மனம் போன போக்கில்

Archive for the ‘நவீன அபத்தங்கள்’ Category

சிறுவயதில் ஹிந்தி பிரசார சபா தேர்வுகளுக்காகப் படித்தபோது, அந்தப் பாடங்களில் ‘99ன் சுழல்’ என்று ஒரு கதை வந்தது. குத்துமதிப்பாக நினைவில் உள்ளதைச் சொல்கிறேன்.

ஓர் ஏழை, நிம்மதியாக இருப்பான், அதைப்பார்த்து ஒரு பணக்காரன் பொறாமைப்படுவான், அவன் நிம்மதியைக் கெடுப்பதற்காக, 99 தங்கக்காசுகள் கொண்ட ஒரு மூட்டையை அவன் வீட்டில் போட்டுவிடுவான்.

அவ்வளவுதான், கையில் ஏதும் இல்லாதபோது நிம்மதியாக இருந்த அந்த ஏழை, ’எனக்கு ஏன் 99 தங்கக்காசுகள் கிடைக்கவேண்டும்? அது நூறாக இருந்திருக்கக்கூடாதா?’ என்று தவித்துத் திண்டாடுவான், அவனுடைய நிம்மதி கெடும்.

கிட்டத்தட்ட அதுபோன்ற நிலைதான் எனக்கு.

சுமார் ஓராண்டு முன்பு நான் 95 கிலோ எடை இருந்தேன், மிக விரைவில் செஞ்சுரி போட்டுவிட உத்தேசித்திருந்தேன்.

நண்பர்களின் நல்லெண்ணமும் எப்பிறவியிலோ செய்த நல்லூழும் என்னைச் சரிவிகித உணவுகளின்பக்கம் திருப்பியது, தினசரி நடையைச் சரிசெய்தேன், காய்கறிகளை அதிகரித்து, மாவுச்சத்தைக் குறைத்தேன், எடை குறையத் தொடங்கினேன்.

என்னுடைய இலக்கு 74 கிலோ, சிரிக்காதீர்கள், 95லிருந்து 74 என்பது கஷ்டம் என்பது தெரியும், ஆனால், என் உயரத்துக்கு அதுதான் சரியான எடை. ஆகவே, அந்த இலக்கை எப்படியாவது எட்டிவிடவேண்டும் என்று எண்ணினேன். இழுத்துப்பிடித்து 76 கிலோவரை வந்துவிட்டேன்.

அதன்பிறகு? ம்ஹூம்! எவ்வளவு முயன்றபோதும் எடை சிறிதும் குறையவில்லை.

கடந்த 4 மாதங்களாக, என் எடை 76லிருந்து 78க்குள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. என்ன பாடுபட்டாலும் 76க்குக் குறைவதில்லை, 78க்குமேலே செல்வதும் இல்லை.

என் நண்பர்கள், ‘இதுதான் உன்னுடைய வரம்பு, அதைதான் உன் உடல் சொல்கிறது, இதற்குமேல் குறைக்க முயற்சி செய்யாதே’ என்கிறார்கள்.

ஆரம்பத்தில் நான் அவர்களை நம்பவில்லை. ஆனால் இப்போது, நான் கனவுகண்ட 74 கிலோ கிடைக்கும் என்கிற நம்பிக்கை நாளுக்குநாள் குறைகிறது. மன அழுத்தம் அதிகரிக்கிறது.

2 கிலோ ஒரு பெரிய மேட்டரா? 19 கிலோ குறைந்தேனே என்று என்னால் மகிழ்ச்சியடைய இயலவில்லை. இலக்கைத் தொட இயலவில்லையே என்று மிகவும் வேதனையாயிருக்கிறது.

74ஐ ஒரே ஒருமுறை பார்த்துவிட்டால் போதும், அதன்பிறகு 80கிலோகூட எனக்கு ஓகே, இத்தனை உண்மையாகச் சிரமப்பட்டபிறகும் அந்த 74ஐத் தொட இயலவில்லை என்ற தோல்வி எரிச்சலூட்டுகிறது. இத்தனைக்கும், 95 கிலோவில் நான் (மனத்தளவில்) நிம்மதியாகவே இருந்தேன்!

ஆனாலும், விடுவதாக இல்லை, ஏ கூப்பிடுதூரத்திலிருக்கும் எழுபத்து நாலே, வருகிறேன், இரு!

***

என். சொக்கன் …

23 03 2016

இன்று காலை ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பணியாற்றும் நிறுவனம் அவருக்கு மிக மோசமான மதிப்பெண்(Performance Evaluation Score)களைக் கொடுத்துவிட்டதாக வருந்தினார்.

’நீ நல்லா வேலை செய்யறவனாச்சே, அப்புறம் ஏன் அப்படி?’ என்றேன்.

‘ஆமா, இவங்களும் போன வருஷம்வரைக்கும் எனக்கு நல்ல ரேங்க் கொடுத்தாங்க’ என்றார் அவர். ‘ஆனா, இப்ப நான் இங்கிருந்து ராஜினாமா செஞ்சுட்டேன். அதனால வேணும்ன்னே எனக்கு மார்க்கைக் குறைச்சுட்டாங்க, அப்படிச் செஞ்சா, எனக்குத் தரவேண்டிய போனஸைக் குறைச்சுடலாமே, அப்புறம் அந்தத் தொகையை அங்கேயே இருக்கற வேற யாருக்காவது பயன்படுத்துவாங்களாம். அதுதான் இங்கே வழக்கமாம்.’

கேட்பதற்கு எதார்த்தமாகத் தோன்றினாலும், இந்தப் பழக்கம் எனக்கு விநோதமாக இருந்தது. ஒருவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுகிறார் என்றால் தண்டிக்கலாம். இருக்கும்வரை ஒழுங்காக வேலை செய்து, முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு, தன் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் செல்கிற ஒருவருக்கு, அவருடைய முந்தைய செயல்திறனுக்குரிய மதிப்பெண்களை, நியாயமான போனஸைக் குறைப்பது என்ன நியாயம்?

அதை வைத்து அந்நிறுவனத்தில் தொடரும் பிறருக்கு போனஸ் கூடுதலாகத் தருவார்களா? அப்படியே தந்தாலும், அவர்கள் ராஜினாமா செய்யாமல் அங்கேயே நிரந்தரமாக இருப்பார்களா?

கல்லூரிப் படிப்பைப் பூர்த்தி செய்தபின் நான் சேர்ந்த முதல் வேலை, ஹைதராபாதில். அங்கே இரண்டரை வருடம் இருந்தேன்.

பின்னர், அந்நிறுவனத்திலிருந்து விலகலாம் என்று தீர்மானித்து ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டேன். அவர்களும் கொஞ்சம் முரண்டு பிடித்துவிட்டு ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

அதற்குச் சில நாள் முன்பு, ஒரு முக்கியமான/ விலை உயர்ந்த பயிற்சி வகுப்புக்கு என்னை அனுப்புவதாக எனக்குக் கடிதம் வந்திருந்தது.

அப்போது அந்நிறுவனத்தில் அந்தப் பயிற்சி வகுப்புக்கு எல்லாரும் முட்டி மோதுவார்கள். சில நல்ல திறமையாளர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆகவே, ராஜினாமா செய்துவிட்ட நான் அப்பயிற்சி வகுப்புக்குச் செல்வது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது. காரணம், அதன்மூலம் நான் பெறப்போகும் திறன்கள், அந்தப் பயிற்சிக்காகச் செலவழிக்கும் நிறுவனத்துக்குப் பயன்படாதல்லவா.

எனவே, அந்நிறுவனத்தின் பயிற்சித் துறைத் தலைவரான ராஜன் என்பவருக்கு இவ்விவரத்தைக் கடிதத்தில் தெரிவித்தேன். நான் ராஜினாமா செய்துவிட்டதால், வேறொருவருக்கு இவ்வாய்ப்பைத் தருமாறு கேட்டுக்கொண்டேன்.

அதற்கு அவர் எழுதிய பதில் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, ‘இது உன்னுடைய முந்தைய 30 மாதச் செயல்பாடுகளுக்காக இந்நிறுவனம் தரும் பரிசு. நீ இந்நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்கிறாயா இல்லையா என்பதுபற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. நீ இங்கே கற்றுக்கொண்டதை எங்கு சென்றாலும் பயன்படுத்துவாய். அதனால் இந்தப் பயிற்சியில் நீ கலந்துகொள்வதே நியாயம். எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் கலந்துகொள், கற்றுக்கொள், வாழ்த்துகள்!’

***

என். சொக்கன் …

30 06 2015

அஞ்சல்வழியே தமிழிலக்கியம் படிக்கிறேன். அதற்கான தேர்வுகள் ஒவ்வோராண்டும் மே மாதத்தில் நடைபெறும்.

அந்த வகையில் சென்ற ஆண்டு மே மாதம் எனக்கு முதல் தேர்வு(கள்). அப்போதுதான் ஒரு திடுக்கிடும் உண்மையை அறிந்தேன்: பெண்களும் தேர்வில் காப்பி, பிட் அடிப்பார்கள்போல!

’அட, இது உனக்குத் தெரியாதா!’ என்று கேட்டுவிடாதீர்கள். நான் படித்தது பாய்ஸ் ஸ்கூல், கல்லூரியிலும் பெண்கள் நெருங்காத ப்ரொடக்‌ஷன் எஞ்சினியரிங். ஆகவே, நான் காப்பியடிக்கும் பெண்களைப் பார்த்தது கிடையாது. ஆண்கள்தான் திருட்டுத்தனமாக மார்க் வாங்கும் அயோக்கியப் பசங்கள், பெண்களெல்லாம் பரிபூரண புனிதாத்மாக்கள் என்று எண்ணியிருந்தேன்.

என்னுடைய எண்ணங்களை இந்தப் பெண்கள் சிதறுதேங்காய் போட்டார்கள். அதுவும் சாதாரணமாக அல்ல, முரட்டு மீசை வைத்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (அல்லது அதுபோன்ற பெயர் கொண்ட) தெலுங்கு வில்லரைப்போல.

உதாரணமாக, ஒரு விஷயம்மட்டும் சொல்கிறேன்.

அன்று (சென்ற வருடத்தில் ஒருநாள்) எனக்குப் பக்கத்து பெஞ்சில் அமர்ந்து பரீட்சை எழுதிய 4 பெண்கள் மிகத் திறனுடன் செயல்பட்டனர், டீம் வொர்க்குக்கொரு நல்லுதாரணம்.

தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, ஒரு பெண் தன் பையிலிருந்து ஆஃபீஸ் கவர் ஒன்றை எடுத்தார், அதில் ஏகப்பட்ட ஜெராக்ஸ் காகிதங்கள்.

அவற்றை அவர் மற்ற மூவருக்கும் பகிர்ந்தளித்தார், அவரவர் வசதிப்பட்ட இடங்களில் மறைத்துக்கொண்டார்கள் (இந்தச் சுரிதாரில்தான் எத்துணை செருகிடங்கள்!)

தேர்வு தொடங்கியதும், அவரவர் தங்கள்வசமிருந்த காகிதங்களை எடுத்து, ‘பயன்படாத’ (கேள்வி வராத) பிட்களை ரகசியமாகக் கசக்கி மூலையில் எறிந்தனர்.

இது ஏன் என்று யோசித்தால், better be light, ஒருவேளை மாட்டிக்கொண்டாலும், குறைந்த பிட்களுடன் மாட்டினால் இரக்கம் கிட்டும்! உதாரணம்: ‘சார் சார், சாரி சார், ரெண்டே ரெண்டு பிட்தான் கொண்டுவந்தேன் சார், அதுவும் எடுக்கறதுக்குள்ள பிடிச்சுட்டீங்க, ஒருவாட்டி மன்னிச்சுடுங்க சார்!’

இப்படி தேவையில்லாத பிட்களை நீக்கியபின் அவரவரிடம் இருந்த ’தேவையான’ பிட்களை அவரவர் தாள்களில் பதிலாக எழுதினர். பின் பொறுப்பாக அடுத்தவருக்குக் கை மாற்றிவிட்டனர்.

இப்படியே ‘ரிலே’ முறையில் அனைவரும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டனர்.

நான்காவதாக ஒரு பிட்டைப் பயன்படுத்தியபின்னர், ஒவ்வொருவரும் (தனித்தனியே) பாத்ரூம் செல்வதுபோல் சென்று அவற்றை ஒவ்வொன்றாக டிஸ்போஸ் செய்துவிட்டார்கள், நடந்த குற்றத்துக்குச் சாட்சி இருக்கலாகாது அல்லவா?

நால்வரும் மேற்பார்வையாளரிடம் மாட்டவில்லை, எழுதி முடித்துவிட்டு உற்சாகமாக வெளியேறினார்கள்.

இத்தனை சிரமப்பட்டேனும் பரீட்சையில் தேறவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏதேனும் இருக்கும் என ஊகித்தேன்.

ஆனால், பாடத்தை ஒழுங்காகப் படிப்பது இதைவிட எளிதல்லவா?

ஏனோ, இப்படி யாரும் யோசிக்கக் காணோம். அந்தத் தேர்வுகள் நடைபெற்ற ஐந்து நாள்களும் ஆண்களோடு பெண்களுமாக அந்தப் பரீட்சை ஹாலில் நூற்றுக்கணக்கானோர் திருட்டுத்தனமாக எழுதித் தள்ளினார்கள். யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதைத் தினமும் பார்த்துப் பார்த்து எனக்கு வெறுத்துவிட்டது.

இந்தமுறை, இரண்டாம் வருடப் பரீட்சைகள் தொடங்கின, ஒருவகைத் திகிலுடன் நேற்று ஹாலுக்குச் சென்று அமர்ந்தேன். பழைய ’காப்பி’யங்கள் நினைவில் ஓடின. மெதுவாகச் சுற்றிப் பார்த்தேன்.

என் அருகே ஒரு கன்னிகாஸ்த்ரீ அமர்ந்திருந்தார். அவருக்குச் சற்றுத் தொலைவில் இன்னொரு கன்னிகாஸ்த்ரீ, முன் இருக்கையில் ஒரு பாதிரியார், அவருக்கு முன் இருக்கையில் காவி உடை அணிந்த துறவி (அல்லது அப்படித் தோற்றமளித்த ஒருவர்).

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. இவர்களும் பிட் அடிப்பார்களோ? அந்த அதிர்ச்சிக்கு நான் தயாராக இல்லை!

நல்லவேளையாக, அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. அவர்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பாமல் சேணம் கட்டிய குதிரைபோல் தேர்வெழுதினர். தேவனின் கிருபை அவர்களுக்குக் கிட்டியிருக்கும்.

ஆனால் இன்னொருபக்கம், காப்பியடிக்கும் வேலைகள் நடந்துகொண்டுதான் இருந்தன. வழக்கம்போல் தேர்வுக் கண்காணிப்பாளர்கள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

தேர்வு முடிகிற நேரம், ஓர் அதிகாரி வந்தார். சுமார் ஐம்பது வயது மதிக்கலாம். மிக அமைதியான முகம். ஆனால் அதில் கண்டிப்பு தெரிந்தது.

அவர் உள்ளே வந்தபோது, ஒரு பெண் சுவாரஸ்யமாக பிட் அடித்துக்கொண்டிருந்தார். நேராகச் சென்று அவரது பேப்பரைப் பிடுங்கினார் இந்த அதிகாரி. ‘கெட் அவுட்!’ என்றார்.

அந்தப் பெண் நடுங்கிவிட்டார். ‘சார், ப்ளீஸ்’ என்று ஏதோ கெஞ்ச, அவர் மீண்டும் கோபமாக, ‘கெட் அவுட்’ என்றார், அவருடைய பேப்பரையும் எடுத்துக்கொண்டு ஹாலின் இன்னொரு பகுதிக்கு, அதாவது நாங்கள் இருக்கும் பகுதிக்கு விறுவிறுவென்று நடந்துவந்துவிட்டார்.

அடுத்து நடந்ததை எழுத மிகவும் தயக்கமாக இருக்கிறது. ஆனாலும் எழுதியாகவேண்டும்.

அந்தப் பெண் அவரிடம் கெஞ்சிக்கொண்டே பின்னால் நடந்துவந்தார். அவர் கொஞ்சமும் இரக்கம் காட்டத் தயாராக இல்லை என்றதும், சட்டென்று அவரை நெருங்கிக் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சலைத் தொடர்ந்தார்.

அதிகாரி அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ‘மூவ், மூவ்’ என்றார் கோபமாக. அந்தப் பெண் இன்னும் நெருங்கி வந்து, அவரைக் கட்டியணைப்பதுபோல் ஈஷிக்கொண்டு கெஞ்சியது.

இதை யாராவது சொன்னால் நானும் நம்பியிருக்கமாட்டேன். ஆனால் இத்தனையும் எனக்கு ஒரு பெஞ்ச் முன்னதாக நடந்தது. அந்தப் பெண்ணின் செயல் மிக மிக ஆபாசமாக இருந்தது. அவரது நோக்கம் தெளிவாகத் தெரிந்தது (அதிகாரியைக் கூச்சப்படவைத்து அதன்மூலம் உடைப்பது), தன் தந்தை வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் அத்தனை பேர் முன்னால் அந்தப் பெண் இப்படி நடந்துகொண்டதை என்னால் இன்னும் நம்ப இயலவில்லை.

கடைசியில், அந்தப் பெண் நினைத்ததுதான் நடந்தது. ஒரு பெண் இப்படித் தன்னை நெருங்க நெருங்க, அந்த அதிகாரி வெட்கிப்போனார், அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, கையில் இருந்த பேப்பரை இன்னொருபக்கமாகத் தூக்கி எறிந்துவிட்டு ஏதோ கோபமாகக் கத்தினார்.

மறுகணம், அந்தப் பெண் பாய்ந்து அந்தப் பேப்பரைப் பொறுக்கிக்கொண்டார், எதுவும் நடக்காததுபோல் தன் இடத்தில் அமர்ந்து எழுதுதலைத் தொடர்ந்தார். அந்த அதிகாரி குனிந்த தலையோடு அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

பின்னர் அவர் வேறு சில (preferably பெண்) அதிகாரிகளுடன் வந்து அந்தப் பெண்ணைத் தேர்வெழுதவிடாமல் வெளியேற்றவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இன்று மதியம், நான் என் இருக்கையில் அமர்ந்து இன்றைய தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒருவர் வந்து அமர்ந்தார். சுமார் நாற்பது வயது இருக்கும். என்னைப் பார்த்துச் சிரித்து, ‘தமிழா?’ என்றார்.

‘ஆமா!’

‘நான் தெலுங்கு’ என்றார் அவர். ‘ஹோசூர்லேர்ந்து வர்றேன்!’

‘அட, ஹோசூரா? அங்கேர்ந்து ஏன் இங்கே வர்றீங்க? அங்கேயே சென்டர் இருக்குமே’ என்றேன்.

‘இருக்கு சார்’ என்று அலுப்போடு சொன்னார் அவர். ‘ஆனா, அது ரொம்ப ஸ்ட்ரிக்ட்!’

‘அப்டீன்னா?’

‘அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்ப விடமாட்டாங்க, காப்பியடிக்கமுடியாது!’ என்று கிசுகிசுப்பாகச் சொன்னார் அவர். ‘அதனாலதான் இந்த சென்டர் போட்டுக்கிட்டு டெய்லி பெங்களூரு வர்றேன்!’

‘ஓ!’

‘ஆனா, இதுலயும் பெரிசா பிரயோஜனம் இல்லை சார்’ என்றார் அவர், ‘ஏன்னா, இங்கே அதிகப் பேர் தெலுங்கு எக்ஸாம் எழுதறதில்லை, நான் யாரைப் பார்த்துக் காப்பி அடிக்கறது?’

‘நியாயம்தான்(?!)’

‘அதனாலதான், இன்னிக்கு பிட் ரெடி பண்ணிகிட்டு வந்துட்டேன்’ என்று இடுப்புப் பிரதேசத்தைப் பாவனையாகச் சுற்றிக்காட்டினார் அவர். நான் பேசாமல் புத்தகத்தின்பக்கம் திரும்பிக்கொண்டேன்.

சில நிமிடங்கள் கழித்து, ‘நீங்களும் நாலு பேப்பரைக் கிழிச்சுப் பாக்கெட்ல வெச்சுக்கோங்க சார்’ என்றார் என்னிடம். பதில் சொல்லாமல் சிரித்துவைத்தேன்.

சிறிது நேரத்தில் தேர்வுகள் தொடங்கின. என்னருகே அமர்ந்திருந்தவர் தான் கொண்டுவந்திருந்த பிட்களைப் பயன்படுத்தி முட்டை முட்டை எழுத்துகளில் தெலுங்கு இலக்கியத்தைப் புட்டுப்புட்டு வைத்தார்.

ஐந்து மணிக்குத் தேர்வு முடிந்து கீழே இறங்கும்போது, அவரை மீண்டும் சந்தித்தேன். ‘என்ன சார், எக்ஸாம் ஈஸியா?’ என்றார் புன்னகையோடு.

‘ஆமாங்க! உங்களுக்கு?’

‘சூப்பர் சார்’ என்றார் அவர். பிறகு, ‘உங்களுக்கு இந்த டிகிரி வாங்கினா பிரமோஷன் வருமா சார்?’ என்றார் ஆவலாக.

‘அதெல்லாம் இல்லைங்க, சும்மா ஆர்வத்துக்குதான் படிக்கறேன்’ என்றேன் நான்.

அவர் என்னை நம்பாமல் பார்த்து, ‘எனக்கு இந்த டிகிரி வாங்கினதும் பிரமோஷன் உண்டு சார்’ என்றார். ‘இன்க்ரிமெண்ட் டபுள் ஆகும்!’

‘ஓ, இலக்கியத்துக்கு இன்க்ரிமென்டா? ஆச்சர்யமா இருக்கே’ என்றேன்.

‘ஆமா சார், நான் வாத்தியாரா வேலை பார்க்கறேன்’ என்று ஒரே போடாகப் போட்டார் அவர்.

இந்த ஆண்டு இன்னும் மூன்று பரீட்சைகள் உள்ளன. அதற்குள் என்னவெல்லாம் அதிர்ச்சிகள் மீதமிருக்கிறதோ!

***

என். சொக்கன் …

25 05 2014

சில ஆண்டுகளுக்குமுன்னால், பணிநிமித்தம் ஓர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தோம்.

‘பணிநிமித்தம்’ என்ற சொற்றொடர் இருவகைகளைக் கொண்டது. ஒன்று, நாங்கள் அவர்களுக்குப் பணி செய்வது, இரண்டாவது, அவர்கள் எங்களுக்குப் பணி செய்வது.

இதில் நாங்கள் சென்ற ‘பணி’ இரண்டாம் வகை. அதாவது, அந்தச் சந்திப்பின் நிறைவில் அந்த நிறுவனத்தைப்பற்றி எங்களுக்கு எல்லாவிதத்திலும் திருப்தியென்றால், விருப்பமிருந்தால் நாங்கள் அவர்களுக்கு ஒரு Projectஐ வழங்குவோம், அதன்மூலம் அவர்களுக்கு நல்ல பண வருவாய் உண்டு.

ஆகவே, அந்த நிறுவனத்தினர் எங்களை எப்படியாவது கவர்ந்திழுத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்கள். புடைவை கட்டிய ரிசப்ஷனிஸ்டுகள் கையால் ரோஜாப்பூ பொக்கே என்ன, அறிவிப்புப் பலகை, எல்சிடி திரையில் எங்களுடைய கட்டவுட்டுகள் என்ன, ஜில்லென்று கொக்ககோலா என்ன, தட்டுத் தட்டாய் நிமிஷத்துக்கொரு வகை பிஸ்கோத்துகள் என்ன, மதியச் சாப்பாடு என்ன என்ன… சுருக்கமாகச் சொன்னால், ராஜோபசாரம்!

அந்த அலுவலகத்தின் சுவர்களில் ஆங்காங்கே மிஷன் ஸ்டேட்மெண்ட், விஷன் ஸ்டேட்மெண்ட், ரேஷன் கார்ட், க்வாலிட்டி பாலிஸி, எல் ஐ சி பாலிஸி என்று விதவிதமான அட்டைகளை வண்ணமயமாக அச்சிட்டுத் தொங்கவிட்டிருந்தார்கள். ஒவ்வொன்றிலும் கீழே அவர்களுடைய தலைவரின் அழகான கையெழுத்து.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டே வந்த என்னுடைய சக ஊழியர், விவாத அறைக்குள் நுழைந்தவுடன், ‘ஆஃபீசையே எங்களுக்காகப் புதுப்பிச்சிருக்கீங்கபோல?’ என்றார் நக்கலாக.

அவர்கள் திகைத்துப்போனார்கள், ‘எ… எ… என்ன சொல்றீங்க சார்?’

’இந்த போர்டெல்லாம் இன்னிக்குக் காலையில கொண்டுவந்து மாட்டினதுதானே?’

அவர்கள் அசடு வழிந்தபடி பேச்சை மாற்றினார்கள். பேச வந்த விஷயத்துக்குள் நுழைந்தோம்.

காஃபி ப்ரேக்கின்போது அவரிடம் கேட்டேன், ‘அந்த போர்டெல்லாம் புதுசுன்னு எப்படிச் சொன்னீங்க? எப்பவோ இங்கே மாட்டிவெச்சதா இருக்கலாமில்லையா?’

’டேய் கோயிந்து’ என்றார் அவர் செல்லமாக, ‘அந்த போர்டுகளைக் கவனி, ஒவ்வொண்ணுக்கும் பக்கத்துல ஏழெட்டுப் பேர், அவங்களோட ஆஃபீஸ்ல உள்ளவங்களே பட்டிக்காட்டான் முட்டாய்க்கடையைப் பார்த்தமாதிரி அதை ஆன்னு வாயைப் பிளந்துகிட்டு வேடிக்கை பார்க்கறாங்க, அவங்க மூஞ்சைப் பார்த்தாலே இதெல்லாம் புதுச் சரக்கு, இந்த ஆஃபீசுக்குச் சம்பந்தமே இல்லாததுன்னு தெரியலையா?’

***

என். சொக்கன் …

13 11 2013

இன்று நங்கை பள்ளியிலிருந்து வரும்போதே சத்தமாக அறிவித்தபடிதான் வீட்டினுள் நுழைந்தாள், ‘இன்னிக்கு ஒரு பெரிய ஹோம் வொர்க் இருக்கும்மா.’

’என்னது?’

