Archive for April 2012
சில அவசரச் சிபாரிசுகள்
Posted April 28, 2012
on:- In: Books | Poetry | Tamil | Uncategorized
- 7 Comments
ட்விட்டர் நண்பர் ஒருவர் இன்று எனக்கு இப்படிச் சில தனிப்பட்ட செய்தி(Direct Message)களை அனுப்பியிருந்தார்:
Pls suggest SOME good Tamil books with “thelivurai” that touch on epics like Ramayana,Mahabharatha and other Tamil literature
I know Q is very open ended. Even if u were 2 close ur eyes & type some recommendations that’s enuf
சாதாரணமாக யாராவது இந்தக் கேள்வியைக் கேட்டால் நான் பதில் சொல்லத் தயங்குவேன். காரணம் நான் பழந்தமிழ் இலக்கிய விற்பன்னன் அல்லன். ஆர்வத்தால் ஆங்காங்கே மேய்கிறவன். மற்றபடி எடை போட்டுக் கருத்துச் சொல்லுமளவு நான் வாசித்ததும் கிடையாது, சிந்தித்ததும் கிடையாது.
ஆனால் இந்த நண்பர் கேட்ட விதம் கொஞ்சம் தைரியம் தந்தது. சும்மா ‘கண்ணை மூடிக்கொண்டு சிபாரிசு’தானே? அதைச் செய்ய எக்ஸ்பர்ட் எதுக்கு? வரிசையாக Direct Messageகளால் அவரை நோகடித்தேன். அவை யாருக்கேனும் பயன்படக்கூடும் என்று இங்கேயும் பதிவு செய்துவைக்கிறேன். அவ்வப்போது புதிதாகத் தோன்றுபவற்றையும் சேர்க்கிறேன்.
ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள ராமாயண, மகாபாரதச் சுருக்கங்கள்
பி.ஸ்ரீ எழுதிய கம்ப சித்திரம் (2 தொகுதிகள்)
NCBH சங்க இலக்கியத் தொகுப்பு
புலியூர் கேசிகன் எழுதிய உரைகள் எவையாக இருந்தாலும் வாங்கலாம். மிகத் தெளிவாக விளக்கம் சொல்வார், சுருக்கமாகவும்
ஹரி கிருஷ்ணன் எழுதிய ‘அனுமன்: வார்ப்பும் வனப்பும்’ மிஸ் செய்யக்கூடாத புத்தகம்
திருவெம்பாவைக்கு பிஸ்ரீ எழுதிய உரை அருமையானது, திருப்பாவைக்குச் ‘சித்திரத் திருப்பாவை’ என்ற பழைய புத்தகம், இரண்டும் இப்போது அச்சில் இல்லை
தேவாரம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், திருவாசகம் போன்றவற்றுக்குப் பல உரைகள் உள்ளன. எது சிறப்பு எனச் சொல்லுமளவு நான் வாசிக்கவில்லை. இதற்கெல்லாம் உரையே அவசியமில்லை என்பார் @writerpara
சிலப்பதிகாரத்துக்கு என்னிடம் உள்ளது வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட எளிய உரை. எனக்குப் பிடித்துள்ளது, ஆனால் ஆழம் குறைவு
கம்ப ராமாயணத்துக்கு வை.மு.கோ. உரைதான் பெஸ்ட் என்கிறார்கள், நான் அதுதான் வாசிக்கிறேன், மற்றவைபற்றித் தெரியாது
கம்பர் என்று வரும்போது டிகேசி Must. அவரது கட்டுரைகளின் முழுத் தொகுப்பான ‘ரசிகமணி கட்டுரைகள்’ முதல் பகுதி முழுக்கக் கம்பர்தான், பாடல்களை மிக எளிதாக, மிக அற்புதமாக விரித்துரைப்பார்
அதே ரசிகமணி கம்பரின் பாடல்களில் தேர்ந்தெடுத்த சிலவற்றைத் தொகுத்துக் ‘கம்பர் தந்த ராமாயணம்’ என்று 3 தொகுதிகளாகத் தந்துள்ளார். அதுவும் அருமையாக இருக்கும். வானதி பதிப்பகம் வெளியீடு. (Warning: இது சுருக்கமான வடிவமே, முழுக் கதையோ / பாடல்களோ இருக்காது, ஆனால் நல்ல, எளிய உரை)
கலைஞரின் சங்கத் தமிழ் புத்தகம் நன்றாயிருக்கும் (பல ஜொள் படங்களுடன் 😉 ) ஆனால் வர்ணனை வளவளா ஜாஸ்தி, தொல்காப்பியப் பூங்கா நான் இன்னும் வாசிக்கவில்லை
தொல்காப்பியத்துக்கு நான் வாசிக்கும் உரை மிக எளிமையானது. மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு. உரையாசிரியர் பெயர் நினைவில்லை. தேடச் சோம்பேறித்தனம்
திருக்குறளுக்குப் பல உரைகள் உள்ளன. இதில் பல இணையத்திலேயே கிடைக்கின்றன. வாங்கியே தீரவேண்டிய குறள் உரை என்று எதுவும் எனக்குத் தோன்றவில்லைகாளமேகம், ஔவையார் தனிப்பாடல்களைப் புலியூர் கேசிகன் உரையுடன் தந்துள்ளார். அட்டகாசமாக இருக்கும்
சித்தர் பாடல்களில் எனக்குப் பரிச்சயம் அதிகம் இல்லை, So no idea about best உரை
திருமந்திரத்துக்கு ஒரு பிரமாண்ட உரை ராமகிருஷ்ண மடத்தில் பார்த்தேன். ஏனோ வாங்கவில்லை. சும்மா புரட்டியதில் நன்றாகவே இருந்தது
எனக்கு ரொம்பப் பிடித்தது, குறுந்தொகை புலியூர் கேசிகன் உரை. பலமுறை வாசித்து ஏடுஏடாகப் பிரிகிற நிலையில் உள்ளது,கோவையில் 5ரூக்கு வாங்கியது:)
திருப்புகழ், கந்தபுராணம் இரண்டுக்கும் வாரியார் எழுதிய உரை மிகச் சிறப்பானது என்று ஒரு நண்பர் சொல்லக் கேட்டுள்ளேன். இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை
Remember, இவை எந்தத் தர வரிசையின் அடிப்படையிலும் அமைந்தவை அல்ல. இந்தக் கேள்வியைக் கேட்டதும் எனக்குத் தோன்றியவற்றைத் தட்டினேன். அவ்வளவே. இதில் பல நல்ல நூல்கள் (நான் வாசிக்காதவை (அ) வாசித்து மறந்துபோனவை) விடுபட்டிருக்கக்கூடும், ஆனால் மோசமான நூல்கள் எவையும் இல்லை என்று நினைக்கிறேன்.
இதுகுறித்து உங்கள் கருத்துகள், சிபாரிசுகளையும் பின்னூட்டத்தில் சேருங்கள். நன்றி!
***
என். சொக்கன் …
28 04 2012