Archive for December 2012
ஒசந்த முல்லை
Posted December 27, 2012
on:- In: மருதகாசி | Download | eBook | Poetry
- 8 Comments
சில வருடங்கள் முன்னால் ’வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா’ என்று ஒரு ரீமிக்ஸ் பாட்டு வந்தது.
வழக்கம்போல் எனக்குப் பிடிக்கவில்லை, ‘கண்ணதாசன் வரிகள் இந்தக் காலத்துக்கும் பொருத்தமா அமைஞ்சதுதான் ஒரே சந்தோஷம்’ என்றேன்.
பழைய பாடல் பிரியராகிய நண்பர் ஒருவர், ‘அந்தப் பாட்டு கண்ணதாசன் இல்லையே’ என்றார்.
பல்ப் வாங்கிய கூச்சத்துடன், ‘அடடே, வாலியா?’ என்றேன்.
‘ஏன்ய்யா, பழைய பாட்டுல நல்ல பாட்டுன்னாலே கண்ணதாசன், வாலிதானா?’ என்று கோபித்தார் அவர். ‘இந்தப் பாட்டு எழுதினது மருதகாசி.’
நான் ஏற்கெனவே மருதகாசிபற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டதுண்டு. குறிப்பாக கலைவாணர் என் எஸ் கேவுக்கு அவர் எழுதிய ‘சிரிப்பு’ பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
மற்றபடி மருதகாசி எழுதியவை என்று குறிப்பாகக் கேட்டதில்லை. இந்த உரையாடலுக்குப்பிறகுதான் தேடிக் கேட்க / வாசிக்க ஆரம்பித்தேன்.
முதலில், நான் இதுவரை கண்ணதாசன் (அ) வாலி எழுதியது என்று நினைத்துக்கொண்டிருந்த பல சூப்பர் ஹிட் பாடல்கள் மருதகாசி எழுதியவை என்று புரிந்தது. உதாரணமாக, அவர் எழுதியவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்களை லிஸ்ட் போடுகிறேன்
1. வசந்த முல்லை போலே வந்து
2. மாசிலா உண்மைக் காதலே
3. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி
4. என்னை விட்டு ஓடிப் போக முடியுமா
5. மணப்பாறை மாடு கட்டி
6. தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம் (இந்தப் பாடலை எழுதியது ‘சுரதா’ என்று நண்பர் அபுல் கலாம் ஆசாத் தெரிவித்துள்ளார். இதை எப்படி உறுதி செய்வது என்று தெரியவில்லை)
7. சித்தாடை கட்டிகிட்டு
8. அழகான பொண்ணு நான், அதுக்கேத்த கண்ணுதான்
9. மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா
10. முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
11. கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
12. சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
இது ஒரு சின்ன சாம்பிள்தான். மருதகாசிக்கென்று ஒரு தனித்துவமான பாணி இருந்திருக்கிறது, என்னுடைய வாசிப்பில் எனக்குப் புரிந்தது: எளிய வார்த்தைகள், கிராமத்து மனம், அதில் பட்டணத்துக் கிண்டல்.
இவர் கண்ணதாசனுக்கு சீனியரா என்று தெரியவில்லை, ஆனால் அவரைப்போலவே இவரும் ஒரு வட்டத்துக்குள் சிக்கவில்லை, எல்லாவிதமாகவும் எழுதியுள்ளார், ஆங்காங்கே பட்டுக்கோட்டையார் சாயல். காதல் பாட்டு என்றால் நெகிழ்வும் உருக்கமும், அதே தத்துவப் பாட்டு என்றால் ஆழமான சிந்தனைகள், கிராமத்துப் பாட்டில் பாமர உதாரணங்கள் என்று seamless shift, எல்லா வகையிலும் கொடி கட்டிப் பறந்துள்ளார்.
எனக்குப் பிடித்த சில உதாரணங்கள்:
1
தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு, தன்
குறையை மறந்து மேலே பார்க்குது பதரு, அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே, எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது நாட்டிலே
2
மழையைப் பாடும் ஒரு பாட்டின் நடுவே,
‘கஷ்டப்பட்டு ஏழை சிந்தும் நெத்தி வேர்வைபோலே, அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப்போலே,
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தைபோலே’
என்று மழைத்துளிக்கு உவமைகளை அடுக்குகிறார்
3
தென்றல் உறங்கியபோதும்,
திங்கள் உறங்கியபோதும், காதல்
கண்கள் உறங்கிடுமா?
4
’மண்ணில் வந்த நிலவே, என் மடியில் பூத்த மலரே’ என்று ஒரு பாட்டு (யார் எழுதியது?) கேட்டிருப்பீர்கள், கிட்டத்தட்ட மருதகாசியின் பல்லவிதான் அது ‘மண்ணில் உலவும் நிலவே, என் வயிற்றில் உதித்த கனியே’ என்று ஒரு தாலாட்டுப் பாட்டில் எழுதினார் அவர்
5
வண்ண மலர் என்றும் வண்டுக்குத்தான் சொந்தம்,
வழங்கிடும் மதுவாலே இரண்டுக்கும் ஆனந்தம்
6
காவிரியை முப்பெரும் தேவியருக்கு ஒப்பிடும் வரிகள்:
‘மலைமுடியில் பிறந்ததனால் மலைமகளும் நீயே!
அலைகடலில் கலந்ததனால் அலைமகளும் நீயே!
சலசலக்கும் ஓசையிலே தமிழ் முழக்கம் செய்வதனால் கலைமகளும் நீயே!’
இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். மருதகாசியின் பாடல்களை (பெருமளவு) படித்தபிறகு, இவரது பாணி இன்றைய பிரபல கவிஞர்கள் பலருக்கு முன்னோடியாக இருந்திருப்பது புரிகிறது. பல 80களின் பாடல்கள் மருதகாசியின் வரிகளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருப்பதும் உண்டு. உதாரணம் சொல்ல விரும்பவில்லை 🙂
மருதகாசியின் பாடல் வரிகள் முழுவதும்(?) இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை டவுன்லோட் செய்துகொள்ள இங்கே செல்லவும்: http://www.thamizhagam.net/nationalized%20books/A.Marudhakasi/TIRIISAIPADALGAL.pdf
***
என். சொக்கன் …
27 12 2012
அர்த்தம் சேர்த்தல்
Posted December 9, 2012
on:- In: ஓசிப் பதிவு | கம்ப ராமாயணம் | கம்பர் | Blogs | Ilayaraja | Literature | Media | Music | Poetry | Reading
- 7 Comments
முதலில், ஒரு சிபாரிசு.
நண்பர் ’ரசனைக்காரன்’ (ட்விட்டரில் @nattanu) எழுதியிருக்கும் பதிவு ஒன்று, இளையராஜாவின் ஒரே ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அதனை மிக விரிவாகப் பேசுகிறது. வரிக்கு வரி வெறித்தனமான ரசனை, கூடவே, பாடலின் தன்மைக்கு ஏற்ற அட்டகாசமான குறும்பு நடை. வாசிக்கத் தவறாதீர்கள்: http://kushionline.blogspot.in/2012/12/blog-post.html
அடுத்து, இந்தப் பதிவை முன்வைத்து நடந்த ஒரு விவாதம்.
