மனம் போன போக்கில்

Archive for October 2012

தற்போது அச்சில் இல்லாத என்னுடைய புத்தகங்களை ’மதி நிலையம்’ பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்ய முன்வந்துள்ளனர். அந்த வரிசையில் நான்கு புத்தகங்கள் இப்போது வெளியாகியுள்ளன. இவற்றில் முதல் மூன்றிலும் முந்தைய பதிப்புக்குப்பின் நிகழ்ந்தவற்றை Update செய்து தந்துள்ளேன்.

இவற்றுடன், குங்குமம் வார இதழில் நான் தொடராக எழுதிய ‘அடுத்த கட்டம்’ நாவலும் நூல் வடிவம் பெறுகிறது. ஆங்கிலத்தில் பிரபலமாக உள்ள Business Novel வடிவத்தைத் தமிழில் முயற்சி செய்யலாமே என்று எழுதியது. ஓவியர் ஸ்யாமின் புதுமையான படங்களுடன் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. வாய்ப்பிருந்தால் புத்தக வடிவத்தில் வாசித்து எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

ஐந்து புத்தகங்களும் இன்னும் என் கைக்குக் கிடைக்கவில்லை. வந்தவுடன் விலை விவரம் தெரியப்படுத்துகிறேன். இவற்றை வாங்க விரும்புவோர் mathinilayambooks@gmail. com என்ற முகவரிக்கு எழுதலாம், அல்லது 044 28111506 என்ற எண்ணை அழைக்கலாம். இணையத்தில் வாங்கும் வசதி இப்போது இல்லை. இனிமேல் வரலாம்.

***

என். சொக்கன் …

22 10 2012

நேற்று நண்பர் ஜிரா (இராகவன் கோபால்சாமி) வீட்டுக்கு வந்திருந்தார். நான்கு மணி நேரம் செம அரட்டை.

பேச்சின் நடுவே, புராணக் கதைகளை நிறைய அலசினோம். ஜிரா நங்கையிடம் ஒரு கேள்வி கேட்டார், ‘பீஷ்மர் அடி வாங்கி அம்புப் படுக்கைல விழுந்தார்தானே, அதுக்குக் காரணம் யாரு?’

‘அர்ஜுனன்.’

‘கரெக்ட், அர்ஜுனனைவிட பீஷ்மர் நல்ல வீரர், ஆனாலும் அவர் அர்ஜுனன்கிட்டே தோத்துடறார். ஏன் தெரியுமா?’

‘அப்போ அர்ஜுனன் முன்னாடி Shieldடா ஒருத்தர் நிக்கறார். அதனாலதான் பீஷ்மர் அவரை அடிக்கலை.’

‘கரெக்ட், அந்த Shield யாரு?’

‘சிகண்டி.’

அந்த பதில் சரியானதுதான். ஆனால் ஜிரா முகத்தில் குறும்புச் சிரிப்பு, ‘தப்பு நங்கை’ என்றார்.

’எப்படி? சிகண்டிதானே அர்ஜுனன் முன்னாடி Shieldடா நின்னது?’

‘ம்ஹூம், இல்லை’ என்றார் ஜிரா, ‘போரின்போது அர்ஜுனனும் சிகண்டியும் நின்ன அந்தத் தேரை ஓட்டினது யாரு?’

’கிருஷ்ணன்.’

‘அப்போ, கிருஷ்ணன்தானே பீஷ்மருக்கு நேர் முன்னாடி நின்னார்? அவர்தானே அவங்க ரெண்டு பேருக்கும் Shield?’

ஆஹா, லாஜிக்கலாக மடக்கிவிட்டாரே என்று நான் புளகாங்கிதம் அடைகையில், நங்கை ஒரு பதில் சொன்னாள் பாருங்கள்:

’ம்ஹூம், இல்லை, கிருஷ்ணர் ஃபர்ஸ்ட் உட்கார்ந்திருக்கார், அடுத்து சிகண்டி, அடுத்து அர்ஜுனன், நீங்க சொல்றபடி பார்த்தா கிருஷ்ணர் சிகண்டிக்கு Shield, சிகண்டி அர்ஜுனனுக்கு Shield. நீங்க கேட்ட கேள்வி, அர்ஜுனனுக்கு Shield யாருன்னுதானே? அப்போ நான் சொன்ன பதில்தான் கரெக்ட்.’

***

என். சொக்கன் …

20 10 2012

போன வாரத்தில் ஒருநாள், Big Bazaar பக்கமாக நடந்துகொண்டிருந்தேன். அங்கே வாசலில் சிறு கூட்டம். ‘ஐயா வாங்க, அம்மா வாங்க’ என்று கூவாத குறையாக யாரோ அழைத்துக்கொண்டிருந்தார்கள். பெங்களூரில்கூட பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவார்களா என்ன?

லேசாக எட்டிப்பார்த்தேன். மையத்தில் ஒரு சின்ன மேஜை போட்டு அதில் ஏழெட்டு கூடைகள். கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அவற்றில் குவிக்கப்பட்டிருந்தன.

மேஜைக்கு அந்தப் பக்கம் நின்ற நபர் பரிதாபமான டை அணிந்திருந்தார். ‘இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்ந்தால் நன்றாக இருக்குமே’ என்பதுபோல் அவருடைய முகபாவம்.

நான் நிற்கலாமா, போகலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே, அவர் பேச ஆரம்பித்தார். ‘இந்த Vegetable Cutter நீங்க இதுவரைக்கும் பார்த்திருக்கமுடியாத ஒரு புதுமையான Product, ஸ்விஸ் டெக்னாலஜி, கரன்ட்டே தேவையில்லை, அரை நிமிஷத்துல எல்லாக் காய்கறிகளையும் கச்சிதமா நறுக்கிக் கொடுத்துடும்.’

அவருடைய குரலும் உடல்மொழியும் டிவியில் இதேமாதிரி பொருள்களை விற்கும் ’வீடியோ ஷாப்பிங்’ பிரபலங்களை நினைவுபடுத்தியது. அதைப் பார்த்துதான் பயிற்சி எடுத்துக்கொண்டாரோ என்னவோ!

ஒரே வித்தியாசம், அவர் விற்பனை செய்யவிருந்த பொருள், Prestige நிறுவனத்தின் தயாரிப்பு. அதற்கென்று ஒரு Brand Value உண்டல்லவா? ஆகவே, கொஞ்சம் நின்று கவனித்தேன்.

அவர் உடனடியாகச் சில கேரட்களை எடுத்து முனை நறுக்கினார், குறுக்கே நெடுக்கே நான்காக வெட்டி ஒரு தக்கனூண்டு கண்ணாடிப் பாத்திரத்தினுள் போட்டார். ஸ்விட்ஸர்லாந்திலிருந்து வந்திருக்கும் விசேஷக் கத்தி ஒன்றை (கிட்டத்தட்ட மின்விசிறிமாதிரி இருந்தது) அதனுள் பொருத்தினார். பாத்திரத்தை மூடினார், வெளியே இருந்த கைப்பிடி ஒன்றைப் பிடித்து, ஆட்டோ டிரைவர்கள் வண்டியை ஸ்டார்ட் செய்வதுபோல் நான்கைந்துமுறை திரும்பத் திரும்ப இழுத்தார். பாத்திரத்தைத் திறந்து காட்டினார். கேரட் பொடிப்பொடியாக நறுக்கப்பட்டிருந்தது.

நான் நிஜமாகவே அசந்துபோனேன். இதைக் கையால் நறுக்குவதென்றால் (அதுவும் இந்த அளவு நுணுக்கமாக) குறைந்தது கால் மணி நேரம் தேவைப்படும். இங்கே சில விநாடிகளில் வேலை முடிந்துவிட்டது.

ஒருவேளை, இது ஏமாற்றுவேலையாக இருக்குமோ? மேஜிக் ஷோக்களில் வருவதுபோல் அந்தக் கண்ணாடிப் பாத்திரத்தை இரண்டாகப் பிரித்து, கீழ்ப் பகுதியில் முழுக் கேரட்களைப் போட்டு, பின்னர் மேல் பகுதியில் ஏற்கெனவே நறுக்கிவைத்த கேரட்களைத் திறந்து காட்டுகிறார்களோ?

வாய்ப்பில்லை. அங்கிருந்த பலரும் தாங்களே வெவ்வேறு காய்கறிகளை அதனுள்ளே போட்டுச் சரேல் சரேல் என்று இழுத்து வெட்டிப் பார்த்தார்கள். எல்லாரும் பத்தே விநாடிகளில் துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட காய்கறிகளைக் கண்டு முகம் மலர்ந்தார்கள்.

அடுத்து, மொபைல் ஃபோனைத் திறந்து, இணையத்திலும் இந்தத் தயாரிப்பின் பெயரைத் தட்டித் தேடிப் பார்த்தேன். பலரும் நல்லவிதமாகவே கருத்துத் தெரிவித்திருந்தார்கள். சிலர் ‘இப்படி ஒரு பிரமாதமான நறுக்கியந்திரத்தைப் பார்த்ததே இல்லை, என்னுடைய நேரம் கணிசமாக மிச்சமாகிறது’ என்றெல்லாம் நெகிழ்ந்திருந்தார்கள்.

தவிர, இது Prestige தயாரிப்பு, ஒரு வருடம் உத்திரவாதம், நூறு ரூபாய் தள்ளுபடி, வாங்கினால் என்ன?

வாங்கலாம். ஆனால், இதை வைத்துக் காய் நறுக்கப்போவது நான் இல்லை. என் மனைவி. அவர்தானே இதை வாங்குவதுபற்றித் தீர்மானிக்கமுடியும்?

ஆனால், அவரை அழைத்து வந்து காட்டும்வரை இந்த டை கட்டிய கீரி வித்தைக்காரர் காத்திருப்பாரா? அதைவிட முக்கியம், நூறு ரூபாய் தள்ளுபடி இருக்குமா?

பேசாமல், இதை ஒரு Surprise Giftஆக வாங்கித் தந்துவிட்டால் என்ன?

என் மனைவிக்கு Gift வாங்குவதே சிரமம், Surprise Gift அதைவிட சிரமம்.

காரணம், அவர் பதினேழாம் நூற்றாண்டில் அல்லது, அதற்கு முன்னால் பிறந்திருக்கவேண்டியவர். வீட்டு வேலைகளைச் செய்வதற்குத் துணைக் கருவிகளைப் பயன்படுத்தினால், அதன்மூலம் அந்த இல்லத்தரசியின் புனிதத்தில் அரைக்கால் இஞ்ச் குறைந்துவிடுகிறது என்று உறுதியாக நம்புகிறவர்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரு சாதாரண வாஷிங் மெஷின் வாங்குவதற்கு அவர் 2 வருஷம் யோசித்தார். அதை வாங்கியபிறகும், ‘கையால துவைக்கறமாதிரி வராது’ என்றுதான் இன்றுவரை புலம்பிக்கொண்டிருக்கிறார்.

அப்பேர்ப்பட்டவரிடம் காய்கறி நறுக்குவதற்கு மெஷின் வாங்கித் தந்தால் என்ன பதில் வரும் என்று எனக்குத் தெரியும். ‘எனக்கு இது வேணும்ன்னு நான் கேட்டேனா?’ என்பார் முதலில். அடுத்து, ‘இந்தமாதிரி மெஷினெல்லாம் சுத்த ஏமாத்து, எதையும் வெட்டாது’ என்பார், மூன்றாவதாக, ‘இதற்கு நீ கொடுத்த விலை ரொம்ப அதிகம், யாரோ உன் தலையில நல்லா மிளகாய் அரைச்சுட்டான்’ என்பார்.

அந்த மூன்றாவது முணுமுணுப்புக்கு என்னிடம் பதில் உண்டு. அவருக்குத் தெரியாமல் நான் எதை வாங்கினாலும் 20% விலை குறைத்துச் சொல்லிவிடுவேன். அவர் திருப்தியடைந்துவிடுவார். ஆனால் மற்ற இரண்டு முணுமுணுப்புகளை எப்படிச் சமாளிப்பது?

இதில் பெரிய பிரச்னை, அவருக்குத் தன்னுடைய நேரத்துக்கு மதிப்பு போடத் தெரியாது. ‘வீட்ல சும்மாதானே இருக்கேன், கால் மணி நேரம் செலவழிச்சு கேரட் வெட்டினா என்ன? அதுக்காக ஒரு மெஷினைக் காசு கொடுத்து வாங்குவாங்களா?’ என்று ஒரேயடியாகத் தாக்கிவிடுவார்.

ஆனாலும், இத்தனை பிரமாதமான ஒரு தயாரிப்பை விடுவதற்கு மனம் இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்று நானும் ஒருமுறை காய்கறிகளை வெட்டிப் பார்த்துவிட்டு, அதைக் காசு கொடுத்து வாங்கிவிட்டேன்.

வீடு செல்லும்வரை தயக்கம் இருந்தது. அதன்பிறகு எப்படியோ தைரியம் வந்துவிட்டது. ‘டொட்டடொய்ங்’ என்று இதை அவர்முன் வைத்தேன்.

விழிகளில் துளி ஆச்சர்யம் இல்லை. ‘இதுவா’ என்றார் அலட்சியமாக. ‘டிவில பார்த்திருக்கேன்.’

’ம்ஹூம், டிவி தயாரிப்பு இல்லை, ப்ரெஸ்டீஜ், ஒரு வருஷம் கேரன்டிகூட உண்டு’ என்று பாதுகாப்பாகச் சொன்னேன்.

அவர் ஆர்வம் காட்டவில்லை. ‘இதெல்லாம் ஒழுங்காக் காயை வெட்டுமா?’ என்றார் சந்தேகமாகவே.

முதல் சவால். நான் தயாராகவே இருந்தேன். ‘ஏதாவது காய்கறி இருந்தா கொண்டுவாயேன், வெட்டிக் காட்டறேன்’ என்றேன் மிகவும் தைரியமாக.

அவர் ஃப்ரிட்ஜிலிருந்து சில பீன்ஸ்களைக் கொண்டுவந்தார். அவற்றை முனை நறுக்கி, நான்காக ஒடித்து உள்ளே போட்டு மூடினேன். ஊரில் உள்ள எல்லா உம்மாச்சிகளையும் நினைத்துக்கொண்டு உறையினின்றும் வாளை உருவுகிற அரசன் தோரணையில் கைப்பிடியைப் பிடித்து இழுத்தேன்.

ம்ஹூம், உள்ளே எதுவும் நடக்கவில்லை. கண்ணாடி வழியே தெரிந்த பீன்ஸ்கள் அப்படியேதான் இருந்தன.

என்னாச்சு? வழக்கம்போல் ஏமாந்துவிட்டேனா?

அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த ஸ்விட்ஸர்லாந்துக் கத்தியை உள்ளே பொருத்தவே இல்லை. அப்புறம் கைப்பிடியைமட்டும் இழுத்து என்ன புண்ணியம்?

நாக்கைக் கடித்துக்கொண்டு அந்தப் பெட்டியைத் திறந்தேன். அங்கே பிளாஸ்டிக் கவசத்தினுள் பத்திரமாக இருந்த மின்விசிறி வடிவக் கத்தியை எடுத்து பீன்ஸ்களுக்கு நடுவே பொருத்தினேன். மறுபடி டப்பாவை மூடி சரேல், சரேல், சரேல், சரேல். நான்கே இழுப்புகளில் பீன்ஸ் பொடிப்பொடியாகிவிட்டது.

ஏதோ நானே தயாரித்த இயந்திரம்போல் பெருமிதமாக டப்பாவைத் திறந்து காண்பித்தேன். பாராட்டுக்காகக் காத்திருந்தேன்.

அவர் துண்டு பீன்ஸைக் கையில் எடுத்து லேசாக வருடிப் பார்த்தார். என் முகத்தைப் பார்த்தார். ‘நல்லாதான் வெட்டியிருக்கு. ஆனா…’ என்றார்.

’என்ன ஆனா?’

‘இவ்ளோ பொடிப்பொடியா நறுக்கிட்டா எப்படி? இது பீன்ஸா, வெண்டைக்காயா, கீரையான்னே தெரியலையே, இதுல பொரியல் செஞ்சா யார் நம்புவாங்க?’

***

என். சொக்கன் …

19 10 2012

நம் ஊரில் ராமாயணக் கதையைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது. வால்மீகி எழுதிய ஒரிஜினலாகட்டும், அதிலிருந்து பிறந்த பலமொழிக் காவியங்களாகட்டும், புதுமையான பெயர்களுடன் வெளிநாடுகளில் வளைய வருகிற விதவிதமான ராமாயணங்களாகட்டும், எல்லாமே கிட்டத்தட்ட ஒரே சரித்திரத்தைதான் சிறு மாற்றங்களுடன் விவரித்துச் செல்கின்றன. மேடைப் பேச்சாளர்கள் இப்போதும் அதை வாரக்கணக்கில் விரிவுரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் அது ஒரு பெரிய, விரிவான கதைகூடக் கிடையாது. சந்தேகமிருந்தால் அமர் சித்ர கதாவைப் பாருங்கள், காமிக்ஸ் மகாபாரதத்தை 1500 ரூபாய் விலைக்குப் பெரிய வால்யூமாக வெளியிட்டிருக்கிறார்கள், ஆனால் காமிக்ஸ் ராமாயணம்? வெறும் நூறு ரூபாய்தான்!

ஆனால் அந்தத் தக்கனூண்டு கதையை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பாத்திரத்தையும், ஒவ்வொரு பாடலையும், அதற்குள் இருக்கும் ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு கோணங்களில் மிக விரிவாக அலசிப் பிழிந்து காயப்போடுவதில் நமக்கு ஒரு சந்தோஷம். அதே கதையை, அதே சம்பவத்தை இவர் எப்படிச் சொல்லப்போகிறாரோ என்று தெரிந்துகொள்கிற ஆர்வம்.

அதனால்தான், இப்போதும் யாராவது ராமாயணத்தைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், காரசாரமாக வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள், விருத்தம், வெண்பா, புதுக்கவிதை, ஹைக்கூ, ட்விட்டர் என்று எத்தனை வடிவத்தில் வந்தாலும், அந்தக் கதைமீது நமக்கு ஈர்ப்பு குறைவதில்லை.

நூலாக வெளிவந்த ராமாயணங்கள் நூறு என்றால், சொற்பொழிவுகளாக, பட்டிமன்றங்களாக, வழக்காடுமன்றங்களாக, கலந்துரையாடல்களாக, விவாதங்களாகக் காற்றில் கரைந்துபோன ராமாயணங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். ரசிகமணி டி. கே. சி., கம்பன் அடிப்பொடி சா. கணேசன், தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், புலவர் கீரன், கி. வா. ஜகந்நாதன், அ. ச. ஞானசம்பந்தன், நீதியரசர் மு. மு. இஸ்மாயில் என்று தொடங்கிப் பல்வேறு அறிஞர்கள் ராமாயணக் கதையை, மாந்தர்களை, நிகழ்வுகளை, சாத்தியங்களை, உணர்வுகளைப் பலவிதமாக அலசியிருக்கிறார்கள். அதையெல்லாம் நேரில் உட்கார்ந்து கேட்டவர்கள் பாக்கியவான்கள், வேறென்ன சொல்ல?

அபூர்வமாக, இவற்றுள் சில உரைகள்மட்டும் ஒலி நாடாக்களாக, புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன, அவையும் இன்றுவரை விற்பனையில் இல்லை, டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாக்கப்படவும் இல்லை, இனிமேலும் அதற்கான வாய்ப்பு ஏற்படுமா என்று தெரியாது.

இந்தப் பின்னணியுடன் பார்க்கும்போது, விகடன் பிரசுரம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ‘கம்பனில் ராமன் எத்தனை ராமன்’ உரைத் தொகுப்பு நூல் ஓர் ஆனந்த அதிர்ச்சியாகவே உள்ளது. ’இதையெல்லாம் இந்தக் காலத்துல யார் படிக்கப்போறாங்க’ என்று அலட்சியமாக ஒதுக்காமல் இதனைச் சிறப்பானமுறையில் பதிப்பித்திருக்கும் விகடன் குழுமத்தைப் பாராட்டவேண்டும்.

சில ஆண்டுகளுக்குமுன்னால் சென்னையில் நடைபெற்ற ஏழு சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. சுதா சேஷய்யன், கு. ஞானசம்பந்தன், சத்தியசீலன், அறிவொளி, செல்வக்கணபதி, தெ. ஞானசுந்தரம், பெ. இலக்குமிநாராயணன் ஆகியோர் ராமனை மகனாக, மாணவனாக, சகோதரனாக, கணவனாக, தலைவனாக, மனித நேயனாகப் பல கோணங்களில் அலசியிருக்கிறார்கள். கே. பாசுமணி இவற்றைத் தொகுத்திருக்கிறார்.

இந்த நூலின் சிறப்பு அம்சம், சொற்பொழிவுகளின் எழுத்து வடிவம் என்கிற விஷயமே தெரியாதபடி தேர்ந்த இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளைப்போல் கட்டமைக்கப்பட்டுள்ளது. எளிமையான மொழி, பொருத்தமான மேற்கோள்கள், ஆசிரியர்கள் (சொற்பொழிவாளர்கள்) பற்றிய நல்ல அறிமுகம் எல்லாம் உண்டு. ஒவ்வொரு கட்டுரையும் அதே பாத்திரத்தை (ராமன்) வெவ்வேறுவிதமாக அணுகுவதால் நமக்கு ஒரு முழுமையான பார்வை கிடைக்கிறது.

தொகுப்பின் மிக நேர்த்தியான கட்டுரை, முனைவர் சத்தியசீலன் எழுதியுள்ள ‘கம்பனில் ராமன் : ஒரு கணவனாக…’. பொதுவாகப் பலரும் விவாதிக்கத் தயங்கும் அக்கினிப் பிரவேசக் காட்சியையே எடுத்துக்கொண்டு அதனை உளவியல் நோக்கில் ஆராய்ந்து தன் வாதங்களைச் சிக்கலில்லாமல் முன்வைக்கும் அவரது லாகவம் எண்ணி வியக்கவைக்கிறது.

இதேபோல், முனைவர் இலக்குமிநாராயணனின் கட்டுரை ராமன் ஏன் ஒரு சிறந்த மாணவன் என்று விவரிக்கிறது. அதன்மூலம் மாணவர்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் என்னென்ன என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறது.

குறைகள் என்று பார்த்தால், ஆழமான கட்டுரைகளுக்கு நடுவே சில மேம்போக்கான கட்டுரைகளும் தலைகாட்டுகின்றன. குறிப்பாக, சில ’பிரபல’ பேச்சாளர்கள் கம்பனைச் சும்மா ஊறுகாய்மாதிரி தொட்டுக்கொண்டு மற்ற கதைகளையே சொல்லி மேடையில் நேரத்தை ஓட்டியிருப்பதை ஊகிக்கமுடிகிறது. அவையெல்லாம் இங்கே பக்க விரயமாகத் துருத்திக்கொண்டு நிற்கின்றன.

இன்னொரு பிரச்னை, கம்பனில் பல ஆயிரம் பாடல்கள் இருப்பினும், பல பேச்சாளர்கள் சுமார் 25 முதல் நூறு பாடல்களைதான் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டுவார்கள். இந்தத் தொகுப்பிலும் பெருமளவு அவையே இடம்பெறுவது மிகவும் ஆயாசம் அளிக்கிறது. அதிகம் அறியப்படாத அற்புதமான கம்பன் பாக்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே என்கிற ஆதங்கம் எழுகிறது.

இதுபோன்ற சில சிறிய குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இது ஓர் அருமையான முயற்சி. இன்னும் அச்சு வடிவத்தில் வெளியாகாத நல்ல கம்ப ராமாயண உரைகள் இதேபோல் தொகுக்கப்படவேண்டும். முக்கியமாக, தூர்தர்ஷன் யாரும் பார்க்கமுடியாத நேரங்களில் அடிக்கடி ஒளிபரப்புகிற பழைய கம்பர் கழகச் சொற்பொழிவுகளைத் தொகுத்து வெளியிட்டால் புண்ணியம்!

அது சரி, இந்த நூலின் முதல் பதிப்போடு அந்தந்தச் சொற்பொழிவுகளின் ஆடியோ சிடி இலவசமாகத் தரப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் நான் வாங்கிய இரண்டாம் பதிப்பில் அது இல்லை. அறியாப்புள்ளையை இப்படி ஏமாத்தலாமா விகடன் தாத்தா? 🙂

(கம்பனில் ராமன் எத்தனை ராமன் : விகடன் பிரசுரம் : 160 பக்கங்கள் : ரூ 70)

***

என். சொக்கன் …
10 10 2012

(Originally Published In : http://omnibus.sasariri.com/2012/10/blog-post_12.html )

திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் ஒரு மினி சுற்றுலா சென்றிருந்தோம். கொஞ்சம் அலுவல், நிறைய ஊர் சுற்றல்.

(பயப்படாதீர்கள், இது பயணக் கட்டுரை அல்ல!)

நாட்டரசன் கோட்டைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த நேரம். உறவினர் ஒருவர் ஃபோன் செய்தார், ‘நீங்க வர்ற வழியிலதான் திருக்கோஷ்டியூர் இருக்கு, அருமையான கோயில், ராமானுஜரோட வாழ்க்கையோட நெருங்கின தொடர்பு கொண்டது. அவசியம் பார்த்துட்டு வாங்க.’

சிறிது நேரத்தில், அவர் சொன்ன திருக்கோஷ்டியூர் வந்தது. ’சௌம்ய நாராயணப் பெருமாள்’ ஆலயத்தின் வாசலில் காரை நிறுத்தினோம்.

சின்னக் கோயில்தான், ஆனால் மிக உயரமாகத் தென்பட்டது. நான்கு தளங்களில் பெருமாள். கீழ்த்தளத்திலும் மேல்தளத்திலும் ராமானுஜரும் உண்டு.

(பயப்படாதீர்கள், இது ஆன்மிகக் கட்டுரை அல்ல!)

கோயிலைவிட, எனக்கு அந்த ஊரின் பெயர்தான் வியப்பைத் தந்தது. அதென்ன திருக்’கோஷ்டி’யூர்? காங்கிரஸ் செல்வாக்கு நிறைந்த இடமோ?

(பயப்படாதீர்கள், இது அரசியல் கட்டுரை அல்ல!)

உடனடியாக, மொபைல் இணையத்தைத் திறந்து தேட ஆரம்பித்தேன். ‘மிஸ்டர் கூகுள், திருக்கோஷ்டியூர் என்ற பெயருக்குக் காரணம் என்னவோ?’

ஓர் அசுரன், அவனை அழிப்பதற்காகப் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் எல்லாரும் கலந்தாலோசனை நடத்துகிறார்கள். அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம்தான், இந்த ஊர். ஆகவே, தேவர்கள் ‘கோஷ்டி’ சேர்ந்து பேசிய இடம் என்ற அர்த்தத்தில் அதற்குத் ‘திருக்கோஷ்டியூர்’ என்று பெயர் வந்ததாம்.

சுவாரஸ்யமான கதைதான். பொருத்தமான விளக்கம்தான், ஆனால், இந்தப் பெயரில் ஒரு கிரந்த எழுத்து (ஷ்) இருக்கிறதே. அதைத் தவிர்த்துவிட்டால் ‘திருக்கோட்டியூர்’ என்று மாறிவிடுமே.

எனக்குத் தெரிந்து ஹைதாராபாதில் ‘கோட்டி’ என்ற பெயரில் ஓர் இடம் உண்டு. அதே ஆந்திராவில் ராஜ் கோட்டி என்ற பெயரில் இரண்டு இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் துள்ளிசையின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டதாக ஏ. ஆர். ரஹ்மான் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்.

(பயப்படாதீர்கள், இது சினிமாக் கட்டுரை அல்ல!)

ஆனால் தமிழ்நாட்டின் தென் மூலையில் உள்ள இந்த ஊருக்கும், அந்தக் ‘கோட்டி’களுக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. அல்லவா?

மொழிமாற்றம், கிரந்தம் தவிர்ப்பு போன்றவற்றில் இந்தப் பிரச்னை எப்போதும் உண்டு. கொஞ்சம் அசந்தாலும் அர்த்தம் சுத்தமாக மாறிவிடும்.

உதாரணமாக, ’ஸ்ரீனிவாசன்’ என்று ஒரு பெயர். ’ஸ்ரீ’ என்றால் ‘திரு’, ‘செல்வம்’, ‘வளம்’, ஆக, இந்தப் பெயரின் அர்த்தம், மிகவும் வளமாக / வளத்தில் வாசம் செய்பவன்.

அந்தப் பெயரைக் கிரந்தம் தவிர்த்து ‘சீனிவாசன்’ என்று எழுதுகிறோம். எல்லாருக்கும் பழகிவிட்டது. தவறில்லை. ஆனால் இந்தத் தமிழ்ப் பெயருக்குச் ‘சர்க்கரையில் வாசம் செய்கிறவன்’ (அதாவது எறும்பு) என்று ஓர் அர்த்தம் (அனர்த்தம்) வருகிறதல்லவா?

சில வருடங்களுக்குமுன்னால் நாங்கள் ‘தினம் ஒரு கவிதை’ என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் குழுமத்தை நடத்திக்கொண்டிருந்தோம். ‘Dhinam Oru Kavithai’ என்ற ஆங்கிலப் பெயர் நீளமானது என்பதால், அந்தக் குழுவுக்கு ‘DOKAVITHAI’ என்று சுருக்கமாகப் பெயர் சூட்டியிருந்தோம்.

அந்தக் குழுமத்தின் ஆண்டு விழாவில் ஒருவர் பேசினார், ‘தினம் என்பது வடமொழிச் சொல், ஆகவே அதை ‘நாளும் ஒரு கவிதை’ என்று மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’

இன்னொருவர் இதற்குப் பதில் சொன்னார், ‘நண்பர் சொன்னது நல்ல யோசனைதான். ஆனால் அப்படி மாற்றினால் நம் குழுவின் ஆங்கிலப் பெயரை ‘NaaLum Oru Kavithai’ அதாவது ‘NOKAVITHAI’ என்று மாற்றவேண்டியிருக்கும். கவிதையே இல்லை என்கிற அர்த்தம் வந்துவிடுமே.’

இதை வேடிக்கைக்காகக் கேட்கும்போது சிரிப்பு வருகிறது. ஆனால் கொஞ்சம் முயன்றால், மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்தி எந்தப் பெயருக்கும் நல்ல அர்த்தம் ஒன்றைச் சொல்லிவிடமுடியும் என்பது என் கட்சி.

உதாரணமாக, ‘நீடாமங்கலம்’ என்று ஓர் ஊர். திருவாரூர் பக்கத்தில் உள்ளது. அந்த ஊர் பால் திரட்டு முன்பு ரொம்பப் பிரபலம். இப்போது கிடைப்பதில்லை.

ஒரு பெரிய பேச்சாளர் (கி. வா. ஜகந்நாதன் என்று நினைவு) அந்த ஊரில் சொற்பொழிவு ஆற்ற வந்திருந்தாராம். அவரை வரவேற்று அழைத்துச் சென்ற உள்ளூர்ப் பிரமுகர் பேச்சுவாக்கில் ஒரு விஷயத்தைச் சொன்னாராம், ‘ஐயா, இந்த ஊர் ரொம்ப நல்ல ஊர்தான், ஆனா இதுக்கு ஏன் நீடாமங்கலம்ன்னு பேர் வெச்சாங்க? தப்பான அர்த்தம் வருதே!’

அவருடைய புலம்பலில் நியாயம் உண்டு. ‘நீடா’ (நீளா) மங்கலம் என்றால், நல்ல விஷயங்கள் தொடர்ந்து நிகழாத ஊர் என்ற பொருள்தான் வருகிறது.

ஆனால், அந்தச் சொற்பொழிவாளர் அசரவில்லை, ‘நீங்கள் வார்த்தையைச் சரியாகப் பிரிக்கவில்லை’ என்றார், ’அது நீடா + மங்கலம் அல்ல, நீள் + ஆம் + மங்கலம் என்று பிரிக்கவேண்டும், அதாவது, மங்கலம் எப்போதும் நீண்டு தங்கியிருக்கும் ஊர் இது!’

அதுபோல, ‘திருக்கோட்டியூர்’ என்ற கிரந்தம் தவிர்த்த பெயருக்கும் ஏதாவது பொருத்தமான அர்த்தம் இருக்குமோ? தொடர்ந்து கூகுளை விசாரித்தேன். அட்டகாசமான விளக்கம் ஒன்று சிக்கியது.

தமிழில் ’திருக்கு’ என்றால் துன்பம், தீய வினைகள், மாறுபாடு, வஞ்சனை போன்ற பொருள்கள் உண்டு. கம்ப ராமாயணத்தில் ‘திருக்கு இல் சிந்தையர்’ என்று வானரப் படையினரைப் புகழ்கிறார் கம்பர். அதாவது ‘புத்தி குறுக்கால யோசிக்காத பயல்கள்’, Straightforward Personalities!

ஆக, உங்களுக்குக் ‘கோஷ்டி’ பிடிக்காவிட்டால், திருக்கோட்டியூர் = திருக்கு + ஓட்டி + ஊர், நம்முடைய துன்பங்களை, பழைய வினைகளை, பொல்லாத்தனங்களை விரட்டும் ஊர் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

இப்படித் தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஊருக்கும் பெயர்க்காரணம் இருக்கிறது. பஸ்ஸில் செல்லும்போது வரிசையாக வரும் ஊர்களின் (குறிப்பாகக் கிராமங்களின்) பெயர்ப்பலகைகளை ஒவ்வொன்றாக வாசித்து, ‘இதற்கு என்ன பெயர்க் காரணமாக இருக்கும்’ என்று யோசிக்கத் தொடங்கினால், அற்புதமான பல புதிய (அதாவது, பழைய) தமிழ் வார்த்தைகளைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பும் அது.

ஆர்வம் உள்ளவர்கள், ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘ஊரும் பேரும்’ என்ற நூலை வாங்கி வாசிக்கலாம். இணையத்திலேயே இலவசமாகவும் கிடைக்கிறது. கொஞ்சம் தேடுங்கள்.

***

என். சொக்கன் …
12 10 2012

(Originally Published In : http://www.idlyvadai.blogspot.in/2012/10/blog-post_12.html )

’புதிய தலைமுறை’ சென்ற இதழில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்

போன வாரம், நண்பர் ஒருவர் எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவரை வாசலில் சென்று வரவேற்றேன், ‘உள்ளே வாங்க, காபி சாப்பிட்டுகிட்டே பேசலாம்!’ என்று அழைத்தேன்.

‘பரவாயில்லை, இங்கே கார்லயே பேசலாமே’ என்று மறுத்தார் அவர்.

‘சேச்சே, ஏஸி கான்ஃபரன்ஸ் ரூம்ல சௌகர்யமா உட்கார்ந்துகிட்டுப் பேசறதை விட்டுட்டு இங்கே ஏன் சிரமப்படணும்?’ என்றேன் நான்.

அவர் தயக்கமாகச் சிரித்துவிட்டுச் சொன்னார், ‘எனக்குக் கால்ல ஒரு சின்னப் பிரச்னை, மாடிப்படி ஏறமுடியாது.’

’நோ ப்ராப்ளம், லிஃப்ட் இருக்கே!’

’லிஃப்ட் சரிதான். ஆனா, அந்த லிஃப்டை நெருங்கறதுக்கு முன்னாடி நாம அஞ்சாறு படி ஏறணும் போலிருக்கே. அது எனக்குச் சிரமம்.’

அவர் அப்படிச் சொன்னபிறகுதான் நான் யோசித்தேன். உண்மையிலேயே எங்கள் அலுவலகத்தில் லிஃப்டுக்குச் செல்லவேண்டுமென்றால் சில படிகளை ஏறத்தான் வேண்டும். இவரைப்போல் உடல் ஊனமுற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், சக்கர நாற்காலியில் செல்கிறவர்கள், வயதானவர்களுக்கு அது கடினம்தான்.

ஆச்சர்யமான விஷயம், நான் இதே அலுவலகத்தில் எட்டு வருடங்களாக வேலை செய்கிறேன், இந்தப் படிகளில்தான் தினமும் பலமுறை ஏறிச் செல்கிறேன், இறங்கி வருகிறேன். ஆனால் இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைகூட இதைப்பற்றி யோசித்தது கிடையாது.

‘நானும் அப்படிதான் சார் இருந்தேன்’ என்றார் அவர். ‘சில வருஷங்களுக்கு முன்னாடி எனக்குப் பக்கவாத அட்டாக், உயிர் பிழைச்சு எழுந்ததே பெரிய விஷயம், ரொம்ப நாள் ரெஸ்ட் எடுத்துட்டு, இப்பதான் தைரியமாக் குச்சியை ஊனிகிட்டுக் கொஞ்சம் நடமாட ஆரம்பிச்சுருக்கேன்!’

‘இந்த அட்டாக்குக்கு முன்னாடிவரைக்கும், நானும் இதுமாதிரி படிகளைப் பற்றி அலட்டிகிட்டதே கிடையாது. எனக்கே நடக்கறது, படி ஏறுறது சிரமம்ன்னு ஆனப்புறம்தான், ஒவ்வோர் இடத்தையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பிச்சேன். இருக்கிற கட்டடங்கள்ல பாதிக்கு மேல, என்னைமாதிரி ஆள்கள் உள்ளே நுழைய லாயக்கில்லைன்னு புரிஞ்சது.’

’இப்போ உங்க கட்டடத்திலேயே, படிகளுக்குப் பக்கத்துல ஒரு சாய்வுப் பாதை அமைச்சாப் போதும், நான் சவுகர்யமா உள்ளே வந்துடுவேன். அதுக்குச் சில ஆயிரம் ரூபாய் செலவாகும். அது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனா அப்படிச் செய்யணும், அது அவசியம்ன்னு உங்களுக்குத் தோணணுமே, அதுதான் பெரிய பிரச்னை.’

‘இந்தக் கட்டடம்மட்டுமில்லை, பல ரெஸ்டாரன்ட்கள், தியேட்டர்கள், ஷாப்பிங் மால்ஸ், தொழிற்சாலைகள், பெரிய கார்ப்பரேட் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஏன், சில ஹாஸ்பிடல்ஸைக்கூட, எங்களைமாதிரி ஆள்கள் உள்ளே நுழைய வசதியில்லாதபடிதான் கட்டியிருக்காங்க, அதுவும் முக்கியம், அவசியம்ன்னு யாருக்கும் தோணறதே இல்லை. என்ன செய்ய?’

இப்படி அவர் ஆதங்கத்துடன் கேட்டபிறகு, எனக்கு ஒட்டுமொத்த உலகமும் புதிதாகத் தோன்ற ஆரம்பித்தது. கண்ணில் படுகிற ஒவ்வொரு கட்டடத்தையும், உடல் ஊனமுற்ற ஒருவர் இதனுள் நுழைவது எளிதா, சிரமமா என்று கவனித்து எடை போட ஆரம்பித்தேன்.

சோகமான விஷயம், மிகப் பெரிய நகரங்களில்கூட, ஒரு ஏரியாவில் நூறு கட்டடங்கள் இருக்கின்றது என்று வைத்துக்கொண்டால், அதில் பத்து அல்லது பதினைந்துமட்டுமே உடல் ஊனமுற்றோர் எளிதில் அணுகும்வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்துக் கட்டடங்களும் வாசலில் குறைந்தது இரண்டு முதல் ஐந்து அல்லது ஆறு படிகளை அமைத்து அவர்களைத் தடுத்து நிறுத்திவிடுகின்றன.

