மனம் போன போக்கில்

Archive for January 2015

Ah!Range

பசு, ஹசு என்ற மாடுகள் நல்ல நண்பர்களாக இருந்தன. அவர்களைத் திருடுவதற்காக இரண்டு திருடர்கள் வந்தார்கள். அவர்களைப் பசுவும் ஹசுவும் எப்படி விரட்டி அடித்தன என்று தெரிந்துகொள்ள இந்தச் சுவாரஸ்யமான கதையைப் படியுங்கள்.

வாசிப்பின் இரண்டாம் நிலையில் உள்ள (சுமார் 5 வயது முதல் 8 வயது வரையிலான) குழந்தைகளுக்கான எளிய, இனிய கதை இது. அருமையான படங்கள், கதையுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள், சுவையான விளையாட்டுகள் என அனைத்தும் உண்டு!

‘ஓதி விளையாடு பாப்பா’ வரிசையில் இரண்டாவது நூல் இது!

எழுத்து: என். சொக்கன், என். நங்கை
ஓவியங்கள்: அனிர்பன் மஷியுர்

விலை: ரூ 20

மின்புத்தகத்தை வாங்க:

https://play.google.com/store/books/details?id=QDh0BgAAQBAJ

அல்லது

http://books.google.co.in/books/about?id=QDh0BgAAQBAJ&redir_esc=y

இந்த வரிசையில் வந்துள்ள மற்ற சிறுவர் நூல்களைப்பற்றி அறிய: https://nchokkan.wordpress.com/ovp/

ஓதி விளையாடு பாப்பா நூல் #1 “டப்பாம்பூச்சி” வெளியாகிவிட்டது.

Dabbampoochi

ஒரு பட்டாம்பூச்சியும் தேனீயும் நண்பர்களாகின்றன. காட்டைச் சுற்றித் திரிகின்றன, பல விஷயங்களைத் தெரிந்துகொள்கின்றன!

வாசிப்பின் இரண்டாம் நிலையில் உள்ள (சுமார் 5 வயது முதல் 8 வயது வரையிலான) குழந்தைகளுக்கான எளிய, இனிய கதை இது. அருமையான படங்கள், கதையுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள், சுவையான விளையாட்டுகள் என அனைத்தும் உண்டு!

எழுத்து: என். சொக்கன், என். மங்கை
ஓவியங்கள்: சாம்ராட் சக்ரவர்த்தி

விலை: ரூ 20

மின்புத்தகத்தை வாங்க:

https://play.google.com/store/books/details?id=an5uBgAAQBAJ

அல்லது

http://books.google.co.in/books/about?id=an5uBgAAQBAJ&redir_esc=y

#சிறுவர்கதை

ஒரு ஊர்ல மெட்ரோ ரயில் ஓடிகிட்டிருந்ததாம்.

மெட்ரோ ரயில்ன்னா, தண்டவாளத்துலயே மின்சாரம் பாயும். அந்த மின்சாரத்துலதான் ரயில் ஓடும்.

அதனால, யாரும் தண்டவாளம் பக்கத்துல போகக்கூடாது. விரல் பட்டாலும் மின் அதிர்ச்சிதான். ஆபத்து!

அந்த ஊர்ல ஒரு சின்னப் பறவை. அது இப்பதான் பறக்கக் கத்துக்கிச்சு!

அதனால, ஜாலியா ஊரைச் சுத்திப் பார்க்கலாம்ன்னு மேலே பறந்தது அந்தக் குட்டிப் பறவை. தெரியாம மெட்ரோ ரயில் பாதை பக்கத்துல வந்துடுச்சு.

திடீர்ன்னு அவ்ளோ பெரிய ரயில் பாதையைப் பார்த்ததாலோ என்னவோ, அந்தப் பறவைக்குப் பயம். பறக்கறது எப்படின்னு மறந்துபோனாப்ல பொத்துன்னு கீழே விழுந்துடுச்சு.

கீழேன்னா எங்கே? ரயில் பாதைக்கு நட்டநடுவுல!

யோசிச்சுப் பாருங்க, அந்தப் பறவையோட றெக்கை இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ ரயில் பாதையைத் தொட்டதுன்னா போச்சு, உடனே மின் அதிர்ச்சி தாக்கிடும்.

நல்லவேளையா அப்படி எதுவும் நடக்கலை. அந்தப் பறவை அங்கேயே கிடந்தது. அதைப் பல பேர் கவனிச்சாங்க, ஆனா, எப்படிக் காப்பாத்தறது? ரயில் பாதையில மின்சாரம் பாய்ஞ்சுகிட்டிருக்கே.

அதுமட்டுமில்லை, இதுக்காக மின்சாரத்தை நிறுத்தினா, ரயிலெல்லாம் நின்னுடும். மக்கள் ரொம்ப சிரமப்படுவாங்க.

மக்கள் முக்கியமா, பறவை முக்கியமா?

அந்த ரயில் நிலையத்துல இருந்த அதிகாரிங்க கொஞ்சம்கூட யோசிக்கலை. மின்சாரத்தை நிறுத்திட்டாங்க. உரிய நிபுணர்களைக் கூட்டிகிட்டு வந்து பறவையைக் காப்பாத்திட்டாங்க.

இதுக்கு நாலே நிமிஷம்தான் ஆச்சு. அதுக்கப்புறம் ரயில்கள் பழையபடி ஓட ஆரம்பிச்சது. மக்கள் நிம்மதியாப் பயணம் செஞ்சாங்க.

அந்தப் பறவை, இனிமே ரயில் பாதை பக்கத்துல பறக்காது. அப்படியே பறந்தாலும் ரொம்பக் கவனமாதான் பறக்கும். இல்லையா?

(பின்குறிப்பு: நேற்று பெங்களூரில் நடந்த நிஜச் சம்பவம் இது. என் மகளுக்குத் தமிழ் வாசிப்புப் பயிற்சிக்காகக் கதைபோல எழுதிக் கொடுத்தேன்)

***

என். சொக்கன் …

25 01 2014

 

சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குவதற்குச் சில நாள் முன்பாக எழுதிய ஒரு பதிவில் ‘இனி நேரடி நூல்கள் எழுதுவதில்லை’ என்று ஒரு வரி குறிப்பிட்டிருந்தேன். பல நண்பர்கள் அது ஏன் என்று பொதுவிலும் தனி அஞ்சலிலும் கேட்டிருந்தார்கள். புக்ஃபேர் நேரத்தில் வேண்டாம் என்று காத்திருந்து இப்போது எழுதுகிறேன்.

முதலில், இந்தப் பதிவின் நோக்கம் புலம்புவதோ குற்றம் சாட்டுவதோ அல்ல. அப்படி ஒரு தொனி தென்பட்டால் அது நிச்சயம் எதேச்சையானதே.

கடந்த பத்தாண்டுகளில் நான் பல நேரடி நூல்களை எழுதியுள்ளேன். அவை அனைத்தும் பதிப்பகத்தார் கேட்டு, அதன்படி எழுதப்பட்டவை. கொஞ்சம் MBA பாஷையில் சொல்வதென்றால், Made to Order.

’என்னது? Order, Make போன்ற பொருளியல் பதங்களைப் புத்தகங்களுக்குப் பயன்படுத்துவதா?’ என்று பொங்கியெழவேண்டாம். Nonfiction வகை நூல்கள் தமிழில் இவ்வாறுதான் எழுதப்பட்டுவந்திருக்கின்றன, எழுதப்படுகின்றன. Fiction நூல்கள்மட்டுமே எழுத்தாளர் தன் ஆர்வத்தின் அடிப்படையில் எழுதிப் பின் பதிப்பகத்தைத் தேடுகிறார். மற்ற நூல்கள் பெரும்பாலும் பதிப்பகத்தால் கோரப்படும், ஒருவர் எழுதுவார், இதுவே முறை.

சில நேரங்களில் நிபுணர்கள் தங்கள் துறை சார்ந்த விஷயங்களைத் தாங்களே ஆர்வமாக எழுதுவதுண்டு. அல்லது, சொந்த விருப்பத்தின் பேரில் சில Nonfiction விஷயங்கள் எழுதப்படுவதுண்டு. மற்றபடி, பதிப்பகம் கேட்பதும், பின் ஒருவர் Made to Order முறையில் எழுதுவதும் வழக்கம்.