’துணியில சின்னதா ட்ரெஸ்மாதிரி வெட்டி, அதை ஒரு சார்ட் பேப்பர்ல ஒட்டிக் கொண்டுவரணும்’ என்றாள் நங்கை. ‘ஒரு ஸ்கர்ட், ஒரு ஷர்ட், ஒரு பேண்ட், போதும்!’

‘பார்க்கலாம்’ என்றார் என் மனைவி, ‘என்னிக்குத் தரணும்?’

’நாளைக்கு!’

‘ஏய், இன்னிக்குச் சொல்லி நாளைக்கே வேணும்ன்னா, நான் என்ன மனுஷியா, மெஷினா?’

‘இல்லம்மா, மிஸ் அன்னிக்கே சொல்லிட்டாங்க, நான்தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்’ என்றாள் நங்கை, ‘ஸாரிம்மா, எப்படியாவது உடனே செஞ்சு கொடுத்துடு, ப்ளீஸ்!’

’உன்னோட எப்பவும் இதுதாண்டி தலைவலி, லாஸ்ட் மினிட்ல எதையாவது சொல்லவேண்டியது’ என்று எரிச்சலானார் அவர், ‘அப்புறமா நீ ஜாலியா விளையாடப் போய்டுவே, நாங்கதான் கால்ல வெந்நியக் கொட்டிகிட்டமாதிரி தவிக்கணும்.’

அவருடைய கோபத்தில் நியாயம் உண்டு. நங்கையின் பள்ளியில் தரப்படும் வீட்டுப் பாடங்களில் காகிதத்தில் எழுதுவதைமட்டுமே அவள் செய்வாள், மற்றபடி கலைப் பொருள்கள் சகலத்தையும் நாங்கள்தான் செய்து தரவேண்டும். இல்லாவிட்டால் ’எனக்குச் செய்யத் தெரியாது, மார்க் போயிடும்’ என்று அழுவாள். அதைப் பார்க்கச் சகிக்காமல் எதையாவது குத்துமதிப்பாகச் செய்து கொடுத்துவிடுவோம். ஏற்கெனவே இதுபற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.

இந்த விஷயத்தில் நாங்கள்மட்டுமல்ல, அநேகமாக எல்லாப் பெற்றோரும் இப்படிதான் என்று அறிகிறேன். ஒவ்வொருமுறை ‘Parents Teacher Meeting’க்காக நங்கையின் பள்ளிக்குச் செல்லும்போதும் அங்கே பெருமையுடன் பரப்பிவைக்கப்பட்டிருக்கும் கைவினைப் பொருள்களை ஆவலுடன் பார்வையிடுவேன். சிலது அரைகுறையாகப் பல்லிளித்தாலும், பெரும்பாலானவற்றின் செய்நேர்த்தி ’இவை சத்தியமாக மூணாங்கிளாஸ் பெண்கள் செய்யக்கூடியவையே அல்ல’ என்று சத்தம் போட்டுக் கூச்சலிடும்.

ஒன்று, குழந்தைகளுக்குக் கைவினைப் பொருள்களைச் செய்யச் சொல்லித்தந்துவிட்டு, அதன்பிறகு, அதற்கு ஏற்ற ஹோம்வொர்க் தரவேண்டும், அல்லது, அவர்களால் தானே செய்யமுடியாதவற்றைத் தவிர்க்கவேண்டும். இப்படி இரண்டும் இல்லாமல் அவர்களுடைய பெற்றோரின் கைவண்ணத்தை டெஸ்ட் செய்வது என்ன நியாயம்? இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்?

அது நிற்க. இப்போது நங்கைக்குத் துணியில் வெட்டிய ஆடைகள் தேவை. என்ன செய்வது?

மனைவியார் கொஞ்சம் யோசித்தார். பரபரவென்று ஏணியை இழுத்துப் போட்டு மேலே ஏறினார். பரணில் இருந்த பல்வேறு பெட்டிகளுள் கொஞ்சம் தேடி, மிகச் சரியாக ஒன்றை இழுத்துக் கீழே போட்டார். இறங்கி வந்து பிரித்தால், உள்ளே அழகாகப் பல வண்ணங்களில் வெட்டித் தைக்கப்பட்ட ஆடைகள்.

’வாவ்’ என்றாள் நங்கை, ‘இதெல்லாம் எப்படிம்மா வந்தது?’

‘நவராத்திரி கொலு நேரத்துல நம்ம பொம்மைங்களுக்குப் போடலாமேன்னு வாங்கினேன்’ பெருமிதத்துடன் சொன்னார் அவர், ‘பத்திரமாக் கொண்டு போய்ட்டுக் கொண்டுவந்துடு, சரியா?’

‘சூப்பர்ம்மா, எனக்கு நிச்சயமா பத்துக்குப் பத்து மார்க்தான்!’

ஏற்கெனவே நங்கையின் ‘ஹோம் வொர்க்’ ஊழலுக்குப் பலவிதமாகத் துணைபோயிருந்தாலும், இதை என்னால் தாங்கமுடியவில்லை. ‘ஏய், இதெல்லாம் டூ மச்’ என்றேன் அவளிடம்.

’எதுப்பா?’

‘யாரோ ஒரு கடைக்காரர் தெச்சு வெச்ச ட்ரெஸ்ஸையெல்லாம் எடுத்து உன்னோட ஹோம் வொர்க்ன்னு மிஸ்கிட்ட காட்டுவியா? தப்பில்ல?’

அவள் கொஞ்சமும் யோசிக்கவில்லை, ‘எப்பவும் நீங்கதானே எனக்குச் செஞ்சு தருவீங்க, அதுக்குப் பதிலா கடைக்காரங்க செஞ்சிருக்காங்க, அதிலென்ன தப்பு?’ என்று பதிலடி கொடுத்தாள்.

முகத்தில் வழிந்த திகைப்பைக் காட்டிக்கொள்ளாமல், ‘நங்கை, உனக்குத் தர்ற ஹோம் வொர்க்கை நீதான் செய்யணும், நாங்க செய்யக்கூடாது, கடைக்காரரும் செய்யக்கூடாது’ என்றேன்.

’ஏன் அப்படி?’

’நாளைக்கே உங்க ஸ்கூல்ல ஒரு எக்ஸாம், அப்போ உனக்குப் பதில் நான் வந்து எழுதினா ஒத்துப்பாங்களா?’

‘ம்ஹூம், மாட்டாங்க!’

‘இதுவும் அதுமாதிரிதானேடா? உனக்குத் துணியில ட்ரெஸ்மாதிரி அழகா வெட்டவருதான்னு உங்க மிஸ் ஒரு எக்ஸாம் வெச்சிருக்காங்க, அதை நீயேதானே வெட்டணும், ஒட்டணும்? இப்படிக் கடையில விக்கறதையெல்லாம் வாங்கித் தரக்கூடாது. தப்பு!’

நங்கை கொஞ்சம் யோசித்தாள், ‘எனக்குத் துணியில ட்ரெஸ் வெட்டத் தெரியாதே’ என்றாள்.

’உங்க மிஸ் சொல்லித் தரலியா?’

‘ம்ஹூம், இல்லை!’

’சரி, நான் சொல்லித் தர்றேன்’ என்றேன். ’முதல்ல பேப்பர்ல நாலு விதமா வெட்டிப் பழகு, ஓரளவு பழகினப்புறம் துணியில வெட்டிக்கலாம், அம்மாவை ஒரு பழைய துணி எடுத்துத் தரச் சொல்றேன்.’

‘ஓகேப்பா’ என்று தலையாட்டியவள் சட்டென்று நினைத்துக்கொண்டாற்போல், ‘ஆனா நான் வெட்டினா இந்த அளவு அழகா வராதே’ என்று தன் கையிலிருந்த ஆடைகளைக் காட்டினாள், ‘இதுக்குப் பத்து மார்க் தருவாங்க, நானே வெட்டிச் செஞ்சா நாலு மார்க்தான் வரும்.’

‘அது போதும் நங்கை’ என்றேன், ‘இந்த ட்ரெஸ்ஸுக்குக் கிடைக்கற பத்து மார்க் நியாயப்படி அந்தக் கடைக்காரருக்குதானே சேரணும்? அதை நீ எடுத்துக்கறது நியாயமில்லையே!’

‘ஆனா என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் இந்தமாதிரி கடைலேர்ந்து வாங்கிட்டு வந்துட்டாங்கன்னா? அவங்களுக்குப் பத்து மார்க் கிடைக்கும், எனக்கு நாலு மார்க்தானே கிடைக்கும்.’

‘அதான் சொன்னேனே நங்கை, அது அவங்களோட மார்க் இல்லை, அந்த மார்க் எல்லாமே அவங்க எங்கே ட்ரெஸ் வாங்கினாங்களோ அந்தக் கடைக்காரங்களுக்குப் போய்ச் சேர்ந்துடும்.’

நங்கைக்கு முழு நம்பிக்கை வரவில்லை, ‘நான் சொல்றமாதிரி நீ ட்ரெஸ் வெட்டிப் பாரு, அதை மிஸ்கிட்ட காட்டு, நானே செஞ்சேன்னு சொல்லு, அவங்க எத்தனை மார்க் கொடுக்கறாங்களோ அதை சந்தோஷமா வாங்கிக்கோ, பத்துக்குப் பத்து வாங்கினாதான் ஆச்சா? புதுசா ஒரு விஷயம் கத்துகிட்டோம்ங்கற சந்தோஷம் முக்கியமில்லையா?’

‘ஓகேப்பா’ என்றாள் அவள். ஓடிச் சென்று அவளே கத்தரிக்கோல், காகிதம் எல்லாம் கொண்டுவந்தாள். அதில் சின்ன டிஷர்ட், ஸ்கர்ட், பான்ட் போன்றவற்றை வெட்டிக் காண்பித்தேன். உற்சாகமாகிவிட்டாள். அடுத்த அரை மணி நேரம் வீடு முழுக்கக் காகிதத் துண்டுகள்தாம்.

பின்னர் நான் மாலை நடை சென்று திரும்பும்போது மேஜைமீது சின்னத் துண்டுத் துணிகளில் நான்கு வகையான ஆடைகள் கத்தரித்து வைக்கப்பட்டிருந்தன. ஏதோ புத்தகத்தைப் புரட்டியபடி தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்த நங்கை நிமிர்ந்து பார்த்து, ’நல்லாருக்காப்பா?’ என்றாள்.

‘சூப்பர்’ என்று தலையசைத்தேன், ‘உங்கம்மா எதுவும் சொல்லலையா?’

‘நல்லாதான் இருக்கு’ என்று கிச்சனில் இருந்து பதில் வந்தது, ‘ஆனா அந்தக் கடை ட்ரெஸ் அளவுக்கு இல்லையே, நாளைக்குப் பத்து மார்க் முழுசா வரலைன்னு அவ அழுதா நீதான் பொறுப்பு.’

’அதை நான் பார்த்துக்கறேன்’ என்றேன், ‘நங்கை, உனக்கு வேணும்ன்னா ரெண்டு ட்ரெஸ்ஸையும் நாளைக்குக் கையில எடுத்துகிட்டுப் போ, மத்தவங்க என்ன செஞ்சிருக்காங்கன்னு பாரு, அப்புறம் உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை மிஸ்கிட்ட காட்டு. சரியா?’

‘அதெல்லாம் வேணாம்ப்பா’ என்றாள் நங்கை, ‘அந்தக் கடைக்காரர் ட்ரெஸ்ஸை எப்பவோ பரண்மேல தூக்கிப் போட்டாச்சு.’

பின்குறிப்பு:

இந்தக் ’கதை’க்கு லாலாலா பின்னணி இசை சேர்த்தால் விக்கிரமன் படமாகிவிடும் என்று நீங்கள் விமர்சனம் எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே, நிஜமாக நடந்த நிகழ்ச்சி என்பதற்கான ஃபோட்டோ ஆதாரம் இணைத்துள்ளேன், பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், எத்தனை மார்க் போடுவீர்கள் நங்’கை’க்கு? :>

photo

***

என். சொக்கன் …

25 02 2013

Update: நங்கைக்கு ‘மிஸ்’ போட்ட மார்க், 10/10 🙂

ஓர் ஆங்கிலப் புத்தகம், ‘There lived a rich man’ என்று தொடங்குகிறது. அதைத் தமிழில் ‘அங்கு ஒரு தனவந்தர் வாழ்ந்தார்’ என்று மொழிபெயர்த்துள்ளனர்.

’தனவந்தர்’ என்பது வடமொழிச் சொல் என்பது ஒருபக்கமிருக்க, இப்போது அது தமிழ்நாட்டில் பழக்கத்திலேயே இல்லை, பழைய்ய்ய மொழி அது. அதைப் பயன்படுத்தினால், <40 வயதுள்ள, தினசரிப் பேச்சால்மட்டுமே தமிழ் Vocabularyயை வளர்த்துக்கொண்டுள்ளவர்கள் யாருக்கும் புரியாது.

சில சமயங்களில் வேண்டுமென்றே பழைய நடையில் எழுதுவது உண்டு. உதாரணமாக, நான் அடிக்கடி ‘அன்பர்காள்’ என்று தொடங்கி ஈமெயில்கள் எழுதுவேன், ’உள்ளன’ என்பதற்குப் பதில் ‘உள’ என்று பயன்படுத்துவேன், ‘யார்’ என்பதற்குப் பதில் ‘ஆர்’ என்று எழுதுவேன், இவையெல்லாம் அதிகப் பேருக்குப் புரியாது என்று தெரியும், ஆனாலும் வாசிக்க வித்தியாசமான சுவையாக இருக்கும்.

அப்படிச் சிலர் தெரிந்தே கிறுக்குத்தனம் செய்வது வேறு விதம், இந்த மொழிபெயர்ப்பாளர் ‘Rich Man’க்கு இணையாகத் ‘தனவந்தர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது அப்படி அல்ல என்று நம்புகிறேன்.

இன்னொரு விஷயம், மொழியை வார்த்தைக்கு வார்த்தை மொக்கையாகப் பெயர்க்காமல் உள்ளூர்க் கலாசார அம்சங்களையும் கொண்டுவரவேண்டும்.

உதாரணமாக, ’ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’ என்று கதை தொடங்கும் மரபு இங்கே தமிழில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி, ‘There lived a rich man’ … ’ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரர்’ என்பதுபோல் மொழிபெயர்த்தால்தான் வாசிக்க லகுவாக இருக்கும்.

இன்னோர் உதாரணம், ஓர் இன்ஷூரன்ஸ் விளம்பரத்தில் ‘Your Plan B’ என்று இருக்கிறது. இதன் அர்த்தம் ஆங்கில மொழி அறிந்தவர்களுக்குதான் புரியும்.

இதையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள். எப்படி தெரியுமா? ‘உங்கள் திட்டம் பி’ என்று.

இந்தமட்டும் ‘B’ என்பதை ‘பி’ என்று மொழிபெயர்த்தார்களே, ‘திட்டம் ஆ’ என்று எழுதாமல்!

’திட்டம் பி’ என்பதில் என்ன தவறு? என்று நீங்கள் கேட்டால், உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்று அர்த்தம், ‘Plan B’ என்பதன் அர்த்தம் புரிந்த உங்களால், ‘திட்டம் பி’ என்பதையும் அர்த்தப்படுத்திக்கொள்ளமுடிகிறது.

ஆனால் இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், ‘Plan B’ என்பதை மொழிபெயர்ப்பதன் நோக்கம், ஆங்கிலம் தெரியாத, தமிழ்மட்டுமே தெரிந்த ஒருவருக்கு அது புரியவேண்டும். அல்லவா? ‘திட்டம் பி’ என்பது அவர்களுக்குப் புரியாது, ஆங்கிலமும் தெரிந்தவர்கள் அதை ஆங்கிலத்திலேயே படித்துவிடுவார்கள், தமிழ் மொழிபெயர்ப்பு அவர்களுக்கு அவசியம் இல்லை.

ஆக, ‘Plan B’ என்பதை, ‘உங்களது மாற்றுத் திட்டம்’ என்பதுபோல் மொழிபெயர்த்தால்தான் அது உரிய நபர்களுக்குச் சென்றுசேரும். காரணம் ‘Plan B’ (அல்லது) ‘திட்டம் பி’ (அல்லது) ‘திட்டம் ஆ’ என்று பேசும் கலாசாரம் / வழக்கம் நம்மிடையே இல்லை. இது மொழிபெயர்த்த நல்லவருக்குத் தெரியவில்லை.

Of course, நான் இங்கே சொல்லியிருப்பவைதான் சிறந்த மொழிபெயர்ப்புகள் என்பதல்ல. இவை சர்வசாதாரணமான உதாரணங்கள். நாம் எல்லாரும் தினந்தோறும் இதுமாதிரி எளிய, ஆனால் அபத்தமான மொழிபெயர்ப்புத் தவறுகளைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

வருத்தமான விஷயம், ஒரு நல்ல மொழிபெயர்ப்பு எப்பேர்ப்பட்ட மேஜிக் செய்யக்கூடும், எப்படி ஒரு புதிய உலகத்தை அந்த மொழி தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடும் என்று நம் ஊரில் யாருக்கும் புரியவில்லை, அதன் முக்கியத்துவம் தெரியாமல் கடமைக்கு ஏதோ தட்டித் தள்ளுகிறார்கள். இழப்பு ஜாஸ்தி.

***

என். சொக்கன் …

27 11 2012

’Small Talk’ எனப்படும் சம்பிரதாயப் பேச்சுகள் என்றால் எனக்கு ரொம்ப அலர்ஜி.

உதாரணமாக, ஒரு நிகழ்ச்சியில் யாரோ ஒரு புதியவரைச் சந்திக்கிறேன். பொது நண்பரோ, உறவினரோ எனக்கு அவரை அறிமுகப்படுத்திவைக்கிறார். ஹலோ சொல்லிக் கை குலுக்குகிறோம். அதன்பிறகு?

அந்த நபர் தானாகத் தொடர்ந்து ஏதாவது பேசினால் உண்டு. இல்லாவிட்டால் நான் பேந்தப்பேந்த விழித்துக்கொண்டு பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பேன். ஒரு மணி நேரம் ஆனாலும் என் வாயிலிருந்து ஒரு வார்த்தை வராது.

ஆச்சர்யமான விஷயம், இதெல்லாம் புதியவர்களிடம்மட்டும்தான். ஏற்கெனவே பழகிய நபர்களிடம் வாய் ஓயாமல் பேசுகிறவன் நான்.

பெரும்பாலும் இந்தப் பிரச்னை திருமண விழாக்களிலும், பர்த்டே பார்ட்டிகளிலும் அதிகம். நிறைய புதியவர்களைச் சந்திப்பேன். அவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியாது. யாராவது என்னைக் கிள்ளி எடுத்து வெளியே கொண்டுபோய் விட்டுவிட்டால் பரவாயில்லை எனத் தோன்றும்.

எதற்கு அவ்ளோ கஷ்டம்? கையில் உள்ள ஃபோனில் ஈமெயில், ட்விட்டர் படிக்க ஆரம்பித்துவிடலாமே?

செய்யலாம். அது அவர்களை அவமானப்படுத்துவதுபோல் ஆகிவிடுமோ என்று நினைப்பேன். ஆகவே, அசட்டுச் சிரிப்பு, ப்ளஸ் தூரப் பார்வை, ஆனால் பேச்சுமட்டும் வராது.

இந்த விஷயத்தில் என் மனைவி எனக்கு நேர் எதிர். புதிதாகச் சந்திக்கும் யாரிடமும் தொடர்ந்து பேசுவதற்கு ஏதோ ஒரு பொதுப் புள்ளி அவருக்கு உடனே கிடைத்துவிடும். அல்லது, அதைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவார்.

அந்த அக்கறையோ முனைப்போ எனக்குச் சுத்தமாகக் கிடையாது. ’தயவுசெய்து என்னைத் தனியே விடுங்கள், கையில் ஒரு புத்தகத்தைக் கொடுங்கள், அதன்பிறகு என்னால் உங்களுக்கு எந்தச் சிரமமும் வராது’ என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்ளவே விரும்புவேன்.

தனிப்பட்ட சந்திப்புகளில்மட்டுமல்ல, அலுவலகத்திலும் நான் இப்படிதான். 20 மாணவர்களுக்குப் பதினைந்து நாள் ட்ரெய்னிங் எடுத்திருப்பேன், ஆனால் 15 * 8 = 120 மணி நேரத்தில் பாடத்துக்கு வெளியே நான் அவர்களிடம் பேசியது ‘ஹலோ’, ‘குட் மார்னிங், ‘ஸீ யு டுமாரோ’ என்று ஆறே வார்த்தைகளாகதான் இருக்கும்.

இப்படிதான் ஒருமுறை, எங்கள் அலுவலகத்துக்குச் சில விருந்தாளிகள் வந்திருந்தனர். எல்லாரும் ஒரு பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பிரதிநிதிகள். அவர்களுடன் இணைந்து நாங்கள் ஒரு ப்ராஜெக்டில் வேலை செய்யத் திட்டம்.

எங்கள் பாஸ் அவர்களை வரவேற்றார். எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார். கை குலுக்கினோம். ‘நீங்க பேசிகிட்டிருங்க, இதோ வந்துடறேன்’ என்று வெளியேறிவிட்டார்.

இதைச் சற்றும் எதிர்பார்த்திராததால், நான் திகைத்துப்போனேன். ‘இவர்களுடன் நான் என்னத்தைப் பேசுவது? இந்தக் கம்பெனியைப்பற்றி எனக்கு ஒரு விவரமும் தெரியாதே!’

டிவி மெகாசீரியல்களில் வருவதுபோல, ‘காபி, டீ வேணுமா?’ என்று பேச்சை இழுக்கலாமா? ‘உங்க ஊர்ல மழை அதிகமோ?’ என்று கிண்டலாமா?

ம்ஹூம், வாய்ப்பில்லை. காபி, டீ, தண்ணீர், பிஸ்கோத்துகள் எல்லாம் ஏற்கெனவே பரிமாறப்பட்டுவிட்டன. இவர்களும் எங்களைப்போல் பெங்களூர்வாசிகள்தான். ஆகவே, வானிலை விசாரிப்புகளுக்கு வாய்ப்பில்லை.

இருக்கிற தக்கனூண்டு மூளையைப் பயங்கரமாகக் கசக்கியபடி யோசித்தேன். இவர்களுடன் என்ன பேசுவது? இந்தக் கம்பெனியைப்பற்றி எனக்கு என்ன தெரியும்?

ரொம்ப யோசித்தபிறகு, ஒரே ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. நான் வழக்கமாக நடைபயிற்சிக்குச் செல்லும் பாதையில் இவர்களுடைய கம்பெனியின் பிரமாண்டமான அலுவலகம் உள்ளது. அதை எட்டத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அதை வைத்து ஏதாவது ஒப்பேற்றவேண்டியதுதான்.

’நான் வாக்கிங் போற வழியிலதான் உங்க ஆஃபீஸ் இருக்கு’ என்று பேச ஆரம்பித்தேன், ‘அங்கே இருக்கற லிஃப்ட் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.’

‘என்னது? லிஃப்டா?’ அவர்கள் திகைப்போடு கேட்டார்கள்.

‘ஆமாங்க, ரோட்லேர்ந்து பார்க்கும்போது அந்த லிஃப்ட் ரொம்ப அழகா இருக்கும், மேலே மொட்டை மாடியிலேர்ந்து கீழே ஒரு பெரிய ரிப்பனைத் தொங்கவிட்டமாதிரி அழகா வண்ணம் தீட்டி, வரிசையா உங்க கம்பெனி Employeesஓட சிரிச்ச முகங்களையே வெச்சு டிஸைன் செஞ்சிருப்பாங்க. லிஃப்ட்தானேன்னு அலட்சியமா விடாம அந்த இடத்தையும் க்ரியேட்டிவ்வா பயன்படுத்தியிருப்பாங்க. ரொம்பப் பிரமாதமான ஐடியா!’

அப்போது அவர்களுடைய ரியாக்‌ஷனை நீங்கள் பார்த்திருக்கவேண்டும்!

***

என். சொக்கன் …

12 11 2012

’கங்னம் ஸ்டைல்’ என்று ஒரு வீடியோ / நடனம் சமீபத்தில் உலகப் பிரபலமாகிவிட்டதை அறிந்திருப்பீர்கள்.

நான் அந்தப் பெயரை ட்விட்டரில் கேள்விப்பட்டதோடு சரி. வீடியோவாகப் பார்த்ததோ, ஆடியோவாகக் கேட்டதோ இல்லை. அதற்கு ஆர்வமும் இல்லை.

உலகப் புகழ் பெற்ற லோக்கல் தயாரிப்பான ‘வொய் திஸ் கொலவெறி’யைக்கூட, ஒரே ஒருமுறை ஆடியோவாகக் கேட்டிருக்கிறேன், அதுவும் நண்பர் ஒருவர் தன்னுடைய ஃபோட்டோ ஆல்பத்தின் பின்னணி இசையாக அதை ஒலிக்கவிட்டிருந்ததால். ‘கொலவெறி’ வீடியோவை நான் இதுவரை பார்த்ததில்லை. Again, Same Reason: ஆர்வம் இல்லை.

அது நிற்க. நேற்று ஒரு விழாவில் கலந்துகொண்டேன். அதில் கங்னம் ஸ்டைல் வீடியோவை ஒளிபரப்பினார்கள். முதன்முறையாகப் பார்த்தேன், ரசித்தேன்.

ஆனால் இந்தப் பாட்டை இதற்குமுன் எங்கேயோ கேட்டிருக்கிறேனே என்று தோன்றிக்கொண்டே இருந்தது. விழா முடிந்து வீடு வரும் வழியில் பஸ்ஸுக்குக் காத்திருக்கையில் ஞாபகம் வந்துவிட்டது.

போன வாரம் பெங்களூருவில் ஒரு Walkathan நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த விழாவின் மேடையில்தான் இந்தப் பாட்டு (ஆடியோமட்டும்) திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது.

இதில் காமெடியான விஷயம், அப்போது ‘கங்னம் ஸ்டைல்’ என்பது என் காதில் தெளிவாகக் கேட்கவில்லை. ‘கன்னடம் ஸ்டைல்’ என்றுதான் ஒலித்தது. விழா நடைபெற்றது பெங்களூரில் என்பதால், யாரோ உள்ளூர்ப் பாடகர் ‘இதுதாண்டா எங்க கன்னடர்களின் ஸ்டைல்’ என்று ஆங்கிலத்தில் ’வாழ்த்தி’ப் பாடியிருக்கிறார்போல என்று ஊகித்துவிட்டேன்.

சிரிக்காதீர்கள். என்னைமாதிரி ஆன்லைனில் இருந்தும் பாறைக்கடியில் வாழ்பவர்கள் உலகம்முழுக்க உண்டு :>

***

என். சொக்கன் …
12 11 2012

அலுவலக நண்பர் ஒருவர். எப்போதும் உற்சாகமாக இருக்கிறவர்தான். நேற்று அவர் முகத்தில் அதீத குழப்பம் தெரிந்தது. ‘என்னாச்சுங்க?’ என்று விசாரித்தேன். ‘இது Performance Appraisal சீஸனாச்சே, அந்த டென்ஷனா?’

‘அதெல்லாம் ஒண்ணுமில்லை’ என்றார் அவர். ‘நாளைக்கு என் பொண்ணு ஸ்கூல்ல Parents : Teacher Meeting.’

‘ஸோ?’

‘என் பொண்ணைப்பத்தி உங்களுக்குத் தெரியாது. சரியான வாலு. எப்பப்பார் குறும்பு, எதையாவது போட்டு உடைக்கறது, டெய்லி யார்கூடயாவது சண்டை போட்டு சட்டையைக் கிழிச்சு முகத்தைப் பிராண்டிவெக்காம வீட்டுக்கு வரமாட்டா, போதாக்குறைக்கு, எந்தப் பாடத்துலயும் உருப்படியா மார்க் வாங்கறதும் கிடையாது. அதனால, ஒவ்வொரு பேரன்ட்ஸ் மீட்டிங்லயும் இதே கதைதான், டீச்சர் எங்களை வண்டைவண்டையாத் திட்டுவாங்க, முகத்தைக் கொண்டுபோய் எங்கே வெச்சுக்கறதுன்னு தெரியாது.’

‘ஏங்க, யுகேஜி படிக்கற பொண்ணு இப்படி இருக்கறது சகஜம்தானே.’

‘அதெல்லாம் இல்லைங்க, அதே க்ளாஸ்ல மத்த பொண்ணுங்க, பசங்கல்லாம் ஒழுங்காப் படிக்கலியா, இவளால எங்களுக்குதான் கெட்ட பேரு’ என்றார் அவர். ‘நாளைக்கு பேரன்ட்ஸ் மீட்டிங்ன்னு போன வாரம் லெட்டர் வந்ததுலேர்ந்தே இந்த டென்ஷன்தான். பேசாம இந்தவாட்டி ஆஃபீஸ்ல அர்ஜென்ட் மீட்டிங்ன்னு பொய் சொல்லி நைஸா எஸ்கேப் ஆகிடலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன்.’

****

அதே நாள் மாலை, இன்னொரு நண்பரை ஒரு விழாவில் சந்தித்தேன். சம்பிரதாய அரட்டையின் நடுவே, ‘உங்க பையனை ஸ்கூல்ல சேர்த்தாச்சா?’ என்று கேட்டேன்.

‘அடுத்த வருஷம்தான்’ என்றார் அவர். ‘சீட் வாங்கியாச்சு.’

‘எங்கே?’

ஒரு மிகப் பிரபலமான பள்ளியின் பெயரைச் சொன்னார் அவர். ‘அங்கே அவனுக்கு சீட் கிடைச்சது, டொனேஷன் எவ்ளோ தெரியுமா? நாலே கால் லட்சம்.’

‘யம்மாடி!’ நிஜமான அதிர்ச்சியுடன் கேட்டேன். ‘நிஜமா அவ்ளோ பணம் கொடுத்தா சீட் வாங்கியிருக்கீங்க?’

’சேச்சே’ என்று அவர் பெரிதாகத் தலையாட்டினார். ‘I can afford it, But not interested. வேற ஒரு ஆவரேஜ் ஸ்கூல்லதான் சீட் வாங்கியிருக்கேன்.’

‘அப்படியா? ஆச்சர்யமா இருக்கே, அந்த ஸ்கூல்ல சீட் கிடைக்கணும்ன்னு பலர் ஆணிப் படுக்கையில தலைகீழா நின்னு தவம் இருக்கறதாக் கேள்விப்பட்டிருக்கேன், அப்பேர்ப்பட்ட இடத்துல சீட் கிடைச்சும், கைல பணம் இருந்தும் வேணாம்ன்னு விட்டுட்டீங்களே, ஏன்?’

அவர் சற்றும் யோசிக்காமல் சொன்னார், ‘அவ்ளோ பணம் கொடுத்து, கடைசியில பய படிக்காம விட்டுட்டான்னா? Waste of money’, அரை விநாடி இடைவெளிவிட்டு, ‘என் புள்ள என்னைமாதிரிதானே இருப்பான்?’

***

என். சொக்கன் …

10 11 2012

சில வாரங்களுக்குமுன்னால், லாண்ட்மார்க் புத்தகக் கடை க்யூவில் காத்திருந்தேன். எனக்குப் பக்கத்து க்யூவில் ஒருவர், கை நிறைய சாக்லெட்களுடன் நின்றிருந்தார்.

அநேகமாக அன்று அவருடைய குழந்தைக்குப் பிறந்த நாளாகவோ, வீட்டில் வேறு விசேஷமாகவோ இருக்கவேண்டும், அதற்கு வருகிற பிள்ளைகளுக்குத் தருவதற்காக அந்த விசேஷ சாக்லெட்களைப் பெரும் எண்ணிக்கையில் வாங்கியிருந்தார்.

அந்த சாக்லெட்கள் எனக்கும் நன்கு பழக்கமானவைதான். டிவியில் அடிக்கடி விளம்பரங்களாக வரும். நீங்களும் பார்த்திருப்பீர்கள். முப்பது ரூபாய் விலை. முட்டை சைஸ். உடைத்தால் இந்தப் பாதியில் கொஞ்சூண்டு சாக்லெட், அதைச் சாப்பிட அமீபா அளவிலும் வடிவத்திலும் ஒரு ஸ்பூன், மற்ற பாதியில் சுண்டைக்காய் சைஸுக்கு ஒரு சின்ன பொம்மை, அதை Assemble செய்வது எப்படி என்கிற குறிப்புப் புத்தகம், அதில் உள்ள பொடி எழுத்துகளை லென்ஸ் கொண்டு படித்துப் புரிந்துகொண்டு அந்த பொம்மையைச் ‘செய்து’ விளையாட ஆரம்பிப்பதற்குள் அது விரல் இடுக்கில் நழுவிக் காணாமல் போய்விடும்.

மற்றதெல்லாம் இருக்கட்டும், தக்கனூண்டு சாக்லெட்டை இப்படி Package செய்து முப்பது ரூபாய்க்கு விற்கிற புண்ணியவான் இருக்கிறானே, அவன் வீட்டில் மாதம் தவறாமல் மும்மாரி பொழியட்டும் என்று நான் எப்போதும் வேண்டிக்கொள்வேன்.

முப்பது ரூபாய் என்பதற்காக யாராவது யோசிக்கிறார்களா? அதுவும் பெங்களூரில்? இதோ, கை நிறைய சாக்லெட் முட்டைகளை அள்ளிவைத்திருக்கும் இவரே சாட்சி.

ரொம்ப நேரமாக க்யூவில் நின்று எனக்குப் போரடித்தது. அவர் கையில் உள்ள சாக்லெட்களை எண்ண ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு டப்பாவிலும் 3 முட்டைகள். மொத்தம் 20 டப்பாக்கள். அப்படியானால் 60 முட்டைகள். 60 * 30 = 1800 ரூபாய்கள்.

யம்மாடி. என் மனைவியிடம் இதைச் சொன்னால், ‘இந்தக் காசுக்கு எங்க ஊர்ல ஒரு மாசம் சமையலே செஞ்சுடுவோம்’ என்பார்.

அதற்குள் முட்டைக்காரர் அவருடைய கவுன்டரை நெருங்கியிருந்தார். இருபது டப்பாக்களையும் பொத்தென்று வைத்துவிட்டுப் பர்ஸைத் திறந்து க்ரெடிட் கார்டை எடுத்தார்.

கவுன்டரில் இருந்தவர் ரொம்ப நல்லவர்போலிருக்கிறது, ‘எக்ஸ்க்யூஸ் மீ சார், நான் ஒரு சின்ன ஆலோசனை சொல்லலாமா?’ என்றார்.

‘வாட்?’

‘இதே சாக்லெட் 4 உள்ள பேக்ஸ் கிடைக்குது சார், அதுல இப்போ 20% டிஸ்கவுன்ட் இருக்கு’ என்றார் கவுன்டர்மணி, ‘நீங்க இதுல 20 டப்பா வாங்கறதுக்குப் பதிலா அதுல 15 டப்பா வாங்கினாப் போதும், யு வில் சேவ் அரவுண்ட் 350 ருப்பீஸ்.’

முட்டைக்காரர் முகத்தில் எரிச்சல், ‘ஃபர்கெட் இட்’ என்றார் சத்தமாக, ‘யு மைண்ட் யுவர் பிஸினஸ், ப்ளீஸ்!’

அப்புறமென்ன? எல்லா முட்டைகளுக்கும் பில் போடப்பட்டது. 1800 ரூபாய்க்கு க்ரெடிட் கார்டைத் தேய்த்துக் கையெழுத்துப் போட்டுவிட்டு அவர் போய்க்கொண்டே இருந்தார்.

எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ’பில் கேட்ஸ் கீழே விழுந்த ரூபாயைப் பொறுக்கமாட்டார், ஏனெனில் அதைப் பொறுக்கும் நேரத்தில் அவர் அதைவிட அதிகத் தொகையைச் சம்பாதித்துவிடுவார்’ என்று ஒரு பொன்மொழி(?) சொல்வார்கள், இவர் அதுமாதிரி நபராக இருப்பாரோ?

இவரைப் போன்ற நபர்களை நான் நிறைய சூப்பர் மார்க்கெட்களில் பார்த்திருக்கிறேன். பொருள்களை அள்ளிப் போடுவார்கள். எதையும் விலை பார்க்கமாட்டார்கள். ஒப்பிடமாட்டார்கள். பில் போட்டபின் பட்டத்தின் சற்றே நீண்ட வாலைப் போல் அச்சிட்டு வரும் ரசீதைச் சரிபார்க்கமாட்டார்கள். பணத்தைக் கட்டு, காருக்கு நட, அவ்ளோதான்!

இதெல்லாம் பார்த்தால்தான் ஆச்சு என்று நான் சொல்லவில்லை. அதன்மூலம் சில நூறு ரூபாய்கள் பணம் மிச்சமாவது அவர்களுக்கு அவசியப்படாமல் இருக்கலாம். அதைக் கவனிக்கும் நேரத்தில் வேறு உருப்படியான வேலைகளைச் செய்யவேண்டியிருக்கலாம்.

அது நிற்க. இந்த க்யூ சமாசாரம் நடந்து பல நாள்கள் கழித்து, இன்றைக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.

எங்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு சிறிய குழுவினர் ப்ராஜெக்ட் ஒன்றைப் பிரமாதமாகச் செய்து முடித்தோம். அதைக் கொண்டாடுவதற்காக எல்லாரும் ஒன்றாக மதிய உணவுண்டோம்.

அது ஓர் ஆந்திர உணவகம். வாசல் கதவு திறந்துவிடுகிறவரில் ஆரம்பித்து, காத்திருக்கும் அறையின் செய்தித் தாள்கள்வரை எங்கு நோக்கினும் சுந்தரத் தெலுங்கின் பாட்டிசைப்பு.

போதாக்குறைக்கு, என்னுடன் வந்தவர்கள் அறுவர், எல்லாரும் தெலுங்கர்கள். அவர்கள் தங்களுக்குள் செப்போ செப்பென்று செப்பித் தள்ள எனக்குக் காது புளித்துவிட்டது.

தெலுங்கு தெரியாத ஒருத்தன் பக்கத்தில் இருக்கிறானே என்கிற அடிப்படை நாகரிகமும் அவர்களுக்கு இல்லை, ஆந்திராவில் (ஹைதராபாதில்) மூன்று வருடம் வசித்தபோதும், உள்ளூர் மொழியான தெலுங்கைப் பேசக் கற்றுக்கொள்கிற சமர்த்தும் எனக்கு இல்லை. தானிக்குத் தீனி, சரியாப் போச்சு.

தீனி. அதுதான் மேட்டர். என்னோடு வந்திருந்த அறுவரும் ஆளுக்கு ஒரு சிக்கன் பிரியாணி சொன்னார்கள். அதுவும் ஒரு சிறிய குண்டான் சைஸுக்கு வந்து சேர்ந்தது.

ஒரு குண்டான் இல்லை, ஆளுக்கு ஒரு குண்டான். அது நிறையச் சோறு, ஆங்காங்கே சிக்கன் துண்டுகள்.

‘இவர்கள் இதை மொத்தமும் எப்படிச் சாப்பிட்டு முடிப்பார்கள்?’ என்று நான் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, அவர்கள் உற்சாகமாக ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்தார்கள்.

சும்மா சொல்லக்கூடாது, அந்த பிரியாணி நிஜமாகவே ரொம்ப ருசியாக இருந்திருக்கவேண்டும். மகிழ்ச்சியில் அவர்களுக்குத் தெலுங்கு பேசக்கூட மறந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

அப்படி முழுத் தீவிரத்துடன் சாப்பிட்டும்கூட, ஆளுக்குக் கொஞ்சம் பாக்கி வைத்துவிட்டார்கள். சுமார் ஒரு குண்டான் பிரியாணி மிஞ்சிவிட்டது.

பொதுவாக இதுமாதிரி ஹை க்ளாஸ் உணவகங்களில் இப்படி மிஞ்சும் உணவை அப்படியே விட்டுவிட்டு வருவதுதான் ‘நாகரிகம்’. ஒரு குண்டான் சிக்கன் பிரியாணி 200 ரூபாயோ என்னவோ விலை, போகட்டுமே, அதனால் என்ன?

நல்லவேளையாக, இந்தக் குழுவின் தலைவர் அப்படி நினைக்கவில்லை. ‘இதை பார்ஸல் செஞ்சு கொடுங்க’ என்று வெயிட்டரைக் கேட்டுக்கொண்டார். வீட்டுக்குக் கொண்டுபோய் சூடு செய்து சாப்பிடுவாராக இருக்கும்.

பில் வந்தது. காசைக் கொடுத்தோம். கிளம்பினோம். அலுவலகத்துக்குத் திரும்பினோம். உள்ளே நுழையுமுன், அங்கே இருந்த காவலாளியிடம் பிரியாணிப் பொட்டலத்தைக் கொடுத்தார் தலைவர். ‘சிக்கன் பிரியாணி’ என்றார் சுருக்கமாக.

’நன்றி சார்’ என்று அவர் வாயெல்லாம் பல்லாக வாங்கிவைத்துக்கொண்டார். விறைப்பாக ஒரு சல்யூட்டும் அடித்தார்.

’அடடே, அடிமட்ட ஊழியருக்குச் சிக்கன் பிரியாணி வாங்கித் தருவதற்கு மனம் இல்லாவிட்டாலும், மிஞ்சியதையாவது வீணடிக்காமல் ஞாபகமாக அவருக்குக் கொண்டுவந்து கொடுக்கத் தோன்றுகிறதே, நல்ல மனிதர்தான்’ என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து, வேறொரு வேலைக்காக அலுவலகத்துக்கு வெளியே வந்தேன். அதே செக்யூரிட்டி, அதே சல்யூட். பதிலுக்குப் புன்னகை செய்து, ‘என்னங்க, பிரியாணி சாப்டாச்சா?’ என்றேன்.

‘இல்லை சார், வீட்லேர்ந்து சாப்பாடு கொண்டாந்திருந்தேனே, அதைதான் சாப்பிட்டேன்’ என்றார் அவர்.

’ஏன்? என்னாச்சு? பிரியாணி நல்லால்லயா?’

‘வீட்ல பிள்ளைங்களுக்காக எடுத்துவெச்சிருக்கேன் சார்’ என்றார் அவர்.

***

என். சொக்கன் …

22 08 2012

இன்று அலுவலகத்தில் ஒரு வேடிக்கையான பிரச்னை.

வழக்கம்போல், ஏதோ ஒரு கூட்டம். யாரோ என்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள். செம போர்.

பொதுவாகவே எனக்கு Status Update கூட்டங்கள் என்றால் அலர்ஜி. அதுவும் நான் சம்பந்தப்படாத விஷயங்களில் ஸ்டேட்டஸ் அப்டேட்டப்படும்போது சும்மா தலையாட்டிக்கொண்டிருக்கப் பிடிக்காது. கொட்டாவிதான் வரும்.

அதுமாதிரி நேரங்களில் தூக்கத்தைத் தவிர்க்க, ஒன்று ஃபோனை நோண்டுவேன். அல்லது, பக்கத்தில் இருக்கும் டெலிஃபோன் அல்லது நெட்வொர்க் கேபிளைப் பிடித்து முறுக்கிக்கொண்டிருப்பேன், தண்ணீர் பாட்டில்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்குவேன், காகிதத்தில் கிறுக்கல் படங்கள் வரைவேன்…

குறிப்பாக, கஞ்சி போட்ட சட்டைபோல் மொடமொடப்பாக இருக்கும் இந்த நெட்வொர்க் கேபிளை முறுக்குவது எனக்குப் பிடித்த விளையாட்டு. அதில் 8 வரைவது, கையில் வளையல்போல் சுற்றுவது, இரண்டு கேபிள்களைப் பாம்புகள்போலவோ வாள்கள்போலவோ எக்ஸ் வடிவில் நிறுத்தி, அவற்றை ஒன்றோடொன்று சண்டை போட விடுவது என ரொம்பச் சுவாரஸ்யமான பல விளையாட்டுகள் இதில் சாத்தியம்.

இன்று அப்படி ஒரு கேபிளைப் பிடித்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது, பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னுடைய பாஸ் அதை என்னிடமிருந்து கிட்டத்தட்ட பிடுங்கினார். நான் ஆச்சர்யமாகப் பார்க்கவும், ‘இன்னிக்குதான் IT Teamலேர்ந்து சொன்னாங்க, இதுமாதிரி நம்ம மீட்டிங் ரூம்ல இருக்கற நெட்வொர்க் கேபிள்கள் பலது உடைஞ்சுபோய்க் கிடக்காம்’ என்றார்.

எனக்குச் சிரிப்புதான் வந்தது. ‘சும்மா கையில் வைத்து விளையாடுவதற்கும் உடைப்பதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியாதா? அது எப்போது உடையும் என்கிற லிமிட் தெரியாதா? நான் என்ன குழந்தையா?’ என்றேன்.

‘இருந்தாலும்…’ என்று இழுத்தார் அவர். ‘Better be safe than sorry.’

‘ஓகே’ என்று எதிரே இருந்த போர்டைப் பார்த்தேன். சரியாகப் பத்து விநாடிகளில் மறுபடி தூக்கம் வந்தது. தலையைக் குனிந்துகொண்டேன்.

சற்று நேரம் கழித்து, அனிச்சையாக நான் நெட்வொர்க் கேபிளைப் பிடித்து முறுக்க ஆரம்பித்தேன். வேண்டுமென்றே செய்யவில்லை. கைகள் தானாக அங்கே சென்றுவிட்டன.

உடனே, என் பாஸ் மறுபடி அதைப் பிடுங்கி வைத்தார்.

ஏனோ, இப்போது எனக்குக் கோபம் வந்துவிட்டது. ‘Do you have any data or proof that I broke any cables in this office?’ என்றேன் நேரடியாக.

அவர் அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ‘What?’ என்றார்.

’நான் இந்தக் கேபிள்களை உடைத்துவிடுவேனோ என்று நீங்கள் பயப்படுவது அர்த்தமில்லாத ஒன்று’ என்றேன் நான் (ஆங்கிலத்தில்தான்), ‘இப்படி என் கையிலிருந்து கேபிளைப் பிடுங்குவதன்மூலம் நீங்கள் என்னை அவமானப்படுத்துகிறீர்கள், இதன் அர்த்தம், ஒன்று, நீங்கள் என்னை எப்பப்பார் எதையாவது உடைக்கிறவன் என்று சந்தேகப்படுகிறீர்கள், அல்லது, நான்தான் இந்த மீட்டிங் ரூம்களில் இருக்கும் அனைத்து கேபிள்களையும் உடைத்தேன் என்று தீர்மானித்தேவிட்டீர்கள். இல்லையா?’

நான் இத்தனை பேசியதும், ஏழெட்டுப் பேர் இருக்கும் அறையில். Status Report சமர்ப்பித்துக்கொண்டிருந்தவர் பேச்சை நிறுத்த, எல்லாரும் எங்களையே பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.

சட்டென்று நிலைமை புரிந்து நான் வேறு பக்கம் திரும்பிக்கொண்டேன். அவரும் ஏதோ கருத்துச் சொல்ல, கூட்டம் பழையபடி தொடர்ந்தது.

இன்று மாலைமுழுக்க, அந்த விஷயத்தைதான் நினைத்துக்கொண்டிருந்தேன். பொழுதுபோகாமல் கேபிளை முறுக்குவது ஒரு Harmless பழக்கம் என்று நான் நினைக்கிறேன், அதனால் கேபிள் உடையக்கூடும் என்று என் பாஸ் நினைக்கிறார். அல்லது, ’கேபிள் முறுக்காதே, மீட்டிங்கைக் கவனி’ என்று என்னிடம் மறைமுகமாகச் சொல்கிறார். அதில் என்ன தப்பு? நான் ஏன் அவரிடம் அப்படிக் கோபப்படவேண்டும், அதுவும் Data, Proof எல்லாம் கேட்டு இத்தனை காமெடியாக உணர்ச்சிவயப்படவேண்டும்? இப்போது நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

உளவியல்ரீதியாக இதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும். அடுத்த மீட்டிங் வருவதற்குள் தேடிப் படித்துவிட்டால், இனிமேல் கேபிள்களை முறுக்காமல் இருப்பேனோ என்னவோ!

***

என். சொக்கன் …

11 08 2012

இன்று காலை, எம். எஸ். சுவாமிநாதனைப் பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி, அவருடைய தந்தை கும்பகோணம் நகரத் தலைவராகப் பணியாற்றியதாகக் குறிப்பிட்டது.

இந்த வரியைப் படித்தவுடன், என் மண்டைக்குள் ஒரு பல்ப் எரிந்தது. இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால், ஒரு கொசு ரீங்காரமிட்டது.

காரணம், எம். எஸ். சுவாமிநாதனின் தந்தையைப் பற்றி நான் ஏற்கெனவே ’கொஞ்சூண்டு’ கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாள் கும்பகோணத்தின் மிகப் பெரிய பிரச்னையாக இருந்த கொசுத் தொல்லையையும், அதனால் வரும் நோய்களையும் ஒழிப்பதற்காக அவர் பல முயற்சிகளை எடுத்த கதையையும், அப்போது சிறுவராக இருந்த சுவாமிநாதன் அவற்றில் பங்கேற்றதையும்கூடப் படித்திருக்கிறேன்.

ஒரே பிரச்னை, இதையெல்லாம் எங்கே படித்தேன் என்று சுத்தமாக ஞாபகம் வரவில்லை.

அதனால் என்ன? கூகுளைத் திறந்து ‘M S Swaminathan, KumbakoNam,  Mosquito problem’ என்று பலவிதமாகத் தட்டித் தட்டினால் மேட்டர் கிடைத்துவிடுமே.

உண்மைதான். ஆனால், நான் இதைப் படித்தது இணையத்தில் அல்ல. ஓர் அச்சுப் புத்தகத்தில்தான், நன்றாக நினைவிருக்கிறது.

அதுமட்டுமில்லை, அந்தப் புத்தகம் வெறுமனே தகவல்களை வறட்டு நடையில் தராமல், ஒரு கதைபோல இந்தச் சம்பவத்தை விவரித்திருந்தது. ஆகவே, இப்போது அதை மீண்டும் படிக்கவேண்டும் என்று எனக்கு ஆசை.

ஆனால், எங்கே போய்ப் படிப்பது? அது எந்தப் புத்தகம் என்பதுகூட நினைவில்லாமல் எதைத் தேடுவது?

ஞாபகசக்தி விஷயத்தில் நான் மிகச் சாதாரணன். யாராவது என்னிடம் ஃபோனிலேயோ, நேரிலேயே ‘நான் யாரு, சொல்லு பார்க்கலாம்’ என்று விளையாடினால் பேந்தப் பேந்த முழிப்பேன். அக்பர் பாபருக்குத் தாத்தாவா, அல்லது பாபர் அக்பருக்குக் கொள்ளுத்தாத்தாவா என்று சத்தியமாகத் தெரியாது, முதலாவது பானிப்பட் போர் எந்த வருடம் நடந்தது என்றெல்லாம் கேட்டால் ‘அபிவாதயே’ சொல்லி சாஷ்டாங்கமாக உங்கள் காலில் விழுந்துவிடுவேன்.

உண்மையில், இது ஒரு பலவீனம்மட்டுமல்ல. எந்தத் தகவலும், புள்ளிவிவரமும் ‘Just A Click Away’ என்பதால் வந்த அலட்சியம். அதுவும் இப்போதெல்லாம் ஃபோனிலேயே கூகுள் செய்ய முடிவதால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமே இருப்பதில்லை.

அதேசமயம், எம். எஸ். சுவாமிநாதனின் தந்தை கும்பகோணம் முழுவதும் கொசு மருந்து அடிக்கச் செய்தார் என்கிற தகவல், எதற்காகவோ என் மூளையில் தங்கிவிட்டது. அது ஏன் என்று தெரியவில்லை.

இப்போதைய பிரச்னை, அந்தக் கொசு மருந்துக் கதையை நான் முழுக்கப் படித்தாகவேண்டும். அதற்குமுன்னால் அந்தப் புத்தகத்தைக் கண்டுபிடிக்கவேண்டும்.

எனக்குத் தெரிந்து என்னிடம் எம். எஸ். சுவாமிநாதன் வாழ்க்கை வரலாறு எதுவும் இல்லை. வேறு ஏதோ ஒரு பொதுவான புத்தகத்தின் நடுவில்தான் இந்தக் கதை இடம்பெற்றிருக்கவேண்டும்.

ஆகவே, புத்தகத்தின் அட்டையை வைத்துத் தேடமுடியாது. தலைப்பை வைத்துத் தேடமுடியாது. புத்தக அலமாரியில் தெரியும் முதுகுப் பகுதியை வைத்துத் தேடமுடியாது.

இதன் அர்த்தம், நான் ஒவ்வொரு புத்தகமாகப் பிரித்துப் பொருளடக்கத்தைப் பார்க்கவேண்டும், அல்லது உள்ளே வேகமாகப் புரட்டவேண்டும். வேறு வழியே இல்லை.

எங்கள் வீட்டில் உள்ள சில ஆயிரம் புத்தகங்களையும் இப்படிப் பிரித்துப் படிக்க எத்தனை நேரம் ஆகுமோ? தெரியவில்லை. இத்தனை சிரமப்பட்டு அந்தப் பகுதியைப் படித்து என்ன சாதிக்கப்போகிறேன்? அதுவும் தெரியவில்லை. ஆனால் அதைப் படித்தே தீரவேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு சாதாரண பிடிவாதம். அதனால் எத்தனை நேர விரயம் ஆனாலும் பரவாயில்லை, வீடு முழுக்கப் புத்தகங்கள் தூக்கி எறியப்பட்டு அசௌகர்யமானாலும் பரவாயில்லை என்று ஒரு வறட்டுப் பிடிவாதம்.

மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டுப் புத்தகங்களை வேகமாகத் தள்ள ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஷெல்ஃபிலும் ‘புறநானூறு’, ‘வீரேந்திர சேவாக் வாழ்க்கை வரலாறு’, ‘ஐயங்கார் சமையல்’, ‘ரஷ்யச் சிறுகதைகள்’ போன்ற எம். எஸ். சுவாமிநாதனுக்குச் சம்பந்தமே இல்லாத பொதுவான தலைப்புகளை முதலில் Eliminate செய்தேன், மற்றவற்றைத் தனியே அடுக்கிவைத்துப் பிரித்துப் பார்த்தேன்.

காமெடியான விஷயம், நான் தேடுவது தமிழ்ப் புத்தகமா, ஆங்கிலப் புத்தகமா என்பதுகூட நினைவில்லை. அது இந்தப் புத்தக அலமாரிகளில்தான் இருக்கிறதா என்பதும் நிச்சயமாகத் தெரியவில்லை. ஒருவேளை நான் அந்தத் தகவலை ஏதோ ஒரு வார இதழில் படித்திருந்தால், அது அடுத்த சில நாள்களில் குப்பைக்குச் சென்றிருக்கும்.

ஆனால் எனக்கு ஏதோ ஒரு நம்பிக்கை, அந்தப் புத்தகம் இங்கேதான் இருக்கிறது என்று. மனைவியார் பின்னாலிருந்து முணுமுணுப்பதைக்கூடக் கண்டுகொள்ளாமல் ஷெல்ஃப் ஷெல்ஃபாகக் கலைத்தேன், மேலே பெட்டிகளில் கட்டிப் போட்டிருந்தவற்றைப் பிரித்தேன், படுக்கைக்கு அடியில் ஒளிந்திருந்தவற்றை இழுத்துத் தேடினேன்.

சுமார் முக்கால் மணி நேர அலைச்சலுக்குப்பிறகு, அந்தப் புத்தகம் அகப்பட்டுவிட்டது. ‘சாதனையாளர்கள் சிறு வயதில்’ என்று நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட தொகுப்பு. அழகான சிறுகதை வடிவத்தில் எம். எஸ். சுவாமிநாதனின் இளம்பருவச் சம்பவங்கள் சிலவற்றை விவரித்திருந்தது. அந்தக் கும்பகோணக் கொசுவும் அங்கே இருந்தது.

கலைத்துப்போட்ட புத்தகங்களுக்கு மத்தியில் உட்கார்ந்துகொண்டு அந்தக் கதையை ரசித்துப் படித்தேன். இரண்டே நிமிடங்கள்தான். புத்தகங்கள் மீண்டும் அதனதன் இடத்துக்குத் திரும்பின.

இதனால் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. ஆனாலும், ‘நான் நினைச்சபடி அந்தக் கதை இங்கே இருந்தது, பார்த்தியா?’ என்று என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொண்டேன். இதைத் தேடியபோது கிடைத்த மற்ற பல சுவாரஸ்யமான புத்தகங்களைப் படிக்கும் மேஜையில் அடுக்கிவைத்தேன். அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.

இதையெல்லாம் எதற்காக இங்கே எழுதுகிறேன் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இவ்வளவு தூரம் எழுதியபிறகுதான் அதை யோசிக்கிறேன்.

கடந்த பத்து வருடங்களில் ‘research on a topic’ என்பதன் அர்த்தமே மாறிவிட்டது. கூகுளைத் திறந்து அந்தத் தலைப்பைத் தட்டித் தேடி, அதிலும் முதல் பத்து விடைகளைமட்டும் படித்துத் தொகுத்தால் வேலை முடிந்தது. அதனை முழுமையான ஆராய்ச்சியாக நாம் எல்லாருமே ஏற்றுக்கொள்கிறோம். என்னதான் கூகுள் மிகச் சிறந்த தேடல் இயந்திரமாக இருப்பினும், அது நம்முடைய ‘க்ளிக்’குகளைக் கவனித்து அதன் அடிப்படையில் தொடர்ந்து தன்னை முன்னேற்றிக்கொண்டே இருந்தாலும், நம்முடைய பொது அறிவின் எல்லையைத் தீர்மானிக்கிற உரிமையை ஒரு சாஃப்ட்வேர் ப்ரொக்ராமின் Artificial Intelligence வசம் ஒப்படைப்பது சோம்பேறித்தனமா, அலட்சியமா? ஒருவேளை, இந்தக் காலத்துக்கு அத்தனை ‘ஞானம்’ போதுமோ?

இந்தக் கேள்வியைக் கேட்கிற உரிமை எனக்கு இல்லை என்பது நன்றாகத் தெரியும். அலுவல் விஷயங்கள், தனிப்பட்ட வேலைகள் என்று எல்லாவற்றுக்காகவும் எந்நேரமும் கூகுள் இணைய தளத்திலேயே குடியிருக்கிறவன் நான். இப்படி ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில் கூகுள் Searchகள் செய்தாலும், இன்றைக்குக் கம்ப்யூட்டர், இன்டர்நெட் உதவி இல்லாமல் சொந்தமாக ஒரு தகவலைத் தேடிக் கண்டுபிடித்த சந்தோஷம் புது அனுபவமாக இருக்கிறது.

எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் வெட்டியாக 45 நிமிடம் புத்தகங்களைப் புரட்டிய எனக்கே இப்படியென்றால், ஆராய்ச்சிக்காகக் கல்வெட்டுகளையும் பழங்காலக்  கட்டடங்கள், கோயில்கள், சிற்பங்கள், மனிதர்களையும் தேடிச் சென்று சேதி சேகரிப்பவர்கள் எப்படி உணர்வார்கள் என்று யோசித்துப்பார்க்கிறேன். கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் நிபுணரின் லாகவத்தோடு ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து சங்க இலக்கியங்களை நூலாக்கி வெளியிட்ட தமிழ்த் தாத்தா உ.வே.சா. எப்படி உணர்ந்திருப்பார் என்று கற்பனை செய்கிறேன்.

அத்தகு பேரனுபவத்தில் ஒரு துளி எனக்கு இன்று  சித்தித்தது, எம். எஸ். சுவாமிநாதனுக்கும் அவருடைய தந்தை விரட்டிய கொசுக்களுக்கும் நன்றி!

***
என். சொக்கன் …

24 07 2012

‘திண்ணை’ இணைய இதழ் எட்டு ஆண்டுகளுக்குமுன் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியொன்றில் திரு. சுஜாதா அவர்கள் நடுவராகப் பங்குபெற்றார். அதில் என்னுடைய சிறுகதை ஒன்று மூன்றாம் பரிசைப் பெற்றது.

‘மழலைச் சொல் கேளாதவர்’ என்ற அந்தக் கதையின் அடிப்படை, ஒரு கற்பனைக் கேள்வி: குழந்தைகள் பிறந்தவுடன் சட்டென்று பெரியவர்களாக வளர்ந்துவிட்டால் எப்படி இருக்கும்?

முன்பெல்லாம், குழந்தைகளை ஐந்து வயதில் பள்ளியில் சேர்ப்பார்கள். அதன்பிறகுதான் ஆனா, ஆவன்னா எழுதிப் பழகி அவர்களுடைய கல்வி தொடங்கும்.

ஆனால் இப்போது, மூன்று வயதுக்கும் குறைவாகவே குழந்தைகள் ‘Play School’களுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களுடைய கைகளோ விரல்களோ எழுத்துக்குத் தக்கபடி வளர்வதற்கு முன்பாகவே பென்சில் பிடித்து எழுதப் பயிற்சி தரப்படுகிறது. சரியாக எழுதாத குழந்தைகளுக்குத் திட்டு, அடி.

’ஏன்? பாவம் குழந்தை! இந்த வயதில் நீ என்ன வியாசமா எழுதினாய்?’ என்று கேட்டால், ’நம்ம காலம் வேற, இந்தக் காலம் வேற’ என்று பதில் வருகிறது.

என்னுடைய மகள் படித்த மழலையர் பள்ளியின் ஆசிரியை ஒருவர் என்னிடம் சொன்ன விஷயம் இன்றுவரை நன்றாக ஞாபகம் இருக்கிறது, ‘உங்கள் குழந்தை இன்னும் எழுதத் தயாராகவில்லை, இன்னும் கொஞ்சநாளாகட்டும் என்று சொன்னால், வேற ஸ்கூல் மாத்திடுவேன்னு மிரட்டறாங்க, நாங்க என்ன செய்யறது சார்?’

பெற்றோரைப் பொறுத்தவரை, அவர்கள் பெறும் Peer Pressures வேறுவிதமாக இருக்கிறது. ’எதிர் வீட்டுப் பையன் மூணரை வயசில் ஏ, பி, சி, டி மொத்தமும் தலைகீழ்ப் பாடம். நம்ம பொண்ணு பின்தங்கிடுவாளோ?’ என்று அபத்தமாகக் கவலைப்பட்டுக்கொண்டு டீச்சர்களை மிரட்டுகிறார்கள். அவர்களும் வேறு வழியில்லாமல் குழந்தைகளைச் சீக்கிரத்தில் எழுதவைத்து, சீக்கிரத்தில் படிக்கவைத்து, சீக்கிரத்தில் கணக்குப் போடவைத்துத் தயார் செய்கிறார்கள்.

குழந்தைகளைப் ‘பெரியவர்’களாக்குவதற்கு இத்தனை அவசரம் எதற்காக? இது எங்கே கொண்டுபோய் விடும்? இந்தக் கற்பனையின் நீட்சியாகதான் ‘மழலைச் சொல் கேளாதவர்’ கதையை எழுதினேன்.

இந்தக் கதையில் வரும் அரசாங்கம் ஒரு சட்டம் போடுகிறது, குழந்தைகள் மெதுவாக வளர்ந்து வாலிபப் பருவத்தை எட்டுவதற்காக இருபது வருடமெல்லாம் காத்திருக்கமுடியாது, அவர்கள் உடனே சமூகத்துக்குப் பயனுள்ளவர்களாக மாறவேண்டும் (இதனை Productive என்பர் பெரியோர்!). அதற்காக ஒரு சின்ன ஊசி. குழந்தை பிறந்த எட்டு மணி நேரத்துக்குள் இதைப் போட்டுவிட்டால், அது உடனே வளர்ந்து இளைஞன் / இளைஞி ஆகிவிடும். வெறும் உடல்வளர்ச்சிமட்டுமல்ல, இந்த இருபது ஆண்டுகளில் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய கல்வி அறிவு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் அந்த ஊசி தந்துவிடும்.

ஒரே ஒரு தம்பதி, இந்தச் சட்டத்தை மீற நினைக்கிறார்கள். தங்கள் குழந்தையை இயற்கையானமுறையில் வளர்க்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். ’குழந்தை வளரும் பருவம் பயனற்ற ஒன்று அல்ல’ என்று நினைக்கும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் இந்த எளிய கதையின் முடிச்சு. அறிவியல் புனைகதை என்பதற்காகவே சேர்க்கப்பட்ட பல ‘க்ளிஷே’க்கள் இந்தக் கதையில் இருப்பினும், இது எழுப்பும் கேள்விகள் சமகாலத்துக்கும் உரியவைதான் என்று நினைக்கிறேன்.

எப்போதோ எழுதிய ஒரு கதையைப் பற்றி இன்றைக்கு இத்தனை நீளம் சொல்லக் காரணம் உண்டு, நண்பர் சதீஷ் ராஜா இந்தக் கதையை அடிப்படையாக வைத்து ஒரு குறும்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதனைக் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

ஒருவேளை நீங்கள் முழுக் கதையையும் படிக்க விரும்பினால்? ‘திண்ணை’யில் தேடினேன், அந்தக் கதையைக் காணோம். ஆகவே அதையும் இங்கே தந்துள்ளேன். (ஆனால் ஒன்று, ஃபேஸ்புக், ட்விட்டரெல்லாம் நம் attention spanஐக் கெடுக்காத ஆதிகாலத்தில் (2004) எழுதப்பட்ட கதை இது, ஆகவே இப்போது புதிதாக வாசிப்பவர்களுக்கு இது மிக மிக நீளமாகத் தோன்றும், திட்டாதீர்கள்!)

பார்த்து/படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நன்றி.

***

என். சொக்கன் …

22 06 2012

இணைப்புகள்:

1. குறும்படம்:

2. சிறுகதை:

*************************************

மழலைச்சொல் கேளாதவர்

*************************************

அறைக்குள் ஒரு பெரிய புயலடித்து ஓய்ந்தாற்போலிருந்தது.

பிரசவித்த களைப்பில் மதுமிதாவும், பிறந்த களைப்பில் அவளது குழந்தையும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளி ஒரு சாய்வு நாற்காலியில் தளர்ந்து படுத்திருந்தான் அஷ்வின்.

இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துப் பிறந்திருக்கவேண்டிய குழந்தை. கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டது. என்றாலும், அதற்கான குறை அடையாளங்கள் ஏதுமின்றி நன்கு ஆரோக்கியமாகவே பிறந்திருக்கிறது. நிம்மதி.

அஷ்வினுக்கு இன்னும் பதற்றம் தணிந்திருக்கவில்லை. நெஞ்சின் படபடப்பு காதுகளில் பலமாக எதிரொலித்துக்கொண்டிருந்தது.

எந்த விசேஷமும் தட்டுப்படாத சாதாரண நாளாகதான் இது தொடங்கியது. காலை எழுந்து, குளித்து, பிரட்டில் மிளகாய்ப் பொடியைத் தோய்த்துத் தின்றுகொண்டிருக்கும்போது உள்ளறையிலிருந்து மதுமிதாவின் அலறல் சத்தம் கேட்டது.

அவசரமாக உள்ளே ஓடிச் சென்று பார்த்தபோது வயிற்றைப் பிடித்துக்கொண்டு படுக்கையில் மல்லாக்கக் கிடந்தாள் அவள். வேதனையும், ஆத்திரமும் கலந்து அவள் கத்துவதைப் பார்க்கையில் சற்றுமுன் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்த பெண்தானா இவள் என்றிருந்தது.

அவளை நெருங்கிக் குனிந்து நெற்றியில் கை வைத்தான் அஷ்வின், ‘பதற்றப்படாதே மது, நான் டாக்டருக்கு ஃபோன் பண்றேன்!’

அவன் சொல்வது அவளுக்குக் கேட்டதோ, இல்லையோ. ‘வேண்டாம்’ என்பதுபோல் இருபுறமும் தலையசைத்து மறுத்தாள், பொறுக்கமாட்டாத வலியில் கீழுதட்டைப் பல்லால் கடித்து ரத்தம் வரத்தொடங்கியிருந்தது.

டாக்டர்களின் ஆலோசனைப்படி, பல மாதங்களுக்குமுன்பிருந்தே இதுபோன்ற சூழ்நிலைக்கு அஷ்வினும் மதுமிதாவும் தயார் செய்யப்பட்டிருந்தார்கள். உதவிக்கு யாருமில்லாத நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டால் என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்றெல்லாம் அட்டவணை தயாரித்துக் கொடுத்திருந்தார்கள். ஆகவே, இப்போது அநாவசியமாகத் தடுமாறாமல் தெளிவாகச் செயல்பட முடிந்தது.

என்றாலும், அந்தக் கணத்தில் அஷ்வினுக்குள் இனம் புரியாத ஓர் அழுத்தம் ஊடுருவியிருந்தது. இரண்டு உயிர்களைக் காப்பாற்றுகிற பொறுப்பு அவன் ஒருவன் தலைமேல் சுமத்தப்பட்டிருப்பதை நினைக்கையில் கண்கள் இருண்டு, கால்கள் நில்லாமல் கழன்றுவிடுவதுபோல் உணர்ந்தான்.

மதுமிதாவை ஆசுவாசப்படுத்தி, உடைகளைத் தளர்த்திவிட்டு எதிரில் இருந்த அலமாரியைத் திறந்தான் அஷ்வின். பிரசவ நேரத்தில் உதவுவதற்கான விசேஷ ரோபோ அதனுள் இருந்தது.

ஆனால், அந்தப் பெட்டியைத் திறந்து ரோபோவை வெளியில் எடுத்துப் பாதி பொருத்துவதற்குள் மீண்டும் மதுமிதாவின் அலறல் கேட்டது. எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு அவளருகே ஓடினான் அஷ்வின். அடுத்த ஒன்றரை நிமிடங்களுக்குள் அவர்களுடைய குழந்தை பிறந்துவிட்டது.

ஆண் குழந்தை. அவர்கள் பயந்ததுபோல் ரொம்பச் சிரமமாக இல்லாமல், வலுக்கட்டாயமாக அஷ்வினுக்கு தாதிப் பயிற்சி கொடுத்த மருத்துவர்களின் புண்ணியத்தில் சுகப் பிரசவம்தான்.

டாக்டர்களுக்குமட்டுமின்றி, முன்னேறிவிட்ட மருத்துவத் தொழில்நுட்பத்திற்கும்தான் நன்றி சொல்லவேண்டும். பிரசவம் என்பது மறுபிறப்புக்குச் சமம் என்றெல்லாம் சென்ற பல நூற்றாண்டுகளாக கர்ப்பிணிப் பெண்களை பயமுறுத்திக்கொண்டிருந்த கஷ்டங்கள் யாவும் இப்போது வழக்கொழிந்தாயிற்று. குழந்தைப் பிறப்பின்போது ஏற்படக்கூடிய பெரும்பாலான அபாயங்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாக மருந்துகளைக் கண்டுபிடித்து, கருவான இரண்டாம் மாதத்திலிருந்து இதற்கென்று விசேஷ ஊசிகள், க்ரீம்கள் என்று ஏதேதோ கொடுத்து, பிரசவத்தின்போது ரத்தப்போக்கைப் பெருமளவு கட்டுப்படுத்தி, வலியைக் குறைத்து, இன்னும் என்னென்னவோ மாயங்கள் செய்துவிட்டார்கள். பெட்டியைத் திறந்து பொருளை எடுப்பதுபோல் பிரசவம் பார்ப்பதும் லகுவாகிவிட்டது.

என்றாலும், முற்றிலும் புதியதான ஓர் உயிரை உலகிற்குக் கொண்டுவருவதென்றால் சாதாரண விஷயமா? அப்போதுதான் பிறந்த குழந்தையைச் சுத்தம் செய்து, கையிலெடுத்துப் பார்க்கையில் அந்தச் சந்தோஷத்தையும் மீறி அஷ்வினின் உடல்முழுதும் நடுங்கிக்கொண்டிருந்தது.

அந்தக் கணத்தில் அவனுக்கிருந்த மனநிலையை வார்த்தைகளில் கொண்டுவருவது ரொம்பச் சிரமம். ஒரு மிகப் பெரிய விஷயத்தைச் செய்துமுடித்துவிட்டதுபோல் பெருமிதம் இருக்கிறது. என்றாலும், அதைச் சரியாகதான் செய்திருக்கிறோமா என்று யாரேனும் உறுதிப்படுத்தினால் பரவாயில்லையே என்று மனம் கிடந்து துடிக்கிறது. எதுவும் தப்பாக நடந்துவிடவில்லையே? யாரிடம் கேட்பது? விடாமல் அலறுகிற இந்தக் குட்டியூண்டு பாப்பாவிடமா? அல்லது, களைத்து உறங்கும் மதுமிதாவிடமா?

சிறிது நேரம் பிடிவாதமாக அழுதுகொண்டிருந்த குழந்தை அப்படியே தூங்கிவிட்டது. மதுமிதா விழித்து எழுந்தபிறகுதான் அதற்கு ஏதேனும் சாப்பிடக் கிடைக்கும்.

அஷ்வினுடைய மோதிர விரலை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டிருந்தது குழந்தை. அதைப் பிரிக்க மனமில்லாமல் சிறிது நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, குழந்தையை மதுமிதாவுக்கு அருகே படுக்கச்செய்து ஒரு சிறிய துண்டால் போர்த்திவிட்டான்.

மதுமிதா எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை. பிறந்த குழந்தையைப் பார்த்தாளா என்பதுகூட நிச்சயமில்லை. மேலேறித் தாழ்ந்துகொண்டிருந்த அவளுடைய வயிறு இன்னும் லேசாகப் புடைத்திருந்ததைப் பார்க்கையில் உள்ளே இன்னொரு குழந்தை இருக்கிறதோ என்று சந்தேகமாக இருந்தது அஷ்வினுக்கு.

ஆனால், பிரசவித்த பெண்ணின் வயிறு சரேலென்று பழையபடி சுருங்கிவிடாது என்று டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். அதற்குச் சில பயிற்சிகள் இருக்கின்றன, எல்லாம் சரியாவதற்குச் சில மாதங்களாவது ஆகும்.

மெதுவாக ஆகட்டும். ஒன்றும் அவசரமில்லை. மதுமிதாவின் தலைமுடியை மெல்லமாகக் கோதி அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான் அஷ்வின். பக்கத்தில் படுத்திருந்த குழந்தைக்கும் ஓர் ஈர முத்தம். அதன்பின், சாய்வு நாற்காலியில் சரிந்து விழுந்ததுதான் நினைவிருந்தது.

மீண்டும் அவன் எழுந்தபோது, கரகரப்பில்லாத, ஆனால் இயந்திரத்தனம் தெளிவாகத் தெரியும் குரலில் யாரோ வளவளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தால், தாதிப் பணிக்கென்று வாங்கியிருந்த ரோபோ. அஷ்வின் பாதியைப் பொருத்தியபிறகு மிச்சத்தைத் தானே பொருத்திக்கொண்டுவிட்டதுபோல.

அஷ்வினின் நாற்காலி எழுப்பிய க்ரீச் ஒலியில் கவனம் கலைந்த ரோபோ, ‘குழந்தை பிறந்தாச்சா?’ என்றது நேரடியாக.

அவன் அதற்கு பதில் சொல்லாமல் ‘நீ யார்கிட்டே பேசிகிட்டிருந்தே?’ என்றான்.

‘அது ஒண்ணுமில்லை. சும்மா ஸிஸ்டம் செக்’ என்றது ரோபோ, ‘குழந்தை பிறந்தாச்சா?’

‘ஆச்சு’, என்றான் அஷ்வின் சலிப்பாக.

‘என்ன குழந்தை?’

‘இப்போ உனக்கு அவசியம் தெரிஞ்சாகணுமா?’ அஷ்வினின் குரலில் எரிச்சல் மண்டியிருந்தது. ‘ஆணோ, பொண்ணோ, குழந்தை பிறந்தாச்சு. இனிமே உன் சர்வீஸ் தேவையில்லை’ என்றபடி மின்சார இணைப்பைத் துண்டித்தான்.

ரோபோவின் கண்கள் லேசாக மங்கின. பிறகு, ‘பேட்டரி சக்தி இன்னும் பதினாறரை நிமிடங்களுக்குச் செல்லும்’ என்று அறிவித்தது அது. பின்னர், ‘என்ன குழந்தை?’ என்றது விடாமல்.

அப்போதும் அஷ்வினிடமிருந்து பதில் வரவில்லை. ஆகவே, அடுத்த கேள்வியாக ‘அரசாங்கத்துக்குச் சொல்லியாச்சா?’ என்றது ரோபோ.

ஏதோ எரிச்சலாகச் சொல்லவந்த அஷ்வின் சட்டென்று சுதாரித்துக்கொண்டான். அவசரப்படக்கூடாது. இன்னும் பதினாறு நிமிடங்களுக்காவது இந்த ரோபோவிடம் வம்பளத்து அதன் பேட்டரி சக்தியைக் கரைத்துப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டியாகவேண்டும். இல்லையென்றால், யோசித்துவைத்த எதையும் செயல்படுத்தமுடியாது.

‘அரசாங்கத்துக்குச் சொல்லியாச்சா?’ குரலில், ஏற்ற இறக்கங்களில் சிறிதும் மாற்றமின்றி மறுபடி கேட்டது ரோபோ.

‘சொல்லணும்’ என்றான் அஷ்வின். ‘குழந்தை தூங்குது. முழிச்சப்புறம் சொல்லலாம்ன்னு இருக்கேன்’ என்று சொல்லிவிட்டுச் சட்டென்று கட்டிலைப் பார்க்கத் திரும்பிக்கொண்டான்.

அவனுடைய பார்வையிலும் பேச்சிலும் இருந்த கள்ளத்தனத்தை அந்த ரோபோ கவனித்ததா, தெரியாது. ஆனால், சில நிமிடங்களுக்கு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தது. பின்னர், ‘சீக்கிரம் சொல்லிவிடுவது நல்லது’ என்றது.

‘ம், சரி’ என்றான் அஷ்வின், ‘அரை மணி நேரம் கழித்துச் சொன்னால்தான் என்னவாம்?’

‘அதெல்லாம் தப்பு’ என்றது ரோபோ, ‘குழந்தை பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் இஞ்ஜக்ஷன் போட்டுவிடவேண்டும் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறார்கள் உனக்கு?’

அஷ்வின் கண்களை மூடியபடி சரிந்து படுத்துக்கொண்டான். தலைக்குள் சுழல்சுழலாக வளையங்கள் பிணைந்து, பிரிந்து, பிணைந்து, பிரிந்து அல்லாடின. அவற்றினிடையே ஒரு கூரான ஊசி முனை தலை நீட்டி, ‘எங்கே உன் குழந்தை?’ என்று அதட்டியது.

சட்டென்று கண்களை அகலத் திறந்து, மதுமிதாவின் அருகே தூங்கும் குழந்தையைப் பார்த்தான் அஷ்வின். அந்த ரோபோவின் இயந்திரக் குரல் அவனுக்குள் இன்னும் தெளிவாகக் கேட்பதுபோலிருந்தது, ‘குழந்தை பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் இஞ்ஜக்ஷன் போட்டுவிடவேண்டும்.’

‘முடியாது’ என்று தனக்குள் உறுதியாகச் சொல்லிக்கொண்டான் அஷ்வின், ‘என் குழந்தைக்கு அந்த ஊசி தேவையில்லை!’

அரசாங்கத்தின் கட்டாய ஊசியை ஏமாற்றித் தன் குழந்தையைக் குழந்தையாகவே வளர்க்கவேண்டும் என்று பல நாள்களாகவே அவன் யோசித்த விஷயம்தான். இன்னும் மதுமிதாவிடம்கூடச் சொல்லவில்லை. ஆனால், அதுபற்றி அவனுக்குக் கவலையாக இல்லை. அவளிடம் சொன்னால் நிச்சயமாக சந்தோஷப்படுவாள்.

இந்தக் கருக்காலத்தில்கூட, சோதனைக் குழாய்க்குள் தங்கள் குழந்தையை வளர்த்துக்கொள்கிற அதி சவுகர்யங்களையெல்லாம் நிராகரித்துவிட்டு இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்று தீர்மானித்திருந்தாள் மதுமிதா. இதற்காக அவள் தனது கல்லூரி உத்தியோகத்தைக்கூடத் துறந்துவிடவேண்டியிருந்தது.

ஆகவே, இப்போது இந்தச் செயற்கை மருந்துகளையெல்லாம் துரத்தியடித்துவிட்டு நம் குழந்தையை இயற்கையாகவே வளர்க்கலாம் என்றால், மதுமிதா நிச்சயம் மறுக்கப்போவதில்லை என்று அஷ்வினுக்கு உறுதியாகத் தோன்றியது. அவளுடைய ஒத்துழைப்புமட்டும் இருந்துவிட்டால் போதும், அரசாங்க விதிமுறைகளையெல்லாம் குப்பையில் கொட்டித் தீய்த்துவிடலாம்.

இந்தக் குழந்தை கொஞ்சம் முன்னதாகவே பிறந்துவிட்டது இன்னும் வசதி. அரசாங்கத்திலிருந்து யாரும் விசாரிக்க வரமாட்டார்கள். எப்படியாவது எட்டரை மணி நேரம் கடந்துவிட்டால், அதன்பிறகு அந்த ஊசியின் ஜம்பம் செல்லாது.

இப்படி நினைக்கும்போது, அதிலிருக்கும் விதிமீறலின் சந்தோஷம் அஷ்வினுக்கு ரகசியக் கிளர்ச்சிபோலிருந்தது. ஆனால் அதற்காகதான் அவன் அந்த ஊசியை ஏமாற்ற விரும்புகிறானா என்றால், இல்லை.

மதுமிதா கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்ததுமே, அரசு முதியோர் காப்பகத்தில் இருக்கும் அம்மாவைக் கூப்பிட்டுச் சொன்னான் அஷ்வின். பல மைல்களுக்கப்பாலிருந்து கேட்டாலும் அம்மாவின் குரலில் முன்பு எப்போதும் பார்த்திராத சந்தோஷம் தெரிந்தது. மதுமிதாவுக்குச் சில மருத்துவக் குறிப்புகள் சொல்லிவிட்டு வீட்டின் மேல் அலமாரியில் இருக்கும் ஒரு மெரூன் நிற டைரியைப் பிரித்துப் பார்க்கச் சொன்னாள்.

மதுமிதா பேசிக்கொண்டிருக்கும்போதே அஷ்வின் அந்த டைரியைத் தேடிப் பிடித்துவிட்டான். அதன் முதல் பக்கத்தில் ஒரு போஷாக்கான ஆண் குழந்தை சிரித்துக்கொண்டிருந்தது. அதற்குக்கீழே, ‘அஷ்வின்’ என்று எழுதியிருந்தது.

அதுவரை அஷ்வின் அந்த ஃபோட்டோவைப் பார்த்ததே இல்லை. சொல்லப்போனால், புகைப்படத்திலோ, நேரிலோ அவன் ஒரு குழந்தையைப் பார்ப்பது இதுதான் முதல் தடவை. சமீபகாலமாக எந்தக் குழந்தையையும் எட்டரை மணி நேரத்துக்குமேல் குழந்தையாக இருப்பதற்கு உலக அரசாங்கம் அனுமதிப்பதில்லை என்பதால், தன்னுடைய அந்தக் குழந்தைப் படத்தை ஓர் அதிசயக் காட்சியை எதிர்கொண்டதுபோல வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

அம்மாவுடன் பேசிவிட்டு வந்த மதுமிதாவும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துத் திகைத்து நின்றுவிட்டாள். ‘நீயாடா இது?’ என்று அவனைப் பார்த்து நம்பமாட்டாமல் கேட்டவள் கண்களை அகல விரித்து, அவனையும் ஃபோட்டோவையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுத் தன் வயிற்றில் கை வைத்து ‘நம்ம பையனும் இதேமாதிரி அழகா இருப்பான், இல்ல?’ என்றாள் பூரிப்பாக.

’ஆமா, ஆனா அதெல்லாம் வெறும் எட்டரை மணி நேரம்தான்!’

அஷ்வின் அவளை மெல்லமாக அணைத்துக்கொண்டு மீண்டும் அந்தப் புகைப்படத்தை ஏக்கத்துடன் பார்த்தான். பிறக்கப்போவது அழகான குழந்தையோ, அசிங்கமான குழந்தையோ, எப்படியானாலும் வெறும் எட்டரை மணி நேரம்தானே குழந்தைப் பருவம் என்ற உண்மையின் கசப்பு அவனை உறுத்தியது.

பிஞ்சுக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாவதை அணுவணுவாகப் பார்த்து, ரசித்து, ஃபோட்டோவும், வீடியோவுமாகப் பிடித்துவைத்த காலமெல்லாம் சென்ற தலைமுறையோடு போயிற்று. இதற்காக அநாவசியமாக இருபது வருடங்களை வீணடிப்பதா என்று சிந்தித்த அரசாங்கம் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை அதிவேகமாகத் தூண்டிவிட்டு, குழந்தைகளின் மன, உடல் வளர்ச்சியை விரைவாக்குகிற மருந்துகளைக் கண்டுபிடித்துவிட்டது.

இப்போதெல்லாம், பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் ஒரே ஒரு சின்ன ஊசி. அடுத்த சில நிமிடங்களில் மந்திர மாயம்போல் அந்தக் குழந்தை இருபது வயது இளைஞனாகவோ, இளைஞியாகவோ வளர்ந்துவிடுகிறது. அதுவும், வெறுமனே உடம்பைமட்டும் பெரிதாக்குகிற அசுர வளர்ச்சியாக இல்லாமல், இத்தனை ஆண்டுகளில் சேரவேண்டிய படிப்பறிவு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் ஒற்றை ஊசியில் நுணுக்கி அடக்கிவிட்டார்கள். பிறந்த மறுதினத்திலிருந்து அந்தக் குழந்தை கல்லூரிக்குச் சென்று, விருப்பமுள்ள துறையில் வல்லுனராகி, ஒரு வயதுக்குள் டாக்டர் பட்டம் பெற்றுவிடுவதெல்லாம் சுலப சாத்தியம்தான்.

இன்னும் கண் திறக்காத குழந்தைகளெல்லாம் இப்படித் திடுதிப்பென்று பெரியவர்களாகி நடமாடத்தொடங்கிவிடுவதில் எல்லாருக்குமே லாபம்தானே? கொஞ்சம்கொஞ்சமாக அவர்களுக்கு உடல் வலுவேற்றி, உடம்பு சரியில்லையென்றால் கவலைப்பட்டு, பேச, எழுதப் படிக்க சொல்லிக்கொடுத்து, பரீட்சைகளில் அவர்கள் நல்ல மார்க் வாங்குவார்களா என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதைவிட, இப்படி உடனடியாக அவர்களைப் ’பயனுள்ள’ குடிமகன்களாக்கிவிடுவதால், நாட்டில் மனித சக்தி அபரிமிதமாகிவிடும், இதன்மூலம் பல புதிய விஷயங்களைச் சாதிக்கலாம் என்றெல்லாம் கட்டுரைகள் அச்சிட்டு வெளியாகியிருக்கின்றன.

ஆரம்ப காலத்தில் இந்த ஊசிக்கு எதிர்ப்பு இருந்ததோ என்னவோ, ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக, எல்லாரும் இந்த முறையைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இதில் தாங்கள் இழப்பது எதுவுமில்லை என்ற ஞானம் எல்லாருக்கும் கவனமாக ஊட்டப்பட்டிருந்தது. ஒன்பதே கால் மாதங்கள் இரட்டை உயிராகக் குழந்தையைச் சுமக்கிற பெண்களைக்கூட, இதுபற்றிய உணர்வுபூர்வமான பற்றுதல்களையெல்லாம் தவிர்க்கவைத்துத் தாய்மை என்பது ஓர் உயிரியல் தேவைமட்டுமே என்று ஏற்றுக்கொள்ளச்செய்துவிட்டார்கள். அதன்பிறகு, இந்த அதீத வளர்ச்சியையும் இயல்பான ஒரு விஷயமாக ஒப்புக்கொண்டு முப்பது வயதுப் பெற்றோர் இருபது வயது மகனையோ, மகளையோ நண்பர்கள்போல் ஏற்றுக்கொள்ளமுடிந்துவிட்டது.

இந்த குழந்தைப் புகைப்படத்தைப் பார்க்கும்வரை அஷ்வினுக்கும் மதுமிதாவுக்கும்கூட அப்படிப்பட்ட எண்ணம்தான் இருந்தது. ஆனால் இந்த அம்மாதான் வேண்டுமென்றோ, அல்லது தன்னையும் அறியாமலோ அவனுக்குள் ஒரு குறுகுறுப்பைக் கிளப்பிவிட்டாள்.

இத்தனைக்கும் அது ஒரு மங்கலாகிச் சிதைந்துவிட்ட புகைப்படம். அதிலிருப்பது தன்னுடைய குழந்தை உருவம்தானா என்றுகூட அஷ்வினால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை, ஆனால் பளிச்சென்று அகலச் சிரித்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தை, அவனைக் கொஞ்ச அழைப்பதுபோல் உணர்ந்தான் அவன். ’வாயேன், வந்து என்னைத் தூக்கிக்கொள்ளேன், ஒரு முத்தம் கொடேன், நான்தான் நீயா? அல்லது, நீதான் நானா? உன் குழந்தை என்னைப்போல இருக்குமா? அல்லது, என் குழந்தை உன்னைப்போல இருக்குமா? உன் குழந்தைக்குப் பட்டு தேகம் உண்டா? குட்டித் தொப்பை? குறுகுறு நடக்கும் கால்கள்? கூழ் அளாவும் சிறுகைகள்? ஒன்றிரண்டு பற்களைமட்டும் லேசாக வெளிக்காட்டியபடி பொக்கை வாயில் சிரிக்குமா உன் குழந்தை? அறியாமையின் உவப்பும், களங்கமற்ற புன்னகையும் பொங்க, அதன் ஒவ்வோர் அசைவையும் விஷமத்தையும் பார்த்து ரசிக்கிற பாக்கியம் உங்களுக்கு உண்டா?’

எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் அவனுக்குள் ஆற்றாமையாகப் பொங்கிய இந்த நினைப்பெல்லாம் மதுமிதாவுக்கும் இருந்ததா என்று அஷ்வினுக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபிறகுதான் தங்கள் குழந்தையைத் தாங்கியிருப்பதன் சந்தோஷத்தை முழுமையாக உணர்வதாக அவள் அவனை முத்தமிட்டுச் சொன்னாள்.

அப்போதுதான் அஷ்வின் அந்த முடிவுக்கு வந்திருந்தான், ’என் குழந்தைக்கு இந்த ஊசி வேண்டாம், அசுரத்தனமான வளர்ச்சியும் வேண்டாம், வெறும் எட்டரை மணி நேரம், அதுவரை இந்தக் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை அரசாங்கத்துக்குச் சொல்லாமல் மறைத்துவிட்டால் போதும். அதன்பிறகு அவர்களுடைய ஊசிகளால் எந்தப் பயனும் இல்லை. மணிக்கணக்காகக் காற்றை உதைத்துச் சண்டை போட்டு, மழலை பேசி, தரையில் இருப்பதையெல்லாம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, மென்தேகத்துடன் தட்டுத் தடுமாறி நடந்து, கீழே விழுந்து அடிபட்டு, ஆனா, ஆவன்னா எழுதக் கற்று, இயற்கையான குழந்தைப் பருவத்தை அனுபவித்து வளரும் எங்கள் குழந்தை.’

மெலிதான கொட்டாவியை அடக்கியபடி வாட்சைப் பார்த்தான் அஷ்வின். மணி ஒன்றரை. குழந்தை பிறந்து நாலு மணி நேரமாவது ஆகியிருக்கும். இப்படியே இன்னும் பாதி நேரத்தை ஓட்டியாகவேண்டும்.

செல்பேசியின்வழியே இணையத்தில் நுழைந்து, விடுப்புக் கோரி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினான் அஷ்வின். அப்போது அவனருகே ஸ்தம்பித்து நின்றிருந்த ரோபோ சட்டென்று உயிர் பெற்று ‘அரசாங்கக் கார் வருகிறது’ என்றது.

அந்தக் குரலின் திடீர்மையும் அதிலிருந்த எதிர்பாராத செய்தியும் அஷ்வினைத் திடுக்கிடவைத்தது. ‘அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்றான் சுதாரித்து. ‘நான் இன்னும் அவர்களுக்குத் தகவல் அனுப்பவில்லை.’

‘அதனால் என்ன? நான் அனுப்பிவிட்டேன்’ என்றது ரோபோ, ‘அவர்கள் வந்துவிட்டார்கள். அதோ, சைரன் சத்தம் கேட்கிறது.’

‘ஐயோ’ என்று அனிச்சையாக அலறிய அஷ்வின் அதே வேகத்தில் எழுந்து அந்த ரோபோவின் கழுத்தைக் கொத்தித் தூக்கினான். ‘துரோகி யந்திரமே, என் அனுமதியில்லாமல் நீ எப்படி அரசாங்கத்துக்குத் தகவல் அனுப்பலாம்?’ என்று கத்தியபடி அதைக் கீழே விசிறியடித்தபோது அதன் பிளாஸ்டிக் மேல் பாகத்தில் ஆழமான விரிசல் கண்டது.

பாம்புபோல் தரையில் நெளிந்து புரண்ட ரோபோ ஏதோ முனகலாகப் பேசினாற்போலிருந்தது. பிறகு அதனிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை.

இப்போது அஷ்வினுக்கு அந்தச் சத்தம் தெளிவாகக் கேட்டது. அரசாங்க வாகனம்தான், பக்கத்தில் வந்துவிட்டார்கள்.

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கட்டிலின் அருகே ஓடினான் அஷ்வின். குழந்தையைத் தூக்கிக்கொண்டு எங்காவது ஓடித் தப்பிவிடலாமா? துரத்திக்கொண்டு வருவார்களா? எண்பது திசைகளில் கண்ணுள்ள இந்த அரசாங்கத்தை மீறி எங்குதான் சென்றுவிடமுடியும்? நினைக்க நினைக்கக் கண்களில் நீர் பெருகுவதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

சைரன் ஒலி ரொம்பப் பக்கத்தில் வந்திருந்தபோது அஷ்வின் ஒரு திடமான முடிவுக்கு வந்திருந்தான். தரையில் மண்டியிட்டு அமர்ந்து மதுமிதாவை உலுக்கி எழுப்பினான்.

அவள் கண்களைச் சிரமமாகத் திறந்தபோது அவளுடைய கன்னத்தில் அஷ்வினின் சுவாசச் சூடு. ‘மது, சீக்கிரம் எழுந்திருடா, ப்ளீஸ்!’

மதுமிதாவுக்குத் தான் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்றே புரியவில்லை. பல யுகங்களுக்குமுன் எங்கோ ஒரு வனாந்திரத்தினிடையே தனக்குப் பிரசவ வலி கண்டதுபோல் ஒரு நினைவு, ஆனால் குழந்தை பிறந்ததா என்று அவளால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை.

அவளுடைய தலையைப் பற்றித் தூக்கி மடியில் வைத்துக்கொண்டான் அஷ்வின். கதறலோடு கலந்து வார்த்தைகள் வெளிவந்தன. ‘மது, இதுதான் ஒரே சான்ஸ், நம்ம குழந்தையை நல்லா ஒருதடவை பார்த்துக்கோடா, ப்ளீஸ்!’

அவன் சொல்வது மதுமிதாவுக்குச் சரியாகப் புரியாவிட்டாலும், அஷ்வின் வலுக்கட்டாயமாக அவளுடைய முகத்தைக் குழந்தையின்பக்கம் திருப்பியிருந்ததால், மதுமிதாவால் தங்களின் குழந்தையை மங்கலாகப் பார்க்கமுடிந்தது. அன்றைக்கு ஃபோட்டோவில் பார்த்ததுபோலவே கொள்ளை அழகாக இருந்தது குழந்தை.

அவர்கள் இருவரின் விழிகளும் கண்ணீரில் நிரம்பியபோது, அறைக் கதவு பலமாக தட்டப்பட்டது.

***

என். சொக்கன் …
28 12 2004

சென்ற வாரத்தில் ஒருநாள், பணி நிமித்தம் மும்பை சென்றிருந்தோம்.

சம்மரில் மும்பை கொதிக்கிறது. என் பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப் அரை மணி நேரத்துக்குள் வியர்வையில் நனைந்து சொதசொதவென்று ஆகிவிட்டது. அதற்கு ஏன் கைக்’குட்டை’ என்று பெயர் வைத்தார்கள் என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்!

ஆக, ஒருவேளை நீங்கள் இந்த நேரத்தில் மும்பைப் பக்கம் செல்வதென்றால், சட்டை, பேன்ட்கூட இரண்டாம்பட்சம்தான். ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு கர்ச்சீப்கள் என்ற விகிதத்தில் Pack செய்வீர்களாக.

மும்பையில்  நாங்கள் சந்தித்த நபர், பெரும் பணக்காரர். பெரிய ரியல் எஸ்டேட் காந்தம் (அதாங்க ’பிஸினஸ் மேக்னெட்டு’ம்பாங்களே!). அவருடைய நிறுவனத்துக்குத் தேவையான சில மென்பொருள்களைப் பற்றி நாங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்த நேரம், அருமையான காபி வந்தது.

காபியை உறிஞ்சும்போது ஏதாவது பொதுவாகப் பேசவேண்டுமில்லையா, வெய்யிலின் கொடுமையைப் பற்றி ஏஸி ரூமில் கொஞ்சம் அலசினோம், அதன்பிறகு, என்னுடைய அலுவலகத் தோழர் ஒருவர் எதார்த்தமாக அவரிடம் கேட்டார், ‘நீங்க கட்டற ஃப்ளாட்ல்லாம் பொதுவா என்ன விலை வரும் சார்?’

அவர் மர்மமாகப் புன்னகைத்தார். ’எவ்ளோ இருக்கும்? சும்மா கெஸ் பண்ணுங்களேன்!’

என் நண்பர் பெங்களூர்க்காரர். ஆகவே அந்த ரேஞ்சில் யோசித்து, ‘டூ பெட்ரூம் ஃப்ளாட் ஒரு அம்பது, அறுபது லட்சம் இருக்குமா?’ என்றார்.

ரியல் எஸ்டேட் காந்தம் சிரித்தது. ’கொஞ்சம் இப்படி வாங்க’ என்று எங்களை ஜன்னல் அருகே அழைத்துச் சென்றது. சற்றுத் தொலைவில் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்து ‘அது எங்க ப்ராஜெக்ட்தான்’ என்றது, ‘அங்கே ஒரு ஃப்ளாட்டோட விலை பதினஞ்சு கோடியில ஆரம்பிக்குது!’

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. பெங்களூருவில் சில அபார்ட்மென்ட் விளம்பரங்களில் ‘1.5 Crores Onwards’ என்று படித்திருக்கிறேன். அதுவே எனக்குத் திகைப்பாக இருக்கும், ‘செங்கல்லுக்குப் பதில் தங்க பிஸ்கோத்துகளை அடுக்கிவைத்துக் கட்டுவார்களோ?’ என்று கிண்டலடிப்பேன்.

ஆனால் இங்கே, பதினைந்து கோடிக்கு அபார்ட்மென்ட். உற்றுப்பார்த்தேன், அந்தக் காலப் பாட்டுகளில் வருவதுபோல் நவரத்தினங்களெல்லாம் பதிக்கப்படவில்லை, சாதாரண சிமென்ட், காங்க்ரீட்தான்.

எங்களுடைய குழப்பத்தை அவர் நிதானமாக ரசித்தார். பிறகு விளக்க ஆரம்பித்தார். ‘எங்களோட க்ளையன்ட்ஸ் எல்லாம் பெரிய பணக்காரங்க. பேங்க் லோன் போட்டு வீடு வாங்கி மாசாமாசம் EMI கட்டறவங்க இல்லை, பதினஞ்சு கோடின்னா ஒரே செக்ல செட்டில் செய்வாங்க.’

‘இவங்கள்ல பெரும்பாலானோர் இதை முதலீடாதான் செய்யறாங்க. இப்ப பதினஞ்சுக்கு வாங்குவாங்க, கொஞ்ச நாள் கழிச்சு இருபதுக்கு வித்துடுவாங்க, அவ்ளோதான் மேட்டர்.’

‘இருந்தாலும், பதினஞ்சு கோடிக்கு இங்கே அப்படி என்ன இருக்கும்?’

’நிறைய இருக்கும், மொதல்ல ஏரியா, அப்புறம் நிறைய எக்ஸ்க்ளூஸிவ் வசதிகள்.’

‘அப்படி என்ன பெரிய எக்ஸ்க்ளூசிவ்?’

‘ஏகப்பட்டது உண்டு. உதாரணமாச் சிலது சொல்றேன், இந்த அபார்ட்மென்ட்ல எல்லா ஃப்ளோர்லயும் கார் பார்க்கிங் உண்டு. நேராப் பத்தாவது மாடியில காரை நிறுத்திட்டு வீட்டுக்குள்ளே போகலாம். நோ லிஃப்ட் பிஸினஸ்!’

‘இதே ஏரியால இன்னொரு ப்ராஜெக்ட். அங்கே ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி லிஃப்ட் கொடுத்துடறோம். கார்டைக் காட்டினா நேரா உங்க ஹால்ல போய்த் திறக்கும்.’

‘இன்னொரு அபார்ட்மென்ட்ல, கார் லிஃப்ட் உண்டு. அதுல நீங்க காரை நிறுத்தி உங்க கார்டைக் காட்டிட்டா, அதுவே கொண்டு போய் எங்கேயாவது பார்க் பண்ணிடும். திரும்ப வெளியே வந்து கார்டைக் காட்டினா கரெக்டா காரைக் கொண்டுவந்து உங்க முன்னாடி நிறுத்தும், எல்லாமே ஆட்டோமேட்டிக்.’

‘அப்புறம், நாங்க கட்டற வீடுகள் எல்லாமே ஒவ்வொரு சுவரும், ஒவ்வொரு கதவு, ஜன்னலும் மிகப் பெரிய டிசைனர்களால வடிவமைக்கப்பட்டது. நாங்க பயன்படுத்தற மெட்டீரியல்ஸும் பெஸ்ட், நூறு வருஷமானாலும் அப்படியே நிக்கும். கேரன்ட்டி!’

‘அதுமட்டுமில்லை, இந்த வீடுகளை மெயின்டைன் பண்றதும் ஈஸி, உதாரணமா, நாங்க பயன்படுத்தற  பெயின்ட்னால, சுவத்துல கறை பட்டா அப்படியே துடைச்சாப் போதும், பழையபடி பளபளக்கும், ஏதாவது ரிப்பேர்ன்னா நாங்களே செஞ்சு கொடுத்துடுவோம்.’

‘அதுக்குன்னு தனியா maintenance charge உண்டுதானே?’

‘அஃப்கோர்ஸ், அது வருஷத்துக்குச் சில லட்சங்கள் போகும்’ என்று கண் சிமிட்டினார் அவர். அவரது நக்கல் சிரிப்பு ‘உங்களைமாதிரி மிடில் க்ளாஸ் பேர்வழிங்களால இதையெல்லாம் புரிஞ்சுக்கவேமுடியாதுடா டேய்’ என்பதுபோல் இருந்தது.

‘அபார்ட்மென்ட்ஸுக்கே இப்படிச் சொல்றீங்களே, நாங்க கட்டற தனி வீடெல்லாம் நூறு கோடியைத் தொடும், ஒவ்வொண்ணும் Unique Design.’

‘உதாரணமா, ஹைதராபாத்ல ஒரு வீடு, சின்ன மலையோட உச்சியில நிலம், ஏழெட்டு ஃப்ளோர் ப்ளான் பண்ணோம், ஆனா உயரம் ஜாஸ்தின்னு சொல்லி ரெண்டு ஃப்ளோருக்குதான் அனுமதி கிடைச்சது.’

‘சரிதான் போடான்னு அந்த கஸ்டமர் என்ன செஞ்சான் தெரியுமா? மொத்த வீட்டையும் தலைகீழாக் கட்டுன்னுட்டான். அதாவது, மலை உச்சியில ஆரம்பிச்சு அண்டர்க்ரவுண்ட்ல 7 ஃப்ளோர். ஹால்ல நுழைஞ்சு படியில இறங்கி பெட்ரூமுக்குப் போகணும்.’

‘இன்னொரு வீட்ல, மாஸ்டர் பெட்ரூம்லேர்ந்து நீச்சல் குளத்துல குதிக்கறதுக்கு ஒரு சறுக்குப் பலகை உண்டு. ஸ்விம் சூட்டைப் போட்டுகிட்டுக் குட்டிக் கதவைத் திறந்து அப்படியே சறுக்கிப் போய்க் குளத்துல விழவேண்டியதுதான்.’

‘இப்படிச் சின்னதும் பெருசுமா ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்’ என்று முடித்தார் அவர். ‘கைல பணம் இருந்தாமட்டும் போதாதுங்க, அதை அனுபவிக்கவும் தெரியணும், அந்தமாதிரி ஆட்கள்தான் எங்க க்ளையன்ட்ஸ்.’

காபி தீர்ந்தது. நாங்கள் பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்தோம்.

***

என். சொக்கன் …

15 06 2012

சில மாதங்களுக்கு முன்னால் ஒருநாள், சோம்பலானதொரு ஞாயிற்றுக்கிழமைப் பிற்பகல். எங்கள் வீட்டுக் கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு மினி ஹார்மோனியப் பெட்டி சைஸுக்கு வீடியோ கேமெராவுடன் காலிங் பெல் பொருத்தியிருக்கிற வீட்டின் கதவுகள் தட்டப்படுவதே ஒரு பெரிய அதிசயம்தான். யாராக இருக்கும் என்கிற சந்தேகத்துடன் திறந்தோம். மூன்று நடுத்தர வயதினர் கையில் ஒரு கசங்கிய ஆல்பத்துடன் நின்றிருந்தனர். எங்களைப் பார்த்தவுடன் பெரிதாகப் புன்னகைத்து ஒரு வண்ணமயமான விசிட்டிங் கார்டை நீட்டினார்கள்.

‘என்ன விஷயம்?’

‘நாங்க ஆத்ரேயா ஹோம்லேர்ந்து வர்றோம்’ என்றார் முதல் நபர். ‘இங்கே ஆதரவில்லாத குழந்தைங்க, வயசானவங்களுக்கெல்லாம் சாப்பாடு, துணிமணி கொடுத்து மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செஞ்சு அக்கறையாக் கவனிச்சுக்கறோம், இப்போ எங்க ஹோம்ல சுமார் 400 பேர் இருக்காங்க. அவங்களோட ஆல்பம் இது!’ என்று நீட்டினார்.

‘பரவாயில்லை, உள்ளே வாங்க’ என்றோம், அவர் நீட்டிய புகைப்படங்களைப் பார்க்காமலே.

‘இருக்கட்டும் சார்’ என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். முதல் நபர் மீண்டும் பேசினார், ‘எங்க ஹோமுக்கு உங்களால முடிஞ்ச உதவியைச் செஞ்சா நல்லாயிருக்கும்’ என்றவர் சட்டென, ‘காசாக் கொடுக்கமுடியலைன்னாலும் பரவாயில்லை, நீங்க பயன்படுத்தின பழைய துணிமணி, பாத்திரங்கள், மளிகை சாமான்கள்ன்னு நீங்க எதைக் கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிப்போம்!’

சாதாரணமாக இதுபோல் வீடு தேடி வந்து உதவி கேட்கிறவர்களைக் கையாள்வது கொஞ்சம் தர்மசங்கடமான விஷயம். முதலில் அவர்கள் நிஜமாகவே ஒரு சமூக சேவை நிறுவனத்திலிருந்து வருகிறார்களா, அல்லது டுபாக்கூர் ஏமாற்றா என்கிற சந்தேகம். நம்பிக் காசு கொடுத்தால் ஏமாந்துவிடுவோமோ என்கிற தயக்கம், அதற்காக எதுவும் தராமல் வெளியேற்றிவிட்டால் பாவக் கணக்கில் ஒன்று கூடிவிடுமோ என்கிற பயம்.

அந்தவிதத்தில் ‘காசு வேண்டாம், பயன்படுத்திய பொருள்களைக் கொடுங்கள்’ என்கிற இந்த டீலிங் எங்களுக்குப் பிடித்திருந்தது. ஒருவேளை இவர்கள் நிஜமான சேவை நிறுவனமாக இருந்தால், அந்தப் பொருள்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள், ஏமாற்றுக்காரர்களாக இருந்தால், நாம் பழைய பொருள்களைதானே தந்தோம், பெரிதாக ஒன்றும் இழப்பு இல்லை.

சில விநாடிகள் யோசனைக்குப்பிறகு என் மனைவி பேசினார். ‘நாங்க கொஞ்சம் திங்க்ஸ் தேடி எடுத்துவைக்கறோம், ஈவினிங் வந்து எடுத்துகிட்டுப் போகமுடியுமா?’

‘ஷ்யூர் மேடம்’ என்று உடனடி பதில் வந்தது. ‘நாங்க மத்த வீடுகளைப் பார்த்துப் பேசிகிட்டிருப்போம், எங்க வேன் கீழேதான் நிக்குது, நீங்க எப்ப வேணும்ன்னாலும் கூப்பிடலாம், வந்து எடுத்துக்கறோம்’ என்றார் ஒருவர். ‘பை த வே, உங்களுக்கு நேரம் இருக்கும்போது எங்க ஹோமுக்கு நீங்க நேர்ல வரலாம், சொல்லிட்டு வரணும்ன்னுகூட அவசியம் இல்லை, எப்ப வேணும்ன்னாலும் வாங்க, அங்கே இருக்கறவங்ககிட்ட நாலு வார்த்தை இதமாப் பேசதான் ஆள் இல்லை இப்போ!’

அவர்களைக் கை கூப்பி வழியனுப்பி வைத்தோம். மதியத் தூக்கத்தைத் தியாகம் செய்துவிட்டுப் பழைய துணிகள், பாத்திரங்கள், விளையாட்டுப் பொம்மைகள், மற்ற பொருள்களைத் தனித்தனியே பிரித்து மூட்டை கட்ட ஆரம்பித்தோம்.

அரை மணி நேரத்தில், வீடு சுத்தமானது. பழைய, பயன்படாத பொருள்களைமட்டுமே தருகிறோமே என்கிற குற்றவுணர்ச்சியில் கொஞ்சம் மளிகை சாமான்களையும் அதில் சேர்த்தோம். எல்லாவற்றையும் கீழே கொண்டுபோனோம்.

அங்கே ஒரு பெரிய வேன் நின்றிருந்தது. இருபுறமும் ‘ஆத்ரேயா ட்ரஸ்ட்’ என்று பெரிதாக எழுதிச் சில வறிய குழந்தைகளின் புகைப்படங்கள் கொலாஜ் செய்யப்பட்டிருந்தன. கீழே கொட்டை எழுத்தில் செல்ஃபோன் நம்பர், ‘24 மணி நேரமும் அழைக்கலாம்’ என்கிற வாசகம்.

வேனுக்குள் எட்டிப்பார்த்தோம், எங்கள் வீட்டுக்கு வந்த மூன்று நபர்களில் ஒருவர் களைத்துப் படுத்திருந்தார். சத்தம் கேட்டு எழுந்து ‘வாங்க சார், வாங்க மேடம்’ என்றார். நாங்கள் தந்த பொருள்களை வாங்கி வைத்துக்கொண்டு மனதார நன்றி சொன்னார். ‘நேரம் இருக்கும்போது கண்டிப்பா ஹோம்க்கு வாங்க சார்’ என்றார். ‘உங்களுக்குத் தெரிஞ்ச மத்தவங்களுக்கும் எங்க ஹோமைப் பத்திச் சொல்லுங்க.’

அதோடு அந்த அத்தியாயம் முடிந்தது. அரை மணி நேர திடீர் சமூக சேவை(?)யில் திருப்தியாகி எங்களது சுயநல வாழ்வுகளுக்குத் திரும்பினோம். அதோடு அந்த ‘ஆத்ரேயா ஹோம்’ பற்றி மறந்தே போனோம்.

சில வாரங்கள் கழித்து, அலுவலகத்தில் சற்றும் எதிர்பாராத ஒரு போனஸ் வந்தது. அதற்கு ஒரு நல்ல சோஃபா வாங்குவதாக முடிவெடுத்தோம்.

’பழைய சோஃபாவை என்ன செய்யறது?’

‘எக்சேஞ்ச்ல அவனே எடுத்துப்பான், விசாரிப்போம்!’

விசாரித்தோம். பழைய சோஃபாவுக்கு 800 ரூபாய் தருவதாகச் சொன்னார்கள். கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் கொடுத்து வாங்கிய சோஃபா, அதுவும் இன்னும் நன்றாகவே இருக்கிற ஒன்றை இப்படி அடிமாட்டு விலைக்குத் தள்ளிவிட மனம் இல்லை.

தவிர, அந்த 800 ரூபாயை வைத்து நாங்கள் கோட்டை எதுவும் கட்டிவிடப்போவதில்லை, அதற்குப் பதிலாக, இந்தப் பழைய சோஃபாவைத் தேவை உள்ள யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட்டால் என்ன? அவர்களுக்கும் சந்தோஷம், எங்களுக்கும் சந்தோஷம்.

முதலில் எங்கள் அபார்ட்மென்டில் தூய்மைப் பணி செய்கிற பெண்ணை விசாரித்தோம், பின்னர் செக்யூரிட்டி தாத்தா, பக்கத்து ஃபேக்டரியின் காவல்காரர்… இவர்கள் யாருக்கும் சோஃபா தேவைப்படவில்லை என்று புரிந்தது.

அடுத்து, எங்கள் அலுவலகம் மூலமாகவும் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்னபிற சோஷியல் நெட்வொர்க் நண்பர்கள் வாயிலாகவும் சில சமூக சேவை நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள், முதியோர் இல்லங்களைத் தொடர்பு கொண்டோம். ‘உங்களுக்கு சோஃபா தேவைப்பட்டா வந்து எடுத்துக்கோங்க’ என்றோம்.

இவர்களில் சிலர், ‘உடனே வண்டி அனுப்பறோம் சார்’ என்றார்கள். வேறு சிலர் ‘யோசிச்சுச் சொல்றோம்’ என்றார்கள். யாரும் மறுபடி அழைக்கவில்லை. ஆடம்பரப் பொருள்களை இலவசமாகக் கொடுப்பதுகூடச் சிரமம்தான் என்று புரிந்தது.

அப்போதுதான் எனக்கு அந்த ‘ஆத்ரேயா ஹோம்’ ஞாபகம் வந்தது. ‘பேசாம அவங்களைக் கூப்பிட்டா என்ன? கண்டேன் கண்டேன்னு ஓடி வந்து எடுத்துகிட்டுப்போவாங்க!’

இதைச் சொன்னதும் என் மனைவியின் முகம் மாறியது. ‘அந்தத் திருட்டுப் பசங்களைப் பத்திப் பேசாதீங்க’ என்றார் சட்டென்று.

‘ஏன்? என்னாச்சு?’

‘அன்னிக்கு நம்ம தெருவில இருக்கற எல்லா வீட்டுலயும் கெஞ்சிக் கூத்தாடி ஏதேதோ பொருள்களை அள்ளிகிட்டுப் போனாங்கதானே?’

‘ஆமா, அதுக்கென்ன?’

’அதுல பெரியவங்களுக்கான ட்ரெஸ், நல்லா இருக்கற பாத்திரம், மளிகை சாமான், இப்படிச் சில விஷயங்களைமட்டும் வெச்சுகிட்டு பாக்கி எல்லாத்தையும் தெரு முனைக் குப்பைத்தொட்டியில வீசிட்டுப் போயிருக்காங்க.’

ஏனோ, இதைக் கேட்டதும் எனக்கு அவர்கள்மேல் கோபம் வரவில்லை. பெருநகரச் சூழலில் இதுபோல் ஒருவர் ‘ஏதாவது கொடுங்க’ என்று கேட்கும்போது, மக்கள் மத்தியில் சேவை மனப்பான்மையைவிட, கொஞ்சம் பொருள்களைக் கழித்துக்கட்டி இடம் சேமிக்கும் எண்ணம்தான் அதிகமாக இருக்கும். அதன்படி நாங்கள் எங்களுக்குத் தேவையில்லாத எல்லாவற்றையும் மூட்டை கட்டி அவர்களிடம் தள்ளிவிட்டிருப்போம். அவர்களும் முகத்துக்கு எதிராக எதையும் சொல்ல விரும்பாமல் (இலவச மாட்டுக்குப் பல்லைப் பிடித்தல் எட்ஸட்ரா பழமொழிகள் கன்னடத்திலும் இருக்குமல்லவா?) வாங்கிக்கொண்டிருப்பார்கள், அதில் எத்தனை விஷயங்கள் ஒருவருக்கும் பயன்படாத குப்பையோ, யாருக்குத் தெரியும்?

ஆக, நாங்கள் தள்ளிவிட்ட பொருள்களில் அவர்கள் தங்களுக்கு எது பயன்படுமோ அதைமட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை வீசி எறிந்தது பெரிய தவறாக எனக்குப் படவில்லை. என்ன, அதை எங்கள் கண்ணில் படாத இன்னோர் இடத்தில் வீசியிருக்கலாம், அவ்வளவுதான்.

ஆனால் ஏனோ, என் மனைவி இந்த விஷயத்தில் அவர்கள்மீது துளி இரக்கம் காட்டவோ, Benefit of doubtஐ வழங்கவோ தயாராக இல்லை. ’நாங்கள் தந்ததில் அவர்கள் பிரித்து எடுத்துச் சென்ற பொருள்களையெல்லாம் புதுப்பித்து விற்பனை செய்து காசு பண்ணியிருப்பார்கள், அப்படி விற்கமுடியாத விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்’ என்று உறுதியாக அடித்துச்சொன்னார்.

‘உனக்கு அவ்ளோ சந்தேகம்ன்னா அந்த ஹோமுக்கு ஒருவாட்டி நேர்ல போய்ப் பார்த்துட்டு வருவோம்!’

‘எதுக்கு? நமக்கு வேற பொழப்பில்லையா?’

‘இப்ப இந்த சோஃபாவை என்ன செய்ய?’

‘எண்ணூறு ரூபா காசு சும்மா வருதா? எக்சேஞ்ச்லயே கொடுத்துடலாம், இல்லாட்டி நாமே அதை ஒரு குப்பைத்தொட்டியில வீசிடலாம், அந்தத் திருடனுக்கு நான் தரமாட்டேன்!’

உண்மையான சேவை மனப்பான்மை இல்லாமல் நம்மிடம் மிஞ்சியதைத் தரும்போதுகூட, நம் கை உயர்ந்திருக்கவேண்டும், அடுத்த கை தாழ்ந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய நியாயங்களைக் கருத மறுக்கிறோம். வேறென்ன சொல்ல?

மீண்டும் சோஃபாக் கடைக்காரரை அணுகினோம். ‘புது சோஃபா டெலிவரி தரும்போது பழைய சோஃபாவை நீங்களே எடுத்துக்குவீங்களா?’ என்றோம்.

‘அது முடியாது சார்’ என்றார் அவர், ‘நீங்க சோஃபாவை இங்கே கொண்டுவரணும், அதைப் பார்த்துட்டுதான் எக்சேஞ்ச் பில் போடமுடியும்.’

போச்சுடா. இந்த சோஃபாவை இங்கிருந்து அவ்வளவு தூரம் எடுத்துச் செல்லக் குறைந்தது ஐநூறு ரூபாயாவது செலவாகும். தேவையா?

மறுபடி மனைவியாரிடம் விண்ணப்பம் போட்டேன். ‘நமக்கு வேற வழியில்லை, பேசாம அந்த ஆத்ரேயா ஹோமுக்கே சோஃபாவைக் கொடுத்துடுவோம், நமக்கு இதை நன்கொடையாக் கொடுத்த திருப்தி, அப்புறம் அவன் அதை என்னவோ செஞ்சுட்டுப் போறான். என்ன சொல்றே?’

அவருக்கும் ஐநூறு ரூபாய் வெட்டியாகச் செலவழிக்க மனம் இல்லை. ‘உன் இஷ்டம்’ என்று ஒப்புக்கொண்டார்.

எங்கோ ஒளிந்திருந்த ஆத்ரேயா ஹோம் விசிட்டிங் கார்டைத் தேடிப் பிடித்தேன். அழைத்தேன். ஒரு மணி நேரத்துக்குள் நேரில் வந்து சோஃபாவை எடுத்துக்கொண்டு போனார்கள். அந்த இடத்தில் புது சோஃபா வந்து சேர்ந்தது.

அடுத்தமுறை அந்தத் தெரு முனைக் குப்பைத்தொட்டியைக் கடக்கும்போதுதான் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று கண்ணை இறுக மூடிக்கொண்டு நடையைக் கட்டினேன்.

***

என். சொக்கன் …
14 04 2012

(’வடக்கு வாசல்’ மே 2012 இதழில் வெளியானது)

  1. nchokkan
    இன்று ஒரு கலீக் என்னுடன் பர்ஸனலாகப் பேச வந்தார்.கல்லூரி முடித்து சுமார் இரண்டு வருடங்களாகிறவர்,அவரை Team Leader ஆக்கப் பார்க்கிறார்கள் |1
    Tue, May 29 2012 11:30:58
  2. nchokkan
    இவருக்குத் தலைமை தாங்குவதில் ஆர்வம் இல்லை, என்னை ப்ரொக்ராமராகவே நிரந்தரமாக இருக்கவிடமாட்டீர்களா? என்றார் கெஞ்சலாக |2
    Tue, May 29 2012 11:31:30
  3. nchokkan
    ’பழைய நெனப்புடா பேராண்டி, பழைய நெனப்புடா’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன் |3
    Tue, May 29 2012 11:32:07
  4. nchokkan
    ‘நான் ப்ரொக்ராம் எழுதப் படித்திருக்கிறேன், தலைமை தாங்கப் படிக்கவில்லை, வேணும்னா 2வருஷம் லீவ் தாங்க,MBA படிச்சுட்டு வர்றேன்’ என்கிறார் |4
    Tue, May 29 2012 11:33:22
  5. nchokkan
    ’எம்பிஏவுக்கும் தலைமை தாங்குவதற்கும் சம்மந்தமே இல்லை தம்பி, இது உனக்குப் பிடிக்காட்டி உன் மேனேஜர்கிட்ட சொல்லு’ என்றேன், பயப்படுகிறார் |5
    Tue, May 29 2012 11:33:59
  6. nchokkan
    ’காலமெல்லாம் ப்ரொக்ராம் எழுதிகிட்டே இருந்துடலாம்ன்னு நினைச்சேன்,Just because I am senior to someone, doesn’t mean I have to lead them’ |6
    Tue, May 29 2012 11:34:58
  7. nchokkan
    ’நான் எதிர்பார்க்கறது தப்பா? இங்கே நாலஞ்சு வருஷம் குப்பை கொட்டின எல்லாரும், பிடிக்காட்டியும், திறமை இல்லாட்டியும் மேனேஜராகியே தீரணுமா?’|7
    Tue, May 29 2012 11:36:11
  8. nchokkan
    அப்புறம், ப்ராக்டிகல் பிரச்னைக்கு வருகிறார், ’ஒருவேளை நான் இப்போ இதை மறுத்துட்டா, என் சம்பளம் குறைஞ்சுடுமோ? காசுக்காக மேனேஜணுமா?’ |8
    Tue, May 29 2012 11:37:10
  9. nchokkan
    இப்படி வரிசையாகப் பல கவலைகளைச் சொன்னார், 24 வயதில் 60 வயதுவரை கற்பனை செய்துவைத்திருக்கிறார், அதுசார்ந்த பல குழப்பங்கள் |9
    Tue, May 29 2012 11:38:29
  10. nchokkan
    நான் எல்லாம் கேட்டுக்கொண்டேன். அவர் கேள்விகளில் நியாயம் உண்டு, அதேசமயம், தன் உரிமைகளை அறியாமலிருக்கிறார், கொஞ்சம் வழிகாட்டினேன் |10
    Tue, May 29 2012 11:40:34
  11. nchokkan
    அதற்குமேல் நான் பேசுவது தகாது. அவர் மேனேஜருக்கும் எனக்கும் அரசியலாகும். ‘மகனே, உன் சமர்த்து, போய் HRரிடம் பேசு’ என்று அனுப்பிவிட்டேன் |11
    Tue, May 29 2012 11:41:19
  12. nchokkan
    ஆனால் அப்போதிலிருந்து அவர் கேட்ட கேள்விகளின் நினைப்பாகவே இருக்கிறது.இந்த IT துறை உருவாக்கிய விருப்பற்ற, அரைகுறை மேனேஜர்கள்தான் எத்தனை!|12
    Tue, May 29 2012 11:42:08
  13. nchokkan
    எனக்குத் தெரிந்து பலர் இதை மறுப்பதில்லை, பயம் காரணமில்லை, எல்லாரும் இதையே செய்வதால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயம் |13
    Tue, May 29 2012 11:43:44
  14. nchokkan
    எனக்கு யாரையும் மேய்க்கத் தெரியாது என்று சொல்வதில் என்ன வெட்கம்? தன்னை ஒழுங்காக மேய்க்கத் தெரிந்தாலே அது பெரும்திறமை அல்லவா? |14
    Tue, May 29 2012 11:44:56
  15. nchokkan
    ஐடி துறையில் இணைந்து 18 மாதம் கடந்த அனைவருக்கும் இதுகுறித்து ஒரு தெளிவான Counseling நடத்தினால் நன்றாயிருக்கும், யார் செய்வார்கள்? |15/15

நேற்று முன்னிரவு. தூங்கச் செல்வதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, மனைவியார் அந்த விவரத்தைத் தெரிவித்தார். ’அடுத்த மாசம், என் சிநேகிதிங்க மூணு பேருக்குப் பிரசவம்.’

‘அதனால?’

’மூணு பேருக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கணும்.’

‘தாராளமா வாங்கு, அதை ஏன் என்கிட்ட சொல்றே?’

என்னுடைய குழப்பத்துக்குக் காரணம் உண்டு. பொதுவாகக் குழந்தைப் பொருள்களை வாங்குவதில் நான் சமர்த்தன் அல்லன். சொல்லப்போனால், பிங்க், வெளிர்நீல நிறங்களைக் கண்டாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.

தவிர, ஒரு குழந்தையின் (பெரியவர்களுக்கும்தான்) அழகு என்பது அது அணிந்திருக்கும் உடைகள், நகைகள், கால் செருப்பு, தலைத் தொப்பி, வாயில் போட்டுக் கடிக்கிற ரப்பர் வாத்து, உட்கார்ந்து பயணம் செய்யும் சக்கர வண்டி போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது என் கட்சி. ஆகவே, இந்த வகைகளில் எதை வாங்கினாலும் ஒன்றுதான் என்று கருதுவேன்.

மனைவியார் இந்த விஷயத்தில் எனக்கு நேர் எதிர். ‘எதைக் கொடுத்தாலும் நல்லதாக் கொடுக்கணும்’ என்பார். ஆகவே, அவரே எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன்.

என்னைக் கேட்டால், பரிசு என்றாலே அது புத்தகங்களாகதான் இருக்கவேண்டும் என்பேன். நேற்றுப் பிறந்த குழந்தைமுதல் சீனியர் சிட்டிசன்கள்வரை சகலருக்கும் பொருத்தமான புத்தகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பரிசளித்தால் காலத்துக்கும் பயன்படும், பொட்டலம் கட்டுவதும் ஈஸி.

புத்தகங்களைப் பரிசளிப்பதில் ஒரே சங்கடம். பலருக்கு அதன் மகிமை புரிவது இல்லை. நம்மை Cheap ஆக எடை போட்டுவிடுகிறார்கள்.

என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிதான், தன் உறவினர் இல்லக் கல்யாணத்துக்குப் புத்தகப் பரிசு அளித்திருக்கிறார். அதுவும் திருக்குறள் புத்தகம்.

அவர் அடுத்தமுறை அவர்களுடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் புத்தகம் அங்கே டிவி மேஜைக்கு முட்டுக்கொடுக்கப்பட்டிருந்ததாம். இது சத்தியமாகக் கற்பனை இல்லை, நிஜத்தில் நடந்த விஷயம், அந்த நண்பர் ட்விட்டரில் இப்பவும் இருக்கிறார் :>

இன்னொரு வீட்டில், பன்னிரண்டு வயதுப் பையனுக்குப் பிறந்தநாள். நான் ஆயிரத்துச் சொச்ச ரூபாய் செலவழித்து அவனுக்கு ஒரு நல்ல புத்தகப் பெட்டி(Collection of books)யைப் பரிசாகக் கொடுத்தேன்.

சில மாதங்கள் கழித்து நாங்கள் அவர்களுடைய வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த டிவி மேஜைக்குக் கீழே பரிசோதித்துப் பார்த்தேன். புத்தகம் எதையும் காணோம். சந்தோஷம்.

பையனை அழைத்தேன். ‘என்னடா, நான் கொடுத்த புக்கைப் படிச்சியா?’

‘இல்லை அங்கிள்.’

‘ஏன்? என்னாச்சு?’

’மொதல்ல நீ ஸ்கூல் புக்கை ஒழுங்காப் படின்னு அப்பா திட்டறார் அங்கிள்’ என்றான் அவன் பரிதாபமாக.

’இப்ப லீவ்தானேடா?’

’ஆமா அங்கிள், அடுத்த வருஷப் புத்தகத்தை அட்வான்ஸாப் படிக்கச் சொல்றார்.’

அநேகமாக நான் வாங்கித் தந்த புத்தகப் பெட்டி அவர்கள் வீட்டு பீரோவுக்குள் நலங்கெடப் புழுதி படிந்திருக்கும். அல்லது, பூஜை அறையில் வைத்துப் பூப்போட்டுக்கொண்டிருப்பார்களோ என்னவோ.

அதைவிட மோசம், புத்தகங்களை இப்படி ‘மதிக்கிற’ ஒரு வீட்டில், அதைப் பரிசாகக் கொடுத்த என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? ‘ஆயிரம் ரூபாய்க்கு உருப்படியா எத்தனை பொருள் வாங்கலாம்… போயும் போயும் புத்தகத்தை வாங்கித் தந்திருக்கானே, இவன்ல்லாம்….’

இப்படிப் பல காரணங்களால், நான் மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகப் பரிசு தருவதில்லை. அதையெல்லாம் மனைவியார் வசம் ஒப்படைத்துவிடுகிறேன்.

ஆனால் நான் இப்படி முழுவதுமாகப் பொறுப்புத்துறப்பதில் மனைவியாருக்குப் பிரியம் இல்லை. ஆகவே, அவர் ஓர் ஆடை எடுக்க நினைக்கும் இடத்தில் ஏழெட்டு ஆடைகளை எடுத்து வந்து என்னிடம் காண்பிப்பார். ‘எது நல்லா இருக்கு?’

இந்தக் கேள்விக்கு நான் எப்போதும் ஒரே பதில்தான் சொல்வேன். ‘எல்லாமே நல்லா இருக்கு!’

‘அப்ப நான் எதை எடுக்கறது?’

‘எல்லாத்தையும் எடுத்துக்கோ!’

உடன், ஒரு முறைப்பு வரும். ‘கொஞ்சம்கூட அக்கறையே கிடையாது உனக்கு’ என்பார்.

இந்த வம்புக்குப் பயந்து, இப்போதெல்லாம் கொஞ்சம் க்ளெவரான ஒரு பதிலைச் சொல்லப் பழகியிருக்கிறேன். அவர் நான்கு ஆடைகளையோ ஐந்து செருப்புகளையோ காட்டினால், மனத்துக்குள் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டுப் பார்த்து அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பேன், ‘அது சூப்பர், எடுத்துக்கோ’ என்று சொல்லிவிடுவேன்.

ஒருவேளை, நான் தேர்ந்தெடுத்த அதே ஆடை என் மனைவியாருக்கும் பிடித்திருந்தால், பிரச்னையில்லை. அவருக்குப் பிடிக்காவிட்டால் ‘இது வேஸ்ட், அதை எடுத்துக்கறேன்’ என்பார்.

‘ஓ, அதுவும் நல்லாவே இருக்கு, எடுத்துக்கோ’ என்பேன். ’நீ ஏற்கெனவே முடிவு செய்துவிட்டு என்னை ஏன் கருத்துக் கேட்கிறாய்?’ என்றெல்லாம் லாஜிக் பேசமாட்டேன். நான் பிழைக்கத் தெரிந்தவன்.

சுருக்கமாகச் சொன்னால், குழந்தைப் பொருள்களைத் (என்ன பெரிய ஃபில்டர் வேண்டிக் கிடக்கிறது? வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும்தான்) தேர்ந்தெடுப்பதில் என் பங்கு என்று எதுவும் கிடையாது. சும்மா பங்கிருப்பதுபோல் ஒரு மாயையை உருவாக்குவதுடன் சரி.

ஆகவே, ‘மூணு பேருக்குப் பிரசவம், கிஃப்ட் வாங்கணும்’ என்று மனைவியார் சொன்ன செய்தி எனக்குத் திகைப்பூட்டியது. லேசாகப் பயமும்கூட, நாளைக்கு ஏழெட்டு மணி நேர ஷாப்பிங்குக்கு அடிகோலுகிறாரோ?

நல்லவேளையாக, அவர் என் சந்தேகத்தை உடனே தீர்த்துவைத்தார். ‘இந்தவாட்டி நான் கொஞ்சம் பிஸி, வெளியே போய் கிஃப்ட் வாங்க நேரம் இல்லை, உங்க இன்டர்நெட்ல எதுனா கிடைக்குமான்னு பாரேன்.’

’உங்க இன்டர்நெட்’ என்பது மிக முக்கியமான வார்த்தை. ‘அஹம் பிரம்மாஸ்மி’மாதிரி இதற்குள் பல பொருள் பொதிந்த விஷயங்கள் உண்டு. முக்கியமாக மூன்று:

  1. நீதான் எந்நேரமும் இன்டர்நெட்டைக் கட்டிக்கொண்டு அழுகிறாய், நான் இல்லை
  2. என்னவோ இன்டர்நெட்தான் ஒசத்தி என்று சொல்லிக்கொள்கிறாயே, அதில் நான் கேட்பது கிடைக்குமா? கிடைக்காவிட்டால் அது என்ன பெரிய இன்டர்நெட்?
  3. நீயும் உன் சிநேகிதர்கள் சிலரும் உங்களை இன்டர்நெட்டில் பெரிய ஆள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே, அங்கே என்னுடைய ஷாப்பிங் விருப்பத்தைத் தீர்த்துவையேன் பார்க்கலாம்

கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனாலும் வேறு வழியில்லை, முயற்சி செய்துதான் தீரவேண்டும். இல்லாவிட்டால் நாளைக்குச் சும்மா ஆஃபீஸ் மெயில் பார்த்தால்கூட, ‘எந்நேரமும் இன்டர்நெட், ஆனா அதுல ஒரு டயப்பர் வாங்கக்கூட வழியில்லை’ என்று மானத்தை வாங்குவார்.

ஆகவே, மனைவியார் தூங்கியபின் சில பல வலைப்பதிவுகளில் நுழைந்து தேடினேன். ஏழெட்டு வலைத்தளங்கள் சிக்கின. அவற்றில் பெரும்பாலான குழந்தைப் பொருள்கள் நியாயமான விலைக்கே கிடைத்தன. சிலவற்றில் நல்ல தள்ளுபடியும் கிட்டியது.

என் அதிர்ஷ்டம், நள்ளிரவு நேரத்தில் ஒரு பரிசுக் கூப்பன் கிடைத்தது. அதைப் பயன்படுத்தினால் குழந்தைப் பொருள்களில் முழுசாக 50% தள்ளுபடி.

ஆஹா, அம்பது பர்சன்ட். பாதிக்குப் பாதி விலை. இது இன்டர்நெட்டில்மட்டுமே சாத்தியம். இது ஒன்றை வைத்தே நாளை காலை மனைவியார் மூக்கை உடைத்துவிடலாம் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

பொழுது விடிந்தது. பல்கூடத் தேய்க்காமல் இந்த விவரத்தை அவரிடம் சொன்னேன். ‘ஓஹோ’ என்றார் சுரத்தே இல்லாமல்.

’என்ன ஓஹோ? அம்பது பர்சன்ட் தள்ளுபடின்னா சும்மாவா?’

‘ப்ச், என்னதான் இருந்தாலும் நேர்ல பார்த்து வாங்கறமாதிரி வருமா?’

போச்சுடா. ’நேரில் பார்க்கதான் உனக்கு நேரம் இல்லைன்னு நேத்து ராத்திரி சொன்னியே’ என்று நான் கேட்கவில்லை. நினைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்துக்குப்பின், அவர் மனம் உவந்து இறங்கிவந்தார். ‘சரி, அந்த வெப்சைட்டைக் காட்டு, ஏதாச்சும் தேறுதான்னு பார்க்கறேன்!’

கம்ப்யூட்டரை இயக்கி, சம்பந்தப்பட்ட இணைய தளத்துக்குச் சென்றேன். அங்கே பொருள்களை எப்படிப் பார்ப்பது, எப்படித் தேடுவது என்று அவருக்குக் காண்பித்துவிட்டுப் பல் தேய்க்கச் சென்றேன்.

அடுத்த அரை மணி நேரம், அவர் கம்ப்யூட்டரை விட்டு நகரவில்லை. லேசாக எட்டிப் பார்த்தால் ஏதேதோ பொருள்களை க்ளிக் செய்து அவற்றின் விவரங்களைப் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் Shopping Cartமட்டும் காலியாகவே இருந்தது. இதுவரை ஒன்றைக்கூட ‘வாங்க’வில்லை.

இது எனக்குப் பெரிய ஆச்சர்யம் இல்லை. நிஜக்கடையில் பொருள் வாங்கச் சென்றாலே அவர் அப்படிச் செய்வதுதான் வழக்கம். விண்டோ ஷாப்பிங்கை ஒரு நேர்த்தியான கலைவடிவமாகவே பின்பற்றுகிறவர்.

எனக்கும் ஷாப்பிங் பிடிக்கும். ஆனால் என்ன வாங்கவேண்டும் என்கிற லிஸ்ட் அவசியம். அது இருந்தால் பதினைந்தே நிமிடத்தில் எல்லாப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு பில் போடச் சென்றுவிடலாம் என்று நினைப்பேன்.

’எதுக்கு அவ்ளோ அவசரம்? நின்னு நிதானமா நாலு பொருளைப் பார்த்து வாங்கவேணாமா?’

‘நிதானமாப் பார்வையிடறதுக்கு இது என்ன சுற்றுலாக் கண்காட்சியா? சூப்பர் மார்க்கெட்டா?’

நான் எத்தனை சொன்னாலும், மனைவியார் ஷாப்பிங் லிஸ்ட் எழுதுவதாக இல்லை. அவருடைய வேகத்தில்தான் பொருள்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்.

ஆகவே, இப்போதெல்லாம் நாங்கள் எங்கே ஷாப்பிங் சென்றாலும் நான் கையோடு ஒரு புத்தகத்தைக் கொண்டுசென்றுவிடுவது. மனைவியார் வேண்டியதைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதற்குள் நான் குறைந்தது இருபத்தைந்து பக்கங்களாவது படித்துவிடுகிறேன். சந்தோஷம்!

அதோடு ஒப்பிடும்போது, இந்த ஆன்லைன் ஷாப்பிங் இன்னும் வசதி. அவர்பாட்டுக்குப் ‘பார்வையிட்டு’த் ‘தேர்ந்தெடுக்கட்டும்’. நான் குளிக்கப் போகிறேன்.

இன்னொரு அரை மணி நேரம் கழித்து, குளித்துச் சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்பினால் மனைவியார் இன்னும் கம்ப்யூட்டரில் கவனமாக இருந்தார். ‘என்னாச்சு? கிஃப்ட் செலக்ட் பண்ணிட்டியா?’

’ம்ம்’ என்றார் அவர் திருப்தியில்லாமல். ‘எல்லாம் சுமார்தான், ஏதோ இருக்கறதுக்குள்ள உருப்படியாப் பார்த்து செலக்ட் பண்ணியிருக்கேன்’ என்று லாப்டாப்பை என்னிடம் நீட்டினார்.

நான் ஆர்வமாக ஷாப்பிங் கார்ட்டைப் பார்த்தேன். அதில் பதினொரு பொருள்கள் இருந்தன.

‘பதினொண்ணா? மூணு பேருக்குதானே பிரசவம்?’

‘ஆமா, இந்தப் பதினொண்ணுல பெஸ்ட் 3 செலக்ட் பண்ணனும், நீ சொல்லு, எது நல்லா இருக்கு?’

நான் மீண்டும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட ஆரம்பித்தேன்.

***

என். சொக்கன் …

06 05 2012

முன்குறிப்பு:

இது கட்டுரை அல்ல. கற்பனைக் கதையும் அல்ல. ஆங்காங்கே கவனித்த உண்மைகள் கொஞ்சம், மிகைப்படுத்தல் கொஞ்சம், Rational Thinking கொஞ்சம், கெக்கேபிக்கே சிந்தனை கொஞ்சம், பொதுபுத்தி கொஞ்சம், உணர்ச்சிவயப்’படுத்தல்’ மிச்சம் என எல்லாம் கலந்த ஏதோ ஒன்று. ‘மல்லிகை மகள்’ இதழின் தீபாவளி மலரில் வெளிவந்தது

1

சில வருடங்களுக்கு முன்னால், பெங்களூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழா. அதற்குத் தலைமை தாங்கியவர் கணிதமேதை சகுந்தலா தேவி. ’குழந்தைகளுக்குக் கணக்கில் ஆர்வம் ஊட்டுவது எப்படி?’ என்கிற தலைப்பில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் சொன்ன ஒரு சம்பவம் இது:

எங்கள் வீட்டில் பழைய பேப்பர் நிறையச் சேர்ந்துவிட்டது. அவற்றை எடை போடுவதற்காக எடுத்துச் சென்றேன்.

பழைய பேப்பர் கடையில் ஒரு சிறுவன்தான் இருந்தான். பள்ளிச் சீருடைகூட அணிந்திருந்தான். அப்பாவுக்கு உதவியாக வேலை பார்க்கிறேன் என்றான். அவனுடைய பொறுப்புணர்ச்சியைப் பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

நான் கொண்டுசென்ற காகிதங்களை அவன் இரண்டாகப் பிரித்தான். செய்தித் தாள்களைத் தனியே எடை போட்டான், ‘நாற்பது ரூபாய்’ என்றான், மற்ற பத்திரிகைகளைத் தனியே எடை போட்டான், ‘முப்பது ரூபாய்’ என்றான்.

அடுத்து, அவன் ஒரு கால்குலேட்டரை எடுத்தான். 40 + 30 என்று கணக்குப் போட்டு ‘எழுபது ரூபாய்’ என்றான். எனக்கு அதிர்ச்சி!

’ஏன்ப்பா, உன்னைப் பார்த்தால் ஹைஸ்கூல் படிக்கிறவனைப்போல் இருக்கிறாய், நாப்பதும் முப்பதும் எழுபது என்று மனக்கணக்குப் போடமாட்டாயா? அதற்குக்கூடக் கால்குலேட்டர் தேவையா?’ என்று வருத்தத்துடன் கேட்டேன்.

அவன் சிரித்தான். ‘மேடம், கைக்கு எட்டற தூரத்துல கால்குலேட்டர்தான் இருக்கே, அப்புறம் எதுக்கு அநாவசியமா மூளையைக் கசக்கிக்கணும்? கால்குலேட்டரால சுலபமாச் செய்யமுடியற வேலைகளை நாம ஏன் சிரமப்பட்டுச் செய்யணும்? வேஸ்ட்தானே?’

2

கடந்த மாதம், என்னுடைய மகளின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு தினம். அப்போது அங்கே ஒரு தாய் வீராவேசமாகப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. ‘என் பையனுக்கு நீங்க ரொம்ப ஹோம்வொர்க் தர்றீங்க மேடம், அவன் பாவம், கையெல்லாம் வலிக்குதுன்னு அழறான்!’

‘ஸாரிங்க. மத்த பாடத்திலெல்லாம் அவனுக்கு ஹோம்வொர்க் அதிகம் தர்றதில்லை’ என்றார் ஆசிரியை. ‘இங்க்லீஷ்லமட்டும்தான். அதுவும் குறிப்பா ஹேண்ட்ரைட்டிங்க்குமட்டும்தான் நிறைய வீட்டுப்பாடம் தர்றோம்.’

‘அதான் ஏன்?’

‘இதென்ன கேள்வி?’ என்பதுபோல் ஆசிரியை அந்தத் தாயை விநோதமாகப் பார்த்தார். ‘உங்க பையன் ரெண்டாங்கிளாஸ் படிக்கறான். ஆனா அவனுக்குக் கையெழுத்து இன்னும் சரியா வரலைங்க. முதல் வரியில எழுத ஆரம்பிச்சா மூணாவது வரியில போய் நிக்கறான். எழுத்து எதுவும் நாலு வரியில நிக்காம ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சைஸ்ல ஏத்தியும் தாழ்த்தியும் இருக்கு. இதையெல்லாம் சரி செஞ்சாதானே நாளைக்கு அவன் சரியா எழுதமுடியும்? அதுக்காகதான் எக்ஸ்ட்ரா ஹோம்வொர்க் தர்றோம். தப்புகளைத் திருத்தறோம். எல்லாம் அவனோட நல்லதுக்குதானே?’

‘நான்சென்ஸ்’ என்றார் அந்தத் தாய். ‘இந்தக் காலத்துல யார் பேனா பிடிச்சு எழுதறாங்க மேடம்? முந்தின தலைமுறையில எல்லோரும் ஏ, பி, சி, டி எழுதினாங்கங்கறதுக்காக இவங்களுக்கும் சொல்லித்தர்றீங்க, அவ்ளோதான். மத்தபடி படிப்பை முடிச்சு வெளியே வந்தப்புறம் அவன் பேனாவையே தொடப்போறதில்லை, ஒரு வார்த்தைகூடப் பேப்பர்ல எழுதப்போறதில்லை. எல்லாம் கம்ப்யூட்டர்தான். இந்தக் காலத்துலபோல் ஹேண்ட்ரைட்டிங்கை அழகுபடுத்தறேன்னு நேரத்தை வீணடிக்கறீங்களே, சுத்தப் பைத்தியக்காரத்தனம். அதையெல்லாம் நிறுத்திட்டு ஒழுங்காப் பாடத்தைமட்டும் சொல்லிக்கொடுங்க. புரியுதா?’

3

பாட்டுப்போட்டி ஒன்று. எட்டு வயதுப் பையன் ராகங்களைப் போட்டுப் புரட்டிக்கொண்டிருந்தான். அட்டகாசமான குரல். பிசிறில்லாத உச்சரிப்பு. கச்சிதமான உணர்ச்சிகள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, சிரித்த முகம்.

ஆச்சர்யமான விஷயம், அவனை அடுத்துப் பாடவந்த எல்லோருமே இப்படிதான் தூள் கிளப்பினார்கள். மூன்று வயது மழலை ஒன்றுகூட மேடையேறி அசத்தியது. திகட்டத் திகட்ட இன்னிசை மழை!

ஒரே பிரச்னை, பாடியவர்கள் யாரும் ‘மூன்று நிமிட’ இலக்கை மதிக்கவில்லை. மணி ஒலித்தபின்னும் தொடந்து பாடிக்கொண்டே இருந்தார்கள். பாட்டை முடிக்காமல் யாரும் கீழே இறங்கவில்லை.

இதனால் ஒருகட்டத்தில் விழா அமைப்பாளர்கள் சலித்துப்போய்விட்டார்கள். ‘இப்படியே போய்க்கொண்டிருந்தால் ரெண்டு மணி நேர நிகழ்ச்சி எட்டு மணி நேரத்துக்கு நீண்டுவிடும்’ என்று மேடையிலேயே அறிவித்தார்கள். ‘இனிமேல் மூன்று நிமிடம் தாண்டியதும் மைக்கை அணைத்துவிடுவோம். நீங்கள் பாட்டை நிறுத்தியே தீரவேண்டும்.’

இப்போது ஒரு பெண் மேடையேறினாள். பன்னிரண்டு வயது மதிக்கலாம். நல்ல கம்பீரமான குரல். மேடை பயமெல்லாம் இல்லாமல் நன்றாகப் பாடினாள்.

மூன்று நிமிடம் முடிந்தது. மணி ஒலித்தது. ஆனால், பாடல் முடியவில்லை. இன்னொரு கால் நிமிடம் பொறுத்துப் பார்த்த விழா அமைப்பாளர்கள் மைக்கை அணைத்துவிட்டார்கள்.

அவ்வளவுதான். அதுவரை சிரித்தபடி பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் முகம் சட்டென்று மாறியது. கோபத்தில் மைக்கைப் பிடுங்கிக் கீழே அடித்து உடைத்துவிட்டாள். அதோடு நிறுத்தாமல், மைக்கே தேவைப்படாத சுருதியில் பெரிதாக அழத் தொடங்கினாள். பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி.

இதைவிடக் கொடுமை, அந்தப் பெண்ணின் பெற்றோர் நடந்துகொண்ட விதம். மேடையில் தங்களுடைய மகள் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொள்ளக்கூட அவர்கள் தயாராக இல்லை. ‘மத்தவங்கல்லாம் தாராளமா அஞ்சு நிமிஷம், ஏழு நிமிஷம்கூடப் பாடினாங்க, இவளுக்குமட்டும் மூணு நிமிஷமா?’ என்று சண்டைக்குதான் போனார்கள்.

அன்றைக்கு அந்தப் பெண்ணுக்குப் பரிசு கிடைக்கவில்லை. காரணம், அவளது திறமைக்குறைவு அல்ல.

4

மாதாந்திர ஷாப்பிங். ஆட்டோவில் சில கிலோமீட்டர்கள் பயணம்.

வழியில் ஒரு டிராஃபிக் சிக்னல் வந்தது. சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஆட்டோவை நிறுத்திய ஓட்டுனர் முன்னும் பின்னும் பார்த்தார். இறங்கி அந்தப் பக்கமாக எட்டிப்பார்த்தார். திருப்தியுடன் தலையாட்டிவிட்டு ஆட்டோவைக் கிளப்பி ஓட்ட ஆரம்பித்தார்.

என் மகளுக்கு அதிர்ச்சி. ‘அப்பா, Red Means Stopன்னு படிச்சோமே. இந்த டிரைவர் அங்கிள் ரெட் லைட் எரியும்போது வண்டியை ஓட்டறாரே!’

இதைக் கேட்ட ஆட்டோ டிரைவர் சிரித்தார். ‘பாப்பா, அதையெல்லாம் பார்த்துகிட்டிருந்தா பொழைக்கமுடியாது, டிராஃபிக் கான்ஸ்டபிள் இருக்காரா-ன்னு ஒரு லுக் விட்டுட்டு, அவர் இல்லாட்டி வண்டியை ஓட்டிகிட்டுப் போகவேண்டியதுதான், ரெட் லைட்டாவது இன்னொண்ணாவது!’

சிறிது நேரத்தில், சூப்பர் மார்க்கெட் வந்துவிட்டது. ஆட்டோவுக்குப் பணம் கொடுத்துவிட்டு உள்ளே சென்று எங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கினோம். பில் போடும் இடத்துக்கு வந்தோம்.

அங்கே ஏழெட்டு வரிசைகள். அநேகமாக ஒவ்வொன்றிலும் பத்துப் பேருக்குமேல் நின்றுகொண்டிருந்தார்கள். ஆளுக்கு மூன்று நிமிடம் என்று வைத்துக்கொண்டால்கூட, அரை மணி நேரத்துக்கு மேலாகிவிடும். பெருமூச்சுடன் ஏதோ ஒரு க்யூவில் நின்றோம்.

எங்களுக்குப் பக்கத்துக் க்யூவில் ஒரு குடும்பம். அப்பா, அம்மா, இரண்டு குழந்தைகள். அவர்கள் கையில் இருந்த கூடையில் நான்கைந்து பொருள்கள்தான் இருந்தன. அவற்றை பில் போடுவதற்காகச் சுமார் 15 நிமிடங்கள் காத்திருக்க அவர்கள் விரும்பவில்லை.

ஆகவே, அந்தக் குடும்பத் தலைவர் தன்னுடைய மனைவி, மகன், மகளை அழைத்தார். அவர்கள் கையில் ஆளுக்கு ஒரு பொருளைக் கொடுத்தார். ‘நீங்கல்லாம் வெவ்வேற க்யூவில போய் நில்லுங்க, ஒரே ஒரு ஐட்டம்தான், நான் முன்னாடி பில் போட்டுக்கறேன்னு சொல்லுங்க, நாம சட்டுன்னு வெளியே போயிடலாம்.’

அவர் சொன்னபடியே நடந்தது. நாங்களெல்லாம் மாக்கான்களைப்போல் ஒழுங்குமுறைப்படி வரிசையில் நின்றிருக்க, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக பில் போட்டுவிட்டு வெளியேறினார்கள். அந்தக் குழந்தைகள் முகத்தில் தங்களுடைய ’பிழைக்கத் தெரிந்த’ தந்தையின் ‘புத்திசாலித்தன’த்தைப்பற்றிய பெருமிதம்.

5

நண்பர் மகனுக்குப் பிறந்த நாள். அவர் வீட்டிலேயே ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

வழக்கமாக இதுபோன்ற பார்ட்டிகளின்போது குழந்தைகள் பாட்டுப் பாடும், ஆட்டம் போடும், கேக் வெட்டும், பலூன்களைத் தூக்கிப் போட்டுத் துரத்தும், கையில் முகத்தில் ’டாட்டூ’ படங்களை வரைந்துகொள்ளும், சின்னச் சின்ன விளையாட்டுகளெல்லாம் இருக்கும்.

ஆனால் இந்தப் பார்ட்டி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. குழந்தைகளுக்கென்று ஓர் அறை ஒதுக்கப்பட்டு அங்கே ஏழெட்டுக் கம்ப்யூட்டர்கள், லாப்டாப்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் வெவ்வேறு வீடியோ கேம்ஸ்.

போதாதா? பார்ட்டிக்கு வந்த குழந்தைகள் எல்லாம் அந்த அறைக்குள் புகுந்துகொண்டு வெளியே வரவே இல்லை. சிப்ஸ், மிக்ஸர், கேக், ஸ்வீட் என எல்லாம் அங்கேயே மேஜையில் பரிமாறப்பட்டது. குழந்தைகள் மாறி மாறி விளையாடியபடி வளையவந்தார்கள். பெரியவர்கள் வெளியே அரட்டையடித்துக்கொண்டிருந்தார்கள்.

நான் சும்மா அந்த அறைக்குள் எட்டிப்பார்த்தேன். இரண்டு பொடியன்கள் லாப்டாப்பில் கார் ரேஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். எதிர்ப்பட்டவர்களையெல்லாம் டமால் டமால் என்று அடித்து வீழ்த்தினார்கள். ‘எங்கப்பா காரை இவ்ளோ ஸ்பீடா ஓட்டமாட்டேங்கறார், வேஸ்ட்’ என்றான் ஒரு சிறுவன்.

அன்றைக்குப் பிறந்தநாள் கொண்டாடும் சிறுவனின் தந்தையிடம் சென்றேன். ‘பர்த்டே பார்ட்டியில வீடியோ கேம்ஸெல்லாம் எதுக்குங்க?’ என்றேன்.

‘இந்தக் காலப் பசங்க வேற எதை விளையாடறாங்க, சொல்லுங்க?’ என்றார் அவர். ‘என் பையனுக்கு லேட்டஸ்ட் வீடியோ கேம் கன்ஸோல் வாங்கிக் கொடுத்திருக்கேன், ஸ்கூல்லேர்ந்து வந்ததும் அதுமுன்னாடி உட்கார்ந்துடறான். ஒன் ஹவர் அந்த ரூம்லேர்ந்து வெளியே வரமாட்டான், கிரிக்கெட், டென்னிஸ், கபடி, கார் ரேஸ்ன்னு எல்லா கேம்ஸையும் விளையாடிச் சலிச்சப்புறம்தான் ஹோம் வொர்க்ல்லாம்.’

‘இதே கேம்ஸை அவன் வெளியே போய் நிஜமான ஃப்ரெண்ட்ஸோட விளையாடலாமே?’

’வாஸ்தவம்தான். ஆனா இந்தக் காலத்துல யாரை நம்பமுடியுது சொல்லுங்க? யாரோட பழகினாலும் ஏதாவது கெட்ட பழக்கங்களைக் கத்துகிட்டு வந்துடறான், இல்லாட்டி அடிதடி, சண்டை, காயம், கலாட்டா, அப்புறம் அவனைப் பிடிச்சு வீட்டுக்கு இழுத்துட்டு வர்றதுக்குள்ள நம்ம தாவு தீர்ந்துடுது. அதான், வீட்டுக்குள்ளயே விளையாடுடா-ன்னு விட்டுட்டேன், ஒன் ஹவர் முடிஞ்சதும் கரண்டைப் பிடுங்கிடுவேன்னு மிரட்டினா ஒழுங்கா கேம்ஸை அணைச்சுட்டு ஹோம்வொர்க் செய்ய உட்காருவான்.’

6

உறவினரின் மகள் சிநேகா. ப்ளஸ் டூ படிக்கிறாள். நல்ல படிப்பாளி. எப்போதும் முதல் ரேங்க். சராசரிக்குமேல் ஐ.க்யூ.

சிநேகா ஓர் இன்டர்நெட் பிரியை. எந்நேரமும் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று வளையவருகிறவள். அவள் எங்கே போகிறாள், என்ன செய்கிறாள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரிவதற்குமுன்னால் இணையத்திற்குத் தெரிந்துவிடும். ‘ஃபேஸ்புக்ல எனக்கு 1500 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க, தெரியுமா?’ என்று அடிக்கடி பெருமையாகச் சொல்லிக்கொள்வாள்.

