மனம் போன போக்கில்

’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 2

Posted on: June 18, 2012

அறிமுகம்

முந்தைய தொகுப்புகள்

8

சில புத்தகங்களைப் படித்தால் பிடிக்கும், வேறு பல புத்தகங்களின் அட்டையைப் பார்த்தால் பிடிக்கும், அபூர்வமாகச் சில புத்தகங்களை, அவற்றின் பெயரைக் கேட்டாலே பிடித்துவிடும்.

அப்படி ஒரு புத்தகம், ‘போஜன குதூகலம்’!

சிரிக்காதீர்கள், நிஜமாகவே அப்படி ஒரு புத்தகம் இருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த மராட்டியரான ரகுநாதர் என்பவர் எழுதியது, பலவிதமான உணவுகள், அதில் பயன்படுத்தப்படும் பொருள்கள், அவற்றின் குணங்கள் போன்றவற்றைப்பற்றி விவரிக்கும் நூல் இது.

1974ம் வருடம், இந்தப் புத்தகம் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது. உங்கள் கண்ணில் பட்டால் எனக்கும் சேர்த்து ஒரு பிரதி வாங்குங்கள்.

9

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனிடம் அவரைக் கவர்ந்த படைப்புகள்பற்றிக் கேட்கப்பட்டபோது அவர் தந்த சிறு பட்டியல்:

  • பா. செயப்பிரகாசம் எழுதிய ‘இருளுக்கு இழுப்பவர்கள்’
  • லா. ச. ரா. எழுதிய ‘சிந்தா நதி’
  • ஜெகச்சிற்பியன் எழுதிய ‘காணக் கிடைக்காத தங்கம்’
  • ர. சு. நல்லபெருமாள் எழுதிய ‘கேட்டதெல்லாம் போதும்’
  • ர. சு. நல்லபெருமாள் எழுதிய ‘கல்லுக்குள் ஈரம்’
  • கல்கி ராஜேந்திரன் எழுதிய ‘சுழிக்காற்று’
  • ரா. கி. ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் வந்த ‘பட்டாம்பூச்சி’
  • சுஜாதா, மேலாண்மை பொன்னுசாமியின் சிறுகதைகள்

(ஆதாரம் : ‘இவள் புதியவள்’ மாத இதழ் : ஜூன் 2012)

10

Literary Criticism என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

ஆரம்பத்தில் இதனை ‘இலக்கிய விமர்சனம்’ என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்களுக்கு இந்த வார்த்தை பொருத்தமாகத் தோன்றவில்லை. ஒரு படைப்பின் இலக்கியத்திறனை ஆராய்ச்சி செய்வது எனும் அர்த்தத்தில் ‘இலக்கியத் திறனாய்வு’ என்ற சொல்லை உருவாக்கிப் பயன்படுத்த ஆரம்பித்தார்.

அப்போது பிரபலமான விகடன் இதழ் அ. ச. ஞா. அவர்களைக் கிண்டலடித்தது, ‘திறனாம்! ஆய்வாம்! விமர்சனம் என்ற அருமையான வார்த்தை இருக்கும்போது இது எதற்கு?’ என்று கேலி செய்து எழுதியது.

சில வருடங்கள் கழித்து, அதே விகடன் ‘திறனாய்வு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்தது. ‘ஏன்?’ என்று கேட்டபோது விகடன் ஆசிரியர் எஸ். எஸ். வாசன் சொன்னது, ‘இனிமே விமர்சனம்ன்னு எழுதினா ஆனந்த விகடனைக் கொளுத்திப்புடுவாங்க.’

(ஆதாரம்: பேராசிரியர் அ.ச.ஞா.வின் பதில்கள்)

11

’மணிமேகலை’ காவியத்தை எழுதிய ’சீத்தலை சாத்தனார்’ என்ற புலவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை கேட்டிருப்பீர்கள்.

அவர் ஓலைச் சுவடி கொண்டு எழுதுவாராம், அதில் ஏதாவது தப்பாகிவிட்டால் தன் தலையிலேயே அதனால் குத்திக்கொள்வாராம், இப்படிக் குத்திக் குத்தித் தலை புண்ணாகி சீழ் கண்டுவிட்டதாம், ஆகவே அவருக்குச் ‘சீழ்த் தலைச் சாத்தனார்’ என்று பெயர் வந்ததாம், அது பின்னர் ‘சீத்தலைச் சாத்தனார்’ என்று மாறியதாம்.

இதெல்லாம் யாரோ விட்ட ரீல். நம்பாதீர்கள்!

