மனம் போன போக்கில்

Archive for the ‘Announcements’ Category

கடந்த 271 நாளாக தினமணி டாட் காமில் நான் எழுதிவந்த ‘தினம் ஒரு திருவாசகம்’ தொடர் நிறைவடைந்தது. முன்செலுத்திய குருவருளுக்கும் திருவருளுக்கும் நன்றி! வாசித்து ஆதரவுதந்த நண்பர்களுக்கு என் அன்பு.
 
‘மாணிக்கவாசகர்’ என்பது காரணப்பெயர். தினந்தோறும் அவரது மாணிக்கச்சொற்களில் தோய்கிற வாய்ப்பைத் தந்த தினமணி டாட் காம் ஆசிரியர் பார்த்தசாரதி அவர்களுக்குப் பெருவணக்கம்.
 
இத்தொடரில் திருவாசகத்தின் முழு உரை கிடைக்காது, சுமார் 60% பாடல்கள்தான் இடம்பெற்றுள்ளன. வாய்ப்பிருக்கும்போது மீதமுள்ளவற்றை எழுதி நூலாக்க விருப்பம்.
 
ஆச்சர்யமான விஷயம், பொதுவாகப் பழந்தமிழ் இலக்கியங்களைப்பற்றிய நூல்களை வெளியிட யாரும் ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் இந்தத் தொடரை வெளியிடுவதற்கு இதுவரை மூன்று பதிப்பாளர்கள் என்னைக் கேட்டுள்ளார்கள். மீதமுள்ள பகுதிகளை எழுதியபிறகு தொடர்புகொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.
 
அதுவரை, ‘தினம் ஒரு திருவாசகம்’ அனைத்து அத்தியாயங்களையும் இங்கே காணலாம்:
 

12241032_10205377790904230_6139807340526050063_o

சில கசப்பான காரணங்களால், இனி பதிப்பகங்களுக்கு நேரடிப் புத்தகங்கள் எவற்றையும் எழுதுவதில்லை என்று தீர்மானித்து இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றன!

2014 புத்தகக் கண்காட்சிக்கு எழுதிய ஒரு நூலுக்குப்பிறகு, என் புதிய நூல்கள் எவையும் வெளியாகவில்லை, பத்திரிகைத் தொடர்களைக்கூட நான் நூலாக்க முயற்சிகளை எடுக்கவில்லை.

என்னதான் பத்திரிகைகளில் எழுதினாலும், பிற மொழிபெயர்ப்புகள், எழுத்துப்பணிகளில் ஈடுபட்டாலும், ஒரு நூலில் நம் பெயரைப் பார்க்கும் சுகம் அலாதியானது. ஆகவே, ஒருகட்டத்தில் நான் என் வைராக்கியத்தைக் குறைத்துக்கொண்டு, எழுத்து சார்ந்த மற்ற வேலைகளைப் பாதிக்காதபடி வருடத்துக்கு ஒரு புத்தகமாவது எழுதலாம் என்று தீர்மானித்தேன்.

இந்த ஆண்டு நண்பர் ம.கா.சிவஞானம்​ அந்த வாய்ப்பை வழங்கினார். ‘பண்டிதத்தனம் இல்லாமல், அதேசமயம் பிழை மலிந்ததாகவும் இல்லாமல் ஆங்கிலம் பேசுவதற்கான அடிப்படை விதிகளை எழுதித் தாருங்கள்’ என்றார்.

‘யாருக்கு?’ என்றேன்.

‘மாணவர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும்’ என்றார்.

கொஞ்சம் விநோதமான காம்பினேஷன்தான் 🙂 என்றாலும், எனக்கு அவர் கேட்ட அடிப்படை புரிந்தது. அதிகம் நீர்த்துவிடாதபடி எழுதியிருக்கிறேன். இன்றுமுதல் தமிழகத்தின் பெரும்பாலான புத்தகக்கடைகளில் இந்நூல் கிடைக்கும். விலை ரூ 40.

வாய்ப்பு/ தேவை இருக்கிறவர்கள் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

2016க்கு இன்னொரு சுவாரஸ்யமான நூலை எழுதத் தொடங்கியிருக்கிறேன். பார்ப்போம் 🙂

***

என். சொக்கன் …

12 11 2015

Ah!Range

பசு, ஹசு என்ற மாடுகள் நல்ல நண்பர்களாக இருந்தன. அவர்களைத் திருடுவதற்காக இரண்டு திருடர்கள் வந்தார்கள். அவர்களைப் பசுவும் ஹசுவும் எப்படி விரட்டி அடித்தன என்று தெரிந்துகொள்ள இந்தச் சுவாரஸ்யமான கதையைப் படியுங்கள்.

வாசிப்பின் இரண்டாம் நிலையில் உள்ள (சுமார் 5 வயது முதல் 8 வயது வரையிலான) குழந்தைகளுக்கான எளிய, இனிய கதை இது. அருமையான படங்கள், கதையுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள், சுவையான விளையாட்டுகள் என அனைத்தும் உண்டு!

‘ஓதி விளையாடு பாப்பா’ வரிசையில் இரண்டாவது நூல் இது!

எழுத்து: என். சொக்கன், என். நங்கை
ஓவியங்கள்: அனிர்பன் மஷியுர்

விலை: ரூ 20

மின்புத்தகத்தை வாங்க:

https://play.google.com/store/books/details?id=QDh0BgAAQBAJ

அல்லது

http://books.google.co.in/books/about?id=QDh0BgAAQBAJ&redir_esc=y

இந்த வரிசையில் வந்துள்ள மற்ற சிறுவர் நூல்களைப்பற்றி அறிய: https://nchokkan.wordpress.com/ovp/

ஓதி விளையாடு பாப்பா நூல் #1 “டப்பாம்பூச்சி” வெளியாகிவிட்டது.

Dabbampoochi

ஒரு பட்டாம்பூச்சியும் தேனீயும் நண்பர்களாகின்றன. காட்டைச் சுற்றித் திரிகின்றன, பல விஷயங்களைத் தெரிந்துகொள்கின்றன!

வாசிப்பின் இரண்டாம் நிலையில் உள்ள (சுமார் 5 வயது முதல் 8 வயது வரையிலான) குழந்தைகளுக்கான எளிய, இனிய கதை இது. அருமையான படங்கள், கதையுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள், சுவையான விளையாட்டுகள் என அனைத்தும் உண்டு!

எழுத்து: என். சொக்கன், என். மங்கை
ஓவியங்கள்: சாம்ராட் சக்ரவர்த்தி

விலை: ரூ 20

மின்புத்தகத்தை வாங்க:

https://play.google.com/store/books/details?id=an5uBgAAQBAJ

அல்லது

http://books.google.co.in/books/about?id=an5uBgAAQBAJ&redir_esc=y

ஆங்கிலத்தில் 5000 முதல் 30,000 சொற்கள் உள்ள மின்புத்தகங்கள் ‘Singles’ என்று அழைக்கிறார்கள். தமிழில் வழக்கமான மின்புத்தகங்களே அந்த அளவில்தான் உள்ளன என்பதால், இன்னும் சிறிதாக சுமார் 1,000 சொற்கள் அளவில், ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனைச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிற மின்னூல்களை நாம் ’குறுநூல்’களாக எழுதினால் என்ன?

இதற்கான தொழில்நுட்பம் இப்போது உள்ளது, தமிழிலும் உள்ளது. ஒரு தலைப்பில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் 1000 சொற்கள் எழுதியபின் அதனை கூகுள் ப்ளே / கூகுள் புக்ஸில் பிரசுரிக்க ஐந்து நிமிடம் போதும். ஆயிரம் சொற்களுக்குள் மேம்போக்காக அன்றி விஷயத்தைச் சுருக்கமாக அறிமுகப்படுத்துவதுதான் சவால், பிரசுரிப்பது அல்ல.

இந்நூல்களை மிகக் குறைந்த விலையில் வெளியிட்டுப் பார்க்கலாம். உதாரணமாக, ரூ 2.49 அல்லது ரூ 4.99!

இவை பெருநூல்களுக்கு மாற்று அல்ல. நேரம் குறைவாக உள்ளவர்கள் ஒரு தலைப்பை விரைவாகப் படித்து ஒரு பறவைப் பார்வையைப் பெறுவதற்கானவை. இங்கிருந்து முழு விவரம் தரும் நூல்களுக்கு அவர்கள் செல்வதை இது தூண்டும்.

குறுநூல்கள் வரிசையில் கதை, வரலாறு, அறிவியல், ஆன்மிகம், பலவிதமான நூல்களைக் கொண்டுவரலாம், ஆயிரம் சொற்களில் கவிதைகூட எழுதலாம்!

ஆயிரம் சொற்கள் என்றால் Blog எழுதிவிடலாமே, மின்னூல் எதற்கு?

இலவசமாகக் கிடைக்கிறது என்பதாலேயே Blogல் மெனக்கெடல் ஒரு மாற்றுக் குறைவாக இருக்கிறது என்பது என் எண்ணம். அதற்கு வரும் பதில் கருத்துகளில் 1% சிறப்பானவை, மீதி 99% வீண் அரட்டைகளாக (அல்லது மிகைப் புகழ்ச்சிகளாக) கவனத்தைச் சிதறடிக்கின்றன. இதனால், இந்தத் தளத்தில்மட்டும் தொடர்ந்து எழுதுகிறவர்களின் மொழிவன்மை, சொல்வளம், நேர்த்தியாகச் சொல்லும் திறமை போன்றவை வளராது, இருப்பதும் குறைந்துகொண்டேதான் போகும் என்பது என்னுடைய ஊகம்.

இது பொதுவான கருத்து அல்ல, என்னுடைய சொந்த அனுபவம் (எழுதுகிறவனாகவும் வாசிக்கிறவனாகவும்). யாரும் எழுதலாம், யாரும் பிரசுரிக்கலாம், யாரும் கருத்து சொல்லலாம் என்பது ஒரு மிகச் சிறந்த விஷயம். அதேசமயம் அந்தச் சுதந்தரம் டிராஃபிக் சிக்னல்கள் இல்லாத, எல்லாரும் எங்கும் வண்டியை ஓட்டலாம் என்பதுபோன்ற சூழ்நிலையாகிவிடும், அது ஒருவருடைய எழுத்தை மேம்படுத்தும் ஒரு களமாக அமையாது என்பதை உணர்ச்சிவயப்படாமல் யோசியுங்கள். ஒருவேளை எழுதுபவருக்கே அடிப்படையில் ஓர் ஒழுக்கமும் உழைப்பும் இருந்தால் இது சாத்தியமே. ஆனால் அப்படிப்பட்டவர்கள் 1%கூட கிடையாது.

ஆகவே ஈபுத்தகத்துக்கு ஒரு பைசா என்றேனும் விலை வைத்து வெளியிட்டால் ஓர் Exclusivity வந்துவிடும், எழுதுபவருக்கும் பொறுப்பு மிகும். அப்போதுதான் இந்த ‘தமிழ் சிங்கிள்ஸ்’ க்ளிக் ஆகும் என்று நினைக்கிறேன், இது தவறாக இருக்கலாம்.

’குறுநூல்கள்’பற்றி எழுதுமுன் இதைச் செய்துபார்த்துவிடலாமே என்று அபிராமி பட்டர்பற்றி முன்பு எழுதிய ஒரு நீண்ட கட்டுரையை(வாழ்க்கை, நான்கைந்து பாடல்கள் சாம்பிள், எளிய விளக்கம்)க் குறுநூலாக மாற்றிப் பார்த்தேன். அட்டைப்படம் செய்யதான் அதிக நேரமானது, மற்றபடி அரை மணி நேரத்துக்குள் புத்தகம் தயார். ஆர்வமுள்ளோர் வாசிக்கலாம், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்.

முக்கியமாக, நீங்கள் ஒரு ’குறுநூல்’ எழுதிப் பாருங்கள். காசு கொடுத்து வாசிக்கப்போகிறவரை, அந்தப் பொறுப்பை மனத்தில் வைத்து, ஆயிரம் சொற்களுக்குள் ஒரு தலைப்பை நேர்த்தியாகச் சொல்லும் விளையாட்டைப் பழகுங்கள். எழுதுகிறவர்களுக்கு அது ஒரு மிக நல்ல பயிற்சி.

https://play.google.com/store/books/details?id=-CBDBgAAQBAJ

http://books.google.co.in/books/about?id=-CBDBgAAQBAJ&redir_esc=y

***

என். சொக்கன் …

21 01 2015

ஒரு புது முயற்சியாக, இவ்வாண்டுமுழுக்க மாதம் 2 என 24 சிறுவர் நூல்களை மின்பதிப்பாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இவை அனைத்தும் பிரத்யேகமாக வரையப்பட்ட படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் ஆக, மாதம் 2 + 2 = 4 சிறுவர் கதை நூல்கள். மாதாமாதம் செய்ய இயலாவிட்டாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளியிட்டு டிசம்பருக்குள் 24 என்ற இலக்கை எட்டிவிட உத்தேசம், இறைவன் துணையிருப்பான்.

ஜனவரிக்கான இரு நூல்களின் கதை தயாராகிவிட்டது, ஓவியங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வெளியானதும் விவரம் தெரிவிக்கிறேன்.

இதை ஏன் செய்கிறேன்?

இணையத்தில் மின்புத்தகம் என்ற வடிவம் எனக்கு மிகவும் வசீகரமாக இருக்கிறது. ஆனால் தமிழில் இது எப்படி வேலை செய்யும் என்று தெரியவில்லை. ஒரு முயற்சியாக, இவ்வாண்டு சில மணி நேரங்களையும் சில ஆயிரம் ரூபாய்களையும் (ஓவியங்களுக்காக) இதில் முதலீடு செய்து பார்க்கவுள்ளேன்.

முக்கியமாக, மாதம் இரண்டு குழந்தைக் கதைகள் எழுத இதுவும் ஒரு சாக்கு. மகாமோசமான ஒப்பீடு என்றாலும், பெப்ஸி, கொக்கக்கோலாபோல் குழந்தைப் பருவத்திலேயே புத்தகங்களால் குழந்தைகளை வளைத்துப்போட்டு அடிமைகளாக்கிவிடவேண்டும் என்பது என் எண்ணம். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறமாட்டார்கள், நல்ல நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

லௌகிக விஷயங்கள்?

படங்கள் + கதையுடன் தலா 16 பக்கங்கள் (ஒன்றிரண்டு கூடலாம், குறையலாம்) கொண்ட இந்நூல்களுக்கு தலா ரூ 25 (அல்லது $0.5) என்று விலை வைக்க எண்ணம். கூகுள் இதனை அனுமதிக்கிறது, அமேஸானில் குறைந்தபட்ச விலை $1 என்று நினைவு. அங்கே இரண்டு நூல்களைச் சேர்த்து வெளியிடலாமா, அல்லது ’கையில் காசுள்ள அமேஸானியர்களே, நீங்கள் இருமடங்கு விலைதரக் கடவீர்கள்’ என்று மல்ட்டிப்ளெக்ஸ் பாப்கார்ன்போல விலை வைத்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். (குறிப்பு: அமேஸானில் தமிழ் நூல்கள் வாரா, ஆங்கிலம்மட்டுமே)

அப்புறம் இந்தப் புத்தகங்கள் அச்சில் கிடைக்காது. இப்போதைக்கு மின்வடிவம்மட்டுமே. யாராவது பதிப்பாளர் ஆர்வம் காட்டினால் பார்க்கலாம்.

தமிழ்க் குழந்தைகள் நலன் கருதி இதை நான் ஏன் இலவசமாக இணையத்தில் வெளியிடக்கூடாது?

இதில் காசு பண்ணும் நோக்கம் எனக்கு இல்லை. ஒருவேளை இந்நூல்கள் (தலா) மில்லியன் பிரதி விற்றால் இவ்வெண்ணத்தை மாற்றிக்கொள்வேன்.

On a serious note, இலவசமாக எழுத நான் தயார். இலவசமாக வரைய (ஒவ்வொரு நூலுக்கும் சுமார் 12 கோட்டோவியங்கள் தேவைப்படும்) ஓவியர்கள் கிடைத்தால் கண்டிப்பாகச் செய்யலாம். யாருக்கேனும் ஆர்வமிருந்தால் சொல்லுங்கள்.

உங்கள் குழந்தைகளிடம் சொல்லிவையுங்கள், முதல் புத்தகத்தில் சந்திப்போம்!

***

என். சொக்கன் …
16 01 2015

rajaebuk

தமிழ்த் திரை இசையை அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள், தொண்ணூறுகள், இரண்டாயிரம்கள், இரண்டாயிரத்துப்பத்துகள் என்று decadeவாரியாகப் பிரித்துப் பேசுகிற மரபு இருக்கிறது. ஒவ்வொரு Decadeக்கும் தனித்தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர்கள் முந்தைய decadeஐச் சற்றே அலட்சியமாகப் பார்ப்பதும் (நாங்க அங்கிருந்து வளர்ந்துட்டோம்ல!), அடுத்த decadeஐ மிக அலட்சியமாகப் பார்ப்பதும் (அங்கே தரம் குறைஞ்சுபோச்சுல்ல!) உப மரபு.

அவ்வகையில், நான் எண்பதுகளின் ரசிகன். குறிப்பாகச் சொல்வதென்றால், எண்பதுகளின் இளையராஜாவுக்கு ரசிகன்.

எண்பதுகளுக்கு முன்பும் பின்பும் ராஜாவும் பிறரும் நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார் என்றாலும், ஏனோ இவை எனக்கு மிக உவப்பானவை. என் ஃபோனில் இவற்றையே மிகுதியாக நிரப்பி வைத்துத் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்கிறேன். மற்ற பாடல்கள் அவ்வப்போது கேட்பதுண்டு. ஆனால் ஒரு சில நிமிடங்களுக்குப்பின் சலித்துப்போய், மனம் மீண்டும் இவற்றையே நாடும், ‘வீட்டு ரசம்’, ‘அம்மா கையால் சோறு’, ‘புருஷன் கையால் ஒரு மொழம் மல்லிகப்பூ’ போன்ற க்ளிஷேக்களை இங்கே நிரப்பிக்கொள்ளவும்.

அவ்விதத்தில், எண்பதுகளின் தமிழ்த் திரையிசைபற்றி நான் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை Freetamilebooks.com இணையத் தளத்தினர் தொகுத்து மின்னூலாகக் கொண்டுவந்துள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி.

அதேபோல், இதன் அட்டைப்படத்தை வரைந்தவர் நண்பர் திரு. பரணி. அதனை வடிவமைத்தவர் திரு. ஜெகதீஸ்வரன் நடராஜன். இவ்விருவருக்கும் என் நன்றி.

இந்நூல் முற்றிலும் இலவசம், வணிக நோக்கின்றி யாரும் எவ்வண்ணமும் பயன்படுத்தலாம். இதனை வாசிப்போர் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம், தடை ஏதும் இல்லை. வாசித்து உங்கள் கருத்துகளை nchokkan@gmail.comக்கு எழுதினால் மகிழ்வேன். நன்றி!

நூலைப் பல PDF, ePub, Mobi போன்ற வடிவங்களில் Download செய்ய இங்கே செல்லவும்: http://freetamilebooks.com/ebooks/rajavum-pirarum/

***

என். சொக்கன் …

02 04 2014

எங்களது ‘முன்னேர் பதிப்பக’த்தின் ’நாலு வரி நோட்டு’ நூல்கள் மூன்று தொகுதிகளும் இப்போது அச்சாகி வெளியாகிவிட்டன 🙂

சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த நூல்களை இந்த ஸ்டால்களில் வாங்கலாம்: டிஸ்கவரி புக் பேலஸ் (ஸ்டால் எண்: 307, 308, 353, 354), க்ரியேட்டிவ் புக்ஸ் (ஸ்டால் எண்: 386)

4variwrappers

ஆன்லைனில் இந்நூல்களை வாங்க: http://600024.com/store/4-vari-note/

இவைதவிர, இந்நூல்களில் ஒன்றை இலவசமாகப் பெறவும் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதுபற்றிய விவரங்கள் இங்கே: https://munnerpathippagam.wordpress.com/2014/01/13/4vncntst/

உங்கள் ஆதரவுக்கு நன்றி!

இன்று தொடங்கியுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது பெரும்பாலான புத்தகங்கள் அடுத்தடுத்துள்ள இரு ஸ்டால்களில் கிடைக்கும்: 587, 588 (மதி நிலையம்) & 589, 590 (கிழக்கு பதிப்பகம்).

மற்ற நூல்கள் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம், கல்கி பதிப்பகம், கலைஞன் பதிப்பகம், வானதி பதிப்பகத்தில் கிடைக்கும்.

ஸ்டால்களின் முழு விவரம் இங்கே:

கிழக்கு பதிப்பகம்: 589, 590, 593, 594, 639, 640, 643, 644
மதி நிலையம்: 587, 588
சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்: 693, 694, 731, 732
கல்கி பதிப்பகம்: 532
கலைஞன் பதிப்பகம்: 699, 700
வானதி பதிப்பகம்: 517, 518

நூல்களை வாங்குவோருக்கு (அவை யார் எழுதியவையாக இருப்பினும்) என் நன்றிகளும் வணக்கங்களும்.

பள்ளியில் தமிழ் படித்த எல்லாருக்கும் ‘மனப்பாடப் பகுதி’ என்ற சொற்றொடர் மறந்திருக்காது.

பொதுவாக தமிழ்(பாட)ப் புத்தகங்களில் நிறைய கவிதைகள் இருக்கும். கடவுள் வாழ்த்து, சங்கத் தமிழ், திருக்குறள், கம்பன் அல்லது சிலம்பு, சீறாப் புராணம், புதுக் கவிதைகள் பத்துப் பதினைந்து என்று கலந்துகட்டித் தருவார்கள். அவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம்மட்டும் “மனப்பாடப் பகுதி” என்று குறிக்கப்பட்டிருக்கும். அவற்றைப் படித்து நினைவில் வைத்திருந்து நிறுத்தற்குறிகள்கூட மாறாமல் தேர்வில் எழுதினால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

எனக்குப் பொதுவாகவே தமிழ்ப் பாடத்தில் ஆர்வம் அதிகம் என்பதால், மனப்பாடப் பாடல்களை ஆசையோடு படித்துவிடுவேன். ஆனால் இது ஒரு பெருஞ்சிரமம் என்று அலுத்துக்கொண்ட பல நண்பர்களை அறிவேன்.

அதே நண்பர்களுக்குச் சினிமாப் பாடல்களை மனப்பாடம் செய்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. இந்த முரணை எங்கள் தமிழாசிரியர் ஒருவர் (எவ்வளவோ யோசித்தும் அவர் பெயர் ஞாபகம் வரவில்லை!) வேடிக்கையாகச் சுட்டிக்காட்டினார். ’எல்லாம் இங்கேர்ந்துதாண்டா வருது, அதைமட்டும் சர்வ சாதாரணமா மனப்பாடம் செய்யறீங்க, இது ஏன் முடியலை?’

’எல்லாம் இங்கேர்ந்துதான் வருதா? என்னய்யா சொல்றீங்க?’

அவர் கோபப்படாமல் விளக்குவார். ‘தமிழ்க் கவிதைங்கறது ஒரு நீண்ட கலாசாரம். ஒவ்வொரு நேரத்திலயும் ஒவ்வொருவிதமான கவிதைகள், குறுந்தொகையைப் படிச்சா அந்தத் தமிழ் வேற, கம்பனைப் படிச்சா அந்தத் தமிழ் வேற, ஞானக்கூத்தனைப் படிச்சா அந்தத் தமிழ் வேறன்னு தோணும், ஆனா எல்லாம் அடிப்படையில ஒண்ணுதான், சினிமாப் பாட்டும்கூட!’

‘உங்களுக்கு வேடிக்கையா இருந்தாலும், இது ஒரு கலாசாரத் தொடர்ச்சிதான்’ என்பார் அவர். ‘அப்பரும் சம்பந்தரும் ஆழ்வாரும் பாடின சாயல்தான் சினிமால வர்ற பக்திப் பாட்டுல இருக்கு, காளமேகத்தோட குறும்பும் வார்த்தை விளையாட்டும் இருக்கு, கம்பனோட வர்ணனை இருக்கு, திருக்குறளோட கருத்துகள், அறிவுரைகள் இருக்கு, புதுக் கவிதையோட உணர்வுகள் இருக்கு… ரெண்டும் வெவ்வேற இல்லை. கவிதைங்கற அடிப்படை ஒண்ணுதான்!’

அவர் சொன்னது அப்போது புரியவில்லை. பின்னால் புரிந்தது, அவரது மகிமையும்.

‘முந்தானை காற்றில் ஆடி வா வா என்றது’ என்ற வரியைச் சொல்லி அவர், ‘தானை’ என்ற சொல்லின் பொருளை விளக்குவார், ‘இது தற்குறிப்பேற்ற அணி’ என்பார். ‘இடை மெலிந்தாள் இந்தப் பாவை’ என்ற வரியைச் சொல்லி ‘இடைக்குறை’யைச் சொல்லித்தருவார்.

அவர் எம்மெஸ்வி பிரியராக இருந்ததால், எங்களுடைய “தற்கால” சினிமா உதாரணங்களை அவர் காண்பிக்கவில்லை. நாங்கள் அவரைப் பின்பற்றிப் “படிக்க” ஆரம்பித்தோம்.

அதன்பிறகு, எனக்குச் சினிமாப் பாட்டு சாதாரணமாகத் தோன்றியதே இல்லை. சும்மா மெட்டுக்கு எழுதப்பட்ட உப்புமா வரிகளில்கூட, எதுகை, மோனை நயத்தை, அது காதில் விழும்போது இனிமையாக இருக்கவேண்டும் என்ற அக்கறையோடு கோக்கப்பட்ட சொற்களை ரசிக்கமுடிந்தது. இலக்கிய நயத்தோடு வரிகள் வரும்போது ‘இது ஒரு மரபின் தொடர்ச்சிதான்’ என்று வாத்தியார் காதில் சொல்கிறாற்போலிருந்தது.

இந்த விஷயங்களை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்துகொண்டபோது, நண்பர்கள் வெகுவாக ரசித்தார்கள். அதுகுறித்து ஏற்பட்ட விவாதங்களும் மிகுந்த மகிழ்வளித்தன.

அப்போதுதான் ஒரு யோசனை வந்தது. சினிமாப் பாடல்களில் சில வரிகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நயத்தையோ, அந்தச் சொற்களின் அடிப்படையில் சில சுவாரஸ்யமான இலக்கிய, இலக்கண, மற்ற விஷயங்களையோ எழுதினால் என்ன?

இந்த முயற்சியில் நண்பர் ஜிரா கை கோத்தார். பின்னர் நண்பர் மோகனகிருஷ்ணனும் இணைந்துகொண்டார். ’நாலு வரி நோட்டு’ என்ற தலைப்பில் ஒரு வருடம் பாடலாசிரியர்களைக் கொண்டாடினோம். மற்ற பல கலை வடிவங்களைப்போலவே இதுவும் மதிக்கப்படவேண்டிய ஒன்று எனச் சொல்ல முயன்றோம்.

பொதுவாகவே, பாடலாசிரியர்களுக்கு நம் சமூகத்தில் மரியாதை ஒரு மாற்றுக் குறைவுதான். கண்ணதாசனும் வைரமுத்துவும் பெரிதாக மதிக்கப்பட்டபோதும், ‘இந்தப் பாட்டை எழுதியவர் யார்?’ என்ற கேள்வியைத் தமிழர்கள் அவ்வளவாகக் கேட்பதும் இல்லை, அதற்கான பதில் குறித்து அலட்டிக்கொள்வதும் இல்லை.

இணையத்திலோ, அச்சு ஊடகங்களிலோ பல பாடல்கள் சிலாகிக்கப்படும், இசையமைப்பாளர், பாடகரைப் புகழ்வார்கள், அதில் வாயசைத்த நடிகர்கூட கொண்டாடப்படுவார். ஆனால் எழுதியவர் பெயர் குறிப்பிடப்படாது. நாம் வலியச் சென்று சொன்னாலும், ‘ஆமா, அதுக்கு என்ன?’ என்பார்கள்.

மொழி இன்றி இசை இருக்கலாம், இசை இன்றி மொழி இருக்கலாம், ஆனால் இவை இரண்டும் இணைந்து ஒரு கொண்டாட்டமாகும்போது அதில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் சம மரியாதை தரப்படவேண்டுமல்லவா? அந்தவிதத்தில் நம்முடைய சமூகம் பாடலாசிரியர்களுக்குப் பெரும் துரோகம் செய்துவருகிறது, இன்றும்.

அந்த எண்ணத்தைக் கொஞ்சமேனும் மாற்றும் முயற்சிதான் ‘நாலு வரி நோட்’. அடுத்தமுறை ஒரு நல்ல பாட்டைக் கேட்கும்போது, வரிகளைக் கொஞ்சம் கவனிக்கத் தோன்றினால், ‘இதை எழுதியது யாராக இருக்கும்?’ என்கிற கேள்வியாவது உங்கள் மனத்தில் எழுந்தால் சந்தோஷம்.

’நாலு வரி நோட்’ வலைப் பதிவுக்கு நல்ல ஆதரவு அளித்த நண்பர்களுக்கு நன்றி. சக எழுத்தாளர்களான ‘சிறப்பு வாசகர்’களுக்கும் நன்றி.

இந்த வலைப்பதிவில் வெளியான சிறந்த 200 கட்டுரைகள் இப்போது மூன்று தொகுப்பு நூல்களாக வெளியாகின்றன. எழுதிய மூவருமே இணைந்து இதனை வெளியிடுகிறோம். எங்கள் முதல் பதிப்பு முயற்சிக்கு உங்கள் ஆதரவைக் கோருகிறோம்.

4variwrappers

இந்தத் தொகுப்புகள் ஒவ்வொன்றும் பெரிய அளவில் (சுமார்) 160 பக்கங்கள் கொண்டவை. விலை ரூ 125/-. மூன்று தொகுப்புகளும் சேர்ந்து ரூ 375/-

இந்த நூல்களை மொத்தமாக வாங்குவோருக்கு மூன்று தொகுதிகளும் ரூ 325/-க்குக் கிடைக்கும். அதற்கான இணையத் தள முகவரி: http://600024.com/store/4-vari-note/naalu-vari-note

நூல்களைத் தனித்தனியே ஆர்டர் செய்ய விரும்பினால், இந்த இணைப்புகளைப் பயன்படுத்தலாம்:

தொகுதி 1 : என். சொக்கன் : http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-1

தொகுதி 2 : ஜிரா : http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-2

தொகுதி 3 : மோகனகிருஷ்ணன் : http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-3

உங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்நூல்கள்குறித்து தமிழ் / கவிதை / திரைப்பாடல் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

***

என். சொக்கன் …

12 12 2013

‘தினம் ஒரு பா’ என்ற வலைப்பதிவில் நான் எழுதிய கட்டுரைகள் இப்போது அதே பெயரில் நூலாக வெளியாகியுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 365 பாடல்கள் + எளிய உரை கொண்ட இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருப்போர் வானதி பதிப்பகம், 604 பக்கங்கள், விலை ரூ 300. ஆன்லைனில் வாங்குவதற்கு இரு இணைப்புகள்: http://goo.gl/Nyui66 அல்லது https://www.nhm.in/shop/100-00-0002-183-7.html.

365PaaWrapper

இந்நூலுக்கு ஓர் அறிமுகமாக, நான் எழுதிய முன்னுரை இங்கே:

முன்னுரை

விளையாட்டாக ஆரம்பித்த விஷயம் இது.

கல்லூரி நாள்களில் நானொரு பாக்கெட் நாவல் பிரியனாக இருந்தேன். குறிப்பாக மர்மக் கதைகள் என்றால் அத்துணை இஷ்டம்!

கோயம்பத்தூரில் தெருவுக்கு நாலு பழைய புத்தகக் கடைகள் உண்டு. அவற்றில் இந்த மர்ம நாவல்கள் காசுக்கு எட்டு விகிதத்தில் மிக மலிவாகக் கிடைக்கும்.

அப்படி ஒரு கடையில், நான் இதுவரை வாசித்திராத அதிநவீன கொலைக்கதைகளைத் தேடிக்கொண்டிருந்த நேரம், மிகப் பழைய புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது.

அந்தப் புத்தகத்துக்கு அட்டைகூட இல்லை, முதல் பக்கமும் பாதி கிழிந்திருந்தது. உள்ளே புரட்டியபோது, ‘குறுந்தொகை : புலியூர் கேசிகன் உரை’ என்று தெரிந்துகொண்டேன்.

ஏனோ, அந்தப் புத்தகத்தைப் பார்த்தவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. காரணம் தெரியவில்லை.

அதற்குமுன் நான் சங்க இலக்கிய நூல்கள் எவற்றையும் வாசித்தது கிடையாது, பள்ளியில் தமிழ்ப் பாடத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் எதேச்சையாகக் கண்ணில் பட்டிருந்தால்தான் உண்டு, மற்றபடி அதில் ஆர்வமோ, ஞானமோ கிடையாது.

ஆனால், அந்தக் கிழிந்த புத்தகம் என்னை மிகவும் ஈர்த்தது. ஒருவேளை, நான் அதைப் புரட்டியபோது கண்ணில் பட்ட பாடல்கள் அனைத்தும் சிறியதாக நான்கைந்து வரிகளுக்குள் நிறைவடைந்துவிடுபவையாக இருந்ததால் ‘எப்படியாவது படிச்சுடலாம்’ என்று நினைத்தேனோ என்னவோ!

கடைக்காரரிடம் கேட்டேன், ‘இது என்ன விலைங்க?’

பழைய புத்தகக் கடையில் எஞ்சினியரிங் புத்தகங்களுக்கும் மாத நாவல்களுக்கும்தான் மரியாதை, அங்கே பழந்தமிழ் இலக்கியத்தை யார் சீண்டுவார்கள்? அலட்சியமாக, ‘பத்து ரூவா குடு!’ என்றார் அவர்.

அந்தப் ‘பத்து ரூவா’ புத்தகம் இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. என்னளவில் நான் செய்த மிகச் சிறந்த ‘செலவு’ (அல்லது ‘வரவு’) அதுதான்.

அன்றைக்கு மிக எதேச்சையாகப் படிக்க ஆரம்பித்த அந்தப் புத்தகத்தில், பலாப்பழத்தின் இனிமையையெல்லாம் பிழிந்து ஒரே ஒரு சொட்டில் இறக்கிய தேன்போன்ற குறுந்தொகையின் செறிவில், அதைப் புலியூர் கேசிகன் அருமையாகவும், எளிமையாகவும் விளக்கிய பாங்கில் என்னை மறந்துவிட்டேன், மற்ற சங்க இலக்கியங்களையும், பிற பழந்தமிழ்ப் பாடல்களையும் தேடிப் படிக்க அதுவே தூண்டுதலாக அமைந்தது.

இந்த வாசிப்பில் நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம், தமிழ் என்றைக்கும் இளமையானதுதான், சரியானபடி பதம் பிரித்து, நாம் இழந்துவிட்ட சொற்களையெல்லாம் மீட்டுக் கொண்டுவந்து வாசித்தால் போதும், இன்றைக்கும் அதன் இனிமையில் நாம் சொக்குவது உறுதி!

இணையத்தில் நான் சில பழந்தமிழ்ப் பாடல்களைச் சொல்லி, அவற்றுக்கு எளிய (இன்றைய) தமிழில் விளக்கம் சொன்னபோது, ‘அட! நல்லாருக்கே!’ என்று பலர் வியந்தார்கள், ‘இதுமாதிரி இன்னும் எழுதுங்க!’ என்றார்கள்.

‘நான் எதுக்குங்க எழுதணும்? அதான் ஏற்கெனவே பல பேர் ஏராளமா எழுதியிருக்காங்களே, அதை வாங்கிப் படிக்கலாமே!’

ம்ஹூம், இவர்கள் குறுந்தொகையோ புறநானூறோ கம்பனோ தேவாரமோ திவ்யப் பிரபந்தமோ நாலடியாரோ வாங்கமாட்டார்கள், ஒருவேளை வாங்கினாலும், படிக்கமாட்டார்கள். பிடிவாதம் அல்ல, பிரமிப்புதான் காரணம்!

‘இவ்வளவு இருக்கே’ என்கிற அந்த வியப்பை, ‘இவ்ளோதான்’ என்கிற அளவுக்குக் குறைக்கவேண்டுமென்றால், ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டுப் பதம் காட்டவேண்டும், அதனால் ஈர்க்கப்பட்டவர்களில் சிலராவது அந்த நூல்களைத் தேடிச் சென்று வாசிப்பார்கள் என்பது என் நம்பிக்கை.

அதற்காக, பல பழந்தமிழ் நூல்களில் இருந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து, தினம் ஒன்றாக அறிமுகப்படுத்தத் தொடங்கினேன். ‘தினம் ஒரு பா’ என்ற அந்த இணைய தளத்தில் (http://365paa.wordpress.com/) வெளியான பாடல்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

இதில் பக்தி இலக்கியம் உண்டு, காதல் உண்டு, பிரிவு உண்டு, அறிவுரை உண்டு, தத்துவம் உண்டு, இலக்கணம் உண்டு, வேடிக்கை உண்டு, புதிர் உண்டு… எல்லாமே சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டவை, ஆனால் அவை தருகிற உணர்ச்சிகள் அனைத்தும் இன்றைக்கும் பொருந்துகிறவை என்பதை நினைத்து நாம் வியக்கலாம், பெருமைப்படலாம்.

தனிப்பட்டமுறையிலும், இந்தத் ‘தினம் ஒரு பா’ எனக்குத் தந்த கொடைகள் அளவிடமுடியாதவை.

நான் பண்டிதன் அல்லன். ஒரு பழம்பாடலைப் பார்த்தவுடன் அதன் பொருள் புரிந்துவிடாது. தலையைச் சொறிந்துகொண்டு அகராதியைத் தேடி ஓடுகிறவன்தான்.

அதேசமயம், தினம் ஒரு பாடலுக்கு விளக்கம் எழுதுவது என்று தொடங்கியபிறகு, சொற்களைப் பிரிப்பது, புரிந்துகொள்வது, புழக்கத்தில் இல்லாத, ஆனால் எளிய சொற்களை அடையாளம் காண்பது, இப்போது நாம் சகஜமாகப் பயன்படுத்தும் சொற்களோடு அவற்றை ஒப்பிட்டு மகிழ்வது என்று இதுவே ஒரு மிகச் சுவாரஸ்யமான விளையாட்டாகிவிட்டது.

முக்கியமாக, கவி நயம். அதுவரை நான் மேலோட்டமாகமட்டுமே வாசித்திருந்த பல நூல்களை ஆழச் சென்று முழுக்க வாசிக்கும் ஆர்வத்தைப் பெற்றேன், அவற்றின் மேன்மை புரியத் தொடங்கியது.

இந்தப் பலனெல்லாம், இந்நூலை வாசிக்கும் உங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்கிற அக்கறையுடன் இதனைத் தொகுத்திருக்கிறேன். இறைவன் அருள் துணை நிற்கட்டும்.

***

என். சொக்கன் …

28 10 2013

‘பாசமலர்’ என்ற பெற்றோர் / குழந்தைகளுக்கான மாத இதழ், கோவையிலிருந்து வெளியாகிறது.

இந்தப் ‘பாசமலர்’ இதழில், இந்த மாதம் தொடங்கி, ‘வள்ளுவர் இல்லம்’ என்ற சிறுவர் தொடர் ஒன்றை எழுதுகிறேன். மாதம் ஒரு திருக்குறளை எடுத்துக்கொண்டு அதனைச் சிறிய கதை வடிவில் விவரிப்பதே இத்தொடரின் நோக்கம்.

உதாரணமாக, முதல் அத்தியாயத்தில் ‘கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம், அஃது இன்றேல் / புண் என்று உணரப் படும்!’ என்ற திருக்குறளின் விளக்கமாக ‘கண்ணுக்கு அலங்காரம்’ என்ற கதையை எழுதியுள்ளேன். வாய்ப்பிருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.

‘பாசமலர்’ இதழ் கோவை பகுதியில் பல கடைகளில் கிடைக்கும். மற்ற ஊர்களில் வாங்க விரும்புவோர் தபால்மூலம் பெறுவது வசதி. தனி இதழ் ரூ 10, ஆண்டு சந்தா ரூ 100 மட்டுமே. அதற்கு நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்: (0)9894772026. ஈமெயில் முகவரி paasamalarcbe@gmail.com

***

என். சொக்கன் …

12 08 2013

என்னுடைய ‘வண்ண வண்ணப் பூக்கள்’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியாகியுள்ளது.

vvp

கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் நான் எழுதிய கட்டுரைகள், மற்றும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றின் தொகுப்பு இது. சொல், கவிநயம், இசையும் கவியும், இலக்கணம் என்ற நான்கு தலைப்புகளில் இவை தொகுக்கப்பட்டுள்ளன.

பொது இழை ஏதுமின்றி பலதரப்பட்ட அம்சங்களைக் கலந்து கட்டியிருப்பதால்தான் ‘வண்ண வண்ணப் பூக்கள்’ என்ற பெயரைத் தேர்வு செய்தோம். ஆனால், ஒவ்வொரு பக்கத்திலும் ரசிக்கக்கூடிய அம்சங்கள் ஏதேனும் இருக்கும் என்று நம்புகிறேன். வாய்ப்பிருந்தால் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நன்றி!

(வண்ண வண்ணப் பூக்கள் : மதி நிலையம் வெளியீடு : விலை ரூ 110 : தொலைபேசி எண் 04428111506 : மின்னஞ்சல் முகவரி mathinilayambooks@gmail.com)

***

என். சொக்கன் …

02 08 2013

அயோத்தியின் அழகைச் சொல்லிக்கொண்டு வரும் கம்பன், அவ்வூரில் என்னவெல்லாம் பொழிகிறது என்று ஒரு பாடலில் பட்டியல் போடுவான், அதன் முத்தாய்ப்பு வரி, ’காதைகள் சொரிவன, செவிநுகர் கனிகள்’.

அதாவது, அயோத்தியில் நாள்முழுக்கச் சொல்லப்படும் கதைகளிலெல்லாம், கனி போன்ற சுவையுள்ள விஷயங்கள் பொழியுமாம், அவற்றை மக்களின் செவிகள் ஆசையுடன் நுகர்ந்துகொள்ளுமாம்.

பொதுவாக ‘சுவை’ப்பது நாக்கின் வேலை, ஆனால் கம்பன் ‘காதுகளும் இனிய விஷயங்களைச் சுவைக்கும்’ என்கிறான், இந்த வரியை அடிப்படையாக வைத்துதான் பாரதியார் ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாடியதாகச் சொல்வார்கள்.

