Archive for March 2015
Brave Bhumika’s Adventure
Posted March 21, 2015
on:- In: Books | Fun | Kids | Uncategorized
- 2 Comments
Brave Bhumika’s Adventure
Story: N. Chokkan, N. Nangai, N. Mangai
Illustrations: Pratham Books
Bhumika is a brave girl, who enjoys nature.
One day, a fox tries to attack her and leads her to a great adventure. Did Bhumika get back home? Read this story to find out.
ரசிகரே, சிந்தியும்
Posted March 20, 2015
on:- In: Fans | Games | Uncategorized
- 3 Comments
ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன், நான் போன ஜெனரேஷன், சச்சின் பிரியன், அவரோடு கிரிக்கெட் ஆர்வம் தீர்ந்துவிட்டது, ஆகவே, இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் எனக்கு ஆர்வமில்லை. அவ்வப்போது ஸ்கோர் பார்க்கிறேன், ஒருவேளை இந்தியா வென்றால் அரை இஞ்ச் கூடுதலாக மகிழ்வேன். அவ்வளவே.
ஆகவே, இது உலகக் கோப்பைபற்றிய பதிவு அல்ல. அதை நாம் எப்படிப் பார்க்கத் தொடங்கிவிட்டோம் என்பதுபற்றிய பதிவு.
இந்தப் போட்டி தொடங்கியதிலிருந்து, இந்தியாவுடன் மோதும் அணி எதுவானாலும் அதை மிகக் கேவலமாக விமர்சித்தே பல பதிவுகள் வந்துகொண்டிருந்தன. அதிலும் அந்த அணியில் யாராவது கொஞ்சம் தன்னம்பிக்கையோடு ஒரு வார்த்தை பேசிவிட்டால் போச்சு, அவர்களை மகா மோசமாக மட்டம் தட்டிப் பதிவுகளும் புகைப்படங்களும் அநாகரிகமான வசனங்களும்… திறமைசாலி அணியான தென் ஆப்பிரிக்கா தொடங்கி, கத்துக்குட்டி அணிகள், சுமாரான அணிகள்வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை.
அதிலும், யாராவது நாக்கவுட் ஸ்டேஜில் வெளியேறினால் அந்தத் தோல்வியைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ‘ஊருக்குப் பார்த்துப் போ, வழியில தடுமாறி விழுந்து பல்லை உடைச்சுக்காதே’ என்கிற ரேஞ்சுக்கு.
இந்தியா இதுவரை ஏழு போட்டிகளில் வென்றுள்ளது. ஒவ்வொரு போட்டியையும் நாம் வெல்ல வெல்ல, ரசிகர்களின் arrogance படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்றதை வெளிப்படையாகப் பார்த்தேன்.
ஒருவேளை, வெளிநாட்டு ரசிகர்களும் அந்தந்த நாட்டின் வெற்றிகளை இப்படிதான் எதிராளிமீதான ஆவேசமாகப் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை.
வெற்றியின்மீது கண் இருக்கவேண்டியதுதான், விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கும் நம் புத்தி எங்கே போனது? தோற்றவன் நாளை ஜெயிக்கமாட்டானா? அதனால் அவனுக்கிருக்கும்/ இருந்த திறமையெல்லாம் இல்லாமல் போய்விடுமா? ஓரணி வெல்லவும் பத்து அணிகள் அசிங்கப்படவும்தானா உலகக்கோப்பை?
***
என். சொக்கன் …
20 03 2015
முகமும் அகமும்
Posted March 14, 2015
on:- In: Students | Uncategorized | Women | Youth
- Leave a Comment
நண்பர் வைப்ரண்ட் சுப்புவுடன் இன்னொரு கல்லூரிக்குச் சென்று பேசி வந்தேன்.
மற்ற கல்லூரிகளுக்கும் இதற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம், இங்கே பயில்பவர்கள் பலரும் வறுமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்திருப்பவர்கள். குறைந்தபட்சம் 40% பேரின் குடும்பத்தில் முதன்முதலாகக் கல்லூரிக்குச் செல்பவர்களே இவர்கள்தான், அதில் பெரும்பாலானோர் வீட்டில் முதன்முதலாக எழுதப் படிக்கக் கற்பவர்களே இவர்கள்தான்.
முக்கியமாக, எல்லாரும் பெண்கள். பலர் ஏழைப் பெண்கள், மலைவாழ் குடும்பத்தினர், சிலர் திருமணமானவர்கள், ஒரு கர்ப்பிணிப் பெண்கூட இருந்தார். இவர்கள் MBA படிக்கக் கடந்துவந்திருக்கக்கூடிய மன, நிஜத்தடைகளைக் கற்பனை செய்வது சுலபம்தான்.
