Archive for October 2014
இளைஞர்
Posted October 23, 2014
on:- In: Bangalore | Characters | Ilayaraja | Music | Uncategorized | Youth
- 12 Comments
மழை பெய்யத் தொடங்கியிருந்த நேரம். கையில் குடையோடு புறப்பட்டேன்.
அவர் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் கையை அசைத்தபடி எழுந்துவந்தார். ’ஹாய்!’ என்று கை குலுக்கினார்.
‘குடைக்குள்ள வாங்க’ என்றேன்.
‘பரவாயில்லை சார், இதெல்லாம் ஒரு மழையா!’ என்றார். ‘எங்கே போலாம்? காஃபி டே?’
’அதைவிட பெட்டர் காஃபி அந்தப் பக்கம் கிடைக்கும், பாதி விலைல’ என்றேன். ‘எதுக்கு அவங்களுக்கு வீணா காசைக் கொடுக்கணும்?’
அவர் கொஞ்சம் தயங்கினார். பிறகு, ‘சரி, வாங்க’ என்றார். நான் குடையிலும், அவர் வெளியிலும் நடந்தோம்.
அடுத்த சில நிமிடப் பேச்சில், எனக்கும் அவருக்கும் இடையிலிருந்த வித்தியாசங்கள் மிகப் பெரியதாகத் தெரிந்துவிட்டன. நான் முப்பத்தாறு, அவர் இருபத்தொன்று, நான் சட்டை, பேன்ட், அவர் டிஷர்ட், ஜீன்ஸ், நான் சிக்னலில் நிற்கிறவன், அவர் குறுக்கே புகுந்து ஓடலாமே என்கிறவர், நான் தமிழ்நாடு, அவர் கர்நாடகத்தின் ஏதோ சிறு நகரம், நான் தொப்பைக் குண்டன், அவர் ஈர்க்குச்சியில் செதுக்கினாற்போலிருந்தார். அவரைவிடப் பெரியதாக முதுகில் ஒரு கிடார்.
இவையெல்லாம் உடல் சார்ந்த வித்தியாசங்கள். புத்தியிலும் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது அடுத்த சில நிமிடங்களில் தெரிந்தது. பேச்சுவாக்கில், ‘ஈமெயில் அனுப்பிடறேன்’ என்றேன்.
அவர் நெற்றியைச் சுருக்கி, ‘ஈமெயிலா, வொய்?’ என்றார். ‘ஃபேஸ்புக்ல அனுப்பிடுங்களேன், ஈமெயில்லாம் பார்க்கற வழக்கமே இல்லை!’
நான் திகைத்துப்போனேன். ரொம்பக் கெழவனாயிட்டோமோ?
சில நிமிடங்களில் அந்தக் கடையை நெருங்கி உள்ளே நுழைந்தோம். ‘என்ன சாப்பிடறீங்க? ஜூஸ்?’ என்றார்.
‘காஃபி’ என்றேன்.
மீண்டும் அவர் முகத்தில் அதே சங்கட உணர்வு. சர்வரிடம் ‘ஜூஸ் என்ன இருக்கு?’ என்று விசாரித்து ஆர்டர் செய்தார்.
அப்போதுதான் அவர் ஏன் காஃபி டே செல்ல நினைத்தார் என்று புரிந்தது. அவருக்கு கோல்ட் காஃபியும் எனக்குச் சூடான காஃபியும் அங்கே கிடைத்திருக்கும்.
அவர் சுவரோரமாக கிடாரைச் சாய்த்து நிறுத்திவிட்டு, அதனுள்ளிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்தார். அட்டையில் ஆக்ஷன் ஹீரோ ஒருவர் தாவினார். உள்ளே பென்சிலில் குறிப்புகள். விளக்கத் தொடங்கினார்.
ஐந்தே நிமிடத்தில் அவருடைய ‘எதைப்பத்தியும் கவலைப்படாத யூத்’ பிம்பம் கலைந்து, பொறுப்பான மனிதராகத் தெரிய ஆரம்பித்தார். தான் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைப்பற்றிய ஒரு தெளிவு அவரிடம் இருப்பது புரிந்தது.
அவர் ஓர் இசைக் கலைஞர். நான்கு நண்பர்களுடன் சேர்ந்து ஓர் இசைக்குழு உருவாக்கியுள்ளார். அதற்கான எழுத்து வேலைகளுக்காக என்னிடம் வந்திருந்தார். தனக்கு என்ன தேவை, நான் என்ன எழுதவேண்டும் என்று எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினார்.
காஃபி வந்தது. நான் உடனே எடுத்துக் குடிக்க, அவர் ஆறட்டும் என்று காத்திருந்தார்.
கிளம்பும் நேரத்தில், கிடாரைப் பார்த்து, ‘இது என்ன விலை?’ என்றேன் அபத்தமாக. அவர் பதில் சொல்லாமல், ‘ஒரு புது மெலடி கம்போஸ் பண்ணியிருக்கேன், கேட்கறீங்களா?’ என்றார்.
நான் திகைப்போடு சுற்றிலும் பார்த்தேன். ஹோட்டல் நடுவே கிடார் வாசிக்கப்போகிறாரா என்ன?
அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. சரேலென்று பையைத் திறந்து கிடாரை எடுத்து சுருதி மீட்ட (அல்லது, டெக்னிகலாக அதுபோல் ஏதோ செய்ய) ஆரம்பித்தார். பிறகு வாசிக்கத் தொடங்கிவிட்டார். மிக எளிமையான, இனிமையான மெட்டு.
‘பிரமாதம்’ என்றேன். கொஞ்சம் தயங்கி, ‘நான் இளையராஜா ஃபேன்’ என்றேன், ‘அவரைக் கேள்விப்பட்டிருக்கீங்களா?’
‘என்ன இப்படிக் கேட்டுட்டீங்க, ரியல் கிங் சார்’ என்றார் அவர். ‘ராஜாவோட கிடார் பீஸஸ்தான் எனக்குப் பாடப் புத்தகம்’ என்றபடி மீண்டும் வாசிக்கத் தயாரானார்.
எனக்கு இன்னொரு காஃபி குடிக்கவேண்டும்போலிருந்தது!
***
என். சொக்கன் …
23 10 2014
வரலாறு (2)
Posted October 8, 2014
on:’வரலாறு’ பதிவின் (https://nchokkan.wordpress.com/2014/09/15/indhstry/) தொடர்ச்சி இது.
நங்கையின் அடுத்த வரலாற்றுப் பாடத்தில் நான்கு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றிருந்தது. அதை அவளுக்குச் சொல்லித்தந்தேன். அந்தப் பாடங்களின் வீடியோக்கள் இவை. விரிவாக இருக்காது, ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஏற்றவை. அவ்வளவே:
01. ஜான்சி ராணி லஷ்மிபாய்
http://www.youtube.com/watch?v=70vQfkJgzp8&feature=youtu.be
02. பால கங்காதர திலகர்
http://www.youtube.com/watch?v=I-Sfhfg4b1M&feature=youtu.be
03. சுபாஷ் சந்திர போஸ்
http://www.youtube.com/watch?v=KOIuzifwR7Q&feature=youtu.be
04. சரோஜினி நாயுடு
***
என். சொக்கன் …
08 10 204