இதைப் படிக்கும்போது, உங்களது வீடு அல்லது அலுவலகத்தை மனக்கண்ணில் கொண்டுவந்து பாருங்கள், அங்கே சாய்வுப் பாதை உண்டா? சக்கர நாற்காலியிலோ, கைத்தடியின் துணையுடனோ நடமாடும் ஒருவர் அதில் எளிதாக நுழைவது சாத்தியமா?

சாய்வுப் பாதை இல்லாவிட்டால் என்ன? மற்றவர்கள் உதவியுடன் அவர்கள் உள்ளே வரலாமே.

நிச்சயமாக வரலாம். ஆனால் அதேசமயம், உடல் குறைபாடு கொண்ட அவர்கள் பிறரின் துணை இன்றி சுதந்தரமாகவும் தன்னம்பிக்கையோடும் நடமாடவே விரும்புகிறார்கள். நம்முடைய உதவியோ, பரிதாப உச்சுக்கொட்டலோ அவர்களுக்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள். அதற்கான ஏற்பாட்டை நாம் செய்து தருவதுதானே நியாயம்?

இந்தியாவில்மட்டுமில்லை. உலகம்முழுக்க இந்த வாசல் படிக்கட்டுகளின் பிரச்னை இருக்கிறது. கட்டட உரிமையாளர்களோ அவற்றை வடிவமைப்பவர்களோ இதுபற்றி யோசிப்பதே இல்லை. இதனால் உடல் ஊனமுற்றவர்களின் உலகம் வெகுவாகச் சுருங்கிப்போய்விடுகிறது.

உதாரணமாக, ஒருவர் நல்ல வாசகராக இருக்கலாம். ஆனால் ஊரில் உள்ள எல்லாப் புத்தகக் கடைகளின் வாசலிலும் இதுபோல் பெரிய படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தால், அவர் உள்ளே போய்ப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துத் தேர்ந்தெடுத்து வாங்கமுடியுமா?

இதேபோல், பத்து தியேட்டர்கள் உள்ள ஓர் இடத்தில், ஒரே ஒரு தியேட்டரில்மட்டுமே சாய்வுப்பாதை உள்ளது என்றால், அவரைப் பொறுத்தவரை மற்ற ஒன்பது தியேட்டர்களும் இருந்தும் இல்லாதவைதான். இதைதான் ’அவர்களுடைய உலகம் மிகச் சிறியதாகச் சுருங்கிவிடுகிறது’ என்று சொல்கிறார்கள்.

இந்தப் பிரச்னையைச் சரி செய்யும் நோக்கத்துடன் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் லேட்டஸ்ட், ‘ஆக்ஸஸ் மேப்.’

ஆங்கிலத்தில் ‘ஆக்ஸஸ்’ என்றால், அணுகுதல், அதாவது, நடப்பதில் பிரச்னை உள்ள யாரேனும் ஒரு கட்டடத்தை அணுகுவது எந்த அளவுக்கு எளிது என்பதைக் கவனித்து, அதன் அடிப்படையில் கட்டடங்களுக்கு மார்க் போடுகிறார்கள்.

உதாரணமாக, ஒரு கட்டடத்தின் வாசலில் வெறும் படிக்கட்டுகள்தான் என்றால் 1 மார்க், நல்ல சாய்வுப் பாதை உள்ளது என்றால் 2 மார்க், அங்குள்ள லிஃப்டினுள் சக்கர நாற்காலிகள் செல்லும் அளவுக்கு இடம் இருக்கிறது என்றால் இன்னொரு மார்க், கட்டடத்தினுள் நெருக்கடி அதிகம் இல்லாமல், அவர்கள் எளிதில் வளைய வரும்படி விசாலமான வசதிகள் இருந்தால் இன்னொரு மார்க், மாற்றுத் திறனாளிகளுக்காகத் தனி டாய்லெட் வசதி இருந்தால் இன்னொரு மார்க், இப்படி சகல வசதிகளும் சிறப்பாகச் செய்து தரப்பட்டிருந்தால், முழுசாக ஐந்து மார்க்!

இப்படி ஒவ்வொரு கட்டடத்துக்கும் பொதுமக்களை மார்க் போடச் சொல்கிறார்கள். அவற்றை மொத்தமாகக் கூட்டிச் சராசரி கணக்கிட்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு நகரத்திலும் ‘ஆக்ஸஸ்’ எளிதாக உள்ள இடங்களை ஒரு வரைபடமாகக் குறிக்கிறார்கள்.

ஒரு தெருவில் நான்கு உணவகங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒன்றுதான் சாய்வுப்பாதையுடன் உள்ளது என்றால், இந்த ‘ஆக்ஸஸ் மேப்’ அந்த உணவகத்தைமட்டும் விசேஷமாக எடுத்துக் காண்பிக்கும். மற்றவற்றைச் சுற்றிச் சிவப்பு வட்டம் போட்டு எச்சரிக்கும்.

சக்கர நாற்காலியில் இயங்கும் ஒருவர் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே, கம்ப்யூட்டரிலோ, தனது மொபைல் ஃபோனிலோ இந்த மேப்பைப் பார்த்துக்கொள்ளலாம். எந்தெந்த இடங்கள் தான் எளிதில் செல்லும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று தெரிந்துகொண்டு அதற்கு ஏற்பத் திட்டமிடலாம்.

இதன் அடுத்தகட்டமாக, நல்ல சாய்வுப் பாதை, உள்ளே சக்கர நாற்காலிகள் எளிதில் சென்று திரும்பும் வகையில் இட வசதி போன்றவற்றைச் செய்து தருகிற வணிக நிறுவனங்களைப் பாராட்டி ஊக்குவிக்கிறார்கள். இதன்மூலம் படிக்கட்டுகளைக் காண்பித்துப் பயமுறுத்தும் மற்ற கட்டடங்களும் திருந்தும் என்கிற எண்ணம்தான்.

தற்சமயம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மிக வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்த ‘ஆக்ஸஸ் மேப்’, இந்தியாவிலும் உள்ளது. ஆனால் நம் மக்கள் இன்னும் கட்டடங்களைக் கவனித்து மார்க் போடத் தொடங்கவில்லை. அதிகப் பேர் மார்க் போட்டால்தான், நல்ல கட்டடங்களைத் தேர்ந்தெடுக்கவும், கெட்ட கட்டடங்களைச் சுழித்து வட்டம் போடவும் வசதியாக இருக்கும்.

ஆகவே, நீங்கள் சாதாரணமாக நடப்பவரானாலும் சரி, சக்கர நாற்காலியில் இயங்குபவரானாலும் சரி, நீங்கள் செல்லும் ஒவ்வொரு கட்டடத்தையும் இந்தக் கண்ணோட்டத்தில் கவனித்து மார்க் போடுங்கள். அதைக் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் ஃபோன்மூலம் ‘ஆக்ஸஸ் மேப்’ இணைய தளத்தில் (http://www.axsmap.com/) இலவசமாகப் பதிவு செய்யுங்கள். உங்களது நண்பர்களையும் இதையே செய்ய உற்சாகப்படுத்துங்கள்.

நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து தேர் இழுத்தால், அடுத்த சில மாதங்களுக்குள் இந்தியாவுக்கும் அட்டகாசமான ஓர் ஆக்ஸஸ் மேப் தயாராகிவிடும். அதன்பிறகு, நம் ஊர் மாற்றுத் திறனாளிகளின் உலகம் சுருங்கிக் காட்சியளிக்காது.

***

இதனுடன் தொடர்புடைய இன்னொரு கட்டுரை / பேட்டியும் இதே பக்கத்தில் வெளியானது. நண்பர் ஈரோடு நாகராஜ் எழுதிய அந்தக் கட்டுரை இங்கே : http://erodenagaraj.blogspot.in/2012/10/blog-post.html

திருச்சி பயணத்தின்போது புதிதாக அறிமுகமான நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் அவரிடம் ட்விட்டர் பற்றிச் சிலாகித்தேன், ‘எதையும் 140 எழுத்துகளுக்குள் எழுதிப் பழகறது ரொம்ப நல்ல பயிற்சி சார்’ என்றேன். ‘வெறுமனே எண்ணி, அதாவது சிந்திச்சு எழுதினாப் போதாது, எழுத்துகளை 1, 2ன்னு எண்ணி எண்ணி எழுதணும். பிரமாதமான சவால் அது!’

‘உண்மைதான்’ என்றார் அவர். ‘ஆனா இது ஒண்ணும் புது விஷயம் இல்லை. இந்தமாதிரி மேட்டர், சொல்லப்போனா இதைவிட சிக்கலான சவால்கள் தமிழ்ல ஏற்கெனவே இருக்கு.’

‘எதைச் சொல்றீங்க?’

‘நிறைய இருக்கு, உதாரணமா, கட்டளைக் கலித்துறைன்னு ஒரு பா வகை, 4 வரிப் பாட்டுல ஒவ்வொரு வரியையும் எண்ணி 16 அல்லது 17 எழுத்துல முடிக்கணும்.’

‘அதாவது, புள்ளி வெச்ச எழுத்துகளை நீக்கிட்டுச் சரியா 64 அல்லது 68 எழுத்துகள்ல சொல்ல வந்த விஷயத்தைக் கச்சிதமாச் சொல்லி முடிக்கணும், எதுகை, மோனை இருக்கணும், சந்தமும் சரியா வரணும், கவிதைக்குரிய அழகும் குறைபடக்கூடாது.’

‘இப்ப சொல்லுங்க, கட்டளைக் கலித்துறையைவிடவா உங்க ட்விட்டர் சவால் கஷ்டம்?’ என்று முடித்தார் அவர்.

அவர் சொன்னதற்காக, கடந்த 2 நாள்களாகக் கட்டளைக் கலித்துறை ஒன்றை எழுத முயற்சி செய்கிறேன், பெண்டு நிமிர்கிறது. இன்னும் ஒன்றரை வரி கடந்தபாடில்லை. தமிழ்ப் புலவர்களை எண்ணி எண்ணி (pun intended 😉 வியக்கிறேன்.

***

என். சொக்கன் …

01 10 2012

(செப்டம்பர் 2012 ’ஃபெமினா தமிழ்’ மாத இதழில் வெளியான என்னுடைய சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம்)

பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி எடுத்து உதட்டின் மேல்பகுதியில் மீசையைத் தொட்டாற்போல் மெல்லமாகத் தடவி அதன் மணத்தில் ஆழ்ந்தான் சுமன். பற்றவைக்கத் தோன்றவில்லை.

தூரத்தில் புகைபரப்பினபடி போகிற பஸ்ஸையே வெறித்துப் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தான் அவன். எதிர்பாராத ஒரு விநாடியில் அந்த பஸ் எதிர்திசையில் திரும்பிவந்து அவனருகே நின்று அவளை இறக்கிவிடுவதுபோலவும், ‘சிகரெட்டா பிடிக்கிறே படவா?’ என்று அவள் சுமனுடைய மூக்கைப் பிடித்துத் திருகிவிட்டு கோபத்தோடு நடப்பதுபோலவும் கற்பனை தோன்றியது. ஐயோ!

அவளிடம் உண்மையைச் சொல்லியிருக்கலாம். ஆனால் ‘உங்களுக்குச் சிகரெட் பழக்கம் உண்டா?’ என்று கேட்கும்போதே அவள் முகத்தில் படர்ந்த அருவருப்பையும், இவன் ‘உண்டு’ என்று சொல்லிவிடக்கூடாதே என்கிற தவிப்பையும் துடிதுடிப்பையும் பார்த்தபோது அவள் மனவருத்தப்படாத பதிலைதான் சொல்ல முடிந்தது. ‘சேச்சே!’

‘தேங்க் காட்’ என்று அழகாக நெஞ்சைத் தொட்டுக்கொண்டு புன்னகை செய்தாள் அவள். ‘எனக்குச் சிகரெட் பிடிக்கிறவங்க-ன்னாலே அலர்ஜி, அவங்க பக்கத்திலகூட நிக்கமுடியாது, அந்தப் புகையில மூச்சுத்திணறி மயக்கம் போட்ருவேனோ-ன்னு தோணும்’ என்றாள் தொடர்ந்து, ‘நம்ம கல்யாணம் நிச்சயமானதும் என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் ஒரே கிண்டல், உன்னோட அவருக்குச் சிகரெட் பழக்கம் இருந்தா என்னடி பண்ணுவே-ன்னு துளைச்சு எடுத்துட்டாங்க, நல்லவேளை, கடவுள் என்னை ஏமாத்திடலை!’

ஒரே ஒரு சிறிய பொய்யினால் சுற்றி நடப்பது எதுவும் தன் கட்டுப்பாட்டில் இல்லாதபடி நழுவிக்கொண்டிருப்பதை திகைப்போடு பார்த்தபடி மௌனித்திருந்தான் அவன். அவளோ நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள், ‘நீங்க பொண்ணு பார்க்க வந்தப்பவே விசாரிக்கணும்ன்னு நினைச்சேன், ஆனா நீங்கதான் தனியா பேசறதுக்கே கேட்கலை.’

அன்றைக்கே தனியாகப் பேசியிருந்தால் இந்த பொய்யைச் சொல்லியிருக்கமாட்டோமோ என்று வேதனையுடன் நினைத்தான் சுமன். இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, ஒரே ஒரு லோக்கல் ஃபோன், ‘எனக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லை-ன்னு உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன், மன்னிச்சிடுங்க.’

மன்னிப்புக் கேட்கவேண்டியதுகூட அவ்வளவாக அவசியமில்லை. உண்மையைச் சொல்லிவிட்டாலே போதும். ‘காலேஜ் நாள்ல பழகினதுங்க, விடமுடியலை, ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட்டாவது புகையாக் கரையுது, அது இல்லாட்டி கடிகாரமே ஓடாதமாதிரி, திருவிளையாடல் சினிமாவில எல்லாம் ஸ்டாண்ட்-ஸ்டில்லா நிக்கறாப்பல என் உலகமே இயக்கமில்லாம உறைஞ்சுபோயிட்டமாதிரி ஆயிடும்!’

அவன் நினைப்பதுபோல் அவள் இந்த விஷயத்தை அத்தனை தீவீரமாக எடுத்துக்கொள்ளாதவளாக இருக்கலாம். செய்த தவறை மறைக்காமல் ஒப்புக்கொள்ளும் அவனது நேர்மை அவளுக்குள் ஈரமாக இறங்கி நெகிழச்செய்யலாம். ‘அவ்வளவுதானே? இதுக்குப்போய் ஏன் பொய் சொன்னீங்க?’ என்று அவனைச் செல்லமாகக் கோபித்துக்கொண்டு ‘இருங்க, கல்யாணத்துக்கப்புறம் எல்லாத்தையும் மாத்திடறேன்’ என்று சிணுங்கலாகச் சிரிக்கலாம். அல்லது, ‘எனக்காக இதை விட்டுட ட்ரை பண்ணுங்களேன், ப்ளீஸ்’ என்று கெஞ்சலாம். ‘டெய்லி ரெண்டு பாக்கெட்-ன்னா எத்தனை செலவாகும், யோசிச்சுப்பாருங்க, அப்படியாவது காசுகொடுத்து கேன்ஸரை வரவழைச்சுக்கணுமா?’ என்று அறிவுரை சொல்லலாம், இப்படி இன்னும் எத்தனையோ சுப-சாத்தியங்கள் கண்முன்னே நிழலாடி ஆசைகாட்டின.

ஆனால் இதற்கு நேரெதிரான சம்பவங்களும் நிகழச் சாத்தியமுண்டு என்பதுதான் சுமனைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தது. ‘முதல்முதலாச் சந்திக்கும்போதே இப்படி ஒரு பெரிய பொய்யைச் சொன்ன மனுஷன், நாளைக்கு இன்னும் என்னவெல்லாம் செய்யமாட்டார்?’ என்று அலறி அவள் கல்யாணத்தையே நிறுத்தலாம். ‘உங்க மகனுக்குச் சிகரெட் பழக்கம் உண்டு-ன்னு ஏன் எங்ககிட்ட முன்னாடியே சொல்லலை?’ என்று அவளது அப்பாவோ உறவினர்களோ வீட்டு வாசலில் கலாட்டா செய்து நாலுபேர் பார்க்கும்படி கேவலப்படுத்திவிட்டுச் செல்லலாம். கடந்த ஒரு வாரமாக உள்ளுக்குள் தீபோல் பரவியிருக்கிற இனம்பிரிக்கமாட்டாத சந்தோஷப் பரவசத்தின் சுவடு கொஞ்சமும் மீதமில்லாமல் இந்தச் சிறிய பொய் எல்லாவற்றையும் துடைத்துக்கொண்டு போய்விடலாம்.

அவன் தன் கையிலிருந்த சிகரெட்டை வெறுப்போடு பார்த்தான். சனியனே, உன்னால்தானே எல்லா அவஸ்தையும்?

ஆனால் சில விநாடிகளுக்குமேல் அவனால் தன் கோபத்தைத் தொடரமுடியவில்லை. பதற்றத்தில் நடுங்கும் விரல்களால் அவசரமாக அந்தச் சிகரெட்டை உதடுகளில் பொருத்திப் பற்றவைத்து நுரையீரல்களில் வெதுவெதுப்பாகப் பாய்கிற புகையை ஆழ்ந்து அனுபவித்தபிறகுதான் மீண்டும் உயிர்த்தெழுந்ததுபோல் இருந்தது. வாயிலும் மூக்கிலும் மெதுஇயக்கமாகப் புகை வடிய அவன் யோசனையோடு நின்றிருந்தான். அரை மணிநேரம்கூட சிகரெட் இல்லாமல் இருக்கமுடியவில்லை. இந்த லட்சணத்தில் அந்தப் பழக்கமே கிடையாது என்று அவள் தலையிலடிக்காத குறையாகச் சத்தியம் செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்ததோ என்று எரிச்சலாயிருந்தது.

எல்லா ஆண்களையும்போலத் தானும் அழகான பெண்களிடம் பழகும் விஷயத்தில் பலவீனன்தான் என்று நினைத்தபோது, அவனுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. கட்டிக்கொள்ளப்போகிற பெண்ணிடம் வழிவது தப்பில்லை, ஆனால் அதற்காக இப்படியொரு பொய்யையா சொல்லித்தொலைப்பது? மறைக்கக்கூடிய விஷயமா இது? திருமணத்துக்குப் பின்போ அல்லது அதற்கு முன்னாலேயோ அவளுக்கு விஷயம் தெரிந்துவிட்டால் எத்தனை அவமானம்! கடவுளே, இப்போது என்ன செய்வேன்?

*******

‘இது சிம்பிள் மேட்டர் மாமு’ தக்காளி ஆம்லெட்டை முள்கரண்டியால் குத்திக் கிழித்தபடி சொன்னான் மோகன். ‘நேரா அவளுக்கு ஃபோன் பண்ணிக் கொஞ்சநேரம் கடலை போடு, ரொமான்டிக்கா சில டயலாக்ஸ் விடு, அப்புறம் நைஸா, பழத்தில ஊசி ஏத்தறமாதிரி மேட்டரை உடைச்சுடு, எப்பவாவது ஃப்ரெண்ட்ஸோட சிகரெட் பிடிக்கிறதுண்டு, மத்தபடி நான் உத்தமன்தான்-ன்னு சொல்லிடு, நீ பொய் சொல்லிட்டமாதிரியோ தப்புப் பண்ணிட்டதுபோலவோ காட்டிக்கவே கூடாது, கேஷுவலா பேசணும், அது முக்கியம்.’

வெந்நீர் வைப்பதற்கான சமையல் குறிப்புபோல் அவன் சர்வ அலட்சியமாகச் சொல்லிக்கொண்டுபோவதை எந்த அளவு நம்புவது என்று சுமனுக்குத் தெரியவில்லை, ‘அவ ஒத்துப்பாளாடா?’ என்றான் பரிதாபமான குரலில்.

