அ & ஔ
Posted by: என். சொக்கன் on: January 29, 2013
- In: Announcements | Kids | Magazines | Media | Poetry | Poster | Serial | Tamil | ViLambaram
- 1 Comment
’பசிக்கிறது’ என்றார் ஔவையார்.
’சற்று நேரம் பொறுத்துக்கொள்ளுங்கள் தாயே, சமையல் தயாராகிக்கொண்டிருக்கிறது’ என்றார் ஒருவர். ‘அருமையான கீரைக் கூட்டு!’
’வெறும் கீரைதானா? அரிசிச் சோறு இல்லையா?’
‘ஊர் ஊராகச் சுற்றுகிறவர்கள் நாங்கள், அரிசிக்கு எங்கே போவோம்?’ அவர்கள் பரிதாபத்துடன் கேட்டார்கள், ‘ஏதோ, சாலையோரமாகக் கிடைத்த கீரையைப் பிய்த்துச் சமைத்திருக்கிறோம்.’
ஔவையார் புன்னகைத்தார். ‘இந்த நாட்டு அரசன் யார் தெரியுமா? நாஞ்சில் வள்ளுவன்! அவன் மிகவும் நல்லவன், புலவர்களின் தகுதி அறிந்தவன், நாங்கள் அவனிடம் எதைக் கேட்டாலும் கிடைக்கும்’ என்றார். ‘கொஞ்சம் பொறுங்கள், நான் அரசனைச் சந்தித்து அரிசி வாங்கி வருகிறேன்.’
நேராக நாஞ்சில் வள்ளுவனைச் சந்திக்கச் சென்றார் ஔவையார். தங்களுடைய நிலைமையைச் சொன்னார், ‘அரசே, எங்களுக்குக் கொஞ்சம் அரிசி வேண்டும், தருவீர்களா?’ என்று கேட்டார்.
‘கண்டிப்பாகத் தருகிறேன் புலவரே’ என்றான் நாஞ்சில் வள்ளுவன். அவன் கை தட்டியதும், அரிசி வந்தது.
எவ்வளவு அரிசி? ஒரு கைப்பிடியா? ஒரு கிலோவா? ஒரு மூட்டையா?
ம்ஹூம், இல்லை. மலை போன்ற ஒரு பெரிய யானை. அதன் முதுகு நிறைய அரிசி, அரிசி, அரிசியோ அரிசி. அந்த யானையையும் அதன்மீது இருக்கும் அரிசி மொத்தத்தையும் ஔவைக்குக் கொடுத்துவிட்டான் நாஞ்சில் வள்ளுவன். ‘உங்களுடைய புலமைக்கு, ஏதோ என்னால் முடிந்த சிறிய பரிசு!’
ஔவையார் சிலிர்த்துப்போனார், அவனைத் தாராளமாகப் புகழ்ந்து பாடினார். புறநானூறு தொகுப்பில் இடம்பெற்றுள்ள அந்தப் பாடலின் ஒரு பகுதி:
… யாம் சில
அரிசி வேண்டினேமாக, தான் பிற
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி
இரும் கடறு வளைஇய குன்றத்து அன்னது, ஓர்
பெருங்களிறு நல்கியோனே …
(’கோகுலம்’ சிறுவர் பத்திரிகையின் பிப்ரவரி இதழில் நான் எழுதத் தொடங்கியிருக்கும் ‘தின்’சைக்ளோபீடியா தொடரிலிருந்து ஒரு பகுதி. மற்றவை அச்சுத் திரையில் காண்க.)
1 | rathnavelnatarajan
January 30, 2013 at 6:38 am
அருமை.
நன்றி.