Archive for August 22nd, 2011
கிறுக்கட்டும்
Posted August 22, 2011
on:- In: Anger | Creativity | Kids | Learning | Uncategorized
- 16 Comments
சமீபத்தில் மங்கையின் பள்ளியில் ‘பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பு’க்குச் சென்றிருந்தோம். அவளுடைய ஆசிரியை ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொன்னார்.
‘இந்த வயசுல குழந்தைகளுக்கு நிறைய கோவம் வரும், நாம அதைப் பெரும்பாலும் கவனிக்கமாட்டோம். ஆனா அவங்க சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட நம்மேல எரிச்சலாவாங்க, கண்டதையும் தூக்கி வீசுவாங்க, எதையாவது போட்டு உடைப்பாங்க, அது வெறும் குறும்பு-ன்னு நாம நினைப்போம், முதுகுல நாலு வைப்போம், அது அவங்களைக் கட்டுப்படுத்தாது, கோபத்தை இன்னும் அதிகமாக்கும்.’
‘அதுக்குப் பதிலா, அவங்களோட கோபத்துக்கு வடிகாலா ஏதாவது செய்யணும், கையில ஒரு பேப்பர், பென்சில் கொடுங்க, இஷ்டப்படி கிறுக்கச் சொல்லுங்க, அதன்மூலம் அவங்களோட கோபம் தானாக் குறையும், நீங்க நம்பமாட்டீங்க, ஆனா இது உண்மை.’
‘கொஞ்ச நாள் கழிச்சு, அதே பேப்பர்ல ஒரு வட்டம் போட்டுக் கொடுங்க, அந்த வட்டத்துக்குள்ள கிறுக்கச் சொல்லுங்க, ஒரு கிறுக்கல்கூட அந்த வட்டத்தை மீறி வெளியே போகக்கூடாதுன்னு சொல்லுங்க. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா அவங்களோட கோவத்தைக்கூட க்ரியேட்டிவிட்டியா மாத்தலாம்.’
யோசித்துப்பார்த்தால், அவர் சொன்னது நிஜம்தான் என்று புரிகிறது – காகிதத்தில் கிறுக்கிக் கோபம் தணிவது குழந்தைகளுக்குமட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பொருந்தும், என்ன, காகிதத்துக்குப் பதில் blog அல்லது twitter அல்லது facebook அல்லது Google Plus அல்லது ஏதோ ஒன்று, பென்சிலுக்குப் பதில் keyboard :>
ஒரே விஷயம், அந்த வட்டத்தை நமக்கு யாரும் போட்டுத்தரமாட்டார்கள். நாமே போட்டுக்கொண்டு நம் எழுத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தால்தான் உண்டு. செய்கிறோமா என்பது நம் சமர்த்து!
***
என். சொக்கன் …
22 08 2011