ஆக, கோரிப் பெறப்பட்ட நூல்கள் என்றமுறையில், அது மிக மோசமாக அமைந்து பிரசுரமாகாவிட்டாலன்றி அந்நூலை எழுதியவர் இவற்றுக்கு உரிய ஊதியம் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. காரணம், அவர் பதிப்பகத்தின் கோரிக்கையின்பேரில் அந்நூலுக்காக நேரம் செலவிட்டிருக்கிறார். அவர்கள் கேட்காவிட்டால் அவர் அந்நேரத்தைச் செலவிட்டிருக்கப்போவதில்லை.

இந்த ‘ஊதியம்’ இருவிதமாக வழங்கப்படலாம்:

1. ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கிக் கணக்கைத் தீர்த்துவிடலாம், அதன்பிறகு நூலுக்கும் ஆசிரியருக்கும் சம்பந்தமில்லை, அவர் பெயர் வரும், ஆனால் நூல் எவ்வளவு விற்றாலும் கூடுதல் பணம் எதுவும் அவருக்கு வழங்கப்படாது

2. விற்கும் நூல்களுக்கு ஏற்றபடி ஒரு ராயல்டி தொகை 7.5% அல்லது 10% தரப்படலாம்

ஒருவிதத்தில் முதல் வகை நல்லது, எழுதியதற்கு உடனே பணம் வருகிறது. வேறு வேலையைப் பார்க்கலாம்.

இன்னொருவிதத்தில் இரண்டாவது வகை நல்லது, புத்தகம் நன்கு விற்றால் நன்கு சம்பாதிக்கலாம்.

ஆனால், இரண்டாவது வகையில் ஓர் அபாயம் உண்டு. புத்தகம் ஒருவேளை நூறு பிரதிகள்மட்டுமே விற்றால், அதற்கான ராயல்டி சொற்பமாகவே இருக்கும். எழுதியவரின் மைக்கூலி(அல்லது கம்ப்யூட்டருக்கான மின்சாரக்கூலி)கூட திரும்பக் கிடைக்காது.

ஆகவே, இந்த இரண்டாம் வகையில் ஓர் உப பிரிவாக, முதல் அச்சு செய்த நூல்களுக்கான ராயல்டியை முன்பணமாகத் தந்துவிடுவது வழக்கத்தில் உள்ளது. உதாரணமாக, 500 பிரதிகள் அச்சிட்டால், அதில் 10%, அதாவது 500 பிரதிகளும் விற்றால் என்ன தொகை வரக்கூடுமோ, அதில் பத்து சதவிகிதம் பணம் உடனே தரப்படும். இதை First Print Royalty என்பார்கள்.

ஒரு சின்ன கணக்கு:

160 பக்க நூல் ஒன்று, விலை 120 ரூபாய் என்று வைப்போம். ஆக, 500 பிரதிகளின் விலை 500 * 120 = அறுபதாயிரம் ரூபாய். அதில் 10% ஆறாயிரம் ரூபாய்.

இந்தத் தொகை புத்தகம் அச்சானதும் எழுத்தாளருக்குத் தரப்படும். செய்த வேலைக்கு உடனே ஒரு பணம் வந்தது என்று அவர் மகிழ்வார்.

பின்னர் அந்நூல் பத்தாயிரம் பிரதிகள் விற்றால், அதற்கான கூடுதல் ராயல்டி அடுத்த ஆண்டோ அதன்பிறகோ அவருக்குக் கிடைக்கும். ஆனால் அதற்குப் பல மாதங்கள் ஆகும். புத்தகம் சரியாக விற்காவிட்டால் இந்த ஆறாயிரம் ரூபாயோடு அவர் திருப்தியடையவேண்டியதுதான்.

இதுவரை நான் சொன்னது, 2004ல் என் முதல் நூல் வெளியானதிலிருந்து பல பதிப்பகங்களில் நான் கண்ட நடைமுறை. First Print Royalty உடனே கிடைப்பது தொடர்ந்து எழுத ஓர் ஊக்கமாக இருந்தது. என்னைப்போல் வேறு வேலை செய்துகொண்டு எழுதுகிறவர்களுக்கு இது அவசியம் தேவை, காரணம், நாங்கள் வீட்டாருடன் செலவழிக்கவேண்டிய நேரத்தை நூலுக்குத் தருகிறோம். அதற்குப் பதிலாக இப்படி ஏதாவது கிடைத்தால்தான் மனைவி முணுமுணுக்காமலிருப்பார்.

