அடைத்ததும் திறந்ததும்
Posted March 21, 2016
on:- In: Bangalore | People | Uncategorized
- 1 Comment
சென்ற வருடம் கிட்டத்தட்ட இதே நேரம், என்னுடைய அலுவலக அறையில் குளிர்சாதனப் பிரச்னை.
அதாவது, என் அறைக்கு வெளியே இருக்கும் குளிர்சாதனப்பெட்டியில் என்ன வெப்பநிலை வைத்தாலும் சரி, அது தானாக பதினேழு டிகிரிக்கு மாறிவிடும், சிறிதுநேரத்தில் உடம்பெல்லாம் நடுங்கும், ஒரு நாளைக்கு முப்பதுமுறை மூச்சா போகவேண்டியிருக்கும்.
எனக்குமட்டும்தான் இந்தப் பிரச்னை, என் அறைக்கு வெளியே அமர்ந்திருப்போருக்கும் அதே ஏஸிதான், ஆனால் அவர்களுடைய வெப்பநிலை சரியாகவே இருந்தது.
அவ்வப்போது என் ரூமில் ஆங்காங்கே கிறிஸ்துமஸ் அலங்காரம்போலப் பனியெல்லாம் பொழிய ஆரம்பித்துவிடும், பதற்றத்தோடு ஓடிச் சென்று அந்த ஏஸியை அணைத்துவைப்பேன். ஐந்தாவது நிமிடம் வெளியே அமர்ந்திருக்கிற யாராவது அதை மறுபடி முடுக்கிவிடுவார்கள், உள்ளே நான் நடுங்க ஆரம்பித்துவிடுவேன்.
’இதைச் சரிசெஞ்சு தொலைங்களேன்’ என்று எங்கள் அலுவலக நிர்வாகியிடம் பலமுறை கேட்டுவிட்டேன், ‘நாளைக்கு, நாளைக்கு’ என்றாரே தவிர, பிரச்னையைச் சரிசெய்யவில்லை.
ஒருகட்டத்தில், ‘இதைக் கட்டட முதலாளிதான் சார் சரிசெய்யணும், நாம கைவைக்கமுடியாது’ என்று தட்டிக்கழிக்க ஆரம்பித்தார். நான் கடுப்பாகிவிட்டேன். ‘எனக்கு ஏஸியே வேணாம், இதை முதல்ல எடுங்க’ என்று சொல்லிவிட்டேன்.’
‘சார், உங்க கேபினுக்குமட்டும் தனி ஏஸி கிடையாதே, நான் எதை எடுக்க?’
’என் ரூமுக்குள்ள குளிர்காத்து வர்ற துவாரம் ஒண்ணு இருக்குமில்லையா? அதை அடைங்க!’
அவர் என்னை விநோதமாகப் பார்த்து, ‘சார், ஏஸி இல்லாம எப்படி வேலை பார்ப்பீங்க?’ என்றார்.
‘பதினேழு டிகிரியில பதுங்கிக்கிடக்கறதைவிட அது பெட்டர்’ என்றேன், ‘பெங்களூர்ல எதுக்கு ஏஸி? முதல்ல இதை அடைங்க!’
அவர் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார், நான் கேட்கவில்லை. ‘ஒன்று பிரச்னையைச் சரிசெய், இல்லாவிட்டால் எனக்கு ஏஸியே வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன்.
ஒருநாள், இரண்டு பேரைக் கூட்டிக்கொண்டுவந்து ஏணி போட்டு மேலே ஏறி ஏதோ செய்தார்கள், இனி குளிர்க்காற்று என் அறைக்குள் வராது.
அன்றைக்குமுழுக்க எதையோ சாதித்துவிட்டதுபோல் திமிராக இருந்தது. நாள்முழுக்க ஏஸியில வேலை செஞ்சா உடம்புக்கு நல்லதில்லை என்று எங்கேயோ படித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. அலுவலகக் கூட்டங்களில் ‘உஸ்ஸ்….’ என்று ஏஸி ரிமோட்டைத் தேடுகிறவர்களைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தேன்.
1 | nparamasivam1951
March 21, 2016 at 7:58 pm
கோடையா? கடும் கோடை. இது பங்களூரா அல்லது சென்னையா என்று கூட சந்தேகம் வருகிறது.