Archive for September 2014
வரலாறு
Posted September 15, 2014
on:- In: History | Kids | Learning | Uncategorized | Video
- 6 Comments
நேற்று நங்கை ஏதோ புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தாள். என்னிடம், ‘அப்பா, British People இன்னும் இருக்காங்களா?’ என்று கேட்டாள்.
‘Of course, இருக்காங்க. ஏன் அப்படிக் கேட்கறே?’
‘இல்ல, 1947ல நாம Freedom வாங்கினபோது அவங்க எல்லாரையும் கொன்னுட்டோம்ன்னு நினைச்சேன்!’
அவளுடைய வெகுளித்தனமான கேள்வியை நினைத்துச் சிரிப்புதான் வந்தது. ‘காந்தி பிறந்த தேசத்துல இப்படி ஒரு குழப்பமா?’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
அதன்பிறகுதான் புத்தியில் ஏதோ உறைத்தது. இந்தக் கேள்வியைக் கேட்க அவள் ஒன்றும் சின்னப் பெண் இல்லையே, ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள், வரலாறுப் பாடம் இருக்காதா என்ன? நாம் சுதந்தரம் பெறுவதற்காக பிரிட்டிஷ்காரர்களைக் கொல்லவில்லை என்கிற அடிப்படை விஷயம்கூடவா அவளுக்குத் தெரிந்திருக்காது?
நங்கையை விசாரித்தேன், ‘India’s Freedom Struggle பாடம்தான்ப்பா படிச்சுகிட்டிருந்தேன், அதுலதான் இந்த டவுட்டு’ என்றாள்.
‘அப்படீன்னா? உங்க மிஸ்தான் நாம பிரிட்டிஷ்காரங்களைக் கொன்னோம்ன்னு சொல்லித்தந்தாங்களா?’
’இல்லைப்பா…’
‘அப்புறம் ஏன் அப்படிக் கேட்டே?’
‘அவங்க சொன்னது எனக்கு ஒண்ணுமே புரியலைப்பா. இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைச்சதுன்னு தெரிஞ்சது. ஆனா அது எப்படின்னு தெரியலை, பிரிட்டிஷ்காரங்களையெல்லாம் கொன்னு நாம ஜெயிச்சுட்டோம்ன்னு நினைச்சேன்!’
இப்போது யார்மீது குற்றம் சொல்வது? கதைகளில் வரும் வில்லன்களை ஹீரோ வீழ்த்தி வெல்வதுபோல பிரிட்டிஷாரை நாம் வீழ்த்தியதாக அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள். அந்த எண்ணத்தைப் பாடப் புத்தகங்களும் மாற்றவில்லை, ஆசிரியரும் மாற்றவில்லை.
அவளுடைய புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். இரண்டு பாடங்களில் இந்தியச் சுதந்தரப் போராட்டம் நன்கு விவரிக்கப்பட்டிருந்தது. ஓரளவு முழுமையான விவரங்கள், ஐந்தாம் வகுப்பு மாணவிக்குப் புரியக்கூடியவகையில்தான் இருந்தன. ஆனால் அவள் அது புரியவில்லை என்கிறாள்.
காரணம், வெறும் வாசகங்கள் ஓரளவுக்குதான் விஷயத்தைச் சொல்லும். அவற்றின் பின்னணி புரியாவிட்டால், ‘இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்தது’ என்ற வரி ‘பிரிட்டிஷார் எல்லாரும் அழிக்கப்பட்டார்கள்’ என்ற தவறான அர்த்தத்தைக் கொடுத்துவிடும். அவளுடைய ஆசிரியை இதை யோசித்ததாகத் தெரியவில்லை.
ஆகவே, நங்கையின் பாடப் புத்தகத்தையே அடிப்படையாக வைத்து ஒரு மைண்ட் மேப் தயாரித்தேன். அதை வைத்து அவளுக்கு அந்தக் கதையைச் சுருக்கமாகச் சொல்லித்தந்தேன். சுருக்கமாக என்றால், ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு எந்த அளவு தேவைப்படுமோ அந்த அளவு பின்னணி விவரங்களுடன், உதாரணங்களுடன்.
அந்தவகையில், அவளுடைய பாடப் புத்தகம் நன்றாகதான் இருந்தது. ஒரே குறை, இந்தியாவுக்குத் தென் பகுதியே இல்லை என்பதுபோல, சுதந்தரப் போராட்டத்தின் வடக்கத்திச் சம்பவங்கள்மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஜாலியன் வாலா பாக், சௌரி சௌரா, வங்காளப் பிரிவினை, பகத் சிங், நேதாஜி என்று கதை முழுக்க வடக்கே சுற்றிவருகிறது. போர்ச்சுக்கீசியர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள் கேரளா, சென்னை, பாண்டிச்சேரிக்கு வந்தார்கள் என்பதைத்தவிர மற்றபடி தென்னிந்தியாபற்றி ஒரு வரி என்றால் ஒரு வரி இல்லை, இந்தப் பக்கத்துத் தலைவர்களைப்பற்றி எந்த விவரமும் இல்லை. தண்டி யாத்திரை போன்றவை தென்னிந்தியாவிலும் நடந்தன என்கிற குறிப்புகள் இல்லை.
இதனால், நங்கைக்கு மங்கள் பாண்டே தெரிந்திருக்கிறது, ஆனால் வஉசியைத் தெரியவில்லை. தமிழ்நாட்டை விடுங்கள், கர்நாடகாவிலிருந்த சுதந்தரப் போராட்ட வீரர்களையாவது பாடப் புத்தகத்துக்கு வெளியே ஓரிரு வரிகள் சொல்லித்தரமாட்டார்களோ? சிலபஸ்தான் முக்கியம் என்று காந்தியடிகள் பின்னாலேயேவா சுற்றுவது?
அது நிற்க. நங்கைக்கு இன்னொருநாள் தென்னிந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாறைச் சொல்லித்தருவேன். இப்போதைக்கு, அவள் புத்தகத்திலிருந்த பகுதியைமட்டும் சொல்லித்தந்துள்ளேன். முடிந்தவரை உணர்ச்சிவயப்படாமல் as a matter of fact விவரங்களைத் தந்தேன். அவள் ரசித்துக் கேட்டாள், தெளிவாகப் புரிந்ததாகச் சொன்னாள். அந்த வீடியோக்கள் இங்கே, உங்களுக்குப் பத்து வயது (ப்ளஸ் ஆர் மைனஸ் 4) மகனோ மகளோ இருந்தால் இந்த வீடியோக்களைக் காண்பியுங்கள். இந்தியச் சுதந்தரப் போராட்டம் என்கிற கடலை ஒரு துளி புரிந்துகொள்வார்கள்.
எச்சரிக்கை: மூன்று வீடியோக்கள் உள்ளன, இவை மொத்தம் 47 நிமிடங்களுக்கு ஓடும்
***
என். சொக்கன் …
15 09 2014