மனம் போன போக்கில்

Archive for October 2013

‘தினம் ஒரு பா’ என்ற வலைப்பதிவில் நான் எழுதிய கட்டுரைகள் இப்போது அதே பெயரில் நூலாக வெளியாகியுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 365 பாடல்கள் + எளிய உரை கொண்ட இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருப்போர் வானதி பதிப்பகம், 604 பக்கங்கள், விலை ரூ 300. ஆன்லைனில் வாங்குவதற்கு இரு இணைப்புகள்: http://goo.gl/Nyui66 அல்லது https://www.nhm.in/shop/100-00-0002-183-7.html.

365PaaWrapper

இந்நூலுக்கு ஓர் அறிமுகமாக, நான் எழுதிய முன்னுரை இங்கே:

முன்னுரை

விளையாட்டாக ஆரம்பித்த விஷயம் இது.

கல்லூரி நாள்களில் நானொரு பாக்கெட் நாவல் பிரியனாக இருந்தேன். குறிப்பாக மர்மக் கதைகள் என்றால் அத்துணை இஷ்டம்!

கோயம்பத்தூரில் தெருவுக்கு நாலு பழைய புத்தகக் கடைகள் உண்டு. அவற்றில் இந்த மர்ம நாவல்கள் காசுக்கு எட்டு விகிதத்தில் மிக மலிவாகக் கிடைக்கும்.

அப்படி ஒரு கடையில், நான் இதுவரை வாசித்திராத அதிநவீன கொலைக்கதைகளைத் தேடிக்கொண்டிருந்த நேரம், மிகப் பழைய புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது.

அந்தப் புத்தகத்துக்கு அட்டைகூட இல்லை, முதல் பக்கமும் பாதி கிழிந்திருந்தது. உள்ளே புரட்டியபோது, ‘குறுந்தொகை : புலியூர் கேசிகன் உரை’ என்று தெரிந்துகொண்டேன்.

ஏனோ, அந்தப் புத்தகத்தைப் பார்த்தவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. காரணம் தெரியவில்லை.

அதற்குமுன் நான் சங்க இலக்கிய நூல்கள் எவற்றையும் வாசித்தது கிடையாது, பள்ளியில் தமிழ்ப் பாடத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் எதேச்சையாகக் கண்ணில் பட்டிருந்தால்தான் உண்டு, மற்றபடி அதில் ஆர்வமோ, ஞானமோ கிடையாது.

ஆனால், அந்தக் கிழிந்த புத்தகம் என்னை மிகவும் ஈர்த்தது. ஒருவேளை, நான் அதைப் புரட்டியபோது கண்ணில் பட்ட பாடல்கள் அனைத்தும் சிறியதாக நான்கைந்து வரிகளுக்குள் நிறைவடைந்துவிடுபவையாக இருந்ததால் ‘எப்படியாவது படிச்சுடலாம்’ என்று நினைத்தேனோ என்னவோ!

கடைக்காரரிடம் கேட்டேன், ‘இது என்ன விலைங்க?’

பழைய புத்தகக் கடையில் எஞ்சினியரிங் புத்தகங்களுக்கும் மாத நாவல்களுக்கும்தான் மரியாதை, அங்கே பழந்தமிழ் இலக்கியத்தை யார் சீண்டுவார்கள்? அலட்சியமாக, ‘பத்து ரூவா குடு!’ என்றார் அவர்.

அந்தப் ‘பத்து ரூவா’ புத்தகம் இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. என்னளவில் நான் செய்த மிகச் சிறந்த ‘செலவு’ (அல்லது ‘வரவு’) அதுதான்.

அன்றைக்கு மிக எதேச்சையாகப் படிக்க ஆரம்பித்த அந்தப் புத்தகத்தில், பலாப்பழத்தின் இனிமையையெல்லாம் பிழிந்து ஒரே ஒரு சொட்டில் இறக்கிய தேன்போன்ற குறுந்தொகையின் செறிவில், அதைப் புலியூர் கேசிகன் அருமையாகவும், எளிமையாகவும் விளக்கிய பாங்கில் என்னை மறந்துவிட்டேன், மற்ற சங்க இலக்கியங்களையும், பிற பழந்தமிழ்ப் பாடல்களையும் தேடிப் படிக்க அதுவே தூண்டுதலாக அமைந்தது.

இந்த வாசிப்பில் நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம், தமிழ் என்றைக்கும் இளமையானதுதான், சரியானபடி பதம் பிரித்து, நாம் இழந்துவிட்ட சொற்களையெல்லாம் மீட்டுக் கொண்டுவந்து வாசித்தால் போதும், இன்றைக்கும் அதன் இனிமையில் நாம் சொக்குவது உறுதி!

இணையத்தில் நான் சில பழந்தமிழ்ப் பாடல்களைச் சொல்லி, அவற்றுக்கு எளிய (இன்றைய) தமிழில் விளக்கம் சொன்னபோது, ‘அட! நல்லாருக்கே!’ என்று பலர் வியந்தார்கள், ‘இதுமாதிரி இன்னும் எழுதுங்க!’ என்றார்கள்.

‘நான் எதுக்குங்க எழுதணும்? அதான் ஏற்கெனவே பல பேர் ஏராளமா எழுதியிருக்காங்களே, அதை வாங்கிப் படிக்கலாமே!’

ம்ஹூம், இவர்கள் குறுந்தொகையோ புறநானூறோ கம்பனோ தேவாரமோ திவ்யப் பிரபந்தமோ நாலடியாரோ வாங்கமாட்டார்கள், ஒருவேளை வாங்கினாலும், படிக்கமாட்டார்கள். பிடிவாதம் அல்ல, பிரமிப்புதான் காரணம்!

‘இவ்வளவு இருக்கே’ என்கிற அந்த வியப்பை, ‘இவ்ளோதான்’ என்கிற அளவுக்குக் குறைக்கவேண்டுமென்றால், ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டுப் பதம் காட்டவேண்டும், அதனால் ஈர்க்கப்பட்டவர்களில் சிலராவது அந்த நூல்களைத் தேடிச் சென்று வாசிப்பார்கள் என்பது என் நம்பிக்கை.

அதற்காக, பல பழந்தமிழ் நூல்களில் இருந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து, தினம் ஒன்றாக அறிமுகப்படுத்தத் தொடங்கினேன். ‘தினம் ஒரு பா’ என்ற அந்த இணைய தளத்தில் (http://365paa.wordpress.com/) வெளியான பாடல்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

இதில் பக்தி இலக்கியம் உண்டு, காதல் உண்டு, பிரிவு உண்டு, அறிவுரை உண்டு, தத்துவம் உண்டு, இலக்கணம் உண்டு, வேடிக்கை உண்டு, புதிர் உண்டு… எல்லாமே சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டவை, ஆனால் அவை தருகிற உணர்ச்சிகள் அனைத்தும் இன்றைக்கும் பொருந்துகிறவை என்பதை நினைத்து நாம் வியக்கலாம், பெருமைப்படலாம்.

தனிப்பட்டமுறையிலும், இந்தத் ‘தினம் ஒரு பா’ எனக்குத் தந்த கொடைகள் அளவிடமுடியாதவை.

நான் பண்டிதன் அல்லன். ஒரு பழம்பாடலைப் பார்த்தவுடன் அதன் பொருள் புரிந்துவிடாது. தலையைச் சொறிந்துகொண்டு அகராதியைத் தேடி ஓடுகிறவன்தான்.

அதேசமயம், தினம் ஒரு பாடலுக்கு விளக்கம் எழுதுவது என்று தொடங்கியபிறகு, சொற்களைப் பிரிப்பது, புரிந்துகொள்வது, புழக்கத்தில் இல்லாத, ஆனால் எளிய சொற்களை அடையாளம் காண்பது, இப்போது நாம் சகஜமாகப் பயன்படுத்தும் சொற்களோடு அவற்றை ஒப்பிட்டு மகிழ்வது என்று இதுவே ஒரு மிகச் சுவாரஸ்யமான விளையாட்டாகிவிட்டது.

முக்கியமாக, கவி நயம். அதுவரை நான் மேலோட்டமாகமட்டுமே வாசித்திருந்த பல நூல்களை ஆழச் சென்று முழுக்க வாசிக்கும் ஆர்வத்தைப் பெற்றேன், அவற்றின் மேன்மை புரியத் தொடங்கியது.

இந்தப் பலனெல்லாம், இந்நூலை வாசிக்கும் உங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்கிற அக்கறையுடன் இதனைத் தொகுத்திருக்கிறேன். இறைவன் அருள் துணை நிற்கட்டும்.

***

என். சொக்கன் …

28 10 2013

முன்குறிப்பு: இந்த வாரம் ‘புதிய தலைமுறை’ இதழில் இக்கட்டுரையின் ஓரு பகுதி வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளுக்குமுன்னால் அலுவலக வேலையாகக் கொல்கத்தா சென்றிருந்தேன். அத்துணை தூரம் செல்லும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது என்பதால், மாலை நேரங்களில் கங்கைக் கரை, காளி கோயில், மிஷ்டி தோய், ரசகுல்லா, ராமகிருஷ்ண ஆசிரமம் போன்றவற்றோடு டிராமையும் அவசியம் தரிசித்துத் திரும்பத் திட்டமிட்டேன்.

அதுவரை டிராம் என்பது எனக்குக் கதைகளில்மட்டுமே அறிமுகம். ஓவியத்தில்கூடப் பார்த்தது கிடையாது. ஆனால் ஒவ்வொரு கதாசிரியரும் அதை விவரிப்பதைப் படித்துப் படித்து அந்த வாகனத்தின்மீது ஒரு காதலே வந்திருந்தது.

இத்தனைக்கும், அது இன்றைய அவசர வாழ்க்கைமுறைக்குக் கொஞ்சமும் பொருந்தாத மெது வாகனம். கொஞ்சம் வேகமாக நடந்தாலே ட்ராமை எட்டிப் பிடித்துவிடலாம். ஆனால், நடக்காமல், சைக்கிள் மிதிக்காமல், இப்படி நிதானமாகப் பயணம் செய்வது ஒரு தனி சுகமாக இருக்கவேண்டுமில்லையா? அதுதான் என்னை அதன்பால் ஈர்த்த கவர்ச்சி!

ஆனால் ஒன்று, கொல்கத்தாவில் ட்ராம்கள் இன்னும் இயங்கிவருகின்றன என்ற செய்தியை என்னால் அதிகம் நம்பக்கூட முடியவில்லை. நான் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் சென்ற பாதையில் ஒரு டிராம்கூடக் கண்ணில் படவில்லை என்பதால் ஒருவேளை நேற்று மாலையோடு டிராம்களை மூடிவிட்டார்களோ என்றுகூட அஞ்சினேன்.

டாக்ஸி டிரைவரிடம் விசாரித்தபோது, ‘ரோட்டை நல்லாப் பாருங்க சார்’ என்றார். ‘அநேகமா எல்லா ரோட்லயும் டிராம் பாதை உண்டு. சிலது இயக்கத்தில் உள்ளது, பலது மூடப்பட்டுவிட்டது’ என்று விளக்கினார்.

அதன்பிறகுதான், கார் ஜன்னல் வழியே கொஞ்சம் குனிந்து நோட்டமிட்டேன். கிட்டத்தட்ட ரயில் பாதை போன்ற டிராம் பாதையைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்படிக் கவனித்தாலொழிய அது இருப்பதே தெரியாத அளவு சர்வ சாதாரணமாகத் தார் ரோட்டில் ஒளிந்திருந்தது. ரயில்வே பாதைபோல கல் குவித்த பிரமாண்டமோ கவன ஈர்ப்போ கிடையாது.

அன்றைக்கு டிராம் பாதைகள்மட்டுமே கண்ணில் பட்டன. டிராம்களைப் பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. மறுநாள் அதற்காக விசாரித்து உள்ளூர் டிராம் நிலையத்துக்குச் சென்றேன்.

என் அதிர்ஷ்டம், அது ஒரு முக்கியமான டிராம் நிலையமாக இருந்தது. ஆகவே, அங்கிருந்துதான் பல டிராம்கள் புறப்பட்டன. வீட்டினுள்ளிருந்து கார் வெளியே வருவதுபோல, ஒரு பிரமாண்டமான தகரக் கதவைத் திறந்துகொண்டு டிராம் ஊர்ந்து வருவதைப் பார்க்க விநோதமாக இருந்தது. ஆசையாக ஏறிக்கொண்டேன்.

நான் எதிர்பார்த்ததுபோலவே, அது மிகவும் மெதுவாகதான் ஊர்ந்து சென்றது. அவ்வப்போது நிறுத்தி எல்லாரையும் ஏற்றிக்கொண்டார்கள். சாலையில் செல்கிற எல்லாரும் எங்களை ஓவர் டேக் செய்து செல்வதுபோல ஓர் எண்ணம் எழுந்தது.

அதனால் என்ன? எனக்குதான் அவசரம் எதுவும் இல்லையே, விலை மலிவான டிக்கெட். வித்தியாசமான, சுகமான பயணம். ஆசையாக அனுபவித்தேன்.

ஆனால் ஒன்று, டிராம்களை நாடுவதெல்லாம் பெரும்பாலும் என்னைப்போன்ற சுற்றுலாப் பயணிகள்தாம். பெங்காலிகள் நடமாடும் மியூசியங்களைப்போல்தான் அவற்றை இயக்கிவருகிறார்கள். ஒரு வரலாற்றுச் சின்னம் என்பதைத் தாண்டி அவர்கள் அதைப் பெரிதும் பொருட்படுத்துவதில்லை.

எனக்கும் ஆஃபீஸுக்கு ஓடும் அவசரம் இருந்திருந்தால் டிராமுக்குப் பதில் ஓர் ஆட்டோ அல்லது பைக்கைத் தேர்ந்தெடுத்திருப்பேன் அல்லவா?

பெங்களூரில் மெட்ரோ ரயில் அறிமுகமான மறுநாள். வேலை மெனக்கெட்டு ஐம்பது ரூபாய் செலவழித்து அங்கே சென்று, பத்து ரூபாய் டிக்கெட்டில் ஒரே ஒரு ஸ்டேஷன்மட்டும் பயணம் செய்து பார்த்தேன். அதிநவீன தொழில்நுட்பத்தில் துடைத்துவைத்த தொண்டைமான் வாளைப்போல பளபளத்தது. வேகம் என்றால் அப்படி ஒரு வேகம்.

ஆனால் எனக்கென்னவோ, அதியமான் வாள் போன்ற அழுக்கு டிராம்கள்தான் இப்போதும் இஷ்டமாக இருக்கின்றன.

***

என். சொக்கன் …
18 09 2013


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,058 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

October 2013
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031