பாரதிக்கு முன்பும் பின்பும், ‘செவிநுகர் கனிகள்’ என்ற பயன்பாடு மிகவும் பிரபலம். பேராசிரியர் இஸ்மாயில் அவர்கள் எழுதிய ஒரு நூலுக்கே அந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார்.

தற்போது, ’செவிநுகர் கம்பன்’ என்ற பெயரில் என்னுடைய ஆடியோ சிடி ஒன்று வெளிவந்துள்ளது. இணையத்தில் நான் வழங்கிவந்த ‘கம்பன் பாட்காஸ்ட்’ தொடரின் முதல் ஐம்பது பகுதிகளுடைய தொகுப்பு இது.

Kamban CD v3

இந்த ஒலிக் கட்டுரைகள் அனைத்தும், தொழில்முறையில் பதிவு செய்யப்பட்டவை அல்ல. என்னுடைய மடிக்கணினி மற்றும் தொடுகணினியில் ஒலிப்பதிவு செய்து, பெருமளவு இரைச்சல்களோடும் வலையேற்றப்பட்டவை. ஒருமுறை பார்க்கில் நடந்தபடி ஃபோனில்கூடப் பதிவு செய்திருக்கிறேன். அதில் குருவி, காக்காய், தூரத்தில் ஓடும் ஆட்டோச் சத்தம்கூடக் கேட்கும்!

இத்தனை குறைகள் இருந்தபோதும், இணையத்தில் தொடர்ந்து வெளியான இந்தப் பதிவுகளை நண்பர்கள் விரும்பிக் கேட்டு ரசித்தார்கள். ’எல்லாருக்கும் புரிகிற பேச்சுத் தமிழில் கம்பனைப்பற்றிச் சொல்வது பிடித்திருக்கிறது’ என்றார்கள். அவர்களுடைய வார்த்தைகள்தாம் இதனை ஒலித்தகடாக வெளியிடும் தைரியத்தை அளித்தது.

சிடி வெளியிடுவது என்று திட்டமிட்டவுடனே, நண்பர் சுகுமார் ஓர் அருமையான அட்டை வடிவமைப்பை உடனடியாகச் செய்து கொடுத்தார். அவருக்கு என் நன்றி!

ரூ 75 விலையுள்ள இந்த சிடியில் ஐம்பது ஒலிப்பதிவுகள் MP3 வடிவில் உள்ளன. இவற்றில் நூறுக்கும் மேற்பட்ட கம்பன் பாடல்களை விளக்கம், பொருத்தமான கூடுதல் விவரங்கள், உதாரணங்களுடன் பேசியுள்ளேன். இது மொத்தம் 8 மணி நேரம் 17 நிமிடங்கள் ஒலிக்கும்.

எட்டு மணி நேரத்தில் ராமாயணக் கதையை மொத்தமாக நான்கு முறை சொல்லி முடித்துவிடலாம். ஆனால் அது இந்த ஒலித் தகட்டின் நோக்கம் அல்ல. ராமன் பிறந்ததிலிருந்து ராவணனை ஜெயிக்கும்வரை வரிசையாகச் செல்லாமல், எனக்குப் பிடித்த பாடல்களை ஆங்காங்கே எடுத்துப் பேசியிருக்கிறேன், ஆகவே, இதில் கதைத் தொடர்ச்சி இருக்காது, இங்கே ஒரு பாடல், அங்கே ஒரு பாடல் என்று முன்னும், பின்னும் தாவிச் செல்லும், பாடல்களின் அழகு, அவற்றுக்கான எளிய விளக்கங்கள், ரசனை ஆகியவற்றுக்கே முக்கியத்துவம்.

ஏற்கெனவே இணையத்தில் உள்ள ஒலிக் கோப்புகளைத் தனியே சிடியாக வெளியிடவேண்டிய அவசியம் என்ன?

இணையத்தில் உள்ளவர்களுக்கு இது அவசியமில்லைதான். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் kambanfm.wordpress.com இணைய தளத்தில் இந்தக் கோப்புகளைக் கேட்கலாம், டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

ஆனால், நான் பார்த்தவரையில் கம்பனை விரும்பி ரசிக்கிற பலர் சீனியர் சிட்டிசன்ஸ், இணையப் பரிச்சயம் இல்லாதவர்களாக உள்ளார்கள். அவர்களுக்கு இந்த சிடி பயன்படும் என்று நினைக்கிறேன்.

உங்கள் வீட்டில், தெரிந்தவர்கள் வட்டாரத்தில் அப்படி யாரேனும் இருந்தால், இந்த சிடியை அறிமுகப்படுத்துங்கள். நன்றி!

பின்குறிப்பு:

  • வணிக நோக்கமின்றி தனிச்சுற்றுக்குமட்டும் வெளியிடப்பட்டுள்ள சிடி என்பதால், இது கடைகளிலோ Flipkart போன்ற ஆன்லைன் வர்த்தகத் தளங்களிலோ விற்பனைக்குக் கிடைக்காது. சிடி வாங்க விரும்புவோர் nchokkan@gmail.comக்கு எழுதலாம், அல்லது (0)8050949676க்குப் பேசலாம்.
  • சிடி வாங்கிக் கேட்டவர்கள் சிலருடைய விமர்சனங்கள்: https://nchokkan.wordpress.com/reviews/snkrvews/

***

என். சொக்கன் …

03 06 2013

சென்ற வாரக் ‘கல்கி’யில் வெளியான என்னுடைய ’பக்கத்து பெஞ்ச்’ சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம் இது.

’பூங்கா நகரம்’ என்று பெயர் பெற்ற பெங்களூருவின் சிறிய, நடுத்தர, பெரிய பூங்காக்களில் பல சுவாரஸ்யமான காட்சிகள் உண்டு. அவற்றுள் அதிசுவாரஸ்யமானது என்று பார்த்தால், அதிகாலை, நடுப்பகல், மாலை, இரவு என்று பொழுது வித்தியாசமின்றித் திரும்பிய பக்கமெல்லாம் நிறைந்து கிடக்கும் காதலர் கூட்டம்தான்.

சென்னை மெரீனா கடற்கரையிலும் இப்படிதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அதுகுறித்துப் பல கதைகள், சினிமா காட்சிப் பதிவுகள் உண்டு. பெங்களூருவுக்கு அந்த யோகம் இல்லை.

அந்த அவப்பெயரைத் துடைப்பதற்காக, பெங்களூரு பார்க் பெஞ்ச்களில் நீக்கமற உறைந்திருக்கும் ஜோடிகளைப்பற்றி எழுதவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. அதேசமயம் ரொம்ப ஆபாசமாகவோ, நாடகத்தனமாகவோ, குற்றம் சாட்டி நியாயம் கேட்கும் தொனியிலோ அமைந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். ஆகவே, இந்தக் கதை, அல்லது, கதை அல்லாத ஒரு கதை.

அதாவது, இங்கே இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு. அவர்களுக்குள் ஒரு குழப்பம், ஓரளவு தெளிவு, இருவருமே சராசரி மனிதர்கள்தான் என்பதால், க்ளைமாக்ஸ், தீர்வு என்றெல்லாம் எதுவும் இல்லாமல் இயல்பாக விட்டிருக்கிறேன். சற்றே நாடகத்தனமான வசனங்களும் காரணமாகத் திணிக்கப்பட்டவைதான். காரணம், அந்தக் காதலர்கள் அந்த இடத்தில் இயல்பாக என்ன பேசிக்கொண்டிருப்பார்கள் என்பது எனக்கோ உங்களுக்கோ தெரியாதே!

பக்கத்து பெஞ்ச்

’கிஸ்’ என்றாள் மீரா.

‘என்னது?’ சரவணன் திகைப்புடன் அவளைத் திரும்பிப் பார்த்தான். ‘இப்ப என்ன சொன்னே நீ?’

‘கிஸ்ன்னு சொன்னேன்’ என்றாள் அவள். ‘உடனே காய்ஞ்ச மாடு கம்மங்கொல்லையில பாய்ஞ்சமாதிரி உதட்டைக் குவிச்சுகிட்டு முன்னாடி வந்துடாதே’ என்று கண்ணடித்தாள், ‘நான் சொன்னது கட்டளை இல்லை, பெயர்ச் சொல்.’

‘எனக்கு ஒண்ணுமே புரியலை மீரா!’

‘நீதான் பத்தாங்கிளாஸோட தமிழ் இலக்கணத்தைச் சுத்தமா மறந்தாச்சுன்னு எனக்குத் தெரியுமே’ கேலியாக அழகு காட்டினாள். ‘கிஸ்ன்னு நான் சொன்னது, நம்ம பக்கத்து பெஞ்ச்ல நடக்கற கசமுசாவை.’

‘எங்கே?’ என்றபடி வேகமாகத் தலையைத் திருப்ப முயன்றவனை அவள் வலுக்கட்டாயமாகப் பிடித்து நிறுத்தினாள். ‘ஏண்டா மடையா, ஒனக்குச் சுத்தமா அறிவே கிடையாதா? இப்படித் திடீர்ன்னு திரும்பிப் பார்த்தா அவங்க நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்க?’

‘ம்க்கும், இத்தனை பெரிய பார்க்ல பப்ளிக்கா கிஸ்ஸடிக்கற அளவுக்குத் துணிச்சல் உள்ள பார்ட்டிங்க, நாம என்ன நினைக்கறோம்ங்கறதைப்பத்தியா கவலைப்படப்போறாங்க?’ என்றான் சரவணன். ஆனாலும் கொஞ்சம் நாசூக்காகவே திரும்பிப் பார்த்தான்.

இதற்குள் அந்த ஜோடி உஷாராகிப் பிரிந்திருந்தது. கருப்பு வெள்ளைப் படங்களில் வரும் காதலர்கள்போலக் கண்ணியமான தூரத்தில் தள்ளியே உட்கார்ந்திருந்தார்கள்.

சரவணன் ஏமாற்றத்துடன் மீராவை முறைத்தான், ‘என்னவோ கிஸ்ஸுன்னு பெருசாச் சொன்னே? இது வெறும் புஸ்ஸால்ல இருக்கு?’

‘அல்பம்’ கையில் இருந்த செய்தித்தாளைச் சுருட்டி அவன் தலையில் தட்டினாள் மீரா. ‘அடுத்தவங்க கிஸ்ஸடிக்கறதைப் பார்க்க அப்படி என்னடா ஆசை உனக்கு?’

‘இங்கேமட்டும் என்ன வாழுதாம்? மொதல்ல அதைப் பார்த்துச் சொன்னதே நீதானே?’

’சேச்சே, நான் என்ன அவங்க வீட்டுக்குள்ளயா போய் எட்டிப்பார்த்தேன்? எதேச்சையாக் கண்ணுல பட்டது, உன்கிட்ட சொன்னேன்! அவ்ளோதான்.’