‘யாருக்குத் தெரியும்?’ என்று கேட்டுவிட்டுக் கலகலவென்று சிரித்தான் மோகன். ‘நீ ஒண்ணும் கவலைப்படாதேடா சுமன், உண்மையிலேயே அந்தப் பொண்ணுக்கு உன்னைப் பிடிச்சிருந்தா இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமா நினைக்கவேமாட்டா’ என்றான்.

சுமன் மௌனமாகத் தலைகுனிந்துகொண்டான், இன்று மாலை சந்திப்புக்கு முன்வரையில் அவளுக்கு அவனைப் பிடித்துதான் இருந்தது, இப்போதும் பிடித்திருக்கும்தான், ஆனால் ஃபோன் செய்து இந்த உண்மையைச் சொன்னபிறகும் பிடிக்குமா என்று யாரால் சொல்லமுடியும்? கடந்த சில நாள்களாக அவன்மேல் உண்டாகியிருக்கிற பிரியத்தைக்காட்டிலும், சிகரெட் பிடிக்கிறவர்களின்மேல் ரொம்ப வருஷமாக ஏற்பட்டிருக்கிற வெறுப்பு பெரிதாக இருந்துவிட்டால் என்செய்வது?

‘அப்ப சிகரெட்டை விட்டுடு’ அலட்டிக்கொள்ளாமல் சொன்னான் மோகன்.

‘டேய்’ பதறிப்போய் அவனை இடைமறித்தான் சுமன் ‘அது கஷ்டம்டா மாமு, உனக்குத் தெரியாதா?’

‘தெரியும்டா, உன்னால சிகரெட்டை விடமுடியாது, அதனாலதான் சொல்றேன், வேற யாராச்சும் இந்த விஷயத்தை அவகிட்ட போட்டுக்கொடுக்கறதுக்குமுன்னாடி நீயே பேசிடறது பெட்டர்’ சுமனின் தோளில் தட்டி, ‘கவலைப்படாதேடா, இது ஸிம்பிள் மேட்டர்’ என்றான் மீண்டும்.

*******

அன்றிரவு அவர்கள் ஒன்றரை மணிநேரம் தொலைபேசினார்கள். மொட்டை மாடியின் குளிர்பரப்பில் சட்டையில்லாத வெற்று மார்புடன் நடந்துகொண்டு இறந்த, நிகழ், எதிர்காலங்கள்பற்றி அவளோடு ஆத்மார்த்தமாக உரையாடுவது அவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. முழுச் சொந்தமாகவும் நெருங்காமல், யாரோ என்றும் விலகாமல், தொட்டும் தொடாமலும் உறவாடுகிற கவர்ச்சி, ஒருபக்கம் தயக்கமும் மறுபக்கம் தைரியமுமாகச் சின்னச் சின்னச் சீண்டல்கள், கேலி, கிண்டல், ஒருவரையொருவர் முழுக்க அறிந்துகொள்வதற்கான முன்முயற்சிகள், தானாக உரிமையெடுத்துக்கொள்வதில் உண்டாகிற பேரின்பம்,… ஆனந்தப் பரவசத்தில் மூழ்கி நீராடின மணித்துளிகள் அவை!

அந்த மயக்கத்தினூடேயும் மூன்றுமுறை அவளிடம் தன் புகைப் பழக்கத்தைப்பற்றிப் பேசமுயன்றான் அவன். ஆனால் ஒவ்வொருமுறையும் வேறொரு அன்பான வார்த்தையிலோ கோரிக்கையிலோ கொஞ்சலிலோ அவனை ஊமையடித்துக்கொண்டிருந்தாள் அவள், கடைசியாக அவன் தொலைஇணைப்பைத் துண்டித்துத் தன் தோல்வியை ஒப்புக்கொண்டபோது மணி பதினொன்றரை!

வானத்தில் மெல்லமாக ஊர்வலம் போய்க்கொண்டிருந்த அரை நிலவை இயலாமையோடு பார்த்தபடி நெடுநேரம் மொட்டை மாடியிலேயே நின்றிருந்தான் சுமன். தன்மேல் இத்தனை பிரியத்தோடும் பாசத்தோடும் நம்பிக்கையோடும் பழகுகிற அவளிடம் தன்னால் இந்த உண்மையைச் சொல்லவேமுடியாது என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது.

இனி மீதமிருப்பது ஒரே ஒரு வழிதான் – அவளிடம் சொன்னதுதான் உண்மை எனும்படி இந்தச் சிகரெட் பழக்கத்தை மொத்தமாகத் தொலைத்துத் தலைமுழுகுவது!

இந்த எண்ணம் தோன்றியதுமே அவனுடைய மனம் திடுக்கிட்டு எழுந்தது. கைப்பிடிச் சுவரின்மேலிருந்த சிகரெட் பெட்டியையும் லைட்டரையும் திகிலோடு பார்த்தான் சுமன். ‘என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா?’ என்று பழைய மெட்டில் பாடினபடி அவை இரண்டும் எழுந்து நடனமாடுவதுபோலொரு பிம்பம் உள்ளே தோன்றியது. ‘முடியாது, முடியவே முடியாது’ என்று அலறியபடி கருங்காலி மனம் அவற்றோடு இணைந்து ஆடப்போனது.

*******

‘இத்தனை வருஷப் பழக்கத்தை நான் ஏண்டா அவளுக்காக மாத்திக்கணும்?’ ஆத்திரத்தோடு கேட்டான் சுமன். ‘நான் ஒண்ணும் முட்டாள் இல்லை, இதுல இருக்கிற ரிஸ்கெல்லாம் தெரிஞ்சுதான் சிகரெட்டைத் தொடர்ந்துகிட்டிருக்கேன், இல்லையா?’

’ஏண்டா படுத்தறே? இப்ப உனக்கு என்னதான் பிரச்னை?’ மோகனுக்கும் எரிச்சல் பொங்கிவந்தது.

‘நல்லதோ, கெட்டதோ, இப்ப அவளுக்கு ஒரு பழக்கம் இருக்கு-ன்னா அதை எனக்காக விட்டுடணும்-ன்னு நான் கட்டாயப்படுத்தவே மாட்டேன்’ என்றான் சுமன். ‘ஒருத்தரோட ப்ளஸ், மைனஸ் ரெண்டையும் தெரிஞ்சுகிட்டு அவங்களை அப்படியே ஏத்துக்கறதுதானே உண்மையான அன்பு?’ ஆவேசமாகக் கேட்டுவிட்டுத் தன் கருத்துக்குத் துணைதேடுவதுபோல் கையிலிருந்த சிகரெட்டை ஒருமுறை உறிஞ்சிக்கொண்டான்.

‘டேய் மச்சான், நீ சொல்றதெல்லாம் நியாயம்தாண்டா’, மோகன் ஆதரவாக அவனுடைய தோளில் தட்டினான், ‘ஆனா இதையெல்லாம் நீ அவகிட்ட பொய் சொல்றதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும்.’

சுமன் ஏதும் பேசத் தோன்றாமல் அமர்ந்திருக்க, மோகன் தொடர்ந்து சொன்னான், ‘நான்தான் அப்பவே சொன்னேனே, ஒண்ணு அவகிட்ட உண்மையைச் சொல்லிடு, இல்லை அவகிட்ட முன்னாடியே சொன்னபடி சிகரெட்டை மறந்துடு, இது ரெண்டில எது உனக்குச் சுலபம்-ன்னு நீயே யோசிச்சுக்கோ.’

கூட்டத்தில் தொலைந்துபோன சின்னப் பிள்ளையின் முகபாவத்தோடு சுமன் நிமிர்ந்துபார்த்தபோது மோகனுக்கே பரிதாபமாயிருந்தது, அவனுடைய கண்களின் ஓரத்தில் துளிர்க்கப்பார்த்த நீர்த்துளியை அவசரமாகத் துடைத்துவிட்டான், ‘அசடு, இதுக்குப்போய் யாராச்சும் அழுவாங்களா?’ என்றான். ‘அந்தப் பொண்ணுகிட்ட உன்னால பேசமுடியாது-ன்னு இப்ப தெளிவாத் தெரியுது, ஸோ, நீ சிகரெட்டை விட்டுதான் ஆகணும்.’

‘எப்படிடா?’ கதறாத குறையாகக் கேட்டான் சுமன், ‘அரை ஹவருக்கு ஒரு தம் ஊதலைன்னா எனக்கு ஆஃபீஸ்ல வேலையே ஓடாதே, நடக்கக்கூட முடியாம மயக்கம்போட்டு விழுந்துடுவேன்டா.’

‘அதெல்லாம் முடியும்டா மச்சான்’ சுமன் கையிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கி ஆஷ்ட்ரேயில் தீய்த்தான் மோகன். ‘இதுதான் உன்னோட கடைசி சிகரெட்.’

சுமன் திகைப்போடு நிமிர்ந்துபார்க்க, அவனுடைய அதிர்ச்சியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தான் மோகன். ‘இந்த விஷயத்திலமட்டும் பாதி குறைக்கிறது, கால்வாசி குறைக்கிறதெல்லாம் வேலைக்கே ஆகாது. உண்டு – இல்லை-ன்னு ரெண்டே ரெண்டு பைனரி ஸ்டேஜ்தான். போன நிமிஷம்வரைக்கும் அது உனக்கு உண்டு, இப்போ இல்லை, அவ்ளோதான்!’ சுமனின் சட்டைப்பையிலிருந்த சிகரெட் பாக்கெட்டையும் வலுக்கட்டாயமாகப் பறித்தபடி, ‘உனக்குச் சிகரெட் பிடிக்கணும்ன்னு தோணும்போதெல்லாம் உன் வருங்கால மனைவியை நினைச்சுக்கோ, அது போதும்’ என்று சிரித்தான் மோகன்.

*******

இப்படியாக, நோய் கண்டவனின் பத்தியம்போல் சிகரெட் இல்லாத உலகத்தினுள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டான் சுமன். ‘முதல் ரெண்டு நாளைக்குதான்டா கஷ்டமா இருக்கும். அதுக்கப்புறம் தானாப் பழகிடும்’, மோகனின் தெம்பு வார்த்தைகள் எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை.

