Archive for March 2012
சப்பாத்தி மாவுப் பிள்ளையார்
Posted March 23, 2012
on:நார்வேக் குழந்தைகள்
Posted March 22, 2012
on:- In: Guest Post | Kids | Learning | Life | Uncategorized
- 7 Comments
கடந்த சில மாதங்களாகவே இந்தியச் செய்தி ஊடகங்களில் அதிகம் அடிபட்ட ஒரு நாடு, நார்வே. அங்கு வாழும் இந்தியக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த குழந்தைகள் அதன் பெற்றோரிடமிருந்து பறிக்கப்பட்டதும், அதற்குச் சொல்லப்பட்ட காரணங்களும் இங்கே பரவலான விவாதங்களைக் கிளப்பின. குறிப்பாக, ‘எங்க குழந்தைகளை வளர்க்க எங்களுக்குத் தெரியாதா? அதைச் சொல்ல நார்வேக்காரன் யாரு?’ என்கிற கோபம்.
இந்த விஷயத்தில் உணர்ச்சிவயப்படுவதைத் தவிர்த்து ஒரு மூன்றாம் மனிதனின் பார்வையிலிருந்து பார்த்தால், நிஜமாகவே நார்வேக் குழந்தைகள் வளர்க்கப்படும் முறையில் ஏதேனும் விசேஷத் தன்மைகள் உண்டா என்கிற கேள்வி எழுகிறது. ஒருவேளை அப்படி ஏதாவது இருந்தால் தெரிந்துகொள்ளலாமே என்று யோசித்தேன். நார்வேயில் வாழும் தமிழ்க் குடும்பங்களைப் பற்றி ட்விட்டரில் விசாரித்தேன். தோழி ரம்யா வாயிலாக சுசி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் மின்னஞ்சலில் இதுபற்றிக் கேட்டிருந்தேன்.
சில நாள் கழித்து, எனக்கு ஒரு விரிவான மெயில் வந்தது, சில மணி நேரம் கழித்து, இன்னொரு விரிவான மெயில், அப்புறம் இன்னொன்று, நார்வேயின் சூழல், அங்கே குழந்தைகள் வளரும் விதம் என்று சகலத்தையும் நுணுக்கமான தகவல்கள், தன்னுடைய சொந்தக் கருத்துகள், அனுபவங்களுடன் தெளிவாகப் புட்டுப்புட்டு வைத்துவிட்டார் சுசி. ஒரு casual enquiryக்கு இத்தனை அக்கறையான பதில் மொழியா என்று அசந்துபோனேன்.
இந்த விஷயங்கள் எல்லாருக்கும் பயன்படும் என்கிற நம்பிக்கையில், அவரது அனுமதியுடன் அந்தக் கடிதங்களை (அவரது மொழியிலேயே, நான் எந்த மாற்றங்களும் செய்யவில்லை) தொகுத்து ஒரு கட்டுரை வடிவில் இங்கே பிரசுரிக்கிறேன். சுசி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவருடைய வலைப்பதிவு இங்கே : http://yaavatumnalam.blogspot.com/
இதுபோல் நீங்கள் வாழும் நாட்டில் கவனித்த / கவர்ந்த குழந்தை வளர்ப்பு முறைகள் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். நன்றி.
***
என். சொக்கன் …
22 03 2012
****************************
குழந்தை வளர்ப்பு @ நார்வே
****************************
சுசி
****************************
முன்குறிப்பு:
சட்டதிட்டங்களை முன் வைத்தோ/அதன் அடிப்படையிலோ நான் இதை எழுதவில்லை. நான் பார்த்த/கேட்ட விஷயங்களை வைத்துக்கொண்டு மீண்டும் என் கலீக்ஸ் சிலரோடு அவற்றை சரி பார்த்துக் கொண்டு எழுதுகிறேன். இவர்கள் வளர்ப்பு முறையில் நன்மைகளே அதிகம். எனக்குத் தெரிந்தவரை தீமை என்பது தேடித்தான் பார்க்க வேண்டும். அப்படி எதுவாவது எழுதும்போது வந்தால் குறிப்பிடுகிறேன். அல்லது எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் குறிப்பிடுகிறேன். முழுவதும் என் கண்ணோட்டத்தில் எழுதுகிறேன். எங்கள் குடும்பத்திலும் பெரும்பாலும் இதே முறைகளை நானும் கணவரும் கடைப்பிடிக்கிறோம்.
1.
– குழந்தை பிறந்து வீட்டுக்கு வந்ததும் பெற்றோர் கட்டிலை ஒட்டி தனியான கட்டிலில் (crib) தூங்க வைக்கிறார்கள். இங்கே மூடிய வீடுகள், அதிலும் குளிர்காலம் வந்தால் ஹீட்டர் வெப்பமும் இருக்கும். எனவே குழந்தைக்கு சுத்தமான சுவாசம் கிடைப்பதற்கான ஏற்பாடு இது. கூடவே குளிருக்குப் போர்த்தும் தடித்த போர்வைகளால் (duvet) குழந்தை மூடப்படும் அபாயம் இருப்பதும் ஒரு காரணம்.
– பெண்கள் பேறுகால விடுப்பு முடிந்து வேலைக்குப் போக ஆரம்பித்ததும் குழந்தைக்குத் தனி அறை கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் ஒரு வயதுக்கு மேல். வீட்டு வசதிக்கேற்ப சகோதரங்களோடு அறை பகிர்ந்துகொள்ளவும்படுகிறது. தனியே விடப்படும் குழந்தை தூங்கும் வரை கதை சொல்லல், புத்தகம் வாசித்தல், பாடல் கேட்டல், பாடுதல் எனக் கூடவே இருக்கிறார்கள். இரவில் விழித்தாலோ, விடுமுறை நாட்களிலோ குழந்தை பெற்றோரின் அறையில் தூங்குகிறது. இந்த வழக்கம் வளர்ந்தாலும் பிள்ளை விரும்பும்வரை தொடரும்.
– தனி அறைக்குக் குழந்தை பழக்கப்பட நாளானால் பொறுமையோடு முயற்சி செய்கிறார்கள். ஆனால் அழுது அடம்பிடிக்கும் குழந்தையை மீண்டும் பெற்றோர் அறையில் தூங்க வைப்பதில்லை.
– இந்தத் தனி அறையால் வளர வளர நிறைய விஷயங்களை குழந்தை கற்றுக் கொள்கிறது. துப்பரவு, விரும்பியபடி அறைக்கானவற்றை தேர்வு செய்தல், தன் பொருட்களில் கவனம் போன்ற சுயமுடிவுகள் எடுக்கக் கற்றுக் கொள்கிறது.
– வளர்ந்ததும் பெற்றோரின் சரியான கண்காணிப்பு இல்லாவிட்டால் இந்தத் தனிமை தவறான முறையில் போக வாய்ப்பு இருக்கிறது. இதனாலேயே பெற்றோர் பிள்ளைகளுக்கும் தமக்கும் இடையில் இடைவெளி வந்துவிடாமல் நண்பர்கள் போல பழகுகிறார்கள்.
2.
– குழந்தை தானாக உணவை உண்ண முயற்சிக்கும்போது அதை அனுமதிக்கிறார்கள். பக்கத்தில் இருந்து உண்ணும் அளவை கவனிக்கிறார்கள். உணவு என்பது சாப்பாட்டு மேசையில்தான் என்பதை குழந்தையில் இருந்தே அது அறிந்து கொள்கிறது. அதனால் ஆரம்பத்தில் கொட்டிச் சிந்தும் குழந்தை நாளாகப் பழகிக் கொள்கிறது. குடிப்பது கூட இப்படித்தான். தானே பழக வழிவகுத்து அதே நேரம் சரியான அளவில் குடிக்கிறதா என்றும் பார்த்துக் கொள்கிறார்கள்.
– பிள்ளைக்குப் பிடிக்காத உணவை அது சத்துணவாக இருந்தால் முழுவதும் ஒதுக்காத வகையில் பார்த்துக் கொள்கிறார்கள். உதாரணத்துக்கு மீட் பாலோடு குடுக்கப்படும் சாலட் குழந்தை முதல் தடவை முழுவதும் சாப்பிட்டால் அடுத்த மீட் பால் தனியே சாப்பிடலாம்.
– வளர வளர காலை, மாலை உணவை பிள்ளை விரும்பினால் இடையிடையே தன் அறையிலோ, ஹாலிலோ இருந்து சாப்பிடலாம். ஆனால் டின்னர் குடும்பம் ஒன்றாக இருந்து சாப்பாட்டு மேசையில் சாப்பிடுவார்கள் (இங்கே டின்னர் மாலை 4 மணி போல் சாப்பிடுவோம்)
– எல்லோரும் சாப்பிட்டு முடியும் வரை காத்திருத்தல், பிடிக்காத உணவை விருந்தினர் முன் சத்தமாக சொல்லாதிருத்தல் போன்ற table manners குழந்தை இங்கே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது.
3.
– வீட்டு வேலைகளில் குழந்தையும் ஈடுபடுத்தப்படுகிறது. தன் விளையாட்டுப் பொருட்களை எடுத்த இடத்தில் அடுக்கி வைத்தலில் ஆரம்பித்து வயதுக்கேற்ப பங்களிப்பைச் செய்கிறது.
4.
– சாக்லெட், கேண்டி, சிப்ஸ், ஐஸ்க்ரீமுக்கு வார இறுதியில் மட்டுமே அனுமதி. எப்போதாவது வாரநாட்களில் பிறந்தநாள்,விருந்தினர் போன்றவற்றுக்காக அனுமதி உண்டு. குழந்தையே அதற்குரிய இடத்தில் வைக்கவும், பின்னர் வார இறுதியில் எடுத்து உண்ணவும் பழக்கப்படுத்துகிறார்கள்.
– கோடைகாலத்தில் தினமும் ஐஸ்க்ரீம் உண்டு 🙂
5.
– மொபைல், கம்பியூட்டர், டீவி, எக்ஸ்பாக்ஸ் போன்ற கேம்ஸ் பாவனை பெற்றோருக்கு பெற்றோர் வேறுபடுகிறது. சிலர் நேரக்கட்டுப்பாடோடு எல்லாவற்றையும் கொடுக்கிறார்கள். சிலர் கட்டுப்பாடில்லாமல் அதே நேரம் அதிக நேரம் பாவிக்காமல் பார்த்து கவனித்துக் கொள்கிறார்கள் (நாங்கள் இப்படித்தான்)
– சிலர் இத்தனை வயதுக்கு மேல்தான் இது என்பது போல் வைத்திருக்கிறார்கள். அதே நேரம் யாரிடமிருந்தாவது பரிசாகக் கிடைத்தாலோ அல்லது பிள்ளையாகப் பணத்தை சேமித்து வாங்கினாலோ தடை சொல்வதில்லை. ஆனால் பாவனை நேரம் மட்டுப்படுத்தப்படுகிறது.
– சிலர் இவற்றை பிள்ளைகளின் அறைக்குள் வைத்திருக்காமல் பொதுவான இடத்தில் வைத்திருக்கிறார்கள்.
6.
– குழந்தையில் இருந்தே நண்பர்களோடு சேர்வதை ஊக்கப்படுத்துகிறார்கள்.
– பிள்ளை நண்பர் வீட்டுக்கு போனாலோ, நண்பர்கள் பிள்ளை வீட்டுக்கு வந்தாலோ அந்தந்த இடத்தில் இருக்கும் நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணமாக விளையாடி முடிய அடுக்கி வைத்தல், சோஃபா கட்டிலில் குதித்தல் போல அத்தனையும் வயதுக்கேற்ப.
– வளர்ந்த பிள்ளைகளின் நண்பர்களுக்கு குடி, புகைத்தல் பழக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்படும்பட்சத்தில் அவர்களின் பெற்றோருக்கு உடனடியாக தகவல் சொல்லப்படும். பிள்ளையின் நட்பை முறித்துக்கொள்ளச் சொல்லப்படுவதில்லை. ஆனால் கவனமாக இருக்கும்படி சொல்லப்படும்.
– நண்பர்களோடு வெளியே, நண்பர்கள் வீட்டுக்கு, பார்ட்டிகளுக்குச் செல்லும்போது சொன்ன நேரத்துக்கு வரவேண்டும். அல்லது தாமதமாகும் என்பதை அறியத்தர வேண்டும். இல்லையென்றால் பெற்றோர் சென்று அழைத்து வருவர்.
7.
– பிள்ளைகளுக்குக் காதல் இருப்பதில் தடை இல்லை. காதலன்/காதலி எப்படிப்பட்டவராக இருந்தாலும் தடை இல்லை. ஆனால் உனக்கு பொருத்தம் இல்லை அல்லது குணம், பழக்கவழக்கம் சரி இல்லை போன்ற ஆலோசனைகள் வழங்கப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் மட்டும்.
8.
– குழந்தையில் இருந்தே காரணம் எதுவாக இருந்தாலும் அடம்பிடித்தலுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை. உதாரணத்துக்கு தேவை இல்லாத ஒன்றை வாங்க குழந்தை அழுமானால் சொல்லுவார்கள். அழுகையை நிறுத்தும் வரை காத்திருப்பார்கள். முடியாத போது உடனேயே வீட்டுக்கு போய்விடுவார்கள்.
9.
– பிள்ளைகளுக்குப் பிடித்த ஆக்டிவிட்டீஸில் சேர்த்துவிடுகிறார்கள். football, handball, skating, gymnastics, etc..
– பிடித்த இசைக்கருவி, சங்கீதம் கற்றுக்கொள்ள அனுமதிக்கிறார்கள்.
– பள்ளியில் ஆசிரியர்களோடு நல்ல தொடர்பில் இருக்கிறார்கள்.
– பள்ளியானாலும், மற்றவையானாலும் போட்டிகளிலும், விழாக்களிலும் தவறாது கலந்துகொள்கிறார்கள்.
10.
– விவாகரத்தான பெற்றோரிடம் பிள்ளை தீர்மானித்துக் கொண்டதுக்கேற்ப போய் வருகிறது.
– மறுமண விஷயத்தில் பிள்ளையின் விருப்பமும் கவனத்தில் எடுக்கப்படுகிறது.
11.
– விடுமுறை, சுற்றுலா நேரங்களில் பிள்ளையின் விருப்பங்களை கவனத்தில் எடுக்கிறார்கள்.
– பிள்ளையின் சந்தோஷம் கருதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறார்கள்.
12.
– ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பிள்ளைக்காக ஒதுக்கப்படுகிறது.
– ஷாப்பிங்கில் பிள்ளைகளும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
13.
– பிள்ளைகளுக்கான பிறந்தநாள் கொண்டாட்டங்கள்/விழாக்கள் முக்கியப்படுத்தப்படுகின்றன. அவர்களால் முடியாதபோது மற்றவர் உதவியோடு பிள்ளையை கலந்து கொள்ள வைக்கின்றனர். உதாரணத்துக்கு என் மகன் ஃபுட்பால் மேச்சுக்கு எங்களால் போக முடியாவிட்டால் அவர் ஃப்ரெண்டின் பெற்றோரிடம் கேட்டு அனுப்பி வைப்போம். அல்லது போகும்போது ஃப்ரெண்டையும் சேர்த்து நாங்கள் கூட்டிச் சென்றால் அழைத்து வருவது அவர்களாக இருக்கும்.
14.
– பிள்ளைகள் இருக்கும் பார்ட்டிகளில் மதுபானம் பாவிப்பதில்லை. வீட்டில் பிள்ளைகளின் முன் குடிப்பதும் இல்லை.
– விருந்துகளின்போது வைன் மட்டும் குடிக்கிறார்கள்.
15.
– பிள்ளை அடம்பிடிக்கும்போது, தவறு செய்யும்போது முதலில் இப்படி செய்யக் கூடாது என்று சொல்லப்படும்.
– பின்னர் பிள்ளையின் வயதுக்கேற்ப சாக்லெட் தடை, time out, பாக்கெட் மணி குடுக்காமல் விடுதல் எனத் தொடங்கி அதிகபட்சம் house arrest குடுக்கப்படுகிறது.
– அவர்கள் செய்யும் சின்னச் சின்ன வீட்டு வேலைகளுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. அதை பாக்கெட் மணியாகவோ சேமிப்பாகவோ வைக்கலாம்.
16.
பொதுவான சில விஷயங்கள்.
– பிள்ளைகள் மரியாதை தெரிந்தவர்களாக வளர வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறார்கள்.
– எதிர்காலத்தில் பிள்ளை நல்ல வழியில் போக/வாழ எப்போதும் வழிகாட்டியாக இருக்கிறார்கள்.
– குழந்தையில் இருந்து பதினெட்டு வயதுவரை வீட்டில் முடிவெடுப்பது பெற்றோர்தான்.
– பதின்ம வயது வந்ததும் பிள்ளையிடம் இருந்து எதையும் ஒளிப்பதில்லை. மனம்விட்டுப் பேசுகிறார்கள்.
– பதினெட்டு வயதின் பின் பிள்ளை படிப்பை விடுத்து வேலை தேடிக்கொள்ளுமாயின் பெற்றோரோடு தங்கும்பட்சத்தில் தானும் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும். அல்லது வெளியே போய் தன் காலில் வாழலாம்.
– ஈஸ்டர், கிறிஸ்மஸ், வீட்டு விசேசங்கள் போன்றவற்றில் எல்லோரும் ஒன்றாகச் சேர்கிறார்கள். குறிப்பாக கிறிஸ்மஸ்.
– அன்றாடம் நடக்கும் எல்லா விஷயங்களிலும் பிள்ளைகள் குழந்தையிலிருந்தே ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
17.
நேரம்.. குழந்தையில் இருந்தே நேரத்தோட அவசியத்தை புரிய வைக்கிறாங்க.. உதாரணமா ஏழு மணிக்கு பெட் டைம்னா குழந்தைக்கு தூக்கம் வரலைன்னாலும் அதனோட பெட்ல இரவு ஆடையோட இருக்கும்.. தூங்கும் வரை விளையாட்டும் பாட்டும் கதையுமாக போனாலும் அது அதனோட பெட்ல தான் இருக்கும்..
18.
எதையும் அது யாருடையதாக இருந்தாலும் அனுமதியோடு செய்யும் பழக்கம்.
அதே போலவே சின்ன விஷயமாக இருந்தாலும் முடிவு எடுப்பது அப்பாவும் அம்மாவும் சேர்ந்தே என்பதைக் குழந்தை தானாகவே புரிந்து கொள்கிறது. பெற்றார் எனக்கு பிரச்சனை இல்லை அப்பா/அம்மாவிடமும் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்று சொல்லத் தவறுவதில்லை. அதே சமயம் ஒருவருக்கு உடன்பாடில்லையென்றால், காரணமும் சரியாக அமைந்தால் அவர் கருத்துக்கு/முடிவுக்கு ஏற்ப முடிவை மாற்றிக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் குழந்தை பழகிக்கொள்கிறது.
புதுப் பாட்டு
Posted March 10, 2012
on:- In: (Auto)Biography | Art | Bangalore | Characters | Classroom | Confidence | Creativity | Fun | Games | Ideas | Imagination | Kids | Learning | Open Question | Play | Positive | Students | Teaching | Team Building | Uncategorized
- 9 Comments
நண்பர் வீட்டில் ஒரு சிறிய விழா. ஐந்தாறு குடும்பங்களைமட்டும் அழைத்து எளிமையான மாலை விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இப்படி வந்தவர்களில் ஏழெட்டுக் குழந்தைகள். நான்கு வயதுமுதல் பத்து வயதுவரை. பையன்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம விகிதத்தில்.
பெரியவர்கள் காபியும் கையுமாக அரட்டையடித்துக்கொண்டிருக்கையில் இந்தக் குழந்தைகளால் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாதே. அவர்கள் வீட்டை வலம் வரத் தொடங்கினார்கள். கண்ணில் பட்ட பொருள்களெல்லாம் அவர்களுடைய விளையாட்டுச் சாதனங்களாக மாறின.
விருந்துக்கு ஏற்பாடு செய்த நண்பர் தன்னுடைய மகனுக்காகத் தனி அறை ஒன்றை ஒதுக்கியிருந்தார். அந்த அறையின் சுவர்களில் ஏ, பி, சி, டி, ஒன்று, இரண்டு, மூன்று, நர்சரி ரைம்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் வண்ணமயமாகப் பூசப்பட்டிருந்தன. ஆங்காங்கே பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் புன்னகைத்தன.
இதனால், வீட்டைச் சுற்றி வந்த குழந்தைகளுக்கு அந்த அறை மிகவும் பிடித்துப்போய்விட்டது. சமர்த்தாக அங்கேயே சுற்றி உட்கார்ந்துகொண்டு விளையாட ஆரம்பித்தார்கள்.
ஹால் சோஃபாக்களை ஆக்கிரமித்திருந்த நாங்கள் இதைக் கவனிக்கக்கூட இல்லை. கொஞ்சநேரம் கழித்துதான் ‘குழந்தைங்கல்லாம் எங்கே போச்சு?’ என்று தேடினோம். அவர்கள் பத்திரமாக இருப்பதைத் தெரிந்துகொண்டு எங்களுடைய அரட்டையைத் தொடர்ந்தோம்.
அரை மணி நேரம் கழித்து, இரண்டு குழந்தைகள்மட்டும் அந்த அறையிலிருந்து ஓடி வந்தன. ‘உங்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ்’ என்றன.
’சர்ப்ரைஸா? என்னது?’
‘நாங்கல்லாம் சேர்ந்து உங்களுக்காக ஒரு நர்சரி ரைம் ரெடி பண்ணியிருக்கோம்’ என்றது ஒரு குழந்தை. ‘சீக்கிரமா வாங்க, பார்க்கலாம்!’
பெரியவர்களைப் பொறுத்தவரை, குழந்தைகளின் கற்பனை விளையாட்டுகள் அசட்டுத்தனமானவை, பெரிதாகப் பொருட்படுத்தத்தக்கவை அல்ல, ஆனாலும் அவர்கள் ஓர் ஆச்சர்யம் கலந்த ‘வெரி குட்’ சொல்லவேண்டியிருக்கிறது, குழந்தைகள் இழுக்கும் திசையில் நடக்கவேண்டியிருக்கிறது. நாங்களும் நடந்தோம்.
அந்தச் சிறிய அறைக்குள் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வெளிச்சம் பரவியிருந்தது. குழந்தைகள் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றபடி எங்களுக்காகக் காத்திருந்தார்கள். எங்களை அழைத்து வந்த குழந்தைகள் உள்ளே நுழைந்ததும், எல்லாரும் ஒருவரை ஒருவர் வெட்கப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டார்கள். பின்னர் ஒரே குரலில் பாட ஆரம்பித்தார்கள்.
முதல் வரி, ‘One Bird is singing’… உடனே அதற்கு ஏற்றாற்போல் வாயில் கை வைத்துக் குவித்தபடி ‘கூ, கூ, கூ’ என்று action.
அடுத்த வரி ‘Two Cars are racing’ என்று பாடிவிட்டு ‘ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று வண்டிகள் உறுமுகிற ஒலியுடன் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடின.
மூன்றாவது வரி ‘Three dogs are barking’. எல்லாரும் நான்கு கால்களால் தரையில் ஊர்ந்தபடி ‘வவ் வவ் வவ்’ என்று குரைத்தார்கள்.
இப்படியே ‘Four bees flying’, ‘five fishes swimming’ என்று தொடர்ந்து ‘Ten Stars are twinkling’ என அந்தப் பாட்டு முடிவடைந்தது, ஒவ்வொரு வரிக்கும் மிகப் பொருத்தமான Action செய்கையுடன்.
நியாயமாகப் பார்க்கப்போனால், அந்தப் பாட்டில் எந்த விசேஷமும் இல்லை. ஆனாலும், குழந்தைகள் (அதுவும் எங்களுடைய குழந்தைகள்) ஆடி, நடித்துக் காட்டுகிறார்கள் என்பற்காக நாங்கள் அனைவரும் சிக்கனமாகக் கை தட்டினோம். ‘வெரி குட், இந்தப் பாட்டு உங்க ஸ்கூல்ல சொல்லித்தந்தாங்களா?’ என்று கேட்டார் ஒருவர்.
‘இல்லை அங்கிள், நாங்களே ரெடி பண்ணோம்!’ என்றது ஒரு குழந்தை.
‘நிஜமாவா? எப்படி?’
எங்களுக்குப் பின்னால் இருந்த சுவரைக் கை காட்டியது ஒரு குழந்தை. ‘அதோ, அந்த பெயின்டிங்கை வெச்சு நாங்களே ஒரு ரைம் எழுதினோம், அதுக்கு ஏத்தமாதிரி டான்ஸ் பண்ணோம்.’
மற்றவர்களுக்கு எப்படியோ, அந்தக் குழந்தையின் பேச்சு எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. என்னதான் சாதாரணமான 1, 2, 3 ரைம் என்றாலும், இந்த வயதுக் குழந்தைகளால் சொந்தமாகப் பாட்டு எழுதவெல்லாம் முடியுமா என்ன? சும்மா புருடா விடுகிறார்கள் என்றுதான் நினைத்தேன். அவர்கள் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தேன்.
அங்கே இருந்தது ஒரு சுமாரான ஓவியம். குழந்தைகள் ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிப் பழகுவதற்காக ஒன்றன்கீழ் ஒன்றாகப் பத்து சதுரங்கள் போட்டு அதனுள் ஒரு பறவை, இரண்டு கார்கள், மூன்று நாய்கள், நான்கு வண்டுகள், ஐந்து மீன்கள், ஆறு பலூன்கள், ஏழு பட்டங்கள், எட்டு ஆப்பிள்கள், ஒன்பது புத்தகங்கள், பத்து நட்சத்திரங்கள் ஆகியவற்றை வரைந்திருந்தார்கள்.
நீங்களோ நானோ அந்த ஓவியத்தைப் பார்த்தால் விசேஷமாக எதுவும் நினைக்கமாட்டோம். பக்கத்தில் ஒரு குழந்தை இருந்தால் One, Two, Three என்று சொல்லித்தர முனைவோம். அல்லது ‘இதுல எத்தனை பட்டம் இருக்குன்னு எண்ணிச் சொல்லு, பார்க்கலாம்’ என்று அதற்குப் பரீட்சை வைப்போம்.
ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு, அந்த ஓவியம் ஒரு பாட்டுப் பயிற்சியாகத் தோன்றியிருக்கிறது. ஒரு பறவை என்றவுடன் ‘One Bird is singing’ என்று வாக்கியம் அமைத்து, அதற்கு ஏற்பப் பாடும் பறவையின் Action சேர்த்திருக்கிறார்கள், இப்படியே ஒவ்வொரு சதுரத்துக்கும் ஒரு வரியாக அவர்களே தங்களுக்குத் தெரிந்ததைச் சொந்தமாக எழுதியிருக்கிறார்கள், ஒவ்வொரு வரிக்கும் ஏற்ற Actions என்ன என்று யோசித்து நடனம் அமைத்திருக்கிறார்கள். அதை எல்லாரும் பலமுறை பாடி, ஆடிப் பார்த்துப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். எங்கள்முன் நடித்துக் காண்பித்திருக்கிறார்கள்.
