மனம் போன போக்கில்

தமிழ்ப் புதிர்

Posted on: January 9, 2013

நண்பர் நம்பிராஜன் நடத்தும் #365TamilQuiz இணையத் தளத்துக்காக(http://365tamilquiz.posterous.com/)ச் சமீபத்தில் ஏழு புதிர்க் கேள்விகளைத் தயார் செய்தேன், Backupக்கான, அந்தக் கேள்விகளும் பதில்களும் இங்கே:

1

சங்க இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற பெருநூல்களை வாசிப்பது ஒரு சுகம் என்றால், அதிகம் எழுதாத கவிஞர்களின் தனிப் பாடல்களில் வேறுவிதமான வாசிப்பு அனுபவம் கிடைக்கும். காளமேகம், ஔவையார் போன்றோர் அதிலும் சூப்பர் ஹிட் என்பது வேறு கதை.

இங்கே தரப்பட்டிருக்கும் வர்ணனை, ஒரு தனிப்பாடலில் இருந்து எடுக்கப்பட்டது:

அன்னமும் மஞ்ஞையும் போல் இரு பெண் கொண்ட ஆண் பிள்ளை நீ!

இந்த வரியை எழுதியவர் யார்? எந்தக் கடவுளைப்பற்றியது? குறிப்பாக, எந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடியது?

விடை:

பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் எழுதிய வரி இது, திருச்செந்தூர் முருகனைப் பாடியது

2

நல்ல பத்திரிகை ஒன்று. பல சிரமங்களுக்கு இடையே எப்படியோ தட்டுத்தடுமாறி இயங்கிக்கொண்டிருந்தது.

ஒருகட்டத்தில், அந்தப் பதிப்பாளர், ஆசிரியரின் (இருவரும் ஒருவரே) பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. ஆகவே, இந்தப் பத்திரிகையை நிறுத்தியே தீரவேண்டும் என்ற சூழ்நிலை.

அந்த இதழில், அவர் தன்னுடைய நிலைமையை விளக்கி ஒரு தலையங்கம் எழுதினார். ‘அநேகமாக இனிமேல் இந்த இதழ் வெளிவராது என நினைக்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டார்.

ஓரிரு நாள்கள் கழித்து, அவருக்கு ஒரு தபால் வந்தது. அதற்குள் ஒரு ஜோடி தங்க வளையல்கள் இருந்தன.

ஆனால், அதை அனுப்பியது யார்? அவருடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ‘இந்த வளையல்களை விற்று இதழைத் தொடர்ந்து நடத்துங்கள்’ என்று ஒரு கடிதம்மட்டும் இருந்தது.

நெகிழ்ந்துபோனார் அந்த ஆசிரியர். ’முகம் தெரியாத ஒரு சகோதரி எனக்கு அணிவித்த கங்கணமாக இதைக் கருதுகிறேன்’ என்று சொன்ன அவர், தன்னுடைய தனிப்பட்ட சிரமங்களைப் பொருட்படுத்தாமல் அந்த இதழைத் தொடர்ந்து நடத்தினார்.

யார் அந்த ஆசிரியர்? எந்தப் பத்திரிகை அது?

விடை:

அந்த ஆசிரியர், நா. பார்த்தசாரதி

அந்தப் பத்திரிகை, தீபம்

3

நெருங்கிய நண்பர்கள் இருவர். சேர்ந்து சிறுவர் நூல் ஒன்றை வெளியிட்டார்கள். பெயர் ‘அல்வாத் துண்டு’. விலை நாலு அணா.

சிரிக்காதீர்கள், நிஜமாகவே நாலணாதான் விலை. ஆகவே, குழந்தைகள் அதை வாங்கிக் குவித்துவிடுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், அச்சிட்டுப் பல நாளாகியும், அந்தப் புத்தகம் விற்கவில்லை. மூட்டை மூட்டையாக அவர்களிடமே கிடந்தது.

அவர்களில் ஒருவர் யோசித்தார், ஏதாவது தந்திரம் செய்துதான் இந்தப் புத்தகங்களை விற்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டார் அவர்.

சிறிது நேரத்துக்குப்பிறகு, அவருக்கு ஒரு நல்ல யோசனை சிக்கியது. மிச்சமிருந்த புத்தகங்களை மூட்டை கட்டிக்கொண்டார். பக்கத்திலிருந்த ஒரு பாழுங்கிணறை நெருங்கி, எல்லாவற்றையும் உள்ளே தூக்கிப் போட்டுவிட்டார்.

மறுநாள், ஒரு பத்திரிகையில் விளம்பரம் வந்தது, ‘அல்வாத் துண்டு புத்தகம் அமோக விற்பனை. முதல் பதிப்பு முழுவதும் தீர்ந்துவிட்டது. இரண்டாவது பதிப்பு வெளியாகிறது. இதுவும் விற்றுத் தீருமுன் உடனே வாங்கிவிடுங்கள்.’

அப்புறமென்ன? அந்த ‘இரண்டாவது’ பதிப்பு அல்வாத் துண்டு (நிஜமாகவே) அபாரமாக விற்பனை. நண்பர்கள் இருவரும் கிணற்றில் போட்ட லாபத்தை மீட்டுவிட்டார்கள்.

யார் அந்த நண்பர்கள்?

விடை:

கிணற்றில் புத்தகத்தை வீசியவர்: எழுத்தாளர் தமிழ்வாணன்

அவருடைய நண்பர்: ‘வானதி பதிப்பகம்’ திருநாவுக்கரசு

4

சென்னையில் உள்ள ஒரு கல்லூரி. அங்கே ‘சரித்திர நாவல்’ என்ற பெயரில் பேச ஒரு பேராசிரியர் வந்திருந்தார்.

அப்போது ஒரு மாணவன் எழுந்து நின்றான், ‘சரித்திரத்தைப் படித்து என்ன புண்ணியம்? இன்றைய பிரச்னைகளைப் பேசுங்கள்’ என்றான் வீம்பாக.

பேராசிரியர் சற்று தடுமாறினார். பின்னர், ‘தம்பி, நீ சரித்திர நாவல் வேண்டாம் என்கிறாயா? அல்லது, சரித்திரமே வேண்டாம் என்கிறாயா?’ என்று கேட்டார்.

’ரெண்டுமே தேவையில்லை’ என்றான் அந்த இளைஞன்.

பேராசிரியர் பொறுமையாகக் கேட்டார், ‘தம்பி, உன் பெயர் என்ன?’

’என். ஏ. ஜி. சம்பத்.’

‘ஜி என்பது உன் தந்தை பெயர் அல்லவா?’

‘ஆமாம், அவர் பெயர் கோவிந்தராஜுலு’ என்றான் அவன்.

‘கோவிந்தராஜுலு என்பதால், அவர் தெலுங்கர் என்று புரிகிறது. என். ஏ. என்றால் என்ன?’

‘என் என்பது நாலூர், ஏ என்பது ஆவுல, குடும்பப் பெயர்.’

‘தம்பி, கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட இந்த இந்தியச் சமூகத்தில் நீ ஒரு சின்னக் கடுகு, இதைப் புரிந்துகொள்வதற்கே தன் பெயர், தன் தந்தையின் பெயர், குடும்பப் பெயர், ஊரின் பெயர் என்று ஒரு குட்டி சரித்திரம் தேவைப்படும்போது, இந்த அகண்ட பாரதத்துக்கு, அதன் அங்கமான தமிழ்நாட்டுக்கு வரலாறு தேவையில்லையா?’ என்று அவர் கேட்க, அவையினர் கை தட்டினார்கள், அந்த இளைஞன் தலை கவிழ்ந்து உட்கார்ந்தான்.

யார் அந்தப் பேராசிரியர்?

விடை:

டாக்டர் பூவண்ணன்

5

அந்நாள்களில் மிகப் பிரபலமான மேடை நாடகப் பாட்டு ஒன்று:

பாங்கி கலாவதி கேளடி, என்
பர்த்தாவைக் காணோம் இந்நாளடி!

ஏங்கி ஏங்கி என் மனம் வாடுது,
எங்கு சென்றார் என்று தேடுது,
என் கண் அவரையே நாடுது!

யார் அந்தக் கலாவதி? அவரைப் பார்த்துப் பாடும் இந்தப் பெண் யார்? அவளுடைய பர்த்தா யார்? இந்தப் பாட்டை எழுதியது யார்? எங்கே?

விடை:

லவகுச நாடகம்
எழுதியவர்: தூ. தா. சங்கரதாஸ் சுவாமிகள்
இதைப் பாடுகிற கதாபாத்திரம்: சீதை
பாடப்பட்டவர்: சீதையின் கணவர் ராமன்
கலாவதி: சீதையின் தோழி

6

இந்தியச் சுதந்தரப் போரின்போது நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவம்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக இரு நண்பர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அங்கே இருவரும் பல துன்பங்களுக்கு ஆளானார்கள்.

சில மாதங்களுக்குப்பிறகு, அவர்களில் ஒருவர்மட்டும் ஜாமீனில் வெளியே வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

ஏன்?

‘இதே குற்றத்துக்காகக் கைதான என்னுடைய நண்பரும் என்னைப்போலவே இந்தச் சிறையில் நிறைய துன்பப்படுகிறார், நான்மட்டும் எப்படி வெளியே செல்லமுடியும்?’ என்றார் அவர், ‘முடிந்தால் அவருக்கும் ஜாமின் கொடுங்கள், இல்லாவிட்டால் நானும் அவரைப்போலவே சிறைவாசத்தை முழுமையாக அனுபவிப்பேன்.’

யார் அந்த நண்பர்கள்?

விடை:

ஜாமீன் மறுத்தவர்: வ. உ. சிதம்பரனார்
அவருடைய தோழர்: சுப்பிரமணிய சிவா

7

’கிவாஜ’ என்று அழைக்கப்படும் கி. வா. ஜகன்னாதன் பெரிய தமிழ் அறிஞர், சிறந்த பேச்சாளர், ஏராளமான நூல்களின் ஆசிரியர், தமிழ்த் தாத்தா உ. வே. சா. அவர்களின் சீடர், ‘கலைமகள்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர், சிலேடையில் பிளந்துகட்டக்கூடியவர்… இப்படி இன்னும் நிறைய சொல்லலாம்.

பலருக்குத் தெரியாத விஷயம், அவர் திரைப்படத்துக்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அது எந்தப் படம்? எந்தப் பாடல்? யார் இசை?

விடை:

படம்: நம்ம வீட்டு தெய்வம்
பாடல்: உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலைக் கேட்க: http://www.raaga.com/player4/?id=154732&mode=100&rand=0.28797383420169353

***

என். சொக்கன் …
22 12 2012

3 Responses to "தமிழ்ப் புதிர்"

பல புதிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. விடைகளை அடுத்த பதிவில் போட்டிருக்கலாமோ என்று தோன்றியது.

பாராட்டுக்கள்!

புதிர் பழையது / ஏற்கெனவே வெளியானதுதானே என அப்படியே போட்டுவிட்டேன் 🙂

[…] தமிழ்ப் புதிர். […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,068 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2013
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
%d bloggers like this: