தந்தைமை
Posted April 1, 2016
on:- In: Bangalore | Characters | People | Uncategorized
- 2 Comments
சக ஊழியர் ஒருவருடைய தங்கைக்குச் சிறு சாலை விபத்து. திடீர் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றவர் இன்று வேலைக்குத் திரும்பினார். ‘எப்படி இருக்காங்க உங்க தங்கச்சி?’ என்று விசாரித்தேன்.
‘நல்லா இருக்கா சார், வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்துட்டோம்’ என்றார்.
‘என்ன பிரச்னை?’
’சிக்னல்ல ரோட்டைத் தாண்டும்போது ஒரு பைக் வந்து இடிச்சிடுச்சு!’
‘யார்மேல தப்பு?’
‘பைக் ஓட்டினவன்மேலதான்’ என்றார், ‘சிவப்பு சிக்னலைத் தாண்டி வந்திருக்கான்.’
‘அடடா, அப்புறம்?’
‘நல்லவேளை, சிக்னலைத் தாண்டினவனுக்குக் கொஞ்சமாவது புத்தி இருந்திருக்கு, சட்டுன்னு தப்பிச்சு ஓடிடாம, அவனே இவளை மருத்துவமனைக்குக் கூட்டிகிட்டுப்போயிருக்கான், சிகிச்சைக்கு வேண்டிய பணத்தைக் கட்டி, எங்களுக்கு விவரம் சொல்லி, நாங்க வர்றவரைக்கும் அங்கேயே இருந்து.. நல்லவன்தான்’ என்று சிரித்தார்.
’இப்ப ஒண்ணும் பிரச்னையில்லையே?’
‘ஒண்ணும் பிரச்னையில்லை சார், அவ நல்லாதான் இருக்கா’ என்றவர் ‘எங்கப்பாதான் கொஞ்சம் சொதப்பிட்டார்’ என்றார்.
‘ஏன்? என்னாச்சு?’
‘சிக்னலைத் தாண்டினது அவன் தப்புதானே? அப்ப சிகிச்சைக்கு அவன்தானே பணம் கொடுக்கணும்? நான் வர்றதுக்குள்ள இவரே வலியப்போய் அவனுக்கு மொத்தப் பணத்தையும் கொடுத்திருக்கார், பொழக்கத்தெரியாத ஆளு!’ என்று சலித்துக்கொண்டபோது, அந்தச் சிரிப்பில் கொஞ்சம் பெருமையும் கலந்திருந்ததை ரசித்தேன்.
***
என். சொக்கன் …
01 04 2016
1 | nparamasivam1951
April 1, 2016 at 9:58 pm
எனக்கு என்னவோ உங்கள் நண்பரின் தந்தை செய்தது தான் சரி என படுகிறது.