Archive for July 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 8
Posted July 30, 2012
on:50
புத்தகங்களைப் பற்றிய புதுக்கவிதை (அல்லது பொன்மொழி) ஒன்று. எழுதியவர், நெல்லை ஜெயந்தா:
நாம் புத்தகங்களை மேலிருந்து கீழாக வாசிக்கிறோம், அவையோ நம்மைக் கீழிருந்து மேலாகத் தூக்கிவிடுகின்றன!
51
தமிழில் இது எதார்த்த எழுத்துகள், சோதனை முயற்சிகளின் காலம். இதற்குமுன்னால் ‘லட்சியவாத’ எழுத்துகள் ஆட்சி செய்தன. அந்தக் காலகட்டத்து எழுத்து வேந்தர்களில் ஒருவர், ’தீபம்’ நா. பார்த்தசாரதி. பரவலான வாசகர் வட்டத்துடன் எழுதியவர், அதேசமயம் பல விருதுகளையும் வென்றவர். ’சமுதாய வீதி’ என்ற அவரது நூலுக்கு இந்திய அரசு வழங்கும் ‘சாகித்ய அகாதெமி’ விருது கிடைத்தது.
நா. பார்த்தசாரதி ’கல்கி’ இதழில் ‘மணிவண்ணன்’ என்ற பெயருடன் எழுதிய ’சூப்பர் ஹிட்’ தொடர்கதை, ‘குறிஞ்சி மலர்’. பின்னர் இது ஒரு பிரபலமான தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது நினைவிருக்கலாம்.
‘குறிஞ்சி மலர்’ முன்னுரையில், லட்சியவாத எழுத்து பற்றி நா. பார்த்தசாரதி ஓர் அழகிய உதாரணம் தந்துள்ளார். அது:
‘மருக்கொழுந்துச் செடியில் வேரில் இருந்து நுனித் தளிர்வரை எங்கே கிள்ளி மோந்தாலும் மணக்கும். அதுபோல, என்னுடைய இந்த நாவலின் எந்தப் பகுதியை எடுத்து வாசித்தாலும் பண்பும் ஒழுக்கமும் வற்புறுத்தப்படுகிற குரல் ஒலிக்கவேண்டும் என்று நினைத்து நான் எழுதினேன். கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் இன்று வளர்ந்து வரும் தமிழ் நம்பியரும் நங்கையரும் எதிர்காலத் தமிழ்ச் சமுதாயப் பண்ணையின் நாற்றங்கால் என்று நினைவூட்ட விரும்பினேன்.’
52
தமிழின் சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் வாசிக்கச் சுகமானவை, சொற்செறிவு, அற்புதமான கற்பனை நயம் போன்றவற்றைத் தாண்டி, அன்றைய வாழ்க்கைமுறையை, நம்பிக்கைகளை, மதிப்பீடுகளை (ஓரளவு சரித்திரத்தையும்) உணர்வதற்கு உதவுகிறவை.
ஆனால், இந்த நூல்கள் எப்போது எழுதப்பட்டவை என்பதுகுறித்துத் திட்டவட்டமாகச் சொல்வதுதான் மிகச் சிரமமாக இருக்கிறது. இதுபற்றிய ஆராய்ச்சியில் பல அறிஞர்கள் நேரம் செலவிட்டிருக்கிறார்கள். ‘அவை எப்போது எழுதப்பட்டால் என்ன? அதைப் பற்றிக் கவலைப்படாமல் வாசித்து மகிழ்வோம்’ என்று சொல்கிறவர்களும் பலர் உண்டு.
பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில், பல ஆதாரங்களின் அடிப்படையில், ’எட்டுத்தொகை’ எனப்படும் முதன்மையான சங்க இலக்கிய நூல்கள் இந்த வரிசையில்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று ஊகித்துள்ளார்:
1. குறுந்தொகை
2. நற்றிணை
3. அக நானூறு
4. ஐங்குறுநூறு
5. பதிற்றுப் பத்து
6. புற நானூறு
7. கலித்தொகை
8. பரிபாடல்
53
ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற ‘ரோமியோ : ஜூலியட்’ நாடகம் பல மொழிகளில் வெளிவந்துள்ளது. தமிழிலேயே பலமுறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அப்படி ஒரு மொழிபெயர்ப்பு, 1992ம் வருடம் ’அன்னை வெளியீட்டகம்’ என்ற பதிப்பகத்தால் வெளியானது. இதை மொழிபெயர்த்தவர் பெயர் என்ன தெரியுமா?
தான்தோன்றிக் கவிராயர்!
சிரிக்காதீர்கள், நிஜமாகவே அதுதான் அந்த மொழிபெயர்ப்பாளரின் புனைபெயர்.
’மனிதர் நல்ல தமாஷான பேர்வழியாக இருப்பார்போல’ என்று உள்ளே போனால், முன்னுரையிலேயே ஏகப்பட்ட வெடிச்சிரிப்புகள். உதாரணமாக, அங்கே குறிப்பிடும் ஒரு குறும்புக் கவிதை:
தலைப்பு: ‘சோம்பல்’
கவிதை: ‘அட! நாளைக்கு எழுதலாம்.’
54
சோழ நாட்டை ஆண்ட பெருமன்னர்களில் ஒருவன், அனபாய சோழன். அவனுடைய சபையில் முதலமைச்சராகப் பணியாற்றியவர், அருண்மொழித் தேவர்.
அன்றைய சோழ நாட்டில் சமண இலக்கியங்கள்தான் பரவலாக வாசிக்கப்பட்டன. சிவனை வழிபடும் மரபில் வந்த அருண்மொழித் தேவர் சைவ இலக்கியங்களும் அப்படிப் பிரபலமாகவேண்டும் என்று விரும்பினார். சோழனிடம் அதுபற்றிப் பேசினார். சைவத் தொண்டர்கள் பலருடைய வாழ்க்கையை விவரித்துச் சொன்னார்.
சோழன் மகிழ்ந்தான். ‘இதைத் தாங்களே ஒரு பெருங்காப்பியமாக எழுதித் தரவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டான்.
இப்படி எழுதப்பட்ட நூல்தான், ’திருத்தொண்டர் புராணம்’ எனப்படும் ‘பெரிய புராணம்’. அதனை எழுதிய அருண்மொழித் தேவரை நாம் இப்போது ‘சேக்கிழார்’ என்ற பெயரால் அறிகிறோம். அது அவர் பிறந்த வேளாளர் குல மரபின் பெயர்.
(ஆதாரம்: மு. அருணாசலம் எழுதிய ‘சேக்கிழார்’ நூல்)
55
தமிழுக்குப் பல முக்கியமான திறனாய்வு நூல்களையும் மொழிபெயர்ப்புகளையும் தந்தவர் தி. க. சி. (திருநெல்வேலி கணபதி சிவசங்கரன்), இந்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர், வண்ணதாசன், கல்யாண்ஜி என்ற புனைபெயர்களில் அற்புதமான சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ள எஸ். கல்யாணசுந்தரம் இவரது மகன்.
தி.க.சி.யைப் பற்றிப் பேசும்போது, அவரது கடிதங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். தனக்கு வரும் புத்தகங்கள், பத்திரிகைகள் அனைத்தையும் விடாமல் படித்துவிட்டு, தனது பாராட்டுகள், விமர்சனங்களை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பிவிடுவார். அவரது கடிதங்களைப் படித்து ஊக்கம் கொண்டவர்கள், அந்த அஞ்சல் அட்டையை ஒரு விருதுக்கு இணையாகப் பாதுகாக்கிறவர்கள், அதனாலேயே மிகத் தீவிரமாக எழுதத் தொடங்கிய இளம் எழுத்தாளர்கள் ஏராளம்.
முதிர்ந்த வயது காரணமாக, தி.க.சி.க்குக் கை நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. அப்போதும் தொடர்ந்து வாசித்து, கடிதங்கள் எழுதிவந்தார். நண்பர்கள் அதைக் கண்டித்தபோது அவர் சொன்ன பதில், ‘அரை மணி நேரம் எழுதுவேன், பிறகு அரை மணி நேரம் ஓய்வு எடுத்துக்குவேன், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா எழுத நினைச்சதை எழுதி முடிச்சுடுவேன்.’
‘கடிதங்களுக்கு இவ்வளவு சிரமப்பட்டுப் பதில் எழுதணுமா?’
’ரோட்டுல நடந்து போறோம், எதிர்த்தாப்ல ஒருத்தர் வர்றார், நம்மளப் பார்த்து வணக்கம் சொல்றார், ஒரு மரியாதைக்குத் திருப்பி நாமளும் வணக்கம் சொல்லணுமா, வேண்டாமா?’
(ஆதாரம்: வே. முத்துக்குமார் எழுதிய ’தி.க.சி. : மாறாத இலக்கியத்தடம்’ கட்டுரை)
56
தமிழில் உள்ள 42 எழுத்துகள் ’ஓரெழுத்து ஒரு மொழி’ என்ற வகையைச் சேர்ந்தவை. அதாவது, அந்த எழுத்தே ஒரு சொல்லாகப் பொருள் தரும். அவற்றின் பட்டியல் இங்கே, அதிகம் புழக்கத்தில் இல்லாத சொற்களுக்குமட்டும் அடைப்புக்குறியில் விளக்கம் தந்துள்ளேன்.
ஆ (பசு), ஈ, ஊ (இறைச்சி), ஏ (அம்பு), ஐ, ஓ, மா (பெரிய / விலங்கு), மீ (உயரம்), மு (மூப்பு), மே (மேன்மை), மை, மோ (முகர்தல்), தா, தீ, தூ (வெண்மை), தே (தெய்வம்), தை, பா, பூ, பே (நுரை, அழகு), பை, போ, நா, நீ, நே (அன்பு), நை, நோ (நோவு), கா (சோலை), கூ, கை, கோ (அரசன்), வா, வீ (பூ, அழகு), வை, வௌ (கௌவுதல்), சா, சீ, சே (எருது), சோ (மதில்), யா (மரம்), நொ (துன்பம்), து (கெடு)
(ஆதாரம்: ’ஊற்று’ சிற்றிதழ் : மே 2008)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
30 07 2012
மாற்றத்தான் வேண்டுமோ?
Posted July 26, 2012
on:- In: (Auto)Biography | Art | Fiction | Learning | Magazines | Reading | Reviews | Short Story | Uncategorized
- 16 Comments
சில நாள்களுக்கு முன்னால், ஒரு வித்தியாசமான அனுபவம்.
கடந்த பிப்ரவரியில், ஒரு பிரபல பத்திரிகையிலிருந்து சிறுகதை கேட்டிருந்தார்கள். உடனே எழுதிக் கொடுத்தேன்.
வழக்கம்போல், பல மாதங்கள் கழித்து ஒரு மாலை நேரம், அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘சார், கதை படிச்சோம், ரொம்பப் பிரமாதமா இருக்கு’ என்றார்கள்.
‘சரிங்க, சந்தோஷம்!’ என்றேன்.
‘இந்தக் கதை எந்த இஷ்யூல வருதுன்னு நாளைக்கு ஃபோன் பண்ணி கன்ஃபர்ம் பண்றேன் சார். நன்றி!’
சொன்னபடி மறுநாள் காலை ஃபோன் வந்தது. ‘சார், அந்தக் கதைபத்திக் கொஞ்சம் பேசணுமே. நேரம் இருக்குமா?’
‘பேசலாம், சொல்லுங்க!’
அடுத்த மூன்று நிமிடங்கள் அவர் அந்தக் கதையைச் சுருக்கமாக விவரித்தார். அதன்மூலம் நான் சொல்ல நினைத்த விஷயங்களையும் சொல்லாமல் விட்ட கருத்துகளையும் மிகத் தெளிவாக விளக்கினார்.
எனக்கு ஆச்சர்யம். ஒருபக்கம், கதை எழுதியவனிடமே கதையைக் குடலாப்ரேஷன் செய்கிறாரே என்கிற வியப்பு. இன்னொருபக்கம், என்னுடைய கதையை இத்தனை தெளிவாகப் புரிந்துகொண்டு பேசியவர்கள் இதுவரை யாருமே இல்லை, நானே அந்தக் கதையை இன்னொருவருக்கு விவரித்திருந்தால் எப்படிச் செய்திருப்பேனோ அந்த அளவு தெளிவாக அவர் பேசினார். சிறுகதைகள்பற்றி இத்தனை புரிதலும் முதிர்ச்சியும் கொண்ட ஓர் உதவி ஆசிரியரிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது.
கதையை முழுக்க விவரித்துவிட்டு அவர் கேட்டார். ‘சார், இதானே நீங்க சொல்லவந்தது? நான் சரியாப் புரிஞ்சுகிட்டிருக்கேனா?’
’ஆமாங்க. ரொம்ப அழகாச் சொல்லிட்டீங்க’ என்றேன் நான்.
அவர் சற்றுத் தயங்கினார். பிறகு, ‘சார், இந்தக் கதையைப் பிரசுரிக்கறதுல ஒரு சின்னப் பிரச்னை.’
‘என்னாச்சு?’
‘எங்க பொறுப்பாசிரியர் கதையை இன்னிக்குதான் படிச்சார். அவர் இந்த க்ளைமாக்ஸ் சரியில்லை, மாத்தணும்ன்னு ஃபீல் பண்றார்’ என்றார் அவர். கதைக்கு இன்னொரு வித்தியாசமான முடிவை விவரித்தார்.
எனக்கு அது சற்றும் பிடிக்கவில்லை. ‘ரொம்ப childishஷா இருக்குங்களே!’ என்றேன்.
‘ஆமா சார்’ என்றார் அவர். ‘உங்க கதைக்கு நீங்க எழுதியிருக்கிற முடிவுதான் மிகச் சரியானது. அதை இப்படி மாத்தினா கதையே வீணாகிடும்.’
‘சரிங்க, இப்ப என்ன செய்யறது?’
’சார், நான் சொல்றதைத் தப்பா நினைச்சுக்காதீங்க, அவங்க சொல்லிக் கேட்க வேண்டிய நிலைமையில நான் இருக்கேன்.’
‘ஒண்ணும் பிரச்னை இல்லைங்க, எதுவானாலும் தயங்காம சொல்லுங்க.’
’நீங்க இந்தக் கதையோட க்ளைமாக்ஸை மாத்தினாதான் இது எங்க பத்திரிகையில பிரசுரமாகும்ன்னு நினைக்கறேன். ஆனா அப்படி மாத்தினா மொத்தக் கதையும் கெட்டுப்போயிடும்.’
‘உண்மைதாங்க!’
‘ஆனா, இதை நான் எங்க எடிட்டர்கிட்ட சொல்லமுடியாது. நீங்க சொன்னதாச் சொன்னாலும் அவர் கோவப்படுவார்.’
‘ஓகே!’
‘எனக்கு என்ன தோணுதுன்னா, இந்தக் கதை இந்த வடிவத்துல பிரசுரமாகணும், இல்லாட்டி அது பிரசுரமாகாம இருக்கறதே நல்லது’ என்றார் அவர். ‘இது என் கருத்துமட்டுமே, நீங்க விரும்பினா க்ளைமாக்ஸை மாத்திப் பிரசுரிக்கறோம், என்ன சொல்றீங்க?’
நான் கொஞ்சம் யோசித்தேன். கொள்கைப் புடலங்காயெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால் அந்தப் புது க்ளைமாக்ஸ் இந்தக் கதைக்குக் கொஞ்சமும் பொருந்தாது. மொத்தக் கதையையும் வெட்டிச் சாய்த்துவிடும்.
நான் வருஷத்துக்கு ரெண்டு கதை எழுதுகிறவன். ஒரு கதை பிரசுரமாகாவிட்டால் என்ன பெரிய பிரச்னை? அப்படி குப்பையாகக் கதையைச் செய்து அச்சில் பார்க்கவேண்டுமா என்ன?
‘பரவாயில்லைங்க, அந்தக் கதையைத் திரும்பக் கொடுத்துடுங்க, நான் புதுசா வேற கதை எழுதித் தர்றேன்’ என்றேன்.
அவருக்குப் பெரும் நிம்மதி. ‘ஒருபக்கம் சந்தோஷமாவும் இன்னொருபக்கம் ரொம்ப வருத்தமாவும் இருக்கு சார்’ என்றார்.
‘கவலைப்படாதீங்க, இந்தக் கதை இதே வடிவத்தில வேறு எங்காவது பிரசுரமாகும்ன்னு நம்பறேன். லட்சம் பேர் ஒரு சுமாரான கதையைப் படிக்கறதைவிட, நான் எழுதின வடிவத்தில நீங்கமட்டுமாவது படிச்சு ரசிச்சு இந்த அளவுக்குப் புரிஞ்சுகிட்டு எனக்கே விளக்கிச் சொன்ன அனுபவம், ரூபாய் கொடுத்தாக் கிடைக்காது. நன்றி’ என்றேன்.
சத்தியமாக அது புகழ்ச்சி வார்த்தை அல்ல. அந்தக் கணத்தில் ஆத்மார்த்தமாகத் தோன்றியது. சிறுகதைகள் வழக்கொழிந்துவரும் இன்றைய நாள்களில், எனக்கு இப்படி ஓர் அனுபவம் மறுபடி என்றும் கிடைக்கப்போவதில்லை என்று நினைக்கிறேன். ஆண்டவன் கருணையுள்ளவன்!
***
என். சொக்கன் …
26 07 2012
தேடல்
Posted July 24, 2012
on:- In: (Auto)Biography | நவீன அபத்தங்கள் | Books | Change | Lazy | Learning | Life | Memory | Open Question | Perfection | Reading | Uncategorized
- 5 Comments
இன்று காலை, எம். எஸ். சுவாமிநாதனைப் பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி, அவருடைய தந்தை கும்பகோணம் நகரத் தலைவராகப் பணியாற்றியதாகக் குறிப்பிட்டது.
இந்த வரியைப் படித்தவுடன், என் மண்டைக்குள் ஒரு பல்ப் எரிந்தது. இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால், ஒரு கொசு ரீங்காரமிட்டது.
காரணம், எம். எஸ். சுவாமிநாதனின் தந்தையைப் பற்றி நான் ஏற்கெனவே ’கொஞ்சூண்டு’ கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாள் கும்பகோணத்தின் மிகப் பெரிய பிரச்னையாக இருந்த கொசுத் தொல்லையையும், அதனால் வரும் நோய்களையும் ஒழிப்பதற்காக அவர் பல முயற்சிகளை எடுத்த கதையையும், அப்போது சிறுவராக இருந்த சுவாமிநாதன் அவற்றில் பங்கேற்றதையும்கூடப் படித்திருக்கிறேன்.
ஒரே பிரச்னை, இதையெல்லாம் எங்கே படித்தேன் என்று சுத்தமாக ஞாபகம் வரவில்லை.
அதனால் என்ன? கூகுளைத் திறந்து ‘M S Swaminathan, KumbakoNam, Mosquito problem’ என்று பலவிதமாகத் தட்டித் தட்டினால் மேட்டர் கிடைத்துவிடுமே.
உண்மைதான். ஆனால், நான் இதைப் படித்தது இணையத்தில் அல்ல. ஓர் அச்சுப் புத்தகத்தில்தான், நன்றாக நினைவிருக்கிறது.
அதுமட்டுமில்லை, அந்தப் புத்தகம் வெறுமனே தகவல்களை வறட்டு நடையில் தராமல், ஒரு கதைபோல இந்தச் சம்பவத்தை விவரித்திருந்தது. ஆகவே, இப்போது அதை மீண்டும் படிக்கவேண்டும் என்று எனக்கு ஆசை.
ஆனால், எங்கே போய்ப் படிப்பது? அது எந்தப் புத்தகம் என்பதுகூட நினைவில்லாமல் எதைத் தேடுவது?
ஞாபகசக்தி விஷயத்தில் நான் மிகச் சாதாரணன். யாராவது என்னிடம் ஃபோனிலேயோ, நேரிலேயே ‘நான் யாரு, சொல்லு பார்க்கலாம்’ என்று விளையாடினால் பேந்தப் பேந்த முழிப்பேன். அக்பர் பாபருக்குத் தாத்தாவா, அல்லது பாபர் அக்பருக்குக் கொள்ளுத்தாத்தாவா என்று சத்தியமாகத் தெரியாது, முதலாவது பானிப்பட் போர் எந்த வருடம் நடந்தது என்றெல்லாம் கேட்டால் ‘அபிவாதயே’ சொல்லி சாஷ்டாங்கமாக உங்கள் காலில் விழுந்துவிடுவேன்.
உண்மையில், இது ஒரு பலவீனம்மட்டுமல்ல. எந்தத் தகவலும், புள்ளிவிவரமும் ‘Just A Click Away’ என்பதால் வந்த அலட்சியம். அதுவும் இப்போதெல்லாம் ஃபோனிலேயே கூகுள் செய்ய முடிவதால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமே இருப்பதில்லை.
அதேசமயம், எம். எஸ். சுவாமிநாதனின் தந்தை கும்பகோணம் முழுவதும் கொசு மருந்து அடிக்கச் செய்தார் என்கிற தகவல், எதற்காகவோ என் மூளையில் தங்கிவிட்டது. அது ஏன் என்று தெரியவில்லை.
இப்போதைய பிரச்னை, அந்தக் கொசு மருந்துக் கதையை நான் முழுக்கப் படித்தாகவேண்டும். அதற்குமுன்னால் அந்தப் புத்தகத்தைக் கண்டுபிடிக்கவேண்டும்.
எனக்குத் தெரிந்து என்னிடம் எம். எஸ். சுவாமிநாதன் வாழ்க்கை வரலாறு எதுவும் இல்லை. வேறு ஏதோ ஒரு பொதுவான புத்தகத்தின் நடுவில்தான் இந்தக் கதை இடம்பெற்றிருக்கவேண்டும்.
ஆகவே, புத்தகத்தின் அட்டையை வைத்துத் தேடமுடியாது. தலைப்பை வைத்துத் தேடமுடியாது. புத்தக அலமாரியில் தெரியும் முதுகுப் பகுதியை வைத்துத் தேடமுடியாது.
இதன் அர்த்தம், நான் ஒவ்வொரு புத்தகமாகப் பிரித்துப் பொருளடக்கத்தைப் பார்க்கவேண்டும், அல்லது உள்ளே வேகமாகப் புரட்டவேண்டும். வேறு வழியே இல்லை.
எங்கள் வீட்டில் உள்ள சில ஆயிரம் புத்தகங்களையும் இப்படிப் பிரித்துப் படிக்க எத்தனை நேரம் ஆகுமோ? தெரியவில்லை. இத்தனை சிரமப்பட்டு அந்தப் பகுதியைப் படித்து என்ன சாதிக்கப்போகிறேன்? அதுவும் தெரியவில்லை. ஆனால் அதைப் படித்தே தீரவேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு சாதாரண பிடிவாதம். அதனால் எத்தனை நேர விரயம் ஆனாலும் பரவாயில்லை, வீடு முழுக்கப் புத்தகங்கள் தூக்கி எறியப்பட்டு அசௌகர்யமானாலும் பரவாயில்லை என்று ஒரு வறட்டுப் பிடிவாதம்.
மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டுப் புத்தகங்களை வேகமாகத் தள்ள ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஷெல்ஃபிலும் ‘புறநானூறு’, ‘வீரேந்திர சேவாக் வாழ்க்கை வரலாறு’, ‘ஐயங்கார் சமையல்’, ‘ரஷ்யச் சிறுகதைகள்’ போன்ற எம். எஸ். சுவாமிநாதனுக்குச் சம்பந்தமே இல்லாத பொதுவான தலைப்புகளை முதலில் Eliminate செய்தேன், மற்றவற்றைத் தனியே அடுக்கிவைத்துப் பிரித்துப் பார்த்தேன்.
காமெடியான விஷயம், நான் தேடுவது தமிழ்ப் புத்தகமா, ஆங்கிலப் புத்தகமா என்பதுகூட நினைவில்லை. அது இந்தப் புத்தக அலமாரிகளில்தான் இருக்கிறதா என்பதும் நிச்சயமாகத் தெரியவில்லை. ஒருவேளை நான் அந்தத் தகவலை ஏதோ ஒரு வார இதழில் படித்திருந்தால், அது அடுத்த சில நாள்களில் குப்பைக்குச் சென்றிருக்கும்.
ஆனால் எனக்கு ஏதோ ஒரு நம்பிக்கை, அந்தப் புத்தகம் இங்கேதான் இருக்கிறது என்று. மனைவியார் பின்னாலிருந்து முணுமுணுப்பதைக்கூடக் கண்டுகொள்ளாமல் ஷெல்ஃப் ஷெல்ஃபாகக் கலைத்தேன், மேலே பெட்டிகளில் கட்டிப் போட்டிருந்தவற்றைப் பிரித்தேன், படுக்கைக்கு அடியில் ஒளிந்திருந்தவற்றை இழுத்துத் தேடினேன்.
சுமார் முக்கால் மணி நேர அலைச்சலுக்குப்பிறகு, அந்தப் புத்தகம் அகப்பட்டுவிட்டது. ‘சாதனையாளர்கள் சிறு வயதில்’ என்று நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட தொகுப்பு. அழகான சிறுகதை வடிவத்தில் எம். எஸ். சுவாமிநாதனின் இளம்பருவச் சம்பவங்கள் சிலவற்றை விவரித்திருந்தது. அந்தக் கும்பகோணக் கொசுவும் அங்கே இருந்தது.
கலைத்துப்போட்ட புத்தகங்களுக்கு மத்தியில் உட்கார்ந்துகொண்டு அந்தக் கதையை ரசித்துப் படித்தேன். இரண்டே நிமிடங்கள்தான். புத்தகங்கள் மீண்டும் அதனதன் இடத்துக்குத் திரும்பின.
இதனால் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. ஆனாலும், ‘நான் நினைச்சபடி அந்தக் கதை இங்கே இருந்தது, பார்த்தியா?’ என்று என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொண்டேன். இதைத் தேடியபோது கிடைத்த மற்ற பல சுவாரஸ்யமான புத்தகங்களைப் படிக்கும் மேஜையில் அடுக்கிவைத்தேன். அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.
இதையெல்லாம் எதற்காக இங்கே எழுதுகிறேன் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இவ்வளவு தூரம் எழுதியபிறகுதான் அதை யோசிக்கிறேன்.
கடந்த பத்து வருடங்களில் ‘research on a topic’ என்பதன் அர்த்தமே மாறிவிட்டது. கூகுளைத் திறந்து அந்தத் தலைப்பைத் தட்டித் தேடி, அதிலும் முதல் பத்து விடைகளைமட்டும் படித்துத் தொகுத்தால் வேலை முடிந்தது. அதனை முழுமையான ஆராய்ச்சியாக நாம் எல்லாருமே ஏற்றுக்கொள்கிறோம். என்னதான் கூகுள் மிகச் சிறந்த தேடல் இயந்திரமாக இருப்பினும், அது நம்முடைய ‘க்ளிக்’குகளைக் கவனித்து அதன் அடிப்படையில் தொடர்ந்து தன்னை முன்னேற்றிக்கொண்டே இருந்தாலும், நம்முடைய பொது அறிவின் எல்லையைத் தீர்மானிக்கிற உரிமையை ஒரு சாஃப்ட்வேர் ப்ரொக்ராமின் Artificial Intelligence வசம் ஒப்படைப்பது சோம்பேறித்தனமா, அலட்சியமா? ஒருவேளை, இந்தக் காலத்துக்கு அத்தனை ‘ஞானம்’ போதுமோ?
இந்தக் கேள்வியைக் கேட்கிற உரிமை எனக்கு இல்லை என்பது நன்றாகத் தெரியும். அலுவல் விஷயங்கள், தனிப்பட்ட வேலைகள் என்று எல்லாவற்றுக்காகவும் எந்நேரமும் கூகுள் இணைய தளத்திலேயே குடியிருக்கிறவன் நான். இப்படி ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில் கூகுள் Searchகள் செய்தாலும், இன்றைக்குக் கம்ப்யூட்டர், இன்டர்நெட் உதவி இல்லாமல் சொந்தமாக ஒரு தகவலைத் தேடிக் கண்டுபிடித்த சந்தோஷம் புது அனுபவமாக இருக்கிறது.
எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் வெட்டியாக 45 நிமிடம் புத்தகங்களைப் புரட்டிய எனக்கே இப்படியென்றால், ஆராய்ச்சிக்காகக் கல்வெட்டுகளையும் பழங்காலக் கட்டடங்கள், கோயில்கள், சிற்பங்கள், மனிதர்களையும் தேடிச் சென்று சேதி சேகரிப்பவர்கள் எப்படி உணர்வார்கள் என்று யோசித்துப்பார்க்கிறேன். கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் நிபுணரின் லாகவத்தோடு ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து சங்க இலக்கியங்களை நூலாக்கி வெளியிட்ட தமிழ்த் தாத்தா உ.வே.சா. எப்படி உணர்ந்திருப்பார் என்று கற்பனை செய்கிறேன்.
அத்தகு பேரனுபவத்தில் ஒரு துளி எனக்கு இன்று சித்தித்தது, எம். எஸ். சுவாமிநாதனுக்கும் அவருடைய தந்தை விரட்டிய கொசுக்களுக்கும் நன்றி!
***
என். சொக்கன் …
24 07 2012
அலங்கரிப்பு
Posted July 23, 2012
on:- In: Fiction | Magazines | Media | Short Story | Uncategorized
- 9 Comments
பஸ்ஸிலிருந்து இறங்கியதும், ரஞ்சனாவின் கால்களில் சக்கரம் தொற்றிக்கொண்டாற்போலிருந்தது.
கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்கக்கூட அவசியப்படவில்லை. மணி ஒன்பதைத் தொடப்போகிறது என்று ஏதோ ஒரு பழகிப்போன உள்ளுணர்வு உந்தியதில், சட்டென்று சரிந்து விலகிய குறுக்குவழி மண் பாதையில் இறங்கி விரைந்தாள்.
லேசான சாக்கடை நாற்றம். ஒழுங்கற்ற மண் தரையும் சமீபத்திய மழையொன்றில் நசிந்திருந்தது. ஆகவே, மலிவான செருப்பால் புடவையின் பின்புறத்தில் சேறு அடிக்கிறதோ என்று சந்தேகம் தோன்றியது அவளுக்கு. ஆனால் நின்று அதைச் சோதிப்பதற்கு நேரமில்லை.
ஒன்பது மணியை நெருங்கியபின் ஒவ்வொரு நிமிடமும் முள்ளின்மீது நகர்வதுபோல்தான். அவள் வேலை பார்க்கிற உசத்தி ஹோட்டலில் இத்தனை காலையில் அப்படியொன்றும் வெட்டி முறிக்கிற வேலை இல்லை. என்றாலும், தனது பதவியின் ஆளுமையைக் காட்டுவதற்காகவே ‘ஏன் லேட்?’ என்று அவள்மீது கோபமாகப் பாய்கிற மேனேஜரிடம் குழைந்து நிற்பது சலித்துப்போய்க்கொண்டிருக்கிறது.
‘என்றைக்காவது அந்த ஆள் கழுத்தில் கத்தியைப் பாய்ச்சிவிடப்போகிறேன்’ என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள் ரஞ்சனா. அவளது பொருந்தாத வன்மத்தைப் பரிகசிப்பதுபோல் கூடவே சிரிப்பும் வந்துவிட்டது.
அனிச்சையாகக் கைப்பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள் ரஞ்சனா. உள்ளே சின்னதும், பெரியதுமாக நான்கு கத்திகள் இருப்பது உண்மைதான். ஆனால், அவற்றை வைத்துக்கொண்டு கழுத்து நறுக்கமுடியாது, கேரட்தான் நறுக்கலாம்.
ரஞ்சனாவுக்கு வெள்ளரி, தக்காளி, பப்பாளி, கேரட் முதலான காய்கறிகளை நறுக்கி, அலங்கரிக்கிற வேலை. கேரட்டிலிருந்து ரோஜாப்பூ, வெள்ளரியில் சிறு முதலை, தக்காளியில் தாமரை என்று விதவிதமாகச் செய்து, சூடாகத் தயாராகி வருகிற வடக்கத்தி மற்றும் சீனப் பதார்த்தங்களைப் பாங்காக அலங்கரித்து வழியனுப்பவேண்டும்.
ஆரம்பத்தில் இதையெல்லாம் யார், எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. கேரட்டை நறுக்கிப் பொறியல் செய்யாமல் அதில் சிற்பம்போல் எதையோ செதுக்கிப் பார்க்கவேண்டும் என்று முதன்முதலாக யாருக்குத் தோன்றியது? ‘சாப்பிடும் பொருளைப் பூவாகச் செய்துவிட்டால் பிறகு அதைச் சாப்பிடுவதற்கு மனம் வராதே?’ என்றுதான் சரசக்காவிடம் சந்தேகம் கேட்டாள்.
‘நிஜ ரோஜாப் பூவையே பிச்சுச் சாப்பிடறவங்க இல்லையா?’ என்று அலட்சியமாகச் சொன்னாள் சரசக்கா. ‘இப்படியெல்லாம் அர்த்தமில்லாம கேள்வி கேட்டா நான் எழுந்து போயிடுவேன்.’
அந்த அக்கா எப்போதுமே இப்படிதான். முணுக்கென்றால் கோபம் வந்துவிடும். அந்தக் கோபம்தான் அவளுடைய வாழ்க்கையையே சீரழித்துவிட்டது என்று சரசக்காவின் அம்மா எப்போதும் குறை சொல்லிக்கொண்டிருப்பாள்.
ப்ளஸ் ஒன் வயதில் ரஞ்சனாவுக்கு அதுபோன்ற தகவல்களில் ஆர்வம் இருக்கவில்லை. விரலளவில் அடங்கிவிடக்கூடிய சிறிய கத்தியை லாகவமாகச் சுழற்றி, நுணுக்கமான செதுக்கல்களுடன் காய்கறிச் சிற்பங்கள் செய்கிற சரசக்காவை வியந்து பார்த்துக்கொண்டிருப்பாள் அவள்.
எந்தக் காய்கறியானாலும், சரசக்காவின் கைகளில் கலைப்பொருளாகிவிடும். ஓர் உருளைக்கிழங்கைப் பாதியில் நறுக்கி, அதன் பின்பகுதியில் சிறிய வெண்டை நுனியொன்றை வெட்டிப் பொருத்தி, மறுபக்கம் சிறு கடுகுகளைப் பதித்துவைத்து, சிரிக்கிற வாய் செதுக்கி, முக்கால் நிமிடத்துக்குள் கிழங்கை எலியாகவோ, முயலாகவோ, முதலையாகவோ உருமாற்றிவிடுவாள். அப்போது அவளுடைய முகத்தில் தெறிக்கும் பெருமிதம் கலந்த உற்சாகத்தைப் பார்க்கிறபோது, இந்த அக்காவின் வாழ்க்கையில் அப்படி என்ன சீரழிந்துவிட்டது என்று ரஞ்சனாவுக்குப் புரிந்ததே இல்லை.
காய்கறி அலங்காரக் கலையை சரசக்கா எங்கே கற்றுக்கொண்டாள் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், எப்படியாவது அக்காவிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டுவிடவேண்டும் என்றுமட்டும் மனத்துக்குள் ஒரு விதை விழுந்துவிட்டது.
அந்த ஆசை அத்தனை சீக்கிரத்தில் நிறைவேறிவிடவில்லை. ரொம்பவே கெஞ்சிக் கூத்தாடவேண்டியிருந்தது. பள்ளிக்குச் சென்று வந்ததுபோக மீதி நேரமெல்லாம் சரசக்கா வீட்டிலேயே பழிகிடந்து, அவள் காலால் இட்டதைத் தலையால் செய்துமுடித்தும் அவள் மனம் இரங்கவில்லை. ‘இதெல்லாம் கத்துக்குடுக்கிற விஷயமில்லை’ என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.
ரஞ்சனாவுக்குப் பெரிய ஏமாற்றம். என்றாலும், அதன்பிறகும் அவள் சரசக்காவிடம் மணிக்கணக்காகப் பேசுவதையோ, அவளது காய்கறிப் படைப்புகளை வியந்து, ரசித்துப் பாராட்டுவதையோ நிறுத்திவிடவில்லை. கடைசியில், அவள் கல்லூரியில் சேர்ந்தபிறகு சரசக்காவே முன்வந்து அவளுக்கு இந்த விஷயத்தைச் சொல்லிக்கொடுப்பதாக ஒத்துக்கொண்டாள்.
முதலில் ஏன் மறுத்தாள், இப்போது ஏன் ஒப்புக்கொண்டாள் என்று ரஞ்சனாவுக்குத் தெரியவில்லை. சரசக்காவுக்குக்கூடத் தெரியுமோ, என்னவோ. ரஞ்சனாவைப் பொறுத்தவரை, அவளுடைய ஆசை நிறைவேறிவிட்டது. அக்காவைப்போலவே விதவிதமான குறுங்கத்திகளை வாங்கிவைத்துக்கொண்டு வீட்டுச் சமையல் காய்கறிகளைப் பாழாக்கத் தொடங்கினாள்.
விரல்களை நறுக்கிக்கொண்டு ரத்தம் சொட்டச்சொட்டக் கற்ற கலை. காலேஜில் சக பெண்கள் அவளுடைய விரல் வெட்டுகளைப் பார்த்துவிட்டு ‘வீணை கத்துக்கறியாடீ?’ என்று விசாரித்தார்கள். ரஞ்சனா அவர்களுக்குப் பதில் சொல்லவில்லை. கூச்சம்.
ஆனால், அப்படிக் கௌரவம் பார்த்துப் படித்த கல்லூரிப் பாடம் அவளுக்குச் சோறு போடவில்லை. ரகசியமாக ஒளிந்து படித்த காய்கறி அலங்காரக் கலைதான் வேலை வாங்கித்தந்தது.
சரசக்காவுக்கு இந்த விஷயம் தெரியவந்தபோது ரொம்ப சந்தோஷப்பட்டாள். ‘பரவாயில்லைடீ, பெரிய ஹோட்டல்ல வேலை வாங்கிட்டே’ என்றாள் அவளை உச்சிமுகர்ந்து.
வீட்டிலிருந்து இந்தப் ‘பெரிய’ ஹோட்டல் சற்று அதிக தூரம்தான். தினசரி பேருந்துப் பிரயாணம், சம்பளத்தில் கிட்டத்தட்ட பாதியை பஸ்ஸுக்குக் கொடுக்கவேண்டியிருக்கிறது. என்றாலும், தான் ரசித்துக் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தையே நாள்முழுதும் வேலையாகச் செய்துகொண்டிருப்பது அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
இப்போதெல்லாம் சரசக்காவைவிட வேகமாகிவிட்டாள் ரஞ்சனா. ஆர்வத்தைவிட, அவசியம்தான் காரணம். அடுப்பில் பதார்த்தங்கள் தயாராகிற வேகத்தில் அவளுடைய காய்கறி அலங்காரங்களும் தயாரானால்தான் சூடு ஆறுவதற்குள் கேட்டவர்களின் மேஜைக்குச் சென்று சேர்க்கமுடியும்.
ஒன்றரையணா வேலைதான். என்றாலும், ஹோட்டலில் ரஞ்சனாவுக்கு நல்ல மரியாதை. அத்தனை பரபரப்பான சமையலறையின் மூலையில் அவள் ஒருத்திதான் பெண் என்பதாலோ, பெரும்பாலான பதார்த்தங்கள் அவளது மேஜையைத் தொட்டுக்கொண்டுதான் வெளியே போகமுடியும் என்பதாலோ, சமையலாட்கள், பரிமாறுபவர்கள் என்று எல்லாரும் அவளோடு நன்கு பழகியிருந்தார்கள்.
இந்த மேனேஜர் ஒருவன்தான் காய்ச்சல் பேர்வழி. தன் கையில் ஒரு சவுக்கு இருப்பதுபோலவும், அதைச் சொடுக்கிக்கொண்டே இருந்தால்தான் இந்த உணவகம் நகரும் என்பதுபோலவும் அலட்டுகிறவன். அவனை யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால், ஏதோ ஒரு தூரச் சொந்தத்தில் முதலாளியின் உறவினன், அவனைப் பகைத்துக்கொள்ளவும் முடியாது.
ரஞ்சனா அவனைப்பற்றிக் கவலைப்படுவதை நிறுத்தி நெடுநாள்களாகிவிட்டது. சமீபகாலமாக அவளை அரித்துக்கொண்டிருக்கும் கவலை, திருமணத்தைப்பற்றியது.
சென்ற மாதம்வரை, அவள் தனது கல்யாணத்தைப்பற்றி நினைத்துப்பார்த்ததுகூடக் கிடையாது. ஆனால், பேருந்தில் எதேச்சையாகச் சந்தித்த ஒரு கல்லூரித் தோழி, தோளில் குழந்தையும் கைப்பிடிப்பில் கணவனுமாக அவளை நலம் விசாரித்துப் பிரிந்தாள். அப்போது அவள் சாதாரணமாகக் கேட்ட ஒரு கேள்விதான் உள்ளே உறுத்தலாக இறங்கி நின்றுவிட்டது, ‘நீ ஏன் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலே?’
தனக்குக் கல்யாண வயது வந்துவிட்டதா என்று ரஞ்சனாவுக்குத் தெரியவில்லை. கல்யாண வயது என்று ஏதேனும் இருக்கிறதா என்றுகூடத் தெரியவில்லை. விளையாட்டுப் பெண்ணாகப் பார்த்த அந்தத் தோழியை, தோளில் பிள்ளையோடு பார்த்தபோதுகூட அவளுக்குள் எந்தச் சலனமோ ஏக்கமோ உண்டாகவில்லை. ஆனால், அவள் கேட்ட கேள்வியை அப்படிப் புறக்கணிக்கமுடியவில்லை.
இங்கே ஹோட்டலில் தனக்குப் பழக்கமாகியிருந்த வித்யாவிடம் இதைப்பற்றிப் பேசினாள் ரஞ்சனா. அவள் இந்தக் குழப்பத்துக்குத் தீர்வு சொல்வாள் என்று பார்த்தால், வேறொரு புதிய சிக்கலை உண்டாகிவிட்டாள்.
அதாவது, ரஞ்சனாவின் சம்பளத்தில்தான் குடும்பம் ஓடுகிறதாம். அதனால்தான் அவளுடைய அப்பா அவளுக்கு மாப்பிள்ளை எதுவும் பார்க்காமல் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறாராம். ‘எங்க வீட்லயும் இதே கதைதான்’ என்றிருந்தாள் வித்யா.
அவள் சொல்வதைக் கேட்க ரஞ்சனாவுக்கு ஆபாசமாக இருந்தது. அப்பாவைப்பற்றி அவளால் அப்படித் தவறாக நினைக்கமுடியவில்லை. தவிர, அவளுடைய சம்பளம் அப்படியொன்றும் அதிகமில்லை.
ஆனால், அப்பா இன்னும் தனது திருமணப் பேச்சை எடுக்காமல் இருப்பதற்கு வேறு காரணம் எதையும் அவளால் ஊகிக்கமுடியவில்லை. அதைவிட மோசம், அதற்காகத் தான் இப்படி வருத்தப்படவேண்டுமா என்பதுகூட நிச்சயமாகத் தெரியவில்லை.
வீணாக மனத்தைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறேன் என்று நிச்சயமில்லாத உறுதியோடு நினைத்துக்கொண்டாள் ரஞ்சனா. எனக்குத் தேவை என்று (இன்னும்) தோன்றாத ஒரு விஷயத்தை, அது ஏன் நடக்கவில்லை என்று எண்ணி வருத்தப்படுவது எத்தனை முட்டாள்தனம்!
இந்த எண்ணம் தோன்றியபிறகு மனம் ஓரளவு அமைதிப்பட்டிருந்தது. என்றாலும், அதன்பிறகு ஏனோ அவளது வேலையில் கவனம் சற்றுக் குறைந்துவிட்டது. கேரட் பூக்களை அடுக்கும்போது, கீழே சிதறிக் கிடக்கும் மிஞ்சிய காய்கறித் துணுக்குகள் மனத்தில் அர்த்தமற்ற வெறுமையை உண்டாக்குகிறது.
இருபுறமும் முள்புதர்கள் அடர்ந்த அந்த மண்பாதையைக் கடந்து ரஞ்சனா வெளியேறியபோது, புதிதாகக் கட்டிய அந்த அபார்ட்மென்ட் கண்ணில் பட்டது. அதன் இரண்டாவது மாடி பால்கனியில், எப்போதும்போல் குழந்தைக்குச் சோறூட்டிக்கொண்டிருக்கிற புது அம்மாவும்.
‘ஹேய், அக்கா பாரு’ என்று குழந்தைக்கு ரஞ்சனாவைக் கைகாட்டினாள் அவள், எங்கோ பறந்த புறாவைத் தேடிக்கொண்டிருந்த குழந்தை கவனம் சிதறிக் கீழே திரும்புகையில் அதன் வாயில் அரை உருண்டை சாதத்தை அடைத்துவிட்டு ‘குட்மார்னிங்’ என்றாள் ரஞ்சனாவிடம்.
‘குட்மார்னிங்’ என்றாள் ரஞ்சனா, ‘கொஞ்சம் லேட் ஆயிடுச்சு, ஈவினிங் பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டு மளமளவென்று நடக்கலானாள்.
அடுத்த அரையாவது நிமிடம் ஹோட்டல் வாசலில் சல்யூட் வைத்த காவலாளிக்குப் பதில் மரியாதை செய்தபோதுதான், அந்தக் குழந்தைக்குக் கைகாட்டிவிட்டு வந்திருக்கலாமே என்று தோன்றியது அவளுக்கு.
முன்பின் தெரியாத நடைபாதைச் சிநேகிதம்தான். ஆனால், தினந்தோறும் அவள் பஸ்ஸிலிருந்து இறங்கிக் குறுக்குவழியாக வேலைக்கு வருகிற அதே நேரம்தான் அந்தக் குழந்தைக்குச் சாப்பாட்டு வேளை. சில நேரங்களில் அம்மா மடியில், பல நேரங்களில் தரையெங்கும் ஓடியாடியபடி சாப்பிட்டுக்கொண்டிருக்கிற குழந்தைக்குக் கையசைத்து, முடிந்தால் கொஞ்சமாகக் கொஞ்சிவிட்டு வருவது தினசரி வழக்கமாகி, இப்போது அதன் அம்மாவிடமும் பேசிப் பழகிவிட்டது.
ஆனால், ஒன்பது மணிக்குத் தாமதமாகிவிடுகிற இதுபோன்ற நாள்களில், கடவுளே எதிரில் வந்தாலும் வரம் கேட்பதைத் தள்ளிப்போடவேண்டியிருக்கிறது என்று சலிப்புடன் நினைத்துக்கொண்டாள் ரஞ்சனா. அவளது மேஜையினருகே வெட்டிச் செதுக்கவேண்டிய கேரட்கள் கழுவிய பளபளப்பில் மிளிர்ந்தன.
அபூர்வமாக, மேனேஜனைக் காணவில்லை. இருக்கையில் தளர்ந்து அமர்ந்த ரஞ்சனா ஒரு கேரட்டை முனை முறித்துக் கடித்தாள். லேசாகக் கசந்தது.
நூற்றுக்குத் தொண்ணூறு பேர் அலங்கரித்த காய்களைச் சாப்பிடுவதில்லை, குழந்தைகள்தான் அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சாப்பிடும். பெரும்பாலான பெரியவர்கள் அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு, மிச்சத்தில்தான் கவனம் செலுத்துவார்கள்.
பிறகு எதற்கு அலங்கரிக்கவேண்டும்? கேட்டால், கண்தான் முதலில் சாப்பிடுகிறது என்பார்கள். பரிமாறப்படும் பண்டத்தைப் பார்த்ததும், அந்த முதல் பார்வையிலேயே காதல் உண்டானால்தான் வயிறு அதை உவந்து ஏற்றுக்கொள்ளுமாம். அந்தவிதத்தில் இந்த அலங்கரிப்புகளும் கறிவேப்பிலைபோல்தான்.
அந்த அலங்காரப் பிரியர்களிடம் இங்கே வீணாகிற மிச்சக் காய்கறிகளை ஃபோட்டோ பிடித்துக் காண்பிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் ரஞ்சனா. ஆசைப்பட்டுக் கற்றுக்கொண்ட கலை, இப்போதெல்லாம் சலிப்பூட்டுகிறது. முன்பு தோன்றாத பலவிதமான முரண் நினைப்புகள் இப்போது மனத்தை ஆக்கிரமித்திருக்கிறது. எல்லாமே அர்த்தமற்றுப்போய்விட்டதுபோல் ஒரு பள்ள உணர்வு, வெறும் வெறுமை.
கைப்பையிலிருந்து குறுங்கத்திகளை வெளியிலெடுத்துக்கொண்டாள் ரஞ்சனா, கொஞ்சம் வெந்நீர் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு, அன்றைய தினத்தின் முதல் காய்கறியைச் செதுக்கலானாள்.
**********
இரவுப் பதார்த்தங்களுக்கான அலங்கரிப்புகளைச் செய்து அடுக்கிவிட்டு ரஞ்சனா ஆறரை மணிக்குக் கிளம்பியபோது, லேசாக இருட்டியிருந்தது. அந்த அடுக்ககத்தை நெருங்குகையில் காலையின் குற்றவுணர்ச்சி மீண்டும் மேலெழுந்து தாக்க, அனிச்சையாக இரண்டாவது மாடியைப் பார்த்தாள்.
‘நாங்க இங்கே இருக்கோம்’ என்று கீழே குரல் கேட்டது. வழக்கமாகக் கார்களை நிறுத்துமிடத்தில் பெரிய பந்து ஒன்றை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது குழந்தை. கூடவே, கையில் சாப்பாட்டு வெள்ளிக் கிண்ணத்துடன் அதன் அம்மா.
‘காலையில ரொம்ப அவசரமாப் போய்ட்டிருந்தேன்’ என்றபடி கேட்டைத் திறந்துகொண்டு அவர்களை நெருங்கினாள் ரஞ்சனா, ‘குழந்தைக்கு டாட்டாகூட காட்டாம ஓடிட்டேன், ஸாரி!’
‘பரவாயில்லைங்க’ என்றாள் அவள், ‘எனக்கும் என் பொண்ணுக்கும்தான் வேற வேலையில்லை, எல்லாரையும் கூப்டுப் பேசிட்டிருப்போம், உங்களுக்கு ஆஃபீஸ் இருக்கில்லையா?’ என்றாள் சிரித்து.
அவள் சொன்னதில் ‘ஆஃபீஸ்’ என்ற பதம் ரஞ்சனாவுக்குப் பிடித்திருந்தது, ‘ஒரு கேரட் கிடைக்குமா?’, என்றாள் கண்கள் பரபரக்க.
‘கேரட்டா?’ அவள் முகத்தில் அப்பட்டமான ஆச்சரியம் தொனித்தது, ‘எதுக்கு?’
‘ஒரே ஒரு பெரிய கேரட் கொண்டுவாங்களேன், சொல்றேன்’ என்றாள் ரஞ்சனா, ‘நான் குழந்தையைப் பார்த்துக்கறேன்.’
அவள் என்ன செய்வது என்று இன்னும் தீர்மானிக்காதவள்போல் குழம்பித் தெரிந்தாள். பின்னர், கையிலிருந்ததைக் குழந்தையின் வாயில் திணிக்க, அது ‘ஹக் ஹக்’ என்று இருமியபடி அதை வெளியே தள்ள யோசித்தது, ‘மம்மா நல்லாயிருக்கா?’ என்றபடி அதைத் தூக்கிக்கொண்டாள் ரஞ்சனா. அதன் அம்மா லிஃப்டை நெருங்கிவிட்டுச் சட்டென்று படிகளில் ஏற ஆரம்பித்தாள்.
குழந்தை ரஞ்சனாவிடம் இல்லாத வார்த்தைகளில் கதையளந்தபடி அந்த அரை வாய் உப்புமாவையோ, பொங்கலையோ தின்று முடிப்பதற்குள் அவள் திரும்பிவிட்டாள், கையில் நடுத்தர அளவில் ஒரு கேரட்.
அதை இடதுகையில் வாங்கிக்கொண்டு குழந்தையைக் கீழே விட்டாள் ரஞ்சனா. அது அவளிடமிருந்த கேரட்டைப் பிடுங்கப் பாய்ந்தது.
‘கொஞ்சம் பொறும்மா, உனக்குதான் இது’ என்றபடி கைப்பையிலிருந்து ஒரு கத்தியை எடுத்துக்கொண்டாள் ரஞ்சனா. பழகிய நுணுக்கத்துடன் விரல்கள் சுழல, முக்கால் நிமிடத்துக்குள் கேரட் சிவப்பில் ரோஜாப்பூ உருவாகியிருந்தது.
மண்டியிட்டுக் குனிந்து, குழந்தையின் கையில் அந்த கேரட் பூவை வைத்தாள் ரஞ்சனா, ‘பாப்பாக்குப் பூ பிடிச்சிருக்கா?’ என்றாள் கண்கள் விரிய.
குழந்தை அதன் கையிலிருக்கும் புது விஷயத்தை ஆர்வமாகப் பார்த்தது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பூ செதுக்கியதுபோக ரஞ்சனாவின் இன்னொரு கையில் சேர்ந்துகிடக்கும் ஒழுங்கற்ற கேரட் துண்டங்களில் ஒன்றைப் பொறுக்கி வாயில் வைத்துக்கொண்டது, ‘ம்மா’ என்றபடி நுனிப்பற்களால் அதைப் பற்றிச் சிரித்தது.
சட்டென்று அந்தக் குழந்தையை அள்ளியெடுத்து முத்தமிட்டாள் ரஞ்சனா.
(’த சன்டே இந்தியன்’ இதழில் பிரசுரமான சிறுகதை)
***
என். சொக்கன் …
14 08 2005
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 7
Posted July 23, 2012
on:- In: Book Marks | Books | E-zines | Media | Reading | Serial
- 3 Comments
43
தமிழகத்தில் திராவிட இயக்கம் பரபரப்பாக வளர்ந்துகொண்டிருந்த நேரம். கதாநாயகனைக் கடவுள் அவதாரமாகக் குறிப்பிடுகிற நூல் என்ற ஒரே காரணத்தால், ‘கம்ப ராமாயணம்’ கடுமையாகக் கிண்டலடிக்கப்பட்டது. பகுத்தறிவுக் கொள்கைகளை முன்வைத்த இயக்கங்களின் பேச்சாளர்கள் பல மேடைகளில் கம்பனிலிருந்து உதாரணங்களைக் காட்டிக் கேலி செய்து பேசினார்கள். ‘கம்ப ரசம்’ என்ற தலைப்பில் ஒரு ’வஞ்சப் புகழ்ச்சி’ப் புத்தகமே எழுதினார் அண்ணா.
அப்போது, கவிஞர் கண்ணதாசனும் கடவுள் மறுப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். ’சகாக்கள் எல்லாரும் கம்பனைத் திட்டுகிறார்களே, நாமும் திட்டலாம்’ என்று முடிவெடுத்தார். திட்டுவதற்கு Points வேண்டாமா? அதற்காகக் கம்பனை முழுக்கப் படிக்க ஆரம்பித்தார்.
’அவ்வளவுதான், அதுவரை நான் படித்தவை எல்லாம் வீண் என்று புரிந்துகொண்டேன், இவன்தான் கவிஞன், இதுதான் நிஜமான கவிதை என்று உணர்ந்துகொண்டேன். அதன்பிறகு கம்பனில் இருந்து மீளமுடியவில்லை’ என்று பின்னர் ஒரு மேடையில் குறிப்பிட்டார் கண்ணதாசன்.
(ஆதாரம்: தமிழறிஞர், எழுத்தாளர் ஹரி கிருஷ்ணன் நேரில் கேட்டது)
44
நந்தனார் சரித்திரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவரைத் தெய்வ தரிசனம் செய்யவிடாது தடுத்தது யார்?
வேறு யார்? நந்தனாரின் முதலாளிதான். ‘மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழித் திருநாளா?’ என்று சொல்லி அவர் நந்தனாரைத் தடுத்து நிறுத்திவிட்டார். அவர்மீது கொண்ட பயத்தால்தான் நந்தனார் சிதம்பரத்துக்குச் செல்லாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தார்.
உண்மையில், 63 நாயன்மார்களின் வரலாறைப் ‘பெரிய புராண’மாக எழுதிய சேக்கிழார் சொல்லுகிற நந்தனார் கதையே வேறு. அதில் அவர் தொழிலாளி இல்லை, (கிட்டத்தட்ட) முதலாளி. சொந்த நிலத்தில் பயிரிட்டுச் சம்பாதித்தவர், தன்னால் இயன்றவற்றைச் சிவன் கோயிலுக்கு நன்கொடையாகத் தந்து வாழ்ந்தவர்.
ஆனால், பிறப்பால் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால், கோயிலுக்குள் அவரை அனுமதிக்க மறுக்கிறார்கள். அதை எண்ணிதான் அவர் வருந்துகிறார். எந்த ‘முதலாளி’யும் அவரைத் தடுத்து நிறுத்தவில்லை.
பின்னாள்களில் நந்தனார் வரலாறை எழுதிய கோபால கிருஷ்ண பாரதி, அதில் நாடகத்தன்மையைச் சேர்ப்பதற்காக ஒரு முதலாளியைக் கொண்டுவந்தார், நந்தனாரை அவருக்கு அடங்கியிருப்பவராக மாற்றினார், அதன்மூலம் அன்றைய சமூகத்தில் பலர் ஒடுக்கப்பட்டதை அழகாகப் பதிவு செய்தார்.
இன்னொரு சுவாரஸ்யமான தகவல், ‘கோபால கிருஷ்ண பாரதி’யின் ‘மாடு தின்னும் புலையா’ மெட்டில் மகாகவி சுப்ரமணிய பாரதி ஒரு பாட்டு எழுதியுள்ளார். விடுதலைக்காகப் போராடுகிற தொண்டர்களைப் பார்த்து ஆங்கிலேய அதிகாரிகள் பாடுவதுபோல் அமைந்த அந்தப் பாடல் ‘தொண்டு செய்யும் அடிமை, உனக்குச் சுதந்தர நினைவோடா?’ என்று தொடங்கும்.
45
ரசிகமணி டி.கே.சி. அவர்களைப் பற்றிய நூல் ஒன்று வெளியாகியிருந்தது. அதை அவருக்கே தபாலில் அனுப்பிவைத்தார்கள்.
பிரித்துப் பார்த்தவருக்கு முதலில் ஆச்சர்யம், அடுத்து, ஆர்வம், ‘அப்படி என்னதான் எழுதியிருக்கிறார்கள்?’ என்று ஆங்காங்கே புரட்டினார்.
இப்போது, ஆச்சர்யம், ஆர்வம் போய், வெட்கம் வந்துவிட்டதாம். காரணம், அந்தப் புத்தகத்தில் ஆங்காங்கே அவரைப் பாராட்டி எழுதப்பட்டிருந்த வரிகள்.
இதனால், டி.கே.சி.க்கு அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து படிக்கக் கூச்சம். ‘யாராவது பார்த்தால் தவறாக நினைத்துவிடுவார்களோ’ என்று தயங்கினார்.
அதேசமயம், அதைப் படிக்காமலும் இருக்கமுடியாது. முழுக்கப் படித்துக் கருத்துச் சொல்லவேண்டும், ஏதாவது தவறான விவரங்கள் இருந்தால் பதிப்பாளருக்குத் தெரிவித்துச் சரி செய்தாகவேண்டும் அல்லவா?
ஆகவே, டி.கே.சி. ஒரு வேலை செய்தார். அந்தப் புத்தகத்தின் தலைப்பு யாருக்கும் தெரியாதபடி அட்டை போட்டுக் கொண்டுவரச் செய்தார். அதன்பிறகுதான் அதைத் தொடக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார்.
நீங்கள் (பள்ளி / கல்லூரியிலிருந்து வெளியே வந்தபின்) எந்தப் புத்தகத்துக்காவது ‘அட்டை போட்டு’ப் படித்தது உண்டா? ஏன்?
(ஆதாரம்: இராஜேஸ்வரின் நடராஜன் தொகுத்த ‘ரசிகமணி டி.கே.சி.யின் கடிதங்கள்’ நூல்)
46
ஒரு நாவல் சினிமாவுக்குப் போகிறது. கதையைப் படித்துவிட்டுப் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் ‘ம்ஹூம், தேறாது’ என்று அதனை ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள்.
அப்படியானால், யார்மீது தவறு? இலக்கியக் கதைகள் சினிமா மொழிக்குப் பொருந்தவில்லையா? அல்லது, நல்ல கதையைச் சினிமாக்காரர்கள் பாழாக்கிவிடுகிறார்களா?
இந்தக் கேள்விக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் பதில்:
’நாவலை எடுத்துக்கொண்டால், அது முழுக்க முழுக்க எழுத்தாளனின் ராஜ்யம். ஆனால், சினிமா என்பது பலர் கூடி இழுக்கும் தேர். சினிமாவுக்குப் போகிற எழுத்தாளன் சினிமா வேறு, எழுத்து வேறு என்பதில் சரியான புரிதலுடன் இருக்க வேண்டும்.
நான் வட்டார வழக்கில் எழுதிய ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் ‘சொல்ல மறந்த கதை’ என சினிமாவாக வெளியானபோது, அதில் ஒரு வட்டார வழக்குச் சொல்கூட இல்லை. ஆனால், அதுதான் சினிமா!
ஆறு பக்கங்கள் நான் எழுதித் தள்ளுவதை இயக்குநர் ஒரே ஒரு ஷாட்டின் மூலம் கடந்து விடுவார். இதை எல்லாம் கணக்கில் கொண்டுதான் என் கதையைச் சினிமாவாக மாற்றுவதற்கு நான் சம்மதிக்கிறேன். அதன்பிறகு, ‘நாவலைச் சினிமா சிதைத்துவிட்டது!’ என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை!’
(ஆதாரம்: பத்திரிகையாளர் ரீ. சிவக்குமார் பதிவு செய்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் பேட்டி)
47
’குலதெய்வம்’ என்ற படத்தில் ஒரு பாட்டு. மனைவியால் பாதிக்கப்பட்ட ஒரு கணவன், எல்லாப் பெண்களையும் வெறுத்துப் பாடுவதாகச் சூழ்நிலை. அந்தப் பாடலை எழுதியவர், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
இந்தப் பாடல் வெளியாகிச் சில நாள்கள் கழித்து, பட்டுக்கோட்டையாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதன் சாரம்:
‘இதுபோல் பெண்களைக் கேவலப்படுத்தும் ஒரு பாடலை நீங்கள் எழுதலாமா? இப்போதெல்லாம் பல இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் செய்ய இந்தப் பாடலைதான் பயன்படுத்துகிறார்கள்.’
இதைப் படித்த கவிஞர் மிகவும் வருந்தினார். அந்தக் கடிதத்துக்கு அவர் எழுதிய பதில்:
‘நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலை மீண்டும் படித்துப்பார்த்தேன். தங்களுடைய நியாயமான கோபம் எனக்குப் புரிகிறது. பெண்ணால் பாதிக்கப்பட்ட மனநிலையில் உள்ள ஓர் இளைஞனின் கோணத்திலிருந்துதான் நான் அந்தப் பாடலை எழுதினேன். ஆனால் அது பொதுவாகவே பெண்களைக் கிண்டல் செய்ய உபயோகப்படுகிறது என்று இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன். இனிமேல் இதுபோன்ற பாடல்களை எழுதும்போது கவனத்துடன் இருப்பேன், தவறு செய்யமாட்டேன்.’
(ஆதாரம்: கார்த்திகேயன் எழுதிய ‘பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை’ நூல் & சி. சேதுராமன் எழுதிய ’பாரதியும், பட்டுக்கோட்டையாரும்’ கட்டுரைகள்)
48
பெரும்பாலான நூல்களின் தொடக்கத்தில் ‘சமர்ப்பணம்’ என்று ஒருவருடைய பெயரைப் போட்டிருப்பார்கள். இது நிஜமாகவே பயனுள்ள ஒரு விஷயமா? வெறும் சடங்கா?
இந்தக் கேள்விக்கு எழுத்தாளர் வண்ணதாசனின் பதில்:
‘இன்னார்க்குச் சமர்ப்பணம் என்று போடுவதற்காகவே புத்தகங்கள் எழுதவும் வெளியிடவும் வேண்டும் என்று தோன்றுகிறது. எழுத்தாளன் தன் மரியாதையை, பிரியத்தை, காதலை எல்லாம் வேறு எப்படிச் சொல்லிக்கொள்ளமுடியும்? சமர்ப்பணத்தைவிட அருமையாகக் கட்டின மாலை எந்தப் பூக்கடையில் வாங்கிப் போடமுடியும்?’
(ஆதாரம்: ’தீராநதி’ இதழில் வெளியான வண்ணதாசன் நேர்காணல்)
49
பாரதியார் சுதேசமித்திரனில் வேலை செய்துகொண்டிருந்த நேரம். அவருக்குச் சம்பளம் 50 ரூபாய்.
ஒருமுறை பாரதி சம்பளம் வாங்கிக்கொண்டு ரிக்ஷாவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அந்த ரிக்ஷாவை ஓட்டியவரிடம் பேச்சுக்கொடுக்க, அவர் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதைத் தெரிந்துகொண்டார். உடனே, தன் கோட் பையில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டார்.
இந்தத் தகவல் தெரிந்த பாரதியின் மனைவி மிகவும் வருந்தினார். ஆனால் கணவரின் மனம் புரிந்ததால் நேரடியாக எதுவும் சொல்லவில்லை. அக்கம்பக்கத்து வீட்டாரிடம் இதைச் சொல்லிக் கவலைப்பட்டிருக்கிறார். ‘இப்படிச் சம்பளம் மொத்தத்தையும் தூக்கிக் கொடுத்துட்டா நம்ம வீட்டுச் செலவை எப்படிச் சமாளிக்கறது?’
நல்லவேளையாக, அந்த ரிக்ஷாக்காரரை அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவரைத் தேடிப் பிடித்து, ‘அய்யாகிட்ட மொத்தப் பணத்தையும் வாங்கிட்டியாமே’ என்று விசாரிக்க, அவர் அசடு வழிந்தபடி 45 ரூபாயைத் திருப்பிக் கொடுத்தாராம்!
(ஆதாரம்: அம்ஷன் குமார் எழுதிய ‘பாரதியின் இளம் நண்பர்கள்’ கட்டுரை)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
23 07 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 6
Posted July 16, 2012
on:- In: Book Marks | Books | E-zines | Media | Reading | Serial
- 5 Comments
36
பிறருக்காக எழுதுகிறவர்கள் ஒருபக்கமிருக்க, தனக்காக எழுதுகிறவர்கள்தான் உலகில் அதிகம். டைரி / தினசரி நாள்குறிப்புப் பழக்கம் உள்ளவர்களைச் சொல்கிறேன்.
இப்படிப் ‘பர்ஸன’லாக எழுதப்பட்ட பல டைரிக் குறிப்புகள் பின்னர் பொதுவெளியில் புத்தகமாக வெளியாகிப் பிரபலமடைந்திருக்கின்றன. தமிழில் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நாள்குறிப்புகளை எழுதிப் புகழ் பெற்றவர், ஆனந்தரங்கம் பிள்ளை. 18ம் நூற்றாண்டில் இந்தியாவின் சில பகுதிகளை ஆட்சி செய்த பிரெஞ்சு அரசாங்கத்தைப்பற்றிய பல சுவாரஸ்யமான விவரங்கள் இவரது டைரியில் கிடைக்கின்றன. இந்தக் குறிப்புகளைப் பின்புலமாகக் கொண்டு பிரபஞ்சன் எழுதிய ஓர் அருமையான சரித்திர நாவல், ‘மானுடம் வெல்லும்’.
இன்னும் இருநூறு வருடங்கள் கழித்து, இன்றைய வலைப்பதிவுகள் அப்படிப்பட்ட சரித்திர / வாழ்வியல் ஆவணங்களாக அமையுமா?
37
எழுத்தாளர் ஆர். கே. நாராயணுக்குக் குடைகள்மீது அலாதி பிரியமாம். உலகின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட குடைகளைச் சேகரித்துவைத்திருந்தாராம்.
இத்தனைக்கும், அவர் வாழ்ந்த மைசூரில் அடிக்கடி மழையெல்லாம் பெய்யாது. ஆனாலும் மடித்துவைக்கப்பட்ட குடையோடுதான் அவர் எப்போதும் வெளியே கிளம்புவார்.
சரி, ஆர். கே. நாராயணிடம்தான் இத்தனை குடைகள் இருக்கின்றனவே என்று யாராவது அவரிடம் ஒரு குடையை இரவல் கேட்டுவிட்டால் போச்சு. என்னதான் அடைமழை கொட்டினாலும், பொக்கிஷம்போல் சேமித்துவைத்திருக்கும் தன்னுடைய குடை கலெக்ஷனிலிருந்து ஒரு குடையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அவருக்கு மனமே வராதாம்.
ஆக, அவரைப் பொறுத்தவரை குடைக்கும் மழைக்கும் சம்பந்தமே இல்லை. ’எனக்கு அது ஒரு Status Symbol, நடைக்குத் துணைவன்’ என்பார். இந்தக் காரணத்தாலே, குடைப் பிரியர்களான மலையாளிகளை அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம்.
(ஆதாரம்: புகைப்படக் கலைஞர், பத்திரிகையாளர் டி. எஸ். நாகராஜன் எழுதிய ’The R. K. Narayan Only I Knew’ கட்டுரை)
38
ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவரிடம் ‘எப்படி இருக்கு?’ என்று கேட்கிறோம். என்ன பதில் வரும்?
சிலர் ‘சூப்பர்’ அல்லது ‘குப்பை’ என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார்கள். இந்த மிகைப் பாராட்டும் சரி, தடாலடி எதிர்ப்பும் சரி, அந்தப் புத்தகத்தை எழுதியவர்களுக்குச் சுத்தமாகப் பயன்படாது.
வேறு சிலர், கொஞ்சம் விரிவாகத் தங்களது கருத்துகளைச் சொல்வார்கள், ‘இந்தப் பகுதி சுவையா இருந்தது, அதுக்கப்புறம் நாலஞ்சு சாப்டர் ரொம்ப இழுவை, எப்படா முடியும்ன்னு ஆகிடுச்சு, க்ளைமாக்ஸ் படு போர்’… இப்படி.
இதுபோன்ற வாசகர் கருத்துகளைச் சில எழுத்தாளர்கள் கேட்க விரும்புவதே இல்லை. ‘நான் எழுதியதை விமர்சிக்க நீ யார்?’ என்று வாசகனை ஒரு படி கீழே வைத்துப் பார்க்கிற அந்த மனப்பான்மை ஒருபுறமிருக்க, இப்படிப்பட்ட அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து அலசினால், எந்தப் பகுதி பலரால் விரும்பப்படுகிறது, எந்தப் பகுதி வெறுக்கப்படுகிறது, எதைத் தாண்டிச் செல்ல அவர்கள் சிரமப்படுகிறார்கள் என்று பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளமுடியும். அதன் அடிப்படையில் ஒரு சுமாரான புத்தகத்தைக்கூட நன்கு எடிட் செய்து சுவையாக்கிவிடமுடியும், அல்லது, அடுத்த புத்தகத்தை எப்படி வடிவமைக்கலாம் என்று புரிந்துகொள்ளமுடியும். கிட்டத்தட்ட சினிமா எடிட்டிங்மாதிரிதான்.
அதற்கான ஒரு சாத்தியத்தை, இப்போதைய ஈபுத்தகங்களும் அவற்றை படிப்பதற்கான கருவிகளும் (Ebook Readers) உருவாக்கியிருக்கின்றன. பல ஆயிரம் பேர் ஒரே புத்தகத்தை டவுன்லோட் செய்து இந்தக் கருவிகளின்மூலம் வாசிக்கிறபோது, யார் என்ன செய்கிறார்கள், எதை எப்படி வாசிக்கிறார்கள் என்று எளிதில் வேவு பார்த்துவிடலாம். அதை அடிப்படையாக வைத்து அந்தப் புத்தகத்தையோ, மற்ற புத்தகங்களையோ சிறப்பாக்கலாம். இதுபற்றி ஒரு மிகச் சுவையான கட்டுரையை ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது : http://online.wsj.com/article/SB10001424052702304870304577490950051438304.html
இன்னொருபக்கம், இப்படிப்பட்ட புள்ளி விவரச் சேமிப்புகளைப் பலர் எதிர்க்கிறார்கள். ’புத்தக வாசிப்பு என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். அதில் மற்றவர்கள் எட்டிப்பார்ப்பது அழகல்ல’ என்பது ஓர் எதிர்ப்பு, ‘இதுபோன்ற வாசக அனுபவத்தின் அடிப்படையில் புத்தகங்கள் வடிவமைக்கப்படுவது தவறு, அது எழுத்தாளர்களின் உரிமையைப் பாதிக்கிறது, படைப்பு என்பது ஒரு கலை, Product Design அல்ல’ என்பது இன்னோர் எதிர்ப்பு.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
39
நீங்கள் ஒரு புதிய புத்தகத்தை எழுதி முடித்து வெளியிடுகிறீர்கள். உடனே அதற்கான பதிப்புரிமை உங்களுக்குத் தானே கிடைத்துவிடுகிறது. இதைத் தனியே எங்கும் பதிவு செய்யத் தேவையில்லை.
அதேசமயம், நாம் விரும்பினால், அல்லது ’இந்தப் படைப்பு மற்றவர்களால் காப்பியடிக்கப்படக்கூடும், பிரச்னைகள் எழும்’ என்று முன்கூட்டியே எதிர்பார்த்தால், நம்முடைய உரிமையை முறைப்படி பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான வழிமுறை:
- நம்முடைய நூல்பற்றிய விவரங்கள், அதன் மூன்று பிரதிகள், பதிவுக் கட்டணம் ரூ 50 ஆகியவற்றைச் சேர்த்துத் தில்லியில் உள்ள காப்புரிமைப் பதிவாளருக்கு அனுப்பவேண்டும்
- அவர்கள் இதனைப் பரிசீலித்துப் பதிப்புரிமைச் சான்றிதழ் வழங்குவார்கள்
- கூடவே, நூலின் பிரதி ஒன்றில் முத்திரை குத்தி உங்களுக்கே திரும்ப அனுப்பிவைப்பார்கள்
- அதன்பிறகு, யாரேனும் உங்கள் நூலைத் தவறுதலாகக் காப்பியடித்தால், அல்லது வேறுவிதத்தில் பயன்படுத்தினால், அவர்கள்மீது வழக்குத் தொடுக்கலாம், தவறு நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள்முதல் மூன்று வருடங்கள்வரை சிறைத் தண்டனையோ, ஐம்பதாயிரம் ரூபாய்மூலம் இரண்டு லட்ச ரூபாய்வரை அபராதமோ விதிக்கப்படலாம்
- அதேசமயம், நூலின் சில வரிகள், பக்கங்கள், பகுதிகளைச் சொந்தப் பயன்பாட்டுக்காகவோ, ஆராய்ச்சிக்காகவோ, விமர்சனத்துக்காகவோ, மதிப்புரைக்காகவோ, சட்டம் தொடர்பான பணிகளுக்காகவோ யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இது உரிமை மீறல் ஆகாது
(ஆதாரம்: பழ. அதியமான் எழுதிய ‘காப்புரிமை பற்றிச் சில குறிப்புகள்’ கட்டுரை)
40
கடந்த சில பத்தாண்டுகளாகத் தமிழ்ப் பத்திரிகைகளைத் தொடர்ந்து வாசிக்கிற எவரும் ஓவியர் ’ஜெ’ என்கிற ஜெயராஜை அறியாமல் இருக்கமுடியாது. பல பிரபலங்களின் கதைகள், தொடர்களுக்கு வரைந்திருந்தாலும், அவரை மிகப் பிரபலமாக்கியவை, சுஜாதாவின் கணேஷ், வசந்த் தொடர்களுக்கு அவர் வரைந்த ஓவியங்களும், மற்ற பலருடைய கதைகளுக்குத் தீட்டிய ’கவர்ச்சி’ கலந்த சித்திரங்களும்தாம். குறிப்பாக, சாண்டில்யனின் சரித்திர நாவல்களுக்கு அவர் வரைந்த ஓவியங்களை இன்றைக்கும் நினைவில் வைத்திருப்பதாகப் பலர் ‘ஜொள்’வார்கள்.
பலருக்குத் தெரியாத விஷயம், ஜெயராஜ் பெயரில் உள்ள ‘ராஜ்’ என்பது மூதறிஞர் ராஜாஜியைக் குறிக்கிறது. இவர் பிறந்த தினத்தன்று ராஜாஜி ஒரு முக்கியமான தேர்தலில் வென்று பெரிய பதவி ஒன்றில் அமர்ந்தாராம். அதைக் குறிக்கும்வகையில் ஜெயராஜின் தந்தை அவருக்கு இந்தப் பெயரைச் சூட்டினராம்.
ஜெயராஜின் கையெழுத்திலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. ’ஜெ’ என்ற அந்தப் பெயரின் முன்னும் பின்னும் உள்ள புள்ளிகள் ஒவ்வொன்றும், அவரது குடும்ப உறுப்பினர்களைக் குறிக்கின்றன. ஜெ வரைந்த ஓவியங்களைக் கால வரிசைப்படி எடுத்துப் பார்த்தால், இந்தப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதைக் காணலாம்!
(ஆதாரம்: பத்திரிகையாளர் ஸ்ரீஹரி பதிவு செய்த ஓவியர் ஜெயராஜின் பேட்டி)
41
கவிஞர் சுரதாவின் இயற்பெயர் ராஜகோபாலன். பாரதிதாசன் பாடல்கள்மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், புதுவைக்குச் சென்று அவரை நேரில் சந்திக்க விரும்பினார்.
அப்போது சுரதா (ராஜகோபாலன்) பள்ளிச் சிறுவர். புதுச்சேரி சென்று திரும்புவதற்கான காசு கைவசம் இல்லை.
ஆகவே, அவர் ஒரு வீட்டில் சுண்ணாம்பு பூசும் வேலையை ஏற்றுக்கொண்டார். அதில் கிடைத்த கூலியை வைத்துப் பயணம் செய்து புதுச்சேரி சென்று சேர்ந்தார். பாரதிதாசனை நேரில் சந்தித்தார். ‘நான் உங்களுக்குப் பணிவிடை செஞ்சுகிட்டு இங்கேயே இருந்துடறேன்’ என்றார்.
பாரதிதாசன் அதை ஏற்கவில்லை. ’அப்பா, அம்மாவுக்குச் சொல்லாம நீ இப்படித் தனியாப் புறப்பட்டு வந்ததே தப்பு’ என்று கண்டித்தார். ‘வேணும்ன்னா அவங்க அனுமதியோட வா, என்னோட தங்கலாம்’ என்று அறிவுரை சொன்னார். திரும்பிச் செல்வதற்கான தொகையையும் கையில் கொடுத்து அனுப்பிவைத்தார்.
அந்தச் சந்திப்பின்போது பாரதிதாசன் அன்பாகப் பேசிய விதம் இளைஞர் ராஜகோபாலனை மிகவும் ஈர்த்துவிட்டது. ’கனக சுப்பு ரத்தினம்’ என்ற இயற்பெயரைக் கொண்ட அந்தப் பாரதிதாசனின் தாசன் என்ற அர்த்தத்தில் தன்னுடைய பெயரைச் ‘சுரதா’ (சுப்பு ரத்தின தாசன்) என்று மாற்றிக்கொண்டுவிட்டார்.
‘சுரதா’வின் இந்தப் பெயர்க் காரணம் எல்லாருக்கும் தெரியும். உவமைகளைக் கையாளும் அற்புதத் திறமை காரணமாக, அவருக்கு ‘உவமைக் கவிஞர்’ என்று இன்னொரு பெயர் உள்ளதும் தெரியும்.
ஆனால், சுரதாவுக்கு ’உவமைக் கவிஞர்’ என்று பெயர் சூட்டியது யார், தெரியுமோ?
1945, 46ம் ஆண்டுவாக்கில், பிரபல நாவலாசிரியர் ஜெகச்சிற்பியன் ’சிரஞ்சீவி’ என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்திவந்தார். அதில் அவர்தான் சுரதாவை ‘உவமைக் கவிஞர்’ என்று முதன்முறையாகக் குறிப்பிட்டார். அதன்பிறகு எல்லாரும் அதனைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.
(ஆதாரங்கள்: சுரதா எழுதிய ‘வினாக்களும், சுரதாவின் விடைகளும்’ புத்தகம் & விக்கிரமன் எழுதிய ‘உவமைக் கவிஞர் சுரதா’ கட்டுரை)
42
ஒரு பெரிய கவிஞர், இன்னொரு சிறந்த கவிஞரின் புத்தகத்துக்கு எழுதிய வாழ்த்து வெண்பா இது. யார் யாருக்காக எழுதியது என்று ஊகிக்கமுடிகிறதா பாருங்கள்:
நித்தம் இளமை நீடிக்கும் படிஈசன்
வைத்திலனே என்று வருந்துகிறேன், சித்த(ம்)மகிழ்
சித்திரமும் பாட்டும் சிறந்து விளங்கிடும்இப்
புத்தகத்தைப் பார்க்கும் பொழுது
விடை:
பாராட்டியவர்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
பாராட்டுப் பெற்ற நூல்: குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா எழுதிய ’மலரும் உள்ளம்’
(தொடரும்)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
16 07 2012
கடலில் கரைத்த அறிவுரைகள்
Posted July 10, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Communication | Money | People | Travel
- 6 Comments
தூதனாகச் சென்ற அனுமன் வாலில் ராவணன் நெருப்பை வைக்க, அதனால் மொத்த இலங்கையும் எரிந்துபோனது எல்லாருக்கும் தெரியும். அதன்பிறகு என்னாச்சு?
இலங்கை எரிந்தபோது, ராவணனும் அவனுடைய குடும்பத்தினர், மந்திரிமார்களும் ஒரு புஷ்பக விமானத்தில் ஏறித் தப்பிவிட்டார்கள். சூடெல்லாம் தணிந்தபின் இலங்கைக்குத் திரும்பினார்கள். விசுவகர்மா / தெய்வதச்சனை அழைத்து இலங்கையைப் பழையபடி மீண்டும் கட்டச் செய்தார்கள்.
இப்படி உருவாக்கப்பட்ட ‘புது இலங்கை’யை ராவணன் மிகவும் ரசித்தான். ‘முன்னையின் அழகு உடைத்து’ என்று கோபம் தணிகிறான்.
இலங்கையை மறுபடிக் கட்டியாச்சு, ஆனால், ஒரு குரங்கினால் அசுரர்கள் நகரம் அழிந்தது என்கிற அவப்பெயரை எப்படித் துடைப்பது? ராவணன் தன் மந்திரிகளையும் நெருக்கமானோரையும் அழைத்து ஆலோசனை நடத்துகிறான்.
அப்போது சேனைகாவலன், மகோதரன், வச்சிரதந்தன், துன்முகன், மகாபார்சுவன், பிசாசன், சூரியசத்துரு (இவர் பெயரை ‘சூரியன் பகைஞன்’ என்று மொழிபெயர்க்கிறார் கம்பர்), யஜ்ஞஹா (இந்தப் பெயர் ‘வேள்வியின் பகைஞன்’ ஆகிறது), தூமிராட்சன் (புகைநிறக் கண்ணன்) என்று பலர் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாரும் சொல்லும் விஷயங்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான்:
அசுரர்களின் திறமைக்கு முன்னால் மனிதர்கள் மிகச் சிறியவர்கள். வானரர்கள் அவர்களைவிடச் சிறியவர்கள். ஆகவே, நாம் இதைப்பற்றி ஆலோசித்துக்கொண்டிருப்பதே தப்பு, உடனே புறப்பட்டுச் சென்று அவர்களை நசுக்கி அழித்துவிட்டு வரலாம்
இப்படி எல்லாரும் சொல்லும்போது, ராவணனின் சகோதரன் கும்பகர்ணன் பேச ஆரம்பிக்கிறான். அவன் சொல்லும் கருத்துகள் கொஞ்சம் மாறுபட்டுள்ளன:
1. ராவணா, பிரம்மன் குலத்தில் வந்தவன் நீ, வேதத்தின் பொருள் அறிந்தவன் (’ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்’), ஆனாலும், நெருப்பை விரும்பிவிட்டாய் (’தீயினை நயப்புறுதல்’), அதனால் வந்த வினைதான் இது
2. சித்திரம்போல் அழகான இலங்கை நகரம் எரிந்துவிட்டதே என்று வருந்துகிறாய், அரசியல் (இதற்குக் ‘கோவியல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கம்பர் : ‘கோ இயல்’) கெட்டுப்ப்பொனது என்று புலம்புகிறாய். இன்னொருவன் மனைவிமேல் ஆசைப்பட்டு அவளைச் சிறை வைத்த பாவத்துக்கு வேறு என்ன பரிசு கிடைக்கும்? (’வேறொரு குலத்தான் தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ?’)
3. உன்னுடைய நல்ல நகரம் அழிந்துவிட்டது என்று இத்தனை தூரம் வெட்கப்படுகிறாயே (’நல் நகர் அழித்தது என நாணினை’), இதற்கு முன்னால், உன்னுடைய மனைவிமார்களெல்லாம் அழகான புன்சிரிப்போடு காத்திருக்கையில் யாரோ ஒருவனுடைய மனைவியின் காலில் விழுந்து விழுந்து எழுந்தாயே (’ஒருத்தன் மனை உற்றாள் பொன் அடி தொழத் தொழ’), அது ரொம்பப் பெருமையான செயலோ?
4. இலங்கை நேற்றைக்குதான் எரிந்தது. ஆனால் என்றைக்கு நீ சீதையைக் கதறக் கதறத் தூக்கி வந்து, இரக்கமில்லாமல் சிறை வைத்தாயோ, அன்றைக்கே அரக்கர் புகழ் அழிய ஆரம்பித்துவிட்டது. பின்னே? அற்பத் தொழில் செய்தவர்களுக்குப் புகழா கிடைக்கும்? (’புன் தொழிலினார் இசை பொறுத்தல் புலமைத்தோ?’)
5. எந்தத் தவறும் செய்யாத ஒருத்தியைச் சிறையில் அடைப்போம், ஆனால் அதைப்பற்றி யாரும் பேசக்கூடாது, நம்மைப் புகழவேண்டும், வாயைத் திறந்தால் ‘மானம் பெரிது’ என்று பேசுவோம், ஆனால் உள்ளுக்குள் காமத்தை வளர்த்துக்கொண்டு நிற்போம் (’பேசுவது மானம், இடை பேணுவது காமம்’), கடைசியில் மனிதர்களைச் ‘சிறியவர்கள்’ என்று கேலி பேசுவோம், நல்லாயிருக்குய்யா நம்ம நியாயம்!
6. ராவணா, நீ பெரியவர்களுக்கான முறைப்படி நடந்துகொள்ளவில்லை, சிறுமையான ஒரு செயலைச் செய்தாய், அந்தப் பழி மறையவேண்டுமானால், உடனே சீதையை விடுவித்துவிடு (’மட்டவிழ் மலர்க் குழலினாளை இனி மன்னா விட்டிடுது’), அதனால் நமக்குப் பெருமைதான் அதிகரிக்கும்,
7. ஒருவேளை நீ அவளை விடுவிக்காவிட்டால், அந்த மனிதர்கள் போருக்கு வருவார்கள், நம்மை வெல்வார்கள், இப்போது நீ சேகரித்துக்கொண்டிருக்கிற பழியோடு ஒப்பிடும்போது, ‘மனிதர்களிடம் போரில் தோற்றோம்’ என்கிற பழி சிறியதுதான்
8. மரங்கள் நிறைந்த காட்டில், தன்னுடைய வில் திறமையினால் கரன் என்ற அரக்கனை ஜெயித்தான் ராமன். அங்கே அவன் தொடங்கிவைத்த ‘அரக்கர் ஒழிப்புப் பணி’ இன்னும் முடியவில்லை. நம்மை அழித்தால்தான் அது முடியும். இப்போது நடப்பதெல்லாம் அதற்கான முன்னோட்டங்கள்தான்
9. ஒருவேளை அவர்கள் நம்மீது படையெடுத்துவந்தால், அந்த ராமன் தனியாக நிற்கப்போவதில்லை, அவனோடு சகல தேவர்களும், ஏழு உலகங்களும் சேர்ந்துவிடும், அதனால் நமக்குதான் அவஸ்தை
10. நான் இத்தனை சொல்லியும் நீ கேட்கப்போவதில்லை. சீதையை விடுவிக்கப்போவதில்லை. குறைந்தபட்சம், இந்த ஒரு விஷயத்தையாவது கேள். போர் என்று வந்தபின், ராமன் இங்கே வரும்வரை காத்திருக்கவேண்டாம், இப்போதே கடலைக் கடந்து சென்று அந்த மனிதர்களையும் குரங்குகளையும் மடக்கி மொத்தமாக அழித்துவிடுவோம்
இந்த நீண்ட பகுதியில், கும்பகர்ணனின் மனத்தில் என்ன உள்ளது என்பது தெளிவாக வெளிப்படுகிறது. மற்றவர்களெல்லாம் ராஜாவுக்குச் சோப்புப் போட்டுக்கொண்டிருக்கையில், இவன்மட்டும் நேரடியாக அவன் செய்த குற்றத்தைச் சொல்கிறான், அதைத் திருத்திக்கொள்வதற்கான வழியைச் சொல்கிறான், ‘ஆனா, நீ இதையெல்லாம் கேட்கமாட்டே’ என்றும் சொல்கிறான்.
ஆகவே, முத்தாய்ப்பாக ‘சரி, எப்படியும் அவங்களோட சண்டை போடறதுன்னு ஆகிடுச்சு, அந்தச் சண்டையில நாம ஜெயிக்கறதுக்கு வாய்ப்புகள் ரொம்பக் குறைவு, இருந்தாலும், போர் நிச்சயம்ங்கறதால, இப்பவே போய் அவங்களை அழிக்க முயற்சி செய்யறதுதான் புத்திசாலித்தனம்’ என்கிறான் கும்பகர்ணன்.
இதற்கு ராவணன் சொல்லும் பதில் என்ன?
நாம் கேட்பது வேறு, கேட்க விரும்புவது வேறு. ராவணனுக்குக் கும்பகர்ணன் சொன்ன எந்த அறிவுரையும் காதில் விழவில்லை, அவன் தன்மீது சாட்டும் குற்றங்களையும் கேட்டும் கேட்காததுபோல் அலட்சியப்படுத்துகிறான், நிறைவாக அவன் சொன்ன ‘இப்பவே சண்டைக்குப் போகலாம்’ என்ற பகுதியைமட்டும் பிடித்துக்கொள்கிறான்:
’நன்று உரை செய்தாய் குமர, நான் இது நினைத்தேன்,
ஒன்றும் இனி ஆய்தல் பழுது, ஒன்னலரை எல்லாம்
கொன்று பெயர்வோம், நமர் கொடிப்படையை எல்லாம்
இன்று எழுத, நன்று’ என இராவணன் இசைத்தான்
எப்படி இருக்கிறது கதை? ‘நீ சொன்னது ரொம்பக் கரெக்ட் தம்பி, நானும் அதேதான் நினைச்சேன், இனிமே எதுவும் தப்பு நடக்காது, உடனே கிளம்பு, எல்லாரையும் அழிச்சுட்டு வந்துடுவோம்’ என்கிறான் ராவணன். கும்பகர்ணன் அத்தனை நீளமாகச் சொன்ன அறிவுரைகளைப் பற்றியோ, சீதையை விடுவிப்பதுபற்றியோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை, அதில் தனக்கு வேண்டியதைமட்டும் எடுத்துக்கொண்டு ’இப்பவே சண்டைக்குப் போகலாம், வா’ என்கிறான்.
கேட்க விரும்புவதைமட்டுமே கேட்கிற இந்த மனோபாவம் ராவணனுக்குமட்டும் சொந்தமானது அல்ல. இன்றைக்கும் இதனைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.
சில வாரங்களுக்கு முன்னால் எங்கள் அலுவலகத்தில் ஒரு பிரச்னை. பணிநிமித்தம் செய்கிற பயணங்களுக்குத் தரும் தினசரி Allowance போதவில்லை என்று சிலர் குரல் எழுப்பினார்கள். அந்தத் தொகையை உயர்த்துவதுபற்றி ஓர் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். பலர் தங்களுடைய கருத்துகளைப் புள்ளி விவரங்களுடன் சொன்னார்கள். நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிடிவாதமாகத் தங்களுடைய மறுப்புகளை முன்வைத்தார்கள்.
இதனால் கடுப்பான என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிக் கேலி செய்தார்: ‘நாங்க இவ்ளோ சொல்லியும் நீங்க கேட்கமாட்டேங்கறீங்க, ட்ராவல் பண்றவங்களோட ப்ராக்டிகல் கஷ்டங்களைப் புரிஞ்சுக்கமாட்டேங்கறீங்க, பேசாம அலவன்ஸே கிடையாதுன்னு அறிவிச்சுடுங்க, நாங்க எங்க சொந்தக் காசுலயே பயணம் செய்யறோம்.’
அதற்கு அந்த Admin Manager சொன்ன பதில், ‘நல்ல ஐடியா. இதையே Final Decisionனா எடுத்துக்கலாமா?’
அட, ராவணா!
***
என். சொக்கன் …
10 07 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 5
Posted July 9, 2012
on:- In: Book Marks | Books | E-zines | Media | Reading | Serial
- 2 Comments
29
நடிகர் அமிதாப் பச்சன் அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து ஹிந்தியின் ‘நம்பர் 1’ நட்சத்திரமாகியிருந்த நேரம். பல பத்திரிகைகள் அவரைப் பாராட்டிக் கட்டுரைகள், பேட்டிகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.
அப்படி ஒரு பேட்டியில், அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று, ‘உங்களுடைய வாழ்க்கையில் மிகவும் தர்மசங்கடமான அனுபவம் எது?’
அதற்கு அமிதாப் சொன்ன பதில்:
‘சமீபத்தில் ஒரு தமிழ் எழுத்தாளரை எதேச்சையாகச் சந்தித்தேன். ஆனால் அவருக்கு நான் யார் என்று தெரியவில்லை. ‘நீங்க என்ன வேலை பண்றீங்க?’ என்று அப்பாவியாகக் கேட்டார்.’
‘நான் அதிர்ந்துபோனேன். இந்தியாவிலேயே மிகப் பிரபலமான நடிகன் என்று என்னை நானே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த எளிய மனிதர் அந்த கர்வத்தைக் கலைத்துவிட்டார்.’
‘ஒருவேளை, அவர் பொய் சொல்கிறாரோ? உற்றுப்பார்த்தேன். ம்ஹூம், அந்த முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.’
‘அன்றைக்கு அவர்மட்டும் பொய் சொல்லியிருந்தால், என்னைவிடச் சிறந்த நடிகர் அவர்!’
இப்படி அமிதாபைக் கலங்கடித்த அந்தத் தமிழ் எழுத்தாளர், க. நா. சு. உண்மையில் அவருக்கு அமிதாபை நன்றாகத் தெரியும், சும்மா வேண்டுமென்றேதான் அப்படிக் கேட்டாராம்.
(ஆதாரம்: பாரதி மணி எழுதிய ‘க.நா.சு.’ கட்டுரை)
30
எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேவுக்குப் ‘பாதுகாப்பான வாழ்க்கை’ என்றால் பிடிக்காதாம். ‘Adventure Lifestyle’ என்பதைப் பிரபலமாக்கியவர்களில் அவரும் ஒருவர்.
பதினெட்டு வயதில், இத்தாலியின் ரெட் க்ராஸ் அமைப்பில் சேர்ந்தார் ஹெமிங்வே. அங்கே அவருக்குத் தரப்பட்ட வேலை, போர் முனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுவது. சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.
இதனால் அவர் ஏகப்பட்ட விபத்துகள், காயங்களைச் சந்திக்க நேர்ந்தது, ஒவ்வொருமுறை அவற்றிலிருந்து தப்பும்போதும் ’திரும்பப் பிறந்த புத்துணர்ச்சி’ என்றார்.
பின்னர், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் செய்தி சேகரிக்கச் சென்றார் ஹெமிங்வே. காளைச் சண்டை, ஆழ்கடல் மீன் பிடித்தல், வேட்டையாடுதல் என்று எதையும் அவர் விட்டுவைக்கவில்லை. எல்லாச் சாகசங்களையும் ’அனுபவித்து’, அவற்றைத் தன்னுடைய படைப்புகளில் பதிவு செய்துவைத்தார்.
(ஆதாரம்: வெ. இறையன்பு எழுதிய ‘போர்த் தொழில் பழகு’ தொடர்)
31
கவிஞர் கண்ணதாசன் எட்டாம் வகுப்புவரைதான் படித்தார். அதற்குமேல் படிக்க வசதி இல்லை. ஒரு தொழிற்சாலையில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். வாரம் ஐந்து ரூபாய் சம்பளம்.
இந்தத் தொகை கண்ணதாசனின் செலவுகளுக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் அவருக்கு இந்த வேலை பிடிக்கவில்லை. ‘இதில் திருப்தி அடைந்துவிட்டால் என் வளர்ச்சி தடைபட்டுவிடும்’ என்று நினைத்தார்.
அப்போதே அவருக்குக் கவிதை எழுதுவதில் பெரிய ஆர்வம். 40 பக்க நோட்டு ஒன்று வாங்கினார். அலுவலக ரெஜிஸ்டருக்குள் அதை மறைத்துவைத்துத் தினந்தோறும் புதுப்புதுக் கவிதைகளை எழுதினார்.
ஒருநாள், அவருடைய சக ஊழியரான பத்மநாபன் என்பவர் இதைப் பார்த்துவிட்டார். ‘இந்த ஆசை உனக்கு வேண்டாம். கவிதை சோறு போடாது’ என்று கண்டித்தார்.
இதனால் சலனமடைந்த கண்ணதாசன், கதை எழுத முயற்சி செய்தார். பத்திரிகைகளில் இடம் தேடினார். இன்னும் ஏதேதோ முயற்சிகள்.
அதன்பிறகு, அவர் மீண்டும் கவிதைக்குத் திரும்பினார். அதுதான் அவருக்குச் சோறு போட்டது!
(ஆதாரம்: கண்ணதாசன் எழுதிய ‘துன்பங்களிலிருந்து விடுதலை’ நூல்)
32
சாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ மிகப் பிரபலமான நகைச்சுவை நாவல். இப்போதும் தமிழில் அதிகம் விற்பனையாகும் புனைகதைகளில் அதுவும் ஒன்றாக இருக்கும்.
ஆனால், பலருக்குத் தெரியாத விஷயம், கிட்டத்தட்ட இதேமாதிரி இன்னொரு படைப்பையும் வழங்கியிருக்கிறார் சாவி. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.’
இந்தியத் தேர் ஒன்று ஜப்பான் தெருக்களில் ஓடுகிறது. இதுதான் ஒன்லைன். இந்தக் கதைக்குள் பல நிஜப் பிரபலங்களையும் கற்பனையாக உள்ளே நுழைத்து நகைச்சுவையை ஓடவிட்டிருப்பார் சாவி.
ஜப்பான் தேர்த் திருவிழாவைப்பற்றி மேலும் வாசிக்க ஆசையா? சாவி அவர்களின் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டதால், இந்த நாவல் உள்ளிட்ட அவரது பல நூல்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. இங்கே : http://tinyurl.com/saavibooks
33
நடிகை பானுமதி ராமகிருஷ்ணா ஒரு சகலகலா வல்லவர். திரைத்துறையில் வெறுமனே நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஒரு நல்ல பாடகியாக, திறமையுள்ள இசையமைப்பாளராக, இயக்குனராக, தயாரிப்பாளராகவும் முத்திரை படைத்தவர்.
திரைக்கு வெளியே, அவர் ஒரு பிரமாதமான (தெலுங்கு) எழுத்தாளரும்கூட. பானுமதியின் ‘அத்தகாரி கதலு’ (அத்தைக் கதைகள்) வரிசை நகைச்சுவைப் படைப்புகள் மிகவும் புகழ் பெற்றவை. இந்தக் கதைகளின் தொகுப்பு நூலுக்காக அவருக்கு ஆந்திர மாநில சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது.
அதெல்லாம் போக, கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்தில் பானுமதியின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்காக எழுதிய வசனம்தான், அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக இருக்கும். அந்த வசனம்:
’ஞானத்தில் பானு, நளினத்தில் மதி!’ (பானு = சூரியன், மதி = சந்திரன்)
34
‘மனோ மஜ்ரா’
குஷ்வந்த் சிங் எழுதிய முதல் நாவலின் பெயர் இது. அந்தக் கதை நிகழ்கின்ற கிராமத்தின் பெயரையே நாவலுக்குச் சூட்டியிருந்தார் அவர்.
நாவலை எழுதி முடித்ததும், அதைத் தட்டச்சு செய்கிற பணி தொடங்கியது. இதைச் செய்தவர் குஷ்வந்த் சிங்கின் நண்பர் ஒருவருடைய மனைவி. அவர் பெயர் டாட்டி பெல்.
தட்டச்சுப் பிரதி தயாராகில் வந்தவுடன், டாட்டி பெல்லிடம் ஆர்வமாகக் கேட்டார் குஷ்வந்த் சிங், ‘எப்படி இருக்கு நாவல்?’
‘ம்ஹூம்’ என்று அலட்சியமாக உதட்டைப் பிதுக்கினார் டாட்டி பெல். ‘ஒண்ணும் சரியில்லை, இதை யாரும் பிரசுக்கமாட்டாங்க!’
குஷ்வந்த் சிங்கிற்க்கு ஏமாற்றம். வெறுப்பு. பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்கிற பதற்றம். வந்த எரிச்சலில் பேசாமல் அந்த நாவல் பிரதியைக் கிழித்து எறிந்துவிடலாமா என்றுகூட யோசித்தார்.
ஆனாலும், அவருக்கு ஏதோ ஒரு நம்பிக்கை. அதைத் தூக்கி வீசாமல் பத்திரமாக வைத்திருந்தார்.
கொஞ்சநாள் கழித்து. ’க்ரூவ் ப்ரெஸ்’ என்ற பதிப்பகம் இந்திய நாவல்களுக்கான போட்டி ஒன்றை அறிவித்தது. அதற்கு ‘மனோ மஜ்ரா’வை அனுப்பிவைத்தார் குஷ்வந்த் சிங்.
அந்தப் போட்டியில் அவருக்குதான் முதல் பரிசு கிடைத்தது. ’மனோ மஜ்ரா’ என்ற தலைப்புமட்டும் மாற்றப்பட்டு வெளியான அந்த நாவல், இன்றுவரை சுடச்சுட விற்றுக்கொண்டிருக்கிறது. இப்போது அதன் பெயர் ‘Train To Pakistan’
(ஆதாரம்: ஆர். கே. தவான் தொகுத்த ‘Khushwant Singh: The Man and The Writer’ நூல்)
35
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கவிதைகளைப் படித்திருப்பீர்கள். குறிப்பாக, ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’, ‘கதர்த் துணி வாங்கலையோ’ உள்ளிட்ட அவரது காந்தியப் பாடல்களும், ‘தமிழன் என்றோர் இனம் உண்டு’ போன்ற தமிழின் பெருமையைச் சொல்லும் பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை.
அவர் ஒரு நல்ல ஓவியரும்கூட, அது தெரியுமா?
மிக இளம் வயதிலேயே அவர் ஓவியம் வரையப் பழகிவிட்டார். தன்னுடைய கல்லூரி ஆசிரியரின் படத்தை வரைந்து கொடுத்து அவரிடமே பாராட்டும், பரிசும் பெற்றிருக்கிறார்.
அப்போது டெல்லியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ராமலிங்கம் பிள்ளை மன்னரை ஓவியமாக வரைந்து கொடுத்துத் தங்கப் பதக்கம் பெற்றார்.
நாமக்கல் கவிஞரின் மற்ற ஓவியங்கள் என்ன ஆயின என்பது தெரியவில்லை. அவர் வரைந்த விவேகானந்தர் ஓவியம் ஒன்று திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் உள்ளதாகத் தெரிகிறது. அதன் புகைப்படப் பிரதி இங்கே : http://namakkal4u.com/?p=5442
(ஆதாரம்: புலவர் சிவ. கன்னியப்பன் தொகுத்த ‘நாமக்கல் கவிஞர் பாடல்கள்’ நூல்)
(தொடரும்)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
09 07 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 4
Posted July 2, 2012
on:22
நம் ஊர் ராமாயணம் பல நாடுகள், மொழிகள், கலாசாரங்களில் சற்றே மாறுபட்ட வடிவத்தில் உண்டு. தாய்லாந்தில் அதன் பெயர் ‘ராமகியான்’.
இந்தியாவில் எழுதப்பட்டுள்ள ராமாயணங்கள் அனைத்தின் அடிப்படைக் கதை ஒன்றுதான் என்றாலும், கிளைக்கதைகள், சம்பவங்களில் பல மாறுபாடுகள் இருக்கும். தாய்லாந்து ராமாயணமும் அப்படிப் பல இடங்களில் வேறுபடுகிறது. குறிப்பாக, கதாபாத்திரங்களின் பெயர்களில்.
இந்த இரண்டு ராமாயணங்கள் இடையே ஓர் ஒப்பீடு இங்கே, இடது பக்கம் உள்ள பெயர் இந்திய ராமாயணத்திலிருந்து, வலது பக்கம் உள்ள பெயர் தாய்லாந்து ராமாயணத்திலிருந்து.
ராமன் : ராமன்
சீதை : சீதை
அனுமன் : அனுமன்
லட்சுமணன் : லட்சுமணன்
பரதன் : பரதன்
சத்ருக்கனன் : சத்ரு
தசரதன் : தோசரத்
கோசலை : கோசூரியா
கைகேயி : கையாகேசி
சுமித்திரை : சமுத்ரா
ராவணன் : தோத்ஸகின்
மண்டோதரி : நங் மோன்டோ
இந்திரஜித் : ரோனபாக்
சூர்ப்பனகை : சமநக்கா
வசிஷ்டர் : வஸிட்
விசுவாமித்திரர் : ஸவாமிட்
மந்தரை : குச்சி
வாலி : பாலி
சுக்ரீவன் : சுக்ரீப்
தாரை : நங்கதாரா
அங்கதன் : ஓங்கட்
விபீஷணன் : பிபெக்
லவன் : லோப்
குசன் : மோங்குட்
(ஆதாரம்: மு. சீனிவாசன் எழுதிய ‘கலை, வரலாற்றுப் பயணங்கள்’ நூல்)
23
இலக்கியச் சிறுபத்திரிகைகளில் மிகப் பிரபலமானது, கணையாழி. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக (சிறு இடைவெளிகளுடன்) தொடர்ந்து வெளியாகிறது. தமிழின் நேற்றைய, இன்றைய பிரபல எழுத்தாளர்கள் பலரும் ஆரம்ப காலத்தில் கணையாழியில் வளர்ந்தவர்கள்தாம்.
ஆனால் பலருக்குத் தெரியாத விஷயம், ‘கணையாழி’ தொடங்கப்பட்டபோது அது ஓர் இலக்கியப் பத்திரிகையாக இல்லை. ’அரசியல், ஆன்மிகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம்’ என்றுதான் திட்டமிட்டு வெளியிடத் தொடங்கினார்கள். பின்னர்தான் அது இலக்கியத்தில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தது.
முதல் கணையாழி இதழ் வெறும் 24 பக்கங்கள்தான். ஜெயகாந்தன் பேட்டி, அரசியல் கட்டுரைகள், சில கதைகள், விமர்சனங்கள், அட்டைப்படத்தில் ஜவஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும்!
(ஆதாரம்: வே. சபாநாயகம் எழுதிய ‘கணையாழியின் கதை’ கட்டுரை)
24
‘பிக்ஸார்’ நிறுவனத்தின் அனிமேஷன் படங்கள் உலகப் பிரபலம். பல நேரங்களில் நிஜ மனிதர்கள் / நடிகர்கள்கூட ஏற்படுத்தமுடியாத உணர்வுகளை அவர்களது கார்ட்டூன் கதாபாத்திரங்கள் நம் மனத்தில் உருவாக்கி அழுத்தமாகப் பதிந்துவிடுகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக, ‘Finding Nemo’ படத்தில் வரும் மீன்களையும், ‘Toy Story’ வரிசைப் படங்களில் வரும் பொம்மைகளையும் குறிப்பிடலாம்.
இந்த மாயம் எப்படி நிகழ்கிறது? பிக்ஸாரில் பணிபுரியும் எம்மா கோட்ஸ் என்பவர் அவர்களுடைய ‘கதை ரகசிய’ங்களை இணையத்தில் பகிர்ந்துகொண்டார். எல்லாக் கதாசிரியர்களுக்கும் பயன்படக்கூடிய பயனுள்ள அந்த டிப்ஸில் சில, இங்கே:
- பிரமாதமான கதை யோசனை ஒன்று உங்கள் மூளையில் தோன்றிவிட்டதா? சந்தோஷம், அதைப் பேப்பரில் எழுதுங்கள், அப்போதுதான் அதில் எத்தனை ஓட்டைகள் உள்ளது என்று தெரியும், பொறுமையாக உட்கார்ந்து சரி செய்யுங்கள், அடுத்தவர்களிடம் காண்பித்து ஆலோசனை கேளுங்கள்
- முதலில், உங்கள் கதையின் க்ளைமாக்ஸை எழுதிவிடுங்கள், மற்றதெல்லாம் அப்புறம்
- கதையைப் பாதி எழுதிவிட்டீர்கள், அடுத்து என்ன செய்வது என்று குழப்பமா? பிரச்னையே இல்லை. ’அடுத்து என்னவெல்லாம் நிகழவே நிகழாது’ என்று யோசித்து ஒரு பட்டியல் போடுங்கள், அந்தப் பட்டியலுக்குள்தான் உங்களுடைய அடுத்த காட்சி ஒளிந்திருக்கிறது
- உங்கள் கதையின் முதல் வடிவம் (first draft) எழுதியாகிவிட்டதா? அதைக் கிழித்துப்போடுங்கள், அப்படியே 2ம், 3ம், 4ம், 5ம் வடிவங்களையும் கிழித்து வீசுங்கள், அதன்பிறகுதான் ஆச்சர்யகரமான மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும்
- ஒரு கதாபாத்திரம் வெற்றியடைவதுகூட இரண்டாம்பட்சம்தான். அந்த வெற்றிக்காக அது உண்மையுடன் முயற்சி செய்கிறதா? அதுதான் முக்கியம், அதற்காகதான் மக்கள் அந்தப் பாத்திரத்தை ரசிப்பார்கள்
- ஒரு கதாபாத்திரத்தைக் கச்சிதமாக உருவாக்கிவிட்டீர்களா? அது என்னவெல்லாம் சிறப்பாகச் செய்யும் என்று தீர்மானித்துவிட்டீர்களா? இப்போது அந்த நிலையிலிருந்து அதனை 180 டிகிரி எதிர் திசைக்குக் கொண்டுசெல்லுங்கள், முற்றிலும் மாறுபட்ட இந்தச் சூழலில் அந்தக் கதாபாத்திரம் என்ன செய்கிறது என்று பாருங்கள்
- உங்கள் கதாபாத்திரங்கள் ‘எதேச்சையாக’ச் சிக்கலில் மாட்டலாம், தப்பில்லை. ஆனால் அவர்கள் ‘எதேச்சையாக’ அதிலிருந்து மீளமுடியாது, அது ஏமாற்று வேலை, அதுபோன்ற சூழ்நிலைகளில் லாஜிக் மீறாமல் ஒரு தீர்வை யோசியுங்கள்
- உங்களுக்கு எழுதச் சந்தோஷமாக இருக்கும் விஷயங்களைமட்டும் எழுதிக்கொண்டிருந்தால் போதாது, மக்களுக்கு எதைப் பார்க்கச் சந்தோஷமாக இருக்கும் என்பதையும் யோசியுங்கள், இவை இரண்டும் ஒன்றல்ல
- ஒரு யோசனை சரியானபடி அமையாவிட்டால், மனம் தளராதீர்கள். அதை ஓரமாக வைத்துவிட்டு வேறு யோசனையைக் கவனியுங்கள், என்றாவது ஒருநாள் நீங்கள் ஓரங்கட்டி வைத்த இந்தப் பழைய யோசனை திரும்ப வந்து பலன் தரும். உங்கள் உழைப்பு நிச்சயம் வீணாகாது
25
கதை, கவிதை, கட்டுரைகளுக்குத் தலைப்பு எந்த அளவு முக்கியம்?
எனக்குத் தெரிந்த பலருக்கு, நல்ல, புத்திசாலித்தனமான, அதேசமயம் ஜனரஞ்சகமான, ‘அட’ என்று அனைவரையும் வியக்கவைக்கும்படியான ஒரு தலைப்பு வைக்காவிட்டால் எதுவுமே எழுதவராது. கதை எழுதுகிற நேரத்துக்குச் சமமாக, அல்லது அதைவிட அதிகமாகவே தலைப்புக்காக மெனக்கெடுவார்கள்.
இன்னும் சிலர், எழுதி முடித்துவிட்டுத் தலைப்பை யோசிப்பார்கள். என்னைப்போன்ற சோம்பேறிகள் சட்டென்று தோன்றும் ஒற்றை வார்த்தையை Working Titleஆக வைத்துவிட்டு எழுதுவோம், அதன்பிறகு அந்தத் தலைப்பை யோசித்துச் சரி செய்வோம், அப்படியும் எதுவும் சிக்காவிட்டால் ’எடிட்டர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்று விட்டுவிடுவோம்.
கதைகளுக்குத் தலைப்பு வைப்பதுகுறித்து அசோகமித்திரன் என்ன சொல்கிறார்?
”சில படைப்புகள், தலைப்பிலிருந்து உருவாகுபவை. சில, படைப்பு முடிந்தபின் தலைப்பைத் தானே நிர்ணயித்துக்கொள்பவை, தலைப்பு உட்பொருளில் இருந்து இயல்பாக எழுவது.
ஒரு படைப்பு நினைவுகூரப்படுமானால், அது அதன் தலைப்பிற்காக அல்ல. அதன் உட்பொருளுக்காகதான்.”
(ஆதாரம்: அசோகமித்திரன் எழுதிய ‘விடுதலை’ நூலின் பின்னுரை)
26
லியோ டால்ஸ்டாய், அன்டன் செகாவ் இருவரும் ரஷ்ய மொழியின் முக்கியமான எழுத்தாளர்கள்.
ஒருமுறை டால்ஸ்டாய் செகாவைச் சந்திக்கச் சென்றிருந்தார். அப்போதுதான் அவர் செகாவ் எழுதிய ஒரு கதையைப் படித்திருந்தார். அதன் முக்கியக் கதாபாத்திரங்களைப்பற்றியும், அவர்களை செகாவ் எத்தனை அருமையாகச் சித்திரித்திருக்கிறார் என்பதைப்பற்றியும் நீளமாகப் பாராட்டிப் பேசினார் டால்ஸ்டாய். நெகிழ்ச்சியில் அவரது கண்களில் நீர்த்துளிகள் ததும்பி நின்றன.
இத்தனை பாராட்டுகளையும் கேட்ட செகாவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். பிறகு ஒரு பெருமூச்சு விட்டபடி சொன்னார், ‘அந்தக் கதையில் அச்சுப் பிழைகள் நிறைய!’
(ஆதாரம்: மாக்ஸிம் கார்க்கி எழுதிய ‘Literary Portraits’ நூல்)
27
அந்தக் காலத்தில் சில எழுத்தாளர்கள் ’நான் எழுதியது அப்படியே அச்சாகவேண்டும். ஒரு காற்புள்ளி, அரைப்புள்ளி, நிறுத்தல்குறிகளைக்கூட மாற்றக்கூடாது’ என்று பத்திரிகை ஆசிரியர்களிடம் சொல்வார்களாம். இப்போதும் அதுமாதிரி நிபந்தனை போடுகிறவர்கள் இருக்கலாம். அவர்களுக்குத் தங்களது எழுத்தின்மீது அப்படி ஒரு நம்பிக்கை.
இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால், எந்த வகை எழுத்துக்கும் எடிட்டிங் / மெருகேற்றல் அவசியப்படுகிறது. எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்துவதில் தொடங்கி, தகவல் பிழைகளைச் சரி செய்வது, வாசிப்பை எளிமையாக மாற்றுவது என்று பலவகையான மாற்றங்களுக்குப்பிறகு அந்தப் படைப்பு வெளியானால், இன்னும் அதிகப் பேரைச் சென்று சேரும்.
இந்த இரண்டு கட்சிகளில் எது சரி? எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதுபற்றி ஒரு பழைய கதையைச் சமீபத்தில் படித்தேன்:
நேரு பிரதமராக இருந்த நேரம். அவருடைய மேடைப் பேச்சுகளைத் தொகுத்து ஒரு நூல் வெளியாகவிருந்தது.
அப்போது, அந்த நூலை எடிட் செய்யவிருந்தவரை நேரு அழைத்தார். ‘இதெல்லாம் நான் எழுதிப் படித்தவை அல்ல, மேடையில் அப்படியே நேரடியாகப் பேசியவை’ என்று சொன்னார். ‘அதனால், பல விஷயங்களைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்லியிருப்பேன், அல்லது ஏதாவது விவரங்களைத் தவறாகச் சொல்லியிருக்கவும் வாய்ப்பு உண்டு. அவை மேடைக்குச் சரியாக இருக்கலாம். ஆனால், புத்தகமாக வரும்போது சரிப்படாது.’
‘ஆகவே, நீங்கள் இந்தப் புத்தகத்தை எடிட் செய்யும்போது பிரதமரோட எழுத்தாச்சே என்று கரிசனம் காட்டவேண்டாம்’ என்றார் நேரு. ‘உங்கள் வேலையைச் சுதந்தரமாகச் செய்யுங்கள். புத்தகமாக வாசிக்கும்போது எதெல்லாம் பொருந்தாது என்று தோன்றுகிறதோ அதையெல்லாம் தாராளமாக வெட்டி எறிந்துவிடுங்கள்!’
(ஆதாரம்: National Book Trust வெளியிட்ட ‘Editors On Editing’ நூலின் முன்னுரை)
28
’தமிழ்த் தாத்தா’ உ. வே. சாமிநாத அய்யர் அவர்களைச் சந்திப்பதற்காக ’தணிகைமணி’ டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை என்பவர் வந்திருந்தார்.
டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை மிகப் பெரிய அறிஞர். தேவாரம், திருப்புகழ் ஆகிய நூல்களை ஆராய்ந்து புகழ் பெற்றவர்.
ஆகவே, அவரைப் பார்த்ததும் தமிழ்த் தாத்தா நெகிழ்ந்துபோனார். அவரது கைகளைப் பற்றிக்கொண்டு கண்களில் ஒற்றினார்.
‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று பதறினார் டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை.
’பின்னே? இவை திருப்புகழை ஆராய்ச்சி செய்த கைகள் ஆயிற்றே, உரிய மரியாதை தரவேண்டாமா?’
சட்டென்று உ.வே.சா. அவர்களின் காலில் விழுந்தார் டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை, ‘சங்கத் தமிழ் ஏடுகளைத் தேடித் தேடி அலைந்த கால்கள் உங்களுடையவை, உரிய மரியாதை தரவேண்டாமா?’ என்று வணங்கினார்.
(ஆதாரம்: முல்லை பி. எஸ். முத்தையா எழுதிய ‘புலவர்கள் உதிர்த்த முத்துகள்’ நூல்)
(தொடரும்)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
02 07 2012