மறுபடி சொல்கிறேன், அந்தப் பாட்டில் விசேஷமான வரிகள் எவையும் இல்லை. எல்லாம் அவர்கள் எங்கேயோ கேட்ட பாடல்களின் சாயல்தான். நடன அசைவுகளும்கூட அற்புதமானவையாக இல்லை.
அதேசமயம், அந்த வயதில் இந்தப் பத்து சதுரங்களை என்னிடம் யாராவது காட்டியிருந்தால் சட்டென்று ஒரு பாட்டு எழுதுகிற Creativity எனக்கு இருந்திருக்காது. ஏழெட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து அதற்கு நடனம் அமைக்கவும் தோன்றியிருக்காது. ‘உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்’ என்று பெற்றோரை இழுத்துவந்து பாடி, ஆடிக் காண்பித்திருக்கமாட்டேன்.
இந்தக் குழந்தைகளால் அது முடிகிறது என்றால், அதற்கு என்ன அடிப்படைக் காரணம்? இன்றைய வகுப்பறைகள் Creativityஐ ஊக்குவிக்கத் தொடங்கிவிட்டனவா? ஆசிரியர்கள் புதுமையான வழிகளில் பாடம் சொல்லித்தருகிறார்களா? ’எந்தப் படத்தைப் பார்த்தாலும் அதற்குப் பொருத்தமாகப் பாட்டு எழுதுவது எப்படி?’ என்று யாரேனும் இவர்களுக்குக் கற்றுத்தந்தார்களா? அவர்கள் புத்தகப் பாடங்களைமட்டும் உருப்போடாமல் புதிதாக எதையாவது யோசித்துச் செய்தால் கவனித்துப் பாராட்டும் சூழல் பள்ளியில், வெளியில் இருக்கிறதா? இந்தக் காலப் பெற்றோர் ‘ஒழுங்காப் படிக்கற வேலையைமட்டும் பாரு’ என்று குழந்தைகளை அடக்கிவைக்காமல் அவர்களுடைய இஷ்டப்படி செயல்பட அனுமதிக்கிறார்களா? ’நாம் பாடுவது சரியோ தப்போ’ என்று தயங்காமல் தன்னம்பிக்கையோடு அடுத்தவர்கள்முன் அதை Perform செய்து காண்பிக்கும் தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இந்தக் கோஷ்டியில் ஏதோ ஒரு குழந்தைக்குதான் அந்தப் பாட்டெழுதும் ஐடியா தோன்றியிருக்கவேண்டும், மற்ற குழந்தைகள் வரிகளை, Actionகளைச் சேர்த்திருக்கவேண்டும், இன்னொரு குழந்தை தலைமைப்பண்புடன் செயல்பட்டு இந்தப் பயிற்சி முழுவதையும் coordinate செய்திருக்கவேண்டும், சரியாகப் பாடாத, ஆடாத குழந்தைகளுக்கு மற்றவர்கள் சொல்லித்தந்து தேற்றியிருக்கவேண்டும், அரை மணி நேரத்துக்குள் ஒரு புத்தம்புது விஷயத்தை இப்படி ஆளுக்கொரு Role எனக் கச்சிதமாகப் பிரித்துக்கொண்டு செயல்படுத்துவது அவர்களுக்குள் எப்படி இயல்பாக நிகழ்ந்தது?
இதற்கெல்லாம் எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் இந்தக் கேள்விகளை யோசித்த அந்தக் கணத்தில் நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளில் விவரிப்பது சிரமம். அரட்டை பார்ட்டிக்கு நடுவே அந்தச் சாதாரணமான பாடல் உருவான சூழல் ஓர் அசாதாரணமான அனுபவமாக அமைந்துவிட்டது.
குழந்தைகள் நிதம் நிதம் நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
***
என். சொக்கன் …
10 03 2012