருந்தன.
உண்மையில், இதுபோன்ற விஷயங்களில் அரவிந்தனுக்கு அவ்வளவாக கவனம் போதாது. என்றாலும் அவள் கேட்கிறாளே என்பதற்காகச் சில விளக்கங்களை உருவாக்கிச் சொல்வதுதான். ஆனால் அவற்றில் அவள் குறுக்குக் கேள்விகள் கேட்டு மடக்கும்போது, அவனுக்குச் சலிப்பாகிவிடும், ‘அடுத்தவாட்டி சரியாப் பார்த்துட்டு வந்து சொல்றேன்’ என்று பேச்சுவார்த்தையை முடித்துக்கொள்வான்.
‘அடுத்தவாட்டி’, செல்வி அந்தக் கேள்வியை மறக்காமல் நினைவில் வைத்திருப்பாள். அவன்தான் மறந்துபோயிருப்பான். ஆகவே, இன்னொரு புதிய விளக்கத்தைக் கற்பனை செய்யவேண்டியிருக்கும். அதிலும் அவளுக்குக் குறுக்குக் கேள்விகள் வரும்.
இப்படி அவன் அடிக்கடி பறந்துகொண்டிருந்ததால் செல்வியும் அவனோடு அரைப் பயணியாகியிருந்தாள். பலவிஷயங்களை அவனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, அல்லது அவளே ஊகித்துக்கொண்டிருந்தாள். ஆனால் தன்னை ஒருமுறை விமானத்தில் அழைத்துச்செல்லவேண்டும் என்று அவனிடம் அவள் விளையாட்டாகக்கூடக் கேட்டதில்லை.
செல்வி அதீதமாக வியந்தாலும் இப்போதெல்லாம் விமானக் கட்டணங்கள் அப்படியொன்றும் அதிகமில்லை. அப்படியே அதிகமாக இருந்தாலும் என்ன என்று அலட்சியமாக நினைத்துக்கொண்டான் அரவிந்தன். பிறகு எதற்காகச் சம்பாதிக்கிறோம்? செலவைப்பற்றிக் கவலைப்படாமல் ஏதேனும் ஒரு விடுமுறையை உருவாக்கிக்கொண்டு செல்வியும் அவனும் எங்காவது பறக்கவேண்டும்.
அரவிந்தனின் அலுவலகத்தில் வருடத்துக்கு ஒரு வாரமோ பத்து நாளோ குடும்பத்தோடு சுற்றுலாச் சென்றுவருவதற்கான விடுமுறை என்று உண்டு. ஆனால் சேர்ந்தாற்போல் அத்தனை நாள் அலுவலகத்திலிருந்து விலகியிருப்பது யாருக்கும் சரிப்பட்டுவருவதில்லை. ஆகவே பெரும்பாலானவர்கள் அந்த விடுமுறையைப் பயன்படுத்திக்கொள்வதில்லை. கம்பெனியும் அதற்குபதிலாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஈடாகக் கொடுத்துவிடுகிறது.
இப்படி ஒவ்வொரு வருடமும் வாங்கிய காசெல்லாம் எங்கே போனது என்று யோசித்துப்பார்த்தான் அரவிந்தன். கடலில் கரைத்த பெருங்காயம்போல் எல்லாம் வங்கிக் கணக்கில் சேர்ந்துகொள்கிறது. அதன்பிறகு ஒரு காசுக்கும் இன்னொரு காசுக்கும் துளி வித்தியாசம் பார்க்கமுடியாது.
ஒரு கட்டத்துக்குமேல் தன்னிடம் எத்தனை பணம் இருக்கிறது என்று அறிகிற, கணக்கிடுகிற ஆர்வம்கூட போய்விடுகிறது. ஆனால் இப்படித் தொடர்ந்து காசு வந்துகொண்டே இருக்கவேண்டும் என்கிற பயம்மட்டும் எப்போதும் விலகுவதில்லை.
எங்கோ தொடங்கி எங்கோ ஓடிக்கொண்டிருக்கும் தன் நினைவுகளைக் கடிவாளமிட்டு நிறுத்தினான் அரவிந்தன். நாமே உருவாக்கிக்கொண்ட சூழ்நிலைக்கு எதையோ யாரையோ குறை சொல்லிக்கொண்டு காத்திருப்பதில் அர்த்தமில்லை. இந்தமுறை பம்பாயிலிருந்து திரும்பியபின் கண்டிப்பாக ஒரு வாரமாவது லீவ் போட்டுவிட்டு செல்வியைக் கூட்டிக்கொண்டு எங்கேயாவது போய்விடவேண்டும்.
இப்போது இப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பியவுடன் இதை மறந்துவிடக்கூடாது. பிரசவ வைராக்கியம்போல் இல்லாமல், ஒரு சிறு சுற்றுலாவேனும் சென்றே தீரவேண்டும். அது அவளுக்குப் பிடித்த இடமாக இருக்கவேண்டும். சில நாள்களுக்காவது தினசரி வேலைகளிலிருந்து அவளுக்கும் அவனுக்கும் ஓய்வு வேண்டும். முக்கியமாக, அவர்கள் ஒருவருக்கொருவர் செலவிட நேரம் வேண்டும்.
எங்கே போகலாம் என்று அரவிந்தன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தபோது டிரைவர் பலமாக ஹாரன் ஒலித்து ‘சார், ஏர் போர்ட் வந்திட்ச்சு’ என்றான் கொச்சைத் தமிழில்.
(தொடரும்)
***
என். சொக்கன் …
09 05 2011
12 Responses to "கார்காலம் – 2"

[…] அத்தியாயம் – 2 […]


[…] அத்தியாயம் – 2 […]


ஒரு கட்டத்துக்குமேல் தன்னிடம் எத்தனை பணம் இருக்கிறது என்று அறிகிற, கணக்கிடுகிற ஆர்வம்கூட போய்விடுகிறது. ஆனால் இப்படித் தொடர்ந்து காசு வந்துகொண்டே இருக்கவேண்டும் என்கிற பயம்மட்டும் எப்போதும் விலகுவதில்லை.


[…] – 1, 2, 3, 4, […]


[…] – 1, 2, 3, 4, 5, […]


[…] – 1, 2, 3, 4, 5, 6, […]


ROBOTIC LIFE:(
Pity all the software pros.


[…] 2, 3, […]


[…] 2, […]


[…] 2, 3, 4, […]


[…] 2, 3, […]

1 | கார்காலம் – 3 « மனம் போன போக்கில்
May 16, 2011 at 11:41 am
[…] Serials கார்காலம் – 2 […]