மின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்
Posted January 9, 2018
on:- In: Books | eBook | Uncategorized
- 1 Comment
விமலாதித்த மாமல்லனின் மிக முக்கியமான கட்டுரை இது, நூல் எழுதியவர்கள், எழுதிக்கொண்டிருக்கிறவர்கள், எழுதப்போகிறவர்கள் எல்லாரும் கண்டிப்பாக ஒருமுறை வாசித்துவிடுங்கள்:
http://www.maamallan.com/2018/01/ebook.html
அமேசானில் வேலைசெய்கிறேன் என்பதற்காகச் சொல்லவில்லை, தமிழின் வாசகப்”பரப்பை” ஓரளவு அறிந்தவன் என்றமுறையில் சொல்கிறேன், அடுத்த சில ஆண்டுகளில் மின்னூல்கள் மிகப்பெரிய அளவில் பரவப்போகின்றன, கோடிக்கணக்கில் இல்லையென்றாலும் ஆயிரக்கணக்கில் நூல்களை விற்கும் வாய்ப்பு சிலருக்கேனும் அமையப்போகிறது, அந்தப் பெரிய பட்டியலில் இடம்பெறாதவர்களும் நூற்றுக்கணக்கில் தாங்களே விற்கலாம், எந்தத் துறையிலும் Long Tail (Google it!) மிகப்பெரிது.
ஆகவே, மின்னூல் உரிமையை அலட்சியமாகக் கருதாதீர்கள். நீங்களே பிரசுரிப்பதானாலும் சரி, இன்னொரு பதிப்பாளருக்குத் தருவதானாலும் சரி, சிந்தித்துத் தீர்மானியுங்கள்.
மின்னூல்களைப் பிரசுரிப்பதில் 3 வகை உண்டு:
1. நீங்களே (எழுதியவரே) பிரசுரித்து மார்க்கெட்டிங் செய்வது, பண விவகாரங்களைக் கவனிப்பது
2. பதிப்பாளர் பிரசுரித்து மார்க்கெட்டிங் செய்வது, விற்பனைக்கேற்ப அவர் உங்களுக்கு அறிக்கை வழங்கிப் பணத்தை வழங்குவது
3. இடைத்தரகர் ஒருவர் பிரசுரித்து மார்க்கெட்டிங் செய்வது, விற்பனைக்கேற்ப அவர் உங்களுக்கு அறிக்கை வழங்கிப் பணத்தை வழங்குவது
இதில் 2, 3 ஆகியவை கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் பதிப்பாளர் என்பவர் அதே நூலை அச்சிலும் கொண்டுவரக்கூடும். தமிழ் நூல்களைப்பொறுத்தவரை இடைத்தரகருக்கு (இப்போது) அதற்கான வாய்ப்பில்லை, வருங்காலத்தில் அவரும் அதைச் செய்யும்போது 2 & 3 இணைந்துவிடும்.
(புத்தகத்தை எழுதியபின்) உங்கள் உழைப்பு என்று பார்த்தால், #1ல் அது அதிகம் (இதைச் சிரமம் என்று பொருள்கொள்ளவேண்டாம், வேலை எளிதுதான், ஆனால் நீங்கள் அதற்காகச் செலவிடவேண்டிய மூளை, விரல் உழைப்பு ஒப்பீட்டளவில் அதிகம்), அத்துடன் ஒப்பிடுகையில் #2 & #3ல் உங்கள் உழைப்பு மிகக்குறைவு: ஈமெயில் அனுப்பினால் போதும்.
அதேசமயம், உங்களுக்கு வரப்போகும் ராயல்டி என்பது, #1ல் மிக அதிகம், அது அமேசானுடன் நீங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தைப்பொறுத்தது, #2 & #3ல் குறைவு, அல்லது மிகக்குறைவு, அது தனிப்பட்ட நபர்களுடன் நீங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தைப்பொறுத்தது.
தனிப்பட்டமுறையில் நான் மூன்றையும் செய்துபார்த்துள்ளேன். எனக்கு #1 ஒத்துவரவில்லை, வருங்காலத்தில் அதையும் நான் செய்யக்கூடும், ஆனால் இப்போதைக்கு #2 & #3 எனக்கு வசதிப்படுகிறது. கிழக்கு, புஸ்தகா நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளேன், அவர்கள் என் மின்னூல்களை வெளியிடுகிறார்கள், அதற்காக வருவாயைக் குறைத்துக்கொள்ளத் தயாராக உள்ளேன்.
நீங்களும் #2, #3ஐதான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நான் சொல்லமுடியாது, சொல்லவும் கூடாது. உங்களுக்கு #1 வசதியாக இருக்கலாம்.
ஆனால், தீர்மானம் எதுவானாலும் அது சிந்தித்தபின் எடுப்பதாக இருக்கவேண்டும், இதை மாமல்லன் மிகத்தெளிவாகச் சொல்கிறார்: நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போடாதீர்கள், உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகள் உள்ளன, ஒவ்வொன்றிலும் நன்மை, தீமைகள் உண்டு என்பதை அறியுங்கள், யாரிடமேனும் சென்று “ஒரு வரி ஆலோசனை” கேட்காதீர்கள். நீங்களே சிந்தித்து, தேவைப்பட்டால் முயன்றுபார்த்துத் தீர்மானியுங்கள்.
பிறருடைய டயட் அறிவுரையைப் பின்பற்றுவது எளிதுதான். ஆனால் பரிசோதனைக்குள்ளாகவிருப்பது உங்கள் உடம்பு. அதுபோலதான் இதுவும்.
***
என். சொக்கன் …
09 01 2018
1 | Praba
March 3, 2018 at 7:42 pm
Can we contact you please sir
My email id
Kuventhiran@aol.com