சரவணன் மறுபடி அந்த பெஞ்சைக் கவனித்தான். அவர்கள் ஏதோ மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அடுத்த முத்தத்துக்கான ஆயத்தங்களைக் காணோம்.

அந்த இருவருடைய முகத்திலும் அப்பாவிக் களை சொட்டியது. இந்தப் பூனையும் காதல் பண்ணுமா என்கிற ரேஞ்சுக்கு உத்தமர்களாகத் தெரிந்தார்கள். ஆனால், இன்னும் பொழுதுகூட இருட்டாத வெளிச்சத்தில், சைக்கிள் கேப்பில் பகிரங்கமாகக் கிஸ்ஸடித்திருக்கிறார்கள். பலே பலே!

‘என்னடா அங்கயே வேடிக்கை பார்க்கறே?’

‘ஒண்ணுமில்லை’ என்றான் சரவணன். ‘கிளம்பலாமா?’

’ஓகே!’ அவள் பெஞ்சுக்குக் கீழே விட்டிருந்த செருப்பைத் தேடி எடுத்து அணிந்துகொண்டாள். பையைத் தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.

அவர்கள் அந்தப் பக்கத்து பெஞ்சைத் தாண்டும்போது, அந்தக் காதல் ஜோடி கொஞ்சம் கவனம் சிதறித் திரும்பினாற்போலிருந்தது. ஆனால் மறுவிநாடி, மீண்டும் பேச்சில் மும்முரமாகிவிட்டார்கள்.

நகரின் மையத்தில் இருக்கிற பார்க் இது. எங்கே பார்த்தாலும் அழகாகச் செதுக்கப்பட்ட புல்வெளிகள், அலங்காரப் புதர்கள், ஆங்காங்கே பூச் செடிகள், மையத்தில் வறண்டு கிடக்கும் செயற்கை நீரூற்று, அதற்குப் பக்கத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான ஏற்பாடுகள். சுற்றிலும் நடைபயிற்சி செய்கிறவர்களுக்காக வசதியான பாதைகள், அவற்றை ஒட்டினாற்போல் பல வண்ண சிமென்ட் பெஞ்ச்கள்.

பக்கத்தில் ஏழெட்டுக் கல்லூரிகள் இருப்பதாலோ என்னவோ, தினசரி மாலை நான்கு மணியானதும், இந்தப் பூங்காவில் ஏராளமான காதல் புறாக்கள் குவியத் தொடங்கிவிடுவது வழக்கம். அநேகமாக எல்லா பெஞ்ச்களிலும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். சில நாள்களில் உள்புற பெஞ்ச்கள் தீர்ந்துபோய், பல ஜோடிகள் வெளியே கம்பிக் காம்பவுண்ட் ஓரமாக நெருங்கி உட்கார்ந்திருப்பதும் உண்டு.

இவர்களில் பெரும்பாலானோர் நிஜமாகவே கண்ணியக் காதலர்கள்தான். அவளுடைய சுரிதார் நுனிகூட அவன்மீது பட்டுவிடாது. பேச்சு, பேச்சு, பேச்சுதான், சிரிப்புதான், கற்பனைகள்தான், திட்டமிடல்கள்தான்.

சிலர், தைரியமாக நெருங்கி அமர்வார்கள், தோள்மீது கை போடுவார்கள், ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும்விதமாகத் திரும்பி உட்கார்ந்து பேசியபடி கால்களால் முத்தமிட்டுக்கொள்வார்கள். ஒருவர் கையில் இன்னொருவர் கையைப் பொத்திக்கொண்டு ஆராய்வார்கள்.

இன்னும் சில ஜோடிகள், செல்ஃபோன் அல்லது கம்ப்யூட்டரில் மூழ்கியிருக்கும். ஒரே ஹெட்ஃபோனை ஆளுக்கு ஒரு காதாகப் பகிர்ந்துகொண்டு பாட்டுக் கேட்கும். அவ்வப்போது ஏதாவது சிரித்துப் பேசிக்கொள்ளும்.

பெரும்பாலான ஜோடிப் பறவைகளில், ஆண்கள் தங்கள் அடையாளத்தைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பத்துக்கு ஒரு பெண்மட்டும் துப்பட்டாவால் தலையைப் போர்த்தி, முகத்தையும் கணிசமாக மூடிக்கொண்டிருப்பாள். ஆனால் பேச்சுமட்டும் நிற்காது.

இவர்கள் இப்படித் தீவிரமாகக் காதல் பண்ணிக்கொண்டிருக்கும்போது, நகரின் சீனியர் சிட்டிசன்கள் பலர் அந்தப் பூங்காவைச் சுற்றி வருவார்கள். அரை டிரவுசர், டிராக் சூட் தொடங்கி முழு சஃபாரி சூட், சுரிதார், பட்டுப்புடைவை, கைத்தடி, ஸ்போர்ட்ஸ் ஷூ, ஸ்வெட்டர், சால்வை என்று விதவிதமான அலங்காரங்களில் இவர்கள் தொப்பையைக் குறைப்பதற்காகவோ சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதற்காகவோ மெதுநடையோ ஜாகிங்கோ வரும்போது, எல்லாருடைய கண்கள்மட்டும் தவறாமல் இந்த ஜோடிகள்மீதுதான் அலைபாயும்.

அந்த முதியவர்கள் எதிர்பார்ப்பதுதான் என்ன? காதல் ஜோடிகளாகப் பூங்காவில் சும்மா உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதே தவறு என்கிற குற்றச்சாட்டா? அல்லது, அதையும் மீறி ஏதாவது கலாசாரச் சீரழிவைக் தங்கள் கண்முன்னே காண நேர்ந்துவிடுமோ என்கிற பதற்றமா? அல்லது, அப்படி ஏதேனும் நிகழ்ந்துவிடாதா என்கிற ஏக்கமா? பெரிதாக ஒன்றும் நிகழவில்லையே என்கிற ஏமாற்றமா?

சரவணன், மீராவுக்கு இந்தப் ‘பெரிசு’களை வேடிக்கை பார்ப்பது ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொருவருடைய பார்வை போகிற விதத்தை வைத்து, அவர்களது எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என்று ஊகித்துச் சிரிப்பார்கள். ‘அந்தப் பெரியவர் மூஞ்சைப் பாரேன், ஃப்ரீ ஷோ எதுவும் கிடைக்கலையேங்கற வருத்தத்துல இஞ்சி தின்ன எதுவோமாதிரி நடக்கறாரு.’

பெரும்பாலான பூங்காப் பெரியவர்களுக்குத் தெரியாத விஷயம், இவர்களெல்லாம் வீட்டுக்குக் கிளம்பிச் சென்று டிவியில் நியூஸ் பார்க்க ஆரம்பித்தபிறகு, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் ராத்திரி ஏழு மணி தாண்டியபின்னர்தான் அங்குள்ள காதலர்களுக்குத் தைரியம் கூடும். இன்னும் நெருங்கி அமர்வார்கள், ஆங்காங்கே சில முத்தங்கள், அதையும் தாண்டிய குறும்புகள் அரங்கேறும்.

பொது இடத்தில் ஓரளவுக்குமேல் அத்துமீறமுடியாதுதான். ஆனாலும், நாளுக்கு நாள் இந்த ஜோடிகளின் சராசரி தைரிய அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதாக மீராவுக்குத் தோன்றும். சரவணனும் பெருமூச்சுடன் அதை ஆமோதிப்பான்.

பெருமூச்சுக்குக் காரணம், மீரா என்னதான் மற்ற காதலர்களை வேடிக்கை பார்த்தாலும், சரவணனைமட்டும் பக்கத்தில் நெருங்கவிடமாட்டாள். சாதாரணமாகக் கையைப் பிடித்துக்கொண்டு உட்காரலாம் என்றால்கூட, ‘அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்’ என்று தடை போட்டுவிடுவாள்.

‘மீரா, இது செவன்டீஸ் டயலாக், இப்போ சொல்றியே’ என்பான் சரவணன். ‘நீயே பாக்கறேல்ல? இப்பல்லாம் லவ்வர்ஸ் எவ்ளோ அட்வான்ஸ்டா இருக்காங்க!’

’அட முட்டாளே, அவங்களைப் பார்த்து நாம தினமும் சிரிக்கறோம், இந்த ஊரே சிரிக்குது. அப்படி மத்தவங்களுக்குக் கேலிப்பொருளா ஆகறதுக்காகவா நாம காதலிக்கறோம்?’

மீரா இப்படி நூற்றுக்கிழவிபோல் பேசுவது சரவணனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இன்னொருபக்கம், அவளுடைய ஒழுக்கத் தீவிரத்தை அவன் ரசிக்கவும் செய்தான்.

அவர்கள் மெதுவாக நடந்து பார்க் வாசலை நெருங்கும்போது, ‘ஏய், சரவணன்!’ என்றாள் மீரா. ‘கொஞ்சம் மெதுவா வலதுபக்கம் பாரேன், ஒரு ஜோடி உலகத்தையே மறந்து படு தீவிரமா ரொமான்ஸ் பண்ணிகிட்டிருக்கு!’

வழக்கமாக அவளோடு சரிக்குச் சரியாக ஜோடிகளை நோட்டமிட்டுக் கமென்ட் அடிக்கிற சரவணனுக்கு, அன்று ஏதோ தயக்கம். சற்றுமுன் தான் ஒரு முத்தக் காட்சியை எட்டிப்பார்க்கத் துடித்ததையெல்லாம் மறந்து, ‘மீரா, இதையெல்லாம் நாம பார்க்கறது கொஞ்சம் அநாகரிகம்தான், இல்லையா?’ என்றான்.

மீரா சட்டென்று நின்றுவிட்டாள். ‘வ்வாட்?’

‘என்னதான் பப்ளிக் ப்ளேஸ்ன்னாலும், இது அவங்களோட பர்ஸனல் மேட்டர். காதலிக்கறாங்க, கொஞ்சிக்கறாங்க, கட்டிப்பிடிக்கறாங்க, கிஸ்ஸடிக்கறாங்க, தைரியம் உள்ளவங்க அதுக்குமேலயும் போறாங்க. அது அவங்க உரிமை, நாம அவங்களை வேடிக்கை பார்க்கறது நியாயமில்லையே!’

அவள் வெடித்துச் சிரித்துவிட்டாள். ‘என்னடா இது? திடீர்ன்னு இவ்ளோ நல்லவனாகிட்டே?’

சரவணனால் அந்தக் கேலியைத் தாங்கமுடியவில்லை. எல்லாவற்றையும் மறந்து, ‘வா, போலாம்!’ என்றான்.

****

ஆட்டோ பயணம்முழுவதும், அவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை. கோபமெல்லாம் கிடையாது. தெரியாமல் சரவணன் கேட்டுவிட்ட கேள்வி, அவர்கள் இருவரையுமே உறுத்தியிருந்தது.

மீராவின் ஹாஸ்டல் வாசலில் ஆட்டோ நின்றதும், சரவணனும் இறங்கிக்கொண்டான். டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, ‘குட் நைட்!’ என்றான் அவளிடம்.

சிறிது நேரம் சரவணனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மீரா. பின்னர் மெதுவான குரலில் ‘ஸாரிடா’ என்றாள்.

‘எ.. எ.. எதுக்கு?’

பதில் சொல்லாமல் திரும்பி நடந்தாள் அவள். வழக்கமாக அவளுடைய ஹாஸ்டல் வாசலில் இறங்கியபிறகும் சிறிது நேரம் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். இன்று அது இல்லை.

அவனுக்கும் மனம் கனத்திருந்தது. இரவுச் சாப்பாட்டைக்கூட நினைக்கத்தோன்றாமல் வீடு நோக்கி நடந்தான்.

****

மறுநாள் காலை, சரவணன் மிக முக்கியமான ரிப்போர்ட் ஒன்றில் தப்புக் கண்டுபிடித்தபடி கொட்டாவியை அடக்கப் போராடிக்கொண்டிருந்த நேரம், மீராவிடமிருந்து ஃபோன் வந்தது. ‘பிஸியா?’

’கொஞ்சம்’ என்றான் அவன். ‘சொல்லு, என்ன விஷயம்?’

‘இன்னிக்கு மீட் பண்றோம்தானே?’

‘அஃப் கோர்ஸ், வழக்கமான பார்க்தானே?’

‘வேணாம்’ என்றாள் அவள். ‘வேற எங்கயாவது போகலாமா?’

‘சினிமா?’

‘ஓகே!’ என்றவள் சிறு இடைவெளிவிட்டு ‘வெச்சுட்டியா?’ என்றாள்.

‘இல்லை மீரா, சொல்லு!’

‘சரவணன்…’

‘ம்ம்…’

‘என் மனசுல அழுக்கு இருக்குன்னு நீ நினைக்கறியா?’

’நோ நோ’ சட்டென்று சொன்னான் அவன். ‘காலேஜ் டேஸ்லேர்ந்து நாம பழகறோம், எனக்கு உன்னைப்பத்தித் தெரியாதா மீரா?’

அவள் சற்று மௌனமானாள். பின்னர் ‘எனக்கே என்னைப்பத்தித் தெரியலையோன்னு கொஞ்சம் சந்தேகமா இருக்கு சரவணன்’ என்றாள். ‘நேத்து நைட் முழுக்க நீ சொன்னதைதான் யோசிச்சுகிட்டிருந்தேன். அடுத்தவங்களை வேடிக்கை பார்க்கற இந்த அநாகரிகமான பழக்கம் நமக்கு ஏன் வந்தது? எப்படி வந்தது? ஒருவேளை நம்ம மனசுக்குள்ள இருக்கற வக்கிரத்தோட வெளிப்பாடுதானா இது?’

‘அதெல்லாம் இல்லைம்மா, நம்மைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கற சாதாரணக் குறுகுறுப்புதான், ரோட்ல யாராவது கீழே விழுந்துட்டா அவங்களைச் சுத்திச் சட்டுன்னு ஒரு கூட்டம் கூடுதுல்லையா? அதுபோலதான் இதுவும். நத்திங் ராங்!’

’சரவணன், மத்த லவ்வர்ஸ்மாதிரி நாம பொது இடத்துல ரொம்ப நெருங்கி, அந்நியோன்னியமா நடந்துக்கறதில்லை, அவ்ளோ ஏன், ரோட்ல சாதாரணமாக் கை கோத்துகிட்டு நடக்கறதுகூட எனக்குப் பிடிக்காது, உனக்கே தெரியும்’ என்றாள் மீரா. ‘ஆனா, அவ்ளோ சுத்தமா இருக்கற நமக்கு, அடுத்தவங்களோட அசுத்தத்தைப் பார்க்கறதுக்கு ஏன் இந்தத் துடிப்பு? ஒருவேளை, நாமும் அப்படி இருக்கணும்னுதான் உள்ளுக்குள்ள ஆசைப்படறமோ? அதுக்குத் தைரியம் இல்லாம, அடுத்தவங்களைக் கிண்டலடிக்கறோமா?’

‘சுத்தம், அசுத்தம்ங்கறதெல்லாம் ரொம்பப் பெரிய வார்த்தை மீரா, நம்மோட ஒழுக்க ஸ்கேலை வெச்சு உலகத்தை அளக்கறது பெரிய தப்பு’ என்றான் சரவணன். ‘இவ்ளோ பேசறேனே, நான்மட்டும் என்ன பெரிய உத்தமனா? நேத்திக்குக்கூட உன்னோட சேர்ந்து நானும் அந்த ஜோடிங்களை நோட்டம் விட்டேனே!’

’நேசம்ங்கறது நாலு சுவத்துக்குள்ள காட்டப்படணும்ங்கறது ஒரு கட்சி, இடம் எதுவானா என்ன? என் அன்பை நான் காட்டுவேன்ங்கறது இன்னொரு கட்சி, பரதநாட்டியம், ப்ரேக் டான்ஸ்மாதிரிதான், ஒண்ணைவிட இன்னொண்ணு தாழ்த்தியோ உயர்த்தியோ இல்லை. அவங்களைப் பார்த்து நாம மாறவும் வேணாம், நம்ம கட்டுப்பாடுகளை அவங்கமேல திணிக்கவும் வேணாம்.’

‘நிஜமாவா சொல்றே? உனக்கு என்மேல கோவமெல்லாம் இல்லையே?’

’நிச்சயமா இல்லை மீரா’ என்று சிரித்தான் சரவணன். ‘ஈவினிங் பார்ப்போம். சினிமால்லாம் வேணாம், அதே பார்க்ல.’

****

பூங்கா வாசல். காகிதக் கூம்புகளில் கொண்டைக்கடலைச் சுண்டலுடன் காத்திருந்தாள் மீரா. ‘ஏன்டா லேட்?’

’கிளம்பற நேரத்துல மேனேஜர் பய பிடிச்சுகிட்டான். அவனைச் சமாளிச்சு அனுப்பிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு!’ என்றான் அவன். ‘ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’

’ஆமா, ஏழெட்டு வருஷமா!’

‘இந்தப் பேச்சுக்கொண்ணும் குறைச்சலே இல்லை’ என்று சிரித்தபடி அவன் சுண்டல் பொட்டலத்தை வாங்கிக்கொண்டான். தங்களுடைய வழக்கமான பெஞ்சை நோக்கி நடந்தார்கள். அதன் இரு மூலைகளில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்தார்கள்.

***

என். சொக்கன் …

நாளை தொடங்கி, பெங்களூருவில் ஒரு கம்ப ராமாயண வாசிப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த வாசிப்புக் குழு, முழுவதும் தன்னார்வத்தின்பேரில் அமைக்கப்படுகிறது. இதில் சேரக் கட்டணம் ஏதும் இல்லை. வாரம் இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் கம்பனை வாசிக்கும் ஆர்வம் இருந்தால்மட்டும் போதுமானது.

இதனை வழிநடத்திச் செல்ல அன்போடு இசைந்திருப்பவர், திரு. ஹரி கிருஷ்ணன் அவர்கள் (இணையக் குழுக்களில் ‘ஹரியண்ணா’ என்றால் எல்லாருக்கும் தெரியும்!)

கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தமிழில் மரபுக் கவிதைகள் இயற்றியும் பல கவியரங்குகளிலும் பங்கேற்று வந்துள்ள ஹரி கிருஷ்ணன், தமிழிலும் ஆங்கிலத்திலும் சுமார் 2500 கட்டுரைகள் எழுதியுள்ளார், அனைத்தும் தமிழ் இலக்கியங்களை மிக எளிய முறையில் அறிமுகப்படுத்தி நம் ரசனையை மேம்படுத்தும்விதமாக அமைந்தவை.

’வள்ளுவர், கம்பர், பாரதி மூவரும் என் அடித்தளங்கள்’ என்று குறிப்பிடும் ஹரி கிருஷ்ணன் இதழியல் சார்ந்து பல முக்கியமான பங்களிப்புகளைச் செய்திருப்பினும், அவரது மிகப் பெரிய சாதனை, கம்ப, வால்மீகி ராமாயணங்களின் அடிப்படையில் பாத்திரப் படைப்பு ஆய்வுகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினசரிக் கட்டுரைகளாக எழுதியதுதான்.

இந்தக் கட்டுரைகளின் ஒரு பகுதி ‘அனுமன்: வார்ப்பும், வனப்பும்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்து மிகப் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இதுபோல் இன்னமும் பதினைந்து பாத்திரங்களை விளக்கி நூல்வடிவாக்கவுள்ளார்.

ஹரி கிருஷ்ணன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற எவரும், அவரது பழகும்விதத்தை, வாசிப்பின் வீச்சை, தமிழ், பிற மொழி இலக்கியங்களின்மீது அவருக்கிருக்கும் அளவற்ற ஆர்வத்தை, அதை எவருக்கும் புரியும்வண்ணம் விவரித்துச் சொல்லும் அக்கறையை, ஒருவரையும் அவமதித்துப் பேச விரும்பாத பண்பான வார்த்தைத் தேர்வுகளையெல்லாம் வியக்காமல் இருக்கமுடியாது. அவர் இந்த வகுப்புகளை வழிநடத்த இசைந்திருப்பது நம்முடைய வாழ்நாள் பாக்கியம்.

இப்போது, இந்த வாசிப்பு வகுப்புகளைப்பற்றிக் கொஞ்சம், ஹரி கிருஷ்ணன் அவர்கள் தொலைபேசிவழியே குறிப்பிட்ட அடிப்படை விஷயங்கள் இவை:

  • பால காண்டத்தின் முதல் பாடலில் தொடங்கி, யுத்த காண்டத்தின் நிறைவுப் பாடல்வரை முழுமையாக வாசிக்கவிருக்கிறோம், இடையில் எந்தப் பாட்டும் / பகுதியும் விடுபடாமல்
  • கம்ப ராமாயணம் 10000 பாடல்களுக்குமேல் கொண்டது, ஆகவே, வாரம் நூறு பாடல்கள் என்று எடுத்துக்கொண்டால்கூட, இதனைப் பூர்த்தி செய்ய இரண்டு வருடங்கள் ஆகும்
  • ஆகவே, ஒவ்வொரு வகுப்பிலும் நூறு பாடல்கள்வரை வாசிக்க முயற்சி செய்வோம். ஒவ்வொரு பாடலையும் சத்தமாகப் படிப்பது, அதற்கு விளக்கம் சொல்வது, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள முக்கியமான சொற்களின் பொருளை விவரிப்பது, தேவைப்பட்டால் வேற்று நூல்களில் இருந்து தொடர்புபடுத்திப் பேசுவது என்ற விதத்தில் இது அமையும்
  • வாசிப்பில் பங்கேற்கும் அனைவரும் பாடல்களை உரக்கப் படித்துப் பழகவேண்டும் என எதிர்பார்க்கிறோம், அது ஓர் அற்புதமான தனி அனுபவம்!
  • பாடல்களை வாசித்து முடித்தபின் அதன் விளக்கம், கூடுதல் விவரங்கள், கவி நயம் போன்றவற்றைப் பற்றி எல்லாரும் பேசலாம், இது வகுப்பு என்பதைவிட, குழு வாசிப்பு என்றவகையில் அமைந்தால் நன்றாக இருக்கும்
  • அதேசமயம், கம்ப ராமாயணம் / அது தொடர்பான தலைப்புகளைத்தவிர மற்ற அரட்டைப் பொருள்களைத் தவிர்த்துவிடுவோம். இல்லாவிடில் வாரம் நூறு பாடல்களைப் படிக்க இயலாதபடி கவனம் சிதறும். அன்றைய வாசிப்பு முடிந்தபின் தனி அரட்டைகளை வைத்துக்கொள்வோம்
  • பாடல்களை வாசிக்கும்போது, கவிதை அழகு, மொழி நயம், அதன்மூலம் வெளிப்படுத்தப்படும் உணர்வுகள், பாத்திரப் படைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும், பக்தி / வைணவ சம்பிரதாயம் சார்ந்த விளக்கங்கள், விவாதங்களுக்கு இடமிருக்காது, தவறாக எண்ணவேண்டாம்
  • ஒவ்வொரு வார வாசிப்பையும் முழுமையாக ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு செய்து இணையத்தில் வைக்க எண்ணியுள்ளோம், அது எப்படிச் சாத்தியமாகிறது என்று பார்க்கலாம்

அடுத்து, வாசிப்பு நடைபெறும் நேரம், வழக்கமான இடம் ஆகியவை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நாளைய முதல் வகுப்பின் விவரங்களைமட்டும் இங்கே தந்துள்ளேன், அங்கே வருகிறவர்கள்மத்தியில் பேசி, பெரும்பாலானோருக்கு வசதியானவண்ணம் அடுத்தடுத்த வகுப்புகள் எங்கே, எப்போது நடைபெறும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளலாம்:

நாள் : 13 ஏப்ரல்

நேரம் : மாலை 6 மணி முதல் 8 மணி வரை

இடம்:

CRMIT Solutions Private Limited,

NR Towers, 2nd Floor,

#14, Hundred Feet Ring Road,

BTM Layout First Stage,

Bangalore 68

Map : Click Here

இந்த அலுவலகம் நெடுஞ்சாலையிலேயே உள்ளது. இடத்தைக் கண்டறிவதில் ஏதேனும் குழப்பம் எனில் (0)9900160925 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

அனைவரும் வருக!

***

என். சொக்கன் …

12 04 2013

’பசிக்கிறது’ என்றார் ஔவையார்.

’சற்று நேரம் பொறுத்துக்கொள்ளுங்கள் தாயே, சமையல் தயாராகிக்கொண்டிருக்கிறது’ என்றார் ஒருவர். ‘அருமையான கீரைக் கூட்டு!’

’வெறும் கீரைதானா? அரிசிச் சோறு இல்லையா?’

‘ஊர் ஊராகச் சுற்றுகிறவர்கள் நாங்கள், அரிசிக்கு எங்கே போவோம்?’ அவர்கள் பரிதாபத்துடன் கேட்டார்கள், ‘ஏதோ, சாலையோரமாகக் கிடைத்த கீரையைப் பிய்த்துச் சமைத்திருக்கிறோம்.’

ஔவையார் புன்னகைத்தார். ‘இந்த நாட்டு அரசன் யார் தெரியுமா? நாஞ்சில் வள்ளுவன்! அவன் மிகவும் நல்லவன், புலவர்களின் தகுதி அறிந்தவன், நாங்கள் அவனிடம் எதைக் கேட்டாலும் கிடைக்கும்’ என்றார். ‘கொஞ்சம் பொறுங்கள், நான் அரசனைச் சந்தித்து அரிசி வாங்கி வருகிறேன்.’

நேராக நாஞ்சில் வள்ளுவனைச் சந்திக்கச் சென்றார் ஔவையார். தங்களுடைய நிலைமையைச் சொன்னார், ‘அரசே, எங்களுக்குக் கொஞ்சம் அரிசி வேண்டும், தருவீர்களா?’ என்று கேட்டார்.

‘கண்டிப்பாகத் தருகிறேன் புலவரே’ என்றான் நாஞ்சில் வள்ளுவன். அவன் கை தட்டியதும், அரிசி வந்தது.

எவ்வளவு அரிசி? ஒரு கைப்பிடியா? ஒரு கிலோவா? ஒரு மூட்டையா?

ம்ஹூம், இல்லை. மலை போன்ற ஒரு பெரிய யானை. அதன் முதுகு நிறைய அரிசி, அரிசி, அரிசியோ அரிசி. அந்த யானையையும் அதன்மீது இருக்கும் அரிசி மொத்தத்தையும் ஔவைக்குக் கொடுத்துவிட்டான் நாஞ்சில் வள்ளுவன். ‘உங்களுடைய புலமைக்கு, ஏதோ என்னால் முடிந்த சிறிய பரிசு!’

ஔவையார் சிலிர்த்துப்போனார், அவனைத் தாராளமாகப் புகழ்ந்து பாடினார். புறநானூறு தொகுப்பில் இடம்பெற்றுள்ள அந்தப் பாடலின் ஒரு பகுதி:

… யாம் சில

அரிசி வேண்டினேமாக, தான் பிற

வரிசை அறிதலின் தன்னும் தூக்கி

இரும் கடறு வளைஇய குன்றத்து அன்னது, ஓர்

பெருங்களிறு நல்கியோனே …

(’கோகுலம்’ சிறுவர் பத்திரிகையின் பிப்ரவரி இதழில் நான் எழுதத் தொடங்கியிருக்கும் ‘தின்’சைக்ளோபீடியா தொடரிலிருந்து ஒரு பகுதி. மற்றவை அச்சுத் திரையில் காண்க.)

எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகவிருக்கும் என்னுடைய புத்தகங்கள் சில:

1. பூலோகம் ஆனந்தத்தின் எல்லை (பல்வேறு நாடுகளின் தனித்துவமான சிறப்புகளை விவரிக்கும் தொகுப்பு (சுற்றுலா வழிகாட்டி அல்ல 😉 ’மல்லிகை மகள்’ பத்திரிகையில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் நூல் வடிவம்)

2. வெற்றிக்கு சில புத்தகங்கள் (சுய முன்னேற்ற வகையைச் சேர்ந்த முப்பது ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றிய சிறு அறிமுகக் கட்டுரைகள், நூல் சுருக்கம், குமுதம் வார இதழில் இரண்டரை ஆண்டுகள் வெளிவந்த ‘வெற்றிக்கு ஒரு புத்தகம்’ தொடரின் முதல் பகுதி)

3. கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் கதை (கோகுலம் இதழில் வெளிவந்த அறிவியல் கதைகளின் இரண்டாம் தொகுதி)

4. மென்கலைகள் (முக்கியமான Soft Skillsபற்றிய சிறு கட்டுரைகள்)

 

5. கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறு (குங்குமம், சூரிய கதிர் பத்திரிகைகளில் தொடர்களாக வெளிவந்த கட்டுரைகளை விரிவாக்கிய நூல் வடிவம்)

இவைதவிர, முன்பு கிழக்கு பதிப்பகத்தில் வெளியான என்னுடைய ‘வல்லினம், மெல்லினம், இடையினம்’ புத்தகமும் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் இரண்டாம் பதிப்பாக வருகிறது.

இவை அனைத்தும் ‘மதி நிலையம்’ வெளியீடுகள். பக்கங்கள் / விலை / ஆன்லைனில் வாங்குவது குறித்த விவரங்கள் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன்.

***

என். சொக்கன் …

04 12 2012

தற்போது அச்சில் இல்லாத என்னுடைய புத்தகங்களை ’மதி நிலையம்’ பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்ய முன்வந்துள்ளனர். அந்த வரிசையில் நான்கு புத்தகங்கள் இப்போது வெளியாகியுள்ளன. இவற்றில் முதல் மூன்றிலும் முந்தைய பதிப்புக்குப்பின் நிகழ்ந்தவற்றை Update செய்து தந்துள்ளேன்.

இவற்றுடன், குங்குமம் வார இதழில் நான் தொடராக எழுதிய ‘அடுத்த கட்டம்’ நாவலும் நூல் வடிவம் பெறுகிறது. ஆங்கிலத்தில் பிரபலமாக உள்ள Business Novel வடிவத்தைத் தமிழில் முயற்சி செய்யலாமே என்று எழுதியது. ஓவியர் ஸ்யாமின் புதுமையான படங்களுடன் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. வாய்ப்பிருந்தால் புத்தக வடிவத்தில் வாசித்து எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

ஐந்து புத்தகங்களும் இன்னும் என் கைக்குக் கிடைக்கவில்லை. வந்தவுடன் விலை விவரம் தெரியப்படுத்துகிறேன். இவற்றை வாங்க விரும்புவோர் mathinilayambooks@gmail. com என்ற முகவரிக்கு எழுதலாம், அல்லது 044 28111506 என்ற எண்ணை அழைக்கலாம். இணையத்தில் வாங்கும் வசதி இப்போது இல்லை. இனிமேல் வரலாம்.

***

என். சொக்கன் …

22 10 2012

ஆனந்த விகடன் இதழில் சில ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய ‘வல்லினம், மெல்லினம், இடையினம்’ தொடரின் இரண்டாம் பாகத்தை எழுதவிருப்பதாக ஏற்கெனவே இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ’மென்னுலகம்’ என்று தலைப்பிடப்பட்ட அந்தத் தொடர் ‘சூரிய கதிர்’ பத்திரிகையில் வெளியானது. இப்போது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.

ஏனோ, எனக்கு மிகவும் பிடித்த ‘மென்னுலகம்’ என்ற தலைப்பு, இதனை வெளியிட்டுள்ள ’மதி நிலையம்’ பதிப்பாளர்களுக்குப் பிடிக்கவில்லை, ’சாஃப்ட்வேர் துறையில் சாதிக்கலாம், வாங்க’ என்று ‘கவர்ச்சிகரமான’ ஒரு தலைப்பை வைத்துள்ளார்கள் 🙂

இந்தப் புத்தகம் நேற்றுமுதல் விற்பனைக்கு வந்துவிட்டதாக அறிகிறேன். விலை, மற்ற விவரங்கள் எனக்கு இன்னும் தெரியவில்லை. அவற்றைப் பின்னர் Update செய்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் இதனை வாங்க ‘மதி நிலைய’த்தைத் தொடர்புகொள்ளலாம். ஃபோன் 044 28111506. ஈமெயில் mathinilayambooks@gmail.com

***

என். சொக்கன் …

01 07 2012


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930