இருபத்து நான்கு கதைகள்
Posted by: என். சொக்கன் on: January 16, 2015
- In: Announcements | Books | Fiction | Kids | Uncategorized | ViLambaram
- 4 Comments
ஒரு புது முயற்சியாக, இவ்வாண்டுமுழுக்க மாதம் 2 என 24 சிறுவர் நூல்களை மின்பதிப்பாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இவை அனைத்தும் பிரத்யேகமாக வரையப்பட்ட படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் ஆக, மாதம் 2 + 2 = 4 சிறுவர் கதை நூல்கள். மாதாமாதம் செய்ய இயலாவிட்டாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளியிட்டு டிசம்பருக்குள் 24 என்ற இலக்கை எட்டிவிட உத்தேசம், இறைவன் துணையிருப்பான்.
ஜனவரிக்கான இரு நூல்களின் கதை தயாராகிவிட்டது, ஓவியங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வெளியானதும் விவரம் தெரிவிக்கிறேன்.
இதை ஏன் செய்கிறேன்?
இணையத்தில் மின்புத்தகம் என்ற வடிவம் எனக்கு மிகவும் வசீகரமாக இருக்கிறது. ஆனால் தமிழில் இது எப்படி வேலை செய்யும் என்று தெரியவில்லை. ஒரு முயற்சியாக, இவ்வாண்டு சில மணி நேரங்களையும் சில ஆயிரம் ரூபாய்களையும் (ஓவியங்களுக்காக) இதில் முதலீடு செய்து பார்க்கவுள்ளேன்.
முக்கியமாக, மாதம் இரண்டு குழந்தைக் கதைகள் எழுத இதுவும் ஒரு சாக்கு. மகாமோசமான ஒப்பீடு என்றாலும், பெப்ஸி, கொக்கக்கோலாபோல் குழந்தைப் பருவத்திலேயே புத்தகங்களால் குழந்தைகளை வளைத்துப்போட்டு அடிமைகளாக்கிவிடவேண்டும் என்பது என் எண்ணம். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறமாட்டார்கள், நல்ல நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
லௌகிக விஷயங்கள்?
படங்கள் + கதையுடன் தலா 16 பக்கங்கள் (ஒன்றிரண்டு கூடலாம், குறையலாம்) கொண்ட இந்நூல்களுக்கு தலா ரூ 25 (அல்லது $0.5) என்று விலை வைக்க எண்ணம். கூகுள் இதனை அனுமதிக்கிறது, அமேஸானில் குறைந்தபட்ச விலை $1 என்று நினைவு. அங்கே இரண்டு நூல்களைச் சேர்த்து வெளியிடலாமா, அல்லது ’கையில் காசுள்ள அமேஸானியர்களே, நீங்கள் இருமடங்கு விலைதரக் கடவீர்கள்’ என்று மல்ட்டிப்ளெக்ஸ் பாப்கார்ன்போல விலை வைத்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். (குறிப்பு: அமேஸானில் தமிழ் நூல்கள் வாரா, ஆங்கிலம்மட்டுமே)
அப்புறம் இந்தப் புத்தகங்கள் அச்சில் கிடைக்காது. இப்போதைக்கு மின்வடிவம்மட்டுமே. யாராவது பதிப்பாளர் ஆர்வம் காட்டினால் பார்க்கலாம்.
தமிழ்க் குழந்தைகள் நலன் கருதி இதை நான் ஏன் இலவசமாக இணையத்தில் வெளியிடக்கூடாது?
இதில் காசு பண்ணும் நோக்கம் எனக்கு இல்லை. ஒருவேளை இந்நூல்கள் (தலா) மில்லியன் பிரதி விற்றால் இவ்வெண்ணத்தை மாற்றிக்கொள்வேன்.
On a serious note, இலவசமாக எழுத நான் தயார். இலவசமாக வரைய (ஒவ்வொரு நூலுக்கும் சுமார் 12 கோட்டோவியங்கள் தேவைப்படும்) ஓவியர்கள் கிடைத்தால் கண்டிப்பாகச் செய்யலாம். யாருக்கேனும் ஆர்வமிருந்தால் சொல்லுங்கள்.
உங்கள் குழந்தைகளிடம் சொல்லிவையுங்கள், முதல் புத்தகத்தில் சந்திப்போம்!
***
என். சொக்கன் …
16 01 2015
4 Responses to "இருபத்து நான்கு கதைகள்"

4 | Vaany
January 27, 2015 at 7:05 am
My son can draw well. If you are interested in please let me know. I can send in some pictures he has drawn.

1 | selgan2005
January 16, 2015 at 10:40 am
Sairam sir! How much it will cost for printing?
Sent from my Samsung device