இளையராஜா பாடல் வரிகளுக்கு ஏற்ற இசைக்கருவிகளைத் தேர்வு செய்கிறார் என்று குறிப்பிடவந்தார் நண்பர் @kryes. அதற்கு அவர் தந்த ஓர் உதாரணம் (Slightly Edited):
பனி விழும் மலர்வனம் பாட்டுல
- “காமன் கோயில் சிறைவாசம்”ன்னு வரும்போது, வீணைமட்டும் 3 விநாடிகள்; அவளை அவன் மீட்டுவதுபோல்…
- “காலை எழுந்தால் பரிகாசம்” ன்னு வரும் போது, புல்லாங்குழல்மட்டும் 3 விநாடிகள்; சிரித்தால் வாயில் வரும் காற்றுபோல்…
- “கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்”… மெல்லிய தபேலா அடிச்சி அடிச்சி, நமுட்டுச் சிரிப்பா/ நமுட்டு இசையா முடிச்சிருவாரு 🙂
இப்படி, வரியில் உள்ள உணர்ச்சிகளுக்கெல்லாம் பொருத்தமான வாத்தியங்களை ஒலிக்க வச்சி அழகு பார்க்க ராஜாவால் மட்டுமே முடியும்!
Raja’s microscopic strength is, his “Choice of Instruments”
இந்தப் பகுதியை ஜாலியாக கேலி செய்து நண்பர் @iamkarki இப்படிப் பதில் எழுதினார் (Slightly Edited):
இது ஓக்கே.. ஆனா, இதே மெட்டுக்கு ”சேலை மூடும் இளஞ்சோலை” வரும்போதும் அதே வீணைதான்.. அதே குழல்தான். ஆனா அந்த வரிக்கு இந்த இசைக்கருவிகள் பொருத்தமாக இல்லை.. ஏன்?
ராஜா ஏதோ போட்டுவச்சாரு. நீங்களா அதுக்கு ஒரு அர்த்தம் சொல்லிக்கிறீங்கன்னு கத்தறான் எனக்குள்ள இருக்கிற ஆரீசு செயராசின் ரசிகன் :))
இதுகுறித்த என்னுடைய கருத்துகளை அங்கே எழுதினேன். சிறிய மாற்றங்களுடன் இங்கேயும் அதைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது.
முதலில், இளையராஜா ஏதோ யோசித்து இசையமைத்துவிட்டார், நாம் இப்போது அதற்கு விளக்கங்கள் சேர்த்துக்கொள்கிறோம் என்பது உண்மைதான். அவர் இசையமைத்தபோது என்ன நினைத்தாரோ அதை அப்படியே நாமும் நினைத்துவிட்டால் அப்புறம் அவர்மட்டும் எப்படி இசைஞானியாக இருக்கமுடியும்? 🙂
ஆக, இளையராஜா இந்தக் காரணத்துக்காகதான் அங்கே வீணை மற்றும் புல்லாங்குழலைச் சேர்த்தாரா என்பது நமக்குத் தெரியாது. பாடல் வரிகள், காட்சி அமைப்பு, படத்தின் கதை என்று பலவற்றைச் சேர்த்துக் கேட்கிறபோது அப்படித் தோன்றுகிறது. அவ்வளவுதான்.
இது ராஜா பாட்டுகளுக்குமட்டுமல்ல, எல்லாப் பெரும் படைப்புகளுக்கும் பொருந்தும். எப்போதோ எழுதப்பட்ட குறுந்தொகை, புறநானூறு, நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், கம்பர் பாடல்களுக்கு நாம் இப்போது யோசித்துப் புது விளக்கங்கள், சாத்தியங்களைச் சேர்க்கிறோம், அதனால் அவை நமக்கு (சில சமயங்களில் பிறர்க்கும்) மேலும் அழகாகத் தெரிகின்றன.
ஆக, அந்த இசையமைப்பாளரோ கவிஞரோ அதை நினைத்து எழுதியிருக்கவேண்டிய அவசியமே இல்லை. அப்படிப்பட்ட கூடுதல் interpretationகளுக்கு சாத்தியம் அளிக்கிற படைப்புகளாக அவை இருக்கின்றன. அவ்வளவுதான்.
சில நாள் முன்னால் ட்விட்டரில் ஒரு விவாதம். ‘முல்லை, வெள்ளி போல அன்னம் பொங்கத்தான் வேணும்’ என்கிற பஞ்சு அருணாசலத்தின் பாடலைக் குறிப்பிட்டு, ’அந்த ஒரு வரியில் வெள்ளைச் சோறுக்கு 3 உவமைகள் (முல்லைப் பூ, வெள்ளி, அன்னப் பறவை) உள்ளன’ என்று நான் எழுதினேன்.
பலர் இதனை ஏற்கவில்லை. ‘முல்லை, வெள்ளி இரண்டும் உவமைகள், அன்னம் என்பது ‘போல’வுக்குப் பின்னால் வருவதால் அது உவமை ஆகாது, தவிர, அது சாதத்தை நேரடியாகக் குறிக்கிறது’ என்றார்கள்.
அன்னம் என்பது சோற்றைக் குறிப்பிடும் இன்னொரு வார்த்தை. அதற்கு உவமை அல்ல. சரிதான்.
ஆனால், இங்கே அதே மெட்டுக்குப் பஞ்சு அருணாசலம் ‘முல்லை, வெள்ளி போல சோறு பொங்கத்தான் வேணும்’ என்று எழுதியிருக்கலாம், ‘சாதம் பொங்கத்தான் வேணும்’ என்று எழுதியிருக்கலாம், பெருமளவு புழக்கத்தில் இல்லாத அன்னம் என்ற வார்த்தையை அவர் ஏன் அங்கே கொண்டுவருகிறார்?
அப்போது அவர் அதை யோசிக்காமல் போட்டிருக்கலாம், அல்லது, வார்த்தை அழகுக்காகப் போட்டிருக்கலாம், அன்னம் என்பது அன்னப்பறவையைக் குறிக்கும் என்று அவர் அப்போது யோசிக்காமலேகூட இருந்திருக்கலாம்.
ஆனால், இப்போது நாம் யோசிக்கும்போது, அன்னம் என்கிற வார்த்தை அங்கே அன்னப் பறவையை நினைவுபடுத்தி. அந்த வரியில் 3வது உவமை ஆகிவிடுகிறது. இல்லையா?
ஆக, பஞ்சு அருணாசலம் அதுபோல் நினைத்து எழுதினாரோ, இல்லையோ, அப்படிப்பட்ட ஒரு சிந்தனைக்கு இடமளிக்கும் படைப்பு அவருடையது. அது மேன்மையான ஒரு விஷயம். அம்மட்டே!
இப்படிப் படைப்பாளியோடு நாமும் கொஞ்சம் பங்கேற்று, நமது அனுபவங்கள், interpretationsஐ அதில் சேர்ப்பதில் எந்தத் தவறும் இல்லை, எழுதியவருக்குப் பெருமையான விஷயம்தான் அது என்று நான் நினைக்கிறேன்.
உங்கள் கருத்துகளை Commentsல் சொல்லுங்கள்.
***
என். சொக்கன் …
09 12 2012
நடுக்கம்
Posted December 7, 2012
on:- In: Fiction | Magazines | Media | Short Story
- 2 Comments
வண்டி லேசாக நடுங்கி ஆடுவதுபோலிருந்தது.
