Archive for January 2012
ஓர் அப்பாவியின் மீள்வாசிப்பு
Posted January 28, 2012
on:- In: Books | Creativity | Humor | Introduction | Reading | Reviews | Translation | Uncategorized
- 8 Comments
ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘Animal Farm’ (குறு?)நாவலை முதன்முறையாக வாசித்தபோது, எனக்கு அது ஒரு சாதாரணமான கற்பனைக் கதையாகவே தெரிந்தது. சொல்லப்போனால் அதை ஒரு வித்தியாசமான Fairy Tale என்றே நினைத்தேன்.
Fairy Tale சரி, அது என்ன ‘வித்தியாசமான’?
மற்ற தேவதைக் கதைகளைப்போலவே இந்தக் கதையிலும் மிருகங்கள் பேசிக்கொண்டன மனிதர்களை எதிர்த்துச் சண்டை போட்டன, ஹீரோக்களும் வில்லன்களும் இயல்பாக உருவானார்கள், பரவசமான காட்சிகளும் சந்தோஷங்களும் விவரிக்கப்பட்டன.
அதற்கப்புறம்தான் வித்தியாசமே, அதுவரை எல்லாவிதங்களிலும் சமமாக இருந்த மிருகங்களில் சில திடீரென்று மனம் மாறுவதும், பழைய வில்லன்களைப்போல் தங்களுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதும் இவையே மற்றவற்றை அடக்கி ஒடுக்கப் பார்ப்பதும் எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. கதையின் முடிவு தேவதைக் கதைகளைப்போல் சந்தோஷமாக இல்லாமல் துயரமாக இருந்ததும் ஒரு முக்கியமான வேறுபாடு.
ஆனால் இத்தனைக்குப்பிறகும், என்னுடைய மரமண்டைக்கு இந்தக் கதையின் ‘உள்செய்தி’ (பழந்தமிழில் சொல்வதென்றால் ‘இறைச்சிப் பொருள்’) புரியவில்லை. அதை ஒரு கற்பனைக் கதையாகமட்டுமே (ஜார்ஜ் ஆர்வெல்கூட இதனை ‘A Fairy Story’ என்றுதான் குறிப்பிடுகிறார்) எண்ணிப் படித்தேன், முழுமையாக ரசித்தேன்.
(‘Animal Farm’ முதல் பதிப்பின் முன்னட்டை
Image Courtesy : http://en.wikipedia.org/wiki/File:AnimalFarm_1stEd.jpg)
கொஞ்ச நாள் கழித்து ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக இந்தக் கதையைப் பற்றிப் பேச்சு வந்தது. ‘அட்டகாசமான ஃபான்டஸி சார்’ என்றேன் நான் பரவசமாக.
அந்த நண்பர் என்னை அற்பமாகப் பார்த்தார். ‘இதுல ஃபேண்டஸி எங்கே வந்தது? அந்தக் கதை மொத்தமும் உண்மையாச்சே’ என்றார்.
‘உண்மையா? என்ன சார் சொல்றீங்க?’
அவர் உலகமே இடிந்து விழுந்துவிட்டதுபோல் பதறினார். ‘அடப் படுபாவி, அந்தக் கதை எதைப்பத்தினதுன்னு உனக்கு நிஜமாத் தெரியாதா?’ என்றார். ‘Animal Farm’ல் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வோர் இடமும் ஒவ்வோர் அசைவும் ரஷ்யா / புரட்சி / கம்ப்யூனிஸ்ட் ஆட்சி போன்றவற்றை எப்படிக் குறிப்பிடுகிறது என்று நிதானமாக விளக்கிச் சொன்னார். நான் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
என்னுடைய ஆச்சர்யத்துக்கு முதல் காரணம், அதுவரை எனக்கு ஒரு புனைவாக(Fiction)மட்டுமே தோன்றிய ‘Animal Farm’ கதை அவர் பேசியபின்னர் திடீரென்று அபுனைவாக(Nonfiction) உருப்பெற்றுவிட்டது. அது வெறும் தேவதைக் கதை அல்ல, சென்ற நூற்றாண்டின் முதல் 40 வருடங்களாக ரஷ்யாவில் நடந்த நிகழ்வுகளை மறைமுகமாக விவரிக்கிற படைப்பு.
