மனம் போன போக்கில்

தூது (திடீர் தொடர்)

Posted on: October 10, 2011

1

‘நீ யாரையாச்சும் லவ் பண்ணியிருக்கியா கதிரு?’

சுகன்யாவின் அந்தக் கேள்வி கதிரேசனைத் தூங்கவிடாமல் உறுத்திக்கொண்டிருந்தது. எந்தப் பக்கம் திரும்பிப் படுத்தாலும் சினிமாவில் வருவதுபோல் அந்த ஐந்து வார்த்தைகளும் திரும்பத் திரும்பக் கேட்பதுமாதிரி ஓர் உணர்வு.

எதற்காக அப்படிக் கேட்டாள்? எதார்த்தமாகத்தானா? அல்லது ஏதாவது உள்நோக்கம் இருக்குமா? என்னவாக இருக்கும்?

கதிரேசனுக்கும் சுகன்யாவுக்கு பல வருடப் பழக்கம். காலேஜில் நான்கு வருடங்கள் பக்கத்து பெஞ்ச்களில் உட்கார்ந்து படித்தபின்னர் இங்கே பெங்களூரில் மூன்று வருடங்களாக ஒரே கம்பெனியில் குப்பை கொட்டியாகிறது.

இந்த ஏழு வருடங்களில் அவர்கள் போகாத இடமில்லை, பேசாத பேச்சில்லை, இந்த ஒரு விஷயத்தைத்தவிர.

திடீரென்று சுகன்யாவுக்கு ஏன் அவனிடம் காதலைப்பற்றிப் பேசத் தோன்றவேண்டும்? அதுவும் அவள் வீட்டில் மாப்பிள்ளை தேடத் தொடங்கியிருக்கிற நேரம் பார்த்து?

இதற்கான Obvious காரணம் கதிரேசனுக்குப் புரிந்துதான் இருந்தது. ஆனால் அவன் அதைப்பற்றி யோசிக்கக்கூட விரும்பவில்லை.

சரேலென்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான் கதிரேசன். பக்கத்தில் கிடந்த செல்ஃபோனைத் தேடி எடுத்து மணி பார்த்தான். பத்தரை. ‘சுரேஷ் தூங்கியிருப்பானோ?’

தூங்கினால் என்ன? இது தள்ளிப்போடுகிற விஷயம் இல்லை. உடனே பேசியாகவேண்டும்.

சுரேஷின் நம்பரைத் தேடி அழைத்தான் கதிரேசன். மறுமுனையில் ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ ஒலித்தது. சில நிமிடங்கள் கழித்து, ‘ஹலோ.’

‘டேய் சுரேஷ், கதிர் ஹியர்.’

‘என்னடா இந்த நேரத்துல?’

‘உன்னோட ஒரு முக்கியமான மேட்டர் தனியாப் பேசணும்’ என்றான் கதிரேசன். ‘ரொம்ப அர்ஜென்ட்.’

‘கொஞ்சம் பொறு, வெளியே வந்துட்டு கால் பண்றேன்’ என்ற சுரேஷ் இணைப்பைத் துண்டித்தான்.

கல்லூரியில் கதிரேசனின் ரூம்மேட் சுரேஷ். சொந்த ஊர் திருநெல்வேலி. ‘எங்க ஊர் மண்ணுக்கும் தண்ணிக்கும் தனி குணம் உண்டுடா’ என்று பெருமையடித்துக்கொள்கிற ஆள்.

‘அப்புறம் ஏன்டா கோயம்பத்தூருக்குப் படிக்க வந்தே?’

‘நானா வந்தேன்? இங்கேதான் சீட் கிடைச்சுது! நாலே வருஷம், படிப்பை முடிச்சுட்டு எங்க ஊருக்குத் திரும்பிப் போய்டுவேன்.’

சொன்னதுபோலவே, நான்காவது வருடம் கேம்பஸ் இன்டர்வ்யூக்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டான் சுரேஷ். யாராவது விசாரித்தால், ‘இவங்கல்லாம் வேஸ்ட் மச்சி, ஒரு கம்பெனிக்குக்கூட திருநெல்வேலில ப்ராஞ்ச் இல்லையாம்.’

இத்தனைக்கும் ஊரில் சுரேஷ் குடும்பத்துக்கென்று சொந்தமாக நிலமோ, பூர்வீகச் சொத்தோ, பெரிய கம்பெனி, தொழிற்சாலையோ எதுவும் இல்லை. இவன்தான் தலையெடுத்துக் குடும்பத்தை முன்னேற்றவேண்டும்.

