Archive for March 1st, 2016
நிறுத்தம்
Posted March 1, 2016
on:- In: Ilayaraja | Poetry | Tamil | Uncategorized
- 2 Comments
’விருது பெற்ற சிவசாமியின் மகன் கந்தசாமியே, வாழ்க’ என்று (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஒரு சுவரொட்டியைக் கண்டேன்.
இங்கே விருது பெற்றவர் சிவசாமியா, கந்தசாமியா?
வாழ்த்து கந்தசாமிக்குதான் என்பதால், விருதுபெற்றவரும் அவரே என்று ஊகிக்கிறேன். இந்த வாசகத்தைக் குழப்பமின்றி இப்படி எழுதியிருக்கலாம்: விருது பெற்றவரே, சிவசாமியின் மகனே, கந்தசாமியே, வாழ்க!
அதுநிற்க. இந்தக் குழப்பம் கவிஞர்களுக்கும் உண்டு. வாலியின் பிரபலமான இந்தப் பாடல்:
ஒரு மான், மழுவும்
சிறு கூன் பிறையும்
சடைவார் குழலும்
விடை வாகனமும்
கொண்ட(*) நாயகனின்(**)
குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே,
இட பாகத்திலே.
இங்கே ஒற்றை நட்சத்திரக்குறி உள்ள இடத்தில் நிறுத்திப் படித்தால், மான், மழு, பிறை, குழல், விடை வாகனம் எல்லாம் நாயகி(உமையம்மை)க்குச் சொந்தமாகிவிடும்.
அதற்குப்பதிலாக, இரட்டை நட்சத்திரக்குறி உள்ள இடத்தில் நிறுத்திப்படித்தினால், இவை அனைத்தும் நாயகனுக்கு(சிவனுக்கு)ச் சொந்தமாகிவிடும்.
இளையராஜா & குழுவினர் இதைப் பாடும்போது எங்கே நிறுத்துகிறார்கள் என்று கவனியுங்கள். இந்த மெட்டு அந்த இரட்டை நட்சத்திரக்குறி உள்ள இடத்தில்தான் நிறுத்தப்படும், ஆகவே, வாலி அந்த மீட்டரைக் கணக்குவைத்து மிகச் சரியாக எழுதியுள்ளார்.
இன்னோர் இளையராஜா பாட்டு, அதுவும் வாலி எழுதியதுதான்:
’மாசுஅறு பொன்னே வருக,
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!’
இதைப் பாடும்போது எங்கே நிறுத்தவேண்டும்?
திரிபுரத்தை எரித்தவன் ஈசன், ஆகவே, ‘திரிபுரம் அதை எரித்த ஈசனின்’ என்று சொல்லிவிட்டு, அதன்பிறகு ‘பங்கே’ என்று சொல்லவேண்டும்.
ஆனால் பாடுகிறவர்கள் அப்படியா பாடுகிறார்கள்?
‘மாசறு பொன்னே வருக, திரிபுரமதை எரித்த’ என்று pause விட்டு, ஈசனின் பங்கே என்கிறார்கள். இதன் பொருள், திரிபுரத்தை எரித்தவளே, ஈசனின் பங்கே என்பது, அதாவது, திரிபுரத்தை எரித்தவள் தேவி என்று பொருளாகிறது. (கவனமாக, இருவிதமாகவும் சொல்லிப்பாருங்கள், வித்தியாசம் புரியும்!)
அவள் திரிபுர சுந்தரி, அவன்தான் திரிபுர சம்ஹாரன் 🙂
இது பாடகர்களின் பிழை அல்ல, அந்த மெட்டு அந்த இடத்தில்தான் நிற்கும் என்று முன்கூட்டியே அறிந்த கவிஞர்தான் அதைக் கவனித்திருக்கவேண்டும். ஒருவேளை அவர் எழுதியபின் இசையமைப்பாளர் மெட்டமைத்திருந்தால், அவர் மெட்டை அதற்கேற்ப வளைத்திருக்கவேண்டும். குறைந்தபட்சம், பாடல் பதிவின்போது இதனைக் கண்டறிந்து சரி செய்திருக்கவேண்டும்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது யாருடைய பிழையும் அல்ல. திரிபுரத்தை எரித்தவனின் இடபாகத்தில் அவள்தானே இருக்கிறாள், ஒரு(வர்) கை வில்லை இழுத்தால், இன்னொரு(வர்) கைதானே அம்பை விட்டிருக்கும்!
சிவன் அம்பே பயன்படுத்தாமல் முப்புரத்தைச் சிரிப்பால் எரித்தான் என்பார்களே.
அப்படிப் பார்த்தாலும், அந்தப் புன்னகையில் பாதி அம்பிகையுடையது!
***
என். சொக்கன் …
01 03 2016