கடந்த சில ஆண்டுகளாக, மேற்சொன்ன நடைமுறையில் சிறு மாற்றம் ஏற்பட்டுவிட்டது. First Print Royalty என்பதை நான் எழுதும் பதிப்பாளர்களில் பெரும்பாலானோர் தருவதில்லை. 2012லிருந்து நான் எழுதிய நூல்களில் இரண்டு நூல்களுக்குதான் First Print Royalty பெற்றிருக்கிறேன். அதில் ஒன்று சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டது, இன்னொன்று கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது.

ஆக, கடந்த இரண்டரைச் சொச்ச ஆண்டுகளாக நான் எழுதிய நூல்களில் பெரும்பாலானவற்றுக்கு இதுவரை ஒரு பைசாவும் எனக்கு வரவில்லை. மின்சாரக்கூலிகூட வரவில்லை, எழுத்துக்கூலியெல்லாம் அப்புறம்.

இதுபற்றிப் பதிப்பக நண்பர்களுடன் நிறைய பேசிப் பார்த்தேன். அவர்களுக்கு ப்ராக்டிகல் பிரச்னைகள் இருப்பது புரிகிறது. அதேசமயம் ஒரு Made To Order Productஐச் செய்து தந்துவிட்டு அதற்கான ஊதியத்தை எதிர்பார்த்து வருடக்கணக்கில் காத்திருப்பது நியாயமாகப் படவில்லை.

ஆகவே, பதிப்பகங்களுக்கான நேரடி நூல்கள் எழுதுவதில்லை என்று தீர்மானித்தேன். இனிமேலும் பத்திரிகைகளில் வரும் என் தொடர்கள், இணையத்தில் எழுதுபவை போன்றவற்றைமட்டும் கேட்பவர்களுக்குத் தரலாம் என்று நினைக்கிறேன். அவற்றுக்கான ராயல்டி தாமதமாக வந்தாலும் எனக்குப் பெரிய வருத்தமில்லை. காரணம், அவற்றில் இன்னொருவர் என் நேரத்தைத் தீர்மானிப்பதில்லை, அந்தச் சுதந்தரம் எனக்குள்ளது.

இந்தத் தீர்மானத்தை எடுத்தபின் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன், உணர்கிறேன். நிறைய நேரம் கிடைக்கிறது, அதை வேறு பணிகளுக்குச் செலவிடுகிறேன், இணையத்தில் நினைத்ததை எழுத இயலுகிறது. அவை அச்சில் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி.

***

என். சொக்கன் …

23 01 2015

ஆங்கிலத்தில் 5000 முதல் 30,000 சொற்கள் உள்ள மின்புத்தகங்கள் ‘Singles’ என்று அழைக்கிறார்கள். தமிழில் வழக்கமான மின்புத்தகங்களே அந்த அளவில்தான் உள்ளன என்பதால், இன்னும் சிறிதாக சுமார் 1,000 சொற்கள் அளவில், ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனைச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிற மின்னூல்களை நாம் ’குறுநூல்’களாக எழுதினால் என்ன?

இதற்கான தொழில்நுட்பம் இப்போது உள்ளது, தமிழிலும் உள்ளது. ஒரு தலைப்பில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் 1000 சொற்கள் எழுதியபின் அதனை கூகுள் ப்ளே / கூகுள் புக்ஸில் பிரசுரிக்க ஐந்து நிமிடம் போதும். ஆயிரம் சொற்களுக்குள் மேம்போக்காக அன்றி விஷயத்தைச் சுருக்கமாக அறிமுகப்படுத்துவதுதான் சவால், பிரசுரிப்பது அல்ல.

இந்நூல்களை மிகக் குறைந்த விலையில் வெளியிட்டுப் பார்க்கலாம். உதாரணமாக, ரூ 2.49 அல்லது ரூ 4.99!

இவை பெருநூல்களுக்கு மாற்று அல்ல. நேரம் குறைவாக உள்ளவர்கள் ஒரு தலைப்பை விரைவாகப் படித்து ஒரு பறவைப் பார்வையைப் பெறுவதற்கானவை. இங்கிருந்து முழு விவரம் தரும் நூல்களுக்கு அவர்கள் செல்வதை இது தூண்டும்.