இதற்குமுன் சுப்பு அவர்களுடன் நான் சென்று பேசிய கல்லூரிகள் அனைத்திலும் ஒரு பொதுமைத்தன்மையைப் பார்த்திருக்கிறேன்: சுமார் 5% பேர் என்னுடைய (அல்லது பேசுபவர் யாரோ அவருடைய) பேச்சில் ஆர்வம் காட்டுவார்கள். 70% பேர் ஆர்வமும் இல்லாமல் அலட்சியமும் இல்லாமல் அமர்ந்திருப்பார்கள், மீதமுள்ள 25% பேர் ‘நீ யார் சொல்ல? நான் யார் கேட்க?’ என்று இருப்பார்கள்.
ஆனால், அவையனைத்தும் தனியார் கல்லூரிகள். பெற்றோர் ஃபீஸ் கட்ட, சிலர் பொறுப்புடன் படிப்பதும், சிலர் பொறுப்பை அலட்சியப்படுத்துவதும், பலர் நதியின் போக்கில் செல்வதும் இயல்புதான்.
இந்தக் கல்லூரியில், அந்த வகைபாடே இல்லை. கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் பேசினேன். அனைத்துப் பெண்களும் மிகுந்த அக்கறையோடு கேட்டார்கள், குறிப்பு எடுத்துக்கொண்டார்கள். அந்த வயதுக்கே உரிய விளையாட்டுகளும், அவ்வப்போது Break எதிர்பார்ப்பதும், தீனி, துண்டுச்சீட்டுப் பரிமாற்றங்களும் இருந்தன. ஆனால் ஒருவர்கூட அந்நிகழ்ச்சியை அலட்சியமாகப் பார்த்ததுபோல் தெரியவில்லை.
அது எப்படி உனக்குத் தெரியும் என்று கேட்காதீர்கள். இத்தனை ஆண்டுகளில் பல அலுவலகங்களிலும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலுமாகக் குறைந்தபட்சம் 5000 பேருக்கு வகுப்பெடுத்திருக்கிறேன். ”மாணவர்”களின் முகமொழி எனக்குத் தெரியும் 🙂
இந்த வகுப்பில், அந்தப் பெண்களிடம் நிஜமான அக்கறை தெரிந்தது. அதற்குக் காரணம் என் வாக்குவன்மை அல்ல, இவன் சொல்லப்போகும் விஷயம் நமக்கு ஏதாவது ஒருவிதத்தில் பயன்படுமா என்கிற எதிர்பார்ப்புதான். நல்லது எங்கிருந்து வந்தாலும் அதை உறிஞ்சிக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தார்கள். வகுப்புக்கு மேற்கத்திய உடையும் இதில்தான் பேசவேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட ஆங்கிலமும் அங்கே கற்றுத்தரப்பட்ட பிற ’Executive’ வழிமுறைகளும் அவர்களுக்கு இன்னும் அந்நியமாகவே இருப்பதுபோல் தோன்றியது. ஆனால் அவற்றினிடையே தங்களால் இயல்பாக எதைச் செய்யமுடியும் என்று அவர்கள் புரிந்துவைத்திருப்பது அவர்களுடைய பேச்சில் தெரிந்தது. கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சட்டென்று பதில் வராவிட்டாலும், தயக்கத்துக்குப்பின் வந்த பதில்கள், சிந்தனைகள் அற்புதமாக இருந்தன.
அந்த அக்கறை, இன்னும் சில மாதங்களில் அவர்கள் சந்திக்கப்போகும் ‘வேலைப் பந்தய’த்திலும் வாழ்க்கைப் பந்தயத்திலும் வெற்றியடைய அவர்களுக்கு உதவட்டும். ஆமென்!
***
என். சொக்கன் …
14 03 2015
உருகிய வில்லன்
Posted March 7, 2015
on:- In: Humor | Kids | Short Story | Uncategorized
- 3 Comments
டிங்கிள் நிறுவனம் ஒரு போட்டி அறிவித்திருக்கிறது.
ஐந்து வில்லன்களின் பெயர்களைத் தருவார்கள். அவர்களில் யாரேனும் ஒருவரை எடுத்துக்கொண்டு 250 சொற்களில் (ஆங்கிலக்) கதை எழுதவேண்டும். அந்தக் கதையின் நிறைவில் அந்த வில்லன் ஹீரோவாக மாறிவிடவேண்டும். இந்த மாத Theme “Make the world a better place” என்பதால், கதை அதற்குத் தகுந்தவிதமாகவும் அமையவேண்டும்.
இப்படி அவர்கள் தந்த ஐந்து வில்லன்களில் ராவணனை எடுத்துக்கொண்டு நானும் நங்கையும் ஒரு கதை செய்தோம். நங்கை ஆங்கிலத்தில் எழுதிப் போட்டிக்குச் சமர்ப்பித்துவிட்டாள். நான் தமிழில் எழுதியிருக்கிறேன்.
********************************************
உருகிய வில்லன்
********************************************
ராவணன் கோபத்தில் கொதித்தான்.
காரணம், ராமனும் அவனது குரங்குப் படையும் இலங்கைக்கு வந்துவிட்டார்கள். ராவணனோடு போரிடத் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.
பத்துத் தலை ராவணன், பார்ப்பவர்களெல்லாம் நடுங்கும் ராவணன், போயும் போயும் ஒரு மனிதனுடன், குரங்குக் கூட்டத்துடன் மோதுவதா? அவமானம்!
ராவணன் ஆத்திரத்தில் அவர்களை நசுக்கிவிட எண்ணினான். எல்லாரும் அவன் முகத்தைப் பார்க்கவே பயந்தார்கள்.
தன்னுடைய பெரிய தேரில் ஏறினான் ராவணன். சிறந்த ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு போர்க்களத்துக்குச் சென்றான். அவனுக்குப் பின்னால் ஒரு பெரிய படை வந்தது. நடந்து வரும் வீரர்கள், குதிரையில் வருகிறவர்கள், தேர்மேல் வருகிறவர்கள், யானையில் வருகிறவர்கள்… எல்லாரும் ராவணனின் கட்டளைக்காகக் காத்திருந்தார்கள். அவன் தலையசைத்தால் எதிரிமீது பாய்ந்துவிடுவார்கள்.
ராவணன் போர்க்களத்துக்கு வந்தான். தன் எதிரிப் படையை அலட்சியமாகப் பார்த்தான். சட்டென்று அவன் முகம் மாறியது. ‘இவங்கல்லாம் போர்க்கு இன்னும் தயாராகலையா?’
’ஏன் அப்படிக் கேட்கறீங்க?’ ராவணனின் படைத் தளபதி விசாரித்தான்.
‘ஒருத்தர் கையிலயும் ஆயுதத்தைக் காணோமே!’
படைத் தளபதி சிரித்தான். ‘குரங்குகளுக்கு ஏது ஆயுதம்? அவங்களுக்கு வாளை எந்தப் பக்கம் பிடிக்கறதுன்னுகூட தெரியாது!’
‘அப்புறம் எப்படிச் சண்டை போடுவாங்க?’
‘சுத்தி ஏகப்பட்ட மரங்கள், பாறைகள்லாம் இருக்கே, அதைப் பிடுங்கி நம்ம மேல எறிவாங்க, அதுதான் அவங்களோட ஆயுதம்!’
ராவணன் சற்றே யோசித்தான். பிறகு ராமனைப் பார்த்து, ‘நமக்குள்ள சண்டை வேண்டாம், இந்தப் போரை நிறுத்திடுவோம், நீ என்ன கேட்டாலும் தந்துடறேன்’ என்றான்.
எல்லாரும் வியந்துபோனார்கள். போருக்கு வந்த ராவணன் இப்படித் திடீரென்று மனம் மாறியது ஏன்? இந்தக் குரங்குகளைப் பார்த்துப் பயந்துவிட்டானா?
‘இல்லை!’ என்றான் ராவணன். ‘ஏற்கெனவே நம்ம பூமியில மரங்கள் குறைஞ்சுகிட்டிருக்கு, சுற்றுச்சூழல் பாழாகிட்டிருக்குன்னு சொல்றாங்க, இந்த லட்சணத்துல இத்தனை குரங்குகளும் ஆளுக்கு நாலு மரத்தைப் பிடுங்கிச் சண்டை போட்டுச்சுன்னா இன்னும் பிரச்னை, நம்ம சண்டைக்காக உலகத்தைப் பாழாக்கணுமா? அதான் என் மனசை மாத்திக்கிட்டேன்!’
போரைப் பார்ப்பதற்காக வந்திருந்த தேவர்களும் ராவணனைப் பாராட்டிக் கை தட்டினார்கள்!
***
என். சொக்கன் …
07 03 2015