சிவராமன் உடனடியாக வேகம் குறைத்து, சாலையோரமாக ஒதுங்கி, வண்டியை நிறுத்தினான். மண் பாதையில் வசதியாகக் குத்திட்டு அமர்ந்தபடி பின் சக்கரத்தை கவனித்தான்.
டயரில் காற்று குறைந்திருக்குமோ என்பதுதான் அவனுடைய முதல் சந்தேகம். ஆனால், அப்படியின்றி, போதுமான அளவு காற்று இருப்பதாகத் தெரிந்தது. கையால் அழுத்திப் பார்த்தபோது கட்டைவிரல் லேசாக வலித்தது.
எரிச்சலுடன் கைகளை உதறிக்கொண்டபடி சக்கரத்தின் மற்ற பகுதிகளைச் சோதித்தான் அவன். தூசும் சேறும் படிந்த எல்லா நட், போல்ட்களும் சரியாக முடுக்கப்பட்டிருப்பதுபோல்தான் தெரிந்தது. என்றாலும், வண்டி ஜன்னி வந்தாற்போல் அபத்திரமாக உதறுகிறது. ஏன்?
பெரிதாக இரண்டு தும்மல்களைப் போட்டபடி பைக்கின்மீது லேசாகச் சாய்ந்து நின்றுகொண்டான் சிவராமன். கடைசியாக வண்டியை சர்வீஸ் விட்டது எப்போது என்று யோசித்துப்பார்த்தான். ஞாபகமில்லை.
பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து நெற்றியைத் துடைத்துக்கொண்டான். நாளை காலை மறக்காமல் வண்டியை சர்வீஸுக்கு அனுப்பிவிடவேண்டும்.
மணி ஐந்தாகப்போகிறது. என்றாலும், உச்சி வெய்யில்போல் தகித்துக்கொண்டிருந்தது. சோதனைபோல் இந்த வண்டியும் கிளம்ப மறுத்தது. சிவராமன் தன் கோபத்தையெல்லாம் கூட்டி உதைத்தும்கூட எஞ்சினில் எந்தச் சலனமும் இல்லை. பேசாமல் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டுச் சாலையோரச் சாக்கடையில் குதித்து மூழ்கிப்போய்விடலாமா என்று எரிச்சலாக இருந்தது அவனுக்கு.
இன்று காலையிலிருந்தே எதுவும் சரியில்லை. அலுவலகம் சென்று அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குள் அந்த வெங்கடேஷிடமிருந்து ஃபோன் வந்துவிட்டது.
எரிச்சல் கலந்த பணிவோடு அவன் சொன்னதெல்லாம் இன்னும் சிவராமன் காதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது, ‘எப்போ கேட்டாலும் பணம் இல்லைன்னுதான் சொல்றீங்க ஸார். ஒண்ணு, உங்க பேங்கில பேசி எங்களுக்குப் பேமென்ட் கொடுக்கச் சொல்லுங்க. இல்லைன்னா, நீங்களாவது கொஞ்சம் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க. ரெண்டும் இல்லாம நாங்க எப்படி ஸார் வீடு கட்டறது?’
அவன் சொல்வதெல்லாம் வாஸ்தவம்தான். என்றாலும், அவன் பேசுகிற தொனியில் நாக்கைப் பிடுங்கிக்கொண்டுவிடலாமா என்றிருந்தது சிவராமனுக்கு. சட்டென்று குரல் தணித்து யாருக்கும் கேட்டுவிடாதபடி ‘கொஞ்சம் பொறுத்துக்கங்க வெங்கடேஷ், இன்னும் ஒரு வாரத்தில செக் வந்துடும்ன்னு சொல்றாங்க’ என்றான்.
‘ஆறு மாசமா அவங்க இதேதான் சொல்றாங்க’ என்றான் வெங்கடேஷ், ‘அதெல்லாம் நம்பறதுக்கு இல்லை ஸார், எங்களுக்கு இப்போ உடனடியா பணம் தேவைப்படுது.’
‘எவ்ளோ?’ கேட்கும்போதே சிவராமன் குரலில் லேசான நடுக்கம்.
‘அட்லீஸ்ட் ரெண்டு லட்சமாவது வேணும் ஸார். கம்பி வாங்கணும்’, என்றான் வெங்கடேஷ், ‘நாளைக்குள்ள நீங்க பணம் ஏற்பாடு செஞ்சீங்கன்னா சவுகர்யமா இருக்கும்’ என்று பொறுமையாகச் சொன்னவன், சட்டென்று மிரட்டல் தொனிக்குத் தாவி ‘இல்லைன்னா உங்க வீட்டு வேலைதான் தடைபடும்’ என்றான்.
‘நான் பார்க்கறேன் வெங்கடேஷ்’ என்றான் சிவராமன், ‘ஒரு லட்சமாவது ட்ரை பண்றேன்.’
‘ஒரு லட்சமெல்லாம் போதாது ஸார்’ என்றான் வெங்கடேஷ், ‘ஒன்னரையாவது தேவைப்படும் ஸார், இரும்புக் கம்பியெல்லாம் விலை ஏறிப்போச்சு.’
உடனடியாக நாலு இரும்புக் கம்பிகளை அதிக விலை கொடுத்து வாங்கி அந்த வெங்கடேஷின் கழுத்தில் இட்டு முறுக்கினால் என்ன என்று தோன்றியது சிவராமனுக்கு. அந்த எரிச்சலை மறைத்துக்கொண்டு ‘முடிஞ்சவரைக்கும் முயற்சி செய்யறேன்’ என்றான்.
‘அப்போ நான் நாளைக்குக் காலையில ஃபோன் செய்யட்டுமா ஸார்?’
அவனுக்கு சரியாக பதில் சொல்லாமலே சட்டென்று ஃபோனை வைத்துவிட்டான் சிவராமன். காலை நேர வேலையின் உற்சாகமெல்லாம் மொத்தமாக வடிந்துவிட்டாற்போலிருந்தது. திடீரென்று ஒன்றரை லட்சத்துக்கு எங்கே போவேன் நான்?
எல்லாம் அவனுடைய முட்டாள்தனத்தால் வந்த வினைதான். யாரோ சொன்னார்கள் என்று ஒன்றரையணா வங்கியொன்றில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பம் செய்ய, அவர்கள் தேவையான நேரத்தில் பணம் தராமல் பாடாகப் படுத்துகிறார்கள்.
ஆரம்பத்தில் எல்லாம் ஒழுங்காகதான் நடந்தது. மூன்றரை பக்க விண்ணப்பத்தை நிரப்பித் தந்ததும் வங்கியிலிருந்து நான்கைந்து பேர் வீடு கட்டுமிடத்துக்கே வந்து விசாரித்துப்போனார்கள், வீட்டிற்கு இத்தனை லட்சம் மதிப்பு, அதில் எண்பத்தைந்து சதவிகிதம் கடனாகத் தரமுடியும் என்றெல்லாம் கூரியரில் லெட்டர் அனுப்பினார்கள்.
ஆனால், அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்டபிறகுதான் பிரச்சனையே தொடங்கியது. ஆரம்பத்தில் கடன் தருவதற்கு ஒப்புக்கொண்டவர்கள் பக்கம் பக்கமாகக் காகிதங்களைக் கொண்டுவந்து கொட்டி, சிவராமனிடம் கிட்டத்தட்ட நாற்பது கையெழுத்துகள் வாங்கிக்கொண்டபின், காசு தரமுடியாது என்று தலைகீழாக நின்றார்கள்.
அதாவது, அரைகுறை வீட்டிற்கெல்லாம் கடன் தரமாட்டார்களாம். வீட்டில் பாதியாவது கட்டிமுடித்தபிறகுதான் காசு தரமுடியும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டது வங்கி நிர்வாகம்.
இந்த திடீர் திருப்பத்தைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத சிவராமன் நிலைகுலைந்துபோய்விட்டான். அதேநேரத்தில், அவனுக்கான வீடு அமைந்திருந்த அடுக்ககத்தைக் கட்டிக்கொண்டிருந்த கம்பெனி, இந்த க்ஷணத்தில் காசு வந்தால்தான் ஆச்சு என்று தொல்லை தரலானது.
சுருக்கமாகச் சொல்வதானால், ‘இன்னும் கட்டிமுடிக்காத வீட்டுக்கு எதை நம்பிக் காசு தருவேன்?’ என்று முறைக்கிறான் வங்கிக்காரன். ‘காசு கொடுத்தால்தானே என்னால் கட்டிமுடிக்கமுடியும்?’ என்கிறான் வீட்டுக்காரன்.
இவன் சொல்வதும் நியாயம்தான். அவன் சொல்வதும் நியாயம்தான். இந்த இரண்டு நியாயங்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு அநியாயமாக சிவராமன் தலை உருள்கிறது.
அப்போதிலிருந்து, ஒவ்வொரு மாதமும் அந்த வெங்கடேஷிடமிருந்து ‘எப்படியாவது ஒரு லட்சம் ஏற்பாடு செய்யுங்க சார்’ என்று ஃபோன் வருவது வழக்கமாகிவிட்டது. தளம் போடவேண்டும், அல்லது செங்கல் சூளைக்குப் பணம் தரவேண்டும், அல்லது தண்ணீர்த் தொட்டி கட்டவேண்டும். இப்படி அவனுக்கென்று ஏதாவது ஒரு செலவு வந்துவிடுகிறது. உடனடியாக, ஒரு லட்சம், அல்லது ஒன்றரை லட்சம் வேண்டுமே வேண்டும், நீயாகக் கொடுத்தாலும் சரி, உன்னுடைய வங்கியிலிருந்து கடன் வாங்கிக் கொடுத்தாலும் சரி, எனக்குப் பணம் வேண்டும். அவ்வளவுதான்.
ஒவ்வொருமுறையும், ‘அதெல்லாம் தரமுடியாது. என்ன பண்ணுவியோ, பண்ணிக்கோ’ என்று கத்தவேண்டும்போல்தான் இருக்கிறது சிவராமனுக்கு. ஆனால், முத்திரைத் தாளில், பன்னிரண்டு பக்க ஒப்பந்தத்தில் நீளமாக இட்ட கையெழுத்துகள் அனைத்தும் சங்கிலிகளாகக் கோத்துக்கொண்டு அவனைக் கட்டிப்போட்டிருக்கிறது. ஒப்பந்தப்படி பணம் தராவிட்டால் போலீஸோ, கோர்ட்டோ, ஜெயிலோ, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகவே, எப்படியாவது அக்கம்பக்கத்தில் விசாரித்து, தெரிந்தவர்களிடம் கெஞ்சிக் கேட்டு ஐம்பதாயிரமோ, எழுபதாயிரமோ ஏற்பாடு செய்துதொலைக்கவேண்டியிருக்கிறது.
இதனால், ஊரில் பாதிப் பேரிடம் ஏற்கெனவே கடன் வாங்கியாகிவிட்டது. சனியன் பிடித்த இந்த பேங்க் லோன் வருவதற்குள் மிச்சமிருக்கிற எல்லாரிடமும் கையேந்தவேண்டியிருப்பது நிச்சயம்.
இப்போது, இரும்புக் கம்பிகளைச் சாக்கிட்டு மேலும் ஒன்றரை லட்சம் கேட்கிறான். அதுவும், நாளைக்கே.
அத்தனை பெரிய தொகை, யாரால் ஏற்பாடு செய்யமுடியும் என்று காலையிலிருந்து யோசித்துக்கொண்டிருந்தான் சிவராமன். சாப்பாட்டு நேரத்தில் வெங்காய உப்புமா உள்ளே இறங்க மறுத்தது. இனிமேல் யாரைக் கேட்கமுடியும்? எங்காவது போய்க் கொள்ளையடித்தால்தான் உண்டு.
சாலையோரமாக நிமிர்ந்து நின்றிருந்த அந்த விளம்பரப் பலகை சிவராமனின் கண்ணில் பட்டது. அழகான ஒரு கடற்கரையில், இளவயது அம்மா, அப்பா, இரண்டு அல்லது மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை, மூவருமாக ஈர மணலில் வீடு கட்டி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மூவரின் முகத்திலும் அளவற்றுப் பொங்கும் உற்சாகச் சிரிப்பு, அதனூடே, ‘நிஜ வீடு கட்டுவதும் இத்தனை சுலபம்தான்’ என்னும் விளம்பர வரிகள்.
அதென்னவோ, விளம்பரங்களின் உலகத்தில்மட்டும் எல்லாரும் திருப்திகரமாகவே இருக்கிறார்கள். கவலைகளற்ற, அபரிமிதமான சிரிப்பும் நிம்மதியுணர்வும் நிறைந்து வழிகிற அந்த உலகினுள் தாவிக் குதித்துவிடமுடியுமா என்று ஏக்கமாயிருந்தது சிவராமனுக்கு.
இந்த எண்ணத்துடன் இன்னொருமுறை வண்டியை அழுத்தி உதைத்தான் சிவராமன். லேசாகச் சிணுங்கிவிட்டுக் கிளம்பிவிட்டது. மெல்லமாக உறுமியபடி சாலையில் கலந்தான்.
வழக்கமாக, வண்டி ஓட்டுகிறபோது சிவராமனுக்கு மெலிதாகப் பாடத் தோன்றும், அடுத்தவருக்குக் கேட்டுவிடாதபடி சின்னக் குரலில் தனக்குள்ளே பாடிக்கொள்வதுதான். என்றாலும், அப்படிப்பட்ட தருணங்களில், சினிமாவில் பாட்டுப் பாடிக்கொண்டே குதிரையில் போகிற ராஜகுமாரனைப்போல் தன்னை உணர்வான் அவன்.
ஆனால் இப்போது, ஏமாற்றத்தின் கசப்பும் சலிப்பும்தான் அவனுக்குள் நிரம்பியிருந்தது. இன்று மதியம்முழுக்க ஏழெட்டுப் பேருக்கு ஃபோன் செய்தாகிவிட்டது. சொல்லிவைத்தாற்போல் எல்லாரும் ‘அவ்ளோ பணமா?’, என்று வாயைப் பிளந்தார்கள்.
கடைசியில், ஒரே ஒரு சிநேகிதன்மட்டும் பத்தாயிரம் ரூபாய் தரமுடியும் என்று ஒப்புக்கொண்டான். மற்றவர்கள் எல்லாரும் கைவிரித்துவிட்டார்கள்.
ஒன்றரை லட்சம் கேட்கிறவனிடம் வெறும் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தால் அந்த வெங்கடேஷ் தன்னை எப்படிக் கேவலமாகப் பார்ப்பான் என்று சிவராமனால் இப்போதே ஊகிக்கமுடிந்தது. மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதித்து என்ன புண்ணியம்? வீடு கட்டுகிறேன் என்று தொடங்கி இப்படிக் கண்டவனிடம் அவமானப்படவேண்டியிருக்கிறது.
வண்டி மீண்டும் லேசாக நடுங்கியது. சிவராமன் பைக்கை நிறுத்தாமல் வேகம் குறைத்து அப்படியே திரும்பிப் பார்த்தான். பின் சக்கரம் ஒழுங்காகச் சுற்றுவதுபோல்தான் தெரிந்தது. ஆனாலும், வண்டி நிலையற்றுத் தடுமாறுவதை அவனால் நன்றாக உணரமுடிந்தது. ஆகவே, வண்டியை விரைவாக விரட்டமுடியவில்லை. சக்கரம் பிடுங்கிக்கொண்டு பறந்துவிடுமோ என்று பயமாக இருந்தது.
உடனடியாக இதைச் சோதித்துச் சரி செய்தாகவேண்டும் என்றுதான் விரும்பினான் சிவராமன். ஆனால், அன்றைய தினத்தின் களைப்பும் அசதியும் அவனை ரொம்பவும் தளர்வாக்கியிருந்தது. எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்புடன் வீட்டுக்குச் சென்று அகால நேரத்தில் அடித்துப்போட்டாற்போல் உறங்கிப்போனான்.
******
அதிகாலை நாலரை மணிக்கு, ஏதோ கெட்ட கனாக்கண்டு விழித்துக்கொண்டான் சிவராமன்.
இன்னும் ஊர் எழுந்திருக்கவில்லை. ஜன்னலுக்கு வெளியே இருள் விலகாத வானத்தை வெறித்தபடி சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். பிறகு, மெல்லமாகத் தலையை உலுக்கிக்கொண்டு பல் துலக்கச் சென்றான்.
அப்போதுதான், திடீரென்று எங்கோ மின்னலடித்தாற்போல் ஸ்ரீனிவாசனின் நினைப்பு வந்தது.
ஸ்ரீனிவாசன், அவனுடைய முந்தைய கம்பெனியில் மேனேஜராக இருந்தவர். அவருக்கும், அவருடைய மனைவிக்கும் சிவராமனிடம் தனி பிரியம் உண்டு. அவன் பிரம்மச்சாரியாக இருந்த சமயங்களில், வாரம் ஒருமுறையாவது அவனைத் தங்களின் வீட்டுக்கு அழைத்து நல்ல சாப்பாடு போடுவார்கள்.
அவரை நினைக்கையில் சிவராமனுக்குப் புது நம்பிக்கை பொங்கினாற்போலிருந்தது. ஸ்ரீனிவாசன் ஓரளவு வசதியானவர்தான், அவரால் நிச்சயமாக இந்த ஒன்றரை லட்சத்தைப் புரட்டமுடியும்.
ஆனால், கடைசியாக அவரிடம் பேசிப் பல மாதங்களாகிறது. அல்லது, சில வருடங்களே ஆகிவிட்டதோ என்னவோ.
சிவராமனுக்குத் திருமணமானபின், ஒரே ஒருமுறை மனைவியுடன் அவர் வீட்டுக்குச் சென்றுவந்தான். அதன்பிறகு, இன்றுவரை தொலைபேசித் தொடர்புகூட இல்லை. இப்போது, காசு விஷயத்துக்காக அவரிடம் சென்று நிற்கத் தயக்கமாக இருந்தது அவனுக்கு.
ஆனால், இப்போது அதெல்லாம் பார்த்தால் முடியுமா? மறுபடி அந்த வெங்கடேஷ் ஃபோன் செய்து ‘இன்னும் காசு ஏற்பாடு செய்யலையா? நீயெல்லாம் ஏன்யா உயிரோட இருக்கே?’ என்று கேவலமாகப் பேசுமுன் அவன் கேட்ட தொகையில் பாதியாவது தேற்றியாகவேண்டுமே.
சீக்கிரமே குளித்துவிட்டுக் கிளம்பினான் சிவராமன். நேற்றின் மிச்சம்போல் வண்டி ஏகத்துக்கு நடுங்கிப் பதறியது. என்றாலும், முடிந்தவரை வேகம் பிடித்து ஓட்டினான். எட்டரை மணிக்கெல்லாம் அலுவலகக் காரில் ஏறிவிடுகிற ஸ்ரீனிவாசனை அதற்குமுன்பே பிடித்தால்தான் உண்டு.
******
‘ஒரு லட்சம்தானா?’ ஏமாற்றமாக உதட்டைப் பிதுக்கினான் வெங்கடேஷ்.
‘இப்போதைக்கு இவ்ளோதான் முடியும்’, கண்டிப்பான குரலில் சொன்னான் சிவராமன், ‘இவ்ளோதான் முடிஞ்சது’ என்று தன் இயலாமையை ஒப்புக்கொள்ளத் தயக்கமாக இருந்தது அவனுக்கு. ஆகவே, சற்றே அதட்டலான தொனிக்குத் தாவிக்கொண்டு, ‘ஏற்கெனவே மூணு லட்சம்வரைக்கும் ஏற்பாடு செஞ்சிருக்கேன், எல்லாக் காசையும் நானே புரட்டிட்டா அப்புறம் பேங்க் எதுக்கு? லோன் எதுக்கு?’, என்றான்.
‘கோவிச்சுக்காதீங்க சார்’, சிவராமன் தந்த காசோலையைச் சட்டைப் பையில் செருகிக்கொண்டு குப்பையாகக் குவிந்திருந்த மேஜையில் ரசீதுப் புத்தகத்தைத் தேடியபடி சொன்னான் வெங்கடேஷ், ‘உங்க பேங்க்லதான் காசே தரமாட்டேங்கறாங்க’
‘அதெல்லாம் எனக்குத் தெரியாது வெங்கடேஷ்’, குரலை உயர்த்திச் சொன்னான் சிவராமன், ‘இனிமே நீங்க என்கிட்டே இப்படி அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செஞ்சா என்னால எதுவும் பண்ணமுடியாது. அப்புறம் இந்த வீடே வேண்டாம்ன்னு விட்டுட்டுப் போய்டுவேன்.’
அவனுடைய வெற்று மிரட்டலுக்கு மெல்லச் சிரித்தபடி பால் பாயின்ட் பேனாவால் உள்ளங்கையில் கிறுக்கிப்பார்த்தான் வெங்கடேஷ். அந்தக் கிறுக்கல்கள் ஒவ்வொன்றும் மெலிதான இரும்புக் கம்பிகள்போல் சிவராமனுக்குத் தோன்றின.
******
ஆஃபீசுக்குத் திரும்பும் வழியெல்லாம் வெங்கடேஷின் அந்தச் சிரிப்புதான் சிவராமனை உலுக்கிக்கொண்டிருந்தது. அறையின் மூலையில் சிக்கிவிட்ட தனது இரையைப் பார்த்து ஒரு சிங்கமோ, சிறுத்தையோ சிரிப்பதைப்போல் ஓர் அலட்சியமான, ‘உன்னால் வேறெதுவும் செய்துவிடமுடியாது’ என்பதைப்போன்ற ஆணவமான அந்தச் சிரிப்புக்காகவே அந்த வெங்கடேஷை வெறுத்தான் சிவராமன்.
ஆனால், வெறுப்பதைத்தவிர அவனால் வேறெதுவும் செய்துவிடமுடியாது. பன்னிரண்டு பக்க ஒப்பந்தம், பன்னிரண்டு கையெழுத்துகள், தப்பமுடியாதபடி மாட்டிக்கொண்டாகிவிட்டது.
இத்தனைக்கும் நடுவே, சிவராமனுக்கு ஒரே ஒரு தாற்காலிக நிம்மதி, எப்படியோ, ஸ்ரீனிவாசன் புண்ணியத்தில் ஒரு லட்சத்திற்கு ஏற்பாடு செய்தாகிவிட்டது, இனிமேல் ஒன்றிரண்டு வாரங்களுக்காவது அந்தக் கடன்கார வெங்கடேஷிடமிருந்து ஃபோன் எதுவும் வராது.
******
அன்று மாலை, சிவராமனும் அவன் மனைவியும் ஒரு கண்காட்சிக்குச் சென்றார்கள். புறநகர் பகுதியில் ஒரு பரந்த மைதானத்தில் பந்தல் போட்டு நடந்துகொண்டிருந்த அந்தக் கண்காட்சியில், எதை எடுத்தாலும் அநியாய விலை. வண்டியை நிறுத்துவதற்கான பார்க்கிங் சீட்டுக்கே பத்து ரூபாய் பிடுங்கிக்கொண்டார்கள் என்றால் மற்றதைச் சுலபமாக ஊகித்துக்கொள்ளலாம்.
அந்தக் கண்காட்சியையும், அதை ஏற்பாடு செய்தவர்களையும், அவர்களுடைய வண்ண விளம்பரங்களில் மயங்கிய தங்களின் மடத்தனத்தையும் நொந்துகொண்டபடி சிவராமனும் ஆர்த்தியும் வீடு திரும்பினார்கள்.
வீட்டின்முன்னே வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும்போதுதான் சிவராமன் ஓர் ஆச்சரியமான விஷயத்தை கவனித்தான். நேற்று அப்படி அபாயகரமாக நடுங்கிக்கொண்டிருந்த வண்டி, இப்போது எந்தப் பிரச்சனையும் செய்யவில்லை. கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர்களுக்குப் பரம சாதுவாக ஒத்துழைத்திருக்கிறது. சொல்லப்போனால், வண்டியில் அப்படியொரு கோளாறு இருந்ததையே அவன் சுத்தமாக மறந்துவிட்டிருந்தான்.
அப்படியானால், இப்போது வண்டியை சர்வீஸுக்கு விடவேண்டுமா, தேவையில்லையா என்று யோசித்தபடி வீட்டினுள் நுழைந்தான் சிவராமன்.
******
அடுத்த சில நாள்களுக்கு, சிவராமனின் வண்டியில் எந்தக் கோளாறும் தென்படவில்லை. ‘நானா? நடுங்கினேனா? இல்லையே!’, என்பதுபோல் பழைய பிரச்சனையின் சிறு சுவடும் தென்படாமல் சீராக இயங்கிக்கொண்டிருந்தது வண்டி.
இப்போது வண்டியின் பின் சக்கரத்தில் எந்த நடுக்கமும் இல்லை. வேகமாகப் போய்க்கொண்டிருக்கையில் சட்டென்று சக்கரம் பிடுங்கிக்கொண்டு, சாலை மத்தியில் தூக்கி எறியப்பட்டுப் பல் உடையுமோ என்கிற அபத்திர உணர்வு கொஞ்சம்கொஞ்சமாகக் குறைய, பிறகு இந்த விஷயமே மொத்தமாக அவன் நினைவிலிருந்து நழுவிப்போனது.
******
அந்த மாதக் கடைசியில் மீண்டும் வெங்கடேஷிடமிருந்து ஃபோன் வந்தது. ‘குட்மார்னிங்’ சொன்ன மறுகணம், ‘உங்க பேங்க்ல என்னாச்சு ஸார்?’ என்றான்.
‘தெரியலை வெங்கடேஷ்’, சிவராமனின் குரல் லேசாகத் தடுமாறியது, ‘போன வாரம்கூட பேசிப்பார்த்தேன். மறுபடி நம்ம அபார்ட்மென்ட் கட்டிடத்தை நேர்ல வந்து பார்த்து, அம்பது பர்ஸன்ட் முடிஞ்சிருந்தா உடனே பணம் தந்துடுவாங்களாம்.’
‘அவங்க எப்போ வருவாங்க ஸார்?’ என்றான் வெங்கடேஷ்.
அதற்கான பதில் சிவராமனுக்கும் தெரியவில்லை. என்றாலும், ‘இந்த வாரத்துக்குள்ள வருவாங்கன்னு நினைக்கறேன்’ என்று சொல்லிவைத்தான்.
அவன் சொன்னதை வெங்கடேஷ் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை, ‘இருக்கட்டும் ஸார்’ என்று பொதுவாகச் சொன்னவன் சற்றே குரலை உயர்த்தி, ‘அடுத்த வாரம் நம்ம பில்டிங்ல மூணாவது ஃப்ளோர் போடறதா இருக்கோம்’ என்றான்.
அடுத்து அவன் என்ன சொல்லப்போகிறான் என்று சிவராமனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதைக் கேட்க விரும்பாதவனாகக் கண்களை இறுக மூடிக்கொண்டான்.
******
அன்றைய பொழுது, தனக்கு லட்சக்கணக்கில் கடன் தரக்கூடிய சிநேகிதர்கள் யாரும் மிச்சமிருக்கிறார்களா என்று யோசிப்பதிலேயே கழிந்தது. எப்படி அந்த வெங்கடேஷுக்குப் பணம் ஏற்பாடு செய்வது?
மாலை மயங்கியபின், தளர்ந்த நடையோடு படிகளில் இறங்கிவந்தான் சிவராமன். அலுவலகக் கட்டிடத்துக்கு வெளியே கனமான இருள்.
கவலையும் சிந்தனையுமாக பைக்கைக் கிளப்பி மெல்லமாக ஓட்டலானான் சிவராமன். லேசான குளிரும், பனி படர்ந்த காற்றும் உறுத்தியது. வண்டியை எங்கே செலுத்துகிறோம் என்கிற கவனமற்றவன்போல் ஏதோ ஒரு திசையில் விரட்டிக்கொண்டிருந்தான் அவன்.
இப்போது, அவனுடைய வண்டியின் பின் சக்கரம் மீண்டும் பெரிதாக நடுங்கத்தொடங்கியிருந்தது.
***
என். சொக்கன் …
07 11 2004
(”வடக்குவாசல்” இதழில் பிரசுரமான சிறுகதை)
தேடித் தேடி இளைத்தேன்
Posted December 7, 2012
on:- In: (Auto)Biography | A. R. Rahman | Food | Humor | Uncategorized | Women
- 14 Comments
நான் இளையராஜாவின் முழு நேர ரசிகனாக இருந்தபோதும், ஒரே ஒரு விஷயத்தில்மட்டும் ஏ. ஆர். ரஹ்மானைத் தீவிரமாகப் பின்பற்றுகிறேன்.
ஊரு சனமெல்லாம் தூங்கி, ஊதக்காத்து அடிச்சபிறகுதான், இந்தப் பாவி மனத்துக்கு எழுத வரும். அதற்குமுன்னால் ஏதோ பேருக்குக் கீபோர்டைத் தட்டிக்கொண்டிருப்பேன். தூக்கத்தில் கண் செருகும், ஒரு வரிகூட உருப்படியாக அமையாது.
ஆனால், எங்கள் வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் ஒருத்தர் பாக்கியில்லாமல் நித்திரையில் ஆழ்ந்தபின்னர், என்னுடைய தூக்கம் காணாமல் போய்விடும். பின்னணியில் ஏதாவது ஒரு பாட்டை மெலிதாக ஓடவிட்டுக்கொண்டு விறுவிறுவென்று எழுத ஆரம்பித்துவிடுவேன். ஒரு சாப்டருக்கும் இன்னொரு சாப்டருக்கும் நடுவே அவ்வப்போது ட்விட்டரில் கொஞ்சம் அரட்டையடித்தால், இன்னும் வேகமாக எழுதமுடியும்.
இப்படித் தினமும் ஒன்பதரை மணிக்குத் தொடங்கும் ஓட்டம், குறைந்தபட்சம் நள்ளிரவுவரை தொடரும். அதற்குமேல் அதிகாலை 1 மணி, 2 மணிவரை நிறுத்தாமல் எழுதிய நாள்களும் உண்டு. நண்பர்களோடு கூட்டணி சேர்ந்து, எல்லாரும் ராமுழுக்க எழுதிவிட்டுக் காலையில் சுருண்டு படுத்துத் தூங்கியதும் உண்டு.
என்னுடைய பெரும்பாலான கட்டுரைகள், புத்தகங்கள் இரவு நேரத்தில் எழுதப்பட்டவைதான். எந்தத் தொந்தரவோ இடையூறோ இல்லாமல் நிம்மதியாக வேலை ஓடும்.
இந்த ராக்கோழி உத்தியோகத்தில் ஒரே ஒரு பிரச்னை, மாதத்தில் எல்லா நாளும் இப்படி எழுதமுடியாது, உடம்பு கண்டபடி வெயிட் போட்டுவிடும்.
எழுத்துக்கும் உடல் பருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது.
பொதுவாக (எழுத்து வேலை இல்லாத மற்ற நாள்களில்) ராத்திரி எட்டரை மணிக்கு இரவு உணவை முடித்துக்கொண்டுவிடுவேன், அப்புறம் கொஞ்சம் இன்டர்நெட் மேய்ந்துவிட்டு ஒன்பதரை மணிக்குப் படுத்தால், காலைவரை பசி எடுக்காது.
ஆனால், எழுதும் நாள்களில், சரியாகப் பத்தரை மணிக்கு ஒருமுறை, பன்னிரண்டு மணிக்கு ஒருமுறை பசிக்கும். அப்போது வயிற்றுக்கு எதையாவது கொடுக்காவிட்டால், தூக்கம் வந்துவிடும்!
பொதுவாக இதுபோல் ராத்திரியில் நீண்ட நேரம் கண் விழிக்கிறவர்கள் தேநீர் அருந்துவார்கள். ஆனால் எனக்கு அந்த வாடையே ஆகாது. காபியும் அந்த நேரத்தில் சரிப்படாது. நொறுக்குத் தீனி வேண்டும்.
ஆக, இப்படிச் சேர்ந்தாற்போல் பத்து நாள் ’எழுதி’னால் போதும், உடம்பில் கண்டபடி கலோரிகள் குவிந்து எடை ஏறிவிடும். அப்புறம் இருபது நாள் ஒழுங்காக நேரத்துக்குத் தூங்கி, நடந்து, ஓடி, டயட் இருந்து அதைச் சரி செய்யவேண்டியிருக்கும்.
அது நிற்க. ஏ. ஆர். ரஹ்மான் இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறார் என்று தெரிந்துகொள்ள எனக்கு மிகவும் ஆவல். அவரைப் பார்த்தால் நொறுக்குத் தீனி சாப்பிடுகிறவராகவும் தெரியவில்லை!
இப்படிதான், நேற்று இரவு ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல், வயிற்றுக்குள் மணி அடித்தது. கம்ப்யூட்டரை ஓரங்கட்டிவிட்டுச் சமையலறையினுள் நுழைந்து தேட ஆரம்பித்தேன்.
நேற்று காலைதான், மனைவியார் கடலை வறுத்திருந்தார். உப்புத் தண்ணீரில் ஊறவைத்து மைக்ரோவேவ் அவனில் வறுத்த கடலையை அவர் முறத்தில் போட்டுப் புடைத்துத் தோலுரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்திருந்தேன்.
அந்தக் கடலை, இப்போது எங்கே?
எங்கள் வீட்டுச் சமையலறையில் அநேகமாக எல்லா டப்பாக்களையும் வெளியிலிருந்து பார்த்தாலே உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்துவிடும். ஆகவே, புத்தக ஷெல்ஃபில் எதையோ தேடுகிறவன்போல் வரிசையாக டப்பாக்களைப் பார்வையிட்டேன். கடலைக்கான சுவடுகளைக் காணோம்.
வேறு வழியில்லை, ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்துவிடவேண்டியதுதான்.
அதையும் செய்தேன். அப்போதும் கடலை சிக்கவில்லை.
அடுத்து, இந்தப் பக்கம் எவர்சில்வர் பாத்திரங்கள். அவற்றையும் வரிசையாகத் திறந்து தேடினேன். முந்திரி, பாதாம் என்று ஏதேதோ கிடைத்தது. இந்தப் புலிப் பசிக்குக் கடலைதான் வேண்டும் என்று அவற்றை ஒதுக்கிவிட்டேன்.
சுத்தமாகப் பதினைந்து நிமிடங்கள் பொறுமையாகத் தேடியபிறகும், அந்தக் கடலையாகப்பட்டது தென்படவே இல்லை. இப்போது என்ன செய்ய?
இந்த அற்ப மேட்டருக்காக, தூங்கிவிட்ட மனைவியை எழுப்பிக் கேட்பது நியாயமல்ல (பத்திரமும் அல்ல), மனத்தளவில் கடலை போடத் தயாராகிவிட்டதால், வேறெதையும் தின்னத் தோன்றவில்லை.
ஒரே நல்ல விஷயம், எழுதுவதை நிறுத்திவிட்டுக் கடலை தேடிய நேரத்தில் என்னுடைய பசி அடங்கிவிட்டது. ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.
அப்புறம், காலை எழுந்து பல் தேய்த்த கையோடு, ‘நேத்திக்குக் கடலை வறுத்தியே, என்னாச்சு?’ என்றேன்.
‘ஏன்? என்ன ஆகணும்?’ என்று பதில் வந்தது.
‘இல்ல, நேத்து நைட் அதைத் தேடினேன், கிடைக்கலை.’
’ஆம்பளைங்களுக்குத் தேடதான் தெரியும், பொம்பளைங்களுக்குதான் கண்டுபிடிக்கத் தெரியும்’ என்றார் அவர், ’மத்தியானமே அதை மிக்ஸியில போட்டு வெல்லம் சேர்த்து அரைச்சாச்சு, அப்புறம் உருண்டை பிடிக்கறதுக்குள்ள ஏதோ வேலை வந்துடுச்சு, மறந்துட்டேன்’ என்றபடி மிக்ஸி ஜாடியைத் திறந்து காட்டினார்.
***
என். சொக்கன் …
07 12 2012
பெங்களூருவில் மைசூரு
Posted December 3, 2012
on:- In: Bangalore | Food
- 15 Comments
சில வாரங்களுக்கு முன்னால் ‘தி ஹிந்து’வில் மைசூர் பாக் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதன் சாராம்சம்: பெங்களூருவிலேயே மிகச் சிறந்த மைசூர் பாக் வேண்டுமென்றால், அது ’குண்டப்பா ஸ்வீட்ஸ்’ என்ற கடையில்தான் கிடைக்கும்.
இதைப் படித்ததும், நான் வெட்கித் தலை குனிந்தேன்.
பின்னே? ஸ்வீட்ஸ் பிரியன், பெங்களூருவில் 12 வருடங்களாக வாழ்கிறவன், ஆனால் குண்டப்பா ஸ்வீட்ஸ் பற்றிக் கேள்விப்பட்டதில்லையே. இது அவமானகரமான விஷயமில்லையா? உடனடியாக, தேடல் வேட்டையைத் தொடங்கினேன்.
இதுமாதிரி விஷயங்களுக்குக் கூகுளைவிட, நிஜ மனிதர்களிடம் பேசுவதுதான் சரிப்படும். எங்கள் அலுவலகத்திலேயே இனிப்பான மனிதர் இன்னொருவர் இருக்கிறார், அவரிடம் கேட்டால் உடனே விவரம் கிடைக்கும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கூடச் சேர்ந்து தேடுவதற்கு பார்ட்னர் கிடைப்பார்!
கேட்டேன். அவர் முகம் ஸ்விட்ச் போட்டாற்போல் மலர்ந்தது. ‘ஆஹா, குண்டப்பா ஸ்வீட்ஸ் மைசூர் பாக்’ என்றார்.
‘என்ன சார், உங்களுக்கு இது ஏற்கெனவே தெரியுமா?’
‘நல்லாத் தெரியும், ஏராளமா வாங்கி விழுங்கியிருக்கேன்’ என்றார் அவர். ‘நாக்கு நுனியில வெச்சா கரையறதும் உள்ளே போறதும் தெரியாது சார், அப்படி ஒரு மென்மை, மிதமான இனிப்பு, அட்டகாசமான சுவை’ என்று அடுக்கினார் அவர்.
சட்டென்று அவர் முகத்தில் சோகம். தீவிர நினைவுப் பெருமூச்சுடன் கடை முகவரி, செல்லும் வழியைச் சொன்னார்.
அந்தக் கடை நாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கிறது. அதனால் என்ன? நல்ல மைசூர் பாக் தேவையென்றால் கொஞ்சம் சிரமப்படதான் வேண்டும். ‘உங்களுக்கும் வாங்கிவரட்டுமா சார்?’ என்றேன்.
‘வேணாம் வேணாம்’ அவசரமாக மறுத்தார்.
‘ஏன்? இப்பதானே அதை அவ்ளோ அழகா வர்ணிச்சீங்க.’
‘ஆமா, ஆனா, சமீபத்துல காசிக்குப் போனபோது மைசூர் பாக் சாப்பிடறதை விட்டுட்டேன். அதனால, எனக்கு வேணாம், நீங்க வாங்கிச் சாப்பிடுங்க.’
நேற்று ஓர் உறவினரை வழியனுப்ப யஷ்வந்த்பூர் ரயில் நிலையம் செல்லவேண்டியிருந்தது. அதோடு மைசூர் பாக் பயணத்தையும் சேர்த்துக்கொண்டேன்.
பசவேஷ்வர நகரில் நான்கு முக்கியச் சாலைகள் சந்திக்கிற ஹவனூர் சர்க்கிள் உள்ளது. அங்கே இரு சாலைகளின் கச்சிதமான மூலையில் உள்ள சின்னக் கடைதான் ‘குண்டப்பா ஸ்வீட்ஸ்’. நீங்கள் காரிலோ ஆட்டோவிலோ சென்றால் நிச்சயம் மிஸ் செய்துவிடுவீர்கள், பஸ்ஸில் சென்று இறங்குங்கள் (மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து 10 ரூபாய் டிக்கெட்டாம், விசாரித்தேன்), அல்லது வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு நடந்து சென்று நாற்சந்தியின் மையத்தைத் தொடுங்கள். கடை சிக்கும்.
அப்புறம் இன்னொரு விஷயம், கடையின் போர்ட் முழுவதும் கன்னடத்தில் உள்ளது. யாரிடமாவது விசாரியுங்கள், அல்லது, ‘ಗು’ என்ற முதல் எழுத்தை நன்றாக நினைவு வைத்துக்கொண்டு தேடுங்கள்.
கடை வாசலிலேயே பெரிய கடாய் (வார்த்தை வெளாட்டு மாமே!) வைத்து மைசூர் பாக் கிண்டிக்கொண்டிருக்கிறார்கள். ராத்திரி ஒன்பது மணிக்கு Fresh Batchஆ என்று வியந்தபடி நுழைந்தேன். கவுன்டர் அருகே சுடச்சுட இன்னொரு Batch தயாராக இருந்தது. வாங்கிக்கொண்டேன். (விலை: கிலோ ரூ 400/-)
வீடு வந்தபோது இரவு 11. அப்போதும் விடாமல் மனைவியார் ஒரு துண்டு சாப்பிட்டுவிட்டுக் கிறங்கிப்போனார், ’இந்தக் கடையை எப்படி 12 வருஷமா மிஸ் பண்ணே?’ என்று என் தலையில் குட்டாத குறை!
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பா(அங்கே ‘க்’ இல்லை)கூட இப்படிதான் மென்மையாக இருக்கும், ஆனால் அதில் மெஷின் வைத்துச் செய்தமாதிரி ஒரு செயற்கைத்தன்மை (எனக்குத்) தோன்றும். குண்டப்பா ஸ்வீட்ஸில் அந்தப் பிரச்னையே இல்லை, கரடு முரடுத் தோற்றம், உள்ளே ஆங்காங்கே இளம்பழுப்பு, ஆங்காங்கே அடர்பழுப்பு, ஆனால் நாக்கில் வைத்தபின் அந்தக் குறைகள் எவையும் இல்லை, அப்படி ஒரு ருசி.
காலை எழுந்த மகளும் ஒரு துண்டு சுவைத்தாள், ‘Awesomeப்பா’ என்றாள் அயல்நாட்டு தோரணையில், ‘அம்மா, அப்படியே மொத்தமா என் டிஃபன் பாக்ஸ்ல வெச்சுடு.’
***
என். சொக்கன் …
03 12 2012