Archive for January 2013
படி, தோய், பொழி, நனை
Posted January 30, 2013
on:- In: இலக்கணம் | Learning | Poetry | Question And Answer | Tamil
- 5 Comments
பெரிய புராணத்திலிருந்து ஒரு வரி : (சிவபெருமான்) பொன்னி நீர் படிந்து வந்தாரோ? கங்கை நீர் தோய்ந்துவந்தாரோ?
காவிரியைக் குறிப்பிடும் ‘பொன்னி’க்கு மோனையாகப் ’படிந்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் சரி, கங்கைக்கு ஏன் ‘தோய்ந்து’?
சிவன் குளித்தார் என்பதுதான் இந்தப் பாட்டின் செய்தி. அவர் குளித்தது காவிரியிலா, அல்லது கங்கையிலா என்பது கேள்வி
காவிரி என்பது நிலத்தில் ஓடும் ஒரு நதி, சிவன் அதில் படிந்து குளிக்கவேண்டும்
ஆனால் கங்கை அப்படியில்லை, அவருடைய தலையிலேயே அந்த நதி இருக்கிறது, அவர் நின்றவாறு அதில் தோய்ந்து குளிக்கலாம், படியவேண்டாம்.
ஆக, படிதல், தோய்தல் என்ற சொற்களுக்கு இடையே இப்படி ஒரு நுணுக்கமான வித்தியாசம் இருக்கிறது, சிவன் விஷயத்தில் அதை மிகச் சரியாக உணர்ந்து பயன்படுத்துகிறார் சேக்கிழார். சும்மா ஒரே வார்த்தை மீண்டும் வரக்கூடாது என்பதற்காக Randomஆக எழுதியது அல்ல.
ஒரு மொழியில் நல்ல சொல்வளம்(Vocabulary)மட்டும் இருந்தால் போதாது, அதை எங்கே எப்படிப் பொருத்தமாகப் பயன்படுத்தவேண்டும் என்கிற ஞானமும் தேவை, அதற்கு ஒரு நல்ல உதாரணம் இந்தப் பாட்டு.
இவைதவிர, இதேபாட்டில் மூன்றாவதாக ஒரு வாக்கியத்தையையும் சேக்கிழார் பயன்படுத்துகிறார், ‘வான நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து…’
படிதல், தோய்தல் ஆச்சு, இப்போது (வானத்திலிருந்து மழை) பொழிதல், (அதில் இவர்) நனைதல் என்று 4 வெவ்வேறு Verbs, வெவ்வேறு அர்த்தம். எனக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொல்கிறேன்:
- படிதல் : ஒன்றன்மீது ஒன்று சென்று படிதல், still they are 2 different things, உதா: ஓவியத்தின்மீது தூசு படிந்துள்ளது
- தோய்தல் : ஒன்று இன்னொன்றில் கலந்து இரண்டறத் தோய்தல், உதா: அவர் கம்ப ராமாயணத்தில் தோய்ந்தவர்
- பொழிதல் : ஒன்று இன்னொன்றின்மீது பெரும் எண்ணிக்கையில் விழுதல், உதா: மழை பூமியில் பொழிகிறது
- நனைதல் : ஒன்று பொழிவதால் இன்னொன்று நனைதல், உதா: மழையில் வெள்ளாடு நனைகிறது
இந்த வரையறைகள் சரிதானா? இதன் அடிப்படையில், கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா என்று பாருங்கள்:
- இளைய நிலா பொழிகிறது
- இதயம்வரை நனைகிறது
- நிலவொளி பூமியில் படிகிறது? தோய்கிறது?
- வியர்வையில் தோய்ந்த கைக்குட்டை
- அடியாத மாடு படியாது
- அமுதைப் பொழியும் நிலவே
- வெள்ளத்தில் நனைந்தேன்
- மழையில் நனைந்தேன்
- இசையில் தோய்ந்தேன்
- பக்தியில் தோய்ந்தேன்
- நிழல் படிந்தது
- உப்புப் படிவம்
***
என். சொக்கன் …
30 01 2013
அழுகக்கூடாது
Posted January 19, 2013
on:- In: Grammar | Kids | Learning | Play
- 10 Comments
காலையில் மகள்களிடையே ஏதோ செல்லச் சண்டை. சின்னவள் பெரியவளைக் கன்னத்தில் கிள்ளிவிட்டு ஓட, இவள் வழக்கம்போல் அழத் தொடங்கிவிட்டாள்.
‘ஏய் நங்கை, காலங்காத்தால ஏன் இப்படி அழறே?’, மனைவியார் எரிச்சலுடன் கத்தினார்.
‘நான் அழுகவே இல்லை!’ என்றாள் நங்கை விசும்பியபடி.
நான் நங்கையை இந்தப் பக்கம் இழுத்து, ‘உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’ என்றேன்.
‘சொல்லு.’
’ஒரு ஊர்ல ஒரு சின்னப் பொண்ணாம், அவ பேரு நங்கையாம்.’
நங்கைக்குத் தன்னுடைய பெயரில் கதைகள் அமைந்தால் ரொம்பப் பிடிக்கும். ஆகவே, அழுகையை மறந்து ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தாள்.
’ஒருநாள், அந்த நங்கை மார்க்கெட்டுக்குப் போய் ரெண்டு ஆப்பிள் வாங்கினாளாம், ஒண்ணு ரெட் ஆப்பிள், இன்னொண்ணு க்ரீன் ஆப்பிள்.’
’வீட்டுக்கு வந்த நங்கை, சிவப்பு ஆப்பிளைமட்டும் ஃப்ரிட்ஜுக்குள்ளே பத்திரமா வெச்சாளாம், பச்சை ஆப்பிளை அப்படியே டேபிள்மேல வெச்சுட்டாளாம்.’
‘ரெண்டு நாள் கழிச்சுப் பார்த்தா, சிவப்பு ஆப்பிள் மார்க்கெட்ல பார்த்தமாதிரியே ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருந்ததாம், ஆனா பச்சை ஆப்பிள் அழுகிப்போச்சாம்.’
’அப்போ, க்ரீன் ஆப்பிளைப் பார்த்து அந்த ரெட் ஆப்பிள், ’ஹாஹாஹா, நீ அழுகிப் போய்ட்டே, நான் அழுகவே இல்லை’ன்னு சொல்லிச்சாம்.’
‘அப்புறம்?’
‘அவ்ளோதான் கதை’ என்றேன். ‘கொஞ்ச நேரம் முன்னாடி ஏன் அழறேன்னு அம்மா கேட்டபோது நீ என்ன பதில் சொன்னே?’
‘நான் அழுகவே இல்லைன்னு சொன்னேன்.’
‘அழுகிப்போறதுக்கு நீ என்ன ஆப்பிளா? மனுஷங்க அழுகமுடியுமா? அழதான் முடியும்!’
‘ஓ!’ என்றாள் நங்கை, ‘நான் அழவே இல்லைன்னு சொல்லணுமா?’
‘அவ்ளோதான். இனிமே சண்டை போட்டுக்காம, அழாம வெளாடுங்க.’
***
என். சொக்கன் …
19 01 2013
பொங்கலைத் தேடி
Posted January 14, 2013
on:- In: Bangalore | Change | Food | Humor
- 4 Comments
முன்குறிப்பு:
இது ஒரு மீள்பதிவு. 2002ம் ஆண்டு பொங்கல் நாளன்று ’அகத்தியர்’ மின்னஞ்சல் குழுவில் எழுதியது. சில இலக்கணப் பிழைகளை, வாக்கிய அமைப்புகளைமட்டும் திருத்தியுள்ளேன், மற்றபடி விஷயம் அரதப்பழசு.மீதி விவரம், பின்குறிப்பில்
இந்த முறையும் பண்டிகை நாளில் எ(பெ)ங்களூரில் மாட்டிக்கொண்டேன்!
காலை எழுந்தவுடன் ‘ஹேப்பி பொங்கல்’ என்று தமிழர் திருநாளுக்கு ஆங்கிலத்தில் வாழ்த்தும் நண்பர்களுக்கு எந்த மொழியில் பதில் சொல்வதென்று யோசித்துக் குழம்பிப்போய், கிளம்பி அலுவலகம் வரும் வழியில் உடுப்பி கார்டன் ஹோட்டலில் நுழைந்து, ‘ஒந்து ப்ளேட் பொங்கல்’ என்றால் அவன் நரபட்சிணியைப்போல் என்னைப் பார்த்து, ‘பொங்கல் இல்லா’ என்றான் பல்லிளித்து. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஞாபகம் வந்தது.
‘ஏன் இல்லா?’ என்று ஒரு கலவை மொழியில் கேட்டேன்.
‘எல்லாம் தீர்ந்து போச்’ என்று கைவிரித்தான், பாவி!
ஏதோ கிடைத்ததைச் சாப்பிட்டு அலுவலகம் வந்தேன், எப்போதும்போல் முழுமூச்சாக வேலைசெய்தேன் (சரி, சரி!). என்றாலும், பொங்கல் திருநாளில் பொங்கல் சாப்பிடாத சோகம் எனக்குள் மெகாசீரியலின் கண்ணீரூற்றைப்போல ஊறிக்கொண்டே இருந்தது. மதியம் கிளம்பி கதம்பம் போனேன்.
‘கதம்பம்’ என்பது எங்கள் அலுவலகத்திலிருந்து ஐந்தரை கிலோமீட்டர் தள்ளியிருக்கிற ஐயங்கார்வாள் ஹோட்டல். நின்று சாப்பிடுகிற ஹோட்டல் என்று பெயர்தான், ஆனால் நிற்க இடம் இருக்காது, மதிய வேளையில் கடுகைப் போட்டால்காணாமல்தான்போகும், பக்கத்தில் ஒரு பெண்கள் கல்லூரியும் ஒன்றிரண்டு வங்கிகளும் இருப்பதால், எப்போதும் பெருங்கூட்டம், பரபரப்பு, அசந்துமறந்தால் உங்கள் சப்பாத்திக்குப் பக்கத்திலிருக்கிறவர் தட்டுச் சட்னியைத்தான் தொட்டுச்சாப்பிட வேண்டியிருக்கும். அப்படியொரு நெரிசல்!
எந்நேரமும் அப்படிக் கூட்டம் சேர்க்கிறது என்றால், அங்கே சாப்பாடு எப்படி இருக்கும் என்று ஊகித்துக்கொள்ளுங்கள், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் என்று வருடம்முழுக்கப் பொங்கல் கொண்டாடுகிற ஹோட்டல் அது, புளியோதரை, பிஸிபேளாபாத், வாங்கிபாத் என்று எதையெடுத்தாலும் யாரோ ‘தேவதை’ தொட்டுக்கொடுத்ததுபோல அப்படி இனிப்பாக இனித்துக் கிடக்கும், திகட்டிப்போகாத லேசான இனிப்பும், புளிப்பும், ருசிப்பும், காபி குடித்து நாலு மணி நேரமாகியும் நாக்கில் அப்படியே நிற்கும், அப்படியொரு ருசி! அதனால், எல்லாப் பண்டங்களும் மற்ற ஹோட்டல்களைவிட ஐந்து ரூபாய் அதிகம் விலை என்றாலும், வரிசையில் நின்று சாப்பிட்டுப்போகிறவர்கள் இருக்கிற ஹோட்டல்.
எதையோ சொல்லவந்து வழக்கம்போல உபகதைக்குள் போய்விட்டேன், எனக்குத்தெரிந்து மதிய வேளையில் பொங்கல் சாப்பிடமுடிகிற ஒரே ஹோட்டல் என்பதால் அந்தக் கதம்பத்தைத் தேடிப் போனேன், ஹோட்டலுக்குச் சற்று முன்பாகவே வண்டி நிறுத்துமிடம். வழக்கமாய் அந்த ஏரியாவில், சிறுபிள்ளைகள் குச்சியோட்டி விளையாடுகிற டயர் வண்டி நிறுத்தக்கூட இடமில்லாதபடிக்கு இருசக்கர வாகனங்களின் கூட்டம் மொய்க்கும், ஆனால் இன்றைக்கு இரண்டே இரண்டு சைக்கிள்கள் மட்டும்தான் நின்றிருந்தன. எப்போதும் அங்கே உட்கார்ந்து (அல்லது நின்று) சலிக்காமல் அரட்டையடிக்கிற ஜீன்ஸ் பதுமைகளையோ, அவர்களின் விநோத தலைக் காதலர்களையோ யாரையுமே காணோம்.
அப்போதே எனக்குச் சந்தேகம்தான், வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக ஓடிப்போய்க் கதம்பம் வாசலைப்பார்த்தால், இழுத்து மூடிக்கிடக்கிறது. ஐந்தரை கிலோமீட்டர் வண்டியோட்டி வந்தது வீண்!
மீண்டும் வந்தவழியே திரும்பினேன், கண்ணில்பட்ட ஹோட்டல்களிலெல்லாம் வேண்டுதல்போல நின்று, சீதையைத் தேடுகிற ராமன் (சரி, அனுமன்)போல, ‘ஷுகர் பொங்கல் இருக்கா?’., ‘இல்லா’,
ராம ராஜ்யத்தில் ‘இல்லை’ என்ற சொல்லே இல்லை என்று சொல்வார்கள், இங்கே கர்நாடகத்தில் (எஸ். எம்.) கிருஷ்ண ராஜ்ஜியம்தானே, எங்கே போனாலும் ‘இல்லா’தான்!