சமீபத்தில் ஒரு பிரச்னை. ‘ஆன்லைன் சிநேகிதி’ ஒருத்தி சிநேகாவுடன் ‘காய்’ விட்டுவிட்டாள். ஃபேஸ்புக்கில் அவளைக் கண்டபடி திட்டி எழுதிவிட்டாள்.

அவ்வளவுதான். சிநேகாவின் உற்சாகமெல்லாம் எங்கேயோ பறந்துவிட்டது. எதையோ பறிகொடுத்தவளைப்போலவே வளையவந்துகொண்டிருந்தாள்.

சிநேகாவின் பெற்றோர் மகளுக்கு எதார்த்தத்தைப் புரியவைக்க முயன்றார்கள். ‘ஃப்ரெண்ட்ஸ் வர்றதும் போறதும் சகஜம், ஃப்ரெண்ட்ஸுக்குள்ள சண்டையும் சகஜம். ஒருவேளை நிஜமாவே அந்தப் பொண்ணு உன்னோட சண்டை போட்டாக்கூட, ஃபேஸ்புக்ல உனக்கு இன்னும் 1499 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே!’

இந்தச் சமாதானங்கள் சிநேகாவுக்குப் போதவில்லை. அவள் தொடர்ந்து புலம்பியபடிதான் இருந்தாள். ஆன்லைன் சிநேகிதங்களெல்லாம் வெறும் டிஜிட்டல் புள்ளிவிவரங்கள்தான் என்பதும் அவளுக்கு விளங்கவில்லை, இதை நிஜம் என்று நம்பத் தொடங்கும்போது உண்மையான நட்புகளைத் தொலைத்துவிடுகிறோம் என்பதும் புரியவில்லை.

ஒருவிதத்தில் சிநேகாகூடப் பரவாயில்லை. இந்தியாவின் மிகப் பெரிய தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றில் படிக்கிற மாணவி ஒருத்தி, ஃபேஸ்புக்கில் தன் காதலன் ஏதோ எழுதிவிட்டான் என்பதற்காக மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டுவிட்டாள்.

தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் உலகம் சுருங்கிக்கொண்டுவருகிறது என்கிறோம். அதோடு சேர்ந்து மனிதர்களும் சுருங்க ஆரம்பித்துவிட்டோமோ? இன்றைய உலகத்தில் பிழைப்பதற்கான வழிகள் இவை இவை என்கிற வரையறைகளை அமைத்துக்கொண்டு அவற்றில்மட்டும் கவனம் செலுத்துவதற்கான சேணங்களைக் கட்டிக்கொண்டுவிட்டோமோ? நம் குழந்தைகளுக்கும் அவற்றை வலுக்கட்டாயமாகக் கட்டிவிடுகிறோமோ?

படிப்பு, புத்திசாலித்தனம், ஐ.க்யூ. என்பவை ஒருபக்கம். அதனால் மார்க் வருகிறது, நல்ல காலேஜில் சீட் கிடைக்கிறது, பிரமாதமான வேலை வாய்க்கிறது, கை நிறையச் சம்பளம் குவிகிறது, வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளமுடிகிறது. இந்த விஷயத்தில் குறைபட்டவர்கள் வாழ்நாள்முழுக்கச் சிரமத்தை அனுபவிக்கவேண்டியதுதான். இதைத்தான் எல்லாத் தலைமுறைகளிலும் பெற்றோர் குழந்தைகளுக்குத் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். ‘படிக்காட்டிக் கழுதை மேய்க்கவேண்டியதுதான்!’

ஆனால் அதேசமயம் வெறுமனே படிப்பில்மட்டும் கவனம் செலுத்தினால் போதும், அதற்காக வேறெதையும் இழக்கலாம் என்கிற மனோநிலை மிகவும் ஆபத்தானது. இதனால் தனி மனிதர்களும் சரி, சமூகமும் சரி, வருங்காலத்தில் பல அதிர்ச்சிகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.

மனித வள நிபுணர்கள் ஒருவரை எடைபோடும்போது ‘முழுமையான வளர்ச்சி இருக்கிறதா’ என்று பார்க்கிறார்கள். ஒருவருக்குக் கை, கால்மட்டும் சரியாக வளர்ந்து தலையும் வயிறும் மிகப் பெரியதாக இருந்தால் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருக்குமல்லவா? அதுபோல புத்திசாலித்தனத்தை வளர்த்துக்கொள்வதோடு நிறுத்திவிடாமல் அடுத்தவர்களுடன் பழகுவது, குழுவாக இணைந்து வேலை பார்ப்பது, படைப்பூக்கத்துடன் புதிதாகச் சிந்திப்பது, அடுத்தவர்களது கோணத்திலிருந்து சிந்தித்து மனிதாபிமானத்துடன் செயல்படுவது, சூழ்நிலைக்கு ஏற்ப ‘அட்ஜஸ்ட்’ செய்துகொண்டு முன்னேறுவது, வேலையையும் வாழ்க்கையையும் சமமாக மதித்து ஒன்றுக்காக இன்னொன்றை இழந்துவிடாமல் இருப்பது, பரபரப்பு வாழ்க்கைக்கு நடுவே ரிலாக்ஸ் செய்துகொள்ளப் பழகுவது, இயற்கையை ரசிப்பது, நாம் முன்னேறுவதற்காக இன்னொருவரை மிதித்துச் செல்வது நியாயமில்லை என்பதை உணர்வது, நம்மைப்போலவே இந்த உலகம் மற்ற மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்கூடச் சொந்தமானது என்பதை உணர்வது, நேர்மை, காலம்தவறாமை, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல் உள்ளிட்ட பல மென்கலைகளும் இன்றைய உலகத்திற்குத் தேவைப்படுகின்றன. அவற்றைப் புறக்கணித்துவிட்டு வெறும் அறிவு வளர்ச்சியில்மட்டும் கவனம் செலுத்தினால், நாளைய உலகம் புத்திசாலித் தீவுகளின் தொகுப்பாகமட்டுமே இருக்கும்.

***

என். சொக்கன் …

02 10 2011

நண்பர் விக்கி (விக்னேஷ் அண்ணாமலை https://twitter.com/#!/VickyAnnap) ட்விட்டரில் ஒரு வித்தியாசமான படத்தைப் பிரசுரித்து ‘இது என்ன?’ என்று ஊகிக்கக் கேட்டிருந்தார்:

424502292

சிறிது நேரம் கழித்து அவரே விடையும் சொன்னார். சென்னை ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட படம் இது. மறுநாள் காலை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான க்யூவுக்காக முந்தின நாளே சிலர் தங்களுடைய பொருள்களை வரிசையாக அடுக்கி வைத்து முன்பதிவு செய்துள்ளனர். அதாவது, ரிஸர்வேஷன் க்யூவுக்கு ரிஸர்வேஷன்!

அந்தப் பொருள்களைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்: துணிக்கடை பை, பத்திரிகைகள், செய்தித்தாள்கள், போஸ்டர்கள், நோட்டீஸ்கள், அவை பறக்காமல் இருக்க மேலே ஒரு கல், காசித்துண்டு, ஷூ, செருப்பு, தண்ணீர் பாட்டில்… நம் மக்களுடைய க்ரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லை Smile

இந்தப் படத்தைப் பிரசுரித்த விக்கியிடம் ‘இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஃபோட்டோ. உங்களுடைய Blogல் பதிவு செய்து வையுங்கள்’ என்றேன். ‘எனக்கேது ப்ளாக்?’ என்றார். அவர் அனுமதியுடன் இங்கே ஓசிப் பதிவாகப் பிரசுரிக்கிறேன் : >

***

என். சொக்கன் …

19 10 2011

இன்றைய Random பாட்டு, ‘இரு பறவைகள் மலை முழுவதும்’. நிறம் மாறாத பூக்கள்’ என்ற படத்தில் ராஜா இசையில் கண்ணதாசன் எழுதி ஜென்ஸி பாடியது.

ஜென்ஸி எனக்கு ரொம்பப் பிடித்த பாடகி. ராஜாவின் இசையில் மிக நல்ல பாடல்களைமட்டுமே பாடிய அதிர்ஷ்டசாலிகளில் அவர் ஒருவர். (மற்ற இருவர் பி. ஜெயச்சந்திரன், ஷ்ரேயா கோஷல்) மிகக் குறைவான எண்ணிக்கையில் பாடினாலும், தடாலென்று பாடுவதையே நிறுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டாலும் தமிழ்த் திரையிசையில் அவருக்கென்று ஒரு நிரந்தர ரசிகர் வட்டம் இருக்கிறது – கிட்டத்தட்ட எழுத்துலகில் ஜெயகாந்தன்மாதிரி என்று சொல்லலாம்.

ஆனால் ஜென்ஸியிடம் ஒரே பிரச்னை, அவருக்கு ர, ற வித்தியாசம் என்றைக்குமே புரிந்ததில்லை. இரண்டையும் இஷ்டப்படி மாற்றிப் பாடுவார். காது வலிக்கும்.

இன்னொரு வேடிக்கை, இடையின ர, வல்லின ற இரண்டிற்கும் தலா அரை மாத்திரை கூடுதலாகச் சேர்த்து வேறொரு ர, ற கூட்டணியை இவர் கண்டுபிடித்துவைத்திருக்கிறார். உதாரணமாக இந்த வீடியோவில் உள்ள ’இரு பறவைகள் மலை முழுவதும்’ பாட்டைக் கேட்டுவிட்டு வாருங்கள் (எச்சரிக்கை: வீடியோவைப் பார்க்கவேண்டாம், கண் வலிக்கும்!)

இரு பறவைகள் மலை முழுவதும்…

முதல் வரியிலேயே ‘இரு’ ஓகே, ஆனால் ‘பறவைகள்’ என்று பாடும்போது வேண்டுமென்றே அழுத்தம் கூடி ‘ற’னாவுக்கு அரை மாத்திரை எகிறிவிடுகிறது.

ஆனால் ரெண்டு வார்த்தை தள்ளி ‘பறந்தன’ என்று பாடும்போது ‘ற’ சரியாக விழுகிறது. பிழையில்லை.

பல்லவி, அனுபல்லவி முடிந்து சரணம் தொடங்குகையில் ‘சாரல்’ என்று ஒரு வார்த்தை. அங்கே ‘ர’னாவுக்கு அரை மாத்திரை கூடுகிறது – அதாவது, ஜென்ஸி ‘சாரல்’ என்று சரியாகவும் பாடுவதில்லை ‘சாறல்’ என்று தவறாகவும் பாடுவதில்லை, இரண்டுக்கும் நடுவே ஒரு இடைவல்லின ‘ர’வைப் பயன்படுத்துகிறார். இதுவும் சில இடங்களில்தான், இதே பாட்டில் வேறு பல இடங்களில் ‘ர’, ‘ற’ சரியாக ஒலிக்கிறது.

ஆக, ஜென்ஸிக்கு ர, ற வித்தியாசம் தெரியாமல் இல்லை. எங்கே எது வரவேண்டும் என்பதுதான் புரியவில்லை. ஆகவே randomஆக ஏதாவது ஒன்றைப் போட்டுப் பாடிவிடுகிறார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அவருக்கு இந்த நுணுக்கமான வித்தியாசமெல்லாம் தானாகப் புரியும் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.

இன்னோர் உதாரணம், ‘ஜீன்ஸ்’ படத்தில் இருந்து ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ என்ற பாட்டு. ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலைப் பாடிய உன்னி கிருஷ்ணன், சுஜாதா இருவருக்குமே தமிழ் தாய்மொழி இல்லை (என்று நினைக்கிறேன்!)

பூவுக்குள் ஒளிந்திருக்கும்…

இங்கே பல்லவியின் இரண்டாவது வரியில் உன்னி கிருஷ்ணன் ‘வன்னத்துப் பூச்சி’ என்று பாடுகிறார். அதே உன்னி கிருஷ்ணன் சில வரிகள் தள்ளி ‘கல் தோன்றி மண் தோன்றி’ என்று பாடும்போது ‘ண்’ சரியாக வருகிறது.

சுஜாதாமட்டும் சளைத்தவரா? பல்லவியில் ‘வாசமுல்ல பூ’, ‘துலி’ என்று தவறு செய்கிறார். ஆனால் அடுத்த வரியில் ‘மழை நீர்’ என்று மிகத் துல்லியமாகப் பாடுகிறார்.

ஆக, இங்கேயும் பாடகர்களுக்கு ந, ன, ண அல்லது ல, ள, ழ அல்லது ர, ற போன்றவற்றை வித்தியாசப்படுத்திச் சரியானமுறையில் உச்சரிக்கத்தெரியாமல் இல்லை. எங்கே ந, எங்கே ன, எங்கே ண என்பதில்தான் பிரச்னை.

இங்கே யார்மீது தப்பு? தமிழ் நன்கு உச்சரிக்கத் தெரிந்தவர்களைதான் பாடவைப்போம் என்று நினைக்காத இசையமைப்பாளர்கள்மீதா? ’குரல் நன்றாக இருந்தால் போதும், இப்படி ஒன்றிரண்டு சிறு பிழைகள் இருந்தால் பரவாயில்லை’ என்று அவர்கள் வாதிட்டால்?

ஒருவேளை, கவிஞர்கள் முன்வந்து தங்களுடைய வரிகள் சரியாக உச்சரிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டுமா? அவர்கள்தான் பாடல் பதிவின்போது பக்கத்தில் இருந்து பாடகர்களுக்கு உதவவேண்டுமோ? இதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.

’இளமைக் காலங்கள்’ என்ற படத்தில் ‘ஈரமான ரோஜாவே’ என்ற பாட்டு. ராஜா இசை. வைரமுத்து எழுதியது. கே. ஜே. யேசுதாஸ் பாடியது.

அந்தப் பாடலில் ஒரு வரி, ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’. இதை யேசுதாஸ் ‘மூள்காது’ என்று பாடினாராம். பக்கத்தில் இருந்த வைரமுத்து திருத்தினாராம்.

ஆனால் அவர் எத்தனை முறை சொல்லியும் யேசுதாஸுக்கு ‘மூழ்காது’ என்று சரியாகப் பாட வரவில்லை. எரிச்சலாகிவிட்டார். ‘சாகும்வரை திருத்துவீங்களா?’ என்று வைரமுத்துமீது எரிந்து விழுந்தாராம்.

‘தமிழ் சாகாதவரை’ என்று வைரமுத்து பதில் சொன்னாராம்.

வைரமுத்துவின் கவித்துவ மிகைப்படுத்தலையும் மீறி, இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருக்கக்கூடும் என்று நம்பலாம். பின்னாளில் அதே வைரமுத்துவின் பாடல்களை உதித் நாராயண், சாதனா சர்கம் வகையறாக்கள் கைமா செய்து போட்டதும் சரித்திரம்.

எதார்த்தமாக யோசித்தால் ஒரு கவிஞர் தன்னுடைய வரிகள் பதிவாகும் இடங்களுக்கெல்லாம் போய் நின்று திருத்தம் சொல்லிக்கொண்டிருப்பது சாத்தியம் இல்லை. வேண்டுமானால் பாடல் பதிவானபின் கேட்டுப் பிழை திருத்தலாம்.

ஆனால் அதற்குள் பாடிய பாடகர் ஊர் போய்ச் சேர்ந்திருப்பார். இன்னொருமுறை அவரைக் கூப்பிட்டு அந்த ஒரு வார்த்தையைமட்டும் மாற்றுவது கஷ்டம், செலவு.

பேசாமல் ஒன்று செய்யலாம், தமிழ் உச்சரிப்பு நன்றாகத் தெரிந்த ஒருவரை இசையமைப்பாளர்கள் தங்களுடைய உதவியாளராக வைத்துக்கொள்ளலாம். நடிகர், நடிகைகளுக்கு வசனம் சொல்லித்தருவதுபோல் இவர்கள் பாடல் பதிவின்போது பாடகர்களுடைய உச்சரிப்பைத் திருத்தலாம்.

இன்னும் பெட்டர், பாட்டில் சத்தத்தை அதிகப்படுத்தி உச்சரிப்புக் கோளாறுகள் எவையும் வெளியே கேட்காதபடி செய்துவிடலாம். இப்போது அதைத்தான் அதிகம் செய்கிறார்கள்.

போகட்டும். ஒரு பழைய கதை சொல்லவா? பிளாக் அண்ட் வொய்ட் காலத்துக் கதை.

அந்த இளம் பெண் பாடல் பதிவுக்காகக் காத்திருந்தார்.

இன்னும் இசையமைப்பாளர் வரவில்லை. வாத்தியக்காரர்களைக்கூடக் காணோம். ஒருவேளை, இன்றைக்குப் பாடல் எதுவும் பதிவாகவில்லையோ?

அவர் சந்தேகமாக எழுந்து நின்றார். ஆனால் யாரை விசாரிப்பது என்று புரியவில்லை.

அந்தப் பெண்ணின் பெயர் சுசீலா. சொந்த ஊர் ஆந்திரா. பெரிய திரைப்படப் பின்னணிப் பாடகியாகிற கனவோடு தமிழகத்துக்கு வந்திருந்தார்.

பதினைந்து வயதிலேயே அவருக்கு முதல் பாடல் சான்ஸ் கிடைத்துவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதை.

சின்னஞ்சிறுமியாகத் துள்ளி விளையாடவேண்டிய பருவத்தில், சுசீலாவுக்குப் பாட்டுக் கற்றுக்கொடுக்கிறேன் என்று உட்காரவைத்தார் அப்பா. ஒவ்வொரு பாடமாக வற்புறுத்திச் சொல்லித்தந்து பல மணி நேரம் சாதகம் செய்தால்தான் ஆச்சு என்று அவர் பிடிவாதம் பிடிக்க, குழந்தை சுசீலாவுக்கு அழுகைதான் வந்தது.

அப்போதும், அப்பா விடமாட்டார், ‘முதல்ல பாட்டை ஒழுங்காப் பாடு, அப்புறம் உன் இஷ்டம்போல எவ்ளோ நேரம் வேணும்ன்னாலும் அழுதுக்கோ’ என்றுதான் சொல்வார்.

இப்படி அப்பாவின் கட்டாயத்தால் பாட்டுக் கற்க ஆரம்பித்த சுசீலா, விரைவில் இசைப் பிரியையாக மாறிப்போனார். பள்ளிப் பாடங்களைவிட, கலைவிழா மேடைகள்தான் அவரை ஈர்த்தன. பரீட்சைகளில் நல்ல மார்க் வாங்குகிறாரோ இல்லையோ, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பிரமாதமாகப் பாடிக் கைதட்டல் வாங்கத் தவறியதில்லை.

ஒருகட்டத்தில், படிப்பு தனி, பாடல் தனி என்று அவர் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. இசைக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். மேடைக் கச்சேரிகள், ரேடியோ நிகழ்ச்சிகள் என்று ரொம்ப பிஸியாகிவிட்டார்.

சென்னை வானொலியில் அவர் அடிக்கடி கலந்துகொண்டு பாடிய ஒரு நிகழ்ச்சி ‘பாப்பா மலர்’. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ‘வானொலி அண்ணா’வுக்கு சுசீலாவின் குரல் மிகவும் பிடித்துப்போய்விட்டது.

ஒருநாள், வானொலி அண்ணா சுசீலா வீட்டுக்கு நேரில் வந்தார். அவருடைய தந்தையைச் சந்தித்துப் பேசினார், ‘உங்க மகளுக்கு இசைத்துறையில பிரமாதமான எதிர்காலம் இருக்கு, நீங்க அவளைச் சினிமாவில பாடவைக்கணும்’ என்றார்.

சுசீலாவின் அப்பாவுக்குப் பாரம்பரிய இசையில்தான் ஆர்வம். ’சினிமாவா? அதெல்லாம் நமக்கு வேணாம்’ என்று தட்டிக்கழித்துவிட்டார்.

பாவம் சுசீலா, திரைப்படங்களில் பாடவேண்டும் என்கிற ஆசை இருந்தும், அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அந்த விருப்பத்தைத் தன் மனத்துக்குள் விழுங்கிக்கொண்டார். மற்ற இசை வாய்ப்புகளில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அப்போது, ‘பெண்டியால நாகேஸ்வர ராவ்’ என்று ஒரு பிரபலமான இசையமைப்பாளர் தன்னுடைய படத்தில் பாடுவதற்குப் புதுக் குரல்களைத் தேடிக்கொண்டிருந்தார். இதற்காக அவர் சென்ற இடம், அகில இந்திய வானொலி.

’உங்க நிகழ்ச்சிகள்ல ரெகுலராப் பாடற திறமைசாலிப் பெண்கள் இருப்பாங்களே, அதில நல்ல குரல்களா நாலஞ்சு பேரைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்க. அவங்களுக்குச் சினிமாவில பாட விருப்பம் இருந்தா என்கிட்ட அனுப்பிவைங்க.’

உடனடியாக, வானொலி நிலையம் ஐந்து பெண்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது. அதில் நான்கு பேர் குரல் தேர்வில் நிராகரிக்கப்பட்டார்கள். கடைசியாக, சுசீலாவைமட்டும் தேர்வு செய்தார் பெண்டியால நாகேஸ்வர ராவ்.

ஆனால், அப்பா? அவரது சம்மதம் இல்லாமல் சுசீலா சினிமாவில் பாடுவது எப்படி?

நல்லவேளையாக, அவருடைய அப்பா ஒரு படி இறங்கிவந்தார். பதினைந்து வயது சுசீலா திரைப்படப் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.

சுசீலாவின் வசீகரமான புதுக் குரல் பலதரப்பட்ட ரசிகர்களை ஈர்த்தது. அவர்களில் ஒருவர், ஏவிஎம் நிறுவன அதிபர் மெய்யப்பன்.

அதன்பிறகு, ஏவிஎம் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து பாடுகிற வாய்ப்பு சுசீலாவுக்குக் கிடைத்தது. அவரும் இந்தப் பாடல்களில் தனது முழுத் திறமையை வெளிக்காட்டினார்.

சுசீலாவின் குரல் தனித்துவமானதுதான். எல்லோரையும் கவரக்கூடியதுதான். ஆனாலும், அவருக்கென்று ஒரு நல்ல ‘ப்ரேக்’ அமையவில்லை. அதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் புரியவில்லை.

யோசனையோடு தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தார் சுசீலா, ‘இன்னிக்கு ரெகார்டிங் இருக்கா, இல்லையா?’

திடீரென்று அந்த அறையின் கதவு திறந்தது. தயாரிப்பாளர் ஏவிஎம் மெய்யப்பனும் இன்னொருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து நின்றார் சுசீலா, ‘வணக்கம் சார்.’

‘வணக்கம்மா’ என்றார் மெய்யப்பன், ‘இவர் யார் தெரியுதா?’

சுசீலா அவரை இதற்குமுன்னால் பார்த்த நினைவில்லை. மறுப்பாகத் தலையசைத்தார்.

‘இவர் பேரு லஷ்மி நாராயண். இனிமே இவர்தான் உனக்குத் தமிழ் வாத்தியார்.’

சுசீலாவுக்குத் திகைப்பு, ‘வாத்தியாரா? நான் என்ன சின்னப் பிள்ளையா, இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள?’

அவருடைய குழப்பம் புரிந்ததுபோல் சிரித்தார் மெய்யப்பன், ‘நீ ஒவ்வொரு பாட்டையும் கஷ்டப்பட்டு நல்லாதான் பாடறேம்மா. ஆனா, சில வார்த்தைகள் தப்பா வருது, அசலூர் வாடை அடிக்குது, கேட்கும்போதே மொழி தெரியாத யாரோ பாடறாங்க-ன்னு புரிஞ்சுடுது. மக்கள் அதை மனசார ஏத்துக்கமாட்டேங்கறாங்க!’

‘நீயோ தெலுங்குப் பொண்ணு. உனக்குத் தமிழ் உச்சரிப்பு சரியா வரலைன்னா அது நிச்சயமா உன்னோட தப்பில்லை. அதனாலதான் ஒரு நல்ல தமிழ் வாத்தியாராப் பார்த்து ஏற்பாடு செஞ்சிருக்கேன். உனக்குக் கஷ்டமா இருக்கிற வார்த்தைகளுக்கெல்லாம் இவர்கிட்ட சரியான உச்சரிப்புகளைக் கத்துகிட்டு நல்லாப் பாடிப் ப்ராக்டீஸ் எடுத்துக்கோம்மா. நீ ரொம்ப நல்லா வருவே’ என்று ஆசிர்வதித்தார் ஏவிஎம் மெய்யப்பன்.

இருபது வயதில் ஒரு வாத்தியார் உதவியுடன் தமிழ் உச்சரிப்புப் பழக ஆரம்பித்த சுசீலா, படிப்படியாகத் தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொண்டார். ஒவ்வொரு வார்த்தையையும் மிகச் சரியாக உச்சரிக்கப் பழகினார், அதன்பிறகு வந்த அவரது பாடல்களில் இந்த மெருகு ஜொலித்தது. தமிழக மக்களும் அவருடைய திறமையைக் கொண்டாட ஆரம்பித்தார்கள், தங்கள் மனத்துக்கு நெருக்கமாக உட்காரவைத்துக் கௌரவித்தார்கள்.

‘இசையரசி’ என்று தமிழர்களால் பெருமையோடு அழைக்கப்படும் பாடகி பி. சுசீலாவின் தமிழ்ப் பாடல்களை யார் கேட்டாலும், அவரைத் தெலுங்கு தேசத்திலிருந்து வந்தவராக நினைக்கவேமாட்டார்கள். அந்த உச்சரிப்புத் துல்லியமும், பாடல் வரிகளுக்கு ஏற்ற உணர்ச்சிகளைக் கச்சிதமாகக் கொட்டும் குரலும் அவர் எங்கிருந்தோ வாங்கிவந்த வரம் அல்ல, முனைந்து செதுக்கியது.

அந்த அக்கறை, அர்ப்பணிப்பு, தொழில் பக்தியும் சும்மா வராது.

***

என். சொக்கன் …

13 09 2011

Update:

எல்லாக் குறில்களுக்கும் மாத்திரை அளவு சமம்தான், வல்லினம் மெல்லினம் இடையினம் உச்சரிப்பில்மட்டுமே மாறுபடும். நான் இங்கே வித்தியாசம் காட்ட மாத்திரை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது பெரிய தவறு. மன்னிக்கவும். சுட்டிக்காட்டிய நண்பர்கள் குமரன், சுப இராமனாதன் இருவருக்கும் நன்றி.


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,056 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031