மனம் போன போக்கில்

பந்தாட்டத் திருவிழா

Posted on: June 13, 2014

FIFA உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கியுள்ளதால் ஊரெல்லாம் ’பந்தாட்டத் திருவிழா’ என்கிறார்கள். இந்த நல்வேளையில் ’குற்றாலக் குறவஞ்சி’யில் திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய அந்தப் பிரபலமான ’பந்தாட்டமே திருவிழா’வை வாசிக்க எனக்கு ஆசை.

1

மலர்களைக் கொண்ட பசுமையான கொடி போன்ற அழகை உடைய வசந்தவல்லி பந்து ஆடுகிறாள்!

ஆட்டம் தொடங்கியபின் வெற்றி வெற்றி என்று சத்தமிடுவார்கள். ஆனால் இங்கே, ஆட்டம் தொடங்குமுன்பே வெற்றி முழக்கம். எப்படி?

வசந்தவல்லியின் சிவந்த கைகள், அதில் அழகான வளையல்கள், அவை கலின் கலின் என்று சத்தமிடுகின்றன. அது ‘வெற்றி, வெற்றி’ என்று சத்தமிடுவதுபோல் இருக்கிறது. அதோடு தண்டை, சிலம்பு ஓசையும் சேர்ந்துகொள்கிறது.

அவளுடைய மார்பகங்கள் குழைந்து ஆடுகின்றன. அவற்றுக்கு ஒரே மகிழ்ச்சி. ’எதிரியை ஜெயித்துவிட்டோம்’ என்று ஆனந்தக் கூத்தாடுகின்றன.

மார்பகங்களுக்கு யார் எதிரி?

அவள் கையில் இருக்கும் பந்துதான். அதோடு நடத்திய ’அழகு’ப் போரில் மார்பகங்கள் வென்றுவிட்டன!

2

செந்தாமரை மலரில் அமர்ந்திருக்கும் திருமகளைப் போன்ற வசந்தவல்லி பந்து ஆடுகிறாள்!

வசந்தவல்லி அணிந்திருக்கும் கனமான காதணிகள் மீன் போன்ற அவளுடைய கண்களின்மீது புரண்டு ஆடுகின்றன. மேகம் போன்ற கூந்தலை மொய்த்துக்கொண்டிருந்த வண்டுகள் பயந்து கலைந்தன.

இந்த வண்டுகள் ஓடும்போது, மன்மதனின் வில்லின் இருந்த நாண் அறுந்துவிட்டது. இனி உலகம் என்ன ஆகுமோ!

வசந்தவல்லியின் கூந்தலில் இருந்து வண்டுகள் ஓடினால் மன்மதனின் வில் ஏன் அறுந்துபோகவேண்டும்?

மன்மதனுடைய வில் கரும்பு என்பது எல்லாருக்கும் தெரியும், அதில் செலுத்தப்படுவது மலர் அம்பு என்பதும் தெரியும், அந்த வில்லின் நாண், வண்டுக் கூட்டம்.

இப்போது, இந்த வண்டுகள் ஓடுவதால், அந்த வண்டுகளும் ஓட, மன்மதன் வில் பயனற்றுப்போக, உலகமே காதலின்றித் தவிக்கிறது. இதை எண்ணி அவளுடைய இடை துவண்டுபோகிறது.

3

நன்கு ஆடுகிற தோகை மயிலைப்போல, நகர வீதியில் அழகிய ஒய்யாரியான வசந்தவல்லி பந்து ஆடுகிறாள்!

வசந்தவல்லி தன்னுடைய கைகளில் சூடகம் என்கிற வளையல்களையும் சங்கு வளையல்களையும் அணிந்திருக்கிறாள். அவள் ஆடும்போது இந்த் அவளையல்கள் ஆட, அதனால் அவளுடைய தோளில் அணிந்துள்ள வளையல்கூட மேலே எழுந்து ஆடுகிறது. அவளுடைய கால்களில் கொலுசுகளும் தண்டைகளும் மேலே கீழே குதிக்கின்றன!

4

சந்திரனைத் தலையில் சூடிய குற்றாலநாதர் எழுந்தருளியிருக்கிற இந்த நகரத்தின் வீதிகளில் சங்குப் பூச்சிகள் வரிசையாகச் செல்கின்றன. அங்கே வசந்தவல்லி பொற்பந்து விளையாடுகிறாள்!

அவள் ஆடுவதைப் பார்க்கிறவர்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம், இவள் யார்? வசந்தவல்லிதானா? அல்லது திருமகளோ? சுந்தரியோ? தேவ மகளிர் என்று சொல்லப்படும் ரம்பையோ? மோகினியோ?

இவள் எப்படிப் பந்தாடுகிறாள்? பந்தைப் பார்த்ததும் அதை அடிக்க இவளுடைய மனம் முதலில் செல்கிறதா? அல்லது, கண்கள் முதலில் செல்கின்றனவா? அல்லது கைகள் முதலில் செல்கின்றனவா? ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அருமையாக ஆடுகிறாள் என்பதுமட்டும் தெரிகிறது!

*********************************
பாடல்கள்
*********************************

செங்கையில் வண்டு கலின் கலின் என்று
….செயம் செயம் என்று ஆட, இசை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
….தண்டை கலந்து ஆட, இரு
கொங்கை ’கொடும் பகை வென்றனம்’ என்று
….குழைந்து குழைந்தாட, மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
….பந்து பயின்றாளே!

பொங்கு கனம் குழை மண்டிய கெண்டை
….புரண்டு புரண்டு ஆடக் குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
….மதன் சிலை வண்டு ஓட, இனி
இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும்
….என்று இசை திண்டாட, மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
….பந்து பயின்றாளே!

சூடக முன் கையில் வால் வளை கண்டு இரு
….தோள் வளை நின்று ஆடப் புனை
பாடகமும் சிறு பாதமும் அங்கு ஒரு
….பாவனை கொண்டு ஆட, நய
நாடகம் ஆடிய தோகை மயில் என
….நல் நகர் வீதியிலே, அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி
….அடர்ந்து பந்தாடினாளோ!

இந்திரையோ! இவள் சுந்தரியோ! தெய்வ
….ரம்பையோ! மோகினியோ! மனம்
முந்தியதோ! விழி முந்தியதோ! கரம்
….முந்தியதோ எனவே! உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
….சங்கு அணி வீதியிலே! மணிய
பைந்தொடு நாரி வசந்த ஒய்யாரி
….பொன் பந்து கொண்டாடினாளே!

***

என். சொக்கன் …

12 06 2014

7 Responses to "பந்தாட்டத் திருவிழா"

குற்றாலக் குறவஞ்சி பாடல்களை படிக்கும்போதே அந்த ரிதம் நம் மனத்தில் ஒரு மகிழ்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதுவும் குறிப்பாக இந்தப் பாடல்.

நீங்கள் அழகாக முதலில் பாடலின் உரையை கொடுத்துவிட்டு, பின் பாடலை போட்டிருக்கிறீர்கள். புரிந்து படிக்க ஏதுவாக இருந்தது, நன்றி 🙂

amas32

Uncredited lyricist: திரிகூட ராசப்பபக்கவிராயர் 😦

Lovely. Whenever I hear or read these lines, I get intoxicated. Thank you, Chokkan.

Few lines from this are used in a film song – “Kadhalan”.

Here, kannadasan renders these songs, in a talk.
கண்ணதாசனின் இலக்கியத்தில் காதல் – 4. அவரே பாடிக்காட்டுகிகிறார். 4:00 முதல். சின்ன முன்னுரையுடன். https://www.youtube.com/watch?v=s0REHod0O90

And I remember you have already written about this. Either in 4 vari note or “Dhinam oru paa”

நன்றி !! அருமையான பதிவு!!

சிலம்பு, தண்டை, கனங்குழை, வால்வளை, தோள்வளை,பாடகம் என நகைகளின் வரிசை, வண்டு, மீன், தோகைமயில், பொன் பந்து, சங்கணி வீதி! வார்த்தைகள் இசைத் தாளத்தோடு விளையாடும் பந்து விளையாட்டு. அற்புத மான தமிழ் இலக்கியம்

குற்றாலக் குறவஞ்சின்னு சொன்னாலே கொண்டாட்டம் தான். சங்கணி வீதியில் நம்மளும் போய் நின்னு பாக்குற மாதிரி ஒரு மகிழ்ச்சி இருக்கு. இன்னைக்கு அந்தச் சங்கணி வீதியைக் காணோம். ஒரே கடையணி வீதியா இருக்கு.

செங்கையில் வண்டு வரிகளைக் கண்ணதாசன் அப்படியே ஆதிபராசக்தி படத்தில் பயன்படுத்தியிருக்காரு. மிகப் பொருத்தமா.

நல்ல பாடல்களைப் படிச்சா நாள் முழுக்கத் திருப்தி. இந்தப் பதிவும் அப்படித்தான். 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,068 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2014
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
%d bloggers like this: