பாஷைகள், மொழிகள்
Posted May 1, 2013
on:- In: இலக்கணம் | ஓசிப் பதிவு | Grammar | Poetry | Puzzle | Tamil
- 6 Comments
’தங்க மீன்கள்’ படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற அற்புதமான பாட்டு. கேட்டிருப்பீர்கள். இல்லாவிட்டால், உடனே கேட்டுவிடுங்கள்.
இந்தப் பாடல்குறித்து இன்று ட்விட்டரில் சிறு விளையாட்டு. காரணம், அதில் வரும் ஒரு வரி:
இரு நெஞ்சும் இணைந்து பேசிடும் உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
இந்த வரியைக் குறிப்பிட்ட நண்பர் அரவிந்தன் இப்படி எழுதினார்:
இதில் ’பாஷைகள்’ என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதில் தமிழில் ”மொழிகள்” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் என்ன கெட்டுப்போயிருக்கும்?
திரைப் பாடல்களின் தூய தமிழ்மட்டும்தான் எழுதப்படவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் முடிந்தவரை அந்நியச் சொற்களைத் தவிர்ககவேண்டும் என்பதை ஏற்கிறேன்.
ஆகவே, ‘பாஷைகள்’க்குப் பதில் அங்கே ‘மொழிகள்’ வருமா என்று கொஞ்சம் யோசித்தேன்.
பொதுவாக பாஷைகள் என்பது பா . ஷை . கள் என்று அசை பிரியும், அதில் ‘ஷை’ என்பது ஐகாரக் குறுக்கமாகி பா . ஷைகள் என்று மாறும். இதற்கான வாய்பாடு ‘கூ விளம்’.
மொழிகள் என்பது மொழி . கள் என்று அசை பிரியும். இதற்கான வாய்பாடு புளிமா.
ஆக, இந்தப் படத்தில் வரும் மெட்டு, ‘கூ விளம்’, அதற்கு ‘பாஷைகள்’ என்று எழுதியிருக்கிறார் பாடலாசிரியர். அங்கே ‘மொழிகள்’ என்ற சொல், அதாவது ‘புளிமா’ வாய்பாட்டில் வரும் சொல் இயல்பாகப் பொருந்தாது.
இப்போது, இசையமைப்பாளர் தன்னுடைய மெட்டைக் கொஞ்சம் மாற்றி ’மொழிகள்’ என்ற வார்த்தையைப் பொருத்தலாம். ஒருவேளை அவர் அப்படி மாற்ற விரும்பாவிட்டால், பாடலாசிரியர் ‘மொழிகள்’ என்று எழுத முடியாது. அது முறையல்ல.
ஆனால், எப்படியாவது ‘பாஷைகள்’ஐத் தூக்கிவிட்டு அதைத் தமிழாக்கவேண்டும், என்ன செய்யலாம்?
’பாஷைகள்’க்கு இணையாக, அதே பொருள் கொண்ட, அதே (கூவிளம்) மீட்டரில் பொருந்தக்கூடிய வேறு தமிழ்ச் சொல் உள்ளதா? யோசித்தேன், எனக்கு எதுவும் அகப்படவில்லை. (Means, என் வார்த்தை வளம் போதவில்லை, நன்கு பயிற்சி பெற்ற ஒரு மரபுக் கவிஞர் / திரைப் பாடலாசிரியர் சட்டென்று இதே பொருளில் கூவிளம் மீட்டரில் பொருந்தும் ஒரு சொல்லைக் கண்டுகொண்டிருப்பார்)
அடுத்த வழி, அந்தச் சொல்லுக்குப் பக்கத்தில் உள்ள வேறு சொல்லையோ, அல்லது மொத்த வாக்கியத்தையோ மாற்றி அமைக்கவேண்டும். இப்படி:
இரு நெஞ்சும் இணைந்து பேசிடும் உலகில்
வேறெதும் மொழிகள் தேவையில்லை
இங்கே நான் ‘பாஷைகள்’க்குப் பதில் ‘வேறெதும்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். இதுவும் ‘கூவிளம்’ வாய்பாட்டில் அமைகிறது.
அடுத்து, ‘எதுவும்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘மொழிகள்’ என்ற சொல்லைப் புகுத்திவிட்டேன். இவை இரண்டும் ‘புளிமா’ என்பதால் பிரச்னையே இல்லை.
Of Course, இதுதான் மிகச் சரியான வாக்கியம் என்பதல்ல. நீங்கள் இதை வேறுவிதமாக இன்னும் சிறப்பாகவும் எழுதிப் பார்க்கலாம், ஒரு மரபுக்கவிதை சார்ந்த ஜாலியான விளையாட்டாக / பயிற்சியாக இதைச் செய்து பார்த்தேன், அவ்வளவே!
***
என். சொக்கன் …
01 05 2013
6 Responses to "பாஷைகள், மொழிகள்"

//திரைப் பாடல்களின் தூய தமிழ் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை//
உண்மையே!
//ஆனால் முடிந்தவரை அந்நியச் சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை ஏற்கிறேன்//
நன்றி
—–
நாம, கூவிளத்துக்கு வருவோம்..
இரு நெஞ்சும் இணைந்தே பேசிடும் உலகில்
டிக்ஷ்னரி எதுவும் தேவையில்லை
டிக்ஷ் – னரி = நேர் நிரை
= இதுவும் கூவிளம் தான்:)))
ஆனா, ஆங்கிலச் சொல்லு வந்தா, மக்கள் “ஸ்பஷ்டமாக்” கண்டு புடிச்சிருவாக:)
வடமொழிச் சொல்லு, ரொம்ப நாளா ஊறிக் கிடப்பதால்.. “வித்தியாசம்” தெரிவதில்லை; தமிழ் போலவே தெரிகிறது:)
அதனால் ஆங்கிலச் சொல்லுக்கு குறுகுறுக்கும் மனசு, வடசொல்லுக்குக் குறுகுறுப்பதில்லை
Thatz the practical but unfortunate truth:(


எல்லாத் திரைப் பாடல்களிலும் “தூய தமிழ்” மட்டும் தான் -ன்னு துவங்கினா, நெறைய “வெட்டு” வாங்க வேண்டி இருக்கும்:)
ஆனால், மிகச் சிறப்பான பாடல்கள்/ இசை -ன்னா, அதில் மட்டுமாச்சும் நல்ல தமிழ் வந்திருக்கலாமே? -ன்னு ஒரு ஏக்கம் எழுவது நல்லது தான்;
இந்த “ஏக்கம்” -> “ஆக்கம்” ஆகணும்;
இதற்கு ஒரு இயக்கம் பரவினால், கவிஞர்களும் உணர்ந்து, “முடிந்தவரை” தொற்றிக் கொள்வார்கள்
—–
“கூவிளம்” Metre க்கே மறுபடியும் வாரேன்…
இரு நெஞ்சும் இணைந்தே பேசிடும் உலகில்
சொற்களும் எதுவும் தேவையில்லை
(சொற்-களும் = நேர்-நிரை = கூவிளம் தான்)
Still better,
இரு நெஞ்சும் இணைந்தே பேசிடும் உலகில்
வாய்மொழி எதுவும் தேவையில்லை
(வாய்-மொழி = நேர்-நிரை = இதுவும் கூவிளம் தான்)
“பா-ஷைகள்” என்பதற்குப் பதிலா
“வாய்-மொழி” -ன்னு கூவிளம்; அதே பொருள், அதே “மீட்டர்”:) Tata, bye bye:)


Super post 🙂
amas32


அருமை சார்.நீங்கள் சொன்னது போல தமிழ் வார்த்தை பொருந்துமாயின் அதை போடுவதற்கு என்ன தயக்கமோ புரியவில்லை.அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடலில் கூட அவள் அப்படி ஒன்றும் கலரில்லை என்று வரும்.இது பற்றி ஒரு முறை நா.முத்துக்குமார் அவர்களிடம் அவள் அப்படி ஒன்றும் நிறமில்லை என்று ஏன் எழுதியிருக்க கூடாது என்ற போது அது செட் ஆகலை என்றார்.அது எப்படி செட் ஆகாது என்று புரியவில்லை,அவரிடம் வாதிடவும் விரும்பவில்லை. நன்றி.


நீங்கள் சொன்னது போல தமிழ் வார்த்தை பொருந்துமாயின் அதை போடுவதற்கு என்ன தயக்கமோ புரியவில்லை.அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடலில் கூட அவள் அப்படி ஒன்றும் கலரில்லை என்று வரும்.இது பற்றி ஒரு முறை நா.முத்துக்குமார் அவர்களிடம் அவள் அப்படி ஒன்றும் நிறமில்லை என்று ஏன் எழுதியிருக்க கூடாது என்ற போது அது செட் ஆகலை என்றார்.அது எப்படி செட் ஆகாது என்று புரியவில்லை,அவரிடம் வாதிடவும் விரும்பவில்லை. நன்றி.

1 | balaraman
May 1, 2013 at 11:39 pm
நல்ல பதிவு. நன்றி.
அசை வாய்ப்பாடையும், பா (குறைந்தது ‘வெண்பா’ மட்டுமாவது) இலக்கணத்தையும் எளிதா விளக்குற பதிவு ஏதாவது இருக்கா?