நிறைவாக, அலுவலகத்துக்கு சற்று முன்பிருந்த ஒரு ஹோட்டலில் முயன்றேன், அங்கேயும் பொங்கல் இல்லா. தோல்வியின் சாயையை மறைத்து ”பரவா இல்லா, ஒரு மினிமீல்ஸ்’ என்றேன்.
பத்துநிமிடம் மேஜைமேலிருந்த ரோஜா நிஜமா, பொய்யா என்று சோதித்துப் பொறுமையிழந்தபோது, குறுமீல்ஸ் வந்தது. சாம்பார், ரசம், ஒரு செவ்வகக் கிண்ணத்தில் அப்பளத்தால் மூடப்பட்ட சாதம், பீட்ரூட் பொறியல், தயிர், மோர், ஒற்றை வடை, அட… அதென்ன மூலையில் ஸ்வீட்?
பொங்கல், பொங்கலேதான்!
‘தேடுவதை நிறுத்து, தேடியது கிடைக்கும்’ என்றார் விவேகானந்தர் (அவர்தானே? அவராகத்தான் இருக்கும்!, இதெல்லாம் அவர்தான் சொல்வார்!), அதுபோல மினிமீல்ஸிடம் சரணடைந்தபிறகு எனக்கு மணக்க மணக்க, முந்திரிப்பருப்பு, திராட்சையோடு பொங்கல் கிடைத்தது!
நிற்க. விஷயம் இன்னும் முடியவில்லை. இப்படியாகத் தவம் செய்து கிடைத்த பொங்கலை ஆசையாக ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டால், கடக்கென்று ஏதோ சத்தம் கேட்டது, பல்தான் உடைந்துவிட்டதோ என்கிற சந்தேகத்தில் அவசரமாகப் பக்கத்திலிருந்த மண்தொட்டியில் வாயிலிருந்த முழுமையையும் துப்பினேன். பிறகு உற்று கவனித்தால், வட்டமாக ஒரு நாலணாக் காசு!
சாப்பாட்டில் கரித்துண்டு (‘றி’ இல்லை, அது வேறே அர்த்தமாக்கும்) கிடந்தால் கல்யாண விருந்து கிடைக்கும் என்று சொல்வார்கள், நாலணா காசு கிடந்தால் என்ன கிடைக்கும்? பலன் தெரிந்தவர்கள் சொல்ல வேண்டுகிறேன்.
கடைசியில் மீதி பொங்கலை என்ன செய்தாய் என்று அங்கே யாரோ கேட்கிறார்கள். போங்க சார், இதையெல்லாம் விசாரிச்சுகிட்டு… ஹி ஹி ஹி!
***
பின்குறிப்பு:
தற்போது பெங்களூருவில் எஸ். எம். கிருஷ்ணா ராஜ்ஜியம் இல்லை, நாலணாக் காசு இல்லை, உடுப்பி கார்டன் ஹோட்டல் இல்லை, கதம்பம் ஹோட்டல்கூட இல்லை. ஜஸ்ட் 11 வருடங்களில் இத்தனை மாற்றங்களா?!
***
என். சொக்கன் …
14 01 2013
ஒரு நாயகன்
Posted January 9, 2013
on:- In: Bangalore | IT | Open Question | People
- 9 Comments
சில ஆண்டுகளுக்குமுன் எங்கள் அலுவலகத்தில் ஒரு புதியவர் சேர்ந்தார். அமெரிக்காவில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர், இந்தியா திரும்பிச் சில ஆண்டுகள் ஆகின்றன. அவர் என்னைப் பார்த்ததும் முதல் வாக்கியமாக ‘உங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா ?’ என்றார்.
‘ஏதோ, ஓரளவு தெரியும்’ என்றேன்.
‘பிரமாதம்’ என்றவர் சட்டென்று பையில் கைவிட்டு ஜுனியர் விகடன் சைஸுக்கு ஒரு பெரிய அழைப்பிதழை எடுத்தார், ‘இதை எனக்குப் படிச்சுச் சொல்லுங்களேன்!’
‘என்னது இது ?’
‘நான் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன்’ என்று வெட்கமாகச் சிரித்தார் அவர், ‘அந்தப் படத்தின் பூஜை இன்விடேஷன் இது.’
எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. என்னதான் தமிழ் தெரியாதவர்களைத் தமிழ்த் திரையுலகம் கொண்டாடினாலும், நூறு சதவீதம் கணினித் துறைப் பார்ட்டியான இவரைத் தமிழ் சினிமாவோடு என்னால் பொருத்திப்பார்க்கமுடியவில்லை. அதை அவரிடம் சொல்லமுடியுமா? ‘அட்வான்ஸ் வாழ்த்துகள்’ என்றபடி அவர் கொடுத்த அழைப்பிதழைத் திறந்தேன். படத்தின் பெயர், இன்னபிற தகவல்களை அவருக்குப் படித்துக்காட்டினேன்.
எனக்கு நன்றி சொன்னவர், தொடர்ந்து புலம்பலும் எதிர்பார்ப்பும் கலந்து நிறைய பேசினார். அவரது நண்பர் தயாரிக்கிற படமாம் இது, ‘நடிக்க ஆர்வம் உண்டா?’, என்று இவரைக் கேட்டிருக்கிறார்கள். தயக்கத்துடன் சம்மதித்திருக்கிறார், இப்போதும் அவருக்கு எதுவும் நிச்சயமாகத் தெரியவில்லை, ‘நிஜமாவே இப்படி ஒரு படம் எடுக்கறாங்களா சார்?’ என்று என்னிடம் கேட்டார்.
அதுமட்டுமில்லை. அந்த அழைப்பிதழில் இருந்த ஒவ்வொரு தமிழ் வார்த்தையையும் அவருக்கு நான் ஆங்கிலத்தில் படித்துக்காட்டச் சொன்னார் அவர். சாதாரணமாக இது ரொம்ப எரிச்சலூட்டுகிற விஷயம். ஆனால் அவருடைய குழந்தைக் குதூகலத்தைத் தொந்தரவு செய்ய மனம் வரவில்லை. நிதானமாகப் படித்தேன்.
கூடவே கொசுறாக, அந்தந்த வாக்கியங்களில் குறிப்பிடப்படும் நபர்களை எனக்குத் தெரியுமா என்றும் சொல்லவேண்டும் என எதிர்பார்த்தார் அவர். உதாரணமாக, ‘இசை : குப்புசாமி’ என்று படிக்கிறேன் என்று வையுங்கள், உடனடியாக அவரிடமிருந்து வரும் கேள்விகள், ‘யார் சார் இந்த குப்பு சாமி ? நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா, நல்லா ம்யூசிக் பண்ணுவாரா ? இதுக்குமுன்னாடி எத்தனை படம் பண்ணியிருக்கார் ?’ இப்படியே, அழைப்பிதழ் முழுமைக்கும் என்னுடைய அபிப்ராயங்களைக் கேட்டறிந்தார் அவர்.
‘ஏதோ, அவர் கேட்டதால்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன், மற்றபடி எனக்கு இது ஹாபிகூட கிடையாது!’ என்று அவர் அடிக்கடி சொன்னபோதும், அப்படி ஒரு படம் நிஜமாகவே எடுக்கிறார்களா, தன்னை நடிக்கவைப்பார்களா, இல்லை எல்லாமே புருடாவா என்று அறிந்துகொள்ள அவருக்குள் அத்தனை துடிப்பு. அவருக்குத் தெரியாத மொழிப் படம் என்பதால் அவரது குறுகுறுப்புகள் பல மடங்காகிவிட்டன, அதைப்பற்றிப் பேசும்போதெல்லாம், அவரது கண்கள் விரிய, அவருக்குள் தெரிந்த இந்தச் சிறுகுழந்தை ஆர்வத்தையும், அதேசமயம், அதை வெளிப்படையாக சொல்லிக்கொள்ளமுடியாத வெட்கத்தையும் பார்க்கச் சுவாரஸ்யமாக இருந்தது.
நிறைவாக அந்த அழைப்பிதழை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு, ‘தமிழ்ல சினிமாத் துறை ஆரோக்கியமா இருக்கா? நீங்க என்ன நினைக்கறீங்க? இந்தப் படம் ஓடுமா?’ என்றார் அவர்.
ஆரம்பத்திலேயே ‘எனக்குத் தமிழ் படிக்கத் தெரியாது’ என்று சொல்லியிருக்கலாமோ என நினைத்துக்கொண்டேன்.
***
என். சொக்கன் …
09 01 2013
தமிழ்ப் புதிர்
Posted January 9, 2013
on:நண்பர் நம்பிராஜன் நடத்தும் #365TamilQuiz இணையத் தளத்துக்காக(http://365tamilquiz.posterous.com/)ச் சமீபத்தில் ஏழு புதிர்க் கேள்விகளைத் தயார் செய்தேன், Backupக்கான, அந்தக் கேள்விகளும் பதில்களும் இங்கே:
1
சங்க இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற பெருநூல்களை வாசிப்பது ஒரு சுகம் என்றால், அதிகம் எழுதாத கவிஞர்களின் தனிப் பாடல்களில் வேறுவிதமான வாசிப்பு அனுபவம் கிடைக்கும். காளமேகம், ஔவையார் போன்றோர் அதிலும் சூப்பர் ஹிட் என்பது வேறு கதை.
இங்கே தரப்பட்டிருக்கும் வர்ணனை, ஒரு தனிப்பாடலில் இருந்து எடுக்கப்பட்டது:
அன்னமும் மஞ்ஞையும் போல் இரு பெண் கொண்ட ஆண் பிள்ளை நீ!
இந்த வரியை எழுதியவர் யார்? எந்தக் கடவுளைப்பற்றியது? குறிப்பாக, எந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடியது?
விடை:
பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் எழுதிய வரி இது, திருச்செந்தூர் முருகனைப் பாடியது
2
நல்ல பத்திரிகை ஒன்று. பல சிரமங்களுக்கு இடையே எப்படியோ தட்டுத்தடுமாறி இயங்கிக்கொண்டிருந்தது.
ஒருகட்டத்தில், அந்தப் பதிப்பாளர், ஆசிரியரின் (இருவரும் ஒருவரே) பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. ஆகவே, இந்தப் பத்திரிகையை நிறுத்தியே தீரவேண்டும் என்ற சூழ்நிலை.
அந்த இதழில், அவர் தன்னுடைய நிலைமையை விளக்கி ஒரு தலையங்கம் எழுதினார். ‘அநேகமாக இனிமேல் இந்த இதழ் வெளிவராது என நினைக்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டார்.
ஓரிரு நாள்கள் கழித்து, அவருக்கு ஒரு தபால் வந்தது. அதற்குள் ஒரு ஜோடி தங்க வளையல்கள் இருந்தன.
ஆனால், அதை அனுப்பியது யார்? அவருடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ‘இந்த வளையல்களை விற்று இதழைத் தொடர்ந்து நடத்துங்கள்’ என்று ஒரு கடிதம்மட்டும் இருந்தது.
நெகிழ்ந்துபோனார் அந்த ஆசிரியர். ’முகம் தெரியாத ஒரு சகோதரி எனக்கு அணிவித்த கங்கணமாக இதைக் கருதுகிறேன்’ என்று சொன்ன அவர், தன்னுடைய தனிப்பட்ட சிரமங்களைப் பொருட்படுத்தாமல் அந்த இதழைத் தொடர்ந்து நடத்தினார்.
யார் அந்த ஆசிரியர்? எந்தப் பத்திரிகை அது?
விடை:
அந்த ஆசிரியர், நா. பார்த்தசாரதி
அந்தப் பத்திரிகை, தீபம்
3
நெருங்கிய நண்பர்கள் இருவர். சேர்ந்து சிறுவர் நூல் ஒன்றை வெளியிட்டார்கள். பெயர் ‘அல்வாத் துண்டு’. விலை நாலு அணா.
சிரிக்காதீர்கள், நிஜமாகவே நாலணாதான் விலை. ஆகவே, குழந்தைகள் அதை வாங்கிக் குவித்துவிடுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அச்சிட்டுப் பல நாளாகியும், அந்தப் புத்தகம் விற்கவில்லை. மூட்டை மூட்டையாக அவர்களிடமே கிடந்தது.
அவர்களில் ஒருவர் யோசித்தார், ஏதாவது தந்திரம் செய்துதான் இந்தப் புத்தகங்களை விற்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டார் அவர்.
சிறிது நேரத்துக்குப்பிறகு, அவருக்கு ஒரு நல்ல யோசனை சிக்கியது. மிச்சமிருந்த புத்தகங்களை மூட்டை கட்டிக்கொண்டார். பக்கத்திலிருந்த ஒரு பாழுங்கிணறை நெருங்கி, எல்லாவற்றையும் உள்ளே தூக்கிப் போட்டுவிட்டார்.
மறுநாள், ஒரு பத்திரிகையில் விளம்பரம் வந்தது, ‘அல்வாத் துண்டு புத்தகம் அமோக விற்பனை. முதல் பதிப்பு முழுவதும் தீர்ந்துவிட்டது. இரண்டாவது பதிப்பு வெளியாகிறது. இதுவும் விற்றுத் தீருமுன் உடனே வாங்கிவிடுங்கள்.’
அப்புறமென்ன? அந்த ‘இரண்டாவது’ பதிப்பு அல்வாத் துண்டு (நிஜமாகவே) அபாரமாக விற்பனை. நண்பர்கள் இருவரும் கிணற்றில் போட்ட லாபத்தை மீட்டுவிட்டார்கள்.
யார் அந்த நண்பர்கள்?
விடை:
கிணற்றில் புத்தகத்தை வீசியவர்: எழுத்தாளர் தமிழ்வாணன்
அவருடைய நண்பர்: ‘வானதி பதிப்பகம்’ திருநாவுக்கரசு
4
சென்னையில் உள்ள ஒரு கல்லூரி. அங்கே ‘சரித்திர நாவல்’ என்ற பெயரில் பேச ஒரு பேராசிரியர் வந்திருந்தார்.
அப்போது ஒரு மாணவன் எழுந்து நின்றான், ‘சரித்திரத்தைப் படித்து என்ன புண்ணியம்? இன்றைய பிரச்னைகளைப் பேசுங்கள்’ என்றான் வீம்பாக.
பேராசிரியர் சற்று தடுமாறினார். பின்னர், ‘தம்பி, நீ சரித்திர நாவல் வேண்டாம் என்கிறாயா? அல்லது, சரித்திரமே வேண்டாம் என்கிறாயா?’ என்று கேட்டார்.
’ரெண்டுமே தேவையில்லை’ என்றான் அந்த இளைஞன்.
பேராசிரியர் பொறுமையாகக் கேட்டார், ‘தம்பி, உன் பெயர் என்ன?’
’என். ஏ. ஜி. சம்பத்.’
‘ஜி என்பது உன் தந்தை பெயர் அல்லவா?’
‘ஆமாம், அவர் பெயர் கோவிந்தராஜுலு’ என்றான் அவன்.
‘கோவிந்தராஜுலு என்பதால், அவர் தெலுங்கர் என்று புரிகிறது. என். ஏ. என்றால் என்ன?’
‘என் என்பது நாலூர், ஏ என்பது ஆவுல, குடும்பப் பெயர்.’
‘தம்பி, கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட இந்த இந்தியச் சமூகத்தில் நீ ஒரு சின்னக் கடுகு, இதைப் புரிந்துகொள்வதற்கே தன் பெயர், தன் தந்தையின் பெயர், குடும்பப் பெயர், ஊரின் பெயர் என்று ஒரு குட்டி சரித்திரம் தேவைப்படும்போது, இந்த அகண்ட பாரதத்துக்கு, அதன் அங்கமான தமிழ்நாட்டுக்கு வரலாறு தேவையில்லையா?’ என்று அவர் கேட்க, அவையினர் கை தட்டினார்கள், அந்த இளைஞன் தலை கவிழ்ந்து உட்கார்ந்தான்.
யார் அந்தப் பேராசிரியர்?
விடை:
டாக்டர் பூவண்ணன்
5
அந்நாள்களில் மிகப் பிரபலமான மேடை நாடகப் பாட்டு ஒன்று:
பாங்கி கலாவதி கேளடி, என்
பர்த்தாவைக் காணோம் இந்நாளடி!ஏங்கி ஏங்கி என் மனம் வாடுது,
எங்கு சென்றார் என்று தேடுது,
என் கண் அவரையே நாடுது!
யார் அந்தக் கலாவதி? அவரைப் பார்த்துப் பாடும் இந்தப் பெண் யார்? அவளுடைய பர்த்தா யார்? இந்தப் பாட்டை எழுதியது யார்? எங்கே?
விடை:
லவகுச நாடகம்
எழுதியவர்: தூ. தா. சங்கரதாஸ் சுவாமிகள்
இதைப் பாடுகிற கதாபாத்திரம்: சீதை
பாடப்பட்டவர்: சீதையின் கணவர் ராமன்
கலாவதி: சீதையின் தோழி
6
இந்தியச் சுதந்தரப் போரின்போது நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவம்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக இரு நண்பர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அங்கே இருவரும் பல துன்பங்களுக்கு ஆளானார்கள்.
சில மாதங்களுக்குப்பிறகு, அவர்களில் ஒருவர்மட்டும் ஜாமீனில் வெளியே வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
ஏன்?
‘இதே குற்றத்துக்காகக் கைதான என்னுடைய நண்பரும் என்னைப்போலவே இந்தச் சிறையில் நிறைய துன்பப்படுகிறார், நான்மட்டும் எப்படி வெளியே செல்லமுடியும்?’ என்றார் அவர், ‘முடிந்தால் அவருக்கும் ஜாமின் கொடுங்கள், இல்லாவிட்டால் நானும் அவரைப்போலவே சிறைவாசத்தை முழுமையாக அனுபவிப்பேன்.’
யார் அந்த நண்பர்கள்?
விடை:
ஜாமீன் மறுத்தவர்: வ. உ. சிதம்பரனார்
அவருடைய தோழர்: சுப்பிரமணிய சிவா
7
’கிவாஜ’ என்று அழைக்கப்படும் கி. வா. ஜகன்னாதன் பெரிய தமிழ் அறிஞர், சிறந்த பேச்சாளர், ஏராளமான நூல்களின் ஆசிரியர், தமிழ்த் தாத்தா உ. வே. சா. அவர்களின் சீடர், ‘கலைமகள்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர், சிலேடையில் பிளந்துகட்டக்கூடியவர்… இப்படி இன்னும் நிறைய சொல்லலாம்.
பலருக்குத் தெரியாத விஷயம், அவர் திரைப்படத்துக்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அது எந்தப் படம்? எந்தப் பாடல்? யார் இசை?
விடை:
படம்: நம்ம வீட்டு தெய்வம்
பாடல்: உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலைக் கேட்க: http://www.raaga.com/player4/?id=154732&mode=100&rand=0.28797383420169353
***
என். சொக்கன் …
22 12 2012
ப்ரொக்ராம் மொழி
Posted January 7, 2013
on:- In: ட்விட்டுரை | Games | Humor | IT
- 21 Comments
வழக்கம்போல் இன்று(ம்) ட்விட்டரில் ஒரு விளையாட்டு. நாம் நன்கு அறிந்த பழமொழிகளை சாஃப்ட்வேர் ப்ரொக்ராம்களைப்போல் எழுதினால் எப்படி இருக்கும் என்று முயன்றோம். இதில் பங்கேற்ற எங்களுக்கு செம ஜாலியாகவும், மற்றவர்களுக்கு செம கடுப்பாகவும் இருந்தது 🙂
#ProverbsAsPrograms என்ற tag உடன் நான் எழுதிய ஒரு டஜன் ட்வீட்களின் தொகுப்பு இங்கே, சும்மா படித்துப் பாருங்கள், Syntax Error எல்லாம் சுட்டிக்காட்டி Compilation Error சொல்லக்கூடாது 🙂
என்னோடு இந்த விளையாட்டில் பங்கேற்ற நண்பர்கள் அவர்களுடைய ப்ரொக்ராம்(?)களையும் இங்கே பின்னூட்டத்தில் தந்தால், வருங்காலச் சந்ததிக்குப் பயன்படும். நன்றி!
***
என். சொக்கன் …
07 01 2013
if நெஞ்சம்.isகுற்றம்Exists() {
குறுகுறுப்பு();
}
*
if மடி.isEmpty() {
பயம்.stop();
}
*
{
உப்பிட்டவர்.நினை();
}
while (true)
*
for each (கரை) {
அக்கரை.color = “பச்சை”;
}
*
If (!(பண்டம்.contains(உப்பு))) {
Throw as குப்பை;
}
*
பெருவெள்ளம் += சிறுதுளி;
*
public class தாய் {int பாய்ச்சல்;
பாய்ச்சல் = 8;
}
public class குட்டி extends தாய் {
பாய்ச்சல் = 16;
}
*
public class நல்லமாடு {
int சூடு;
சூடு = 1;
}
public class நல்லமனுஷன் {
int சொல்;
சொல் = 1;
}
*
தளும்புதல் = IIf(குடம்.isFull(), 0, 1);*
switch (event) {case பந்தி:
Position += 1;
break;
case படை:
Position -=1;
break;
}
*
select *from ஊர்கள்
where கோயில்கள் > 0
*
if குடம்.உடைத்தவர்=மாமியார் {
குடம்.material=மண்;
}
else if குடம்.உடைத்தவர்=மருமகள் {
குடம்.material=பொன்;
}