Archive for January 21st, 2015
குறுநூல்கள்
Posted by: என். சொக்கன் on: January 21, 2015
- In: Announcements | Books | eBook | Reading | Uncategorized | ViLambaram
- Leave a Comment
ஆங்கிலத்தில் 5000 முதல் 30,000 சொற்கள் உள்ள மின்புத்தகங்கள் ‘Singles’ என்று அழைக்கிறார்கள். தமிழில் வழக்கமான மின்புத்தகங்களே அந்த அளவில்தான் உள்ளன என்பதால், இன்னும் சிறிதாக சுமார் 1,000 சொற்கள் அளவில், ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனைச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிற மின்னூல்களை நாம் ’குறுநூல்’களாக எழுதினால் என்ன?
இதற்கான தொழில்நுட்பம் இப்போது உள்ளது, தமிழிலும் உள்ளது. ஒரு தலைப்பில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் 1000 சொற்கள் எழுதியபின் அதனை கூகுள் ப்ளே / கூகுள் புக்ஸில் பிரசுரிக்க ஐந்து நிமிடம் போதும். ஆயிரம் சொற்களுக்குள் மேம்போக்காக அன்றி விஷயத்தைச் சுருக்கமாக அறிமுகப்படுத்துவதுதான் சவால், பிரசுரிப்பது அல்ல.
இந்நூல்களை மிகக் குறைந்த விலையில் வெளியிட்டுப் பார்க்கலாம். உதாரணமாக, ரூ 2.49 அல்லது ரூ 4.99!
இவை பெருநூல்களுக்கு மாற்று அல்ல. நேரம் குறைவாக உள்ளவர்கள் ஒரு தலைப்பை விரைவாகப் படித்து ஒரு பறவைப் பார்வையைப் பெறுவதற்கானவை. இங்கிருந்து முழு விவரம் தரும் நூல்களுக்கு அவர்கள் செல்வதை இது தூண்டும்.
குறுநூல்கள் வரிசையில் கதை, வரலாறு, அறிவியல், ஆன்மிகம், பலவிதமான நூல்களைக் கொண்டுவரலாம், ஆயிரம் சொற்களில் கவிதைகூட எழுதலாம்!
ஆயிரம் சொற்கள் என்றால் Blog எழுதிவிடலாமே, மின்னூல் எதற்கு?
இலவசமாகக் கிடைக்கிறது என்பதாலேயே Blogல் மெனக்கெடல் ஒரு மாற்றுக் குறைவாக இருக்கிறது என்பது என் எண்ணம். அதற்கு வரும் பதில் கருத்துகளில் 1% சிறப்பானவை, மீதி 99% வீண் அரட்டைகளாக (அல்லது மிகைப் புகழ்ச்சிகளாக) கவனத்தைச் சிதறடிக்கின்றன. இதனால், இந்தத் தளத்தில்மட்டும் தொடர்ந்து எழுதுகிறவர்களின் மொழிவன்மை, சொல்வளம், நேர்த்தியாகச் சொல்லும் திறமை போன்றவை வளராது, இருப்பதும் குறைந்துகொண்டேதான் போகும் என்பது என்னுடைய ஊகம்.
இது பொதுவான கருத்து அல்ல, என்னுடைய சொந்த அனுபவம் (எழுதுகிறவனாகவும் வாசிக்கிறவனாகவும்). யாரும் எழுதலாம், யாரும் பிரசுரிக்கலாம், யாரும் கருத்து சொல்லலாம் என்பது ஒரு மிகச் சிறந்த விஷயம். அதேசமயம் அந்தச் சுதந்தரம் டிராஃபிக் சிக்னல்கள் இல்லாத, எல்லாரும் எங்கும் வண்டியை ஓட்டலாம் என்பதுபோன்ற சூழ்நிலையாகிவிடும், அது ஒருவருடைய எழுத்தை மேம்படுத்தும் ஒரு களமாக அமையாது என்பதை உணர்ச்சிவயப்படாமல் யோசியுங்கள். ஒருவேளை எழுதுபவருக்கே அடிப்படையில் ஓர் ஒழுக்கமும் உழைப்பும் இருந்தால் இது சாத்தியமே. ஆனால் அப்படிப்பட்டவர்கள் 1%கூட கிடையாது.
ஆகவே ஈபுத்தகத்துக்கு ஒரு பைசா என்றேனும் விலை வைத்து வெளியிட்டால் ஓர் Exclusivity வந்துவிடும், எழுதுபவருக்கும் பொறுப்பு மிகும். அப்போதுதான் இந்த ‘தமிழ் சிங்கிள்ஸ்’ க்ளிக் ஆகும் என்று நினைக்கிறேன், இது தவறாக இருக்கலாம்.
’குறுநூல்கள்’பற்றி எழுதுமுன் இதைச் செய்துபார்த்துவிடலாமே என்று அபிராமி பட்டர்பற்றி முன்பு எழுதிய ஒரு நீண்ட கட்டுரையை(வாழ்க்கை, நான்கைந்து பாடல்கள் சாம்பிள், எளிய விளக்கம்)க் குறுநூலாக மாற்றிப் பார்த்தேன். அட்டைப்படம் செய்யதான் அதிக நேரமானது, மற்றபடி அரை மணி நேரத்துக்குள் புத்தகம் தயார். ஆர்வமுள்ளோர் வாசிக்கலாம், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்.
முக்கியமாக, நீங்கள் ஒரு ’குறுநூல்’ எழுதிப் பாருங்கள். காசு கொடுத்து வாசிக்கப்போகிறவரை, அந்தப் பொறுப்பை மனத்தில் வைத்து, ஆயிரம் சொற்களுக்குள் ஒரு தலைப்பை நேர்த்தியாகச் சொல்லும் விளையாட்டைப் பழகுங்கள். எழுதுகிறவர்களுக்கு அது ஒரு மிக நல்ல பயிற்சி.
https://play.google.com/store/books/details?id=-CBDBgAAQBAJ
http://books.google.co.in/books/about?id=-CBDBgAAQBAJ&redir_esc=y
***
என். சொக்கன் …
21 01 2015