Archive for January 23rd, 2015
நேரக் கணக்கு
Posted January 23, 2015
on:- In: Books | Money
- 3 Comments
சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குவதற்குச் சில நாள் முன்பாக எழுதிய ஒரு பதிவில் ‘இனி நேரடி நூல்கள் எழுதுவதில்லை’ என்று ஒரு வரி குறிப்பிட்டிருந்தேன். பல நண்பர்கள் அது ஏன் என்று பொதுவிலும் தனி அஞ்சலிலும் கேட்டிருந்தார்கள். புக்ஃபேர் நேரத்தில் வேண்டாம் என்று காத்திருந்து இப்போது எழுதுகிறேன்.
முதலில், இந்தப் பதிவின் நோக்கம் புலம்புவதோ குற்றம் சாட்டுவதோ அல்ல. அப்படி ஒரு தொனி தென்பட்டால் அது நிச்சயம் எதேச்சையானதே.
கடந்த பத்தாண்டுகளில் நான் பல நேரடி நூல்களை எழுதியுள்ளேன். அவை அனைத்தும் பதிப்பகத்தார் கேட்டு, அதன்படி எழுதப்பட்டவை. கொஞ்சம் MBA பாஷையில் சொல்வதென்றால், Made to Order.
’என்னது? Order, Make போன்ற பொருளியல் பதங்களைப் புத்தகங்களுக்குப் பயன்படுத்துவதா?’ என்று பொங்கியெழவேண்டாம். Nonfiction வகை நூல்கள் தமிழில் இவ்வாறுதான் எழுதப்பட்டுவந்திருக்கின்றன, எழுதப்படுகின்றன. Fiction நூல்கள்மட்டுமே எழுத்தாளர் தன் ஆர்வத்தின் அடிப்படையில் எழுதிப் பின் பதிப்பகத்தைத் தேடுகிறார். மற்ற நூல்கள் பெரும்பாலும் பதிப்பகத்தால் கோரப்படும், ஒருவர் எழுதுவார், இதுவே முறை.
சில நேரங்களில் நிபுணர்கள் தங்கள் துறை சார்ந்த விஷயங்களைத் தாங்களே ஆர்வமாக எழுதுவதுண்டு. அல்லது, சொந்த விருப்பத்தின் பேரில் சில Nonfiction விஷயங்கள் எழுதப்படுவதுண்டு. மற்றபடி, பதிப்பகம் கேட்பதும், பின் ஒருவர் Made to Order முறையில் எழுதுவதும் வழக்கம்.
ஆக, கோரிப் பெறப்பட்ட நூல்கள் என்றமுறையில், அது மிக மோசமாக அமைந்து பிரசுரமாகாவிட்டாலன்றி அந்நூலை எழுதியவர் இவற்றுக்கு உரிய ஊதியம் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. காரணம், அவர் பதிப்பகத்தின் கோரிக்கையின்பேரில் அந்நூலுக்காக நேரம் செலவிட்டிருக்கிறார். அவர்கள் கேட்காவிட்டால் அவர் அந்நேரத்தைச் செலவிட்டிருக்கப்போவதில்லை.
இந்த ‘ஊதியம்’ இருவிதமாக வழங்கப்படலாம்:
1. ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கிக் கணக்கைத் தீர்த்துவிடலாம், அதன்பிறகு நூலுக்கும் ஆசிரியருக்கும் சம்பந்தமில்லை, அவர் பெயர் வரும், ஆனால் நூல் எவ்வளவு விற்றாலும் கூடுதல் பணம் எதுவும் அவருக்கு வழங்கப்படாது
2. விற்கும் நூல்களுக்கு ஏற்றபடி ஒரு ராயல்டி தொகை 7.5% அல்லது 10% தரப்படலாம்
ஒருவிதத்தில் முதல் வகை நல்லது, எழுதியதற்கு உடனே பணம் வருகிறது. வேறு வேலையைப் பார்க்கலாம்.
இன்னொருவிதத்தில் இரண்டாவது வகை நல்லது, புத்தகம் நன்கு விற்றால் நன்கு சம்பாதிக்கலாம்.
ஆனால், இரண்டாவது வகையில் ஓர் அபாயம் உண்டு. புத்தகம் ஒருவேளை நூறு பிரதிகள்மட்டுமே விற்றால், அதற்கான ராயல்டி சொற்பமாகவே இருக்கும். எழுதியவரின் மைக்கூலி(அல்லது கம்ப்யூட்டருக்கான மின்சாரக்கூலி)கூட திரும்பக் கிடைக்காது.
ஆகவே, இந்த இரண்டாம் வகையில் ஓர் உப பிரிவாக, முதல் அச்சு செய்த நூல்களுக்கான ராயல்டியை முன்பணமாகத் தந்துவிடுவது வழக்கத்தில் உள்ளது. உதாரணமாக, 500 பிரதிகள் அச்சிட்டால், அதில் 10%, அதாவது 500 பிரதிகளும் விற்றால் என்ன தொகை வரக்கூடுமோ, அதில் பத்து சதவிகிதம் பணம் உடனே தரப்படும். இதை First Print Royalty என்பார்கள்.
ஒரு சின்ன கணக்கு:
160 பக்க நூல் ஒன்று, விலை 120 ரூபாய் என்று வைப்போம். ஆக, 500 பிரதிகளின் விலை 500 * 120 = அறுபதாயிரம் ரூபாய். அதில் 10% ஆறாயிரம் ரூபாய்.
இந்தத் தொகை புத்தகம் அச்சானதும் எழுத்தாளருக்குத் தரப்படும். செய்த வேலைக்கு உடனே ஒரு பணம் வந்தது என்று அவர் மகிழ்வார்.
பின்னர் அந்நூல் பத்தாயிரம் பிரதிகள் விற்றால், அதற்கான கூடுதல் ராயல்டி அடுத்த ஆண்டோ அதன்பிறகோ அவருக்குக் கிடைக்கும். ஆனால் அதற்குப் பல மாதங்கள் ஆகும். புத்தகம் சரியாக விற்காவிட்டால் இந்த ஆறாயிரம் ரூபாயோடு அவர் திருப்தியடையவேண்டியதுதான்.
இதுவரை நான் சொன்னது, 2004ல் என் முதல் நூல் வெளியானதிலிருந்து பல பதிப்பகங்களில் நான் கண்ட நடைமுறை. First Print Royalty உடனே கிடைப்பது தொடர்ந்து எழுத ஓர் ஊக்கமாக இருந்தது. என்னைப்போல் வேறு வேலை செய்துகொண்டு எழுதுகிறவர்களுக்கு இது அவசியம் தேவை, காரணம், நாங்கள் வீட்டாருடன் செலவழிக்கவேண்டிய நேரத்தை நூலுக்குத் தருகிறோம். அதற்குப் பதிலாக இப்படி ஏதாவது கிடைத்தால்தான் மனைவி முணுமுணுக்காமலிருப்பார்.
கடந்த சில ஆண்டுகளாக, மேற்சொன்ன நடைமுறையில் சிறு மாற்றம் ஏற்பட்டுவிட்டது. First Print Royalty என்பதை நான் எழுதும் பதிப்பாளர்களில் பெரும்பாலானோர் தருவதில்லை. 2012லிருந்து நான் எழுதிய நூல்களில் இரண்டு நூல்களுக்குதான் First Print Royalty பெற்றிருக்கிறேன். அதில் ஒன்று சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டது, இன்னொன்று கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது.
ஆக, கடந்த இரண்டரைச் சொச்ச ஆண்டுகளாக நான் எழுதிய நூல்களில் பெரும்பாலானவற்றுக்கு இதுவரை ஒரு பைசாவும் எனக்கு வரவில்லை. மின்சாரக்கூலிகூட வரவில்லை, எழுத்துக்கூலியெல்லாம் அப்புறம்.
இதுபற்றிப் பதிப்பக நண்பர்களுடன் நிறைய பேசிப் பார்த்தேன். அவர்களுக்கு ப்ராக்டிகல் பிரச்னைகள் இருப்பது புரிகிறது. அதேசமயம் ஒரு Made To Order Productஐச் செய்து தந்துவிட்டு அதற்கான ஊதியத்தை எதிர்பார்த்து வருடக்கணக்கில் காத்திருப்பது நியாயமாகப் படவில்லை.
ஆகவே, பதிப்பகங்களுக்கான நேரடி நூல்கள் எழுதுவதில்லை என்று தீர்மானித்தேன். இனிமேலும் பத்திரிகைகளில் வரும் என் தொடர்கள், இணையத்தில் எழுதுபவை போன்றவற்றைமட்டும் கேட்பவர்களுக்குத் தரலாம் என்று நினைக்கிறேன். அவற்றுக்கான ராயல்டி தாமதமாக வந்தாலும் எனக்குப் பெரிய வருத்தமில்லை. காரணம், அவற்றில் இன்னொருவர் என் நேரத்தைத் தீர்மானிப்பதில்லை, அந்தச் சுதந்தரம் எனக்குள்ளது.
இந்தத் தீர்மானத்தை எடுத்தபின் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன், உணர்கிறேன். நிறைய நேரம் கிடைக்கிறது, அதை வேறு பணிகளுக்குச் செலவிடுகிறேன், இணையத்தில் நினைத்ததை எழுத இயலுகிறது. அவை அச்சில் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி.
***
என். சொக்கன் …
23 01 2015