Archive for March 20th, 2015
ரசிகரே, சிந்தியும்
Posted March 20, 2015
on:- In: Fans | Games | Uncategorized
- 3 Comments
ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன், நான் போன ஜெனரேஷன், சச்சின் பிரியன், அவரோடு கிரிக்கெட் ஆர்வம் தீர்ந்துவிட்டது, ஆகவே, இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் எனக்கு ஆர்வமில்லை. அவ்வப்போது ஸ்கோர் பார்க்கிறேன், ஒருவேளை இந்தியா வென்றால் அரை இஞ்ச் கூடுதலாக மகிழ்வேன். அவ்வளவே.
ஆகவே, இது உலகக் கோப்பைபற்றிய பதிவு அல்ல. அதை நாம் எப்படிப் பார்க்கத் தொடங்கிவிட்டோம் என்பதுபற்றிய பதிவு.
இந்தப் போட்டி தொடங்கியதிலிருந்து, இந்தியாவுடன் மோதும் அணி எதுவானாலும் அதை மிகக் கேவலமாக விமர்சித்தே பல பதிவுகள் வந்துகொண்டிருந்தன. அதிலும் அந்த அணியில் யாராவது கொஞ்சம் தன்னம்பிக்கையோடு ஒரு வார்த்தை பேசிவிட்டால் போச்சு, அவர்களை மகா மோசமாக மட்டம் தட்டிப் பதிவுகளும் புகைப்படங்களும் அநாகரிகமான வசனங்களும்… திறமைசாலி அணியான தென் ஆப்பிரிக்கா தொடங்கி, கத்துக்குட்டி அணிகள், சுமாரான அணிகள்வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை.
அதிலும், யாராவது நாக்கவுட் ஸ்டேஜில் வெளியேறினால் அந்தத் தோல்வியைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ‘ஊருக்குப் பார்த்துப் போ, வழியில தடுமாறி விழுந்து பல்லை உடைச்சுக்காதே’ என்கிற ரேஞ்சுக்கு.
இந்தியா இதுவரை ஏழு போட்டிகளில் வென்றுள்ளது. ஒவ்வொரு போட்டியையும் நாம் வெல்ல வெல்ல, ரசிகர்களின் arrogance படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்றதை வெளிப்படையாகப் பார்த்தேன்.
ஒருவேளை, வெளிநாட்டு ரசிகர்களும் அந்தந்த நாட்டின் வெற்றிகளை இப்படிதான் எதிராளிமீதான ஆவேசமாகப் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை.
வெற்றியின்மீது கண் இருக்கவேண்டியதுதான், விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கும் நம் புத்தி எங்கே போனது? தோற்றவன் நாளை ஜெயிக்கமாட்டானா? அதனால் அவனுக்கிருக்கும்/ இருந்த திறமையெல்லாம் இல்லாமல் போய்விடுமா? ஓரணி வெல்லவும் பத்து அணிகள் அசிங்கப்படவும்தானா உலகக்கோப்பை?
***
என். சொக்கன் …
20 03 2015