மோகனிடம் பேசிவிட்டுவந்த அன்றைய தினமே நெருப்பின்மேல் நிற்பதுபோல்தான் கழிந்தது. கை கால்களெல்லாம் வெடவெடவென்று உதறுவதுபோல் படுத்தினாலும் இரவுச் சாப்பாடுவரை ஒருமாதிரியாகச் சமாளித்துவிட்டான். ஆனால் தூக்கம் வரவில்லை. நள்ளிரவுக்குமேல் பிசாசுபோல் மொட்டைமாடிக்கு ஓடவேண்டியிருந்தது, பழக்கமான சிகரெட்டின் வாசத்தைப் பெருமூச்சோடு நுகர்ந்து தீப்புகையை உள்ளிழுத்தபிறகுதான் சுவாசமே சீரானதுபோல் ஒரு பிரமை.

ஆயாசத்தோடு அவன் நிமிர்ந்துபார்த்தபோது மேலேயிருந்த நிலவு செல்லமாகக் கண்ணடித்து ‘அவகிட்டே சொல்லிடுவேன்’ என்று சிரித்தது. கையிலிருந்த சிகரெட்டை அவசரமாகத் தரையில் தேய்த்து அணைத்தான் அவன்.

*******

மறுநாள் இன்னும் சிரமப்படுத்தியது. போதாக்குறைக்கு, அவனுடைய சுயகட்டுப்பாட்டைச் சோதிப்பதுபோல் அன்றைக்கு நிறைய வேலைகள் குவிந்திருந்தன. அவன் எதிலும் கவனமில்லாமல் தப்பும் தவறுமாகச் சொதப்பிக்கொண்டிருப்பதைப்பார்த்து உதவி மேலாளர் அக்கறையோடு விசாரித்தார். ‘என்ன சுமன், உடம்பு சரியில்லையா?’

‘அ – அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்’ சட்டென்று தலையைக் குனிந்து உதட்டைக் கடித்துக்கொண்டான் அவன். இதற்குமேல் ஏதாவது பேசினால் அழுகை வந்துவிடும்போல் ஓர் உணர்ச்சி, விறுவிறுவென்று ஆண்கள் ஓய்வறைக்குச் சென்று ஒரு ரவுண்ட் இழுத்துவிட்டு வந்தால் என்ன என்று ஒரு மனமும், ‘ச்சீ, நீ இத்தனை பலமற்றவனா?’ என்று இன்னொரு மனமும் கபடியாட்டம் ஆடிக்கொண்டிருந்தது.

உணவு இடைவேளையின்போதுகூட ஏதும் சாப்பிடத் தோன்றவில்லை. நண்பர்கள் வழக்கமான பீடாக்கடை ஜமாவுக்கு அழைத்தபோதும் பிடிவாதமாக மறுத்துவிட்டான். அவர்களிடம் ஆதியில் ஆரம்பித்து ராமாயணம் சொல்லப் பொறுமையில்லை என்பது ஒரு காரணம், அவர்கள் புகைப்பதைப் பார்த்தால் எல்லாவற்றையும் மறந்து தானும் அவர்களோடு ஐக்கியமாகிவிடுவோமோ என்கிற பயம் இன்னொரு (முக்கியமான) காரணம்!

மதியமும் அவனால் வேலையில் ஒன்றமுடியவில்லை. தலை நன்கு கனத்துப் பாரமாகி அவனைத் தரைக்குள் அமிழ்த்திவிடப்பார்ப்பதுபோல் வலித்தது, மேனேஜரிடம் சொல்லிக்கொண்டு சீக்கிரமே கிளம்பிவிட்டான், தெருமுனை பெட்டிக்கடையில் நின்று விகடனும் கல்கியும் வாங்கினான். அங்கு ஓரமாகத் தொங்கிக்கொண்டிருந்த கயிறு முனை நெருப்பில் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டுதான் வழக்கமான பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றான் அவன்.

கூட்டமில்லாத பஸ்ஸில் வீட்டுக்கு வருவதற்குள் தலையில் பாரம் குறைந்து அத்தனையும் நெஞ்சில் ஏறியிருந்தது.

*******

மெல்லமாக ஊரடங்கிக்கொண்டிருந்த இரவு. அவளுக்குத் தொலைபேச நினைத்தான் சுமன். ஆனால் அவளோடு இயல்பாகப் பேசமுடியும் என்று தோன்றவில்லை. மதியம் ஊதித் தள்ளிய ஒற்றை சிகரெட் மிகப் பெரிய உறுத்தலாக உள்ளுக்குள் நின்று வதைத்துக்கொண்டிருந்தது. ‘ஒரு நாள், ஒரே ஒரு நாள் இந்தச் சனியனைத் தவிர்த்து இருக்கமுடியவில்லை என்றால் என்ன மனிதன் நான்?’ என்று தன்னிரக்கத்தோடு நினைத்தான் அவன். நாலு விரற்கடைகூட நீளமில்லாத இந்த ராட்சஸனால் இப்படி ஆட்டுவிக்கப்படுகிறோமே என்றெண்ணியபோது மிகவும் வேதனையாக இருந்தது.

லேசான குளிர்காற்று தாலாட்ட சுமன் மெல்லமாக ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றபோது பக்கத்தில் எங்கிருந்தோ எச்சரிக்கை மணி ஒலிப்பதுபோல் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து அருகிலிருந்த செல்ஃபோனைப் பதற்றத்தோடு அள்ளியெடுக்க, அவள்தான்.

‘எப்படி இருக்கீங்க?’ அந்த இரண்டு வார்த்தைகளுக்குள் உலகத்தின் நேசம் அனைத்தையும் அள்ளியெடுத்துத் திணித்ததுபோல் கேட்டாள் அவள். அவனால் சட்டென்று பதில் பேசக்கூட முடியவில்லை. குற்றமுள்ள நெஞ்சு!

அவள் இரண்டுமுறை ‘ஹலோ, ஹலோ’ என்று சோதித்துவிட்டு ‘கட் ஆயிடுச்சுபோல’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டதை அவன் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தான். இதமான காற்று வீசிக்கொண்டிருந்தபோதும் உடம்பெல்லாம் ஏனோ வியர்த்திருந்தது, இதயம் நகர்ந்து நகர்ந்து காதுகளுக்கு அருகிலேயே வந்துவிட்டதுபோல் திடும்திடுமென்று அதன் துடிப்பு பெரிதாகக் கேட்டது.

அவன் மொட்டைமாடியின் ஓரத்துக்கு நடந்து இன்னொரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு சாலையை மௌனமாக வேடிக்கை பார்க்கலானான். ‘எப்படி இருக்கீங்க?’ அவளுடைய ஆதரவான குரல் இன்னும் உள்ளே கேட்டுக்கொண்டிருந்தது, இனி வாழ்நாள்முழுக்க என்னோடு, எனக்காக இருக்கப்போகிறவளுக்காக இதைக்கூட செய்யமுடியாதா? – இந்த உணர்ச்சிப்பூர்வமான கேள்வியை அவன் புத்தி நிதானமாக அணுகி ஒருமுறை தாடையைச் சொறிந்துவிட்டு ‘முடியாது போலிருக்கே’ என்று கேலியாகச் சொல்லி அவன் கன்னத்தில் அறைந்தது.

அந்த சிகரெட் முழுசாகத் தீரும்வரை நிதானமாகப் புகைத்தான் அவன். மீண்டும் கயிற்றுக் கட்டிலுக்கு வந்து செல்பேசியை எடுத்து அவளது எண்ணை ஒற்றினான். ‘ஹலோ, நான்தான் சுமன் பேசறேன், ஹவ் ஆர் யூ?’

‘ஹல்லோ, இப்பதான் உங்களுக்கு கால் பண்ணினேன்’ என்று அவள் உற்சாகத்தோடு பேசத் துவங்கினதை இடைமறித்து ‘உங்ககிட்ட ஒரு உண்மையைச் சொல்லணும்ங்க’ என்றான் சுமன். ‘கடந்த ஏழெட்டு வருஷமாவே எனக்குச் சிகரெட் பழக்கம் உண்டு, அன்னிக்கு உங்ககிட்ட பேசும்போது இதை மறைச்சுட்டேன், ஸாரி.’

எதிர்முனை திகைப்போடு மௌனிக்க, அவன் தொடர்ந்து சொன்னான். ‘ஆனா அது உங்களுக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சப்புறம் விட்டுட ட்ரை பண்றேங்க, ஸின்ஸியரா முயற்சி பண்றேன், என்னால முடியுமான்னு தெரியலை, ஆனா முடியணும், இந்த ரெண்டு, மூணு நாள் அனுபவத்தை வெச்சு எதுவும் நிச்சயமா சொல்லமுடியலை.’

அவள் இன்னும் பேசாதிருக்க ‘நாளைக்கோ, அடுத்த வாரமோ, அடுத்த மாசமோ நான் இந்தப் பழக்கத்தை விட்டுடலாம், ஆனா இதையும் உங்ககிட்ட மறைக்கிறது தப்பு-ன்னு தோணிச்சு, அதான் ஃபோன் பண்ணினேன்’ என்றான். ‘நான் உங்ககிட்ட பொய் சொன்னது தப்புதான். அதுக்கு மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்கறேன். இனி என்னை மன்னிக்கிறதும் கோவிச்சுக்கறதும் உங்க இஷ்டம்’ என்று ஃபோனை வைத்துவிட்டான்.

மீண்டும் மொட்டைமாடியின் ஓரத்துக்குச் சென்றபோது உள்ளே இனம்புரியாத நிம்மதியுணர்வு நிரம்பியிருந்தது. இனிமேல் சிகரெட் இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம் என்று நிச்சயமாகத் தோன்றியது. ஆனால் அவள்?

சில நிமிடங்களுக்குள் மீண்டும் தொலைபேசி மணி ஒலித்தது.

***

என். சொக்கன் …


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,745 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

October 2012
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031