ஜார்ஜ் ஆர்வெல் நினைத்தால் ரஷ்யக் கம்யூனிஸ்ட் அரசுபற்றிய தன் விமர்சனத்தை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியிருக்கலாம். ஆனால் இந்தக் கதையின்மூலம் அவர் அதனை ஒரு கார்ட்டூன் / கேலிச் சித்திரம்போல் பதிவு செய்துவிட்டார். (நிச்சயம் ஒருசார்பான பதிவுதான், ஆனாலும் அது அற்புதமான படைப்பு என்பதில் சந்தேகமில்லை)
என்னைப்போன்ற மக்குப் பேர்வழிகள் இந்தக் கதையைச் ‘சும்மா’ படித்து ரசிக்கலாம், விஷயம் தெரிந்தவர்கள் அரசியல் கேலியை ஒப்பிட்டு மகிழலாம், இருதரப்பினருக்கும் திருப்தி தரக்கூடிய அபூர்வக் கலவை அந்தப் புத்தகம். அதுதான் ஜார்ஜ் ஆர்வெலின் மேதைமை.
அந்த நண்பரிடம் பேசியபிறகு, நான் இணையத்துக்குச் சென்று ‘Animal Farm’ கதையின் அரசியல் பின்னணி பற்றிப் படித்தேன். யார் லெனின், யார் ஸ்டாலின், யார் ட்ராட்ஸ்கி, யார் ஹிட்லர், கதையில் வரும் காற்றாலை எதைக் குறிக்கிறது, குதிரைகள் யார், கோழிகள் யார் என்றெல்லாம் வாசித்து ஒப்பிடும்போது நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. திடீரென்று கண் திறந்துவிட்டாற்போலிருந்தது.
அதன்பிறகு, மீண்டும் ஒருமுறை ‘Animal Farm’ கதையை முழுமையாகப் படித்துப்பார்த்தேன். (இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது : http://www.gutenberg.net.au/ebooks01/0100011h.html) ஜார்ஜ் ஆர்வெல் மேதைமட்டுமல்ல, செம குறும்புக்காரர் என்பது புரிந்தது. முன்பைவிடக் கூடுதலாக ரசிக்கமுடிந்தது.
சில வருடங்கள் கழித்து, ரஷ்ய உளவுத்துறையாகிய KGBபற்றி ஒரு புத்தகம் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ‘Animal Farm’ல் வரும் கொடூர நாய்களைதான் நினைத்துக்கொண்டேன்.
ஆச்சர்யமான விஷயம், இப்போது ரஷ்யாபற்றி நான் படித்த ஒவ்வொரு விவரமும் என்னை ‘Animal Farm’ கற்பனை உலகத்துக்குள் கொண்டுசென்றது. இந்த நிகழ்ச்சியை ஜார்ஜ் ஆர்வெல் அந்தக் கதையில் சேர்த்திருக்கிறாரா, இல்லை எனில் ஏன்? ஒருவேளை சேர்த்திருந்தால் அது எப்படி அமையும், எந்தக் கதாபாத்திரம் இதைச் செய்யும், அதனால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்றெல்லாம் பலவிதமாக யோசித்துச் சந்தோஷப்படத் தோன்றியது.
இப்போது, ‘Animal Farm’ புத்தகம் ‘விலங்குப் பண்ணை’ என்ற பெயரில் தமிழில் வந்திருக்கிறது. மொழிபெயர்த்திருப்பவர் பி. வி. ராமஸ்வாமி. கிழக்கு பதிப்பகம் வெளியீடு, 144 பக்கங்கள், விலை ரூ 85.
(Image Courtesy : https://www.nhm.in/shop/978-81-8493-521-9.html)
Animal Farm ஏற்கெனவே சிலமுறை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இணையத்தில்கூட எங்கேயோ அதைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் நான் இந்தக் கதையைத் தமிழில் முழுமையாக வாசித்தது இந்தப் புத்தகத்தில்தான்.
