Archive for June 2011
கார்காலம் – 9
Posted June 28, 2011
on:- In: கார்காலம் | Fiction | Thodarkathai | Uncategorized
- 4 Comments
முன்கதை
அத்தியாயங்கள்:
9
பதற்றத்துடன் இன்னொருமுறை நன்றாக அழுத்தித் திறந்துபார்த்தான் அரவிந்தன். ம்ஹும்! கதவு பிடிவாதமாகத் திறக்க மறுத்தது.
பொதுவாக இதுபோன்ற நட்சத்திர ஹோட்டல் அறைக் கதவுகள் உள்பக்கக் கைப்பிடியை லேசாகத் தொட்டாலே திறந்துகொள்ளும். வெளிப்பக்கத்திலிருந்துதான் நமது அனுமதியின்றி யாரும் திறக்கமுடியாது.
ஆனால் இந்தக் கைப்பிடியைச் சுமார் 90 டிகிரிக்குமேல் சுற்றியும்கூடக் கதவில் சிறு சலனமும் இல்லை. கதவிடுக்கு வழியே வழிகிற வெளிச்சத்தில் கண் வைத்துப் பார்த்தபோது கைப்பிடியின் அசைவிற்கும் கதவு திறப்பதற்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதுபோல் தோன்றியது.
இந்தக் கதவின் உள்பக்கமாக சாவித்துளையும் இல்லை. ஆகவே சாவி கொண்டு கதவைத் திறப்பதும் நடக்காது. இப்போது மிச்சமிருப்பது ஒரே ஒரு வழிதான். வெளியிலிருந்து யாராவது சாவி கொண்டு கதவைத் திறக்கவேண்டும்.
யாரைக் கூப்பிடலாம் என்று நினைக்கையில் அரவிந்தனுக்குப் பதற்றம் கூடியது. திடீரென்று தெரிந்தவர்கள் எல்லோரும் தொலைந்துபோய்விட்டாற்போலிருந்தது. கையிலிருந்த செல்ஃபோனில் யாரையாவது கூப்பிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் அவனுக்குத் தன்னுடைய மடத்தனம் புரிந்தது. சட்டென்று அறையினுள் ஓடி ஹோட்டலின் உள் தொலைபேசியை எடுத்து வரவேற்பறையை அழைத்தான். ‘ஹலோ ஸார், குட் ஈவினிங்’ என்று எந்திரப் புன்னகையோடு பேச்சைத் தொடங்கினாள் ஒருத்தி.
‘என் ரூமைத் திறக்கமுடியவில்லை’ என்றான் நேரடியாக.
‘உங்களிடம் சாவி இருக்கிறதா ஸார்?’
‘நான் இப்போ ரூமுக்குள்ளேதான் இருக்கேன்’ என்றான் அரவிந்தன். ‘ஆனா கதவைத் திறந்துகிட்டு வெளியே வர முடியலை.’
‘ஏன் ஸார்?’, என்று அவள் பரிதாபமாக விசாரித்தபோது அவனுக்குக் கோபம்தான் வந்தது. ‘உங்க டப்பாக் கதவில் ஏதோ கோளாறு. உடனடியாகக் கவனியுங்கள், ப்ளீஸ்!’
‘ஷ்யூர் ஸார்’ என்று தொலைபேசி இணைப்பைத் துண்டித்தாள் அவள்.
மீண்டும் கதவருகே சென்று நின்றுகொண்டான் அரவிந்தன். யார் வருவார்கள்? எப்படிக் கதவைத் திறப்பார்கள்? அவர்களிடம் இன்னொரு சாவி இருக்குமா? ஒருவேளை இல்லாவிட்டால்? சாவி இருந்தும் அது திறக்காவிட்டால்? கதவை அறுத்துத் திறப்பார்களா? உடைத்துத் திறப்பார்களா? அதற்கெல்லாம் எத்தனை நேரமாகும்? அரவிந்தனுக்குச் சட்டென்று பசிக்கத் தொடங்கியது.
செல்வியைத் தொலைபேசியில் அழைத்துச் சொல்லலாமா என்று நினைத்தவன் உடனடியாக அந்த எண்ணத்தைத் துடைத்தெறிந்தான். அநாவசியமாக அவளை ஏன் பதற்றப்படுத்தவேண்டும்? இந்தப் பிரச்னை அநேகமாக இன்னும் சில விநாடிகளில் தீர்ந்துவிடப்போகிறது.
அப்போதுதான் இரண்டு நாள்களாக செல்விக்கு ஃபோன் செய்யவே இல்லை என்று ஞாபகம் வந்தது. அவன் இன்றைக்குத் திரும்பி வரப்போகிறான் என்று நினைத்து எதிர்பார்த்துக்கொண்டிருப்பாள், பாவம்.
அப்படியானால், இப்போது அவளுக்குக் கண்டிப்பாக ஃபோன் செய்தாகவேண்டும். உடனடியாகச் செய்யலாமா? அல்லது, ஒன்பதரை மணிக்குமேல்? எதுவானாலும் இந்தப் பூட்டுப் பிரச்னை தீர்ந்தபிறகுதான்.
அரவிந்தனுக்கு ஏஸி அறையிலும் ஏகமாக வியர்த்துக்கொண்டிருந்தது. இந்த ஒன்றரையணா பூட்டைப் பரிசோதிக்கவேண்டியவர்கள் எப்போது வருவார்களோ தெரியவில்லை.
மீண்டும் உள்ளே சென்று ரிஸப்ஷனைத் தொலைபேசியில் அழைத்தான் ‘ஹலோ, குட் ஈவினிங்’ என்று தொடங்கியவளைக் கத்தரித்து ‘பூட்டைச் சரி செய்ய ஆள் அனுப்பினீங்களா? இல்லையா?’ என்றான்.
‘சார், நீங்க உங்க ரூம் நம்பரைச் சொல்லவே இல்லை’ பரிதாபமாகச் சொன்னாள் அவள்.
‘அதனால என்ன? நான் எந்த ரூமிலிருந்து ஃபோன் செய்றேன்னு உங்களால பார்க்கமுடியாதா?’ அதட்டலாகக் கேட்டான் அரவிந்தன்.
‘இப்போ முடியும் ஸார்’ என்றாள் அவள். ‘ரூம் நம்பர் 210. இதோ ஆள் அனுப்பிட்டேன்’ என்று புன்னகைத்து ‘வேறெதாவது வேண்டுமா ஸார் ?’, என்றாள் சம்பிரதாயமாக.
‘நோ தாங்க்ஸ்’ முறைப்பாகச் சொல்லிவிட்டு ஃபோனைக் கீழே வைத்தான் அரவிந்தன். அறைக்குள் பூட்டப்பட்டுக் கிடக்கிறவனுக்கு வேறென்னதான் வேண்டியிருக்கும்? அவன் அலுவலகத்தைப்போலவே இங்கேயும் அபத்தமான சடங்குகள், அர்த்தமில்லாத கார்ப்பரேட் பூச்சுவேலைகள். மின்விசிறியைப் பெரிதாக்கிக்கொண்டு படுக்கையில் சரிந்துகொண்டான்.
வெள்ளைவெளேரென்ற மேல் சுவரில் பூப்போன்ற வடிவங்கள் செய்து அதன் நடுவே மின்விசிறியைப் பொருத்தியிருந்தார்கள். அது வேகமாகச் சுழலும்போது மெல்லிய திரையின்பின்னே பூக்களைப் பார்ப்பதுபோலிருந்தது.
இப்போது ஒருவேளை பம்பாயில் பூகம்பம் வந்தால் தன்னால் வெளியே ஓடக்கூட முடியாது என்று சிரிப்புடன் நினைத்துக்கொண்டான் அரவிந்தன். யார் கண்டது? பூகம்பத்தின் அதிர்ச்சியில் இந்தக் கதவு திறந்துகொள்ளுமோ என்னவோ!
ஒன்றிரண்டு நிமிடங்களுக்குப்பின் யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. ‘என்ன ஆச்சு ஸார்?’ என்று கொச்சை ஹிந்தியில் எவனோ விசாரிப்பதை மெலிதாகக் கேட்கமுடிந்தது.
சட்டென்று கதவருகே ஓடினான் அரவிந்தன். ‘கதவைத் திறக்கமுடியலை’ என்றான் சத்தமாக.
கதவுக்கு வெளியே இருந்தவன் பலமாக அதை ஒருமுறை தட்டினான். பின்னர் வெளியிலிருக்கும் கைப்பிடியைச் சுழற்றிப்பார்த்தான். பலனில்லை. மேலும் ஒன்றிரண்டுமுறை முயன்றுபார்த்துவிட்டு ‘சாவி கொடுங்க ஸார்’ என்றான்.
‘ஏன்? உங்ககிட்டே டூப்ளிகேட் சாவி இல்லையா?’ எச்சரிக்கையுடன் கேட்டான் அரவிந்தன்.
‘கீழே போய்தான் வாங்கிட்டு வரணும் ஸார். லேட் ஆவும்’ என்றான் அவன். ‘உங்க சாவியை மெதுவா கதவுக்குக்கீழே தள்ளுங்க.’
சிறு தயக்கத்திற்குப்பின், கதவின் அருகே இருந்த சுவரில் பத்திரமாகப் பொருந்திக்கொண்டிருந்த சாவியைப் பிடுங்கினான் அரவிந்தன். உடனே, அந்தச் சாவியுடன் இணைக்கப்பட்டிருந்த பிரதான மின்சாரப் பொறி துண்டிக்கப்பட்டுச் சட்டென்று அறையின் எல்லா விளக்குகளும் அணைந்தன.
இருட்டில் கதவு எங்கே இருக்கிறது என்றுகூடத் தெரியவில்லை. நல்லவேளையாக, வெளியிலிருந்த மின் வெளிச்சம் கதவுக்குக்கீழே வழிந்துகொண்டிருந்தது. அந்த ஒளிக்கீற்றை இலக்காக வைத்து சாவியைத் தள்ளிவிட்டான் அரவிந்தன்.
வெளியே அவன் சாவியை எடுத்துச் சுழற்றுவதும் ‘க்ளிக்’ என்கிற சப்தமும் நன்றாகக் கேட்டது. பின்னர் கதவு அகலத் திறந்துகொண்டது.
அந்த விநாடியில், சிலுசிலுவென்று வீசும் எதிர்க்காற்றில் நிற்பதுபோல் உணர்ந்தான் அரவிந்தன். சுதந்திரக் காற்றை ஆழச் சுவாசித்தபடி, அறைக்கு வெளியே நின்றிருந்தவனுக்கு மனமார நன்றி சொன்னான்.
‘தேங்க்ஸ் ஸார்’ என்று பதில் மரியாதை செய்த அவன் பாக்கெட்டிலிருந்து ஒரு பெட்டியைக் கையிலெடுத்தான். அதிலிருந்து சில உபகரணங்களைப் பொறுக்கிக்கொண்டான். பின்னர் கதவுக்கு முத்தமிடுவதுபோன்ற கோணத்தில் நின்றபடி கைப்பிடியைக் கழற்றலானான்.
அவனுடைய லாகவமான பணிவேகத்தை வியந்தபடி சில நிமிடங்களுக்கு அவனை கவனித்துக்கொண்டிருந்தான் அரவிந்தன். பின்னர் பசி வென்றுவிட்டது. ‘நீங்க இதைப் பாருங்க, நான் சாப்பிட்டுட்டு வந்துடறேன்’ என்றான்.
‘ஓக்கே ஸார்’ என்று சிறிய சல்யூட் ஒன்றைச் செய்தான் அவன். ‘சாவியைமட்டும் இங்கயே விட்டுட்டுப் போங்க, நான் வேலையை முடிச்சுட்டு ரிஸப்ஷன்ல கொடுத்துடறேன்’ என்றான்.
‘ஷ்யூர்’ என்றபடி, அவனைக் கடந்து வெளியேறினான் அரவிந்தன். விறுவிறுவென்று லிஃப்ட்கள் நிறைந்த மையப்பகுதியை நோக்கி நடந்தான்.
பத்தடி நடந்தபிறகு திடீரென்று ஒரு சந்தேகம். ‘இந்த ஆளை நம்பி ரூம் சாவியைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேனே, ஒருவேளை இவன் எதையாவது லவுட்டிக்கொண்டு ஓடிவிடுவானோ?’
அரவிந்தன் அறையில் மதிப்புமிக்க பொருள் என்று எதுவும் இல்லை, அலுவலகச் சொத்தாகிய லாப்டாப்பைத் தவிர. அதைத் தொலைத்தால் இவன்தான் கையிலிருந்து காசு அழவேண்டும். எதற்கு ரிஸ்க்? சட்டென்று திரும்பி நடந்தான்.
அவனுடைய அறைக் கதவு அகலத் திறந்து கிடந்தது. பாத்ரூம் முன்னால் சம்மணமிட்டு அமர்ந்திருந்த பூட்டு நிபுணன் கையில் இருந்த உலோக டப்பாவினுள் எதையோ தீவிரமாக நோண்டிக்கொண்டிருந்தான்.
’எக்ஸ்க்யூஸ்மீ’ என்று அவனிடம் மன்னிப்புக் கெட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தான் அரவிந்தன். மேஜைமீது திறந்து கிடந்த லாப்டாப்பை மடித்துக் கையில் எடுத்துக்கொண்டான். வெளியேறினான். ‘பை!’
அந்தப் பூட்டு நிபுணன் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. மிஞ்சிப்போனால் 20 வயது இருக்குமா? இவனைப்போய் சந்தேகப்பட்டுவிட்டோமே என்று சற்றே வெட்கமாக உணர்ந்தான் அரவிந்தன்.
ஆனால், இந்தக் காலத்தில் யாரைதான் நம்பமுடிகிறது? என்னதான் தர்மராஜாவாக இருந்தாலும், பாடுபடாமல் கிடைக்கும் பொருள் என்றால் கசக்குமா? நாம்தான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துகொள்ளவேண்டும்.
அந்த ஹோட்டலின் பொதுப்பகுதிகளில் எங்கும் ஸ்பீக்கர்வழியே ஸாக்ஸஃபோன் கசிந்துகொண்டிருந்தது. ஆங்காங்கே மரச்சுவர்களில் நவீன ஓவியங்கள். பொதுவாக எல்லா நட்சத்திர ஹோட்டல்களிலும் இப்படி விளங்கிக்கொள்ளச் சிரமமான நவீன ஓவியங்கள் மாட்டப்பட்டிருப்பதின் தாத்பர்யம் என்ன என்று யோசித்தபடி தனக்கான லிஃப்டை அழைத்தான் அரவிந்தன்.
அவனுடைய பசியைப் புரிந்துகொண்டாற்போல் லிஃப்ட் உடனே வந்துவிட்டது. அதில் புகுந்து முதலாவது மாடிக்கான பொத்தானை அழுத்தியபோது செல்விக்குத் தொலைபேசவேண்டும் என்று மீண்டும் நினைவு வந்தது.
முதலாவது மாடியிலிருந்த உணவகத்தின் அருகே ஒரு சிறு நீச்சல் குளம் உண்டு. இப்போது அங்கே அதிகக் கூட்டம் இருக்காது என்பதால் அங்கிருந்து செல்வியை அழைக்கலாம் என்று தீர்மானித்துக்கொண்டான் அரவிந்தன்.
அவன் நினைத்தபடி நீச்சல் குளம் வெறிச்சோடிக்கிடந்தது. தூரத்தில் ஒரே ஒரு சின்னஞ்சிறுமி அம்மா துணையுடன் தண்ணீரை அளைந்துபார்த்துக்கொண்டிருந்தாள்.
நீள நாற்காலிகளில் ஒன்றில் நன்றாகச் சரிந்து அமர்ந்தான் அரவிந்தன். இந்தச் சில நிமிடங்களுக்குள் கையில் அதீதமாகக் கனக்க ஆரம்பித்திருந்த லாப்டாப்பை மேஜைமீது வைத்தான்.
லாப்டாப்பில் மணிக்கணக்காக வேலை செய்யும்போதெல்லாம் சுமை தெரிவதில்லை. அதை மடித்துக் கையில் அல்லது முதுகில் தூக்கிக்கொண்டு அலையும்போதுதான் கனம் உறுத்துகிறது.
பெருமூச்சுடன் கை விரல்களைக் கோர்த்து மடித்துச் சொடக்கிட்டான் அரவிந்தன். செல்பேசியில் வீட்டு எண்ணை அழைத்தான்.
சில நிமிடங்களுக்குப்பிறகு செல்வியின் ’ஹலோ’ கேட்டது. அவளது குரலில் அதீத சோகம் தொனிப்பதுபோலிருந்தது அவனுடைய குற்றவுணர்ச்சியை அதிகப்படுத்தியது.
‘நான்தான் செல்வி, எப்படி இருக்கே?’
‘எனக்கென்ன குறைச்சல்?’ என்று சிரித்தாள் செல்வி. ‘ஐம் ஃபைன். ஹவ் ஆர் யூ?’
‘ஓக்கே’ என்றான் அரவிந்தன். ‘உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்.’
‘என்னது? நீ இன்னிக்கு வரலை. இன்னும் நாலஞ்சு நாளாகும். அதானே?’ ஏதோ நாளைக்கு சனிக்கிழமை என்று சொல்வதுபோல் சாதாரணமாகக் கேட்டாள் செல்வி.
‘அது எப்படி உனக்குத் தெரியும்?’ அரவிந்தனுக்கு ஆச்சரியம் தாளவில்லை.
‘வெள்ளிக்கிழமை ஃப்ளைட்ல திரும்பி வரவேண்டிய ஆளு ராத்திரி ஒன்பது மணிக்கு இப்படி ஃபோன் செஞ்சா அதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான் இருக்கமுடியும் எஞ்சினியர் ஸார்’ என்று சிரித்தாள் அவள்.
‘ஸாரி செல்வி, அல்மோஸ்ட் எல்லாம் முடிஞ்சமாதிரிதான். ஆனா சில புது விஷயமெல்லாம் கேட்கறாங்க’ என்று தயக்கத்துடன் விளக்கத்தொடங்கினான் அரவிந்தன்.
‘நோ ப்ராப்ளம். இருந்து எல்லா வேலையையும் முடிச்சுட்டு வா. ஒண்ணும் அவசரமில்லை’ என்றாள் செல்வி, ‘இப்படித் தாமதமாகலாம்-ன்னு கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருந்தேன்னா நான் எங்க அம்மா வீட்டுக்குப் போய்ட்டு வந்திருப்பேன்’ என்றாள் தொடர்ந்து.
அவள் உற்சாகமாகதான் பேசினாள். என்றாலும் அரவிந்தன் குற்றவுணர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் திணறிக்கொண்டிருந்தான். இப்போது அவள் சொன்னதைக் கேட்டதும் அந்த வேதனையும் தன்னிரக்கமும் இன்னும் அதிகமாகிவிட்டது.
‘இப்போதான் என்ன? போய்ட்டு வா செல்வி’ என்றான்.
‘அதெல்லாம் வேணாம்’ தீர்மானமாகச் சொன்னாள் அவள். ‘அப்புறம் நீ அடுத்த வாரம் திரும்பி வரும்போது நான் அங்கே இருப்பேன். அநாவசியமா மறுபடியும் கஷ்டம். நான் எங்கயும் போகலை. இங்கயே இருக்கேன்!’
‘ஏண்டி, நான் வேலை விஷயமா உன்னைத் தனியா விட்டுட்டு டூர் போகும்போது நீ உங்க அம்மாவைப் பார்க்கறதுக்காக நாலு நாள் போய்ட்டு வரக்கூடாதா? நான் சமாளிச்சுக்கமாட்டேனா?’
‘அது சரி, நீ டூர் போனாதான் வீட்ல அடுப்பு எரியும், உன்னைப் பார்த்து நானும் ஜாலியா டூர் கிளம்பிட்டா குடும்பம் உருப்பட்டமாதிரிதான்’ என்று சிரித்தாள் செல்வி. ‘அதெல்லாம் வேணாம்ப்பா. நான் இப்ப எங்கேயும் போகலை.’
‘ஓக்கே’ என்றான் அரவிந்தன். ‘குரல் கொஞ்சம் பிசிறடிக்குதே. ஏன்?’
‘ஒண்ணுமில்லை, லேசா ஜுரம்’ என்றாள் செல்வி. ‘ரெண்டு நாளா ஜலதோஷம், தலைவலி தாங்கலை. இன்னிக்கு ஜுரமும் வந்துடுச்சு.’
‘அச்சச்சோ, உடனடியா ஒரு டாக்டரைப் பார்க்கவேண்டியதுதானே?’ பதற்றத்துடன் கேட்ட அரவிந்தனுக்கு இப்போதே அவளைப் பார்க்கவேண்டும்போலிருந்தது. தலையில் ஒரு பழைய ஜாக்கெட்டைச் சுற்றிக் கட்டிக்கொண்டு, மூச்சுவிடச் சிரமத்துடன், நைட்டியில் ஒரு கர்ச்சீப்பைப் பின் வைத்துக் குத்திக்கொண்டு அதில் அடிக்கடி மூக்கைச் சிந்திக்கொண்டிருப்பாள். பாவம்!
‘இன்னிக்கு நீ வந்துடுவே, நாளைக்கு உன்னோட டாக்டர்கிட்டே போகலாம்-ன்னு இருந்தேன்ப்பா’ என்றாள் அவள். ‘சரி, நானே போய்ட்டு வர்றேன்’ என்றாள் தொடர்ந்து.
‘ரொம்ப ஸாரிம்மா’ என்றான் அரவிந்தன். ‘தனியா உனக்கு ரொம்பக் கஷ்டம், பாவம்.’
‘அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா. நான் பார்த்துக்கறேன்’ என்றாள் செல்வி. ‘நீ என்னைப்பத்தி கவலைப்படாம உன் வேலையைக் கவனி’ என்றாள் உறுதியான குரலில்.
‘அது எப்படி முடியும் செல்வி?’ என்றான் அவன். ‘என் நினைப்பெல்லாம் அங்கேதான் இருக்கு. பெங்களூர்ல கொலை, கொள்ளைன்னு எந்த ரிப்போர்ட் படிச்சாலும் மனசு பதறுது.’
‘ஐயோ மக்கு’ என்று சிரித்தாள் அவள். ‘கண்டதையும் கற்பனை செஞ்சுகிட்டுக் கவலைப்படாதே. இது சாதாரணத் தலைவலி, காய்ச்சல். எல்லாம் தானா சரியாப்போயிடும்.’
‘அப்படீன்னா நீ டாக்டர்கிட்டே போகமாட்டியா?’ குற்றம் சாட்டும் குரலில் கேட்டான் அவன்.
‘போறேன்ப்பா’ என்று சிரித்தாள் அவள். ‘நாளைக்கு ஈவினிங்வரைக்கும் காய்ச்சல் இருந்தா டாக்டரைப் பார்க்கறேன். சரியா?’
‘ஓக்கே’ என்று அரைமனதாகச் சொன்னான் அவன். ‘வேறென்ன விசேஷம்?’
‘வேற ஒண்ணும் இல்லை’ என்றாள் அவள். ‘நீ வேலையை முடிச்சுட்டுச் சீக்கிரமா ஓஓஓஓடி வந்துடுவியாம். சரியா?’
‘சரிம்மா’ என்றான் அவன். ‘டேக் கேர், குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ், ஐ லவ் யூ!’
அவன் செல்பேசியை அணைத்துப் பாக்கெட்டில் போடும்வரை காத்திருந்த உணவகப் பணியாளன் பவ்யமான தூரத்தில் நெருங்கி ‘குடிப்பதற்கு ஏதாவாது வேண்டுமா ஸார்?’, என்றான் பணிவாக. அந்த அரையிருட்டில் அரவிந்தனின் முகத்தில் படிந்திருந்த கலவை உணர்ச்சிகளை அவனால் கவனித்திருக்கமுடியாது.
சில விநாடிகள் யோசித்த அரவிந்தன் ‘லஸ்ஸி’ என்றான்.
(தொடரும்)
***
என். சொக்கன் …
28 06 2011
கார்காலம் – 8
Posted June 21, 2011
on:- In: கார்காலம் | Fiction | Thodarkathai | Uncategorized
- 6 Comments
முன்கதை
8
‘தலைவிதி’ என்றார் ஞானேஷ்வர் ராவ். ‘இவனுங்ககிட்டேயெல்லாம் குப்பை கொட்டணும்-ன்னு நம்ம தலையில அழுத்தமா எழுதியிருக்கு, வேற என்ன சொல்றது?’
‘சத்தமாப் பேசாதீங்க சார்’ என்றான் அரவிந்தன். ‘இங்கே யாருக்காவது தமிழ் தெரிஞ்சிருக்கப்போகுது.’
‘தெரியட்டுமே, என்ன பெரிசா?’ கைகளை அகல விரித்துச் சொன்னார் அவர். ‘ஒவ்வொரு மீட்டிங்லயும் பத்து விஷயம் புதுசாக் கேட்கறானுங்க. எதுக்கும் எக்ஸ்ட்ரா காசு கொடுக்கமாட்டாங்க, இவனுங்களுக்கு இப்படி இலவசமாச் சேவை செய்யணும்-ன்னு நமக்கென்ன?’
அவருடைய கோபத்தைப் பார்க்கையில் அரவிந்தனுக்குச் சிரிப்புதான் வந்தது. அவனுடைய நிறுவனத்தின் மும்பைப் பிரதிநிதி ஞானேஷ்வர் ராவ். இந்தத் துறையில் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குமேல் அனுபவஸ்தர். இப்படியெல்லாம் புலம்புவதில் கொஞ்சமும் அர்த்தமில்லை என்று அவருக்கும் நன்றாகத் தெரியும். காசு கொடுக்கிறவன் கை எப்போதும் உயரத்தில்தான் இருக்கும். வாங்கிக்கொள்கிறவர்கள் அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சு விடுவதில் என்ன பிரயோஜனம்?
‘எல்லாம் பக்காவாச் செஞ்சுடலாம் சார்’ என்றான் அரவிந்தன். ‘ஒண்ணும் பெரிய கஷ்டமில்லை. ஆனா, உடனடியா முடியாது. கொஞ்ச நாளாவும்-ன்னு சொல்லி டைம் வாங்கிக் கொடுங்க’
‘இனிமே என்னால அவங்ககிட்டே பேசமுடியாது அரவிந்தன்’ என்றார் அவர். ‘வேணும்-ன்னா நீங்களே பேசிக்குங்க. இல்லாட்டி நீங்க உடனேக் கிளம்பி பெங்களூர் போயிடுங்க. இவனுங்க எக்கேடோ கெட்டுப்போகட்டும்!’
அவனை நேருக்கு நேர் பார்த்துப் பேசிய ஞானேஷ்வரைக் கண்ணிமைக்காமல் முறைத்தான் அரவிந்தன். அவருடைய கோபமும் குத்தலான பேச்சும் தன்மீது எறியப்படுவதுதான் என்பது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.
ஏனெனில், இப்படி அலட்சியமாகத் தூக்கி வீசுமளவு இந்த கஸ்டமர் சாதாரணமானவனில்லை. அரவிந்தனுடைய நிறுவனத்தின் பெரும்பகுதி வருமானம் இந்த ஒற்றை வாடிக்கையாளரிடமிருந்துதான் வருகிறது. ஆகவே அவன் தலைக்குமேல் ஏறிக் குதித்தாலும் ‘நல்லா அருமையாக் குதிக்கறீங்க சார், பரத நாட்டியம் கத்துகிட்டிருக்கீங்களா?’ என்றுதான் தாழ்ந்து பணிந்து வணங்கிடவேண்டும்.
ஆனால் அரவிந்தன் அப்படிக் குழையாமல் ’என் வேலை முடிந்தது. நான் ஊருக்குப் போகிறேன்’ என்று துடிப்பது ஞானேஷ்வருக்கு எரிச்சல். அதை நேரடியாகச் சொல்லமுடியாமல் வேறு யாரையோ திட்டுவதுபோல் அவனுடைய அவசரத்தின் பின்விளைவுகளைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார்.
அரவிந்தன் மௌனமாகத் தன் கணினியில் மூழ்கியிருந்தான். எப்படியும் இன்றைக்கு ஊருக்குப் போகமுடியாது என்று நிச்சயமாகத் தெரிந்துவிட்டபிறகு ஞானேஷ்வரின் கோபமோ வேறெதுவுமோ அவனுக்கு முக்கியமாகப் படவில்லை.
’நிஜமாகவே நான் இப்போது சொல்லாமல் கொள்ளாமல் பெங்களூர் கிளம்பிப் போய்விட்டால் என்ன செய்வார்கள்?’ என்று யோசித்தான் அரவிந்தன். செல்வியின் மலர்ந்த முகம்தான் சட்டென்று நினைவுக்கு வந்தது.
ஆனால், செல்வியைத்தவிர வேறு யார் முகமும் மலராது. ‘அங்கே உனக்கு என்ன குறைச்சல்? இன்னும் நாலு நாள் கூடுதலாகத் தங்குவதில் என்ன பிரச்சனை? நாங்கள்தான் நல்ல ஸ்டார் ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்துக் கூடவே சாப்பாடு, மற்ற எல்லா வசதிகளுக்கும் காசு கொடுக்கிறோமே’ என்று அலறுவார்கள், அவனுடைய அவசரத்தைப் பொறுப்பற்ற செயல் என்று வர்ணித்து நடவடிக்கை எடுப்பார்கள். மறுபடியும் வேலை தேடவேண்டியிருக்குமோ என்னவோ.
பிரச்னை அந்த அளவுக்குத் தீவிரமாகாவிட்டாலும் இப்போதே அதற்குத் தயாராகிக்கொள்வது நல்லது என்று நினைத்தான் அரவிந்தன். இப்படி அடிக்கடி ஊர் சுற்றவேண்டிய அவசியமில்லாமல் வேறொரு நல்ல வேலையாகப் பார்த்துக்கொண்டால்தான் பரவாயில்லை.
ஆனால், அப்படியொரு உத்தமமான நல்ல வேலை எங்காவது இருக்கிறதா? அப்படியே இருந்தாலும், இப்போது வருகிற சம்பளம் கிடைக்குமா? மீசையில் ஒட்டாத சவுகர்யமான கூழை யார் தயாரிக்கிறார்கள்?
அரவிந்தனுக்குப் பசித்தது. காலையில் அவசரமாகக் கிளம்பிவந்தபிறகு உள் பேச்சுவார்த்தை, வெளிப் பேச்சுவார்த்தை என்று நேரம் ஓடிவிட்டது. மீட்டிங்கில் கொஞ்சூண்டு பிஸ்கட்டும் கேவலமான காஃபியும் குடித்ததுபோக வேறெதற்கும் நேரமிருக்கவில்லை. வயிறு ஆக்ரோஷமாகப் பொருமிக்கொண்டிருக்கிறது.
சட்டென்று எழுந்த அரவிந்தன் கணினியைப் பூட்டிக்கொண்டு கிளம்பினான். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஞானேஷ்வரிடம் சொல்லிக்கொள்ளவேண்டும் என்றுகூட தோன்றவில்லை.
‘எங்கே போறீங்க அரவிந்தன்?’ அவன் பத்தடி தூரம் நடப்பதற்குள் அவரே கேட்டுவிட்டார்.
அரவிந்தன் தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தபோது ஞானேஷ்வருடைய முகத்தில் கொஞ்சமும் கோபம் இல்லை. ஆனால் ஏதோ குறுகுறுப்பு தெரிந்தது. இப்படி திடுதிப்பென்று எழுந்ததும் அவன் பெங்களூரை நோக்கி ஓடக் கிளம்பிவிட்டான் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ.
‘சாப்பாடு’ என்பதுபோல் கை விரல்களைக் குவித்து பாவனையாக வாயில் திணித்துக் காண்பித்தான் அரவிந்தன் ‘பத்து நிமிஷத்தில வந்துடறேன்.’
‘கொஞ்சம் பொறுங்க. நானும் வர்றேன்’. அவரும் கணினியைப் பூட்டிவிட்டு எழுந்துகொண்டார். இருவரும் பேசிக்கொள்ளாமல் மௌனமாக நடந்தார்கள்.
அந்த அலுவலகத்தின் ஏழாவது மாடியிலேயே ஒரு சாப்பாட்டுக் கூடம் இருந்தது. ஆனால் இப்போது உணவு நேரம் இல்லை என்பதால் வெறும் தண்ணீரும் உருளைக் கிழங்கு சிப்ஸும்தான் கிடைக்கும்.
ஆனாலும் இந்த ஊரில் அநியாயத்துக்கு உருளைக் கிழங்கு தின்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டான் அரவிந்தன். பரோட்டாவில் உருளைக் கிழங்கு, தோசையில் உருளைக் கிழங்கு, பானி பூரி, பேல் பூரி என்று எதைத் தின்றாலும் உருளைக் கிழங்கு, போதாக்குறைக்கு அதிலேயே போண்டா செய்து அதைப் பிளந்த ரொட்டித் துண்டுகளுக்கு நடுவே வைத்துச் சாப்பிடுகிறார்கள்.
‘எங்கே போகலாம்?’ ஞானேஷ்வரின் குரலில் கலைந்த அரவிந்தன் ‘எனக்குப் பசிக்கிறது’ என்றான் நேரடியாக.
‘பம்பாய்ல வேர்க்கடலை ரொம்ப விசேஷம். நல்லாப் பெரிசு பெரிசாக் கடலை, மொறுமொறுன்னு அருமையா இருக்கும். நம்ம ஊர்லயெல்லாம் அப்படிப் பார்க்கவேமுடியாது!’ என்றார் அவர். ‘இப்போ நாம கொஞ்சம் கடலை வாங்கிக் கொறிச்சுகிட்டே நடப்போம். இந்தத் தெரு முனையில ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு.’
‘ஓக்கே’ என்று தோள்களைக் குலுக்கினான் அரவிந்தன். திடீரென்று அவனுக்குச் சாப்பிடுகிற ஆர்வம் குறைந்திருந்தது. ஆனாலும் பசித்தது.
பேருந்து நிறுத்தத்தை ஒட்டினாற்போல் பெரிய குடையொன்றை விரித்து அதன்கீழே ஒருவன் வேர்க்கடலை, பட்டாணிக் கடலை, பொட்டுக்கடலை என்று நிறைத்து வைத்திருந்தான். அவனிடம் ஐந்து ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கினார் ஞானேஷ்வர். ஒரு சிறிய குடுவையில் கடலையை எடுத்து அதை உள்ளங்கையில் கொட்டித் தேய்த்துத் தோல் நீக்கிக் கொடுத்தான் கடைக்காரன். காகிதக் கூம்புகளில் ஆளுக்குக் கொஞ்சமாகக் கடலையைப் பிரித்துக்கொண்டு நடந்தார்கள்.
உண்மையிலேயே கடலை ரொம்ப ருசியாக இருந்தது. நூறு ரூபாய்க்கு அவனிடமே கடலை வாங்கித் தின்று பசியாறலாம் என்று தோன்றியது அரவிந்தனுக்கு.
அந்தக் கடைக்காரன் நூறு ரூபாய்க் கடலைகளுக்கும் தோல் நீக்குவதற்கு எவ்வளவு நேரமாகும் என்று அரவிந்தன் யோசித்தபோது ஞானேஷ்வர் குறிப்பிட்ட உணவகம் வந்துவிட்டது.
‘டைட்டானிக்’ என்று நீல வண்ணத்தில் பெயர் அறிவித்த அந்தக் கடைக்குள் நுழைந்து இடம் தேடி அமர்ந்தார்கள். சூழலுக்குப் பொருத்தமில்லாமல் ஜில்லென்று தண்ணீர் கொண்டுவந்து வைத்த வெள்ளை உடைப் பணியாளன் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று விசாரித்துக்கொண்டு விலகினான்.
‘சொல்லுங்க, அரவிந்தன், உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை?’ நேரடியாக விஷயத்துக்கு வந்தார் ஞானேஷ்வர். இந்தக் கேள்வியை அவர் கேட்ட தோரணையையும் அவருடைய குறுந்தாடியையும் இணைத்துப் பார்க்கும்போது அவர் ஒரு மன நோய் மருத்துவர்போல் தோன்றினார் அரவிந்தனுக்கு. அவர்முன்னே ஒரு நீண்ட படுக்கையில் தான் படுத்திருப்பதுபோலவும், அவர் அவனை ஹிப்னாடிஸத்துக்கு ஆளாக்கி அவனுடைய எல்லா ஞாபகங்களையும் பிரித்தெடுப்பதுபோலவும் கற்பனை தோன்றியது.
