Archive for August 2012
பாயும் புலி
Posted August 31, 2012
on:- In: (Auto)Biography | Auto Journey | Bangalore | Characters | Feedback | Kids | Learning | Travel | Uncategorized
- 12 Comments
இன்று சின்ன மகளின் வேன் டிரைவருக்குக் காய்ச்சல். அவளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்றேன்.
அந்த ஆட்டோவின் உள்பகுதி மொத்தமும் புலியின் உடல்போல அலங்கரிக்கப்பட்டிருந்ததுபோல, நான் அதைக் கவனிக்கவில்லை. தினந்தோறும் எத்தனையோ ஆட்டோக்களில் ஏறுகிறோம், இதையெல்லாமா பார்த்துக்கொண்டிருக்கமுடியும்?
ஆனால் சின்னப் பிள்ளைகள் இதையெல்லாம் தவறவிடாது. மகள் அதைக் கவனித்து, ‘இந்த வண்டி ஏன்ப்பா புலிமாதிரி இருக்கு?’ என்றாள்.
நான் அசுவாரஸ்யமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு, ‘சும்மா ஒரு டிசைன்தான்’ என்றேன். ‘நீ Doraமாதிரி ட்ரெஸ் போடறேல்ல? அதுபோல இந்த ஆட்டோ புலி ட்ரெஸ் போட்டிருக்கு.’
‘அதெப்படி? புலி ட்ரெஸ் வெளியிலதானே போடணும்? ஏன் உள்ளே போட்டிருக்கு?’ என்றாள் அவள்.
நான் பதில் சொல்வதற்குள் ஆட்டோ டிரைவர் திரும்பிப் பார்த்துச் சிரித்தார். அவருக்குத் தமிழ் தெரியும்போல, ‘பாப்பா, இந்த வண்டி புலிமாதிரி ஸ்பீடாப் போகும், அதனாலதான் புலி அலங்காரம் செஞ்சிருக்கேன்’ என்றார்.
‘ஓ’ என்று தாற்காலிகத் திருப்தி அடைந்தாள் அவள். சில விநாடிகள் கழித்து, ‘ஸ்பீடாப் போகும்ன்னு சொல்றீங்க, ஆனா இந்த வண்டி ரொம்ப ஸ்லோவாப் போகுதே.’ என்றாள்.
ஆட்டோ டிரைவர் முகத்தில் ஈயாடவில்லை. ஐந்து வயதுப் பிள்ளைக்கு பெங்களூரு ட்ராஃபிக்கின் மகத்துவத்தை விளக்கவா முடியும்?
ஆனால் அதற்காக, நிஜப் புலிகூட இந்த ஊர்ப் போக்குவரத்துக்கு நடுவே மெதுவாகதான் ஊர்ந்து செல்லும், வேறு வழியில்லை என்று சொன்னால் குழந்தை ஏமாந்துவிடாதோ?
அந்த சிக்னலில் பச்சை விளக்கு தோன்றிய மறுவிநாடி, எங்கள் ஆட்டோ சீறிப் பாய்ந்தது. சகல வாகனங்களையும் முறியடித்துக்கொண்டு, சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து, அதேசமயம் மிகப் பத்திரமாகவும் பயணம் செய்தது. ஏழெட்டு நிமிடங்களில் கடக்கவேண்டிய தூரத்தை இரண்டே நிமிடத்தில் ஊதித் தள்ளிவிட்டது.
மகளுக்கு ரொம்ப சந்தோஷம். முகத்தில் பளீரென்று ஜில் காற்று அடிக்க முடியெல்லாம் பறக்கும் சுகத்தை ரசித்து அனுபவித்தாள், ‘நிஜமாவே புலிமாதிரி ஓடுதுப்பா இந்த ஆட்டோ’ என்றாள். அப்போது அந்த டிரைவர் முகத்தைப் பார்த்திருக்கவேண்டும்!
யோசித்தால், பல நேரங்களில் முதுகில் தட்டிக்கொடுப்பதைவிட, கேலி செய்து சீண்டிவிடுவதுதான் Performance Enhancementக்கு உத்தமமான வழி என்று தோன்றுகிறது.
***
என். சொக்கன் …
31 08 2012
தாமரை
Posted August 26, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Fun | Learning | Poetry | Tamil | Uncategorized | Vaalee | Vairamuthu
- 4 Comments
சில வாரங்களுக்கு முன்னால், பி. சி. கணேசன் எழுதிய ‘தமிழ் வளர்த்த பேராசிரியர்கள்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் பரிதி மால் கலைஞரைப் (பழைய பெயர் : சூரிய நாராயண சாஸ்திரிகள்) பற்றி ஓர் அத்தியாயம்.
பொதுவாகத் தமிழ் வாத்தியார் என்றாலே ‘போரடிக்கும் பேர்வழி’ என்பதுதான் நாம் கண்டிருக்கும் பிம்பம். ஆனால் பரிதிமாற்கலைஞரின் வகுப்புகளுக்குமட்டும், மாணவர் கூட்டம் அலை மோதுமாம். தினந்தோறும் அவர் என்ன பாடங்களைச் சொல்லித்தரப்போகிறார், அவற்றை எப்படி விளக்கப்போகிறார் என்று அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு நிற்பார்களாம்.
இதற்குக் காரணம், மற்ற சில வாத்தியார்களைப்போல் புத்தகம், உரை நூலில் உள்ளதை அப்படியே படித்துவிட்டுப் போகிற பழக்கம் அவரிடம் கிடையாது. ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து விவரிப்பாராம், புதுப்புது விளக்கங்களைச் சொல்லிச் சுவாரஸ்யம் கூட்டுவாராம்.
உதாரணமாக, சீவக சிந்தாமணியில் ஒரு பகுதி. ஒருவன் ரோட்டில் நடந்து செல்கிறான், பெண்கள் அவனுடைய அழகைத் ‘தாமரைக் கண்ணால் பருகுகிறார்கள்.’
இந்த வரிக்கு நேரடி அர்த்தம், அந்தப் பெண்களின் கண்கள் தாமரை மலர்களைப் போன்றவை. அப்படிப்பட்ட கண்களைக் கொண்டு அவர்கள் அவனை ரசித்தார்கள்.
ஆனால் இதே வரிக்கு, பரிதிமாற்கலைஞர் இன்னும் இரண்டு விளக்கங்களைத் தருவார்:
1. பெண்கள் தாம் அரைக் கண்களால் பருகினார்கள், அதாவது, பெண்கள் தங்களுடைய ஓரக் கண்ணால் அவனைப் பார்த்தார்கள், நேரடியாகப் பார்ப்பது மரபு அல்லவே!
2. பெண்கள் தா மரை, அதாவது, தாவுகின்ற மான்(மரை) போன்ற மருண்ட விழிகளால் அவனைப் பார்த்தார்கள்
இந்த இரண்டு விளக்கங்களைப் படித்த சில நாள்களில், கம்ப ராமாயணத்தில் லட்சுமணன், இந்திரஜித் போரிடும் பகுதியைப் படித்துக்கொண்டிருந்தேன். அங்கேயும் ஒரு வித்தியாசமான தாமரை வருகிறது. இப்படி :
தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த
தாம் வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்,
தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த
தாம் வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக் கண்ணன் தம்பி
முதல் பகுதி:
தசமுகன் தனயன் : பத்துத் தலை ராவணன் மகன் இந்திரஜித்
தாமரைத் தலைய வாளி : தாமரை வடிவத்தில் முனை உள்ள அம்புகளை
தாமரைக் கணக்கின் சார்ந்த : தாமரை அளவில் (?)
தாம் வர முந்தி துரந்து : தன்னுடைய வில்லில் இருந்து முன்னோக்கி (லட்சுமணன்மீது) செலுத்திவிட்டு
ஆர்த்தான் : மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான்
இரண்டாவது பகுதி:
தாமரைக் கண்ணன் தம்பி : தாமரை போன்ற கண்களைக் கொண்ட ராமனின் தம்பி (லட்சுமணன்)
தாமரைத் தலைய வாளி : அதேபோல் தாமரை வடிவத்தில் முனை உள்ள அம்புகளை
தாமரைக் கணக்கின் சார்ந்த : அதே தாமரை அளவில்(?)
தாம் வரத் தடுத்து வீழ்த்தான் : செலுத்தி, வந்த அம்புகளைத் தடுத்து நிறுத்திவிட்டான், இந்திரஜித்தின் தாக்குதலைச் சமாளித்துவிட்டான்
இந்தப் பாட்டில் எல்லாம் புரிகிறது, ’தாமரைக் கணக்கு’ என்பதுமட்டும் புரியவில்லை. ‘தாமரை கணக்கில் தாமரை அம்புகளை விட்டான்’ என்றால் என்ன அர்த்தம்?
வடமொழியில் ‘பதுமம்’ என்று ஓர் எண் உள்ளது. அது, நூறு லட்சம் கோடி, அதாவது 1 போட்டு, 14 பூஜ்ஜியங்கள். இதைக் ’கோடா கோடி’ என்றும் அழைப்பார்களாம்.
அந்தப் ‘பதும’த்தை, கம்பர் ‘தாமரை’ என்று மொழிபெயர்க்கிறார். இந்திரஜித் தாமரை மலர் வடிவத்தில் 100000000000000 அம்புகளைச் செலுத்த (தாமரைத் தலைய வாளி தாமரைக் கணக்கில்), பதிலுக்கு லட்சுமணனும் அதேபோன்ற 100000000000000 அம்புகளைச் செலுத்தி அவற்றை முறியடிக்கிறான்.
’தாமரை’க்கு இப்படியும் ஓர் அர்த்தம் இருக்கிறது என்று தெரிந்தவுடன், சினிமாப் பாடல் வரிகளில் வருகிற சில ’தாமரை’களைப் பற்றி வேடிக்கையாக யோசித்துக்கொண்டிருந்தேன்.
’தாமரைக் கன்னங்கள், தேன் மலர்க் கிண்ணங்கள்’ என்று வாலி எழுதிய ஒரு வரி. இதில் ‘க்’கன்னா உள்ளதால், தாமரை மலர் போன்ற கன்னங்கள் என்ற அர்த்தம்தான் வருகிறது.
ஒருவேளை, அந்தப் பாடகர் இந்தக் காலப் பாடகர்களைப்போல் ’க்’கை முழுங்கியிருந்தால்? ‘தாமரை கன்னங்கள்’ என்று வந்திருக்கும், ’எனக்கு இருக்கறது ரெண்டு கன்னம்தானே, நீ யாரோட கோடி கோடி கன்னங்களைப் பத்திப் பாடறே?’ என்று காதலி காதலன் தலையில் குட்டிக் கோபித்துக்கொண்டிருப்பாள்.
அப்புறம், வைரமுத்து எழுதிய ‘ஆயிரம் தாமரை மொட்டுகளே’, இதற்கு எப்படி அர்த்தம் சொல்வது? தாமரைக் கொடியில் பூத்த ஆயிரம் மொட்டுகளா? அல்லது ஏதோ ஒரு மலரின் ஆயிரம் கோடி கோடி (1 போட்டு பதினேழு பூஜ்ஜிய) மொட்டுகளா?
மொக்கை போதும், அடுத்தமுறை ’தாமரைப் பூக்கள்’ என்று எழுதும்போது, ‘ப்’பன்னாவைமட்டும் மறந்துவிடாதீர்கள், அர்த்தமும் மாறிவிடும், எண்ணிக்கையும் மாறிவிடும். ’கோடி கோடி பூக்களைக் கொண்டுவந்து கொட்டினால்தான் ஆச்சு’ என்று உங்கள் காதலியோ மனைவியோ அடம்பிடிக்கக்கூடும் :>
‘தாமரை’போலவே இன்னும் சில மிகப் பெரிய எண்கள்:
- கும்பம் (1000 கோடி)
- கணிகம் (10000 கோடி)
- சங்கம் / சங்கு (10 தாமரை)
- வாரணம் / வெள்ளம் (100 தாமரை)
- அன்னியம் (1000 தாமரை)
- அருத்தம் (10000 தாமரை)
- பராருத்தம் (லட்சம் தாமரை)
- பூரியம் (பத்து லட்சம் தாமரை)
- பரதம் (லட்சம் கோடித் தாமரை)
***
என். சொக்கன் …
26 08 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 10
Posted August 14, 2012
on:- In: Book Marks | Books | E-zines | Media | Reading | Serial
- 3 Comments
64
’மோனை’ என்றால், இரண்டு சொற்களின் முதல் எழுத்துகள் ஒன்றி வருவது, உதாரணமாக ‘கல்விக் கடல்’, ’காத்திருந்த கண்கள்’… இப்படி.
செய்யுளில் ‘மோனை’ பயன்படும்போது, அதில் பல வகைகள் உண்டு. அவை:
* இணை மோனை : முதல், இரண்டாவது சொற்களில்மட்டும் மோனை அமைவது.
உதாரணம்: ’கடற்கரையில் காற்று வாங்கித் திரும்பினோம்’
* பொழிப்பு மோனை : முதல், மூன்றாவது சொற்களில் மோனை அமைவது
உதாரணம்: ’கடற்கரையில் இன்று காற்று அதிகம்’
* ஒரூஉ மோனை : முதல், நான்காவது சொற்களில் மோனை அமைவது
உதாரணம்: ’கடற்கரையில் இன்று நல்ல காற்று’
* கூழை மோனை : முதல் மூன்று சொற்களில் மோனை அமைவது
உதாரணம்: ‘கடற்கரைக் காற்றைக் காணாமல் வாடினோம்’
* மேற்கதுவாய் மோனை: 1, 3, 4 சொற்களில் மோனை அமைவது
உதாரணம்: கடற்கரை என்றாலே காற்று கிறங்கடிக்கும்
* கீழ்க்கதுவாய் மோனை : 1, 2, 4 சொற்களில் மோனை அமைவது
உதாரணம்: கடற்கரைக் காற்றில் மனம் கிறங்கியது
* முற்று மோனை : நான்கு சொற்களிலும் மோனை அமைவது
உதாரணம்: கடற்கரைக் காற்றில் கந்தன் கிறங்கினான்
(ஆதாரம்: கி. வா. ஜகந்நாதன் எழுதிய ‘கவி பாடலாம்’)
65
கல்கி தன்னுடைய சொந்தப் பெயரில் ஒரு பத்திரிகை தொடங்கிய நேரம். அதன் நிர்வாகத் தலைமையை ஏற்றிருந்தவர் சதாசிவம். அவருக்கு ஒரு பெரிய கவலை. காரணம், காகிதத் தட்டுப்பாடு.
இதைப் பற்றிக் கேள்விப்பட்ட கல்கி கிண்டலாகச் சிரித்தார்., ‘கவலைப்படாதீங்க, நான் ஒரு தமிழ்நாட்டுச் சரித்திர நாவல் எழுதப்போறேன், அதை அதிகப் பேர் படிக்கமாட்டாங்க, நமக்கு அச்சிடக் காகிதமும் நிறையத் தேவைப்படாது’ என்று வேடிக்கையாகச் சொன்னார்.
1941ல் தொடங்கிய அந்தச் சரித்திர நாவலின் பெயர், ‘பார்த்திபன் கனவு’. சதாசிவத்திடம் சொன்னதுபோலவே, அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் சாதாரணமாகதான் எழுத ஆரம்பித்தார் கல்கி.
ஆனால், கல்கியின் எழுத்து லாகவம், அந்த நாவல் உடனடி ஹிட். தமிழர்கள் கல்கி இதழைத் தேடித் தேடி வாசிக்க, விற்பனை கிடுகிடுவென்று உயர்ந்தது. கூடுதல் பிரதிகளை அச்சிடுவதற்காக சதாசிவம் காகிதத்தைத் தேடிப் பல ஊர்களுக்குப் பயணமாகவேண்டிய நிலைமை.
’பார்த்திபன் கனவு’ தந்த உற்சாகத்தில் கல்கி தனது அடுத்த சரித்திர நாவலை இன்னும் விரிவான களத்தில் எழுதத் தொடங்கினார், 1944ல் ‘சிவகாமியின் சபதம்’ வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.
ஆறு வருடங்கள் கழித்து, கல்கி ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதத் தொடங்கினார். அது தொடர்ந்து மூன்றரை ஆண்டு காலம் தொடராக வந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது. இன்றுவரை தமிழில் மிக அதிகம் விற்பனையாகும் நூல்களில் அதுவும் ஒன்று.
பக்க அளவு என்று பார்த்தால், ‘பார்த்திபன் கனவு’ சுமார் 400 பக்கங்கள், ‘சிவகாமியின் சபதம்’ 1000 பக்கங்கள், ‘பொன்னியின் செல்வன்’ 2400 பக்கங்கள்!
(ஆதாரம்: பூவண்ணன் எழுதிய ‘டைட்டானிக்கும் டி.கே.சி.யும்’ நூல்)
66
’முன்னுரை’கள் என்பவை புத்தகங்களின் ட்ரெய்லர்மாதிரி. பலர் இந்த முன்னுரைகளை வாசித்துவிட்டுதான் புத்தகத்தை வாங்கலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பார்கள். ’அதெல்லாம் போர், நான் நேரடியா மெயின் பிக்சர் பார்க்கிறேன்’ என்று சொல்கிற தீவிர வாசகர்களும் உண்டு.
சில முன்னுரைகளில் சுய புகழ்ச்சியே நிரம்பிக் கிடக்கும், சிலவற்றில் அடுத்தவர்களுக்கு நன்றி சொல்லிப் பட்டியல் போடுவார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு நெருக்கமான பிரபலங்களிடம் முன்னுரை வாங்கிப் பிரசுரிப்பார்கள். புத்தகத்தைவிட முன்னுரை அதிகம் உள்ள ஒரு நூலைக்கூட நான் வாசித்திருக்கிறேன்.
அபூர்வமாகச் சில எழுத்தாளர்கள், தங்களது முன்னுரைகளுக்காகவே புகழ் பெற்றவர்கள். சிறந்த உதாரணம், ஜெயகாந்தன். இவரது முன்னுரைகள் தொகுக்கப்பட்டுத் தனி நூலாகவே வெளிவந்துள்ளது. அந்தத் தொகுப்பில் ஜெயகாந்தன் குறிப்பிடும் சுவாரஸ்யமான ஒரு விஷயம்:
சரத் சந்திரர் தன்னுடைய நாவல்களுக்கு முன்னுரை எழுதமாட்டாராம். காரணம் கேட்டால், ‘400 பக்க நாவலில் விளக்கமுடியாத எந்த விஷயத்தை இந்த நாலு பக்க முன்னுரை விளக்கிவிடப்போகிறது?’ என்பாராம்.
67
திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளார்கள். அதன் தொடக்க கால உரை ஆசிரியர்களில் மிக முக்கியமான பத்து பேர்:
- தருமர்
- மணக்குடவர்
- தாமத்தர்
- நச்சர்
- பரிதி
- பரிமேலழகர்
- திருமலையார்
- மல்லர்
- பரிப்பெருமாள்
- காளிங்கர்
திருக்குறள் முழுமையும் வெண்பாக்களால் ஆனதுதான். அதே பாணியில், இந்தப் பத்து பேரின் பெயர்களைக் குறிப்பிடும் வெண்பா ஒன்றும் உள்ளது:
தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்,
பரிதி, பரிமே லழகர், திருமலையார்,
மல்லர், பரிப்பெருமாள் காளிங்கர் நூலினுக்கு
எல்லைஉரை செய்தார் இவர்
68
தமிழில் தனித்துவமான உரை நடை (வசன நடை) கொண்டவர்கள் யார்?
1984ம் வருடம் வெளிவந்த ‘விமரிசனக் கலை’ நூலில் இந்தக் கேள்விக்கு விமர்சகர் க. நா. சுப்ரமணியம் ஒரு பதில் சொல்லியிருக்கிறார். அவருடைய பட்டியல்:
* வீரமாமுனிவர்
* வேதநாயகம் பிள்ளை
* சுப்பிரமணிய பாரதியார்
* வ. ரா.
* டி.கே.சி.
* புதுமைப்பித்தன்
* லா. ச. ராமாமிருதம்
எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்க, இவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும்? அதற்கும் க.நா.சு.விடம் தெளிவான பதில் உண்டு. அவரது அளவுகோல்:
இவர்களுடைய வசன நடையிலே குறைகள் இருக்கலாம், ஆனால் அடிப்படையாக ஒரு தனித்துவம் இருக்கிறது. வார்த்தையை உபயோகிப்பதிலே, வார்த்தைகளை ஒன்று சேர்ப்பதிலே, அந்த வார்த்தைகளையும் வாக்கியங்களையும் தனி அழகு, ‘தன்’ அழகு கூடுவதாகச் சொல்வதிலே அவர்களுக்கு ஒரு திறமை இருக்கிறது. புதுமைப்பித்தனேதான் அவர் நடை என்றும், டிகேசியே அவர் நடை என்றும் சொல்வதற்கு ஆதாரம் உண்டு.
69
‘சூரிய நாராயண சாஸ்திரி’ என்கிற ‘பரிதி மால் கலைஞர்’ அற்புதமான ஆசிரியர். தமிழை அழகாகவும் ஆழமாகவும் ரசித்து ருசித்துச் சொல்லித்தருகிறவர்.
உதாரணமாக, சீவக சிந்தாமணியில் ஒரு வரி, ஆண்மகன் ஒருவனைப் பெண்கள் ‘தாமரைக் கண்ணால் பருகினார்கள்’ என்று வரும்.
மேலோட்டமாகப் பார்த்தால், இது ஒரு சாதாரணமான வாக்கியம்தான். ஆனால், பரிதி மால் கலைஞர் இதை விளக்கும்போது, மூன்று விதமான விளக்கங்களைத் தருவார்:
1. பெண்கள் தாமரை போன்ற தங்களுடைய கண்களால் அவனைப் பருகினார்கள்
2. தாம் அரைக் கண்ணால், அதாவது, பெண்கள் அவனை முழுவதுமாகப் பார்க்க வெட்கப்பட்டு, ஓரக்கண்ணால், அதாவது அரைக் கண்ணால் பார்த்து ரசித்தார்கள்
3. தாம் மரைக் கண்ணால், ’மரை’ என்றால் மான் என்று பொருள், பெண்கள் தங்களது மான் போன்ற கண்களால் அவனைப் பார்த்து மகிழ்ந்தார்கள்
(ஆதாரம்: பி. சி. கணேசன் எழுதிய ‘தமிழ் வளர்த்த பேராசிரியர்கள்’ நூல்)
70
சென்ற ஆண்டு (2011) ‘அமுத சுரபி’ தீபாவளி மலரைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அதில் தீபாவளி மலர்களைப் பற்றிய சுவாரஸ்யமான பல புள்ளி விவரங்கள். தொகுத்து வழங்கியவர் பெயர் ‘சின்னஞ்சிறுபோபு’. அவற்றிலிருந்து சில இங்கே:
* தமிழில் வந்த முதல் தீபாவளி மலர், 1934ம் வருடம். வெளியிட்டது, ஆனந்த விகடன்
* தமிழில் அதிக தீபாவளி மலர்களை வெளியிட்ட பத்திரிகை, கல்கி (60+)
* இப்போதெல்லாம் தீபாவளி மலர்களின் அட்டையில் புகைப்படங்களைப் பிரசுரித்துவிடுகிறார்கள். ஆனால் அன்றைய தீபாவளி மலர்களுக்கான அட்டைப்படங்கள் தனித்துவம் வாய்ந்தவை, பெரும்பாலும் புராண அல்லது இலக்கியக் காட்சிகளின் விரிவான சித்திரிப்புகளாக இருக்கும். அவற்றை அதிக எண்ணிக்கையில் வரைந்தவர், கோபுலு
* சிறுவர்களுக்குமட்டுமான சிறப்பு தீபாவளி மலர்களும் ஐம்பதுகள், அறுபதுகளில் வெளியானதுண்டு. அவற்றை வெளியிட்ட பத்திரிகையின் பெயர் ‘கண்ணன்’, இதன் ஆசிரியர், எழுத்தாளர் ஆர்.வி.
(தொடர் நிறைவடைந்தது)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
14 08 2012
கே(ப்)பிள்(ளை) முறுக்கு
Posted August 11, 2012
on:- In: Anger | நவீன அபத்தங்கள் | Bangalore | IT | Open Question | People | Uncategorized
- 7 Comments
இன்று அலுவலகத்தில் ஒரு வேடிக்கையான பிரச்னை.
வழக்கம்போல், ஏதோ ஒரு கூட்டம். யாரோ என்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள். செம போர்.
பொதுவாகவே எனக்கு Status Update கூட்டங்கள் என்றால் அலர்ஜி. அதுவும் நான் சம்பந்தப்படாத விஷயங்களில் ஸ்டேட்டஸ் அப்டேட்டப்படும்போது சும்மா தலையாட்டிக்கொண்டிருக்கப் பிடிக்காது. கொட்டாவிதான் வரும்.
அதுமாதிரி நேரங்களில் தூக்கத்தைத் தவிர்க்க, ஒன்று ஃபோனை நோண்டுவேன். அல்லது, பக்கத்தில் இருக்கும் டெலிஃபோன் அல்லது நெட்வொர்க் கேபிளைப் பிடித்து முறுக்கிக்கொண்டிருப்பேன், தண்ணீர் பாட்டில்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்குவேன், காகிதத்தில் கிறுக்கல் படங்கள் வரைவேன்…
குறிப்பாக, கஞ்சி போட்ட சட்டைபோல் மொடமொடப்பாக இருக்கும் இந்த நெட்வொர்க் கேபிளை முறுக்குவது எனக்குப் பிடித்த விளையாட்டு. அதில் 8 வரைவது, கையில் வளையல்போல் சுற்றுவது, இரண்டு கேபிள்களைப் பாம்புகள்போலவோ வாள்கள்போலவோ எக்ஸ் வடிவில் நிறுத்தி, அவற்றை ஒன்றோடொன்று சண்டை போட விடுவது என ரொம்பச் சுவாரஸ்யமான பல விளையாட்டுகள் இதில் சாத்தியம்.
இன்று அப்படி ஒரு கேபிளைப் பிடித்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது, பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னுடைய பாஸ் அதை என்னிடமிருந்து கிட்டத்தட்ட பிடுங்கினார். நான் ஆச்சர்யமாகப் பார்க்கவும், ‘இன்னிக்குதான் IT Teamலேர்ந்து சொன்னாங்க, இதுமாதிரி நம்ம மீட்டிங் ரூம்ல இருக்கற நெட்வொர்க் கேபிள்கள் பலது உடைஞ்சுபோய்க் கிடக்காம்’ என்றார்.
எனக்குச் சிரிப்புதான் வந்தது. ‘சும்மா கையில் வைத்து விளையாடுவதற்கும் உடைப்பதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியாதா? அது எப்போது உடையும் என்கிற லிமிட் தெரியாதா? நான் என்ன குழந்தையா?’ என்றேன்.
‘இருந்தாலும்…’ என்று இழுத்தார் அவர். ‘Better be safe than sorry.’
‘ஓகே’ என்று எதிரே இருந்த போர்டைப் பார்த்தேன். சரியாகப் பத்து விநாடிகளில் மறுபடி தூக்கம் வந்தது. தலையைக் குனிந்துகொண்டேன்.
சற்று நேரம் கழித்து, அனிச்சையாக நான் நெட்வொர்க் கேபிளைப் பிடித்து முறுக்க ஆரம்பித்தேன். வேண்டுமென்றே செய்யவில்லை. கைகள் தானாக அங்கே சென்றுவிட்டன.
உடனே, என் பாஸ் மறுபடி அதைப் பிடுங்கி வைத்தார்.
ஏனோ, இப்போது எனக்குக் கோபம் வந்துவிட்டது. ‘Do you have any data or proof that I broke any cables in this office?’ என்றேன் நேரடியாக.
அவர் அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ‘What?’ என்றார்.
’நான் இந்தக் கேபிள்களை உடைத்துவிடுவேனோ என்று நீங்கள் பயப்படுவது அர்த்தமில்லாத ஒன்று’ என்றேன் நான் (ஆங்கிலத்தில்தான்), ‘இப்படி என் கையிலிருந்து கேபிளைப் பிடுங்குவதன்மூலம் நீங்கள் என்னை அவமானப்படுத்துகிறீர்கள், இதன் அர்த்தம், ஒன்று, நீங்கள் என்னை எப்பப்பார் எதையாவது உடைக்கிறவன் என்று சந்தேகப்படுகிறீர்கள், அல்லது, நான்தான் இந்த மீட்டிங் ரூம்களில் இருக்கும் அனைத்து கேபிள்களையும் உடைத்தேன் என்று தீர்மானித்தேவிட்டீர்கள். இல்லையா?’
நான் இத்தனை பேசியதும், ஏழெட்டுப் பேர் இருக்கும் அறையில். Status Report சமர்ப்பித்துக்கொண்டிருந்தவர் பேச்சை நிறுத்த, எல்லாரும் எங்களையே பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.
சட்டென்று நிலைமை புரிந்து நான் வேறு பக்கம் திரும்பிக்கொண்டேன். அவரும் ஏதோ கருத்துச் சொல்ல, கூட்டம் பழையபடி தொடர்ந்தது.
இன்று மாலைமுழுக்க, அந்த விஷயத்தைதான் நினைத்துக்கொண்டிருந்தேன். பொழுதுபோகாமல் கேபிளை முறுக்குவது ஒரு Harmless பழக்கம் என்று நான் நினைக்கிறேன், அதனால் கேபிள் உடையக்கூடும் என்று என் பாஸ் நினைக்கிறார். அல்லது, ’கேபிள் முறுக்காதே, மீட்டிங்கைக் கவனி’ என்று என்னிடம் மறைமுகமாகச் சொல்கிறார். அதில் என்ன தப்பு? நான் ஏன் அவரிடம் அப்படிக் கோபப்படவேண்டும், அதுவும் Data, Proof எல்லாம் கேட்டு இத்தனை காமெடியாக உணர்ச்சிவயப்படவேண்டும்? இப்போது நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.
உளவியல்ரீதியாக இதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும். அடுத்த மீட்டிங் வருவதற்குள் தேடிப் படித்துவிட்டால், இனிமேல் கேபிள்களை முறுக்காமல் இருப்பேனோ என்னவோ!
***
என். சொக்கன் …
11 08 2012
அண்ணலும் அவளும்
Posted August 6, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Magazines | Media | Poetry | Serial
- 33 Comments
’வடக்கு வாசல்’ ஆகஸ்ட் 2012 இதழ் தொடங்கி ’கம்பனின் வார்த்தைகள்’ என்ற தலைப்பில் நான் எழுதத் தொடங்கியிருக்கும் பத்தியின் முதல் அத்தியாயம் இது. கம்ப ராமாயணத்தில் நாடக அம்சம் நிறைந்த சில பகுதிகளை எடுத்துக்கொண்டு, முடிந்தவரை கம்பனின் வர்ணிப்புடன் கட்டுரையாகத் தரும் முயற்சி. கவி நுட்பங்களை ஆழமாக எழுதுமளவு எனக்கு வாசிப்பு இல்லை. இது ஓர் அறிமுகமாகமட்டுமே அமையும்.
விசுவாமித்திரன் முன்னே நடக்க, ராமனும் அவன் தம்பி லட்சுமணனும் பின்னால் வருகிறார்கள். மிதிலை நகர எல்லைக்குள் கால் பதிக்கிறார்கள்.
அந்த ஊர் மதில்கள்மீது கொடிகள் பறக்கின்றன. அவை ராமனை நோக்கிக் கை அசைத்து ‘வா, வா’ என்று அழைப்பதுபோல் தோன்றுகிறதாம்.
ராமன் ஏன் மிதிலைக்குள் வரவேண்டும்?
காரணம் இருக்கிறது. ‘மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து செய்யவள் இருந்தாள்’ என்று அந்தக் கொடிகள் சொல்வதாகக் கம்பர் வர்ணிக்கிறார்: குற்றமில்லாத தாமரை மலரை விட்டு நீங்கிய திருமகள், எங்கள் நகரம் செய்த தவத்தினால் இங்கே சீதையாக வந்து பிறந்திருக்கிறாள். ஆகவே, ராமா நீ இங்கே வா, அவளுடைய கைத்தலம் பற்றிக் கொள்!
சீதை அப்பேர்ப்பட்ட அழகியா?
பின்னே? ‘மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை’ என்கிறார் கம்பர். அந்த மன்மதனால்கூடச் சீதையின் அழகை ஓவியமாகத் தீட்டமுடியாதாம்.
மன்மதன் யோசித்தான், மற்ற வண்ணங்களெல்லாம் சீதையைப் படமாக வரையை போதாது என்று, அமுதத்தை எடுத்தான், அதில் தூரிகையைத் தோய்த்தான், படம் வரைய நினைத்தான்.
ம்ஹூம், அப்பேர்ப்பட்ட அமுதத்தால்கூட அந்தப் பேரழகைப் பதிவு செய்ய முடியவில்லையாம். மன்மதன் திகைத்துப்போய் நிற்கிறான். ‘ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயம் அமைக்கும் தன்மை யாதெனத் திகைக்கும்!’
இப்படிக் கம்பர் வர்ணித்துக்கொண்டிருக்கும்போதே, ராமரும் லட்சுமணரும் விசுவாமித்திரருடன் மிதிலைக்குள் நுழைந்துவிடுகிறார்கள். பல காட்சிகளைக் கண்டபடி நடக்கிறார்கள்.
அங்கே ஒரு நடன சாலை. அதில் ‘ஐயம் நுண் இடையார்’, அதாவது இடை இருக்கிறதா, இல்லையா என்று சந்தேகம் வரும்படி நுட்பமான இடுப்பைக் கொண்ட பெண்கள் நடனமாடுகிறார்கள்.
இன்னொருபக்கம், சில பெண்கள் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறார்கள், எப்படி? ’மாசு உறு பிறவிபோல் வருவது போவது ஆகி’, தவறு செய்தவர்கள் மீண்டும் மீண்டும் இந்தப் பூமியில் பிறப்பதைப்போல, அவர்களுடைய ஊஞ்சல் முன்னும் பின்னும் ஆடுகிறதாம். அதைப் பார்த்த ஆண்களின் உள்ளமும் அதோடு சேர்ந்து தடுமாறுகிறதாம்.
வேறொருபக்கம், சில பெண்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள், சில பெண்கள் பூப்பறிக்கிறார்கள், பந்தாடுகிறார்கள், குளிக்கிறார்கள்… ஆனால் இவர்களில் யாரையும் ராமன் நிமிர்ந்து பார்க்கவில்லை. சமர்த்தாக முனிவரின் பின்னே நடந்துகொண்டிருக்கிறான்.
சிறிது நேரத்தில், அவர்கள் அரண்மனையை நெருங்குகிறார்கள். அங்கே கன்னிமாடத்தில் சீதை நிற்கிறாள். அந்தக் காட்சியைக் கம்பர் இப்படி வர்ணிக்கிறார்:
பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,
கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு
அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்
தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.
சீதையைப் பார்த்த மனிதர்களெல்லாம் ‘அடடா, தேவர்களைப்போல நமக்கும் இமைக்காத விழி கிடைத்தால் இவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாமே’ என்று ஏங்குகிறார்களாம். அந்தத் தேவர்களோ ‘நமக்கு இரண்டு கண்கள்தானே இருக்கிறது, சீதையைப் பார்க்க இவை போதாதே, இன்னும் ஏழெட்டுக் கண் கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று தவிக்கிறார்களாம். (’இமையா நாட்டம் பெற்றிலம் என்றார், இரு கண்ணால் அமையாது என்றார் வானத்தவர்’)
கன்னிமாடத்தில் சீதையின் அருகே பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் சீதையுடைய அழகுக்கு இணையாகமாட்டார்கள். ‘சதகோடி முன் சேவிக்க, மின் அரசு எனும்படி நின்றாள்’ என்கிறார் கம்பர். நூறு கோடி மின்னல்கள் சுற்றிலும் வந்து நின்று வணங்கி நிற்க, நடுவில் அவர்களுக்கெல்லாம் தலைவியாக நின்ற ‘மின்னல் அரசி’யாம் சீதை!
இன்னும், சீதையின் அழகைக் கண்டு ‘குன்றும், சுவரும், திண் கல்லும், புல்லும்’ உருகுகின்றன, அவள் அணிந்திருக்கிற நகைகளால் சீதைக்கு அழகு இல்லை, சீதையால்தான் அந்த ஆபரணங்களுக்கு அழகு (’அழகெனும் மணியுமோர் அழகு பெற்றவே’), பெண்களே அவளைக் கண்டு காதல் கொள்கிறார்கள் (’மங்கையர்க்கு இனியது ஓர் மருந்து’)… இப்படிக் கம்பர் அடுக்கிக்கொண்டே போகிறார்.
அப்பேர்ப்பட்ட சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்குகிறது:
எண் அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக்
கண்ணொடு கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்
நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள்.
இந்தக் காட்சி வால்மீகியில் இல்லை. அங்கே ராமன் வில்லை உடைத்தபிறகுதான் சீதையைப் பார்க்கிறான். அதிலிருந்து சற்றே மாறுபட்டு, தமிழுக்காகக் கம்பர் வடித்துத் தந்த அற்புதமான பகுதி இந்தக் ‘காட்சிப் படல’ப் பாடல்கள். ஒவ்வொன்றும் அற்புதமான அழகு கொண்டவை.
’நோக்கு எனும் பாசத்தால் பிணித்து’, கண் பார்வை என்கிற கயிற்றினால் ஒருவரை ஒருவர் கட்டி ஈர்த்துக்கொள்கிறார்கள். ராமன் மனம் சீதையை இழுக்க, சீதையின் மனம் ராமனைத் தன்னருகே இழுக்க… ’இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்’ என்று முடிக்கிறார் கம்பர்.
என்ன இது? சினிமாவில் வருவதுபோல் முதல் பார்வையிலேயே காதலா?
முதல் பார்வையா? யார் சொன்னது? திருமால் அவதாரம் ராமன், திருமகளின் அவதாரம் சீதை, இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்ந்தவர்கள்தான். இந்தப் பிறவியில் ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கிறார்கள், அதனால், சட்டென்று காதல் பற்றிக்கொள்கிறது. ‘பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ’ என்று உருகுகிறார் கம்பர்.
இதெல்லாம் முனிவர் விசுவாமித்திரருக்குத் தெரியுமா? அவர்பாட்டுக்கு நடக்கிறார். ராமனும் அவருக்குப் பின்னே சென்றுவிடுகிறான்.
சீதை துடித்துப்போகிறாள். அதைச் சொல்லும் கம்பன் வர்ணனை: ‘கண் வழி புகுந்த காதல் நோய், பால் உறு பிரை என எங்கும் பரந்தது.’
பாலில் ஒரு துளி மோரைதான் பிரை ஊற்றுகிறோம். அது பால்முழுவதும் சென்று அதனைத் தயிராக மாற்றிவிடுகிறது அல்லவா? அதுபோல, கண்களின்வழியே சீதைக்குள் நுழைந்த காதல் நோய், அவளுடைய உடல்முழுவதும் பரந்து வருத்தியது. அவள் துடிதுடித்தாள்.
இதைப் பார்த்த தோழிகள் சீதைக்கு ஏதேதோ வைத்தியம் செய்கிறார்கள். மலர்ப் படுக்கையில் படுக்கவைக்கிறார்கள், சந்தனம் பூசுகிறார்கள், சாமரம் வீசுகிறார்கள், திருஷ்டி கழிக்கிறார்கள்.
ம்ஹூம், எந்தப் பலனும் இல்லை. சீதை பலவிதமாகப் புலம்பத் தொடங்குகிறாள். அவற்றுள் ஓர் அருமையான பாட்டு:
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி, என் உயிரை அம் முறுவல் உண்டதே!
’என்னை வருத்துவது எது? இந்திர நீலம் என்ற உயர்ந்த கல்லைப்போல இருண்ட அவனுடைய தலைமுடியா? நிலவைப் போன்ற முகமா? நீண்ட கைகளா? அழகான ரத்தின மலை போன்ற தோள்களா?’
‘இவை எதுவுமே இல்லை, எல்லாவற்றுக்கும் முன்பாக, அவனுடைய உதட்டில் பரவிய அந்தப் புன்சிரிப்பு, அதுதான் என்னுடைய உயிரை உண்டுவிட்டது!’
இங்கே ‘தாழ்ந்த கைகளும்’ என்ற பிரயோகத்தைக் கவனிக்கவேண்டும். அதாவது, நீண்ட கைகள், அதனை ராஜ லட்சணம் என்று சொல்வார்கள்.
என்னதான் ராஜாவானாலும், காதல் வந்துவிட்டால் அவன் நிலைமையும் பரிதாபம்தான். சீதையைப் பார்த்துவிட்டு விசுவாமித்திரருடன் சென்ற ராமனும் அப்படிப்பட்ட ஒரு தவிப்பில்தான் சிக்கிக் கிடந்தான்.
‘பொருள் எலாம் அவள் பொன்னுருவாயவே’ என்கிறார் கம்பர். ‘பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா’ என்று பாரதி பாடியதுபோல, ராமனுக்கு எதைப் பார்த்தாலும் சீதையின் பொன் வடிவம்மட்டுமே தெரிகிறதாம். அவளையே நினைத்துக்கொண்டு படுத்துக் கிடக்கிறான்.
திடீரென்று ராமனுக்கு ஒரு சந்தேகம். ‘ஒருவேளை, அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமானவளாக இருந்துவிட்டால்? என்னுடைய காதல் பிழையாகிவிடுமே!’
மறுகணம், அவனே தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்கிறான். ‘நல் வழி அல் வழி என் மனம் ஆகுமோ?’… என்னுடைய மனம் எப்போதும் கெட்ட வழியில் போகவே போகாது, ஆகவே, இன்றைக்கு நான் இந்தப் பெண்ணைப் பார்த்துக் காதல்வயப்படுகிறேன் என்றால், அவள் எனக்கெனப் பிறந்தவளாகதான் இருக்கவேண்டும்.
ராமன் இப்படிப் பலவிதமாக யோசித்துக்கொண்டிருக்கையில், பொழுது விடிகிறது. விசுவாமித்திரர் அவனை ஜனகரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்துகிறார். சிவ தனுசு கொண்டுவரப்படுகிறது. யாராலும் தூக்கக்கூடமுடியாத அந்த வில்லை ராமன் எடுத்துப் பூட்டி முறித்துவிடுகிறான்.
அந்த ஓசை, மூன்று உலகங்களில் இருந்த எல்லாருக்கும் கேட்டதாம், இதற்குச் சாட்சி, ராமனின் தந்தை தசரதன்!
ராமன் வில்லை முறித்தபோது, தசரதன் ஏதோ ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறான். திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்கிறது. ‘என்ன அது?’ என்று குழம்புகிறான்.
பின்னர் ஜனகனின் தூதுவர்கள் அவனை வந்து சந்தித்து விஷயத்தைச் சொன்னபிறகு, தசரதனுக்கு அந்த மர்மம் விளங்குகிறது. ‘வில் இற்ற பேரொலி கொல் அன்று இடித்தது ஈங்கு’ என்று வியப்பாகச் சொல்கிறான்.
ஆனால், எங்கேயோ அயோத்தியில் இருக்கும் தசரதனுக்குக் கேட்ட இந்த ‘வில் முறியும் சத்தம்’, அதே மிதிலை நகரில் இருக்கும் சீதைக்குக் கேட்கவில்லை. காரணம், அவள் ராமனை எண்ணி மயக்கத்தில் இருக்கிறாள். ஆகவே, அந்த ராமன் வில்லை முறித்த செய்தியும் அவளுக்குத் தெரியவில்லை.
அப்போது, மிதிலை நகரெங்கும் கொண்டாட்டம். ’இவ்வளவு நாளாக ஜனகனின் சிவதனுசை வளைக்கும் ஆண் மகன் யாருமே இல்லையா என்று ஏங்கினோமே, அப்படி ஒரு பெரிய வீரன் வந்துவிட்டான், சீதையின் திருமணம் நிச்சயமாகிவிட்டது’ என்று எல்லாரும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.
மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும். மணப்பெண் சீதையிடம் செய்தியைச் சொல்லவேண்டாமா? ‘மாலை’ என்ற தோழி உற்சாகத்துடன் சீதை இருக்கும் இடத்தை நோக்கி ஓடுகிறாள்.
முன்பு சீதையை ‘மின் அரசு’ என்று வர்ணித்த கம்பர், இப்போது அதே உவமையைச் சற்றே மாற்றிப் பயன்படுத்துகிறார், ’நுடங்கிய மின் என’, துவண்ட மின்னலைப்போலப் படுக்கையில் கிடக்கிறாள் சீதை.
அப்போது, தோழி உள்ளே நுழைகிறாள். நடந்ததை விவரிக்கிறாள்:
மாத்திரை அளவில் தாள் மடுத்து, முன்பயில்
சூத்திரம் இதுவெனத் தோளின் வாங்கினான்,
ஏத்தினர் இமையவர் இழிந்த பூமழை,
வேந்து அவை நடுக்கு உற முறிந்து வீழ்ந்ததே!
’இளவரசியே, யாரோ ஒருவன், ராமன் என்று பெயராம், தம்பியோடும் முனிவரோடும் வந்தான், பெரிய சிவ தனுசைக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கையில் பிடித்துத் தூக்கினான், ஒரு பக்கத்து முனையைக் காலால் மிதித்தான், ஏற்கெனவே பலமுறை பழகிய ஒரு வில்லைக் கையாள்வதுபோல் சுலபமாக வளைத்தான், அதைப் பார்த்து வியந்த தேவர்கள் பூமாலை தூவிப் பாராட்டினார்கள், மறுகணம், அந்த வில் முறிந்து விழுந்தது, நம் அவையில் உள்ள எல்லாரும் நடுக்கத்துடன் அவனைப் பார்த்தார்கள்!’
சீதைக்கு மகிழ்ச்சி. காரணம், ‘யாரோ ஒருவன், தம்பியோடும் முனிவரோடும் வந்தான்’ என்கிற வர்ணனை, அவள் மனத்தில் உள்ள அந்த ஆணுக்குப் பொருந்திப்போகிறது. வில்லை முறித்தவன் அவன்தானா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனாலும், அவனாகதான் இருக்கவேண்டும் என்று அவளுடைய உள்ளுணர்வுக்குத் தோன்றுகிறது.
முன்பு ராமன் ‘என் மனம் கெட்ட வழியில் போகாது’ என்று யோசித்துத் திருப்தி அடைந்தான் அல்லவா? அதுபோலதான் சீதை அடைந்த மகிழ்ச்சியும். ‘நான் அவனை மனத்தில் நினைத்திருக்கிறேன், உடனே ஒருவன் தோன்றி என்னுடைய சுயம்வர வில்லை முறிக்கிறான், அப்படியானால் இருவரும் ஒருவராகதான் இருக்கவேண்டும்’ என்று திருப்தி அடைகிறாள்.
ராமனுக்கும் அதே போன்ற ஒரு குழப்பம்தான். ‘வில்லை முறித்துவிட்டேன், அதற்காக ஓர் இளவரசியை எனக்குத் திருமணம் செய்து தரப்போகிறார்கள். ஆனால், இந்த இளவரசியும், நான் அன்றைக்குக் கன்னிமாடத்தில் பார்த்த அந்தப் பெண்ணும் ஒருவர்தானா? அதை எப்படி உறுதிசெய்துகொள்வது?’
இதற்கான வாய்ப்பு ராமனுக்கோ சீதைக்கோ உடனே கிடைக்கவில்லை. நெடுநேரம் கழித்து, சீதையைத் தசரதன்முன்னால் அழைத்துவந்து அறிமுகப்படுத்தும்போதுதான், அவளும் ராமனும் மறுபடி சந்திக்கிறார்கள்.
ராமன் சீதையை நிமிர்ந்து பார்க்கிறான். குழப்பம் தீர்ந்து மகிழ்ச்சியடைகிறான். அந்தக் காட்சியை ஒரு மிக அழகான பாடலில் தொகுக்கிறார் கம்பர்:
அன்னவளை அல்லள் என, ஆம் என அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்
உன்னு உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு
இன் அமிழ்து எழக் களிகொள் இந்திரனை ஒத்தான்
சீதையை அங்கே பார்ப்பதற்கு முன்புவரை, ராமனின் மனத்தில் ஒரே தடுமாற்றம், ‘நான் அன்றைக்குப் பார்த்த பெண்ணும், இப்போது என் மனைவியாகப்போகிற இந்தப் பெண்ணும் ஒருவர்தானா? இல்லையா?’ என்று தவிக்கிறான்.
இப்போது, அவளை நேரில் பார்த்தாகிவிட்டது. ‘அவள்தான் இவள்’ என்று ஆனந்தம் அடைகிறான். இங்கே ராமனை இந்திரனுக்கு ஒப்பிடுகிறார் கம்பர்.
இந்திரனுக்கும் ராமனுக்கும் என்ன சம்பந்தம்?
பாற்கடலில் அமுதத்தைத் தேடிப் பல காலம் கடைந்தார்கள். அதிலிருந்து அமுதம் எழுந்து வந்தது. அதைக் கண்ட இந்திரன் மகிழ்ந்தான்.
அதுபோல, இன்றைக்குச் சீதை சபையில் எழுந்து நிற்கிறாள். அவளைக் கண்ட ராமனுக்குக் குழப்பம் தீர்ந்தது ஒருபக்கம், இன்னொருபக்கம், அவளைப் பார்த்து உறுதி செய்துகொண்டுவிட்ட காரணத்தால், போன உயிர் திரும்பக் கிடைக்கிறது, அதனால்தான் சீதையைக் ‘கன்னி அமிழ்தம்’ என்கிறார் கம்பர்.
ராமனின் சந்தேகம் தீர்ந்தது, சந்தோஷம். சீதையின் நிலைமை என்ன?
சாதாரணமாகப் பெண்கள் ஆண்களை நிமிர்ந்து பார்ப்பது அந்தக் காலத்தில் வழக்கம் இல்லையே. ஏதாவது தந்திரம்தான் செய்யவேண்டும்.
எய்ய வில் வளைத்ததும், இறுத்ததும் உரைத்தும்
மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடல் உற்றாள்,
ஐயனை அகத்து வடிவே அல, புறத்தும்
கை வளை திருத்துபு கடைக்கணின் உணர்ந்தாள்
’ஒருவன் வில்லை வளைத்தான், உடைத்தான்’ என்கிற செய்தி கேட்டதுமே சீதையின் சந்தேகம் பெருமளவு தீர்ந்துவிட்டது. என்றாலும், தன் மனத்தில் உள்ள அவன்தான் இங்கே நிஜத்திலும் இருக்கிறான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள அவள் விரும்பினாள். கையில் இருக்கும் வளையல்களைச் சரி செய்வதுபோல், ஓரக்கண்ணால் ராமனைப் பார்த்தாள், ’அவனே இவன்’ என்று மகிழ்ந்தாள்.
அப்புறமென்ன? காதல் நோயால் வாடிக் கிடந்த சீதையின் உடல் மீண்டும் பழையபடி ஆகிறது. ‘ஆரமிழ்து அனைத்தும் ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள்’ என்கிறார் கம்பர். ‘அரிய அமுதம் முழுவதையும் தனி ஆளாகக் குடித்துவிட்டவளைப்போலப் பூரித்துப்போனாள்.
இப்படியாக, அன்றைக்குக் கன்னிமாடத்தில் தொடங்கிய பார்வை நாடகம், இங்கே ஓர் ஓரப்பார்வையில் வந்து இனிதே முடிகிறது!
***
என். சொக்கன் …
15 07 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 9
Posted August 6, 2012
on:57
பதினைந்து வயதில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தவர் தி. ஜானகிராமன். பள்ளி ஆசிரியராகவும், பின்னர் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், அமைப்பாளர் போன்ற பொறுப்புகளையும் வகித்தவர்.
தி. ஜானகிராமனின் அற்புதமான சிறுகதைகளை வாசித்திருக்கிறோம், ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’ போன்ற நாவல்கள், ‘நடந்தாய் வாழி காவேரி’ போன்ற அபுனைவுகளும் மிகப் புகழ் பெற்றவைதான்.
அபூர்வமாக, அவர் சில மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார். உலகப் புகழ் பெற்ற ‘மாபி டிக்’ நாவல், வில்லியம் ஃபாக்னரின் சிறுகதைகள், அணு விஞ்ஞானம், புவியியல் பற்றிய ஆங்கில நூல்கள் சிலவற்றை அவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
(ஆதாரம்: ’கருங்கடலும் கலைக்கடலும்’ நூலின் ஆசிரியர் அறிமுகக் குறிப்பு)
58
பல வருடங்களுக்கு முன்னால், இந்தியா டுடே ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியது. அதில் முதல் பரிசு பெற்றவர், க. சீ. சிவகுமார், இரண்டாவது பரிசு, பாஸ்கர் சக்தி.
இந்தப் போட்டி முடிவு அறிவிக்கப்பட்டவுடன், க. சீ. சிவகுமார் ஊர் விட்டு ஊர் சென்று பாஸ்கர் சக்தியைச் சந்தித்திருக்கிறார். எதற்கு? ‘நம்முளுதவிடவும் உங்குளுது நல்லாருக்குங்க’ என்று பாராட்டுவதற்காகதான்!
(ஆதாரம்: க. சீ. சிவகுமார் எழுதிய ‘கன்னிவாடி’ நூலின் அறிமுக உரையில் ரமேஷ் வைத்யா)
59
புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஆர். கே. நாராயணன் ஒரு தமிழர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் தமிழில் எதுவும் எழுதியதில்லை என்பதை ஒரு குறையாகவே குறிப்பிடுகிறவர்கள் உண்டு. அவருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியுமா என்று சந்தேகமாக எழுதப்பட்ட கட்டுரைகளைக்கூடப் பார்த்திருக்கிறேன்.
அந்தச் சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். ஆர். கே. நாராயணன் நன்கு தமிழ் கற்றவர். குறிப்பாக, கம்ப ராமாயணத்தை ஊன்றிப் படித்தவர். அவர் எழுதிய ‘The Ramayana’ என்ற ஆங்கில நூல் முழுவதும் கம்பன் பாக்களின் அடிப்படையில்தான் எழுதப்பட்டுள்ளன. இதை அவரே அந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ‘கம்பன் கவிதையை நான் ரசித்து மகிழ்ந்த அதே அனுபவத்தை உங்களுக்கும் தெரிவிக்கவேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்தப் புத்தகம்!’
60
நபிகள் நாயகத்தின் வரலாறைக் கவிதை நூலாக எழுதினார் மு. மேத்தா. அந்நூல் வெளியானது, அதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்குப் பரிசாக வழங்கினார்.
ராஜா அந்தப் புத்தகத்தை மேஜைமேல் வைத்துவிட்டு வேறு வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பாடல் பதிவிற்காகக் கவிஞர் வாலி அங்கே வந்திருந்தார். அவர் இந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்திருக்கிறார். படிக்கப் படிக்கச் சிலிர்த்துப்போய், ராஜாவிடம் மேத்தாவைப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.
அன்றுமட்டுமில்லை, மறுநாளே மேத்தாவையும் நேரில் சந்தித்து, இந்தப் புத்தகத்துக்காக அவரைப் பாராட்டிய வாலி, ‘இது எனக்குள் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது’ என்றார்.
சில வாரங்கள் கழித்து, ஆனந்த விகடனில் வாலி எழுதும் ‘அவதார புருஷன்’ தொடர் ஆரம்பமானது. ராமாயணத்தைக் புதுக்கவிதை வடிவில் சொல்லும் முயற்சி அது.
’மு. மேத்தாவின் ‘நாயகம் ஒரு காவியம்’ நூலை வாசித்தபிறகு, அதைப்போலவோ, அல்லது அதைவிட மேலான ஒரு படைப்பையோ எழுதவேண்டும் என்ற தீவிரமான எண்ணம் எனக்குள் ஏற்பட்டதால்தான், அவதார புருஷன் ராமனின் கதையைக் கவிதையாக எழுத ஆரம்பித்தேன்’ என்று வாலியே பின்னர் குறிப்பிட்டிருக்கிறார்.
(ஆதாரம்: ‘மு. மேத்தா திரைப்படப் பாடல்கள்’ நூலுக்கு இளையராஜா எழுதிய முன்னுரை)
61
சிறுகதைகளை அளப்பதற்கு தி.ஜ.ர. வைத்திருந்த அளவுகோல்:
- நமது கதைகளில் நமது பழக்கவழக்கங்கள் நிறைந்திருக்கவேண்டும். நமது நடை உடை பாவனைகள் நிரம்பியிருக்கவேண்டும்
- கதைகள் எல்லாவற்றிலும் ஒரு செய்தி / நீதி இருக்கவேண்டும் என்று எண்ணவேண்டாம். தற்காலத்தில் அந்த வகைப் பிரசாரக் கதைகளுக்கும் தேவை உள்ளது உண்மைதான். ஆனால் என்றும் மங்காத புகழுடன் புரியக்கூடிய கதைச்சுவை நிரம்பிய சௌந்தர்யமான கதைகளும் வேண்டும்!
(ஆதாரம்: ‘அன்று’ நூல் தொகுப்பின் முன்னுரையில் மாலன்)
62
குழந்தைகளுக்கான புத்தகங்களைப் பற்றி, தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய ஒரு குறிப்பு:
சின்னஞ்சிறு வயதிலேயே நல்ல புத்தகங்களை குழந்தைகளின் நண்பனாக்கி விடவேண்டும். அவை கேட்கிற புத்தகங்களை வாங்கிக் கொடுக்கவேண்டும்.
மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் பெரும்பாலும் குழந்தைத்தனமாக இருக்கின்றன. குழந்தைகளுக்கு இப்படிச் சொன்னால் புரியாது; இதற்குமேல் சொன்னால் புரியாது என்று நாமாகவே ஓர் அபிப்பிராயம் வைத்துக்கொண்டு எழுதுகிறோம்.
இது தவறு, குழந்தைகள் நம்மைவிடப் புத்திசாலிகள். குழந்தைகளுக்கு இருக்கிற புத்தம்புதுசான பார்வை நமக்குக் கிடையாது. குழந்தைகளுக்கான புத்தகம் எழுத குழந்தை மனசு வேண்டும்.
குழந்தைகளுக்கு ஏராளமாகப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. வழவழ தாளில் பளீரென்ற வண்ணப் புத்தகங்கள். உள்ளே யானை, குதிரை படங்கள். விலையும் யானை விலை, குதிரை விலையாகத்தான் இருக்கிறது.
நரிக்கு எட்டாத திராட்சைப் பழங்கள்மாதிரி குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இந்தப் புத்தகங்கள் காய்த்துத் தொங்குகின்றன!
(ஆதாரம்: ‘குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்’ கட்டுரை)
63
’சின்னப் பூ’ என்றால் என்ன தெரியுமா?
‘லிட்டில் ஃப்ளவர்’ பள்ளியின் பெயரை மொழிபெயர்க்கவில்லை. அது ஒரு பழந்தமிழ்ச் சிற்றிலக்கிய வகை. அரசர்களின் பத்து வகைச் சின்னங்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் ஐந்து முதல் பத்து பாடல்களால் வர்ணித்துப் பாடுவது. ஆகவே ‘சின்ன’ப் பூ என்று பெயர் சூட்டப்பட்டது.
அரசியல் கட்சிகளுக்கு ஒரு சின்னம்தான் உண்டு. அரசர்களுக்குமட்டும் பத்தா? அதென்ன கணக்கு?
- அரசனின் நாட்டு வளத்தைச் சொல்ல : நாடு, ஊர், மலை, ஆறு (4)
- அவன் அணியும் ’மாலை’யின் பெருமையைச் சொல்ல (1)
- அவனது படை பலத்தைச் சொல்ல: யானைப்படை, குதிரைப்படை (2)
- அவனுடைய ஆட்சியின் கம்பீரத்தைச் சொல்ல: கொடி, முரசு, செங்கோல் (3)
(ஆதாரம்: ஞா. தேவநேயப் பாவாணர் எழுதிய ‘பழந்தமிழாட்சி’ நூல்)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
06 08 2012
கனவான்களின் ஆட்டம்
Posted August 2, 2012
on:- In: Fiction | Magazines | Magazines | Media | Short Story
- 7 Comments
‘ஆனந்த விகடன்’ சென்ற வார இதழில் வெளியான என்னுடைய சிறுகதையின் எடிட் செய்யப்படாத வடிவம் இங்கே. பிரசுரமாகும் எனது நூறாவது சிறுகதை இது.
ஓவியங்கள் : ஸ்யாம், நன்றி: ஆனந்த விகடன்
இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் எங்கள் ஏரியாவில் பலருக்குக் கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டதற்கு ஒரே காரணம், சச்சினோ, தோனியோ அல்ல, நிஷா!
’சேட்டுப் பொண்ணு’ என்று செல்லமாக அழைக்கப்படுகிற நிஷா, ஏதோ கல்லூரியில் என்னவோ படிக்கிறாள். மிஞ்சிய நேரத்தில் ஆர்வமாகக் கிரிக்கெட் வளர்க்கிறாள்.
நிஷா இங்கே வருவதற்கு முன்னால், எங்களுடைய ‘காந்தி பார்க்’கில் எந்த ஒரு விளையாட்டும் தனி ஆதிக்கம் செலுத்தவில்லை. ஒரு மூலையில் சிலர் ஸ்டம்ப் நட்டுப் பந்தை விரட்டிக்கொண்டிருப்பார்கள், இன்னொரு மூலையில் கால் பந்துகள் நடமாடும், நடுவில் சிலர் கபடி ஆடுவார்கள், இன்னும் சிலர் வலை கட்டாமல் இறகுபந்தோ வாலிபாலோ தட்டுவார்கள். உடம்பைக் குறைப்பதற்காக நடப்பவர்கள், ஓடுகிறவர்களும் உண்டு.
முதன்முறையாக நிஷா இந்தப் பூங்காவில் கால் பதித்தபோது, அங்கே கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த எங்களுடைய அதிர்ஷ்டம், அவள் நேராக எங்களை நோக்கி வந்தாள். ‘ஹாய் எவ்ரிபடி, ஐ யாம் நிஷா’ என்றாள் பக்கா பிரிட்டிஷ் உச்சரிப்பில். நாங்கள் பதில் சொல்லத் தோன்றாமல் திகைத்து நின்றோம்.
காரணம், ‘காந்தி பார்க்’ முழுக்க முழுக்க சேவல் பண்ணைதான். இங்கே பெண்கள் நுழைகிற வழக்கமே கிடையாது. அதுவும் நிஷாபோல் ஒருத்தி நுனி நாக்கு ஆங்கிலமும் இறுகப் பிடித்த ஜீன்ஸ், டிஷர்ட்டுமாக வந்து நின்றால் என்னத்தைப் பேசுவது? பராக்குப் பார்க்கதான் முடியும்.
நிஷா அதைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சட்டென்று தமிழுக்குத் தாவி ‘எனக்குக் கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும், நானும் உங்களோட சேர்ந்துக்கலாமா?’ என்றாள்.
’ஷ்யூர்’ என்றேன் நான். என்னுடன் இருந்த சிநேகிதர்களையெல்லாம் அவளுக்கு அறிமுகப்படுத்தினேன். எல்லாரும் ‘ஹலோ’ சொல்லி முடித்ததும், ‘புதுசா டீம் பிரிக்கலாமா?’ என்றேன்.
’அதெல்லாம் வேணாம், நீங்க எப்பவும்போல விளையாடுங்க’ என்றாள் நிஷா. ‘எனக்குக் கிரிக்கெட் வேடிக்கை பார்க்கதான் பிடிக்கும், விளையாடத் தெரியாது.’
அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் எங்களுக்கு முன்னால் நிஷா அங்கே ஆஜராகிவிடுவாள். கையில் எப்போதும் ஓர் ஆங்கில நாவல் இருக்கும். நாங்கள் வந்தவுடன் அதை மூடி வைத்துவிட்டு முழு நேரக் கிரிக்கெட் ரசிகையாகிவிடுவாள். டாஸ் போடுவதில் ஆரம்பித்து ஒவ்வொன்றுக்கும் கை தட்டுவாள், பவுண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் எகிறிக் குதித்துப் பாராட்டுவாள், அதற்காகவே நாங்கள் அதிகத் தீவிரத்துடன் விளையாட ஆரம்பித்தோம்.
அதே நேரம் எங்களைச் சுற்றி ஃபுட்பாலும் பேட்மின்டனும் விளையாடிக்கொண்டிருந்த மற்றவர்களும் நிஷாவைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். ‘இந்தப் பெண்ணுக்குக் கிரிக்கெட்மீதுமட்டும் என்ன இத்தனை ஆர்வம்?’ என்று பொறாமையுடன் வெறித்தார்கள்.
அடுத்த சில நாள்களில், பலர் அங்கிருந்து இங்கே கட்சி மாறுவது வழக்கமாகிவிட்டது. மற்ற விளையாட்டுகள் காணாமல்போய் மொத்த மைதானத்தையும் கிரிக்கெட்டே ஆக்கிரமித்துக்கொண்டது. ஏழெட்டுப் பேரைமட்டும் வைத்துக்கொண்டு ஏதோ குத்துமதிப்பாக டீம் பிரித்து ஆடிக்கொண்டிருந்த நாங்கள் நிஜ கிரிக்கெட் போட்டிகளில் வருவதுபோல் இந்தப் பக்கம் பதினொன்று அந்தப் பக்கம் பதினொன்று என்று பக்காவாக விளையாட ஆரம்பித்தோம். சுமாராக விளையாடுகிறவர்கள் இரக்கமில்லாமல் வெளியேற்றப்பட்டார்கள். திறமைக்குமட்டுமே மரியாதை.
இத்தனை மாற்றத்துக்கும் ஒரே காரணம், நிஷாதான். அவளுடைய கைதட்டலுக்காகவும் பாராட்டுக்காகவுமே ஒவ்வொருவனும் குடம் குடமாக வியர்வை சிந்தினான்.
ஆச்சர்யமான விஷயம், நிஷா எங்களில் யார்மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தவில்லை. அவளுக்கு இரண்டு அணிகளுமே ஒன்றுதான், விக்கெட் விழுந்தாலும் குதிப்பாள், அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்தாலும் குதிப்பாள், அவளுக்கு எந்த டீம் எத்தனை ரன் எடுக்கிறது, யார் ஜெயிக்கிறார்கள் என்பனபோன்ற லௌகிக விஷயங்களில் அக்கறை இல்லை, விளையாட்டை ரசிப்பதுதான் முக்கியம் என்பாள்.
அப்புறம், இந்தியாவில் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகிய இருவருக்குமட்டுமே தெரிந்த கவர் ட்ரைவ், புல் ஷாட், தூஸ்ரா, யார்க்கர் இன்னபிற கிரிக்கெட் கெட்ட வார்த்தைகளெல்லாம் எப்படியோ நிஷாவுக்கும் மனப்பாடமாகியிருந்தன. சரியான நேரத்தில் அவற்றை எடுத்துத் தூவி எங்களை உற்சாகப்படுத்துவாள். நாங்கள் ஒன்றும் புரியாமல் தலையாட்டுவோம்.
நிஷாவுடன் பழகியபிறகுதான், முறையாகக் கிரிக்கெட் கற்றுக்கொள்ளவில்லையே என்று நாங்கள் முதன்முறையாக வருத்தப்பட்டோம். யாராவது ஒரு நல்ல கோச்சாகப் பார்த்துத் தினமும் எட்டு மணி நேரம் தீவிர சாதகம் செய்து கிரிக்கெட் விற்பன்னராகிவிடமுடியாதா என்று ஏங்கினோம், அப்போதுதானே நிஷாவுடன் சரிக்குச் சரி உரையாடமுடியும்?
பயிற்சிமட்டுமில்லை, நாங்கள் விளையாடப் பயன்படுத்திய பேட், பந்து, ஸ்டம்ப் எல்லாமே அரைகுறைதான். விக்கெட் கீப்பருக்குக் கை உறைகூடக் கிடையாது. ரன்னர் பேட்டுக்குப் பதிலாக ஒரு ப்ளைவுட் கட்டையைதான் செதுக்கிவைத்திருந்தோம்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி, நிஷா எங்களுடைய விளையாட்டை ரசித்தாள். இந்தக் கத்துக்குட்டிகளிடம் அவள் எதைக் கண்டாளோ, தெரியவில்லை.
அதுவும், மேலோட்டமான ரசனை இல்லை, அநேகமாக இங்கே விளையாடிய எல்லாரையும் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்குப் பழகியிருந்தாள் அவள். ‘இவன்கிட்ட ஸ்பீட் இருக்கு, ஆனா அக்யூரஸி போதாது’, ‘அவனோட டெக்னிக் சூப்பர், ஆனா ஃபீல்டர் இல்லாத இடமாப் பார்த்துப் பந்தை அடிக்கத் தெரியலை’, ‘உன்னோட ரன்னிங் பிட்வீன் தி விக்கெட்ஸ் ரொம்பப் புவர்’, ‘ஃபீல்டர்ன்னா ஓடணும், நீ ஏன் நடக்கறே?’ என்றெல்லாம் ஒவ்வொருவரையும் பக்காவாக எடைபோட்டு வைத்திருந்தாள். அவள் தவணை முறையில் வாரி வழங்கிய நிபுணத்துவம்தான் எங்களுடைய கிரிக்கெட் ஆர்வத்துக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்தது.
நல்லவேளையாக, எங்களில் யாரும் நிஷாவிடம் அத்துமீறிப் பழகவில்லை. கொஞ்சம் விஷயம் தெரிந்த சியர் லீடராக அவளை ஓரக்கண்ணால் ரசிப்பதுடன் நிறுத்திக்கொண்டோம். அதற்குமேல் முன்னேற ஆசை இருந்தாலும், தைரியம் இல்லை.
இத்தனையும் மாறியது, போன மாதத்தில், தர்மன் வந்தபிறகு.
இந்தத் தர்மன் எங்கிருந்து வந்தான் என்று யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று ஒருநாள் பூங்காவின் தெற்கு மூலையில் ஒரு கூடாரம் முளைத்தது. அதற்கு வெளியே அடுப்பு மூட்டியபடி ஒரு பெண்ணும் அவளுடைய காலைச் சுற்றியக்கொண்டு சில பொடியன்களும் தென்பட்டார்கள். சற்றுத் தொலைவில் பீடி புகைத்தபடி ஒரு கல்லின்மீது உட்கார்ந்திருந்தான் இவன். அழுக்கு உடம்பு, பரட்டைத் தலை, கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால் என்று அந்தக் காலச் சினிமாவிலிருந்து நேராக இறங்கிவந்த ஏழைபோல இருந்தான்.
மறுநாள் காலை நாங்கள் ஸ்டம்ப் நட்டுக் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது, இவனும் ஆர்வத்தோடு நெருங்கிவந்தான். ‘நானும் ஒங்களோட வெளையாட வரலாமா சார்?’
நாங்கள் அவனை எரிச்சலோடு பார்த்தோம். பதில் சொல்லாமல் திரும்பிக்கொண்டோம்.
ஆனால், நிஷா அவனைக் கவனித்துவிட்டாள். ‘ஏய், நம்ம க்ளப்புக்குப் புது மெம்பர்’ என்றாள், ‘சாரையும் ஆட்டத்துல சேர்த்துக்கலாம், என்ன சொல்றீங்க?’
எங்கள் எரிச்சல் இன்னும் அதிகரித்தது. எங்களையெல்லாம் ‘வாடா, போடா’ என்று விரட்டுகிற நிஷா இந்த அழுக்குப்பயலைப்போய் ‘சார்’ என்கிறாள். என்ன கொடுமை சரவணன் இது?
நிஷாவின் ஆதரவு கிடைத்ததும் தர்மன் பெரிதாகப் பல்லிளித்தான். மற்ற யாருடைய அனுமதியும் தனக்கு முக்கியமில்லை என்பதுபோல் குடுகுடுவென்று ஓடி வந்து ஸ்டம்புக்குப் பக்கத்தில் நின்றுகொண்டான்.
நாங்கள் சங்கடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். எங்களில் யாருக்கும் தர்மனுடன் சரிசமமாகச் சேர்ந்து விளையாட மனம் இல்லை. ஆனால் அதற்காக நிஷாவை மறுத்துப் பேசவும் சங்கடமாக இருந்தது.
வேறு வழியில்லை. நிஷாவுக்காக இந்தப் பயலை உப்புக்குச் சப்பாணியாக ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான். எங்கேயாவது பவுண்டரி லைனில் ஃபீல்டிங் நிறுத்திவைத்துவிட்டால் ஆச்சு, அவன்பாட்டுக்குப் பந்தைப் பொறுக்கிக்கொண்டு கிடக்கட்டும்.
தர்மனின் அதிர்ஷ்டம், நான் அடித்த முதல் பந்தே அவன் நிற்கிற பக்கமாகதான் விரைந்தது. சரசரவென்று அதை நோக்கி ஓடியவன் குனிந்ததும் தெரியவில்லை, நிமிர்ந்ததும் தெரியவில்லை, வீசியதும் தெரியவில்லை, மறுவிநாடி எதிர்ப் பக்கத்திலிருந்த ஸ்டம்ப் எகிறியது. நான் ரன் அவுட்.
அவ்வளவுதான். அந்த மைதானமே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது. எல்லாரும் கீழே சரிந்து கிடந்த ஸ்டம்பை நம்பமுடியாமல் பார்த்தார்கள். நிஷா என்றைக்கும் இல்லாத உற்சாகத்துடன் துள்ளினாள், தர்மனை அள்ளித் தூக்கிக் கொஞ்சாத குறைதான்.
அந்த விநாடியை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது. நிச்சயமாக அந்தப் பந்து பவுண்டரிக்குச் சென்றுவிடும் என்கிற நம்பிக்கையில் அலட்சியமாக ஓடிக்கொண்டிருந்த என்னை ஒரே வீச்சில் கலங்கடித்துவிட்டான் தர்மன்.
நான்மட்டுமில்லை, எங்களுடைய கிரிக்கெட் கோஷ்டியில் இருந்த எல்லாருமே தர்மனைத் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இது நிஜமான திறமையா? அல்லது காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்திருக்கிறதா? பரிசோதித்துவிடவேண்டியதுதான்!
அந்த ஓவர் முடிந்ததும், எங்கோ நின்றிருந்த தர்மனின் கைக்குச் சென்றது பந்து. சும்மா காட்டுத்தனமாக எறிகிறானா, அல்லது உருப்படியாகப் பந்து வீசுகிறானா என்று பார்த்துவிடலாம்.
வாசிம் அக்ரம் ரேஞ்சுக்கு ஸ்டம்பிலிருந்து நெடுந்தூரம் நடந்து சென்றான் தர்மன். பின்னர் சரேலென்று திரும்பி விடுவிடுவென்று யாரையோ வெட்டிச் சாய்க்கப்போகிறவன்போல் ஓடி வந்தான். எதிர்பாராத கணத்தில் அவன் கையிலிருந்து பந்து விடுபட்டுப் பாய்ந்தது.
அது நிச்சயம் ‘பவுலிங்’ இல்லை, ‘த்ரோயிங்’தான். ஆனால் அந்த வேகம், யாருமே எதிர்பார்க்காதது. பேட்ஸ்மேன் இலக்கு புரியாமல் எங்கோ மட்டையைச் சுழற்றிவிட்டுத் திணற, பந்து ஸ்டம்பைத் தாண்டி எகிறிப் பின்னால் நின்ற விக்கெட் கீப்பர் மணவாளன் கையைச் சுட்டுவிட்டுப் பறந்தது.
இரண்டாவது பந்தும் அதேமாதிரிதான். ஆனால் இந்தமுறை நேராக மிடில் ஸ்டம்புக்குக் குறிவைத்து வீசினான் தர்மன். பந்து மறுபடியும் பேட்டை ஏமாற்றிவிட்டு நைஸாக உள்ளே புகுந்து ஸ்டம்பைப் பெயர்த்தெடுத்தது. ‘வ்வ்வ்வ்வ்வாவ்’ என்று ஆனந்தக் கூச்சலிட்டாள் நிஷா.
அதோடு, அந்த மைதானத்தில் எங்களுடைய கிரிக்கெட் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டே இரண்டு கச்சிதமான ‘த்ரோ’க்களில் நிஷாவின் உள்ளம் கவர்ந்துவிட்டான் இந்தத் தடியன்.
அடுத்த சில நாள்கள் நான் என்னுடைய விளையாட்டைக்கூட மறந்துவிட்டுத் தர்மனைதான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். பயலுக்கு பவுலிங் ஆக்ஷன் சுமார்தான், அக்யூரஸியும் போதாது, ஆனால் அந்த வேகம், அதுதான் அவனுடைய ஆயுதம், மட்டையைச் சரியானபடி ஜாக்கிரதையாக வைக்காவிட்டால், ஒன்று கேட்டில் ஸ்டம்ப் பிடுங்கிக்கொள்ளும், இல்லாவிட்டால், எக்குத்தப்பாக பேட்டை உரசிக்கொண்டு விக்கெட் கீப்பரிடமோ ஸ்லிப்பிலோ பிடிபட்டு அவுட் ஆவோம்.
போதாக்குறைக்கு, பேட்டிங்கிலும் அவன் பெரிய கில்லாடியாக இருந்தான். எது கவர் ட்ரைவ், எது பேடில் ஸ்வீப் என்றெல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லைதான், ஆனால் பந்து எங்கே வருகிறது என்பதை மிகச் சரியாகக் கணித்து, அதன்மேல் பூர்வ ஜென்ம விரோதம் கொண்டவனைப்போல் தாக்குவான், அவனுடைய கை வலிமைக்கு லேசாகத் தொட்ட பந்துகள்கூட சிக்ஸருக்குப் பறக்கும்.
இப்படி ஒவ்வொரு போட்டியிலும் ரன்களாகக் குவித்து, விக்கெட்களாகச் சரித்து, அதிவிரைவில் அவன் எங்களுடைய ஸ்டார் ப்ளேயராகிவிட்டான். தினமும் டீம் பிரிக்கும்போது அவனை எந்த அணியில் சேர்த்துக்கொள்வது என்று அடிதடியே நடக்குமளவு செம கிராக்கி!
இத்தனைக்குப்பிறகும், எங்களால் அவனைச் சரிசமமாக நினைக்கவோ நடத்தவோ முடியவில்லை. இவன் வெறும் ‘காட்டடி கோவிந்தன்’தானே?
ஏனோ, நிஷாவுக்கு இந்த வித்தியாசம் புரியவே இல்லை. அவனுடைய பரம ரசிகையாகிவிட்டாள். எங்களுக்கெல்லாம் எப்போதாவது போனால் போகிறது என்று கைதட்டல் பிச்சையிடுகிற அவள், தர்மனைமட்டும் ஒரு பக்தையைப்போன்ற பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததும் எப்பப்பார் அவனையே பாராட்டிக்கொண்டிருந்ததும் எங்களுக்கு எரிச்சலைத் தூண்டியது.
’நிஷா, எங்களையெல்லாம் ஆக்ஷன் சரியில்லை, டெக்னிக் சொதப்புதுன்னு போட்டுக் காய்ச்சுவியே, இப்ப இவன் விளையாடறதுமட்டும் ஒழுங்கா?’
’பசங்களா, சில நேச்சுரல் டேலன்ட்ஸுக்கு டெக்னிக்ல்லாம் முக்கியமில்லை’ என்றாள் நிஷா. ’கொஞ்சம் சரியா ப்ராக்டீஸ் கொடுத்தா, சார்தான் அடுத்த ஷேவாக், தெரியுமா?’
நிஷா பேசப்பேச, எங்களுடைய காது, மூக்கு, கண்களிலெல்லாம் புகை பறந்தது. எழுதப் படிக்கத் தெரியாத தற்குறி, நாலு வார்த்தை கௌரவமாகப் பேசவராது, அழுக்குப் பட்டறை, ஏற்கெனவே கல்யாணமாகி மூன்று பிள்ளை பெற்றவன்… இவனிடம் என்னத்தைக் கண்டாள் இவள்? ஏன் இந்தப் பொருந்தாத ஜொள்ளு?
அடுத்த வாரத்தில் ஒருநாள், தெருமுனையில் தர்மனைத் தனியாகப் பார்த்தேன். சிநேகமாகப் புன்னகைத்தான். நானும் சும்மா சிரித்துவைத்தேன்.
‘உங்க வூடு எங்கிருக்கு சார்?’ என்றான் தர்மன்.
‘இங்கதான், பக்கத்துல’ என்றேன். ‘அப்புறம், உன்கிட்ட ரொம்ப நாளாக் கேட்கணும்ன்னு நினைச்சேன், நீ எப்பப்பார் அந்தப் பார்க்லதானே சுத்திகிட்டுருக்கே? ஏதும் வேலை வெட்டிக்குப் போறதா உத்தேசம் இல்லையா?’
‘என்னங்க பெரிய வேலை?’ என்று சலித்துக்கொண்டான் அவன். ‘இந்தப் பார்க்குக்கு வாட்ச்மேன்னுதான் போட்டிருக்காங்க, வருமானமெல்லாம் ஒண்ணும் பெரிசா இல்லை, அங்கேயே கூடாரத்துக்குள்ள முடங்கிக் கிடக்கறதால ஏதோ கைக்கும் வாய்க்கும் சரியா இருக்கு.’
அன்று இரவு, அப்பாவிடம் தர்மனைப் பற்றிப் பேசினேன். அவனுக்கு எங்களுடைய ஃபேக்டரியில் ’செக்யூரிட்டி’யாக வேலை வாங்கிக் கொடுத்தேன். மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம், அங்கேயே தங்குவதற்குக் குவார்ட்டர்ஸ்.
தர்மன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘நிஜமாவா சார் சொல்றீங்க?’ என்று திகைத்து நின்றான். நீங்க தெய்வம் சார்’ என்று காலில் விழுந்தான்.
‘அட, இதெல்லாம் எதுக்குய்யா? மொதல்ல உன்னோட பொருளையெல்லாம் மூட்டை கட்டு, கம்பெனி வேனை வரச் சொல்லியிருக்கேன், இன்னிக்கே புது வீட்டுக்குப் போய்ப் பால் காய்ச்சிடு, சரியா?’
தர்மனால் தன்னுடைய அதிர்ஷ்டத்தை நம்பவேமுடியவில்லை. கண் கலங்கப் புறப்பட்டுப் போனான்.
அதன்பிறகு, தர்மன் அந்தப் பூங்காப் பக்கமே வரவில்லை. நாங்கள் நிம்மதியாகவும் கண்ணியமாகவும் கிரிக்கெட் விளையாடினோம்.
***
என். சொக்கன்