தமிழில் மொழிபெயர்ப்புகளே குறைவு, நல்ல மொழிபெயர்ப்புகள் அதைவிடக் குறைவு. எனக்குத் தெரிந்து இதுவரை மூன்று முறை வெவ்வேறு தமிழ் மொழிபெயர்ப்புகளை வாங்கி வாசித்துவிட்டு வெறுத்துப்போய் ஒரிஜினல் ஆங்கிலப் புத்தகங்களையே மீண்டும் காசு செலவழித்து வாங்கியிருக்கிறேன்.
இதனால், ‘விலங்குப் பண்ணை’யைக் கொஞ்சம் சந்தேகத்துடன்தான் கையில் எடுத்தேன். முடிந்தால் படிக்கலாம், இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை, ஏற்கெனவேதான் ஒரிஜினலை ரெண்டு முறை படித்தாகிவிட்டதே!
’விலங்குப் பண்ணை’யில் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்திய விஷயம், பி. வி. ராமஸ்வாமியின் சரளமான மொழி நடை. அதிநவீனமாகவும் இல்லை, அரதப்பழசாகவும் இல்லை, நாற்பதுகளில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைக் கிட்டத்தட்ட எழுபது வருடம் கழித்து வாசிக்கும்போது அதே உணர்வுகளைக் கொண்டுவருவதற்கு எத்தகைய மொழியைப் பயன்படுத்தவேண்டுமோ அதை மிகுந்த தேர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார்.
குறிப்பாக, இந்தக் கதையின் ஆன்மா, எத்தனை புரட்சிகள் வந்தாலும் அப்பாவி விலங்குகள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றன என்கிற செய்தி அதன் மெலிதான பிரசார தொனியுடன் அப்படியே இந்த மொழிபெயர்ப்பில் அழகாக இறங்கியிருக்கிறது. மற்றபடி சில பத்திகள் நீளமானவை, பயன்படுத்தப்பட்டிருக்கும் சில வார்த்தைகள் வழக்கில் இல்லாதவை என்பதுபோன்ற சிறு குறைகளெல்லாம் இரண்டாம்பட்சமே.
இன்னொரு விஷயம், கதையின் மிக முக்கியமான பகுதிகளில் மூல வடிவத்தைப் படிக்கும்போது வரும் அதே உணர்வுகள் (நான் அதை ஏற்கெனவே இருமுறை வாசித்திருந்தாலும்) இங்கேயும் பிசிறின்றி வருகின்றன. வார்த்தைக்கு வார்த்தை எனச் செய்யப்படும் (Transactional) மொழிபெயர்ப்புகளில் இது சாத்தியமே இல்லை. கதையின் தன்மையை உணர்ந்து மறு உருவாக்கம் செய்தால்தான் உண்டு.
உதாரணமாக, இந்தக் கதையின் மிக முக்கியமான பகுதிகளாக நான் நினைப்பது, மிருகங்கள் இணைந்து கட்டுகின்ற காற்றாலை இரண்டு முறை இடிந்து விழுவது, வயதான மிருகங்களின் நலவாழ்வுக்கென ஒதுக்கப்பட்ட நிலங்கள் பிடுங்கப்படுவது, பன்றிகள் சுகவாழ்க்கைக்குப் பழகிக்கொண்டு மற்ற மிருகங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்வது, பாக்ஸர் என்கிற கடும் உழைப்பாளிக் குதிரையிடமிருந்து சகல உழைப்பையும் பிடுங்கிக்கொண்டு அதைச் சக மிருகங்களே கசாப்புக் கடைக்காரனுக்கு விற்றுவிடுகிற காட்சி, எழுதப் படிக்கத் தெரிந்த, தெரியாத மிருகங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொய்ப் பிரசாரத்தின்மூலம் மூளை மழுங்கச்செய்யப்படுவது, திடீரென்று தோன்றும் வேட்டை நாய்கள் நிகழ்த்தும் கொடூரங்கள்… இந்தக் காட்சிகள் ஒவ்வொன்றிலும் எழவேண்டிய தன்னிரக்கம், கோபம், ஆத்திரம், சோகம், பயம் போன்ற உணர்வுகள் அனைத்தும் தமிழ் மொழிபெயர்ப்பில் மறுபடி வாசிக்கும்போதும் அதேபோல் எழுகின்றன. இதற்கு ஒருபாதிக் காரணம் ஜார்ஜ் ஆர்வெல் என்றால், இன்னொருபாதிக் காரணம் பி. வி. ராமஸ்வாமியின் மொழிபெயர்ப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் இதுதான். நீங்கள் இதுவரை ‘Animal Farm’ வாசித்ததில்லை என்றால், தாராளமாக இதை நம்பி வாங்கலாம். அதற்கு நீங்கள் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை, என்னைப்போல் அரசியல் தெரியாத கோயிந்துகளாலும் ரசிக்கமுடிகிற படைப்பு இது.
***
என். சொக்கன் …
28 01 2012
ஒட்டுக்கேட்டவன் குறிப்புகள்
Posted January 25, 2012
on:- In: Bangalore | Characters | Creativity | Feedback | Ideas | Interview | IT | Learning | Marketing | Money | People | Price | Team Building | Technology | Uncategorized
- 15 Comments
நேற்று இரவு அலுவல் நிமித்தம் ஓர் ஆஸ்திரேலியரைச் சந்தித்தோம். இந்திய வம்சாவளிக் குடும்பம்தான். ஆனால், இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேறிவிட்டார்கள். இப்போது தொழில்முறைப் பயணமாக இங்கே வந்திருக்கிறார்.
அவர் தங்கியிருந்தது பெங்களூரின் மிகப் பழமையான நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்று. அங்கே எங்களுக்குப் பிரமாண்டமான விருந்து அளித்தார். ஒரு ப்ளேட் வெஜிடபிள் பிரியாணி: ரூ 1500/- தொட்டுக்கொள்ளத் தயிர்ப் பச்சடி ரூ 350/- என்று மெனுவைப் பார்த்தாலே எனக்குப் பசி தீர்ந்துவிட்டது.
ஆனால், அவருக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருக்கமுடியாது. போன வருடம்தான் அவர் தனது சொந்த நிறுவனத்தை இன்னொரு மிகப் பெரிய நிறுவனத்திடம் விற்று ஐநூற்றுச் சொச்ச கோடிகளை அள்ளியிருந்தார். இப்போது அந்தப் பெரிய நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.
ஆஃபீஸ் விஷயம் என்பதால், இந்த ஐநூறு கோடீஸ்வரருடைய பெயரையோ வேறு விவரங்களையோ தெரிவிக்கமுடியாத சூழ்நிலை. ஆனாலும் பிரச்னையில்லை, அவர் சொன்ன விஷயங்கள்தான் முக்கியம். சும்மா அவருடைய பெயர் மிஸ்டர் கோயிஞ்சாமி என்று வைத்துக்கொண்டு தொடர்கிறேன்.
உண்மையில் எனக்கு இதுபோன்ற பெரும்புள்ளிகளுடன் ஒப்பந்தம் பேசிப் பழக்கமும் இல்லை, அதற்கான நெளிவுசுளிவுகளும் எனக்குத் தெரியாது. என்னுடைய boss அதில் பெரிய விற்பன்னர். எதற்காகவோ இந்தமுறை என்னையும் கொக்கி போட்டு இழுத்துக்கொண்டு போயிருந்தார். நானும் ஆயிரத்தைநூறு ரூபாய் பிரியாணியில் என்ன விசேஷம் என்று பரிசோதித்தபடி அவர்கள் இருவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
ஆரம்பத்தில் அலுவலக விஷயங்களைப் பேசியவர்கள் ஒருகட்டத்தில் (ஒயின் தாக்கத்தில்?) பர்ஸனல் சமாசாரங்களுக்கு நகர்ந்தார்கள். குறிப்பாக, மிஸ்டர் கோயிஞ்சாமி தன்னுடைய தனிப்பட்ட தொழில்முனைவோர் (Entrepreneur) அனுபவங்களை மிகச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.
அதாகப்பட்டது, நீங்கள் ஒரு தொழில் தொடங்கி நடத்துகிறீர்கள், அடிமட்டத்திலிருந்து அதனை வளர்த்து ஆளாக்கி ஒரு பெரிய நிறுவனத்துக்கு விற்க நினைக்கிறீர்கள், அதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும்? மிஸ்டர் கோயிஞ்சாமி கொடுத்த டிப்ஸ் இவை:
முன்குறிப்புகள்:
1. ஓர் ஒழுங்கில் இல்லாமல் என் நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன் (Unstructured Notesபோல) தவறுகளோ, அபத்தங்களோ இருந்தால் நானே முழுப் பொறுப்பு
2. இந்த சீரியஸான மேட்டரை இப்படி dilute செய்து விளையாட்டாக எழுதியிருக்கிறானே என்று நினைக்கவேண்டாம், நான் சொந்தத் தொழில் தொடங்கியவன் அல்லன், அப்படி ஒரு யோசனையும் இல்லை, ஆகவே எனக்கு இது சும்மா ஜாலியாகக் கவனித்த விஷயம்தான், இப்படிதான் என்னால் எழுதமுடியும்
3. இவை முழுமையான குறிப்புகள் அல்ல, அவர் சொன்னதில் என் நினைவில் தங்கியவைமட்டுமே, அவர் சொல்ல மறந்தவை இன்னும் நிறைய இருக்கலாம்
4. இந்த பலவீனங்களையெல்லாம் தாண்டி, இந்தக் குறிப்புகள் யாருக்காவது பயன்படும் என்று நம்புகிறேன்
- தொழில் நடத்துவதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒரு பொருளை (அல்லது சேவையை) தயாரிப்பது, அதனை விற்பது. Production, Sales எனப்படும் இந்த இரண்டு பகுதிகளில் நீங்கள் எதில் கில்லாடி?
- பெரும்பாலான புதிய தொழில்முனைவோர் தங்களுடைய துறை சார்ந்த தொழில்நுட்பங்களில் பெரிய ஆள்களாக இருப்பார்கள். அதை அடிப்படையாக வைத்து ஒரு பிரமாதமான தயாரிப்பை உருவாக்கிவிடுவார்கள், அப்புறம் அதை எப்படி விற்பது, எப்படிச் சந்தைப்படுத்துவது (மார்க்கெட்டிங்) என்று தெரியாமல் விழி பிதுங்குவார்கள்
- நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மேற்சொன்ன இரண்டையுமே நீங்கள் செய்யவேண்டியிருக்கும், பழகிக்கொள்ளுங்கள், அல்லது, உங்களுக்கு எதில் திறமை போதாதோ அந்த விஷயத்தில் கில்லாடியான ஒரு நபரைப் பார்த்துப் பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ளுங்கள்
- A : ஓரளவு நல்ல Product, அருமையான Sales Team
- B : அற்புதமான Product, சுமாரான Sales Team
- மேற்சொன்ன இரண்டில் Aதான் பெரும்பாலும் ஜெயிக்கும். Its unfair, ஆனால் அதுதான் எதார்த்தம்
- உங்களுடைய பொருளை (உதாரணமாக: சாஃப்ட்வேர் அல்லது சலவை சோப்பு) விற்பது ஒரு கலை என்றால், உங்களுடைய கம்பெனியை விற்பது வேறுவிதமான கலை, அதற்கு நீங்கள் தனியே பல நுட்பங்களைப் பழகவேண்டும்
- பெரிய கம்பெனிகள் உங்களுடைய கம்பெனியை எதற்காக வாங்கவேண்டும்? உங்களிடம் என்ன ஸ்பெஷல்?