குறுநூல்கள் வரிசையில் கதை, வரலாறு, அறிவியல், ஆன்மிகம், பலவிதமான நூல்களைக் கொண்டுவரலாம், ஆயிரம் சொற்களில் கவிதைகூட எழுதலாம்!

ஆயிரம் சொற்கள் என்றால் Blog எழுதிவிடலாமே, மின்னூல் எதற்கு?

இலவசமாகக் கிடைக்கிறது என்பதாலேயே Blogல் மெனக்கெடல் ஒரு மாற்றுக் குறைவாக இருக்கிறது என்பது என் எண்ணம். அதற்கு வரும் பதில் கருத்துகளில் 1% சிறப்பானவை, மீதி 99% வீண் அரட்டைகளாக (அல்லது மிகைப் புகழ்ச்சிகளாக) கவனத்தைச் சிதறடிக்கின்றன. இதனால், இந்தத் தளத்தில்மட்டும் தொடர்ந்து எழுதுகிறவர்களின் மொழிவன்மை, சொல்வளம், நேர்த்தியாகச் சொல்லும் திறமை போன்றவை வளராது, இருப்பதும் குறைந்துகொண்டேதான் போகும் என்பது என்னுடைய ஊகம்.

இது பொதுவான கருத்து அல்ல, என்னுடைய சொந்த அனுபவம் (எழுதுகிறவனாகவும் வாசிக்கிறவனாகவும்). யாரும் எழுதலாம், யாரும் பிரசுரிக்கலாம், யாரும் கருத்து சொல்லலாம் என்பது ஒரு மிகச் சிறந்த விஷயம். அதேசமயம் அந்தச் சுதந்தரம் டிராஃபிக் சிக்னல்கள் இல்லாத, எல்லாரும் எங்கும் வண்டியை ஓட்டலாம் என்பதுபோன்ற சூழ்நிலையாகிவிடும், அது ஒருவருடைய எழுத்தை மேம்படுத்தும் ஒரு களமாக அமையாது என்பதை உணர்ச்சிவயப்படாமல் யோசியுங்கள். ஒருவேளை எழுதுபவருக்கே அடிப்படையில் ஓர் ஒழுக்கமும் உழைப்பும் இருந்தால் இது சாத்தியமே. ஆனால் அப்படிப்பட்டவர்கள் 1%கூட கிடையாது.

ஆகவே ஈபுத்தகத்துக்கு ஒரு பைசா என்றேனும் விலை வைத்து வெளியிட்டால் ஓர் Exclusivity வந்துவிடும், எழுதுபவருக்கும் பொறுப்பு மிகும். அப்போதுதான் இந்த ‘தமிழ் சிங்கிள்ஸ்’ க்ளிக் ஆகும் என்று நினைக்கிறேன், இது தவறாக இருக்கலாம்.

’குறுநூல்கள்’பற்றி எழுதுமுன் இதைச் செய்துபார்த்துவிடலாமே என்று அபிராமி பட்டர்பற்றி முன்பு எழுதிய ஒரு நீண்ட கட்டுரையை(வாழ்க்கை, நான்கைந்து பாடல்கள் சாம்பிள், எளிய விளக்கம்)க் குறுநூலாக மாற்றிப் பார்த்தேன். அட்டைப்படம் செய்யதான் அதிக நேரமானது, மற்றபடி அரை மணி நேரத்துக்குள் புத்தகம் தயார். ஆர்வமுள்ளோர் வாசிக்கலாம், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்.

முக்கியமாக, நீங்கள் ஒரு ’குறுநூல்’ எழுதிப் பாருங்கள். காசு கொடுத்து வாசிக்கப்போகிறவரை, அந்தப் பொறுப்பை மனத்தில் வைத்து, ஆயிரம் சொற்களுக்குள் ஒரு தலைப்பை நேர்த்தியாகச் சொல்லும் விளையாட்டைப் பழகுங்கள். எழுதுகிறவர்களுக்கு அது ஒரு மிக நல்ல பயிற்சி.

https://play.google.com/store/books/details?id=-CBDBgAAQBAJ

http://books.google.co.in/books/about?id=-CBDBgAAQBAJ&redir_esc=y

***

என். சொக்கன் …

21 01 2015

ஒரு புது முயற்சியாக, இவ்வாண்டுமுழுக்க மாதம் 2 என 24 சிறுவர் நூல்களை மின்பதிப்பாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இவை அனைத்தும் பிரத்யேகமாக வரையப்பட்ட படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் ஆக, மாதம் 2 + 2 = 4 சிறுவர் கதை நூல்கள். மாதாமாதம் செய்ய இயலாவிட்டாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளியிட்டு டிசம்பருக்குள் 24 என்ற இலக்கை எட்டிவிட உத்தேசம், இறைவன் துணையிருப்பான்.

ஜனவரிக்கான இரு நூல்களின் கதை தயாராகிவிட்டது, ஓவியங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வெளியானதும் விவரம் தெரிவிக்கிறேன்.

இதை ஏன் செய்கிறேன்?

இணையத்தில் மின்புத்தகம் என்ற வடிவம் எனக்கு மிகவும் வசீகரமாக இருக்கிறது. ஆனால் தமிழில் இது எப்படி வேலை செய்யும் என்று தெரியவில்லை. ஒரு முயற்சியாக, இவ்வாண்டு சில மணி நேரங்களையும் சில ஆயிரம் ரூபாய்களையும் (ஓவியங்களுக்காக) இதில் முதலீடு செய்து பார்க்கவுள்ளேன்.

முக்கியமாக, மாதம் இரண்டு குழந்தைக் கதைகள் எழுத இதுவும் ஒரு சாக்கு. மகாமோசமான ஒப்பீடு என்றாலும், பெப்ஸி, கொக்கக்கோலாபோல் குழந்தைப் பருவத்திலேயே புத்தகங்களால் குழந்தைகளை வளைத்துப்போட்டு அடிமைகளாக்கிவிடவேண்டும் என்பது என் எண்ணம். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறமாட்டார்கள், நல்ல நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

லௌகிக விஷயங்கள்?

படங்கள் + கதையுடன் தலா 16 பக்கங்கள் (ஒன்றிரண்டு கூடலாம், குறையலாம்) கொண்ட இந்நூல்களுக்கு தலா ரூ 25 (அல்லது $0.5) என்று விலை வைக்க எண்ணம். கூகுள் இதனை அனுமதிக்கிறது, அமேஸானில் குறைந்தபட்ச விலை $1 என்று நினைவு. அங்கே இரண்டு நூல்களைச் சேர்த்து வெளியிடலாமா, அல்லது ’கையில் காசுள்ள அமேஸானியர்களே, நீங்கள் இருமடங்கு விலைதரக் கடவீர்கள்’ என்று மல்ட்டிப்ளெக்ஸ் பாப்கார்ன்போல விலை வைத்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். (குறிப்பு: அமேஸானில் தமிழ் நூல்கள் வாரா, ஆங்கிலம்மட்டுமே)

அப்புறம் இந்தப் புத்தகங்கள் அச்சில் கிடைக்காது. இப்போதைக்கு மின்வடிவம்மட்டுமே. யாராவது பதிப்பாளர் ஆர்வம் காட்டினால் பார்க்கலாம்.

தமிழ்க் குழந்தைகள் நலன் கருதி இதை நான் ஏன் இலவசமாக இணையத்தில் வெளியிடக்கூடாது?

இதில் காசு பண்ணும் நோக்கம் எனக்கு இல்லை. ஒருவேளை இந்நூல்கள் (தலா) மில்லியன் பிரதி விற்றால் இவ்வெண்ணத்தை மாற்றிக்கொள்வேன்.

On a serious note, இலவசமாக எழுத நான் தயார். இலவசமாக வரைய (ஒவ்வொரு நூலுக்கும் சுமார் 12 கோட்டோவியங்கள் தேவைப்படும்) ஓவியர்கள் கிடைத்தால் கண்டிப்பாகச் செய்யலாம். யாருக்கேனும் ஆர்வமிருந்தால் சொல்லுங்கள்.

உங்கள் குழந்தைகளிடம் சொல்லிவையுங்கள், முதல் புத்தகத்தில் சந்திப்போம்!

***

என். சொக்கன் …
16 01 2015

நங்கையின் (ஐந்தாம் வகுப்பு) வரலாற்றுப் பாடத்துக்காக ராஜா ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி போன்ற சீர்திருத்தவாதிகளைப்பற்றியும் அதற்கான தேவை / பின்னணிபற்றியும் அவளுக்குச் சொல்லித்தந்தது, 25 நிமிட வீடியோவாக (2 பகுதிகள்) இங்கே தந்துள்ளேன். இதற்காக நாங்கள் தயாரித்த ஸ்லைட்களையும் தனியே கொடுத்திருக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பு அல்லது அந்த வயதில் இருக்கும் சிறுவர்களுக்குப் பயன்படும்.

நண்பர் ஆனந்த் ராகவ் தயவில் இன்று ‘சிப்பி இருக்குது முத்துமிருக்குது’ பாடலைப்பற்றிக் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தோம்.

அந்தப் பாடலின் காட்சிப்படி, நாயகி சிரமமான மெட்டுகளைத் தருகிறாள், நாயகன் சிரமப்பட்டு அவற்றுக்கு வரிகளை எழுதுகிறான், அவள் மனத்தில் இடம் பிடிக்கிறான். அருமையான பாடல், சூழ்நிலை, ரசனைக்குரிய படமாக்கம்.

ஆனால் சற்றே வெளியே வந்து பார்த்தால், அங்கே நாயகி தரும் மெட்டு மிகச் சாதாரணமானது, கொஞ்சம் சந்தப் பயிற்சி உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இதற்கு எழுதலாம்.

உதாரணமாக, அவள் சொல்லும் தனனனான தனனனான தானா என்ற மெட்டுக்கு நாயகன் ’யம்மாடியோவ்’ என்று பயங்கரமாகத் திணறுவார். உண்மையில் அது ஒரு சாதாரணமான சந்தம் (கண்ணதாசன் திணறியிருக்கவே மாட்டார்!)

இப்படி மொத்தப் பாடலும் மெட்டு எளிமையாகதான் இருக்கும். இதில் என்ன பெரிய சவால்? என்று ஒருமுறை நண்பர் மோகன கிருஷ்ணனிடம் கேட்டேன். அவர் சட்டென்று சொன்ன பதில்: அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது, அவன் ஜெயிக்கவேண்டும் என்று எளிய மெட்டாகத் தருகிறாள், அதில் உமக்கு என்னய்யா பிரச்னை?

இது சமத்காரமான பதில் அல்ல. நிஜமாகவே இயக்குநர் அப்படிதான் இந்தப் பாடலை அமைத்திருக்கிறார், அப்படிதான் MSV, கண்ணதாசனிடம் கேட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது: அவள் எளிய மெட்டுகளைத் தந்தால் போதும், அவன் அவற்றுக்கு எழுதத் திணறுவதுபோல் காட்சியமைப்பு, ஆகவே வரிகள் கொஞ்சம் சிரமமாக இருக்கவேண்டும். ’உன்னை நினைச்சதும் உள்ளம் குளிருது, உடம்பு முழுக்க வேர்த்துக் கொட்டுது ராஜாத்தி’ என்பதுபோல் எளிமையாக இருந்துவிடக்கூடாது.

இதனால், கண்ணதாசன் கதைக்காக ரொம்பக் கஷ்டப்பட்டு இந்தப் பாடலில் சிரமமான வார்த்தைகளைப் போட்டிருப்பார் என்பது என் ஊகம், Unlike few நவ கவிஞர்கள், கண்ணதாசனுக்குக் கஷ்டமாக எழுதுவதுதான் கஷ்டம், புரியும்படி எளிமையாக எழுதுவது ஈஸி :))

ஒருவேளை இயக்குநர் MSV, கண்ணதாசனிடம் காட்சியை 180 டிகிரி மாற்றிச் சொல்லியிருந்தால் (மெட்டு நிஜமாகவே கடினமாக இருக்கவேண்டும், ஆனால் நாயகன் திணறாமல் கடகடவென்று எழுதியதுபோல் பாடல் வரிகள் எளிமையாக இருக்கவேண்டும்) அப்போதும் இந்த இருவரும் தூள் கிளப்பியிருப்பார்கள்.

அப்போதெல்லாம் திரைப்பாடல்களில் பாத்திரமறிந்துதான் சமையல்!

***

என். சொக்கன் …

06 01 2015


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,787 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2015
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031