ஒவ்வொரு ஞாபகமாக வெளியிலெடுத்துப் பக்கத்திலிருக்கிற குப்பைத் தொட்டியில் போடுகிறார் அவர். சில விநாடிகளுக்குள் அது முழுவதுமாக நிரம்பிவிடுகிறது.
‘ச்சை’ என்று அலுத்துக்கொள்கிறார் அவர். குப்பைத் தொட்டியினுள் ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டு ‘எல்லாமே வீட்டு ஞாபகமா இருக்கு’ என்கிறார். ‘இவன் என்னத்துக்கு பம்பாய்க்கு வந்தான்? ஆஃபீஸ் வேலை பார்க்கிறதுக்கா? இல்லை எப்பவும் வீட்டையே நினைச்சுகிட்டிருக்கிறதுக்கா?’
இப்படிச் சொல்லிவிட்டு அவர் மீண்டும் அவனுக்குள் கையை நுழைத்து வேறொரு ஞாபகத்தை எடுக்கிரார். அது என்ன என்று அவர் பார்ப்பதற்குள் அவன் ஆவேசமாக அலறுகிறான். ‘ப்ளீஸ், ப்ளீஸ், அந்த ஒண்ணைமட்டும் எடுக்காதீங்க. வாணாம்!’
அவன் கத்துவதைப் பார்த்ததும் நிதானமானதொரு வில்லன் சிரிப்பை வெளிப்படுத்துகிறார் ஞானேஷ்வர். இதற்காகத்தானே காத்திருந்தேன் என்பதுபோல் அவருடைய நடவடிக்கை இருக்கிறது. இப்போது கையிலெடுத்த ஞாபகத்தைக் குப்பைத் தொட்டியில் போடாமல் மேஜைமீது வைத்து கூரான கத்தியால் குத்திக் கிழிக்கிறார்.
அரவிந்தன் மேலும் அதிக ஆவேசத்துடன் கத்துகிறான். ஆனால் அவனுடைய கைகளை யாரோ கட்டிப்போட்டதுபோல் செயலற்றிருக்கிறான். ஞானேஷ்வரின் கொலை நடவடிக்கையைப் பார்த்துப் பார்த்து இன்னும் இன்னும் சத்தமாகக் கத்துவதுமட்டுமே அவனால் முடிகிறது.
மேஜையின்மீது கச்சாமுச்சாவென்று கிழிந்து கிடக்கும் அவனது ஞாபகத்தை முள் கரண்டியால் குத்தித் தூக்கிச் சுவைக்கிறார் ஞானேஷ்வர்.
‘என்ன அரவிந்தன்? அடிக்கடி இப்படி திடீர்ன்னு மௌனமாகிடறீங்க?’ ஞானேஷ்வர் சிரிப்புடன் கேட்க, சட்டென்று கற்பனை கலைந்தான் அரவிந்தன். எதிரே குறுந்தாடி ஞானேஷ்வர் வெண்ணெய் தடவிய ரொட்டியைத் துண்டாக்கிச் சென்னா மசாலாவில் தோய்த்துத் தின்றுகொண்டிருந்தார்.
‘ஒ-ஒண்ணுமில்லை’ லேசான வெட்கப் புன்னகையுடன் சொன்னான் அரவிந்தன்.
‘அப்பாடா, இன்னிக்கு தேதிக்கு முதல்வாட்டி சிரிக்கறீங்க’ என்று பெரிதாகச் சிரித்தார் ஞானேஷ்வர். ‘அரவிந்தன், கொஞ்ச நேரம் முன்னாடி நீங்களும் நானும் ஒருத்தரையொருத்தர் ஜென்ம விரோதிங்கமாதிரி முறைச்சுகிட்டோமே, அது நிஜமா? இல்லை, இப்போ சிரிச்சுப் பேசிகிட்டிருக்கோமே, இது நிஜமா?’
அரவிந்தன் பதில் பேசாமல் சாப்பாட்டுத் தட்டைப் பார்க்கக் குனிந்துகொண்டான்.
‘கமான் அர்விந்தன், இந்தமாதிரி கேள்விங்களைச் சந்திக்கத் தயங்கவேகூடாது. அப்புறம் நாம என்ன தப்பு செய்யறோம்-ன்னே நமக்குத் தெரியாமபோயிடும்’ அவன் தோளில் தட்டிச் சொன்னார் ஞானேஷ்வர்.
அவர் சொல்வதை ஏற்பதுபோல் சங்கடமான புன்னகை ஒன்றைச் செய்தான் அரவிந்தன். ‘விடுங்க, அப்போ ஏதோ கோவம், இப்போ சரியாகிடுச்சில்ல?’ என்றான் தொடர்ந்து.
‘இல்லை அரவிந்தன். இன்னும் சரியாகலை’ என்றார் அவர். ‘இப்போ உங்களுக்கு பெங்களூர் திரும்பணும்ன்னு ஆசை. ஆனா எனக்கு, நீங்க இங்கயே இன்னும் ரெண்டு மூணு நாள் தங்கி பாக்கியிருக்கிற வேலையையெல்லாம் முடிச்சுட்டுதான் போகணும்-ன்னு விருப்பம். இந்த ரெண்டு விருப்பத்தில ஏதாவது ஒண்ணுதான் நடக்கமுடியும். இல்லையா?’
அரவிந்தன் சம்மதமாகத் தலையசைக்கும்வரை மௌனமாகக் காத்திருந்தார் அவர். பின்னர் கோபமில்லாத குரலில் ‘அதனாலதான் கேட்கறேன், நீங்க இன்னும் கொஞ்ச நாள் இங்கயே தங்கறதில என்ன பிரச்சனை?’ என்றார்.
இப்போதும் அரவிந்தன் பதில் சொல்லத் தயங்கினான். பதில் தொண்டைக்குழியில் அடைத்துக்கொண்டு காத்திருந்தது. ஆனால் அதை நேரடியாகச் சொன்னால் ‘உடனே அம்மாவைப் பார்க்கணும்ம்ம்ம்ம்ம்’ என்று கதறியழுகிற எல். கே. ஜி. பள்ளிப் பையனைப்போல் உணரப்பட்டுவிடுவோமோ என்று அவனுக்குத் தயக்கமாக இருந்தது.
அவனுடைய தயக்கத்தின் காரணம் ஞானேஷ்வருக்குப் புரிந்ததோ, இல்லையோ. அவர் அவனுடைய பதிலுக்காகக் காத்திருந்தார். ‘எதுவானாலும் தயங்காம சொல்லுங்க அரவிந்தன்’ என்று அவனை உற்சாகப்படுத்தினார். ‘நான் உங்களோட பாஸ் இல்லை. ஸோ, நீங்க என் பேச்சைக் கேட்டே ஆகணும்-ன்னு எந்த அவசியமும் இல்லை. வெளிப்படையாப் பேசலாம்.’
மேலும் சிறிது நேரம் யோசித்தபின் அரவிந்தன் தனது வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசினான். ‘ஞானேஷ்வர், பொதுவா எந்த வேலையானாலும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்தான் வேலை நேரம்ன்னு சொல்வாங்க. ஆனா நம்ம துறையில அப்படி இல்லை. அந்த எட்டு பத்தாகறதும், பத்து பன்னிரண்டாகறதும் சகஜம்’ என்று சொல்லிவிட்டு மூச்சை நன்றாக உள்ளிழுத்துக்கொண்டு அழுத்தமாகச் சொன்னான். ‘இப்போ அந்தப் பத்தும் பன்னிரண்டும் போய் இருபத்து நாலாகிடுச்சு. அது எனக்குப் பிடிக்கலை. ஏன்னா ஆஃபீஸுக்கு வெளியேயும் எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. அதுக்கும் நான் நேரம் ஒதுக்கவேண்டியிருக்கு.’
‘வெல் ஸெட்’ என்றார் ஞானேஷ்வர். ‘மனசிலிருக்கிறதை பளிச்சுன்னு சொல்லிட்டீங்க அரவிந்தன். எனக்கு அது ரொம்பப் பிடிச்சிருக்கு’ என்றார்.
அதன்பிறகும் அவர் ஏதாவது பேசுவார் என்று அரவிந்தன் எதிர்பார்த்துக்கொண்டிருக்க ஞானேஷ்வர் மும்முரமாகச் சாப்பிடத் தொடங்கிவிட்டார். அரவிந்தனும் தயக்கத்துடன் சாப்பாட்டுக்குத் திரும்பினான்.
சாப்பிட்டு முடித்ததும் இருவருக்கும் இனிப்பு லஸ்ஸி வந்தது. ‘வாவ், எனக்கு லஸ்ஸி ரொம்பப் பிடிக்கும்’ என்றபடி ஸ்ட்ராவை லஸ்ஸியில் நனைத்து வெளியிலெடுத்து நாக்கில் விட்டுச் சுவைத்த ஞானேஷ்வர் ‘க்ரேட்’ என்று சப்புக்கொட்டினார்.
மோரில் உப்புக்கு பதிலாக இனிப்பைக் கரைத்ததுபோலிருக்கும் லஸ்ஸி அரவிந்தனுக்குப் பிடிக்காது. ஆனால் இங்கே பழக்கமாகிவிட்டது. அவனும் மௌனமாகக் குடிக்க ஆரம்பித்தான்.
கோப்பையில் பாதியை காலி செய்தபின் திடீரென்று நினைத்துக்கொண்டாற்போல் ‘அரவிந்தன், குடும்பத்துக்காகவும் நேரம் ஒதுக்கணும்ன்னு நீங்க மனப்பூர்வமா நினைக்கிறது ரொம்ப நல்ல விஷயம்’ என்றார் ஞானேஷ்வர்.
அரவிந்தனுக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது. அதை எதிர்பார்த்தவர்போல் ஞானேஷ்வரும் சிரித்தார். அந்தக் கலகலப்பு ஓய்ந்தபின் ‘அடிக்கடி இந்தமாதிரி ட்ராவல் பண்ணுவீங்களா?’ என்றார்.
இதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் சட்டைப் பையிலிருந்து நீல வண்ண அட்டையொன்றை எடுத்துக் காண்பித்தான் அரவிந்தன். அடிக்கடி விமானப் பயணம் செய்கிறவர்களுக்கான சலுகை அடையாள அட்டை அது.
அந்த அட்டையை ஆவலோடு அவனிடமிருந்து வாங்கிப் பார்த்தார் ஞானேஷ்வர். ‘சில்வர் கார்ட்’ என்று சத்தமாகச் சொன்னவர், எதற்காகவோ மெல்லச் சிரித்துவிட்டு அவருடைய பர்ஸிலிருந்து அதேபோன்ற அட்டையொன்றை எடுத்துக் காண்பித்தார்.
இப்போது அரவிந்தன் வாய் விட்டுச் சிரித்தான். ‘நீங்களும் என்னைமாதிரிதானா?’
‘உங்களைவிட மோசம்’ என்றார் ஞானேஷ்வர். ‘மாசத்தில குறைஞ்சபட்சம் இருபத்தஞ்சு நாள் வெளியூர்ப் பயணம்தான். இன்னிக்குதான் அதிசயமா உள்ளூர்ல இருக்கேன்’ என்று சிரித்தார். ‘இதுக்காகவே என் பொண்டாட்டி என்னை டைவர்ஸ் பண்ணப்போறேன்னு பதினஞ்சு வருஷமா சொல்லிகிட்டிருக்கா!’
அவர் நிஜமாகதான் சொல்கிறாரா என்பதுபோல் திகைப்புடன் ஞானேஷ்வரைப் பார்த்தான் அரவிந்தன். ‘பயப்படாதீங்க, அவளாலயும் அது முடியாது. உங்க வொய்ஃபாலயும் முடியாது’ என்றார் ஞானேஷ்வர். ‘ஏன்னா, அவங்க நம்மைவிட புத்திசாலிங்க.’
அரவிந்தன் மௌனமாகத் தலை கவிழ்ந்துகொள்ள அதன்பிறகு ஞானேஷ்வரின் குரல் எங்கோ அசரீரிபோல் கேட்டுக்கொண்டிருந்தது.
கையிலிருந்த பயண அட்டையை ஒருமுறை எச்சரிப்பதுபோல் ஆட்டிக் காண்பித்த ஞானேஷ்வர் ‘இதெல்லாம் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்ததுக்கு நாம கொடுக்கிற விலை. எதிர்காலத்தை நினைச்சு நினைச்சு நிகழ்காலத்தை எரிச்சுக்கற முட்டாள்தனம்தான் இன்னிக்குப் புத்திசாலித்தனம், அது உங்களுக்குப் புரியுதோ இல்லையோ, உங்க மனைவிக்குக் கண்டிப்பாப் புரியும்’ என்றபடி எழுந்துகொண்டார். ‘இதுக்குமேல நான் உங்களை வற்புறுத்தினா நல்லாயிருக்காது அரவிந்தன். இனிமே இந்த ப்ராஜெக்ட் போனாப் போகட்டும்ன்னு விட்டுட்டுக் கிளம்பறதும், இருந்து முடிச்சுட்டுப் போறதும் உங்க இஷ்டம்! நீங்க எந்த முடிவை எடுத்தாலும் எனக்கு சம்மதம்தான்.’
பில்லைக் கையிலெடுத்துக்கொண்டு கதவுப்பக்கமாக நகர்ந்த ஞானேஷ்வர். ‘ஆனா ஒண்ணு, நீங்க என்ன முடிவெடுக்கப்போறீங்க-ன்னு எனக்கு இப்பவே தெரியும்’ என்றபடி திரும்பினார். ‘என்னதான் ஊருக்குத் திரும்பணும்ன்னு உங்க மனசு துடிதுடிச்சாலும், தேவைப்பட்டதைவிட அதிகமாகவே பம்பாய்ல தங்கியாச்சுன்னு நீங்க ஆதங்கப்பட்டாலும், இதையெல்லாம் இப்படியே விட்டுட்டுப் போகிறதுக்கு உங்களால கண்டிப்பா முடியாது. அதுதான் நம்ம பலவீனம்!’ என்று சொல்லிச் சிரித்தபோது அவருடைய சிரிப்பைக் கல்லெறிந்து உடைத்துவிடுகிற ஆவேசம் கொண்டான் அரவிந்தன்.
(தொடரும்)
***
என். சொக்கன் …
21 06 2011
கார்காலம் – 7
Posted June 13, 2011
on:- In: கார்காலம் | Fiction | Thodarkathai | Uncategorized
- 7 Comments
முன்கதை
7
அலாரம் பலமாக ஒலித்து அவனை எழுப்பியபோது மணி எட்டரை.
ஆறரைக்கே அலாரம் வைத்திருந்தான். ஆனால் ராத்திரி தூக்கம் வராமல் நெடுநேரம் புரண்டு கொண்டிருந்ததால் ஒருவழியாகக் கண்களை மூடி நித்திரையில் ஆழ்ந்த மறுவிநாடியே அந்த அலாரம் அலறினாற்போலிருந்தது.
ஆகவே பாதி சலிப்பு மீதி எரிச்சலுடன் புரண்டு படுத்த அரவிந்தன் ஆறரை மணி அலாரத்தை ஏழு மணிக்கு மாற்றிவைக்க எண்ணினான். ஆனால் தூக்கக் கலக்கத்தில் எட்டரைக்கு மாற்றிவிட்டான்போல.
பதற்றத்துடன் எழுந்துகொண்டான். இனிமேல் பல் தேய்த்து முகச்சவரம் முடித்துக் குளித்துச் சாப்பிட்டுத் தயாராவதற்குள் மணி பத்தைத் தாண்டிவிடும்.
அலுவலகத்துக்குச் சீக்கிரமாகப் போயாகவேண்டும் என்று கட்டாயமெல்லாம் எதுவும் இல்லை. ஆனால் வெளியூரிலிருந்து இங்கே வந்து தங்கியிருக்கும்போது நேரத்தைக் கொஞ்சமும் வீணடிக்கக்கூடாது என்பது பாலபாடம். ஒரே வேகத்தில் முழுமூச்சாக உட்கார்ந்து வேலையை முடித்துவிடவேண்டும், சோர்வு ஏற்பட்டுவிட்டால் மீள்வது கஷ்டம்.
ஆனால் வெளியூர்ப் பயணம் என்று எங்காவது கிளம்பும்போதுதான் ஊரில் உள்ள சோம்பலெல்லாம் மொத்தமாக வந்து கவிந்துகொள்கிறது. காலையில் கண் விழிப்பதில் தொடங்கி ராத்திரி தூங்குவதுவரை அவனுடைய நேரம் முழுவதையும் அவனே திட்டமிட்டுக்கொள்ளலாம் என்கிற அதீத சுதந்திரம் கட்டுப்பாடுகளை அவிழ்த்துவிடுகிறது.
தூக்கம், சாப்பாடு, தினசரி நடவடிக்கைகள் என்று இப்படி எல்லாமே ஒழுங்கற்றுத் தடம்புரண்டுவிடுவதால் மனதுக்கும், உடம்புக்கும் ஏற்படுகிற அழுத்தம் அவன்மட்டும் அனுபவிக்கிற அவஸ்தை.
நல்லவேளையாக, அர்த்தமற்ற சவசவ வேலைகளுக்கெல்லாம் அரவிந்தனை யாரும் வெளியூர்ப் பயணம் அனுப்புவதில்லை. ரொம்பச் சவாலான பிரச்சனை ஏற்படும்போதுதான் அவனை அழைக்கிறார்கள். ஆகவே அவற்றைச் சமாளித்து முடுக்கிச் சரி செய்கையில் ஒரு முரட்டுக் குதிரையை அடக்கி மேலேறி ஜெயிக்கிறாற்போலொரு வெறியும் குரூரமான திருப்தியும் உண்டாகிறது.
ஆனால் இந்த முறை அந்த நிம்மதியும் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அரவிந்தனை இங்கே வரவழைத்துவிட்டு, இங்கே வந்தபின் வேறு பல வேலைகளைத் தலையில் கட்டுகிறார்கள். ‘அதான் வந்துட்டியே, இதையும் முடிச்சுக் கொடுத்துட்டுப் போ’ என்று அதட்டுகிறார்கள். ‘கொசுறா இதையும் செஞ்சுகொடேன்’ என்று அல்பமாகக் கெஞ்சுகிறார்கள்.
கணினி நுட்பங்கள் தெரியாதவர்களின் கையில் அது சம்பந்தமான வேலைகள் மாட்டிக்கொள்வதுதான் இந்தத் துறையின் மிகப் பெரிய சோகம். இந்த மேலாளர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லிவிட்டுச் சும்மா இருந்தால் என்னவாம்? ‘இப்படிச் செய்’, ‘அப்படிச் செய்’ என்று அவர்கள் தருகிற பைத்தியக்காரத்தனமான யோசனைகளில் மண்டை காய்கிறது. ‘என்னை என்போக்கில் விடுங்களேன்’, என்று கத்தத் தோன்றுகிறது.
வாடிக்கையாளர்தான் தெய்வம் என்று காந்தியோ நேருவோ சொல்லியிருக்கிறார்கள். இல்லையென்றால் கம்ப்யூட்டரைத் தூக்கி இந்தக் கஷ்டமர்கள் தலையில் போட்டு உடைத்துவிட்டுக் கிளம்பியிருப்பான் அரவிந்தன்.
என்ன செய்வது? பணமெல்லாம் அவர்கள் கையில்தான் மாட்டிக்கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டருக்குச் சம்பந்தப்படாத பெரிய கம்பெனிகள், தொழிலகங்கள்கூட ஒரு வருடத்துக்கு இத்தனை கோடி என்று கணினி சார்ந்த முன்னேற்றங்களுக்கு ஒதுக்கிவிடுகிறார்கள். இந்தப் பெருந்தலைகள் அந்தக் காசைக் கையில் வைத்துக்கொண்டு கேரட் துண்டுபோல் அதை ஆட்டிக் காண்பித்து ‘நீ வர்றியா? உன்னால முடியுமா?’ என்று சிறு கம்பெனிகளை விரட்டுகிறார்கள்.
காசு இருக்கிறது, ஆனால் அதை வைத்துக்கொண்டு இதையெல்லாம் செய்துமுடிக்கவேண்டும் என்கிற திட்டமிடல் இல்லை. ஆளாளுக்குத் தங்கள் மனதில் தோன்றியதையெல்லாம் செய்யக் கேட்கிறார்கள். அவர்கள் சிந்திக்கிற வேகத்துக்கு சாஃப்ட்வேர் எழுதவேண்டும் என்றால் முடியுமா?
பெருமூச்சுடன் எழுந்து பல் தேய்க்கச் சென்றான் அரவிந்தன். எப்படியோ, கடந்த நாலு நாள்களில் அவர்கள் அவன் தலையில் கட்டிய புதிய வேலைகளெல்லாம் ஓரளவு முடித்து ஏறக்கட்டிவிட்டான். சில பெரிய வேலைகளைமட்டும் பெங்களூர் சென்றுதான் செய்யவேண்டும்.
அதற்கும் பெரிய சண்டை நடந்தது. ‘ஏன்? அதையும் இங்கேயே செய்யமுடியாதா?’ என்று கண்ணாடி, குறுந்தாடியோடு பிறந்த ஒரு மேனேஜர் அதட்டினார்.
‘இது தனியாகச் செய்கிற விஷயம் இல்லை ஸார். கொஞ்சம் பெரிய வேலை. சரியாகத் திட்டமிட்டுச் செய்யவேண்டும். ஆகவே குறைந்தது, நாலு பேராவது தேவைப்படும்’ என்றான் அரவிந்தன்.
‘நீயே நாலு நாள் கூடுதலாகத் தங்கி முடித்துவிடேன்’ என்று அதிபுத்திசாலித்தனமாகக் கேட்டார் அவர்.
பக்கத்திலிருந்த கண்ணாடி தம்ளரை எடுத்து அவர்மீது வீசியெறியலாமா என்று ஆத்திரமாக வந்தது அரவிந்தனுக்கு. பத்து மாத கர்ப்பத்துக்குபதிலாக பத்து பெண்களைச் சேர்த்து ஒரே மாதத்தில் குழந்தை பெற்றுவிடமுடியும் என்று நம்புகிறவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?
சில மணி நேர விவாதத்திற்குப்பின் ஒருவழியாக அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது. இன்னும் பதினைந்து நாள்களுக்குள் எல்லா வேலைகளையும் சரியாக முடித்து அனுப்பிவைக்கிறேன் என்று அரவிந்தன் நாகப்பாம்புபோல் தரையில் கொத்திச் சத்தியம் செய்தபிறகுதான் அரைமனதாக நம்பினார்கள்.
அதன்பிறகும், ‘எங்கள் வேலையைக் கெடுக்க வந்த சண்டாளா’ என்பதுபோல்தான் எல்லோரும் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு அவனால் எதுவும் செய்யமுடியாது, செய்தும் பிரயோஜனமில்லை.
ஆகவே அநாவசியமாக அதைப்பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல் இப்போதைக்குக் கையில் மிச்சமிருக்கிற கொசுறு வேலைகளையெல்லாம் இன்றைக்கே முடித்துவிட்டுக் கிளம்பிவிடவேண்டும் என்று திட்டமிட்டிருந்தான் அரவிந்தன். தவறினால் சனி – ஞாயிறு வந்துவிடும்.
இந்தப் புண்ணியவான்கள் வானம் கரைந்து பூமியை நிரப்பினாலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்கமாட்டார்கள். ‘மன்டே பார்த்துக்கலாம்’ என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். அதன்பிறகு அவன் மேலும் இரண்டு நாள்களை இங்கே வெட்டியாகக் கழிக்கவேண்டியிருக்கும்.
‘எப்படியும் இன்றைக்குக் கிளம்பிவிடவேண்டும்’ என்று ஒருமுறை சற்று பலமாகவே முணுமுணுத்துக்கொண்டான் அரவிந்தன். இன்றைக்கும் ஷேவ் செய்யவேண்டுமா என்று தாடையைத் தடவியபோது மெலிதான முள் தாடி உறுத்தியது.
பிரிவை முன்னிட்டுத் தாடிகூட வளர்க்கமுடியாத அலுவல் வாழ்க்கையை நினைத்து வெறுப்பாக இருந்தது அவனுக்கு. யாரோ தினசரி அவனது கன்னத்தைத் தடவிப் பார்த்து ஆடிட் செய்யப்போவதுபோல் மழுங்க மழுங்க சவரம் செய்தாகவேண்டும்.
ஷேவிங் க்ரீமைத் திறந்து கையில் பிதுக்கியவன் பிறகு ஏதோ நினைத்துக்கொண்டாற்போல் மீண்டும் ஒருமுறை தாடையைத் தடவினான். விளக்கைப் போட்டுவிட்டு இடுப்புயரக் கண்ணாடியில் பார்த்தபோது ஒரு நாள் தாடி அப்படியொன்றும் வெளிப்படையாகத் தெரியவில்லை என்று தோன்றியது. அவன் தாடியோடு சென்றாலும் மொட்டையடித்துக்கொண்டு சென்றாலும் இந்தக் கஸ்டமர் அவனைப் பிழிந்தெடுக்கப்போவதுமட்டும் நிச்சயம். அப்புறம் எதற்கு அநாவசியமாக ஒரு கூடுதல் அலங்காரம்?
கையிலிருந்த க்ரீமைக் கழுவித் துண்டில் துடைத்துக்கொண்டான் அரவிந்தன். பக்கத்தில் நெட்டுக்குத்தலாக நின்றிருந்த ஃபோனை எடுத்து ரூம் சர்வீஸை அழைத்து காஃபி சொன்னான்.
எதிர்முனையில் ஒரு பெண் ‘ஃபில்டர் காஃபியா? ப்ரூவா சார்?’, என்றாள் விளம்பரம்போல.
‘ஏதோ ஒண்ணு’ என்றான் அரவிந்தன். இரண்டும் கண்றாவியாகதான் இருக்கப்போகிறது. தூக்கத்தை விரட்டுவதற்குச் சூடாக ஏதாவது உள்ளே இறங்கியாகவேண்டும், பல வருடக் கெட்ட பழக்கம்!
ஆனால் ஹோட்டல் காஃபி, ஆஃபீஸ் காஃபி இரண்டுமே அவனுக்கு ஒத்துக்கொள்வதில்லை. சில உணவகங்களில் கசப்புச் சுவை நாக்கில் தங்கும்படி அற்புதமான காஃபி கொடுப்பார்கள். அதுகூட அவனுக்குப் பிடிப்பதில்லை.
அவனுடைய காஃபி நீர்த்து இருக்கவேண்டும். அதற்காக அதிகப் பால் கலந்து வாடையடித்தாலும் அவனுக்குப் பிடிக்காது. ரொம்பக் கசப்பாகவும் இல்லாமல் தித்திப்பாகவும் இல்லாமல் நடுத்தரமான பதத்தில் சூடாகக் குடிப்பதுதான் விருப்பம்.
இப்படிப்பட்ட காஃபி வெளியே எங்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. பெரும்பாலான ஹோட்டல் காஃபிகளில் நுரை பொங்கும் கசப்பைதான் விநியோகிக்கிறார்கள். அல்லது சும்மா ஒரு கடமைக்குக் காஃபியைத் தொட்டுக்கொண்டு பால் ருசி நேரடியாக நாக்கில் அறைகிறது.
அலுவலகங்களில் கிடைக்கும் எந்திரக் காஃபியில் வேறு பிரச்னை. அந்தக் காஃபி இயந்திரங்களில் திரவப் பால் பயன்படுத்துவதும் பராமரிப்பதும் கஷ்டம் என்பதால் கிலோக்கணக்கில் பால் பவுடரை நிரப்பிவிடுகிறார்கள். ஆகவே, அதீதமாகப் பால் பவுடர் வாடை.
குறிப்பாக, இந்த வடநாட்டவர்களுக்குக் காஃபியில் சுத்தமாக ஆர்வமில்லை. அவர்களுடைய விருப்ப பானம் ‘சாயா’தான். யாரேனும் காஃபி கேட்டால் வேண்டாவெறுப்பாகத் தயாரிப்பதைப்போன்ற ஓர் அலட்சியம் தெரிகிறது.
இப்படிப் பல காரணங்களால், வெளியூருக்கு வரும்போதெல்லாம் வீட்டுக் காஃபிக்கு ஏக்கம் வந்துவிடுகிறது. இங்கே ஒவ்வொருமுறை காஃபி என்று எதையாவது குடிக்கும்போதும் வீட்டில் கிடைக்கிற காஃபியை அதோடு ஒப்பிட்டுப் பார்க்கத்தோன்றுகிறது. இதற்காகவே சீக்கிரம் திரும்பிப்போய்விடவேண்டும் என்று தோன்றுகிறது. உருப்படியாக தினசரி காலை ஒரு காஃபிகூடக் குடிக்கமுடியாதபடி என்ன ரோமத்துக்குச் சம்பாதிக்கவேண்டும்?
அறைக்கதவினடியில் ஒளிந்திருந்த ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வை வெளியிலெடுத்துப் பிரித்தான் அரவிந்தன். மறுவிநாடி அழைப்பு மணியை ஒலித்துக்கொண்டு காஃபி வந்துவிட்டது.
‘குட் மார்னிங் ஸார்’ பவ்யமாகச் சொன்னபடி உள்ளே வந்த பையன் மேஜைமீது ஒரு பெரிய தட்டை வைத்தான். அதன் மத்தியில் காலியான கோப்பையையும் அதனருகில் ஒரு ஃப்ளாஸ்கில் காஃபியையும் வைத்தான். பக்கத்திலேயே சின்ன பிளாஸ்டிக் பெட்டியொன்றில் வெள்ளைச் சர்க்கரை, வெல்லச் சர்க்கரை மற்றும் செயற்கைச் சர்க்கரைப் பொட்டலங்கள்.
ஒரு துண்டுச்சீட்டில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அவன் கிளம்பியபிறகு காஃபியைக் கோப்பையில் ஊற்றி ஒரு பொட்டலம் சர்க்கரையைப் பிரித்துப் போட்டுக்கொண்டான் அரவிந்தன். சிறிய ஸ்பூனால் அதைக் கலக்கியபடி விளையாட்டுப் பகுதியைப் படித்துமுடித்தான்.
அதிசயமாகச் சரியான சூட்டுடனிருந்த காஃபியைக் கையில் எடுத்து உதட்டுக்குக் கொண்டுசென்றபோது அவனது செல்பேசி பலமாக ஒலித்தது. கோப்பையைக் கீழே வைத்துவிட்டுத் தொலைக்காட்சிக்கு அருகே இருந்த செல்பேசியைக் கையில் எடுத்துப் பார்த்தான். உள்ளூரிலிருந்துதான் யாரோ அழைக்கிறார்கள். ‘ஹலோ, அரவிந்தன்’
‘ஹாய் அர்விந்தன், ப்ரவீண் ஹியர்’ எதிர்முனையில் போலி உற்சாகம். ‘ஹவ் ஆர் யு?’
அரவிந்தனுக்கு அந்தக் குரல் கடும் எரிச்சலூட்டியது. அதற்கு நியாயமான காரணம் உண்டு.
இந்தப் ப்ரவீண் என்பவன் அரவிந்தன் இப்போது சென்றாகவேண்டிய அலுவலகத்தின் பெருந்தலைகளில் ஒருவன். அவனைப் பெங்களூருக்குத் திரும்பவிடாமல் மேலும் மேலும் புதிய வேலைகளைச் சுமத்திக்கொண்டிருக்கிற அயோக்கியக் கூட்டத்தின் பிரதான தலைவன்.
‘ஹாய் ப்ரவீண், ஹவ் ஆர் யூ?’, என்று போலிக் குழைவோடு விசாரித்தபோது அரவிந்தனுக்கே அவனது குரல் எரிச்சலூட்டியது. என்னத்துக்கு வெட்டியாக ஒரு ‘ஹவ் ஆர் யூ’? நேற்று மாலை பார்த்த ஜந்து, இன்று காலைக்குள் என்ன பெரிதாக ஆகியிருக்கப்போகிறது? சம்பிரதாயமாம், மண்ணாங்கட்டி!
‘ஐம் ஃபைன்’ என்ற ப்ரவீண், பதிலுக்குக் காத்திருக்காமல் ‘இன்னிக்குக் காலையில ஒரு மேனேஜ்மென்ட் மீட்டிங் இருக்கு’ என்றான் ஹிந்தியில்.
‘அப்படியா? எனக்குத் தெரியாதே!’
‘சொல்ல மறந்துட்டேன்’ அலட்சியமாகச் சொன்னான் அவன். ‘ஒன்பதரைக்கு மீட்டிங், வந்துடுவீங்கதானே?’
மிகுந்த தயக்கத்துடன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் அரவிந்தன். ஏற்கெனவே மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. இனிமேல் குளித்து சாப்பிட்டுக் கிளம்புவதற்குள் கண்டிப்பாக ஒன்பதரைக்குமேலாகிவிடும்.
இப்படிக் கடைசி நேரத்தில் தகவல் சொன்னால் எப்படி வரமுடியும்? ‘வரமுடியாது போடா’ என்று சொல்லிவிடலாமா என்று யோசித்தான் அவன்.
ஆனால், இது கொஞ்சம் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தைத் தள்ளிப்போட்டால் அரவிந்தன் கிளம்புவது இன்னும் தாமதமாகிவிட வாய்ப்புண்டு.
ஆகவே ‘வந்துடறேன் ப்ரவீண்’ என்றான் அரவிந்தன். ‘இன்னும் பதினஞ்சு நிமிஷத்தில அங்கே இருப்பேன்’. வழக்கம்போல் சம்பிரதாயமாக விடைபெற்றுக்கொண்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு குளியலறைக்குள் கிட்டத்தட்ட ஓடினான்.
அவனை முழுமையாகத் துயிலெழுப்பியிருக்கவேண்டிய காஃபி ஆறிக்கிடந்தது.
(தொடரும்)
***
என். சொக்கன் …
13 06 2011
டாட்’டூ’
Posted June 10, 2011
on:- In: Creativity | Kids | Learning | Travel | Uncategorized
- 17 Comments
ஊர் சுற்றித் திரும்பினோம். வழியில் ஒரு பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்கினோம்.
எனக்கு இரண்டு மகள்கள்: நங்கை மற்றும் மங்கை. இருவருக்கும் பிடித்த சாப்பாட்டுப் பண்டம், அடுத்தவர் கையில் இருப்பது. பிடித்த உடை, அடுத்தவர் அணிந்திருப்பது. ஆகவே எதை வாங்கினாலும் அச்சு அசல் ஒரேமாதிரியாக இரண்டு வாங்கிவிடுவேன். மனிதனால் சாத்தியமாகக்கூடிய அதிகபட்ச டெசிபல் * 2 சத்தத்தில் சண்டை ஒன்றைக் கேட்பதைவிட, கொஞ்சம் கூடுதலாகச் செலவழித்துவிடுவது உத்தமம்.
ஆக, இந்தக் கடையில் நான் ரெண்டு பாக்கெட் சிப்ஸ் வாங்கி ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தேன். ரெண்டும் ஒரே கலர், ஒரே எடை, ஒரே சுவை, பாக்கெட் ஓரத்தில் பிசிறு தட்டியிருந்ததுகூட ஒரேமாதிரி இருந்தது. எந்தவிதத்திலும் அவர்கள் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது. நிம்மதி!
நங்கை தனக்குக் கிடைத்த சிப்ஸ் பாக்கெட்டை உடனே பிரித்துச் சாப்பிட ஆரம்பித்துவிட்டாள். மங்கை அதைக் கையில் வைத்து அழகு பார்த்துக்கொண்டிருந்தாள்.
திடீரென்று, நங்கை கையில் ஏதோ சிக்கியது. ‘2’ என்ற எண்ணுக்குக் கண், காது, மூக்கு, கை, கால் வரைந்த ஒரு டாட்டூ.
அதைப் பார்த்ததும் நங்கை குஷியாகிவிட்டாள். ‘நான் ரெண்டாங்கிளாஸ் படிக்கறதால எனக்கு ‘2’ வந்திருக்கு’ என்றாள்.
‘நோ சான்ஸ்’ என்றேன் நான். ‘இது ஏதோ ரேண்டமா வர்றது.’
‘இல்லவே இல்லை. இதெல்லாம் லக்கி(?) டாட்டூ, நாம என்ன க்ளாஸ் படிக்கறோம்-ன்னு தெரிஞ்சுகிட்டுக் கரெக்டா வருமாம், என் ஃப்ரெண்ட் அனன்யா சொல்லியிருக்கா.’
எனக்குச் சிரிப்புதான் வந்தது. கூடவே, ’அவள் நினைப்பது தவறு, நான் சொன்னதுதான் கரெக்ட்’ என்று நிரூபிக்கிற ஈகோவும். மங்கை கையில் பிரிக்கப்படாமல் இருந்த சிப்ஸ் பாக்கெட்டைப் பார்த்தேன். ஒரு நல்ல ஐடியா கிடைத்தது.
‘ஒருவேளை நீ சொல்றது உண்மை-ன்னா, இப்ப மங்கையோட பாக்கெட்ல என்ன டாட்டூ இருக்கும்?’ என்று கேட்டேன்.
நங்கை சில விநாடிகள் யோசித்துவிட்டு. ‘எல்.கே.ஜி. டாட்டூ’ என்றாள்.
அந்த விநாடியில், என் ‘வெற்றி’ உறுதியாகிவிட்டது. ரெண்டாம் நம்பரைக் கார்ட்டூன் ஆக்கலாம், எல்.கே.ஜி.யை ஆக்கமுடியாதே!
பரபரவென்று மங்கை கையில் இருந்த பாக்கெட்டை வாங்கிப் பிரித்தேன். சிப்ஸ்களை ஒதுக்கிவிட்டு டாட்டூவைத் தேடினேன்.
வெற்றி! வெற்றி!! அந்த டாட்டூவில் ‘எல்.கே.ஜி.’ இல்லை. நங்கைக்குக் கிடைத்த அதே ‘2’, அதே கண், காது, மூக்கு, கை, கால்… ‘நீ சொல்றபடி பார்த்தா மங்கையும் ரெண்டாங்கிளாஸ் படிக்கறாளா என்ன? This is not lucky tattoo, pure random choice’ என்றேன்.
நங்கை சில விநாடிகள் யோசித்தாள். ‘இதுவும் லக்கி டாட்டூதான்’ என்றாள் உறுதியான குரலில்.
‘எப்படி?’
‘எனக்கப்புறம் இவ ரெண்டாவது பொண்ணுதானே? அதான் கரெக்டா 2 வந்திருக்கு.’
நீதி: பெண்களோடு பேசி ஜெயிக்கமுடியாது.
***
என். சொக்கன் …
10 06 2011
கார்காலம் – 6
Posted June 7, 2011
on:- In: கார்காலம் | Fiction | Thodarkathai | Uncategorized
- 12 Comments
முன்கதை
6
இத்தனை அழுக்காகவும் ஒழுங்கின்றியும் ஒரு நகரம் இருக்கமுடியுமா? அரவிந்தனால் நம்பவே முடியவில்லை.
பெரிய மழைகூட அவசியமில்லை, சின்னச் சின்ன தூறல்களுக்கே பம்பாயின் தார்ச் சாலைகள் அகலத் திறந்துகொண்டன. சாலையோரம், நடுரோடு, பிளாட்ஃபாரம் என்று வித்தியாசமில்லாமல் எங்கு பார்த்தாலும் சேறும் அழுக்குத் தண்ணீரும்.
பம்பாய் மொத்தமுமே ஒரு பெரிய அழுக்குக் குட்டைபோல்தான் அவனுக்குத் தெரிந்தது. சாலையில் நடப்பதற்கே அருவருப்பாக இருந்தது. எங்கு பார்த்தாலும் அழுத்தமான கறுப்புக் கறை படிந்த சுவர்களும் கூரைகளும் கதவுகளும் நசநசத்த குறுக்கு வீதிகளும் எரிச்சலூட்டின.
பேசாமல் இன்றைக்கும் ஹோட்டல் அறையிலேயே கிடந்திருக்கலாம் என்று தோன்றியது அரவிந்தனுக்கு. வேலை கொஞ்சம் சீக்கிரமாக முடிந்துவிட்டதால் அறைக்குச் சென்று, உடை மாற்றிக்கொண்டு சும்மா நடக்கலாமே என்று வெளியே கிளம்பியது, மழையில் மாட்டிக்கொண்டான்.
இப்போது மழை நின்றுவிட்டது. ஆனால் திரும்பி நடக்கமுடியாதபடி எங்கு பார்த்தாலும் அமீபா அமீபாவாகச் சேற்றுக் குட்டைகள். அவற்றைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் எப்போதும்போன்ற பரபரப்புடன் ஓடுகிற மும்பைவாசிகளைப் பின்பற்ற அவனால் முடியவில்லை. எங்கே கால் வைத்தாலும் வழுக்குகிறது. அழுக்குத் தரையில் தவறி விழுந்துவிடுவோமோ என்று பயமாயிருக்கிறது.
பலவிதமான விநாயகர் சிற்பங்களை விற்றுக்கொண்டிருந்த ஒரு கடையோரத்தில் ஒதுங்கியிருந்த அரவிந்தன் வீதியில் ஆட்டோவோ, டாக்ஸியோ தென்படுகிறதா என்று அங்கிருந்தே எட்டிப்பார்த்தான். ம்ஹும், இத்தனை பரபரப்பாக வியாபாரம் நடந்துகொண்டிருக்கிற தெருவில் நிச்சயமாக வாடகை வண்டிகளை நுழைய விடமாட்டார்கள்.
சிறிது நேரம் காத்திருந்தபின் அந்தக் கடை நிழலிலிருந்து வெளியே வந்தான் அரவிந்தன். சாலையில் எப்போதும்போல் கூட்டம் நிரம்பியிருந்தது. மழைக்குத் தாற்காலிகமாக மூடிய பிளாட்ஃபாரக் கடைகளெல்லாம் ஒன்று மிச்சமில்லாமல் மீண்டும் புத்துயிர் பெற்றாகிவிட்டது.
பெரும்பாலான கடைகள் தரையிலோ அல்லது சின்னஞ்சிறிய மர மேஜையின்மீதோ ஒரு குட்டி ஜமுக்காளத்தை விரித்து, அதில் அடுக்கடுக்காகக் கண்டதையும் நிறைத்திருந்தார்கள். பெரியவர்கள், சிறுவர்களுக்கான ஆடைகள், பள்ளிச் சீருடைகள், காது, மூக்கு, கழுத்து ஆபரணங்கள், கூந்தல் க்ளிப், துணி காய வைக்கிற க்ளிப், நைலான் கயிறு, பொம்மைகள், சீதாப்பழம், மண் விளக்குகள், முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, கல்யாண மொய் எழுதுகிற அலங்காரக் கவர்கள், ஏலக்காய் டீ, மூலிகை மருந்துகள், இன்னும் என்னென்னவோ.
செல்விக்கு எதையாவது வாங்கலாம் என்றுதான் இந்தக் கடைவீதியில் வந்து மாட்டிக்கொண்டிருந்தான் அரவிந்தன். இங்கே தரையெங்கும் சிந்திக்கிடக்கிற அழுக்கைப் பார்த்ததும் அவளுக்கேற்றது எதுவுமே இங்கே கிடைக்கப்போவதில்லை என்று நிச்சயமாகத் தோன்றிவிட்டது.
பொதுவாகவே செல்விக்குப் பரிசுகள் தேர்ந்தெடுப்பது அத்தனை சுலபமான விஷயமில்லை.
‘எனக்கென்ன குறைச்சல்?’ என்பது அவள் அடிக்கடி சொல்கிற வாக்கியம், ‘போதும் போதும்-ன்னு சொல்ற அளவுக்குக் கடவுள் எனக்கு எல்லாமே நல்லதாக் கொடுத்திருக்கான். இதை அப்படியே வெச்சுகிட்டாலே எதேஷ்டம்’ என்பாள் தத்துவஞானிபோல்.
அந்த வார்த்தைகளை அவள் உணர்ந்துதான் சொல்கிறாளா என்று தெரியாது. ஆனால் தனக்கான தனிப்பட்ட தேவைகள் என்று எதுவுமே இல்லை என்பதுபோல்தான் அவள் நடந்துகொண்டாள்.
தீபாவளி, பொங்கல், திருமண நாள் போன்ற விசேஷங்களின்போதுகூட, அரவிந்தனால் அவளுக்குப் பரிசு தர முடிந்ததில்லை. செல்விக்குத் தங்கம் என்றாலே அலர்ஜி. பட்டுச் சேலை தேர்ந்தெடுப்பதானால் ‘இதுக்காக எத்தனை பட்டுப் புழு சாகுது தெரியுமா?’ என்பாள். சரி, சாதாரணச் சேலை பார்க்கலாம் என்றால் ‘இப்போல்லாம் நான் சேலையே கட்றதில்லை!’, என்று பதில் வரும்.
‘ஓகே, நல்லதா ஒரு சுரிதார் வாங்கிக்கோயேன்?’
‘ம்ம், பார்க்கலாம்’ என்று தலையசைப்பாள். ஆனால் எதையும் வாங்கிக்கொள்ளமாட்டாள். அவனாகப் பார்த்து எதையாவது வாங்கிச்சென்றாலும் ‘இதுக்கு இவ்ளோ விலை அதிகம்’ என்பாள் முகத்திலடித்தாற்போல். ‘கண்டபடி செலவு பண்றே நீ !’
‘இருக்கட்டும் செல்வி, கொஞ்சம் காஸ்ட்லியாதான் ஒரு ட்ரெஸ் போடக்கூடாதா?’ கொஞ்சலாகக் கேட்பான் அவன்.
‘அஸ்கு புஸ்கு! சம்பாதிக்கிறது உன் புருஷனா? என் புருஷனா?’, என்று அதற்கும் ஒரு கேலியான பதில் வரும்.
இப்படி அவன் வாங்கித் தந்த, அல்லது வாங்கி வந்த எந்தப் பரிசையும் செல்வி கடைசிவரை வெளிப்படையாக ஏற்று அங்கீகரித்ததே கிடையாது. ஒவ்வொருமுறையும் விலை அதிகம், அல்லது இந்த நிறம் எனக்கு எடுப்பாக இருக்காது, அல்லது இதேமாதிரி டிஸைன் என்னிடம் ஏற்கெனவே இருக்கிறது, அல்லது இது எனக்குப் பொருத்தமாக இல்லை என்றெல்லாம்தான் நொட்டைப் பேச்சு.
உண்மையில் அரவிந்தன் வாங்கிவருவது எதுவானாலும் செல்விக்கு அது பிரியம்தான். பீரோவின் உள் அடுக்கு ஒன்றில் அவன் அவளுக்கு வாங்கித் தந்திருக்கும் பரிசுகள் எல்லாவற்றையும் பத்திரமாகச் சேர்த்துவைத்திருக்கிறாள். எப்போதாவது அதிலிருந்து ஒரு பச்சை சுரிதாரையோ இதய வடிவத்தில் புறாக்கள் பறக்கும் காதணியையோ அவள் எடுத்து அணியும்போது, அதை அவன் கவனிக்கவேண்டும், எப்போது, எந்த சந்தர்ப்பத்தில் அதைப் பரிசளித்தோம் என்று நினைவுகூரவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பாள் செல்வி.
இந்த விஷயத்தில் அரவிந்தன் ஒரு மகா மக்கு. அலுவல் விவகாரங்களில் தொடங்கி அடுத்த வீட்டுப் புதுச் சிநேகிதர்வரை எல்லாவற்றையும் சடார்சடாரென்று மறந்துவிடுவான்.
ஆகவே, அவன் வாங்கிக் கொடுத்த புடவையையோ, அல்லது நகையையோ அணிந்துகொண்டு செல்வி அவன்முன்னே வந்தாலும்கூட, கண்டிப்பாக அவனுக்கு அந்தப் பரிசை நினைவிருக்காது. முகத்தில் எந்த விசேஷ உணர்வையும் காண்பிக்காமல் அவன்பாட்டுக்குத் தனது வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பான். இந்த அலட்சியம், அல்லது கவனக்குறைவு செல்விக்கு அரவிந்தனிடம் பிடிக்காத விஷயங்களில் ஒன்று.
சிறிது நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு ‘இந்த ட்ரெஸ் எப்படி இருக்கு?’ என்று நேரடியாகவே கேட்டுவிடுவாள் அவள். அப்போதுதான் தூக்கத்திலிருந்து விழித்தவன்போல் அவளைப் புதிதாகப் பார்த்துவிட்டு ‘ஓ, பிரமாதம்’ என்பதுபோல் ஏதேனும் சம்பிரதாயமாகச் சொல்வான் அரவிந்தன். ‘ஏது? புதுசா வாங்கினியா?’
அவ்வளவுதான். செல்வியின் முகத்தில் மிளகாய் வெடிக்கத் தொடங்கிவிடும். அவனைக் கண்டபடி திட்டிவிட்டுப் போய்விடுவாள். எதற்காக இந்தக் கோபம் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பான் அரவிந்தன்.
மனத்தில் உண்மையான அன்போடு அந்தப் பரிசைத் தேடித் தேர்ந்தெடுத்திருந்தால் கண்டிப்பாக அது மறக்காது என்பது அவளுடைய கட்சி. சும்மா கடமைக்காகக் கண்ணில் படுகிற எதையாவது வாங்கிப் பரிசளித்துவிடுகிற அலட்சியம் பணக் கொழுப்பின் அடையாளம் என்பாள்.
இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டபிறகு செல்விக்கு எது வாங்குவதானாலும் அதீத கவனத்துடன் இருக்கிறான் அரவிந்தன். ஆடைகள், வீட்டு உபகரணங்கள், நகைகள் என்று வழக்கமான பொருள்கள் எதையும் வாங்குவதில்லை, பொதுவாக வீட்டில் நாம் பயன்படுத்தாத, ஷோ கேஸில் வைத்துப் பாதுகாப்பதுபோன்ற, குறிப்பாக, பார்த்ததும் பரிசுப்பொருள் என்று அடையாளம் தெரிகிறமாதிரியான அலங்கார வஸ்துகளைதான் வாங்கவேண்டும், அதில் ஒரு துளி வித்தியாசம் தெரியவேண்டும், அதன்மீது அன்பையோ அக்கறையையோ நிரந்தரமாக ஏற்றிவைத்துக்கொள்ளமுடிகிற தனித்துவம் வேண்டும், இதையெல்லாம்விட முக்கியமாக, அவள் வற்புறுத்திக் கேட்டால்கூட விலையைச் சொல்லக்கூடாது.
கடந்த அரை மணி நேரமாக, அந்தமாதிரியான ஒரு பரிசைதான் இந்த அழுக்கு வீதிகளில் தேடிக்கொண்டிருக்கிறான் அரவிந்தன். சுற்றிச் சுற்றி அதே சிற்சில பொருள்கள்தான் கண்ணில் படுகின்றன. அச்சில் வார்த்தெடுத்த பொம்மைகள்போல் ஒரேமாதிரியான பரபரப்பு வாழ்க்கையை வாழ்கிற மனிதர்களிடையே இதுபோன்ற புதுமையான விஷயங்களை எதிர்பார்க்கமுடியாதுபோல.
நெடுநேரம் சுற்றியலைந்தபின், வீட்டுக் கதவில் மாட்டுவதுபோன்ற ஓர் அழகிய பிளாஸ்டிக் தோரணத்தைப் பார்த்தான் அரவிந்தன். ஒரு பக்கம் ஸ்வஸ்திக் சின்னம் மறுபக்கம் சமஸ்க்ருத ‘ஓம்’ என்று பார்ப்பதற்கு ஜோராக இருந்தது. நூற்றைம்பது ரூபாயோ என்னவோ விலை, பேரம் பேசினால் இன்னும்கூடக் குறையலாம்.
அதே கடையில் சின்னச் சின்னதாகச் செருப்புகள் விற்றார்கள். நமது உள்ளங்கையில் பாதியளவுகூட நிரம்பாத குட்டியூண்டு செருப்புகள். நிஜச் செருப்பைப்போலவே அதில் வார் தைத்து ஒரு நுணுக்கமான பூ வடிவம்கூட செய்திருந்தார்கள்.
தோரணம் வாங்கலாமா, குட்டிச் செருப்பு வாங்கலாமா என்று அரவிந்தனால் முடிவுசெய்யமுடியவில்லை. இரண்டையும் வாங்கிவிடலாம் என்றால் அவற்றைச் சேர்த்துப் பார்ப்பதில் ஏதோ அபத்தம் தொனித்தது.
கடைக்காரன் முறைத்துப் பார்க்குமளவு நெடுநேரம் யோசித்தபின், அந்தத் தோரணத்தைமட்டும் பரிசுப் பொட்டலமாகக் கட்டச்சொல்லி வாங்கிக்கொண்டான் அரவிந்தன். பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது நன்கு இருட்டியிருந்தது.
உள்ளே இருக்கிற பொருளைவிட அந்தப் பரிசுப் பார்சல் ரொம்ப அழகாக இருந்தது. பிளாஸ்டிக் தோரணத்தை மடித்து ஒரு சிறிய அட்டைப்பெட்டியில் இட்டுச் சுற்றிலும் பளபளப்புக் காகிதம் சுழற்றி சாக்லெட்போல் இருபுறமும் அலங்காரப் பாவாடை விரித்து அற்புதமாகச் செய்திருந்தான் அந்தக் கடைக்காரன். இதற்காகவே அவனுக்குக் கூடுதல் விலை கொடுக்கலாம் என்று தோன்றியது அரவிந்தனுக்கு.
ஆனால், இந்தப் பரிசு செல்விக்குப் பிடிக்குமா என்று அவனால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. பிடிக்கலாம், பிடிக்காமலும்போகலாம். யாருக்குத் தெரியும்?
‘பெண்களுக்குப் பிடிக்கும்படி நடந்துகொள்வது ரொம்பக் கஷ்டம்’ என்று அரவிந்தனுடைய முன்னாள் முதலாளி ஒருவர் அடிக்கடி சொல்வார். ‘ஏன்னா, தங்களுக்கு என்ன பிடிக்கும்-ன்னு அவங்களுக்கே உறுதியாத் தெரியாது. வெதர்மாதிரி அவங்க விருப்பங்களும் அப்பப்ப மாறிகிட்டே இருக்கும்!’
அவர் சும்மா நகைச்சுவையாகச் சொன்னாரா அல்லது, நிஜமாகவே ஆழ்ந்து சிந்தித்துச் சொன்ன தத்துவம்தானா என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு சிறிய / பெரிய கம்பெனிக் கூட்டத்திலும் இந்தப் புளித்த விஷயத்தைச் சலிக்காமல் சொல்லிக்கொண்டிருந்தார் அவர்.
அதன்பின்னர், இணைய அரட்டையில் அறிமுகமான அமெரிக்கத் தோழி ஒருத்தி அரவிந்தனுக்கு ஒரு புதுமையான யோசனை சொன்னாள். ‘உன் மனைவியைப் பிரிஞ்சிருக்கும்போது அடிக்கடி அவளை நினைச்சுப்பியா?’
‘கண்டிப்பா!’
‘நான் கேட்கிறது வெளியூர் போகும்போதுமட்டுமில்லை’ என்று எச்சரித்தாள் அவள். ‘உள்ளூர்லயே, நீ ஆஃபீஸ்ல, செல்வி வீட்லன்னு இருக்கும்போது எப்பவாச்சும் ’அடடா, இப்போ அவ இங்கே இருந்தா நல்லா இருக்குமே’ன்னு யோசிச்சிருக்கியா? உண்மையைச் சொல்லு!’
அரவிந்தன் கொஞ்சம் யோசித்துவிட்டு ‘அடிக்கடி-ன்னு சொல்லமுடியாது. ஆனா அப்பப்போ நினைச்சுப்பேன். உடனே செல்வி இங்கே இருக்கணும்-ன்னெல்லாம் தோணாது. ஆனா அவகிட்டே பேசணும்போல இருக்கும். முடிஞ்சா ஃபோன் செய்வேன்.’
‘நல்ல விஷயம். ஆனா நீ அப்படி ஃபோன் செய்யும்போது அவ எதுனா வேலையில பிஸியா இருக்கலாம். இல்லையா? அப்போ உன்னோட ஃபோன் அழைப்பு அவளுக்கு எரிச்சலூட்டலாம்தானே?’
அவள் எங்கே வருகிறாள் என்று புரியவில்லை. ஆனால் அவளுடைய வாதங்களில் நியாயம் இருப்பது தெரிந்தது. ஆகவே ‘ஆமாம்’, என்று பொறுமையாகப் பதில் தட்டினான் அரவிந்தன். ‘அது சரி, இதெல்லாம் எதுக்கு விசாரிக்கறீங்க?’
‘உன் மனைவி பிறந்த நாளுக்கு ஒரு நல்ல கிஃப்ட் தரணும், அதுக்கு ஒரு ஐடியா கொடு-ன்னு கேட்டியே?’
‘ஆமாம், அதுக்கென்ன இப்போ?’
‘அதுக்காகதான் இதையெல்லாம் விசாரிச்சேன்’ என்றாள் அவள். ‘இனிமே ஆஃபீஸ்லயோ, வெளியவோ இருக்கும்போது செல்வி ஞாபகம் வந்தா, ஃபோனை எடுக்காதே, ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து மேலே தேதி, நேரம் எழுதிக்கோ. அப்புறம் இந்தச் சமயத்தில செல்வியை ஏன் நினைச்சே, எப்படி நினைச்சே, என்ன நினைச்சே, என்ன கற்பனை செஞ்சே-ன்னெல்லாம் எழுதிவெச்சுக்கோ. கூச்சப்படாதே, அநாவசியமாப் பாசாங்கு செய்யாதே, செல்விகிட்டே நேர்ல பேசறதா நினைச்சுகிட்டு உன் மனசில தோணறது எல்லாத்தையும் பளிச்ன்னு எழுதிடு.’
‘அட, இதென்ன புது விளையாட்டா இருக்கு?’ சிரிப்புடன் கேட்டான் அரவிந்தன். ‘இதெல்லாம் என்னத்துக்கு?’
‘மக்கு, இதுதான் நீ செல்விக்குத் தரப்போற பரிசு’ என்றாள் அவள். ‘இப்படி ஒரு வாரத்துக்குத் துண்டு துண்டா நிறைய குறிப்பு எழுதி வை, அப்புறம் அதையெல்லாம் தொகுத்து அவ பர்த்டே அன்னிக்கு அவளுக்குக் கொடு. டெய்லி நீ அவளை எவ்ளோ மிஸ் பண்றே-ன்னு புரிஞ்சுப்பா.’
அவள் சொன்னதைக் கேட்டதும் அரவிந்தனுக்கு நெகிழ்ச்சி வரவில்லை, சிரிப்புதான் அடக்கமாட்டாமல் பொங்கிவந்தது. ‘ஆனாலும் நீங்க அநியாயத்துக்கு ஜோக் அடிக்கறீங்க’ என்று அவளைக் கிண்டலடித்தான். அவள் பதில் பேசவில்லை.
அடுத்து வந்த செல்வியின் பிறந்த நாளைக்கு அரவிந்தன் என்ன பரிசு வாங்கினான் என்று சரியாக நினைவில்லை. ஆனால் அப்போது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றிய அந்தக் குறிப்பெழுதும் யோசனையை ஒருமுறை நிஜமாகவே செயல்படுத்திப் பார்த்திருக்கலாமோ என்று இப்போது தோன்றியது. ஒருவேளை, செல்வி அவனிடம் எதிர்பார்க்கிற பரிசு அதுதானா?
இப்போதும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை. இன்றைக்குத் தொடங்கி, செல்விக்கு அதுபோன்ற நினைவுக் குறிப்புகள் எழுத ஆரம்பித்தால் என்ன?
(தொடரும்)