- பெரும்பாலான பெரிய கம்பெனிகள் சேவை சார்ந்த நிறுவனங்களை (Service Based Companies) சீண்டுவதே இல்லை, Product Based Companies, அதிலும் குறிப்பாக IP எனப்படும் Intellectual property, அதாவது நீங்களே உருவாக்கிய தனித்துவமான தயாரிப்புகள் இருந்தால் எக்ஸ்ட்ரா மரியாதை
- ஒருவேளை நீங்கள் Service Based Company என்றாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை / உழைப்பை ஒதுக்கி உங்களுக்கான IP ஐடியாக்களைத் தேடுங்கள், அவற்றுக்கு ஒழுங்காகக் காப்புரிமை (Patent) வாங்கிவைத்துக்கொள்ளுங்கள், உங்கள் நாட்டில்மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பா என்று எங்கெல்லாம் இந்தத் தயாரிப்பு காப்பியடிக்கப்படக்கூடுமோ அங்கெல்லாம் பேடன்ட் வாங்கிவிடுங்கள்
- பேடன்ட் வாங்குவது வேறு, பொருளை உண்மையில் தயாரிப்பது வேறு, முதல் விஷயம்(ஐடியா)தான் ரொம்ப முக்கியம், அதை வைத்தே பெரிய ஆளானவர்கள் இங்கே உண்டு
- சாஃப்ட்வேர் துறையைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்கள் எப்படிச் சிறிய நிறுவனங்களை ‘வாங்கு’ கின்றன?
- இதில் இரண்டு வகைகள் உண்டு: Horizontal Acquisitions, Vertical Acquisitions
- Horizontal என்றால், ஒரே சாஃப்ட்வேர் (அல்லது அடிப்படைக் கட்டமைப்பு) எல்லாத் துறைகளிலும் (உதாரணமாக: வங்கிகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், மீடியா, விமான சேவை நிறுவனங்கள் etc.,) பயன்படும், நீங்கள் அதுமாதிரி சாஃப்ட்வேர்களை எழுதி, ஓரளவு பிரபலமாகியிருந்தால் போதும், பெரிய நிறுவனங்கள் உங்களை வாங்குவதற்காகக் காசுக் கணக்கே பார்க்காமல் அள்ளித் தரத் தயாராக இருப்பார்கள். ஆனால் இதுமாதிரி Acquisitions மிகக் குறைவு, மிக அபூர்வம்
- ஆகவே, Vertical Acquistionsதான் நமக்கு வசதி. ஏதாவது ஒரு துறையை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தத் துறைக்கு என்று இருக்கும் பிரச்னைகளைக் கவனியுங்கள், புரிந்துகொள்ளுங்கள், அதில் அனுபவம் மிக்க நபர்களை உங்கள் குழுவில் இணைத்துக்கொள்ளுங்கள், உங்களது வாடிக்கையாளர்களுடன் பேசுங்கள், அந்தத் துறையில் உள்ள எல்லாருக்கும் பயன்படக்கூடியவிதமாக ஒரு சாஃப்ட்வேரை எழுதுங்கள். அதை ஒன்று, ஐந்து, பத்து, இருபது நிறுவனங்களில் செயல்படுத்திப் பரீட்சித்துப் பாருங்கள்
- இப்படி நீங்கள் எழுதும் ‘அபூர்வ’ சாஃப்ட்வேரை, மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் சீண்டக்கூட மாட்டார்கள். பரவாயில்லை, அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல் என்று தீர்மானித்திருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் வேலையைத் தொடருங்கள், அந்தத் துறை சார்ந்த புதுப்புது விஷயங்களைக் கவனித்துச் சேர்த்துக்கொண்டே இருங்கள்
- இதனால், ஒருகட்டத்தில் அந்தக் குறிப்பிட்ட துறையில் பெரிய நிறுவனங்களைவிட உங்களுடைய தயாரிப்பு ஒரு படி மேலே போய்விடும், ஆனால் இப்போதும், அவர்கள் உங்களை அலட்சியமாகதான் பார்ப்பார்கள். ‘நேத்து வந்த பொடிப்பய, இவனால என்னை என்ன செய்யமுடியும்?’
- அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். அடுத்தடுத்து பல இடங்களில் அவர்களுடைய சாஃப்ட்வேரை வாங்கப்போகிற கஸ்டமர்கள் உங்களைப் பற்றிப் பேசி ஒப்பிட ஆரம்பித்தால், அப்போது அவர்களுக்குப் புரியும், ‘இந்தப் பயலுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன்’ என்று உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவார்கள்
- இப்போது, அந்தப் பெரிய நிறுவனம் தன்னுடைய பெருந்தலைகளைக் கூப்பிட்டு விவாதிக்கும் ‘எது பெட்டர்? நம்ம சாஃப்ட்வேரை இன்னும் சிறப்பாக்கறதா? அல்லது அந்தக் கம்பெனியை மொத்தமா வாங்கிப் போடறதா?’
- நீங்கள்தான் ஏற்கெனவே அந்த Verticalலில் பிஸ்தாவாச்சே, உங்கள் சாஃட்வேரை (அதாவது கம்பெனியை) வாங்கிவிடுவதுதான் புத்திசாலித்தனம் என்று அவர்களே முடிவு செய்வார்கள். இதற்காக நீங்கள் செய்யவேண்டியது எதுவுமே இல்லை (உங்களது Productஐத் தொடர்ந்து Improve செய்துகொண்டிருப்பதைத்தவிர)
- அடுத்த விஷயம், என்னதான் நீங்கள் உங்கள் கம்பெனியைப் பெரிய நிறுவனம் ஒன்றிடம் விற்க விரும்பினாலும், நீங்களே அவர்களிடம் சென்று பேசாதீர்கள், விலை பாதியாகக் குறைந்துவிடும், அவர்களே வரும்வரை காத்திருங்கள்
- வந்தார்களா? வாழ்த்துகள், பாதி வேலை முடிந்தது, மிச்சத்தைக் கவனியுங்கள்
- ஏற்கெனவே சொன்னதுபோல், உங்கள் சாஃப்ட்வேரை விற்பது வேறு, உங்கள் கம்பெனியை விற்பது வேறு, அதற்கு நீங்கள் உங்களுடைய கம்பெனியைப் பலவிதமாகப் பொட்டலம் கட்டிக் காட்டவேண்டியிருக்கும் (IP, Employees’ Skills, Balance Sheet, Profit, Market Potential என்று வரிசையாக ஏதேதோ சொன்னார், எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, இங்கே உங்களுக்குத் தெரிந்தபடி மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டுக்கொள்ளவும்)
- பெரிய கம்பெனிகளுடன் பேரம் பேசும்போது, ஆரம்பத்தில் அவர்கள் அதிரடியாகதான் இறங்குவார்கள், ‘நீயெல்லாம் ஒரு கம்பெனியா? உன்னைக் காசு கொடுத்து வாங்கணும்ன்னு எனக்குத் தலையெழுத்தா? உன்னைவிட பக்கத்து கம்பெனிக்காரன் பலமடங்கு பெட்டர், தெரியுமா?’
- இப்படி யாராவது பேசினால் சளைக்காதீர்கள். ‘ஆமா சார், நீங்க அவன்கிட்டயே பேசிக்கோங்க, குட் பை’ என்று எழுந்து வந்துவிடுங்கள் (கத்தரிக்காய் பேரம் பேசும் அதே டெக்னிக்?)
- அப்புறம், அந்தப் பேரம்பேசிகள் தங்களது பெருந்தலைகளோடு உரையாடுவார்கள், உங்களது ‘வொர்த்து’ தெரிந்து அவர்கள் இறங்கிவருவார்கள், ‘சரி, என்ன விலை எதிர்பார்க்கறீங்க?’ என்று கேட்பார்கள்
- உடனடியாக, உங்கள் வாயை ஃபெவிகால் போட்டு மூடிக்கொண்டுவிடுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் தொகையைச் சொல்லாதீர்கள், அவர்கள் முதலில் பேசட்டும்
- அவர்கள் பேசியதும் ‘This is too low’ என்று ஒரு வாக்கியத்தில் முடித்துக்கொள்ளுங்கள். எந்தப் பெரிய கம்பெனியும் உங்களிடம் ஆரம்பத்தில் சொல்லும் விலையைப்போல் இரண்டு முதல் மூன்று மடங்குவரை தரத் தயாராக இருப்பார்கள்
- அப்புறம், பேரங்கள் தொடங்கும், முடிந்தவரை இந்த விஷயத்தில் அனுபவம் உள்ள ஒருவரை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள், பெரும்பாலான Entrepreneurs அடி வாங்குவது இந்த இடத்தில்தான், இந்த அனுபவம் கிடைத்தபிறகு, நீங்கள் இன்னொரு பிஸினஸ் நடத்தினால் அதைச் சரியான விலைக்கு விற்பீர்கள்
- நமக்கு அந்த Trial and Error எல்லாம் சரிப்படாது. அனுபவம் உள்ள ஒருவர் உங்களுடன் இருந்தால் அடிமாட்டு விலையைத் தவிர்க்கலாம்
- உங்கள் கம்பெனியை விற்றபின்னர், நீங்களும் அந்தப் பெரிய நிறுவனத்தில் (சில மாதங்களாவது) வேலை செய்யவேண்டியிருக்கும். அப்போது ஒரு பெரிய மாற்றத்துக்குத் தயாராக இருங்கள், சொந்தமாகத் தொழில் நடத்துவதன் சவால்கள் வேறு, பெரிய கம்பெனியில் வேலை செய்வதன் சவால்கள் வேறு, அப்புறம் வருத்தப்படாதீர்கள்
- நிறைவாக ஒன்று, என்னதான் கை நிறையக் காசு வாங்கிக்கொண்டு பெரிய கம்பெனியில் பிரமாதமான சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும், அநேகமாக நீங்க அதை ரசிக்கமாட்டீர்கள், சொந்தமாக ஒரு விஷயத்தை உருவாக்குகிற த்ரில் உங்களைச் சும்மா விடாது, விரைவில் அடுத்த Entrepreneurial முயற்சியில் இறங்கிவிடுவீர்கள், இது நிச்சயம்
***
என். சொக்கன் …
25 01 2011
இணையம், இலக்கியம் : ஓர் அரட்டை
Posted January 4, 2012
on:- In: Blogs | Interview | Introduction | Media | Poster
- 7 Comments
சென்னையைச் சேர்ந்த நண்பர் திரு. பாரி வேல் ‘தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதில் இணையத்தின் பங்கு’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளார். அதுதொடர்பாக நேற்று நானும் அவரும் Skypeவழி உரையாடினோம். அதன் ஒலிப்பதிவு இங்கே.
உங்களுக்கு இந்தத் தலைப்பில் ஆர்வம் இருந்தால், இந்த உரையாடலைக் கேட்டுக் கருத்துச் சொல்லலாம், கூடுதல் விவரங்களைச் சேர்க்கலாம், இங்கே பின்னூட்டமாக எழுதினாலும் சரி, திரு. பாரி வேல் அவர்களுக்கு நேரடியாக மெயில் எழுதினாலும் சரி (அவரது மின்னஞ்சல் முகவரி : egalaivan@yahoo.com ). இவை அவரது ஆய்வுக்கு மிகவும் பயன்படும். அட்வான்ஸ் நன்றிகள்.
சில முன்குறிப்புகள்:
1. ஒலிப்பதிவுத் தரம் சரியாக இல்லை. சில நிமிடங்களுக்குப்பின் காது வலிக்கிறது. ஒலி அளவைக் குறைத்துக் கேட்டல் நலம் பயக்கும்
2. முதல் கேள்வி 100% சுயபுராணம், அதன்பிறகுதான் சப்ஜெக்டுக்கே வருகிறோம், உங்களுக்கும் சுயபுராணங்கள் அலர்ஜி என்றால் முதல் 58 விநாடிகளைத் தவிர்த்துவிடவும்
3. இதனை mp3 வடிவில் டவுன்லோட் செய்து பின்னர் கேட்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள ஆங்கில இணைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்
***
என். சொக்கன் …
04 01 2012
அறுசீர்
Posted January 4, 2012
on:- In: Announcements | E-zines | Introduction | Media | Poster | Uncategorized
- Leave a Comment
அறுசீர் விருத்தம்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுகுறித்த ஓர் அறிமுகமாக நான் எழுதிய கட்டுரை ஒன்று தமிழோவியம் இணைய இதழில் வெளியாகியுள்ளது. அதை இங்கே வாசிக்கலாம்: http://www.tamiloviam.com/site/?p=2158
***
என். சொக்கன் …
04 01 2012