‘சீத்தலை’ என்பது சோழ நாட்டில் உள்ள ஓர் ஊர். அங்கே பிறந்த இந்தப் புலவரின் பெயர் சாத்தன், மரியாதை காரணமாக அவரை எல்லாரும் ‘சாத்தனார்’ என்று அழைத்தார்கள்.

ஆனால் அந்தக் காலத்தில் ‘சாத்தனார்’ என்ற பெயரில் பல புலவர்கள் இருந்ததால், ‘சீத்தலையைச் சேர்ந்த சாத்தனார்’ என்று இவர் அழைக்கப்பட்டார். ’பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்’, ‘சீர்காழி கோவிந்தராஜன்’, ‘நெல்லை கண்ணன்’ போல, இவர் ‘சீத்தலை சாத்தனார்’, அவ்வளவுதான்.

(ஆதாரம்: டாக்டர் இராசமாணிக்கனார் எழுதிய ‘நாற்பெரும் புலவர்கள்’)

12

ஒரு நல்ல சிறுகதை என்பது எப்படி இருக்கவேண்டும்? நம்முடைய அனுபவங்களை அப்படியே எழுதுவது கதைதானா? அதில் விசேஷமாக எதுவும் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? பேசாமல் மற்ற மொழி எழுத்தாளர்களின் நல்ல உத்திகளைக் கற்றுக்கொண்டு அவற்றை இங்கே கொண்டுவந்துவிட்டால் என்ன? அது தவறா?

இந்த விவாதங்கள் பல காலமாக உள்ளன. எழுத்தாளர் தி. ஜ. ரங்கநாதன் இதற்கு ஒரு சுவையான, நெத்தியடியான பதில் எழுதியிருக்கிறார்:

‘எங்கள் கதை ஒவ்வொன்றும் ஒரு ராஜ்யத்தையே (எங்கள் அனுபவ உலகத்தையே) கொடுத்து வாங்கியதாகும். இந்த விலையெல்லாம் தந்து வாங்கியபின்னும், எங்கள் கதை ஒரு நொண்டி மாடாகவே இருக்கலாம். ஆயினும், அது எங்கள் கதை. சுழியும் குறியும் சுத்தமாக இருந்தாலும் திருட்டு மாட்டை அப்படி விலை கூறமுடியுமா?’

‘மீனுக்கு ஒரே சொர்க்கம்தான் உண்டு: தண்ணீர். அதில் வியப்பென்ன?’

(ஆதாரம்: ‘தொலைந்தவன்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலின் முன்னுரை, எழுதியவர்! ராஜரங்கன்)

13

நடிகர் கமலஹாசனின் புதுப்படம் வரப்போகிறது. போஸ்டர்களில் படத்தின் பெயரை அரபி எழுத்துகளில் எழுதியிருப்பதால் இஸ்லாமியர்களை மையமாகக் கொண்ட கதையாக இருக்குமோ என்று பல ஊகங்கள் உலவுகின்றன.

கமலஹாசன் பிரபலமாகத் தொடங்கிய நேரம். ‘குமுதம்’ ஆசிரியர் குழுவினர் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். எடிட்டர் எஸ். ஏ. பி. ‘தமிழ் சினிமாவில் ஓர் இஸ்லாமியர் இந்த அளவு உயரத்துக்கு வருவது அபூர்வம்’ என்றார்.

‘என்னது இஸ்லாமியரா?’ என்றார் ரா. கி. ரங்கராஜன்.

‘ஆமாம், கமால் ஹாசன் என்பது முஸ்லிம் பெயர்தானே?’

‘இல்லவே இல்லை’ என்று மறுத்தார் ரா. கி. ரங்கராஜன், ‘அவர் பரமக்குடியைச் சேர்ந்த வைணவர். எனக்கு நன்றாகத் தெரியும்.’

‘சும்மாக் கதை விடாதீர்கள்’ என்றார் எஸ். ஏ. பி. ‘வேண்டுமென்றால், ஒரு நிருபரை அனுப்பி இதுபற்றி விசாரிக்கச் சொல்லுங்கள்.’

உடனடியாக, செல்லப்பா என்ற திரைப்பட நிருபர் கமலஹாசன் வீட்டுக்குச் சென்றார். அவருடைய தந்தையை நேரில் சந்தித்து, ‘நீங்கள் முஸ்லீமா?’ என்று கேட்டார்.

’இல்லையே.’

‘அப்புறம் ஏன் உங்கள் மகன்களுக்குக் கமலஹாசன், சாருஹாசன், சந்திரஹாசன் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?’

‘ஹாசன் என்று எனக்கு ஒரு முஸ்லிம் நண்பர் இருந்தார்’ என்றார் கமலின் தந்தை. ‘அவர் நினைவாகதான் என் மகன்களுக்கு இப்படிப் பெயர் வைத்தேன்.’

நிருபர் திரும்பி வந்து எஸ். ஏ. பி.யிடம் விஷயத்தைச் சொன்னார். அப்புறம்தான் அவர் ’கமலஹாசன் முஸ்லிம் அல்ல’ என்று ஒப்புக்கொண்டார்.

’எங்கிருந்து வருகுதுவோ…’ என்ற புத்தகத்தில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடும் ரா. கி. ரங்கராஜன் ‘சிலர் பேருக்குச் சில தப்பான கருத்துகள் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும். அதை மாற்றுவது கடினம். ஆதாரம் காட்டினால் மாற்றிக்கொள்வார்கள். என் குருநாதர் எஸ். ஏ. பி.யும் அப்படிதான்’ என்கிறார்.

நீங்கள் எப்படி?

14

பேசுவதுபோல் எழுதலாமா? தப்பில்லையோ?

‘இல்லவே இல்லை’ என்பது ‘தினந்தந்தி’ நிறுவனர் ஆதித்தனாரின் கட்சி. குறிப்பாக, நாளிதழ்களுக்கு எழுதும்போது எப்படி எழுதவேண்டும் என்பதுபற்றி அவர் தனது ‘இதழாளர் கையேடு’ நூலில் சொன்ன சில டிப்ஸ்:

  • பேச்சு வழக்கில் இருக்கும் தமிழே, உயிருள்ள தமிழ். அதைக் கொச்சை நீக்கி எழுதுங்கள்
  • இலக்கியத் தமிழில் எழுதுவது பெருமையாகக் கருதப்படுகிறது. ஆனால் நாளிதழில் அப்படி எழுதினால் அது பலருக்குப் புரியாது. பேச்சுத் தமிழையே எழுதவேண்டும். இதுவே தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஒரு நாளிதழ் செய்யவேண்டிய தொண்டு
  • தாரணமாக, ‘நான்மாடக்கூடலை நண்ணினோம்’ என்று எழுதாதீர்கள் ‘மதுரைக்குப் போனேன்’ என்று எழுதுங்கள், ‘கரத்தில் பெற்றார்’ என்று எழுதாதீர்கள், ‘கையில் வாங்கினார்’ என்று எழுதுங்கள்

(தொடரும்)

நன்றி : https://www.facebook.com/600024books

***

என். சொக்கன் …

18 06 2012

4 Responses to "’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 2"

அருமையான தகவல்கள்.
நன்றி சார்.

// ’எங்கிருந்து வருகுதுவோ…’ என்ற புத்தகத்தில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடும் ரா. கி. ரங்கராஜன் ‘சிலர் பேருக்குச் சில தப்பான கருத்துகள் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும். அதை மாற்றுவது கடினம். ஆதாரம் காட்டினால் மாற்றிக்கொள்வார்கள். என் குருநாதர் எஸ். ஏ. பி.யும் அப்படிதான்’ என்கிறார். //

சொக்கன் சார் …இதுவே ஒரு தப்பான தகவல் தான், இப்படித்தான் பல பேர் ஆளாளுக்கு ஒரு கதைய சொல்லிட்டிருக்காங்க…but உண்மை என்னான்னு இந்த video பார்த்தா தெரியும்….வரலாறு முக்கியம் மந்திரியாரே!!!!

Mohan,

அவரும் கொஞ்சம் ஊகமாகதான் சொல்கிறார் 🙂 ரா. கி. ரங்கராஜன் அனுப்பிய நிருபர் கமலின் தந்தையை நேரடியாகப் பேட்டி எடுத்திருக்கிறார். ஆகவே அந்தக் குறிப்பில் எந்தத் தவறும் இல்லை என்று நினைக்கிறேன்.

On The other hand, அது தவறாகவே இருப்பினும், விஷயம் அதுவல்ல. நான் சொல்லவந்தது ‘ஒரு தவறான தகவலை (கமலஹாசன் முஸ்லீம்) உறுதியாக நம்பி, ஆதாரம் காட்டியபின் மாற்றிக்கொள்வது’. அவ்வளவுதான்

:)….:)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,741 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2012
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
%d bloggers like this: