கொம்பன்
Posted June 24, 2014
on:- In: Poetry | Uncategorized
- 5 Comments
இன்று கண்ணதாசன் பிறந்தநாள். வெண்பாவில் அவரைப் பாடும் எளிய முயற்சி இது!
1
எளிய தமிழிலே ஏற்றமிகு பாக்கள்
உளிபோல் செதுக்கியதுன் உள்ளம், வளியெங்கும்
உன்பாடல் ஊர்கோலம், உன்மத்தப் பேரின்பம்,
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
2
இந்துமத அர்த்தமும் ஏசுவின் காவியமும்
சந்தப்பா வோடு சரளப்பா தந்தநிலா
என்காதில், நெஞ்சில் இயைந்திருக்கும் மாகவிஞன்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
3
கம்பனை, வள்ளுவனைக் காதலித்தாய், காண்பித்தாய்
எம்திரைப் பாடல் எழில்வரியாய், கொம்பன்நீ,
என்பில் தமிழ்தோய்ந்தோய், என்னென்பேன் உன்பெருமை,
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
4
அகமும் புறமும் அருளும் நயமும்
பகரும் தமிழே, பகலே, சுகமான
சின்னக் குயிலிசைபோல் சிங்காரப் பாட்டிசைத்த
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
5
வண்ணத் தமிழ்ப்பாவாய், வள்ளல் இவன்நாவில்
வண்ணத் தமிழ்ப்பாவாய் வந்துநின்றாய், தண்ணீரைத்
தன்னலம் இன்றித் தரும்ஊற்று போன்றயெங்கள்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
6
மூப்பேது? முத்தையா மொத்தக் கவிமதுக்
கோப்பையிலே எங்கள் குடியிருப்பு, பூப்பந்தல்
அன்ன சுகநிழல், அற்புதம், ஆனந்தம்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
7
முத்தையா, நீநல்ல முத்தையா, செந்தமிழர்
சொத்தையா, நின்பா சுகமையா, வித்தையா
உன்சொற்கள், இன்பம் விளைந்ததையா, மொத்தத்தில்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
8
கவியரசே, கொஞ்சும் கவின்கவியால் எங்கள்
செவிக்கரசே, கொண்டாயெம் சிந்தை, நவில்தொறும்
பொன்னான நின்பாக்கள் பூப்போல் மணம்வீசும்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
9
செய்த பிழையெலாம் செப்பி ‘இவைதவிர்த்து
உய்ந்திடுவீர்’ என்றாய் உலகுக்கு, பொய்யிலாய்,
பொன்னி நதிபோலே பொன்றாப் புகழ்வாய்ந்த
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
10
பாவலர் இங்கே பலருண்டு, உன்போலே
சேவகர்க்கும் செல்தமிழ் செய்தவர்யார்? ஆவலுடன்
உன்கவிதை கேட்டு உளமகிழ்வோம் அன்றாடம்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
***
என். சொக்கன் …
24 06 2014
5 Responses to "கொம்பன்"

இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு? என்ற ஈற்றடிக்கு பத்துப் பாட்டு. அருமை! மிக அருமை சொக்கன்.


அருமை!அருமை!

1 | rajinirams
June 24, 2014 at 10:50 am
செம,பாராட்டுக்கள்