எங்கள் வகுப்பில் சுரேஷ்தான் டாப்பர். அவனுடைய மார்க்குக்கும் வசீகரமான முகத்துக்கும் நுனிநாக்கு ஆங்கிலத்துக்கும் எந்தக் கம்பெனியும் கொத்திக்கொண்டு ஓடியிருக்கும். சராசரி மாணவர்களெல்லாம் கிடைத்த வேலையில் தொற்றிக்கொண்டு பெங்களூர், மும்பை, சென்னை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என்று எங்கு வேண்டுமானாலும் ஓடிப் பணம் தேடத் தயாராகிக்கொண்டிருக்கும்போது இவன்மட்டும் திருநெல்வேலிக்குதான் திரும்பப் போவேன் என்று ஒற்றைக்காலில் நின்றான்.

இறுதிப் பரீட்சை முடிந்த தினத்தன்று இரவு. கதிரேசனும் சுரேஷும் பெட்டி படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு ஒன்றாகக் கிளம்பினார்கள். இருவருடைய ரயில்களும் அரை மணி நேர இடைவெளியில் புறப்பட்டன.

அந்தக் கடைசி நாளன்றுதான் கதிரேசனிடம் சுகன்யாவைப்பற்றிப் பேச ஆரம்பித்தான் சுரேஷ். ‘அவளும் உன் கம்பெனிதானே?’

‘ஆமா, அதுக்கென்ன?’

’நத்திங்’ என்றவன் ஜன்னல் கம்பியின் உதிர்ந்த பெயின்டைச் சற்றே சுரண்டினான். பின்னர் ‘ஒரு விஷயம் சொன்னா கோச்சுக்கமாட்டியே?’ என்றான்.

‘என்னது?’

‘நம்ம சுகன்யா…’ என்ற சுரேஷ் கொஞ்சம் தயங்கினான். எங்கேயோ பார்த்தபடி ‘நானும் அவளும் லவ் பண்றோம்’ என்றான்.

‘சு-சுகன்யாவா?’ கதிரேசனுக்கு அதிர்ச்சியைவிட ஆச்சர்யம்தான் அதிகமாக இருந்தது. ‘நிஜமாவா சொல்றே?’

‘ஆமாண்டா’ என்றான் சுரேஷ். ‘இப்பதான் ஒன்னரை வருஷமா.’

‘அடப்பாவிகளா, நீங்க ரெண்டு பேரும் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன். இப்படி ஒரு பெரிய மேட்டரை மொத்தமா மூடி மறைச்சுட்டீங்களே’ என்று சுரேஷின் தோளில் தட்டினான் கதிரேசன். ‘ஸ்டில், என்னால நம்பமுடியலைடா. நீயாவது பரவாயில்லை, வாயைத் திறந்து சொல்லிட்டே, அந்த சுகன்யா, கடைசிவரைக்கும் கமுக்கமா இருந்துட்டுப் போய்ட்டாளே.’

‘ஆக்சுவல்லி, உன்கிட்ட இதைச் சொல்லக்கூடாதுன்னு அவ என்கிட்ட ப்ராமிஸ் வாங்கியிருக்கா’ என்றான் சுரேஷ்.

‘ஏன்?’

‘தெரியலை, நானும் போன நிமிஷம்வரைக்கும் யோசிச்சுப்பார்த்தேன், உன்கிட்ட சொல்லிடறதுதான் நியாயம்ன்னு தோணிச்சு.’

‘இதுவாவது ஏன்னு சொல்லு.’

‘எங்கயோ பாஷை தெரியாத ஊருக்கு வேலை பார்க்கப் போறா, ஏதாவது பிரச்னைன்னா என்னால ஓடி வரமுடியுமா சொல்லு, அதான் என்னோட ரெப்ரசென்டேடிவ்வா உன்னை அங்கே அனுப்பிவைக்கறேன்’ சுரேஷின் அசட்டுப் புன்னகையைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. ‘கொஞ்சம் பார்த்துக்கடா. நான் இதைச் சொன்னேன்னு அவகிட்ட சொல்லிடாதே.’

‘ஷ்யூர். அவளா இதைப் பத்திப் பேசறவரைக்கும் நான் வாயைத் திறக்கமாட்டேன். ஓகேயா?’

சுரேஷ் பதில் சொல்வதற்குள் ரயில் நீண்ட விசில் அடித்தது. கதிரேசன் பெட்டியில் ஏறிக்கொண்டான். ‘டேக் கேர்-டா, ஊருக்குப் போய் ஃபோன் பண்ணு.’

’ஓகே’ என்ற சுரேஷ் பின்னே நகர்ந்து நின்றுகொண்டான். லேசான புன்னகையுடன் கையசைத்தான். ரயில் புறப்பட்டுவிட்டது.

அதன்பிறகு, இன்றுவரை கதிரேசனும் சுரேஷும் சந்தித்துக்கொள்ளவில்லை. சுரேஷ் திருநெல்வேலியில் சொந்தத் தொழில் தொடங்கியிருப்பதாகவும் நன்கு வசதியாக வாழ்வதாகவும் கேள்விப்பட்டதோடு சரி. அவ்வப்போது ஃபோனில் பேசுவார்கள். ஆனால் ஒருமுறைகூட அவன் சுகன்யாவைப்பற்றிப் பேசியது இல்லை.

சில நேரங்களில், அன்றைக்கு ரயில் பிளாட்ஃபாரத்தில் நின்றபடி அவன் சுகன்யாவைக் காதலிப்பதாகச் சொன்னதுகூடக் கனவுதானோ என்று கதிரேசன் யோசிப்பது உண்டு. அந்த இரண்டு நிமிடத்தைக் கழித்துவிட்டுப் பார்த்தால் இந்த விஷயத்துக்கு வேறு சாட்சிகளே இல்லை.

சுகன்யாவும் சுரேஷைப்பற்றி அவனிடம் வாய் திறக்கவில்லை. அப்படி ஒரு ஜீவன் இருப்பதே தெரியாதவள்போல் தன்னுடைய வேலையில்மட்டும் கவனமாக இருந்தாள். வாரக்கடைசிகளில் சொந்த ஊருக்குப் போய்த் திரும்பினாள். ஒருமுறைகூட சுரேஷைச் சந்தித்ததாகவோ, அவனிடம் ஃபோனில் பேசியதாகவோ பேச்சுவாக்கில்கூடச் சொன்னதில்லை.

ஒருவேளை, சுரேஷுடையது ஒருதலைக்காதலாக இருக்குமோ? இல்லாவிட்டால் சுகன்யா இதைக் கதிரேசனிடம் பிடிவாதமாக மறைக்கவேண்டிய அவசியம் இல்லையே!

மூன்று வருடம் கழித்து, இன்றைக்கு சுகன்யா திடீரென்று காதலைப்பற்றிப் பேசியதும் கதிரேசனுக்குப் பகீரென்றது. இது என்ன விவகாரமோ தெரியவில்லையே, உடனடியாக சுரேஷிடம் பேசியாகவேண்டும்.

மீண்டும் செல்ஃபோனை உயிர்ப்பித்து மணி பார்த்தான் கதிரேசன். பத்து ஐம்பது. சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே வருவதற்கு இவ்வளவு நேரமா?

அதே விநாடியில் ஃபோன் ஒலித்தது. சட்டென்று பச்சைப் பொத்தானை அழுத்தி ‘ஹலோ சுரேஷ்?’ என்றான்.

‘சுரேஷா?’ மறுமுனையில் கேட்டது பெண் குரல். ‘நான் சுகன்யா பேசறேன் கதிரு!’

(தொடரும்)

***

என். சொக்கன் …

10 10 2011

12 Responses to "தூது (திடீர் தொடர்)"

பரவாயில்லை, ஆரம்பம் நல்லா தான் இருக்கு.

எடுத்தவுடனே டாப் கியர்ல கதைய கெளப்பிட்டீங்க. பாராவின் நீலக்காகம் மாதிரி ஆகிட கூடாது. தொடர்ந்து எழுதுங்க சார்.

This is like Bodyguard movie.

ம்… சுவாரசியமாத்தான் ஆரம்பிச்சிருக்கீங்க… தொடர்ந்து படிக்க ஆர்வமா இருக்கோம். தொடருங்க சார்…

ஆரம்பமே நல்லா இருக்கு.அடுத்த அத்யாயம் விரைவில்
எதிர்பார்க்கிறேன்.

கதை நல்லா இருக்கு..

ஆனா.. அது என்ன திடீர் தொடர் ன்னு அடைப்புக் குறிக்குள்ள

//இவன்மட்டும் திருநெல்வேலிக்குதான் திரும்பப் போவேன் என்று ஒற்றைக்காலில் நின்றான்//
இந்தூர்காரனுவளுக்கு இம்புட்டு திமிராண்ணே?

ஆரம்பமே எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. கலக்குங்க…

இப்பத்தான் உங்க ‘அறிவியல் கதைகள்’ (கல்கி பதிப்பகம்) படிக்க ஆரம்பித்தேன்…

nice starting….

//சொந்த ஊர் திருநெல்வேலி. ‘எங்க ஊர் மண்ணுக்கும் தண்ணிக்கும் தனி குணம் உண்டுடா’ என்று பெருமையடித்துக்கொள்கிற ஆள்.//

வாசிக்கி​றேன்.

I am eagerly waiting for the next issue!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

October 2011
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
%d bloggers like this: